சாயாவனம்

(இது ஒரு மீள் பதிவு. கூட்டாஞ்சோறு தளத்தில் சில நாட்கள் முன் வெளியிடப்பட்டது. RV ஒரு நாள் ஓய்வு எடுக்கும் பொழுது இதை வெளியிடலாம் என்று பார்த்தேன். பொறுக்க முடியவில்லை. சாயாவனத்தைப் பற்றி சுப்ரபாரதிமணியனின் அப்பா என்ற இடுகையில் குறிப்பிட்டிருந்தான். அதனால் நீங்கள் ”ஆவலாக” இருப்பீர்கள் என்று நினைத்துக் கொண்டு வெளியிட்டுவிட்டேன்)

நல்ல இலக்கியம். இதை படிக்கும் வரை என்னவாக இருக்கும் என்று ஊகம் செய்ய முடியாத தலைப்பு. சா. கந்தசாமி எப்படி கதையை எடுத்துச் செல்வார் என்றும் எப்படி முடிப்பார் என்றும் சற்றும் யூகிக்க முடியவில்லை. எனக்கு பரிச்சயமேயில்லாத கதை. ஆனால் முதல் சில பக்கங்களிலேயே ஒரு உயர் ரக இலக்கியம் படிக்கிறோம் என்று தோன்றி விட்டது. ஏற்கனவே ஆர்வியிடம் ரெக்கமண்டேஷன் வேறு வந்திருந்தது.

சா.கந்தசாமி சாயாவனம் நாவலில் சோஷியலிஸத்திற்க்கும் முதலாளித்துவத்திற்கும் உள்ள போராட்டங்களை கதை களத்தின் மற்றும் பாத்திரங்களின் மூலமாகவும் மிகவும் புத்திசாலித்தனமாகவும், மென்மையாகவும் கையாண்டிருக்கிறார். வித்தியாசமான படிவம். நாயகன் சாயாவனத்தில் மாற்றங்களை புகுத்தி கிராமத்தின் இயற்க்கையையும், மக்களின் இயல்பையும் தடம் புரள செய்து தடுமாற்றம் தருகிறான். கதை முழுவதும் நாயகனாக தோன்றுபவன் இறுதியில் வில்லனாக இருப்பானோ என்று வாசகர்களின் முடிவுக்கு விட்டுவிடுகிறார் கந்தசாமி.

இந்த கதை முழுவதும் ஒரு குறியீடாக பார்க்கலாம் என்று பாவண்ணன் சொல்வது முழுவதும் ஏற்றுக் கொள்ளமுடிகிறது. பரந்த குறியீடாக எடுத்துக் கொண்டு படித்தால், கதையில் வரும் பல கட்டங்களை நிஜத்துடன் தொடர்புபடுத்தி பார்த்து பல விஷயங்களை ஊடுருவி அறியலாம். சிதம்பரம் தன் உணர்வுகள் சராசரி மனிதர்களின் உணர்வுகளோடு ஒத்து போகாமல் தவிக்கும் பொழுது எந்த அளவுக்கு முதலாளித்துவம் ஒருவனுக்கு அகச் சரிவை விளைவிக்கக் கூடும் எனபதும், யதார்த்தத்தை விட்டு விலக்கி வைக்கும் என்பதும், எளிய மக்களின் நுண்ணுணர்வுகளை முரட்டுத்தனமாக அழிக்கும் என்பதும் குறியீடாக வெளிப்படுத்துகிறார் சா. கந்தசாமி.

இயற்கையின் எந்த உயர்வையும் மதிக்கும் மற்றும் ரசிக்கும் உணர்வையும் இழந்து விடும் சிதம்பரம் அவன் குறிக்கோள் ஒன்றைத்தவிர எதையும் பார்க்கும் சக்தியை இழந்துவிடுகிறான். அதனால் அழிவு என்பது அவனுக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. இயற்கையை அழித்து அதன் மேல் மாநகரங்களாக உருவாகிய கான்கிரீட் காடுகளின் பின்னால் பல ரசனையிழந்த சிதம்பரங்களின் குறிகோள்கள் பல எளிய மக்களின் மேல் மூர்க்கமாக திணிக்கப்பட்டுள்ளதை ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது. தன்னைச் சார்ந்தவன் என்பதால் சிவனாண்டித் தேவர் பல வருடஙகளாக பார்த்து வந்த தோட்டப் பிரதேசங்களை சிதம்பரத்திற்க்காக அவன் இஷ்டப்படி விட்டுவிடுவது, உறவுகள் மதியை மயக்கி எளிய மனிதனின் எண்ணங்களினை முரணடையச் செய்யும் வல்லமை படைத்தது என்பது புரிகிறது.

பார்ட்டர் சிஸ்டம் (பண்ட மாற்று முறை) எவ்வளவு தூரம் மக்களை பேராசை கொள்ளாதவாறு பாதுகாக்க முடியும் என்பது சாயாவனத்தின் மக்கள் மனப்போக்குகளிலன் மூலம் கவனிக்க முடிகிறது. கரன்சி நோட்டுகள் இல்லாமல் வாழமுடியும் என்று சொல்கிறார் கந்தசாமி. முடியுமா?

தனி மனிதனாக சிதம்பரம் சாயாவனத்தில் போராட்டம் நடத்தியதை படிக்கும் பொழுது எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் “The Old Man and the Sea” நாவலை நினைவுப்ப்டுத்தியது. சிதம்பரம் பறவையை நெருப்பில் தூக்கி எறியும் கட்டம் “Farewell to Arms”ல் எறும்புகளின் மேல் விஸ்கியை ஊற்றிய காட்சி நினைவில் தோன்றியது.

இலக்கியத்தை எவ்வளவு வலிமை பொருந்தியதாக படைக்க முடியும் என்பதை அவர் சம்பவங்களின் மூலமும் ஆளுமைகளின் மூலமும் நமக்கு கற்றுத் தருவது போல் இருக்கிறது. நிச்சயம் சாயாவனத்தை பல்கலைகழகங்கள் தங்கள் இலக்கிய பாடதிட்டத்திற்கு பயன்படுத்திக் கொள்ளமுடியும் என்று நினைக்கிறேன். ஏற்கனவே சாயாவனத்தை பயன்படுத்திக் கொள்ளும் பள்ளிகள் இருக்கிறதா?

ஆர்வியின் பிற்சேர்க்கை: சாயாவனம் அனேகமாக நான் முதன்முதல் படித்த நல்ல இலக்கியம். முதல் முறை படித்தபோது பத்து வயதிருக்கலாம். அந்த கதையை பல தளங்களில் படிக்க முடியும். பத்து வயதில் அது எனக்கு காட்டை அழிக்கும் சாகசக் கதையாகவே இருந்தது. கடைசி பக்கத்தில் புளி போச்சே என்ற புலம்பல் திடீரென்று சாகசங்களுக்கு இன்னொரு பக்கமும் உண்டு என்று உணர்த்தியது. அந்த புலம்பல் அந்த வயதிலும் புரிந்தது, அந்த புரிதல் இன்னும் அகலவில்லை. அதற்குப் பின் பெரியவனாகி வேறு வேறு தளங்களில் சாயாவனத்தை படித்தாலும், அந்த முதல் insight மறக்கவே இல்லை. அது வரையில் அனேகமாக நேர்கோட்டில் போகும் கதைகளையே – சிறுவர் கதைகள், சாண்டில்யன், etc. – படித்திருந்த எனக்கு புனைகதைகளின் சாத்தியம் எவ்வளவு பரந்தது என்று காட்டிய முதல் புத்தகம் இதுதான். மீண்டும் ஒரு முறை படிக்க வேண்டும், இப்போது இன்னும் ஒரு லெவலில் படிக்க முடியுமோ என்னவோ.

அப்டியே ஷாக்காயிட்டேன்!

ஒரு நாளைக்கு நூறு நூற்றைம்பது ஹிட்கள் வரும் இந்த தளத்துக்கு போன 24 மணி நேரத்தில் 2000 ஹிட்! அசந்து போய்விட்டேன். என்னடா, மிச்சம் இருக்கும் முடியையும் இன்னிக்கு பிச்சிக்க வச்சிட்டாங்களே, இந்த ப்ளாக் எப்படி திடீரென்று இவ்வளவு பாப்புலர் ஆனது என்று பார்த்தால் ஜெயமோகன் இந்த தளத்தை மெச்சி நாலு வார்த்தை எழுதி இருக்கிறார். மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் எழுத ஊக்கம் தந்திருக்கிறார். அவருக்கு நன்றி!

