எழுத்தாளர் அனுத்தமா மறைவு

என்னைப் பொறுத்த வரையில் ஒரு எழுத்தாளருக்கு ஆபிச்சுவரி என்றால் அவரது எழுத்துகளை அலசுவதுதான். அனுத்தமாவின் புத்தகங்களை நான் படித்ததில்லை, அதனால் விட்டுவிட வேண்டியதுதான் என்று நினைத்தேன். அவரது ஒரு பேட்டியையும் அவர் புத்தகங்களைப் பற்றிய ஒரு அறிமுகத்தையும் பதிவு செய்து வைப்போமே என்றுதான் இந்த பதிவை எழுதுகிறேன்.

அனுத்தமா, சமீபத்தில் மறைந்த ஆர். சூடாமணி போன்றவர்களை கலைமகள் எழுத்தாளர்கள் என்று சொல்லலாம். அவர்கள் உலகம் குடும்பப் பெண்களின் உலகம். பெண்களின் மன உளைச்சல்களைப் பற்றியே அதிகம் எழுதுவார்கள். அதற்கு மேல் எனக்கு எதுவும் தெரியாது.

தன் தோழி ஆர். சூடாமணியைப் பற்றி அனுத்தமாவே நினைவு கூர்ந்தார், அதை இங்கே படிக்கலாம்.

சிறந்த ஆபிச்சுவரி என்றால் அது ஜெயமோகன் எழுதியதுதான். திருப்பூர் கிருஷ்ணன் கல்கியில் எழுதிய அஞ்சலியை உப்பிலி ஸ்ரீனிவாஸ் தன் தளத்தில் பதித்திருக்கிறார்.

ஹிந்து பத்திரிகையில் அவரைப் பற்றி இரண்டு கட்டுரைகள் வந்திருக்கின்றன, அவற்றை இங்கே மற்றும் இங்கே படிக்கலாம். முதல் கட்டுரை அவரை எடுத்த ஒரு பேட்டி. இரண்டாவது கட்டுரையில் அவரது சில புத்தகங்கள் பற்றி எழுதப்பட்டிருகிறது.

300 சிறுகதைகள், 21 நாவல்களை எழுதி இருக்கிறாராம். என்றாவது அவரது கேட்ட வரம் மட்டுமாவது நாவலைப் படிக்க வேண்டும். ஜெயமோகன் அதை சிறந்த social romance-களில் ஒன்றாக குறிப்பிடுகிறார்.

நாஞ்சில்நாடனுக்கு சாஹித்ய அகாடமி விருது

கொஞ்ச நாள் முன்னால்தான் தகுதி அற்றவர்களுக்கு சாஹித்ய அகாடமி விருது தருகிறார்களே என்று குறைப்பட்டுக் கொண்டேன். கமிட்டி காதில் விழுந்துவிட்டதோ என்னவோ இப்போது நாஞ்சில்நாடனுக்கு விருது கிடைத்திருக்கிறது. சூடிய பூ சூடற்க என்ற சிறுகதைத் தொகுதிக்கு விருது கொடுத்திருக்கிறார்கள்.

நான் நாஞ்சில் நாடனின் ஏழெட்டு சிறுகதைகளை மட்டுமே படித்திருக்கிறேன். இன்னும் படிக்க நிறைய புத்தகங்கள் இருக்கிறது என்பது ஒரு சின்ன மகிழ்ச்சி!

இப்போது அவரது தொகுக்கப்பட்ட சிறுகதைகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன். என்னவோ சொந்தப் பாட்டன் கதை சொல்வது போல ஒரு உணர்வை ஏற்படுத்திவிடுகிறார். அந்த சரளம் வெகு சிலருக்கே கை வந்திருக்கிறது.

இந்த நேரத்தில் நாஞ்சில்நாடனின் படைப்புகளை வலையேற்றிக் கொண்டிருக்கும் சுல்தான் ஷரீஃபுக்கும் ஒரு ஜே போடுவோம்!

தொகுக்கப்பட்ட பக்கம்: நாஞ்சில் நாடன், விருதுகள்