சோவின் “சர்க்கார் புகுந்த வீடு”

பழைய கிரேக்க நாடகங்களைப் படித்திருக்கிறீர்களா? எஸ்கைலஸ் (Aeschylus), சோஃபோக்ளிஸ் (Sophocles), யூரிபிடிஸ் (Euripides), அரிஸ்டோஃபனஸ் (Aristophanes) ஆகிய நான்கு ஆசிரியர்களின் நாடகங்கள் இன்றும் கிடைக்கின்றன. ஏறக்குறைய 2500 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்டவை என்று சொல்கிறார்கள். முதல் மூவரும் ட்ராஜடி நாடகங்களை எழுதினார்கள். அரிஸ்டோஃபனசோ காமெடி நாடகங்கள். சாக்ரடீசை கிண்டல் செய்யும் Clouds, பெண்கள் படுக்கைக்கு வரமாட்டேன் என்று அடம் பிடித்து போரை நிறுத்தும் Lysistrata என்று சில நாடகங்கள் நினைவு வருகின்றன. எல்லாவற்றிலும் கேலியும் கிண்டலும்தான். அதுவும் அந்தக் கால அரசியல்வாதி ஒருவரை – க்ளியான் (Cleon) – போட்டுத் தாக்கி இருப்பார். அருமையான நகைச்சுவை நாடகங்களை எழுதியவர் என்று கொண்டாடப்படுபவர்.

எனக்கு சோ ராமசாமிக்கும் அரிஸ்டோஃபனசுக்கும் தரத்தில் பெரிய வித்தியாசம் தெரியவில்லை. ஆனால் அரிஸ்டோஃபனசுக்கு இருக்கும் மதிப்பில் சோவுக்கு நூற்றில் ஒரு பங்கு கூட கிடையாது. சோவை நாடக ஆசிரியர் என்றோ, நகைச்சுவையாக எழுதுபவர் என்றோ பாராட்டுபவர்கள் அபூர்வமே. பழைய காலத்து எழுத்து எது கிடைத்தாலும் – அதுவும் 2500 வருஷத்துக்கு முன் எழுதப்பட்ட நாடகங்கள் – அவற்றை ஆராய, அலச ஒரு நிபுணர் கூட்டம் இருக்கும்தான். அரிஸ்டோஃபனசுக்கு இருக்கும் புகழில் பெரும் பங்கு அந்த புராதனத் தன்மையால்தான் என்று எனக்கு ஒரு எண்ணம் உண்டு. ஆனால் அவர் எழுதியவை இலக்கியம் என்றே பொதுவாக கருதப்படுகிறது. சர்க்கார் புகுந்த வீடு மாதிரி ஒரு புத்தகத்தை சோ கூட இலக்கியம் என்று கருதமாட்டார்.

சர்க்கார் புகுந்த வீடு புத்தகத்தில் சோ கருணாநிதி, எம்ஜிஆர், இந்திரா காந்தி எல்லாரையும் கிழி கிழி என்று கிழிக்கிறார். ஒருவரை ஒருவர் மட்டம் தட்டுவதையே குறிக்கோளாகக் கொண்டிருந்ததை, இந்திரா காந்தி இருவரையும் கிள்ளுக்கீரையாக நினைத்ததை, இருவரும் இந்திரா போடு தோப்புக்கரணம் என்றால் எண்ணிக்கோ என்று ஜால்ரா போட்டதை, கிண்டல் செய்து மாளவில்லை. அவ்வப்போது தன்னைத் தானே – குறிப்பாக தன் இந்திரா எதிர்ப்பு நிலையை – கிண்டல் செய்துகொள்கிறார். பக்கத்துக்கு இரண்டு முறையாவது சிரிக்கலாம்.

கதை என்று ஒன்றுமில்லை. 1980-82 காலம். எம்ஜிஆர் இரண்டாம் முறை முதல்வர். கருணாநிதி அவருக்கு வழக்கமான எதிர்கட்சித் தலைவர் பதவியில். மத்தியில் இந்திரா அரசு. ரிடையர் ஆன கந்தசாமி ஒரு சர்வ கட்சி பொதுக்கூட்டத்தில் நடுவில் புகுந்து அரசு நிர்வாகத்தை குறை சொல்கிறார். நாட்டை என்ன நிர்வாகிப்பது, ஐந்து குடும்பங்கள் தங்கி இருக்கும் எங்கள் வீட்டை நிர்வகியுங்கள் என்று சவால் விடுகிறார். அவர் போதாத காலம், சவால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அவரையும் ரகுநாத ஐயர் என்ற இன்னொரு குடும்பத்துப் பெரியவரையும் முன்னால் வைத்து எல்லாரையும் சகட்டு மேனிக்கு சாடுகிறார்.