தொகுக்கப்பட்ட பக்கம்: ப்ளாக் நிகழ்வுகள்

தொடர்புடைய சுட்டிகள்: ஜெயமோகன் தளத்தில் சிலிகான் ஷெல்ஃப் பற்றி

சில நேரங்களில் சில மனிதர்கள் (நாவல்) II

முதல் பகுதி இங்கே.

ஜெயமோகன் இந்த நாவலைப் பற்றி ஒரு அபாரமான விளக்கம் எழுதி இருக்கிறார். இந்த நாவலை எப்படி எப்படி எல்லாம் வாசிக்கலாம் என்று எழுதி இருப்பது அருமை! அவர் சொல்வது போல நாம் இந்த கதையை கங்காவின் கண்களின் ஊடாகவே பார்க்கிறோம். கங்காவின் பார்வையிலும் ஒரு bias இருக்கும் என்பதை நினைவு கொள்ளும்போது கதை வேறு தளத்துக்கே போய்விடுகிறது. அப்படி நினைவு வைத்துக்கொள்வது ஜெயகாந்தனின் எழுத்துத் திறமையால் கஷ்டமாக இருக்கிறது என்பது வேறு விஷயம். கங்கா சீதையின் மறுவடிவம் என்பதும் எனக்கு சரியாகத்தான் இருக்கிறது. கங்கா கற்பிழந்தவளாயிற்றே, சீதை கற்புக்கரசி ஆயிற்றே என்று யோசிக்காதீர்கள், அவர்களுக்கு அவர்கள் வாழ்க்கை ஆண்களிடம் என்ன உறவு என்பதை நினைத்துப் பாருங்கள். சமூகத்தின் பார்வையில் – ஹனுமான், லக்ஷ்மணன் உட்பட – சீதை இல்லாத ராமனுக்கு ஆளுமை உண்டு, ராமன் இல்லாத சீதை இல்லை. கங்காவுக்கும் அப்படித்தான் ஆகிறது – பிரபு இல்லாத கங்காவாக அவள் வாழ்வது கஷ்டம், வெறுமைதான் மிஞ்சும், அதை அவளும் உணர்ந்துதான் “கான்குபைனாக” இருக்கவும் தயாராகிறாள். அந்த வெறுமையைத் தாண்ட அவளால் முடியவில்லை.

ஜெயமோகனின் வார்த்தைகளில்: (திண்ணை தளத்துக்கு நன்றி!)

‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ மிதமிஞ்சிப் பிரபலமானதனாலேயே அந்தரங்கமான கூரிய வாசிப்புக்கு ஆளாகாமல் போன நாவல் என்பது என் எண்ணம். அப்படி பிரபலமாகும்போது ‘தீவிர’ வாச்கர்கள் என தங்களை நம்பிக் கொண்டிருப்பவர்களிடமிருந்து அது உதாசீனத்தை பெறுகிறது. மேலோட்டமாக படிக்கும் பெரும்பான்மை வாசகர்கள் அதை அங்கீகரிக்கப்பட்ட பொதுவான வாசிப்புத்தடத்திலேயே வாசித்து முடித்துவிடுகிறார்கள். ஆகவே நல்ல இலக்கியப்படைப்புக்கு அளிக்கப்படவேண்டிய – அப்படி ஒன்றை கோருவது அதன் உரிமையும் கூட – பன்முக வாசிப்பை பெறாமலேயே எளிய முத்திரைகளுடன் அப்படைப்பு நம் முன் நின்று கொண்டிருக்கிறது. இக்கட்டுரையில் ஜெயகாந்தனின் நாவல்களைப் பற்றிய விரிவான வாசிப்பை நிகழ்த்த முற்படவில்லை . இக்கருத்துக்கள் என் நாவல் போன்ற நூல்களில் நான் சொல்லிச் சென்றவையே. இங்கு சில வாசிப்புச் சாத்தியக் கூறுகளை மட்டும் சொல்ல விழைகிறேன். ‘சிலநேரங்களில் சில மனிதர்கள்’ல் வரும் வெங்கு மாமா ஆசிரியரால் தோலுரிக்கப்படும்’ ஒரு கதாபாத்திரமாகவே இன்று வரை படிக்கப்பட்டுள்ளது. அவரை அப்படி சித்திரப்படுத்தும் திரைப்பட வடிவம் அக்கோணத்தை ஆழமாக நிறுவியும் விட்டது. திரைப்படம் என்ற கலையின் எல்லை அது. ஆனால் நாவலில் வெங்குமாமா கங்காவின் கண் வழியாகவே அப்படி காட்டப்படுகிறார். அவரது சித்திரத்தில் கங்காவின் மனத் திரிபுக்கும் இடமுள்ளது , நாவலில் அவ்வாசிப்புக்குரிய எண்ணற்ற இடங்கள் உள்ளன.

‘கற்பை’ இழந்த ஒரு பெண்ணின் சிக்கலாகவே தொடர்ந்து அந்நாவல் படிக்கப்படுகிறது. ஆனால் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஓர் உலகம்’ போலன்றி அதன் முதல் தளமே கூட சிக்கலானதுதான். கங்காவின் பல விதமான உளவியல் சிக்கல்கள் ஆன்மீகமான அலைபாய்தல்கள் அந்நாவலில் பல கோணங்களில் முன்வைக்கப்படுகின்றன. மற்ற நாவல்களைப் போலன்றி இந்நாவலில் விவாத அம்சம் குறைவே. பெரும்பாலான விஷயங்கள் வாசகனின் ஊகத்துக்கும் கற்பனைக்குமே விடப்படுகின்றன. கங்காவுக்கும் அவள் அம்மாவுக்கும் இடையேயான உறவின் முரண்பட்ட தன்மையை உணர்த்தும் வரிகளை மட்டும் ஓர் வாசகன் தொகுத்துக் கொண்டானானால் அவனுக்கு கிடைப்பது வேறு ஒரு நாவல். நாவலின் ஆண் கதாபாத்திரங்கள் ஏன் அப்படி இருக்கிறார்கள் என்பதை விட அவர்கள் கங்காவுக்கு ஏன் அப்படி படுகிறார்கள் என்ற வினாவை வாசகன் எழுப்பிக் கொண்டால் கிடைப்பது வேறு ஒரு படைப்பு. பெண்ணை உரிமைகொண்டாடக் கூடியவர்களாக, ஆக்ரமிக்கக் கூடியவர்களாக மட்டுமே இந்நாவலில் ஆண்கள் வருகிறார்கள் என்பது என் வாசிப்பு. வெங்குமாமாவும் பிரபுவும் கணேசனும் எல்லாம் ஒரு நாணயத்தின் மாறுபட்ட பக்கங்களே. மீண்டும் மீண்டும் கங்கா ஆணிடம் ஏதோ ஒன்றை தேடி ஏமாந்து ஆங்காரமும் கண்ணீருமாக வெளியேறிக் கொண்டிருக்கிறாள். ஆண்களே இல்லாமல் அவள் உலகம் இயங்க முடியவில்லை. பெண்ணின் இயல்பான மறு முனையை, முழுமைப்படுத்தும் எதிர்நிலையை ஆண்களிடம் அவள் தேடியிருக்கலாம். அவள் கண்டதெல்லாம் விழுங்கத் திறந்த வாய்களையே. அஞ்சி அருவருத்து அவமானம் கொண்டு அவள் திரும்பி வந்து தன் தனிமையின் கூட்டுக்குள் அடைகிறாள்.

‘சிலநேரங்களில் சில மனிதர்கள்’ நம் கலாச்சாரத்தில் பெண்ணுக்கு உருவாகும் உக்கிரமான தனிமையைப் பற்றி பேசும் நாவல். என்னுடைய பார்வையில் ஆஷாபூர்ணாதேவியின் [வங்காளி] தொடர்நாவல்களான ‘பிரதம பிரதிசுருதி’, ‘ஸ்வர்ண லதா’ ஆகியவற்றுடன் ஒப்பிடத் தக்க நாவல் இது. தமிழில் பெண் எழுத்தாளர்கள் எவருமே இந்த தளத்தைச் சார்ந்த ஒரு படைப்பை உருவாக்கவில்லை. மீண்டும் மீண்டும் நமது பேரிலக்கியங்களும், நவீன படைப்புகளும் பேசும் கருதான் இது. சீதை இந்த தனிமையின் மிகப்பெரிய ஆழ்படிமம். ஒருபோதும் புரிந்து கொள்ளப்படாதவள். ஆண்களின் உலகில் சதுரங்கக் காயாக அலைக்கழிக்கப்பட்டவள். மண்ணின் பொறுமையும் ஆழமும் அமைதியும் கொண்டவள். கங்காவை ஜெயகாந்தன் அவள் தன் மனதில் உருவான கணத்திலேயே சீதையுடன் அடையாளம் கண்டுகொண்டாயிற்று. பல இந்திய நாவல்களின் கதாபாத்திரங்கள் அப்படி சீதையிலிருந்து பிறப்பு கொண்டவை என்பதை ஆஷாபூர்ணாதேவியின் நாவல்களை ஆய்வு செய்யும்போது பல விமரிசகர்கள் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். கங்காவின் தனிமையையும் தேடலையும் ‘கங்கை எங்கே போகிறாள்?’, ‘சுந்தர காண்டம்’ ஆகிய இரு நாவல்களாக நீட்டி அவளை கங்கைக்கு கொண்டு சென்று சேர்க்கிறார் ஜெயகாந்தன். வேறு முடிவே இந்திய சூழலில் இந்நாவலுக்கு இருக்க முடியாது. சீதை மண்ணுக்கு திரும்பியது போலத்தான் கங்கா கங்கைக்கு மீள்வதும்.

