நா. பார்த்தசாரதியின் ராணி மங்கம்மாள்
இன்னும் லீவ்தான். ஆசைக்கு ஒரு பதிவு…
ராணி மங்கம்மாளுக்கு தனி போஸ்ட் எழுத ஒரே காரணம்தான் – ஜெயமோகன் இதை சிறந்த historical romance ஆக குறிப்பிட்டிருப்பது. அவருடைய இந்தப் பதிவில் இருக்கும் ஒவ்வொரு நாவலைப் பற்றியும் எழுத வேண்டும் என்ற ஆசை.
சரித்திரத்தில் வெகு சில பேர்களே வரலாற்று அறிஞர்களைத் தாண்டி சாதாரண மக்களின் மனதிலும் இடம் பெறுகின்றன. ராஜா தேசிங்கு, கட்டபொம்மன், ராணி மங்கம்மாள் என்று மூன்று பேர்தான் எனக்குத் தெரிகிறது. தமிழ்நாட்டில், குறிப்பாக மதுரைக்கு தெற்கே, மங்கம்மாள் என்ற பேருக்கு ஒரு கவுரவம் உண்டு. அது மங்கம்மாள் “சாலையின் இரு புறமும் மரம் நட்டதாலா”, இல்லை மரம் நடுவதற்கு சாலை போட்டதாலா, சத்திரங்கள் வைத்ததாலா என்று தெரியவில்லை. இன்றைக்கும் மங்கம்மாள் சத்திரம் இருக்கிறதாம் (இன்றைய, அன்றைய ஃபோட்டோக்கள் கீழே). இத்தனைக்கும் அவருக்கு இழுக்கு உண்டாக்குவதற்காகவே கள்ளக் காதல் என்றெல்லாம் வதந்தியைப் பரப்பினார்களாம்.
![]()
சரித்திரம் சரியாக நினைவில்லாதவர்களுக்காக: கணவன் சொக்கநாத நாயக்கர் இறந்ததும் மகன் ரங்ககிருஷ்ண முத்து வீரப்ப நாயக்கனுக்கு regent ஆக இருந்து வயது வந்ததும் அவனுக்கு மகுடம் சூட்டுகிறாள் ராணி மங்கம்மாள். மகன் இறந்ததும் பேரனுக்கு regent. பேரன் அவளை சிறை வைத்து முடிசூடுகிறான். மங்கம்மாள் பெரும் வெற்றிகளை எல்லாம் அடையவில்லை. அவர் “ஆட்சிக்காலத்தில்” ராமநாதபுரத்தின் கிழவன் சேதுபதி தன் நாடு ஒரு சுதந்திர நாடு என்று பிரிந்து போனார். ஆனால் மக்களுக்கு நிம்மதியான வாழ்வு இருந்தது. அதுவே அவர் நினைவில் தங்கக் காரணம் என்று நினைக்கிறேன்.
![]()
நா.பா. இந்தக் கதையை அவர் பாணியில் எழுதுகிறார். கதையில் அவ்வளவாக சுவாரசியம் இல்லை. பாத்திரங்கள் எல்லாம் caricatures மட்டுமே. அதுவும் கிழவன் சேதுபதியுடன் மகன் முத்துவீரப்பன் இடும் “போர்” ரொம்ப கேனத்தனமாக இருக்கிறது. உண்மையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. நல்ல அருமையான வாய்ப்பு – இதையே கி.ரா., சு.ரா., ஜெயமோகன், ஏன் கல்கி மாதிரி ஒருவர் கூட பிய்த்து உதறி இருப்பார்கள். இவர் சாண்டில்யனை விட பரவாயில்லாமல் எழுதி இருக்கிறார், அவ்வளவுதான். என்னைக் கேட்டால் இதற்கு பதில் ஏதாவது நாயக்கர் வரலாறு என்கிற மாதிரி சரித்திரப் புத்தகத்தையே படிக்கலாம். ஆனால் இதுவே அவர் எழுதிய சிறந்த சரித்திரப் புத்தகம் என்று நினைக்கிறேன். சம்பவங்களை நேர்மையாகத் தொகுத்திருக்கிறார். உபதேசம் இருந்தாலும் குறைவாகத்தான் இருக்கிறது.
வரலாறு என்ற முறையில் படிக்கலாம். கதை என்ற முறையில் தோல்வி.
புத்தகத்தை ஆன்லைனில் சென்னை லைப்ரரி தளத்தில் படிக்கலாம்.
தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாவல்கள், சரித்திர நாவல்கள்