பொருளடக்கத்திற்கு தாவுக

க.நா. சுப்ரமண்யத்தின் “பொய்த்தேவு”

by மேல் நவம்பர் 19, 2010

இது ஒரு மீள்பதிவு, சில சின்னத் திருத்தங்களுடன்.

ரொம்ப நாட்களாக க.நா.சு. எழுதிய இந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என்று ஆசை. யார் யாரோ படிக்க வேண்டிய புத்தகம் என்று சொல்லி இருக்கிறார்கள். முதல் பதிப்பு 1946இல் வெளிவந்தது. ஜெயமோகனின் டாப் டென் லிஸ்டில் இதற்கு ஆறாம் இடம். என்னுடைய டாப் டென் லிஸ்டில் இடம் பெறாது. ஆனால் நான் படித்த சிறந்த புத்தகங்களில் ஒன்று.

எனக்கு ஒரு முட்டாள்தனமான பழக்கம். சில புஸ்தகங்கள் எனது ரசனைக்கு ஒத்து வரும் என்று தெரியும். ஆனால் அதை படிக்க சரியான நேரம் வர வேண்டும் என்று காத்திருப்பேன். என்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி படிக்க வேண்டும் என்றும் வேலை டென்ஷன் இருந்தால் படிக்க முடியாது என்றெல்லாம் நினைத்து நல்ல முகூர்த்தம் வரக் காத்திருப்பேன். முகூர்த்தம் வர வருஷங்கள் ஆகலாம். உதாரணமாக விஷ்ணுபுரம் வாங்கி 4 வருஷம் கழித்துத்தான் படித்தேன். பொய்த்தேவு எப்போது வாங்கினேன் என்று கூட தெரியாது, இரண்டு காப்பிகள் இருந்தன. (ஆனால் காலச்சுவடு அருமையாக பதிப்பித்திருக்கிறது) கொஞ்ச நாட்கள் முன்னால்தான் முதல் முப்பது நாற்பது பக்கம் படித்தேன். உடனே தெரிந்துவிட்டது, இது ஒரு அருமையான புத்தகம் என்றும், படிக்க சுலபமான புத்தகம் என்றும். (விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல் இரண்டும் சுலபமான புத்தகங்கள் அல்ல) சுலபமான புத்தகம் என்றால் மிக விரைவாக படிக்க முடியும். கதை ஒரு நேர் கோட்டில் செல்லும். முன்னால் என்ன சொல்லப்பட்டது என்று திருப்பி திருப்பி பார்க்க வேண்டியதில்லை. ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகள் சுலபமாக படிக்க முடியும். One Hundred Years of Solitude படிக்க நேரமாகும். ஆனால் ஏனோ பிடிக்கும் என்று தெரிந்தும், சுலபம் என்று தெரிந்தும் இந்த புத்தகத்தை ஒரு ஓரமாக வைத்துவிட்டேன். அப்புறம் ஒரு நாள் திருப்பி எடுத்து ஒரே மூச்சில் படித்து முடித்தேன்.

பொய்த்தேவு என்றால் என்ன என்று கூட முன்னால் தெரியாது. தேவு என்றால் தெய்வம் என்று பொருள் இதை படித்துத்தான் தெரிந்து கொண்டேன்.

படித்து முடித்ததும் மனதில் விவரிக்க முடியாத ஒரு நிறைவு.

இதற்கு கதை சுருக்கம் எல்லாம் எழுத முடியாது. ஆனால் இந்த கதையை பல தளங்களில் பார்க்கலாம். ஏழை மேட்டுத்தெரு சோமு சோம சுந்தர முதலியாராக மாறி சோமுப் பண்டாரமாக முடிகிறார். அவரது ஆசைகள், பார்த்ததற்கெல்லாம் ஆசைப்படும் குணம், அவரது தெய்வங்கள், அவரது ஆதர்ச மனிதர்கள், என்று பார்க்கலாம். என்னை பாதித்தது வேறு ஒரு தளம். வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் நாம் தேடும் விஷயங்கள் வேறு. இந்த தேடலுக்கு உண்மையிலேயே ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? காமம் எல்லா உயிர்களுக்கும் உள்ள அடிப்படை தேடல் என்று வைத்துக்கொள்ளலாம், அதற்கு அர்த்தம் தேடுவது அர்த்தம் இல்லாத செயல். பணம்? புகழ்? குடும்பம்? இவை எல்லாம் நமக்கு ஏன் முக்கியம் என்று நாம் யோசிப்பதே இல்லை. சரி, நான் யோசித்தது இல்லை.