பெரும் வாசகர் வட்டத்தையும் அங்கீகாரத்தையும் அடைந்தாலும் விமரிசகர்கள் விஷயத்தில் ஜெயகாந்தன் துரதிருஷ்டசாலிதான். மோகமுள்ளையும் இம்மூன்று நாவல்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் அதை நாம் காண முடியும். மோகமுள் தொடர்ந்து விமரிசகர்களால் பேசப்பட்டு, முக்கியப்படுத்தப்பட்டு , எப்போதுமே ஆழ்ந்த வாசிப்பை பெறும் நிலையில் உள்ளது. ஜெயகாந்தன் நாவல்கள் தற்செயலாக அவ்வாசிப்பை பெற்றால்தான் உண்டு. மோகமுள்ளின் யமுனா முழுக்க முழுக்க ஆண்காமம் மூலமே சித்தரிக்கப்பட்ட கதாபாத்திரம். அந்நாவலின் சரளம் கொண்ட அழகிய மொழி அதை நம் மனதில் வலுவாக நிறுவி விடுகிறது. அதை விட யமுனாவின் அழகு, நாசுக்கும் கூர்மையும் கொண்ட பேச்சு ஆகியவை வாசக மனதின் உள்ளார்ந்த காமத்தை தூண்டுகின்றன. எல்லா இளம் வாசகர்களும் ஒரு வயதில் யமுனாவை காதலித்திருப்பார்கள் என்று ஒரு இலக்கிய வழக்காறு உண்டு. அந்நவலை குறைத்து மதிப்பிடவில்லை, ஆனால் அந்த மயக்கத்தைத் தாண்டி யமுனாவைப் பார்த்தால் உட்சிக்கல்கள் இல்லாத எளிய கதாபாத்திரமாகவே அவள் தெரிகிறாள். சீரான அமைதியான நதி. மாறாக கங்கா ஓடையாக உருவெடுத்து பாறைகளில் முட்டி மோதி கிளைகள் பிரிந்து தேங்கி வேகம் பெற்று ஆழ்நதியாகி அமைதிகொண்டு கடலை அடைகிறாள்.

ஜெயமோகன் சுந்தர காண்டம் என்ற ஒரு நாவலைக் குறிப்பிடுகிறார். நான் கேள்விப்பட்டதே இல்லை. யாராவது படித்திருக்கிறீர்களா?

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாவல்கள், ஜெயகாந்தன், திரைப்படம் ஆன எழுத்துக்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  • ஆர்வியின் அலசல்
  • ஜெயகாந்தனைப் பற்றி ஜெயமோகன் – பகுதி 1, பகுதி 2
  • சில நேரங்களில் சில மனிதர்கள் திரைப்படம் – பக்ஸ் விமர்சனம், ஆர்வியின் விமர்சனம், சாரதாவின் விமர்சனம்

    ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் நாவல் பற்றி ஆர்வி, திரைப்படம் பற்றி சாரதா

  • ஜெயகாந்தனின் “ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்”
  • ஜெயகாந்தனின் ஜயஜய சங்கர – பகுதி 1 , பகுதி 2, ஈஸ்வர அல்லா தேரோ நாம்
  • சில நேரங்களில் சில மனிதர்கள் நாவல் பற்றி ஆர்வி, திரைப்படம் பற்றி பக்ஸ், ஆர்வி, சாரதா
  • ஜெயகாந்தனின் “தர்க்கத்துக்கு அப்பால்” சிறுகதையும் என் புலம்பலும்
  • ஜெயகாந்தனின் “நந்தவனத்தில் ஓர் ஆண்டி” சிறுகதை, சி.சு. செல்லப்பாவின் “வாழ்க்கை” சிறுகதை, பிதாமகன் திரைப்படம் ஆகியவற்றில் ஒரே அடிப்படைக் கருத்து
  • “தர்க்கத்துக்கு அப்பால்” சிறுகதையும் என் புலம்பலும்

    ஜெயகாந்தனுக்கு பத்மபூஷன்

    மதனின் “வந்தார்கள் வென்றார்கள்”

    பாடப் புத்தகங்களுக்கு பதிலாக இதை எல்லாம் பள்ளிகளில் படிக்கலாம். எல்லாரும் வரலாற்றை விரும்பிப் படிப்பார்கள்! Enough said.

    scribd தளத்தில் ebook ஆக கிடைக்கிறது.

    பிற்சேர்க்கை: மனிதனுக்குள் ஒரு மிருகம் எல்லாம் வன்முறையை சென்சேஷனலைஸ் செய்யும் தண்டப் புத்தகம், ஓடிவிடுங்கள்.

    தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் அபுனைவுகள்

    எஸ்.எல். பைரப்பாவின் க்ருஹபங்கா (ஒரு குடும்பம் சிதைகிறது)

    இன்றைக்கு கொஞ்சம் தமிழ் நாட்டை விட்டு வெளியே போய்ப் பார்க்கலாம்.

    பைரப்பா எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர். பர்வா, தாட்டு, வம்ச விருட்சா போன்ற அற்புதமான புத்தகங்களை படித்திருக்கிறேன். கன்னட எழுத்தாளர்களில் இவர்தான் மிகவும் பாப்புலர் என்றும் இவரது புத்தகங்கள் விற்பனையில் டாப் என்றும் என் கன்னட நண்பன் ஒருவன் அடிக்கடி சொல்வான்.

    ஆனால் க்ருஹபங்கா எனக்கு ஏமாற்றத்தைத்தான் தந்தது. அதில் நான் காணும் குறை அங்கே துன்பங்களும் துயரங்களும் ஒரு for loop மாதிரி போகின்றன.
    for (பக்கம் = 1; பக்கம் < கடைசி பக்கம்; பக்கம்++) {
        குடும்பம் முழம் சறுக்கும்
        சாண் ஏறும்
    }
    ஒரு நூறு பக்கம் படித்த பிறகு கதை எப்படி போகும் என்ன ஆகும் என்று தெளிவாக தெரிந்துவிடுகிறது.

    இப்படி இருக்கும்போது கதை சிம்பிளாகத்தானே இருக்க முடியும்? 1920-40-களில் மைசூர் சமஸ்தானத்தில் நடக்கும் கதை. மூர்க்கத்தனமும் முட்டாள்தனமும் நிறைந்த ஒரு பிராமண விதவை குடும்பம். இரண்டு பையன்கள். முதல் பையன் கிராம கணக்குப் பிள்ளை ஆகும் உரிமை உள்ளவன், ஆனால் படிப்பு கொஞ்சம் ஏனோதானோதான். கொஞ்சம் அசடு. இரண்டாமவன் வெறும் முரடன். நஞ்சம்மா முதல்வனை மணக்கிறாள். அவள் ஒரு கிளாசிகல் "இந்தியத் தாய்." கணவனுக்காக தானே கணக்கு வழக்குகளை பார்க்கிறாள். பிள்ளைகளை படிக்க வைக்கிறாள். குடும்பத்தை உயர்த்த அவள் செய்யும் எல்லா முயற்சிகளும் தோல்வியில்தான் முடிகின்றன. மாமியாரின் மூர்க்கத்தனத்தையும், புருஷனின் வேலை செய்யமாட்டேன், தனக்கு சாப்பாடு இருந்தால் போதும் என்ற சுயநலத்தையும் அவளால் வெல்ல முடியவில்லை.

