எனக்கு ரொம்ப நாளாக ஒரு கேள்வி உண்டு. இன்று மீண்டும் தி.ஜா.வின் பாயசம் சிறுகதை படித்தவுடன் நினைவு வந்தது. இன்று தமிழனின் ட்ரேட்மார்க் உணவுகளாக இருக்கும் இட்லி, தோசை, சாம்பார், சட்னி, ஆப்பம் இவை எல்லாம் பற்றி இலக்கியங்களில் வரும் முதல் reference என்ன? எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் தேனையும் தினை மாவையும் கடந்ததாகத் தெரியவில்லை. மணிமேகலையில் அட்சய பாத்திரத்தில் சோறு மட்டும்தான் வந்தமாதிரி இருக்கிறது. கம்பர் ஏதாவது விருந்து கிருந்தைப் பற்றி விவரித்திருக்கிறாரா? வந்து போன யுவான் சுவாங், மார்க்கோ போலோ, வாசப் யாராவது என்ன சாப்பாடு கிடைத்தது என்பதைப் பற்றி ஏதாவது எழுதி இருக்கிறார்களா? பிரதாப முதலியார், கமலாம்பாள், பத்மாவதி, சின்னச் சங்கரன் யாராவது ஏதாவது போகிற போக்கில் சொன்னது நினைவு வருகிறதா?
ஆண்டாள் நம்மாழ்வார் (திருத்திய ஜடாயுவுக்கு நன்றி!) உண்ணும் சோறும் பருகும் நீரும் தின்னும் வெற்றிலையும் என்று பாடுவதால் வெற்றிலைக்கு ஒரு பழைய reference கிடைக்கிறது. அவ்வையார் பாலையும் தெளிதேனையும் பாகையும் பருப்பையும் பற்றி பாடி இருக்கிறார். எந்தப் பருப்பு தெரியவில்லை.
புகையிலை, கருவேப்பிலை, கொத்தமல்லி, தக்காளி, வெங்காயம், வெண்டை, கத்தரிக்காய், உருளைக்கிழங்கு (துப்பறியும் சாம்பு புத்தகத்தில் உருளைக்கிழங்கை இங்கிலீஷ் கறிகாய் என்கிறாள் வேம்பு), திராட்சை, அன்னாசி, நாவல்பழம், மா, பலா, வாழை, கோழி, ஆடு, மாடு, பன்றி, மான், முயல் என்று ஒரு மகா பெரிய லிஸ்ட் இருக்கிறது. தெரிந்ததை சொல்லுங்களேன், தொகுத்துவிடுவோம்!
பிற்சேர்க்கை:
ஜடாயு தரும் குறிப்புகள்:
பிள்ளையார் துதிப் பாடல்கள் பலவற்றில் உணவு பற்றிக் குறிப்புகள் இருக்கும் – ’மூஷிக வாஹன மோதக ஹஸ்தா’ போன்று. ’கைத்தல நிறைகனி அப்பமொடவல் பொரி’ திருப்புகழ் ரொம்ப பிரபலம். திருப்புகழின் காலம் 15-16ம் நூற்றாண்டு.
இன்னொரு பிரபலமான பிள்ளையார் திருப்புகழ் பக்கரை விசித்ரமணி என்று தொடங்கும். இதில் ஒரு பெரிய பட்சணப் பட்டியலே உள்ளது –
இக்கவரை நற்கனிகள் சர்க்கரை பருப்புடன் நெய்
எட்பொரி அவல் துவரை யிளநீர் வண்-
டெச்சில் பயறப்பவகை பச்சரிசி பிட்டு வெள-
ரிப்பழம் இடிப்பல்வகை தனிமூலம்
மிக்க அடிசிற்கடலை பக்ஷணமெனக் கொளரு
விக்கின சர்த்தனெனு மருளாழி..
என்று போகும். அருமையான தாளகதி கொண்ட பாடல். அப்படியே கணபதி அசைந்தாடி வந்து பஷணங்களை விழுங்குவது போலவே இருக்கும் பாட்டின் ஓசை!
மேற்சொன்ன திருப்புகழுக்கு சொற்பொருள் விளக்கம் தேவைப்படும் என்று நினைக்கிறேன்.. அதில் வரும் உணவு வகைகள் –
இக்கு (கரும்பு – இக்ஷு என்ற சம்ஸ்கிருத சொல்லின் தமிழ் வடிவம்), அவரை, நற்கனிகள், சர்க்கரை, பருப்பு, நெய், எள்பொரி, அவல், துவரை, இளநீர், வண்டெச்சில் (தேன்!!) , பயறு அப்பவகை, பச்சரிசி பிட்டு, வெள்ளரிப்பழம், இடியப்பம் வகையறா, தனிமூலம் மிக்க அடிசில், கடலை…..
தனிப்பாடல் திரட்டு என்று ஒரு நூல். 15,16,17ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த பல புலவர்களின் கலவையான பாடல்கள் அடங்கியது.. உணவு பற்றி இதில் வரும் ஒரு பாடல் இன்றுவரை மனதில் நிற்கிறது.
சைவ மடத்துத் தம்பிரான் ஒருவரிடம், இன்று என்ன சமைப்பது என்று மடத்து சமையல்காரர் கேட்டாராம். தம்பிரான் பதிலை வெண்பாவில் சொன்னாராம் –
சற்றே துவையல் அரை; தம்பீ ஒரு பச்சடி வை
வற்றல் ஏதேனும் வறுத்து வை – குற்றமில்லை
காயமிட்டுக் கீரை கடை; கம்மெனவே மிளகு
வாயறைக்க வைப்பாய் கறியே!
ஜீப் “சங்கப்பாடல்களில் ‘பார்ப்பனர் மாவடு சாப்பிடுவது’ என்ற விவரம் வருகிறது” என்று சொல்கிறார்.
அ. முத்துலிங்கம் இங்கே ஒரு புறநானூற்றுப் பாடலை குறிப்பிடுகிறார். என்ன பாட்டு என்று யாருக்காவது தெரியுமா?
கருவூர் கந்தப்பிள்ளைச் சாத்தனார் பாடியது. ‘உழாமல் விதைத்து விளைந்த தினைச்சோற்றை காட்டெருமைப் பாலில் கலந்து, மானிறைச்சி கொழுப்பு வெள்ளையாக விளிம்பில் ஒட்டியிருக்கும் பானையை கழுவாமல் அதிலே சமைத்து, வாழையிலையில் பரிமாறி பலரோடு உண்ணும் குதிரை மலைத் தலைவனே’ என்று அந்தப் பாடலில் சொல்லியிருப்பது ஞாபகத்துக்கு வந்தது.
தொகுக்கப்பட்ட பக்கம்: படிப்பு (இதை எங்கே தொகுப்பது என்றே தெரியவில்லை.)