எங்கோ அமெரிக்காவில் உட்கார்ந்து இருந்தாலும், எனது வேர்கள் இந்தியாவில்தான் இருக்கின்றன. எனது அப்பா, அம்மா, அத்தை(கள்), பெரியப்பா, பெரியம்மா, அத்தான்கள், அத்தங்காள்கள், காலேஜ் நண்பர்கள் இவற்றை சுற்றிதான் என் எண்ணங்கள் சுழல்கின்றன. முதலியாரின் வேர்கள் மேட்டுத் தெருவில் இருப்பது போல. அவரது விலங்குகள் ராயர் குடும்பத்தில் இருப்பது போல.

அவர் சோமுப் பண்டார மாற்றத்தை பற்றி இன்னும் விவரித்திருக்கலாம்.

ஆனால் இந்தப் புத்தகம் எல்லாருக்கும் பிடிக்கும் என்று சொல்வதற்கில்லை. ஒரு கோணத்தில் பார்த்தால் இதில் ஒன்றுமே இல்லை. பெரிய சிக்கல்கள் இல்லை, பிரமாதமான கதைப் பின்னல் இல்லை. இதில் என்ன இருக்கிறது என்று கேட்டால் விவரிப்பது கஷ்டம். ஒன்று உங்களுக்கு இதில் ஒரு தரிசனம் கிடைக்கும் இல்லாவிட்டால் போரடிக்கும். இரண்டுக்கும் நடுவில் ஒரு ஸ்டேஜ் இல்லை.

ஜெயமோகனின் குறிப்பு

பொய்த்தேவு —— க. நா. சுப்பிரமணியம்.
தமிழின் முதல் நாவல் என்று ஐயமின்றி கூறலாம். நாவல் என்ற விசேஷ வடிவத்தைப் பற்றிய பிரக்ஞையுடன் எழுதப்பட்ட முதல் படைப்பு. சோமு முதலி என்ற கதாபாத்திரத்தின் முழுவாழ்க்கையை முன்வைத்து வாழ்வின் சாரமான பொருளென்ன என்று தேடும் படைப்பு ஒரு காலை வேதாந்தத்திலும் மறுகாலை இருத்தலியத்திலும் ஊன்றி நிற்கும் காத்திரமான ஆக்கம் சோமுவை சிறுவயது முதல் தொடரும் அந்த மணியோசை நாவலில் கவித்துவத்தின் அபாரசத்தியங்களைப் பற்றி தமிழுக்கு கற்பித்தது.

எஸ்.ரா.வும் இதை நூறு சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்றாகக் குறிப்பிடுகிறார்.

கட்டாயமாக படிக்க வேண்டிய புத்தகம். படிக்க சொல்லி சொன்ன எந்தரோ மகானுபாவலுகளுக்கு நன்றி. 

அழியாச்சுடர்கள் தளத்தில் சாம்பிளுக்கு ஒரு அத்தியாயத்தைப் படிக்கலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாவல்கள்

 

6 மறுமொழிகள்
  1. ஒரு சோறு பதம்… போய்தேவு ஒரு அத்தியாயம்
    http://azhiyasudargal.blogspot.com/2010/01/blog-post_29.html

    -”அழியாச்சுடர்கள்” ராம்

  2. சமீபத்தில் நான் படித்த ஒரு சிறந்த நாவல்

வரு தடங்களும் வரு பிங்குகளும்

  1. க.நா.சு. பற்றி பாரதிமணி « சிலிகான் ஷெல்ஃப்
  2. எழுத்தாளர் கந்தர்வனின் டாப் டென் தமிழ் நாவல்கள் « சிலிகான் ஷெல்ஃப்
  3. ராஜமார்த்தாண்டன் சிபாரிசுகள் « சிலிகான் ஷெல்ஃப்

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s