    நாவலின் பலம் பாத்திர சித்தரிப்பு. அந்த மூர்க்கமான அம்மாவும் சரி; அசமஞ்ச புருஷனும் சரி; நஞ்சம்மாவின் பிடிவாதக்கார, வீர தீர அப்பாவும் சரி; நஞ்சம்மாவும் சரி. மிக அருமையாக வந்திருக்கின்றன. சில காட்சிகள் – நஞ்சம்மாவின் அப்பா வினை வைக்கப்பட்டிருக்கும் சிலையை உடைத்து பணத்தை எடுப்பது, பஞ்ச காலத்தில் நஞ்சம்மாவின் மகன் காயை திருடி நஞ்சம்மாவிடம் கொடுப்பது, நஞ்சம்மாவின் மாமியார் மாவை கொண்டு வந்து அவள் மீது கொட்டுவது போன்றவை அபாரம். அந்த காலத்து கிராமத்தை கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். பிளேக் நோயால் கிராமங்கள் அடிக்கடி பாதிக்கப்படும் என்று அவர் எழுதி இருப்பது வியப்பாக இருந்தது.

    இது ஜெயமோகனுக்கு பிடித்த நாவல்களில் ஒன்று. அவர் எழுதிய விமர்சனம் இங்கே.

    புத்தகத்தை சாஹித்ய அகாடமி வெளியிட்டிருக்கிறது. மொழிபெயர்ப்பாளர் எச்.வி. சுப்ரமணியன். பெயரை மறந்துவிட்டேன், நினைவிருப்பவர்கள் சொல்லலாம். தகவல் தந்த பாஸ்கருக்கு நன்றி!

    தொகுக்கப்பட்ட பக்கம்: பிற இந்திய மொழி நாவல்கள்

    தொடர்புடைய சுட்டி:
    பைரப்பா – விக்கி குறிப்பு
    ஜெயமோகன் க்ருஹபங்காவை அலசுகிறார்

    புன்முறுவல் வரவழைத்த கதை

    வி.எஸ். திருமலை என்பவர் எழுதிய அடுத்த வீட்டுப் பெண் என்ற கதையை டோண்டு ராகவன் தளத்தில் படித்தேன். ட்ரங்க் கால் புக் செய்வது, ஃபோன் பேசும்போது எத்தனை நிமிஷம் ஆகிறது என்று ஒரு கண் வைத்துக் கொண்டே பேசுவது, கடிதம் எழுதுவது, ஃபோனில் கத்திப் பேசுவது, இருநூறு ரூபாய் இன்க்ரிமென்ட் மாதிரி ஒரு காலகட்டத்தை நினைவுபடுத்திய கதை. பத்திரிகையில் வந்ததோ என்னமோ தெரியாது, ஆனால் ஒரு காலத்தில் சாவி, துமிலன், நாடோடி, பாக்கியம் ராமசாமி, கடுகு மாதிரி பெரிய கைகள் எழுதி பத்திரிகைகளில் வரும் நல்ல நகைச்சுவைச் சிறுகதைகளை நினைவுபடுத்தியது.

    திருமலை டோண்டுவின் உறவினராம். இப்போது இறந்துவிட்டாராம்.

    படித்துப் பாருங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

    தொகுக்கப்பட்ட பக்கம்: கதை சுட்டிகள்

    தொடர்புடைய சுட்டிகள்:
    டோண்டு ராகவனின் தளத்தில் அடுத்த வீட்டுப் பெண் சிறுகதை
    வி.எஸ். திருமலையின் இன்னொரு சிறுகதை
    திருமலையின் மற்றும் ஒரு சிறுகதை
    இன்னும் ஒரு கதை – மாயக்குதிரை
    மற்றொரு கதை – கிருஷ்ணன் பொம்மை
    அதிசயச் சாமியார்

    ஆர். சூடாமணி

    நண்பர் விஜயன் பெண் எழுத்தாளர் ஆர். சூடாமணியைப் பற்றி எழுதலாமே என்று கேட்டிருந்தார். துரதிருஷ்டவசமாக நான் சூடாமணியின் இரண்டு கதைகளை மட்டுமே படித்திருக்கிறேன். ஒன்று இணைப்பறவை (நல்ல சிறுகதை), இன்னொன்று பூமாலை. அந்தக் கதைகளை வைத்து அவர் கொஞ்சம் பழைய காலத்து எழுத்தாளர், கலைமகள், பழைய கல்கி, விகடன் பத்திரிகைகளில் எழுதக் கூடியவர், குமுதத்தில் கூட அவர் கதைகள் வராது என்று யூகிக்க முடிந்தது. பெரிதாக ஒன்றும் எழுத முடியவில்லை.

    ஜெயமோகன் அவரது டாக்டரம்மா அறை சிறுகதையையும் தமிழின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக குறிப்பிடுகிறார். எஸ்.ரா. அவரது அன்னியர்கள் சிறுகதையை தமிழின் நூறு சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக குறிப்பிடுகிறார். சரி இது இரண்டும் நெட்டில் கிடைக்குமா என்று தேடினேன். பத்து நாளைக்கு முன்தான் அவர் இறந்து போனார் என்று தெரிய வந்தது. வருத்தமாக இருக்கிறது.

    எழுத்தாளர் பா. ராகவன் அவருக்கு ஒரு நல்ல அஞ்சலி எழுதி இருக்கிறார். அம்பை சூடாமணியைப் பற்றி இங்கே நினைவு கூர்கிறார். எழுத்தாளர் அனுத்தமா தன் தோழி சூடாமணியைப் பற்றி இங்கே எழுதுகிறார். பேராசிரியை எம்.ஏ. சுசீலாவின் அஞ்சலி இங்கே. நண்பர் ஜீவி சூடாமணியைப் பற்றி ஒரு அருமையான அறிமுகத்தை எழுதி இருக்கிறார். எழுத்தாளர் பாவண்ணன் அவரது ரயில் என்ற சிறுகதையை இங்கே அலசுகிறார்.

    சூடாமணி 10.01.1931-இல் சென்னையில் பிறந்தாராம். கிட்டத்தட்ட எண்பது வயதில் இறந்திருக்கிறார். பாட்டி ரங்கநாயகி அம்மாள், சகோதரி ருக்மணி பார்த்தசாரதி ஆகியோரும் எழுத்தாளர்களாம். இளம் வயதிலேயே அம்மை நோயால் தாக்கப்பட்டு வளர்ச்சி குன்றியதாம். பள்ளிக்கல்வி நிறைவு செய்யவில்லை. 1954 முதல் தமிழில் சிறுகதைகள் எழுதி வருகிறாராம். 1957-இல் அவரது முதல் சிறுகதையான காவேரி கலைமகள் வெள்ளி விழாப் பரிசை வென்றது. 1959-இல் மனதுக்கு இனியவள் என்ற நாவலுக்கு கலைமகள் ஸ்ரீ நாராயணஸ்வாமி ஐயர் விருது கிடைத்திருக்கிறது. 1961-இல் இருவர் கண்டனர் என்ற நாடகம் ஆனந்த விகடன் நாடகப் போட்டியில் இரண்டாம் பரிசு வென்றிருக்கிறது. இலக்கியச் சிந்தனை ஆண்டு விருதை தமது நான்காவது ஆசிரமம் என்ற சிறுகதைக்காகப் பெற்றார். 2001-இல் வெளியான ஆர். சூடாமணி கதைகள் என்ற சிறுகதைத் தொகுப்புக்குத் தமிழ்வளர்ச்சித் துறை சிறந்த சிறுகதைப் படைப்புக்கான பரிசு வழங்கியுள்ளது. 2009-இல் கலைஞர் பொற்கிழி விருது வென்றிருக்கிறார். அது பற்றி திண்ணை தளத்தில் வெங்கட் சாமிநாதன் எழுதுகிறார் –

    ஐந்தாம் விருது ஆர். சூடாமணி அவர்களுக்கு. அவரும் கடந்து நூற்றாண்டு ஐம்பதுகளின் பிற்பாதியிலிருந்து எழுதி வருகிறார். பெண்கள் உலகம். அதுவும் அடைபட்ட பெண்கள் உலகம் தான் அவர் கதைகளிலும் நாவல்களிலும் விரியும். சம்பிரதாய உலகத்தின் சம்பிரதாய மன உளைச்சல்கள். நான் படித்த வரை, வீட்டுச் சுவரைத் தாண்டி அவர் பெண்கள் அறியார்கள் என்று நினைக்கிறேன். அதற்கும் காரணங்களும் நிர்ப்பந்தங்களும் இருந்தன. அவரையும் சாகித்ய அகாடமியோ யாருமோ தெரிந்திருக்கவில்லை. இப்போதைய பெண்ணியம் ஆட்சி செய்யும் காலத்தில் ஆர். சூடாமணியைப் பற்றி என்ன கவலை? அவரையும் மறந்தாயிற்று. ஆனால் கலைஞர் பொற்கிழி தேர்வுக் குழுவினர் அவரை நினைவில் வைத்திருக்கிறார்களே. ஆச்சரியம்தான்.

