நண்பர் விஜயன் பெண் எழுத்தாளர் ஆர். சூடாமணியைப் பற்றி எழுதலாமே என்று கேட்டிருந்தார். துரதிருஷ்டவசமாக நான் சூடாமணியின் இரண்டு கதைகளை மட்டுமே படித்திருக்கிறேன். ஒன்று இணைப்பறவை (நல்ல சிறுகதை), இன்னொன்று பூமாலை. அந்தக் கதைகளை வைத்து அவர் கொஞ்சம் பழைய காலத்து எழுத்தாளர், கலைமகள், பழைய கல்கி, விகடன் பத்திரிகைகளில் எழுதக் கூடியவர், குமுதத்தில் கூட அவர் கதைகள் வராது என்று யூகிக்க முடிந்தது. பெரிதாக ஒன்றும் எழுத முடியவில்லை.
ஜெயமோகன் அவரது டாக்டரம்மா அறை சிறுகதையையும் தமிழின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக குறிப்பிடுகிறார். எஸ்.ரா. அவரது அன்னியர்கள் சிறுகதையை தமிழின் நூறு சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக குறிப்பிடுகிறார். சரி இது இரண்டும் நெட்டில் கிடைக்குமா என்று தேடினேன். பத்து நாளைக்கு முன்தான் அவர் இறந்து போனார் என்று தெரிய வந்தது. வருத்தமாக இருக்கிறது.
எழுத்தாளர் பா. ராகவன் அவருக்கு ஒரு நல்ல அஞ்சலி எழுதி இருக்கிறார். அம்பை சூடாமணியைப் பற்றி இங்கே நினைவு கூர்கிறார். எழுத்தாளர் அனுத்தமா தன் தோழி சூடாமணியைப் பற்றி இங்கே எழுதுகிறார். பேராசிரியை எம்.ஏ. சுசீலாவின் அஞ்சலி இங்கே. நண்பர் ஜீவி சூடாமணியைப் பற்றி ஒரு அருமையான அறிமுகத்தை எழுதி இருக்கிறார். எழுத்தாளர் பாவண்ணன் அவரது ரயில் என்ற சிறுகதையை இங்கே அலசுகிறார்.
சூடாமணி 10.01.1931-இல் சென்னையில் பிறந்தாராம். கிட்டத்தட்ட எண்பது வயதில் இறந்திருக்கிறார். பாட்டி ரங்கநாயகி அம்மாள், சகோதரி ருக்மணி பார்த்தசாரதி ஆகியோரும் எழுத்தாளர்களாம். இளம் வயதிலேயே அம்மை நோயால் தாக்கப்பட்டு வளர்ச்சி குன்றியதாம். பள்ளிக்கல்வி நிறைவு செய்யவில்லை. 1954 முதல் தமிழில் சிறுகதைகள் எழுதி வருகிறாராம். 1957-இல் அவரது முதல் சிறுகதையான காவேரி கலைமகள் வெள்ளி விழாப் பரிசை வென்றது. 1959-இல் மனதுக்கு இனியவள் என்ற நாவலுக்கு கலைமகள் ஸ்ரீ நாராயணஸ்வாமி ஐயர் விருது கிடைத்திருக்கிறது. 1961-இல் இருவர் கண்டனர் என்ற நாடகம் ஆனந்த விகடன் நாடகப் போட்டியில் இரண்டாம் பரிசு வென்றிருக்கிறது. இலக்கியச் சிந்தனை ஆண்டு விருதை தமது நான்காவது ஆசிரமம் என்ற சிறுகதைக்காகப் பெற்றார். 2001-இல் வெளியான ஆர். சூடாமணி கதைகள் என்ற சிறுகதைத் தொகுப்புக்குத் தமிழ்வளர்ச்சித் துறை சிறந்த சிறுகதைப் படைப்புக்கான பரிசு வழங்கியுள்ளது. 2009-இல் கலைஞர் பொற்கிழி விருது வென்றிருக்கிறார். அது பற்றி திண்ணை தளத்தில் வெங்கட் சாமிநாதன் எழுதுகிறார் –
ஐந்தாம் விருது ஆர். சூடாமணி அவர்களுக்கு. அவரும் கடந்து நூற்றாண்டு ஐம்பதுகளின் பிற்பாதியிலிருந்து எழுதி வருகிறார். பெண்கள் உலகம். அதுவும் அடைபட்ட பெண்கள் உலகம் தான் அவர் கதைகளிலும் நாவல்களிலும் விரியும். சம்பிரதாய உலகத்தின் சம்பிரதாய மன உளைச்சல்கள். நான் படித்த வரை, வீட்டுச் சுவரைத் தாண்டி அவர் பெண்கள் அறியார்கள் என்று நினைக்கிறேன். அதற்கும் காரணங்களும் நிர்ப்பந்தங்களும் இருந்தன. அவரையும் சாகித்ய அகாடமியோ யாருமோ தெரிந்திருக்கவில்லை. இப்போதைய பெண்ணியம் ஆட்சி செய்யும் காலத்தில் ஆர். சூடாமணியைப் பற்றி என்ன கவலை? அவரையும் மறந்தாயிற்று. ஆனால் கலைஞர் பொற்கிழி தேர்வுக் குழுவினர் அவரை நினைவில் வைத்திருக்கிறார்களே. ஆச்சரியம்தான்.
