தி. ஜானகிராமனின் “கொட்டுமேளம்”

க.நா.சு. தன் படித்திருக்கிறீர்களா? புத்தகத்தில் சிபாரிசு செய்த இன்னொரு புத்தகம். சிறுகதைத் தொகுப்பு. நண்பர் ராஜனிடம் இருந்து இரவல் வாங்கியது. அதில் உள்ள சிறுகதைகளைப் பற்றி.

கொட்டுமேளம்: ஒரு பிழைக்கத் தெரியாத டாக்டர், அவருக்கேற்ற காதலி. நல்ல கதை.
சண்பகப் பூ: அழகான இளம் பெண் விதவையாகி நிற்கிறாள். கணவனின் அண்ணனோடு உறவு என்பதை சொல்லாமல் சொல்கிறார். எழுத்துக் கலை கை வந்தவர்!
ரசிகரும் ரசிகையும்:அருமையாக எழுதப்பட்ட கதை. வித்வான், ரசிகத்தன்மை உள்ள தாசி. திருவையாறு உற்சவம் என்று அவர் போவதே அவளைப் பார்க்கத்தான். சரசமாடும்போது தியாகையரைப் பற்றி வித்வான் கொஞ்சம் மட்டமாக சொல்லிவிட விரட்டிவிடுகிறாள்!
கழுகு: சாகப் போகிறார் என்று ஊரே எதிர்ப்பார்க்கிறது. ஒவ்வொரு முறையும் வேறு யாராவது போகிறார்கள்.
பசி ஆறிற்று:சாமிநாத குருக்கள்-அகிலாண்டம் பொருத்தமில்லாத திருமணம். அகிலா பக்கத்து வீட்டு ராஜத்தை சைட் அடிக்கிறாள். ஆனால் ஒரு தருணத்தில் அவள் மனம் தெளிந்துவிடுகிறது. அந்த ஒரு நிமிஷத்தை அருமையாக எழுதி இருக்கிறார்.
வேண்டாம் பூசணி: வயதான அம்மா, விட்டுப்போன சொந்தங்கள். இன்றும் அதே கதைதானே! நல்ல கதை.
இக்கரைப் பச்சை, அத்துவின் முடிவு: இரண்டிலும் அதே பாத்திரங்கள்தான். முதல் கதையில் அத்து கொழிக்கிறார், கதைசொல்லி வீட்டில் கொஞ்சம் பற்றாக்குறைதான். அத்துவை அவர் மனைவி மதிப்பதில்லை என்று தெரியும்போது இக்கரைப் பச்சை என்று நினைத்துக் கொள்கிறார். இரண்டாவது கதையில் அத்து செத்துக் கொண்டிருக்கிறார். அவர் மனைவி அவரை சீந்துவதில்லை. அத்து இறந்தபிறகு அவரது சொத்தை விட கடன் அதிகம் என்று தெரியவருகிறது.
நானும் எம்டனும்: சின்னப் பையன், மூழ்கும் பையனை காப்பாற்ற தன் உயிரைக் கொடுக்கிறான்.
பொட்டை: குருடான சன்னாசியை உத்தண்டியாரின் தத்துப் பிள்ளை கொஞ்சம் தரக் குறைவாக பொட்டை என்று அழைக்கிறான். அவனை ஒரு பெண்ணோடு கோவிலில் சன்னாசி கையும் களவுமாக பிடிக்கிறான்.
தவம்: செல்லூர் சொர்ணாம்பா புகழ் பெற்ற தாசி. அவளிடம் போக ஆசைப்படும் ஏழை சிங்கப்பூர் சென்று வருஷக்கணக்கில் உழைத்து சம்பாதிக்கிறான். திரும்பும்போது அவள் கிழவி.
சிலிர்ப்பு: ஏழை குழந்தைக்கு கருணை காட்டும் பற்றாக்குறை குடும்பத்தின் சின்னப் பையன். மிக நன்றாக எழுதப்பட்ட கதை.

சிலிர்ப்பு இந்த தொகுப்பின் சிறந்த சிறுகதை. பசி ஆறிற்று, தவம் நல்ல கதைகள். மற்ற கதைகளும் சோடை போகவில்லை.

சிலிர்ப்பு சிறுகதையை ஜெயமோகனும் தி.ஜா.வின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக குறிப்பிடுகிறார். இந்தத் தொகுப்பிலிருந்து வேறு எந்த கதையையும் அவர் குறிப்பிட்டு சொல்லவில்லை. எஸ்.ரா.வும் இந்தத் தொகுப்பிலிருந்து எந்த கதையையும் தேர்ந்தெடுக்கவில்லை.

படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் சிறுகதைகள்

தொடர்புடைய பக்கங்கள்:
க.நா.சு.வின் “படித்திருக்கிறீர்களா?”
தி.ஜா. அறிமுகம்
தி. ஜானகிராமன் + சிட்டி எழுதிய “நடந்தாய் வாழி காவேரி” – சாரதா அறிமுகம் செய்கிறார்