    பிற்சேர்க்கை: நண்பர் விஜயன் எழுத்தாளரும் ஐ.பி.எஸ். அதிகாரியுமான திலகவதி குமுதத்தில் எழுதி இருக்கும் அஞ்சலியைப் பற்றி சொல்லி இருக்கிறார். அங்கே அவரது ஃபோட்டோ ஒன்றும் கிடைத்தது. திலகவதியின் வார்த்தைகளில்:

    ஆர்.சூடாமணி அமைதியானவர். அவரது அப்பா ஒரு ஐ.சி.எஸ். அதிகாரி. பிரிட்டீஷ் அரசாங்கத்தில் வேலை பார்த்தவர். இவரது வீடும் பிரிட்டீஷ் காலத்தில் உறைந்துவிட்ட வீடு மாதிரி இருக்கும். வீட்டில் ஒவ்வொரு பகுதியும் அவ்வளவு சுத்தமாக இருக்கும். அந்தக் காலத்து மர அலமாரிகள். அதில் 50 ஆண்டுகளுக்கு முந்தைய புத்தகங்கள். சமீப காலங்களில் வந்த ஒரு புத்தகத்தைக்கூட அதில் பார்க்க முடியாது. அவர் வைத்திருந்த கார் கூட அந்தக் காலத்து மாடல்.

    அவரது இயல்புகளில் மறக்கமுடியாதது, பார்வையற்றவர்களுக்கென்று நேரம் ஒதுக்கி தான் படித்த நல்ல புத்தகங்களை அவர்களுக்கும் படித்துக் காட்டுவார்.

    வெளி உலக மனிதர்களுடன் அதிகம் பழகியதில்லை. நான் கூட எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் சிபாரிசு செய்ததால் ஒரேயொரு முறைதான் அவரை சந்திக்க முடிந்தது. ஆனால், அவர் கதைகளைப் படித்தால் மனித உறவுகளுக்கு இடையேயான சமகால சிக்கல்களும் நெகிழ்ச்சிகளும் அவ்வளவு நுட்பமாக, அழகாக எழுதப்பட்டிருக்கும்.

    நன்றி, குமுதம்!

    யாரிடமாவது ஏதாவது புஸ்தகம் இருந்தால் இரவல் கொடுங்கப்பு!

    தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

    தொடர்புடைய சுட்டிகள்:
    சூடாமணி பற்றி ஜெயமோகன்
    விக்கி குறிப்பு
    பா.ரா.வின் அஞ்சலி
    சூடாமணியைப் பற்றி அம்பை
    சூடாமணியைப் பற்றி அனுத்தமா
    எம்.ஏ. சுசீலாவின் அஞ்சலி
    சூடாமணி பற்றி பிரபஞ்சன்
    ஜீவியின் அறிமுகம்
    விமலா ரமணியின் அஞ்சலி
    பாவண்ணன் ரயில் சிறுகதையை அலசுகிறார்
    சூடாமணி கதைகளைப் பற்றி கோபி ராமமூர்த்தி
    அழியாச்சுடர்கள் தளத்தில் இரண்டு சிறுகதைகள் – இணைப்பறவை, பூமாலை

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    எனக்கு பொதுவாக ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், மற்றும் சுபா ஆகியோரைப் பற்றி கொஞ்சம் இளக்காரம்தான். உப்பு சப்பில்லாத கதைகள் எழுதுகிறார்கள் என்று ஒரு நினைப்பு. அந்தக் காலத்து ராஜேந்திரகுமார், சவீதா, புஷ்பா தங்கதுரை மாதிரி. ஆனால் எழுத முயற்சி செய்யும்போதுதான் இந்த லெவலில் எழுதுவது எவ்வளவு கஷ்டம் என்று தெரிகிறது.

    மூவரில் பிரபாகரே சிறந்த எழுத்தாளர் என்று நினைக்கிறேன். இவரது ஆதர்சம் ஜேம்ஸ் ஹாட்லி சேஸாக இருக்க வேண்டும். அவரைப் போலவே த்ரில்லர்கள் எழுத முயற்சிக்கிறார். சில புத்தகங்களை படிக்கும் வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது. பரத்-சுசீலா என்று ஒரு ஜோடி துப்பறிகிறது. சரி படித்துத்தான் பார்ப்போமே என்று படித்தால்:

    என்னைக் காணவில்லை: கல்கியில் தொடர்கதையாக வந்திருக்கிறது. டைம் பாஸ் த்ரில்லர். இரண்டாவது கல்யாணம் செய்துகொள்ளும் பணக்கார அப்பா, வயது வந்த மகன், அவன் காதலி; இரண்டாவது மனைவியும், அவள் அண்ணனும் வில்லன்கள். வில்லன் கோஷ்டி போடும் திட்டங்களை எல்லாம் யாரோ ஒரு மர்ம மனிதர்(கள்) அவர்களுக்கு ஐந்து நிமிஷம் முன்னால் செய்கிறார்கள். பரத்-சுசீலா துப்பறியும் கதை. முடிவை நான் எதிர்பார்க்கவில்லை.

    இனி இல்லை இடைவேளை: இன்னொரு டைம் பாஸ் த்ரில்லர். கம்ப்யூட்டரால் வேலை போகும் இருவர் கம்ப்யூட்டர் பயன்படுத்தப்படும் இடங்களில் குண்டு வைக்கிறார்கள்.

    சொல்லாதே செய்: “என்னைக் காணவில்லை”யை நினைவுபடுத்துகிறது. நடிகர் பிரகாஷை கொல்ல ஒருவன் திட்டம் போடுகிறான். கொல்லப் போகும்போது அவனை வேறு யாரோ கொன்றிருக்கிறார்கள். கல்கண்டில் தொடர்கதையாக வந்ததாம்.

    ஜாக்பாட் ராத்திரி: பணம் நிறைந்த சூட்கேஸ், அதைக் கைப்பற்ற துடிக்கும் மூன்று கோஷ்டிகள். சுவாரசியமான த்ரில்லர்.

    ஆகாயத்தில் ஆரம்பம்: ஒரு விஞ்ஞானியை கடத்தும் முயற்சி. கொஞ்சம் தற்செயல், ஒரு சின்ன விஷயத்தால் பிடிபடுகிறார்கள். சுவாரசியமாக எழுதப்பட்டிருக்கிறது.

    இமைக்காத இரவுகள்: சில நீண்ட கதைகள். போர்.

    பின்னிரவில் நதியருகில்: காதல், அப்பா சதி செய்து பெண்ணை வேறு இடத்தில் கட்டிக் கொடுக்கிறார். கணவன் இறக்க, அப்பா கதற, காதலன் மணக்கத் தயாராக இருந்தும், காதலி அவனை நிராகரிக்கிறாள். அவள் மனம் கணவனிடம் போய்விட்டது. ப்ராக்டிகலாக எல்லாரும் இருக்கிறார்கள், அதுவே ஆச்சரியம்.

    பிறகு நான் வருவேன்: காதல், அம்மாவின் பிரஷரால் காதலனுக்கு வேறு இடத்தில் கல்யாண ஏற்பாடு நடக்கிறது. காதலி பிரிய, கடைசியில் ட்விஸ்ட் வைத்திருக்கிறார்.

    அந்தி மந்திரம்: மாமன் மச்சானுக்குள் விரோதம். மாமன் பெண் பழி தீர்க்க சின்ன மச்சானை மணக்கிறாள். வேஸ்ட்.

    இது நடக்கக் கூடாது: போர். மறைந்த தயாரிப்பாளர் ஜீவி மைக்கேல் ஜாக்சனை இந்தியாவுக்கு வரவழைக்க முயன்று கடைசியில் ஜாக்சன் கழற்றிக் கொண்டார். அதை வைத்து எழுதி இருக்கிறார். ஜீவிக்கு கதையில் பெயர் ஜீவபாலன்!

    இது வரை தோற்றதில்லை: ஒன்றுமே இல்லாத, பரத்-சுசீலா துப்பறியும் கதை.

    நிலா சாட்சி: இன்னொரு க்ரைம் த்ரில்லர். மனைவியை கொலை செய்யும் பெரிய மனிதர், அவளை ஒரு சீரியல் கில்லர் கொலை செய்த மாதிரி காட்டுகிறார்.

