பைரப்பா நிகழ்ச்சி பற்றி ராஜன்

S.L.Bhyrappaடாக்டர் எஸ்.எல். பைரப்பா பிரபலமான கன்னட மொழி எழுத்தாளரும், சிந்தனையாளரும் தத்துவவாதியும் ஆவார். அவரது படைப்புகள் தமிழ் உட்பட அனைத்து இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு உலகம் முழுக்கக் லட்சக்கணக்கான வாசகர்களைப் பெற்றுள்ளன. சாகித்ய அகடமி உட்பட ஏராளமான இலக்கிய விருதுகளைப் பெற்ற பைரப்பா இந்தியாவின் முக்கியமான இலக்கியவாதிகளில், தத்துவவாதிகளில் ஒருவர் ஆவார்.

எழுத்தாளர் பைரப்பா அவர்கள் சான் ஓசேயில் நடைபெற்ற அக்கா எனப்படும் அமெரிக்க கன்னட மொழி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் இந்திய இலக்கியத்திற்கும் இந்திய தத்துவங்களுக்கும் ஆற்றிய மாபெரும் இலக்கியப் பணிகள் தமிழ் வாசகர்களையும் மொழி பெயர்ப்பு நூல்கள் மூலமாக சென்றடைந்துள்ளன.

வேதங்களே அடிப்படை, அவற்றின் சாரமாக உபநிஷதங்கள், அவற்றின் சாரமாக போதாயணரின் பிரம்ம சூத்திரம், அவற்றுக்கு சங்கரர், ராமானுஜர், மத்வர் போன்ற பல ஆசார்யர்களின் வியாக்கியானங்கள் என்று கட்டமைக்கப்பட்டிருக்கும் தத்துவங்கள் அனைத்திலும் மிகுந்த அறிவும் அவற்றின் சாரங்களை தனது எழுத்துக்கள் மூலமாக இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் கொண்டு சென்றவர் பைரப்பா அவர்கள். ஆனால் அந்தத் தத்துவங்கள் இலக்கியம் மூலமாக ராமாயணமும் மகாபாரதமும் விளக்குவதே மனதில் படிகிறது, தன் வழியும் இலக்கியத்தின் மூலம், கதைகளின் மூலம் தத்துவ சாரத்தை காட்டுவதே என்று உணர்ந்து கதைகள் எழுத ஆரம்பித்திருக்கிறார். அவர் கன்னட மொழியில் எழுதினாலும் கூட அவரது அனைத்து படைப்புகளும் தமிழ் மொழியிலும் மொழி பெயர்க்கப் பட்டு பெரும் வரவேற்பையும் வாசகர்கள் வட்டத்தையும் உருவாக்கியுள்ளன.

தனது உரையின் பொழுது வம்சவிருக்‌ஷாவை (1965) தன் முதல் முக்கிய நாவலாகக் குறிப்பிட்டார். க்ருஹபங்கா, பர்வா, அன்வேஷனே, தப்பலியு நீனடே மகனே போன்ற நாவல்களைக் குறிப்பிட்டார். ஆவரணா குறித்து நீண்ட நேரம் பேசினார். ஹிந்து மதத்தில் எந்தக் கடவுளையும் கும்பிடும் சுதந்திரம் இருக்கிறது, தனக்கு சரி என்று பட்டதை எழுத தயங்கியது கிடையாது என்றும் அதற்காக தனது உயிரையே கொடுக்கத் தயங்க மாட்டேன் என்று உறுதியுடன் குறிப்பிட்டார். (ஸிலிக்கான் ஷெல்ஃப் ஆர்.வி.சுப்ரமணியன் குறிப்பில் இருந்து).அவரது பருவம், ஆவரணா, ஒரு குடும்பம் சிதைகிறது போன்ற நாவல்கள் தமிழ் வாசகர்களிடத்தும் பெரும் வரவேற்பு பெற்றவை. அவரது வம்ச விருக்‌ஷா போன்ற நாவல்கள் திரைப்படங்களாகவும் எடுக்கப் பட்டுள்ளன.

bhyrappa_nithyaஇந்தியாவின் முக்கியமான அறிவுப் பொக்கிஷங்களில், இந்தியாவின் மாபெரும் எழுத்தாளர்களில் ஒருவர் என்ற முறையிலும் அவரது படைப்புகள் அனைத்தும் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு எண்ணற்ற தமிழ் வாசகர்களையும் சென்றடைந்திருக்கின்றன என்ற முறையிலும் இந்தியாவின் இலக்கியச் செல்வராகிய பைரப்பா அவர்களை பாரதி தமிழ்ச் சங்கமும் அவரது வாசகர்களும் இணைந்து அந்த மாநாட்டு மேடையில் கவுரவித்தார்கள். அவரது படைப்புகளுக்கு பாரதி தமிழ்ச் சங்கம் தனது பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்து ஒரு நினைவுப் பரிசை வழங்கியது. அவரது வாசகர்களான ஆர் வி சுப்ரமணியன், சுந்தரேஷ் மற்றும் நித்தியவதி சுந்தரேஷ் ஆகியோர் தயார் செய்திருந்த உரைகள் அவரிடம் அளிக்கப் பட்டன. பாரதி தமிழ்ச் சஙகத்தின் உறுப்பினர்கள் பலரும் பைரப்பாவின் தமிழ் வாசகர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியின் அவர் ஆற்றிய உரையின் முழு தமிழ் வடிவத்தை Nithyavathy Sundaresh கன்னடத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்து அளித்தவுடன் இடுகிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பைரப்பா பக்கம்

தொடர்புடைய சுட்டி: பைரப்பாவை சந்தித்தது பற்றி ஆர்வி

1 thoughts on “பைரப்பா நிகழ்ச்சி பற்றி ராஜன்

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.