பிற்சேர்க்கை: நண்பர் விஜயன் எழுத்தாளரும் ஐ.பி.எஸ். அதிகாரியுமான திலகவதி குமுதத்தில் எழுதி இருக்கும் அஞ்சலியைப் பற்றி சொல்லி இருக்கிறார். அங்கே அவரது ஃபோட்டோ ஒன்றும் கிடைத்தது. திலகவதியின் வார்த்தைகளில்:
ஆர்.சூடாமணி அமைதியானவர். அவரது அப்பா ஒரு ஐ.சி.எஸ். அதிகாரி. பிரிட்டீஷ் அரசாங்கத்தில் வேலை பார்த்தவர். இவரது வீடும் பிரிட்டீஷ் காலத்தில் உறைந்துவிட்ட வீடு மாதிரி இருக்கும். வீட்டில் ஒவ்வொரு பகுதியும் அவ்வளவு சுத்தமாக இருக்கும். அந்தக் காலத்து மர அலமாரிகள். அதில் 50 ஆண்டுகளுக்கு முந்தைய புத்தகங்கள். சமீப காலங்களில் வந்த ஒரு புத்தகத்தைக்கூட அதில் பார்க்க முடியாது. அவர் வைத்திருந்த கார் கூட அந்தக் காலத்து மாடல்.
அவரது இயல்புகளில் மறக்கமுடியாதது, பார்வையற்றவர்களுக்கென்று நேரம் ஒதுக்கி தான் படித்த நல்ல புத்தகங்களை அவர்களுக்கும் படித்துக் காட்டுவார்.
வெளி உலக மனிதர்களுடன் அதிகம் பழகியதில்லை. நான் கூட எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் சிபாரிசு செய்ததால் ஒரேயொரு முறைதான் அவரை சந்திக்க முடிந்தது. ஆனால், அவர் கதைகளைப் படித்தால் மனித உறவுகளுக்கு இடையேயான சமகால சிக்கல்களும் நெகிழ்ச்சிகளும் அவ்வளவு நுட்பமாக, அழகாக எழுதப்பட்டிருக்கும்.
நன்றி, குமுதம்!
யாரிடமாவது ஏதாவது புஸ்தகம் இருந்தால் இரவல் கொடுங்கப்பு!
தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்
தொடர்புடைய சுட்டிகள்:
சூடாமணி பற்றி ஜெயமோகன்
விக்கி குறிப்பு
பா.ரா.வின் அஞ்சலி
சூடாமணியைப் பற்றி அம்பை
சூடாமணியைப் பற்றி அனுத்தமா
எம்.ஏ. சுசீலாவின் அஞ்சலி
சூடாமணி பற்றி பிரபஞ்சன்
ஜீவியின் அறிமுகம்
விமலா ரமணியின் அஞ்சலி
பாவண்ணன் ரயில் சிறுகதையை அலசுகிறார்
சூடாமணி கதைகளைப் பற்றி கோபி ராமமூர்த்தி
அழியாச்சுடர்கள் தளத்தில் இரண்டு சிறுகதைகள் – இணைப்பறவை, பூமாலை