    இயந்திரப் புன்னகை: கற்பை பெரிதாக நினைக்காத NRI பெண், “எதிரியோடு” படுத்து கிராமத்தில் சண்டையை நிப்பாட்டுகிறாள்.

    அழகிய பெண்ணே: நல்ல நிலையில் இருக்கும் எழுத்தாளன், நர்ஸ், எழுத்தாளனிடம் உதவி பெற்று முன்னேறி வரும் நண்பன் முக்கோணம். நண்பனும் நர்சும் சதி செய்கிறார்கள் என்று மீண்டும் மீண்டும் வாசகனை ஏமாற்ற முயற்சி செய்திருக்கிறார்.

    இது ஒரு பொற்காலம்: வைரங்களை திருட முயற்சி. வேஸ்ட்.

    மெல்லப் பொய் பேசு: பரத்-சுசீலா நாவல். புரட்சிகரமான மருந்து கண்டுபிடிக்கும் தாத்தாவை யாரோ கடத்திவிட பரத்தும் சுசீலாவும் கண்டுபிடிக்கிறார்கள். வேஸ்ட்.

    நான் உன்னை சுவாசிக்கிறேன்: கல்கியில் தொடர்கதையாக வந்தது. அரவிந்த் மூன்றாவது பையன். அண்ணா, அக்கா நல்ல நிலையில் இருக்கிறார்கள். அரவிந்த் தொழில் செய்து நண்பனால் ஏமாற்றப்பட்டிருக்கிறான். அடுத்த தொழில் செய்ய பணம் தேவை, அப்பா சனி திசை முடியவும், தங்கை கல்யாணம் முடியவும் இரண்டு வருஷம் பொறுக்க சொல்கிறார். அக்கா அண்ணனுடன் போட்டி மனப்பான்மையில் இருக்கும் அரவிந்தால் பொறுக்க முடியவில்லை, கந்துவட்டிக்கு கடன் வாங்கி ஆரம்பிக்கிறான். நடுவில் பிருந்தா என்ற ஒரு balanced mentality உள்ள பெண்ணை விரும்புகிறான். தொழில் ஆரம்பித்தவுடனே அடி மேல் அடி. இழுத்து மூட வேண்டிய நிலை. பிருந்தா அவன் வீட்டாரிடம் எடுத்துச் சொல்லி நிலைமையை சீர் செய்கிறாள். அரவிந்த், பிருந்தா இரண்டு காரக்டர்களும் நன்றாக வந்திருக்கும். படிக்கலாம்.

    கொஞ்சம் காதல் வேண்டும், எப்படியும் ஜெயிக்க வேண்டும்: சினிமாவில் போராடும் ஒரு துணை இயக்குனர் திரும்பி கிராமத்துக்கு போவது முதல் கதையில். அதே துணை இயக்குனர் ஒரு படத்தை இயக்க வருவது அடுத்த கதையில். படிக்கலாம். துணை இயக்குனரின் ஏமாற்றங்கள் நன்றாக வந்திருக்கின்றன.

    உயிரோடு உறவாடு: காதல் முறிவு. அப்புறம் ஹீரோ எல்லா உண்மையையும் சொல்லி வேறு ஒருத்தியை மணக்கிறார். ஆனால் அவர்களுக்குள் ஒத்துப் போகவில்லை. டைவர்ஸ் பேச்சு வரை போகிறது. மனைவி கணவனை குற்றம் சாட்டும் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்கிறாள். கைது, விடுதலை, முன்னாள் காதலியோடு திருமணம். பிரபாகர் மனைவியை “குற்றவாளியாக” சித்தரிக்க நினைத்திருக்கிறார், ஆனால் கணவன் மேல்தான் அதிக தவறு இருப்பதாகத் தோன்றுகிறது. படிக்க வேண்டியதில்லை.

    கனவு கரையும் நேரம்: ஒரு கொலையாளி விட்டுச் செல்லும் க்ளூக்களும் அவன் திட்டம் போட்டு விட்டுச் செல்வதே. டைம் பாஸ்.

    தயங்காதே: ஒரு நிருபரின் கொலை, ஒரு நடிகையின் தற்கொலை. வேஸ்ட்.

    யாருக்கும் முகமில்லை: காதலை எதிர்க்கும் அப்பா. வேஸ்ட்.

    மன்மதன் வந்தானடி: வாரப் பத்திரிகை தொடர்கதை மாதிரி இருக்கிறது. ஊதாரிக் கணவன் தன் மனைவி தன் மீது வைக்கும் நம்பிக்கையால் திருந்துகிறார்ன்.

    டிசம்பர் பூ டீச்சர்: சிறுகதைத் தொகுப்பு. ஒரு சிறுகதை எனக்கு கொஞ்சம் பிடித்திருந்தது. நான்கு கல்லூரி நண்பர்கள். இருப்பவர்களில் ஏழையானவன் முன்னேற முயற்சி செய்கிறான். மிச்ச மூன்று பேரும் பேசி பேசியே நேரத்தை வீணடிக்கிறார்கள்.

    வேட்டை: சிறுகதைத் தொகுப்பு. நடுவில் சில பக்கங்களை காணவில்லை, அதனால் எல்லா கதைகளையும் படிக்க முடியவில்லை. சில கதைகள் நன்றாக வந்திருக்கின்றன. “நலமில்லை… நலமா?” கதை ஒரு முறிந்த காதலைப் பற்றியது. பல வருஷங்களுக்கு பிறகு சந்திக்கும்போது முன்னாள் காதலி தன் சுகமான வாழ்க்கையைப் பற்றி பேசிக்கொண்டே போகிறாள். கதை முடிவில் அவள் தனியாக பாத்ரூமில் அழுவதை முன்னாள் காதலன் கேட்கிறான். “பழகியாச்சு” கதையில் பல கனவுகள் கண்ட இரு கல்லூரித் தோழர்கள் வாழ்க்கையில் காம்ப்ரமைஸ் செய்து கொள்கிறார்கள். அதை அருமையாக முடித்திருக்கிறார். பொதுவாக நல்ல craftsmanship தெரிகிறது. படியுங்கள் என்று சிபாரிசு செய்வேன்.

    பட்டுக்கோட்டை பிரபாகர் கதைகள்: சில கதைகள் டிசம்பர் பூ டீச்சரிலும் படித்தேன். ஒரு காந்தமும் இரும்புத் துண்டும் நல்ல தீம் – முதிர் கன்னி பஸ்ஸில் தடவுபவனுக்கு இடம் கொடுத்து… மரம் அவருக்கு பிடித்த சிறுகதை என்று நினைக்கிறேன் – “சூழ்ச்சி” செய்து ஒரு மரம் வெட்டப்படுவதை தடுக்கிறான் ஹீரோ. வயசு டீனேஜ் வயசுக் கோளாறை நன்றாக சித்தரிக்கிறது. நேற்றைய இலைகள் கதையில் க்ளைமாக்ஸ் நன்றாக வந்திருக்கிறது. ரெண்டு இட்லி, ஒரு வடை கதையின் ஆப்டிமிஸ்டிக் முடிவு நிறைவாக இருக்கிறது.

    பிரபாகரை படிக்க வேண்டுமென்றால் அவரது சிறுகதைகளைப் படியுங்கள். நல்ல டெக்னிக் இருக்கிறது. அவ்வப்போது சில மாணிக்கங்கள் கிடைக்கின்றன. பல வருஷங்களுக்கு முன் படித்த ஒரு பேய்க்கதை – ஏரிக்கரை ராஜாத்தி – இன்னும் நினைவிருக்கிறது. அது Lady or the Tiger? ரேஞ்சில் எழுதப்பட்ட ஒரு கச்சிதமான சிறுகதை. பேர்தான் நினைவு வரமாட்டேன் என்கிறது. ஒரு ஆரம்ப நிலை எழுத்தாளன் என்ற நிலையில் நான் அவரைப் பார்த்து பொறாமைப்படுகிறேன். இவர் ஒரு மீடியம் நிலையில் இருக்கிறார், இவர் நிலைக்கு வரவே எத்தனை நாளாகுமோ? அவரது நாவல்கள், அதுவும் க்ரைம் நாவல்கள் அவ்வளவு சுகப்படவில்லை. அவை பொதுவாக வாரப் பத்திரிகை தொடர்கதை, மாத நாவல் ஃபார்முலாவை விட்டு வெளியே வரவில்லை. ஏதாவது பஸ் பயணத்தில் படித்துவிட்டு தூக்கிப் போடத்தான் லாயக்கு.

    தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

    தொடர்புடைய சுட்டிகள்:
    சொக்கனின் பதிவு
    பட்டுக்கோட்டை பிரபாகரின் ஒரு சிறுகதை – மாதவன் சார்

    ஸ்டெல்லா ப்ரூஸ்

    ஒரு காலத்தில் ஸ்டெல்லா ப்ரூஸ் வாரப் பத்திரிகைகளில் பெரிய ஹிட். பொதுவாக காதலை, ஆண்-பெண் உறவை வைத்து தொடர்கதை எழுதுவார். ஆண் எப்போதும் கொஞ்சம் கெத்தாக, திமிராக இருப்பான். அதே நேரத்தில் உண்மையான பிரியத்துக்கு ஏங்குவான். பெண்ணுக்கு அந்த கெத்து பிடித்திருக்கும். கதை அந்த ஆணின் பார்வையில்தான் இருக்கும். அவன் சூரியன், மற்ற எல்லாரும் அவனை சுற்றி வரும் கிரகங்கள், அவ்வளவுதான். இதே framework-ஐ வைத்து நிறைய எழுதினார். அவர் எழுதிய எதுவும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய இலக்கியம் இல்லை. ஆனால் வாரப் பத்திரிகை தொடர்கதைகளை விட பல சமயம் பெட்டர் ஆக இருக்கும். ஆனந்த விகடனில் அவர் எழுதிய ஒரு கதை homosexuality பற்றி. இலைமறை காய் விஷயம் எல்லாம் இல்லை, நேரடியாக எழுதி இருந்தார். கமர்ஷியல் பத்திரிகைகளில் அப்படி ஒரு கதை வந்தது அப்போது ஷாக்கிங் ஆக இருந்தது.

    அவருடைய புத்தகங்கள் நாலைந்து சமீபத்தில் கிடைத்தன. அவற்றைப் பற்றி:

    அது ஒரு நிலாக்காலம்: இதுதான் ஸ்டெல்லா ப்ரூசின் மிகப் பிரபலமான நாவல் என்று நினைக்கிறேன். விகடனில் தொடர்கதையாக வந்தபோது பலரும் – குறிப்பாக பெண்கள் – விரும்பிப் படித்தார்கள். அதே பந்தா காட்டும் ஆண், அதே பந்தாவால் கவரப்படும் பெண் என்று போகும். ஆனால் ராம்குமார், சுகந்தா ஜோடி சுவாரசியமான ஒன்றுதான்.
    ஜெயமோகன் தமிழின் சிறந்த 50 சமூக ரொமான்ஸ் நாவல்களில் ஒன்றாக இதை குறிப்பிடுகிறார். (ரொமான்ஸ் நாவலுக்கான அவர் வரையறை: கறாரான இலக்கணப்படி இவை நாவல்கள் அல்ல, மிகு கற்பனை அல்லது உணர்ச்சிக் கற்பனை படைப்புகள்.)

    காதல் சிகரங்கள்: சிறுகதைத் தொகுப்பு. “காதல் சிகரங்கள்” கதை “அது ஒரு நிலாக்காலம்” ராம்குமார்-சுகந்தா பற்றி. “ஒரே ஒரு வித்தியாசம்” கதையில் பக்கத்து வீட்டில் குளிக்கும் பெண்ணை எட்டிப் பார்த்த விடலைப் பையனை விட்டுவிடும்படி அப்பா சொல்கிறார். அவருக்கும் அப்படி ஒரு ஃபிளாஷ்பாக் இருக்கிறது. இந்த மாதிரி கதைதான் என்னால் எழுத முடிகிறது, ஆனால் ஸ்டெல்லா ப்ரூஸ் அளவுக்கு நன்றாக இன்னும் எழுத வரவில்லை. “காணாமல் போகாத குறிப்புகள்“தான் முதல் பாராவில் குறிப்பிட்டிருக்கும் ஓரினச் சேர்க்கை கதை. படித்த காலத்தில் ஓரினச் சேர்க்கைதான் கண்ணில் பட்டது, இன்றுதான் மிக நன்றாக எழுதப்பட்டிருக்கிறது என்பதே தெரிகிறது. “கண்ணம்மா” சிறுகதையில் அப்போதுதான் சந்தித்த பெண்ணை கண்ணம்மா என்று அழைத்துவிடுகிறார் ஹீரோ. அவளுக்கு பொத்துக்கொண்டு வருகிறது. பல வருஷங்களுக்குப் பின் சந்திக்கும்போது அவள் என் கணவர் என்னை கண்ணம்மா என்று கூப்பிட்டதே இல்லை என்று சொல்கிறாள். “பிற்பகல் மூன்று மணி” சிறுகதையில் மனைவிக்கும் நண்பனுக்கு உறவு இருப்பது புரியாமல் ஏமாறும் ஒரு கணவன். “புதிய கல்வெட்டுகள்” சிறுகதையில் புருஷனுக்கு தன் தங்கையை கட்டி வைக்கும் அக்கா – அவளுக்கு தங்கைக்கு தன்னை விட உயர்ந்த இடம் அமைந்துவிடக் கூடாது என்ற பொறாமையால் கணவனை பங்கு போட்டுக் கொள்ள சம்மதிக்கிறாள். மூன்றுமே நல்ல சிறுகதைகள்.

    மீண்டும் அந்த ஞாபகங்கள்: அது ஒரு நிலாக் காலத்தின் prequel. ராம்குமாரும் சுகந்தாவும் எப்படி காதலிக்க ஆரம்பித்தார்கள் என்று போகிறது.

    சூரியன் மிக அருகில்: அம்மா வேறு ஒருவனோடு ஓடிப் போய்விடுகிறாள். அந்த நினைவிலேயே உழலும் ஒரு வாலிபன். படிக்க வேண்டியதில்லை.

    அது வேறு மழைக் காலம்: பணக்கார வீட்டுப் பையன் ஹிந்தி சினிமா ஸ்டார் ஆக வேண்டும் என்ற ஆசையில் வீட்டை விட்டு பம்பாய்க்கு ஓடிப் போகிறான். அங்கே ஒரு பெண், கெத்து இத்தியாதி. அறுபதுகளின் ஆரம்பத்தில் நடப்பது போல எழுதப்பட்ட புத்தகம். ஹிந்தி சினிமா பற்றி வருபவை சுவையாக இருக்கும்.

    கடல் ஆழத்து தாவரங்கள்: தன் சித்தி முறை உள்ள, ஒரே வயதுப் பெண்ணால் கவரப்படும் பையன். டைம் பாஸ்.

    ஒரு முறைதான் பூக்கும்: முக்கோணக் காதல், தியாகம் என்று போரடிக்கும் ஒரு குறுநாவல்.

    என் வீட்டுப் பூக்கள்: அதே கெத்தான ஆண், பெண். மாற்றம் என்னவென்றால் ஆணின் தாய்க்கு பக்கவாதம் வந்துவிடுகிறது. அவளுக்கு சேவை செய்து வாழ்க்கையை கடத்த வேண்டுமா என்று தயங்கி பெண் ஜாதியை காரணமாக காட்டி காதலை முறித்துக் கொள்கிறாள். முறித்த உடனே தாய் அவுட்!

    தெருவில் ஒருவன்: சிறுகதை தொகுப்பு. எந்த கதையும் என் மனதில் நிற்கவில்லை.

    மூன்றாம் பிறைகள்: சந்துரு காலேஜ் நாட்களில் நந்தாவை சைட் அடிக்கிறான். நந்தா அவனை கண்டுகொள்ளவில்லை. இப்போது நந்தாவின் அக்கா அமுதாவுடன் கல்யாணம் ஆகிறது. அவனுக்கு இன்னும் நந்தாவின் மேல் ஒரு கண். இப்படி நீண்டுகொண்டே போகிறது கதை. டைம் பாஸ் என்று கூட சொல்லமாட்டேன்.

    மாய நதிகள்: மனைவியை இழந்த 55 வயதுக்காரர். கிராமத்தில் பெரிய பணக்காரர் அவர்தான். அடுத்தவர்கள் தன்னை மதிக்க வேண்டும் என்பதில் குறியாக இருப்பவர். திடீரென்று ஒரு ஏழை, இளம் அழகியை இரண்டாம் கல்யாணம் செய்து கொள்கிறார். இதனால் தன்னை எல்லாரும் பொறாமையோடு பார்ப்பார்கள் என்று கணக்குப் போடுகிறார். ஆனால் அவருக்கு எல்லாரும் மனைவியை சைட் அடிக்கிறார்கள் என்ற உணர்வு உறுத்த ஆரம்பிக்கிறது. அவளை மன ரீதியாக கொடுமைப்படுத்துகிறார். பக்கத்து வீட்டு இளம் பையனுக்கும் அவளுக்கும் உறவு உருவாகிறது. இவருடைய மன அழுத்தம் அதிகரித்து அவன் மோட்டார்சைக்கிளுக்கு தீ வைக்கிறார். விஷயம் போலீஸ் வரை போக, இவருக்கு பைத்தியமே பிடித்துவிடுகிறது. சுமாராக இருக்கிறது.

    பனங்காட்டு அண்ணாச்சி: சிறு நகரம் ஒன்றில் ஒரு வணிகரின் வாழ்க்கை. என்ன பாயிண்ட் என்றே தெரியவில்லை.

    எல்லா சாலைகளும் குற்றங்களை நோக்கி, எங்கிருந்தோ ஒரு நிழல் இதையெல்லாம் விவரிப்பது நேர விரயம்.

    ஸ்டெல்லா ப்ரூசின் பலம் அறுபது, எழுபதுகளின் நகர்ப்புற இளைஞர் கூட்ட ambience-ஐ ஓரளவு தத்ரூபமாக சித்தரிப்பது. ஐம்பது, அறுபதுகளின் கிராமப்புற, கொஞ்சம் மேல்தட்டு குடும்பங்களின் வாழ்க்கையை ஒரு சிறுவனின் கண்ணிலிருந்து நல்ல முறையில் சித்தரிப்பது. அவரது பலவீனம் வேறு எதுவும் இல்லாதது. ஒரே ஒரு புத்தகம் படிக்க வேண்டுமென்றால் “அது ஒரு நிலாக்காலம்” படியுங்கள். ஒரே ஒரு சிறுகதை படிக்க வேண்டுமென்றால் “காணாமல் போன ஞாபகங்கள்” படியுங்கள். காதல் சிகரங்கள் சிறுகதைத் தொகுதியே ரசிக்கும்படி இருக்கிறது.

    தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

    சிறை – விகடனின் திரைப்பட விமர்சனம்

    சிறை திரைப்படத்துக்கு விகடன் 56 மார்க் கொடுத்திருக்கிறது. விகடனில் கஞ்சத்தனமாகத்தான் மார்க் போடுவார்கள். 56 மார்க் என்றால் அவர்கள் அகராதியில் மிக நல்ல படம் என்று பொருள். இன்றைக்கு பார்த்தால் எப்படி இருக்குமோ, ஆனால் அன்றைக்கு தமிழ் கூறும் நல்லுலகம் – குறிப்பாக பெண்கள் பெரிதும் விரும்பிப் பார்த்த திரைப்படம். விகடனுக்கு நன்றி சொல்லி, இந்த விமர்சனத்தை இங்கே பதிக்கிறேன்.

    கோவி. திருநாயகன், விருத்தாசலம்-3
    படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் பாகீரதி தாலியைக் கழற்றியெறிவது கதைக்குத் தேவையான புரட்சிகரமான கருத்துதான் என்றாலும்கூட, தமிழ்ப் பண்பாட்டுக்கு முரணாக உள்ளதை எண்ணும்போது உறுத்துகிறதே?
    பாகீரதியின் இந்த முடிவை, அது எடுக்கப்பட்ட சூழ்நிலைக்கு முக்கியத்துவம் தந்து, யதார்த்தமான கண்ணோட்டத்தில் அந்தப் பிரச்னையை அணுகினால், உறுத்தல் இருக்காது!

    தாலியின் புனிதத்தையோ, அதன் அவசியத்தையோ மறுப்பதோ, மறப்பதோ இங்கு கதாசிரியையின் எண்ணம் அல்ல. ஆனால், மனத்தால்கூடத் தவறிழைக்காத பெண் பாகீரதி. எதிர்பாராத ஒரு சூழ்நிலையில் ஒரு கயவனால் அவள் கற்பழிக்கப்பட்டுவிடும்போது, அதை ஜீரணிக்கமுடியாத கணவன், அவளுடன் தொடர்ந்து இல்வாழ்க்கை நடத்த விரும்பாவிட்டாலும், தன்னை நம்பி வந்த அந்த அபலைப் பெண்ணுக்கு உண்ண உணவும் இருக்க இடமும் கொடுக்க வேண்டியது அவனுடைய கடமையல்லவா? அந்தக் கடமையிலிருந்து நழுவி, அவளைப் பசியோடும் பட்டினியோடும் நிர்க்கதியாய் நடுத்தெருவில் நிற்க வைத்துவிட்டுக் கோழையாய் ஓடிவிடும் அந்தக் கணவனின் தாலி அவள் கழுத்தில் இருப்பதும் ஒன்றுதான்; இல்லாமலிருப்பதும் ஒன்றுதான்!

    எஸ்.கே.பாரி, திருச்சி.
    பாத்திரத்தோடு ஒன்றி நடிக்கும் நடிகை என்பதை இந்தப் படத்திலும் நிரூபித்துவிட்டார் லட்சுமி. சரிதானே?
    ரொம்ப ரொம்பச் சரி! அப் பாவிப் பெண்ணாகக் கிராமத்தில் வந்து இறங்கும்போது, அருமை மனைவியாகக் கணவனுக்குப் பணிவிடை செய்யும்போது, அவருடன் சிணுங்கிக் கொஞ்சும்போது, எதிர்பாராதவிதமாக அந்தோணியால் கெடுக்கப்படும்போது, வார்த்தைகளால் அவனைச் சித்ரவதை செய்யும்போது, அவன் மரணத்துக்குப் பின் கதறித் துடிக்கும்போது – கற்பனையில் அனுராதாரமணன் கண்ட பாகீரதியைக் கண் முன் நிறுத்தியிருப்பதில் லட்சுமிக்கு 100% வெற்றி! அப்புறம், ராஜேஷை மறந்துவிட்டீர்களே? அந்தோணிசாமியாக அவரும் பிரமாதப்படுத்தியிருக்கிறார்!

    எஸ்.சாய் கணேஷ், திருச்சி.
    விகடனில் வெளியாகிப் பரிசு பெற்ற சிறுகதை, அதே அழுத்தத்துடன் திரையில் சொல்லப்பட்டிருப்பதில் உங்களுக்கு மகிழ்ச்சிதானே?
    கண்டிப்பாக! விகடனில் வெளியான கதை என்பதற்காக இல்லை. அச்சில் வந்த எந்தக் கதையுமே படமாகும்போது சீர் கெட்டுச் சின்னாபின்னமாவதையே அதிகம் பார்த்திருக்கிறோம்! அதனால்!

    இந்தச் சிறுகதையை சினிமா மீடியத்துக்குக் கொண்டு வரும் போது, படிக்கும்போதிருந்த விறுவிறுப்பும் அழுத்தமும் சற்றும் குறையாமல், ஏன், அதைவிட ஒரு படி அதிகமாகவே இருக்கும் அளவுக்குத் திரைக்கதை அமைத்துள்ள டைரக்டர் ஆர்.சி. சக்தியின் திறமைக்கு நாங்கள் கொடுக்க விரும்பும் போனஸ் ஐந்து மார்க்கையும் சேர்த்து…

    பெரும்பான்மை வாசகர்களுக்குப் பிடித்த அம்சம்: லட்சுமியின் நடிப்பு.

    பிடிக்காத அம்சம்: அனுராதாவின் கவர்ச்சி நடனம்.

    மொழிபெயர்ப்பாளர் கௌரி கிருபானந்தன் தரும் தகவல்கள்: அனுராதா ரமணன் அவர்களின் சிறை கதையை தெலுங்கில் மொழிபெயர்த்து “Ilanaati Ahalya” என்ற தலைப்பில் ஆந்த்ர ஜ்யோதி என்ற பத்திரிகையில் வெளி வந்து தெலுங்கு வாசகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. எனக்கு மன நிறைவு கொடுத்த படைப்பு. மூல கதையில் உள்ள வாசத்தை மொழிபெயர்ப்பிலும் வாசகர்கள் உணர வேண்டும் என்பது என்னுடைய அவா. சிறை சினிமா தெலுங்கில் “Siksha” என்ற தலைப்பில் மறு ஆக்கம்(1985) செய்யப்பட்டுள்ளது. பாகீரதியாக சுகாசினி, அந்தோனியாக சரத்பாபு நடித்துள்ளார்கள்.

    தொகுக்கப்பட்ட பக்கம்: சினிமா ஆன எழுத்துக்கள்

    தொடர்புடைய சுட்டிகள்: அனுராதா ரமணன்