முதல் அத்தியாயத்திலேயே களை கட்டிவிடுகிறது. காந்தி பிறந்த நாள் அன்று சர்வகட்சி கூட்டம். எம்ஜிஆர் வந்தபிறகுதான் போவேன் என்று கருணாநிதியும், அவர் வந்த பிறகுதான் போவேன் என்று எம்ஜிஆரும் உட்கார்ந்திருக்கிறார்கள். மேடையில் இருக்கும் பிற கட்சித் தலைவர்கள் எல்லாருக்கும் காத்திருந்து காத்திருந்து அலுத்துவிடுகிறது. பிறகு கண்ணதாசன் ஒரு ஐடியா கொடுக்கிறார் – இங்கே ஒருத்தர் வந்திருக்கிறார், யாரென்று தெரியவில்லை, பார்த்தால் மத்திய அரசில் ஏதோ துணை அமைச்சர் மாதிரி இருக்கிறது என்று இருவருக்கும் ஃபோன் செய்யச் சொல்கிறார். இங்கே இரண்டு பேரும் வந்த பிறகு யாரென்று கேட்டால் எல்லாரும் மறந்துவிட்ட பா. ராமச்சந்திரனை காட்டி சமாளித்துக் கொள்ளலாம் என்கிறார்.

கந்தசாமியின் சவால் பற்றி வரும் பத்திரிகை ரிபோர்ட்கள் அபாரம்! சவால் விடும்போது கந்தசாமியின் கையிலிருந்து தவறி விழுந்த பட்டாணியை எம்ஜிஆர் பிடிக்கிறார். அ.தி.மு.க. பத்திரிகை பட்டாணி விழுந்ததை நாட்டு வெடிகுண்டு என்கிறது. முரசொலி பட்டாணி கூட இல்லை, பட்டாணித் தோல் என்கிறது. மக்கள் குரல் டி.ஆர்.ஆர். ஒரு பட்டாணியின் எடை எவ்வளவு, அது விழுந்த வேகம் என்ன என்றெல்லாம் பெரிதாக கணக்குப் போட்டு அது ஒரு பயங்கர ஆயுதம் என்கிறார். முடியே இல்லாத தலை, முடிவே இல்லாத விழி கொண்ட துக்ளக் ஆசிரியர் (இதெல்லாம் அவரது description) இந்திரா ஆட்சி இப்படியே தொடர்ந்தால் நாளைக்கு வீச பட்டாணி கிடைக்காதே என்று கவலைப்படுகிறார். விகடனோ பட்டாணி சாப்பிடுவதால் வரும் தீமைகள் என்று கவர் ஸ்டோரி எழுத முற்படுகிறது. குமுதம் வீட்டில் இருக்கும் பெண்களை கவர்ச்சியாகப் படம் எடுத்து அட்டைப்படத்தில் போடத் துடிக்கிறது.

ஒரு கவியரங்கம் நடக்கிறது பாருங்கள், மு.மேத்தா தாத்தா பற்றி பாடுகிறார். மதரை மரியாதை இல்லாமல் சொன்னால் அது நகைச்சுவை என்கிறார் ஒருவர். (மரியாதை இல்லாமல் சொன்னால் மதர் மதன் ஆகிவிடுகிறது, மதன் கார்ட்டூன்கள் அந்தக் காலத்தில் பிரபலம்)

பிரச்சினை என்னவென்றால் புத்தகம் ரொம்பவுமே topical. ஒரு கட்டத்தில் கந்தசாமி, ரகுநாத ஐயர் இருவரும் கடன் தொந்தரவு தாளாமல் நாராயணசாமி நாயுடு என்ற விவசாயிகள் சங்கத் தலைவரைப் பார்க்கிறார்கள். கடனை எப்படி திருப்பிக் கொடுப்பது என்று தெரியவில்லை என்று கவலைப்படுகிறார்கள். அவர் கடனைத் திருப்பி தருவதா, நீங்கள் எல்லாம் எம்ஜிஆர் ஆட்களா என்கிறார். நாயுடு அந்தக் காலத்தில் விவசாயிகள் கடனை அரசு தள்ளுபடி செய்யவேண்டும் என்று தீவிரமாகப் போராடியவர். அது தெரியாதவர்களுக்கு இந்த ஜோக் புரியாது. இந்த மாதிரி நிறைய – மக்கள் குரல் டி.ஆர்.ஆர்., இதயம் பேசுகிறது மணியன், ம.பொ.சி. எல்லாரும் எம்ஜிஆருக்கு சோப் போடுவது, விகடன் திடீர் திடீரென்று இது கெடுதல், அது கெடுதல் என்று எழுதுவது, அப்போது அடிக்கடி நடந்த ரயில் விபத்துகள், இந்திராவின் சாமியார் fixation, என்று பலப்பல ஜோக்குகள். (அரிஸ்டோஃபனசுக்கும் இதே பிரச்சினைதான். க்ளியான் என்ன செய்தார் என்று யாருக்குத் தெரியும்?)

எனக்கும் இது இலக்கியம் இல்லைதான். பொழுதுபோக்கு நாவல்தான். ஆனால் நான் இதை ஒரு minor classic என்றே கருதுகிறேன். மாண்டி பைதானைப் (Monty Python) போல, பி.ஜி. உட்ஹவுசைப் போல சோ இந்திய, தமிழக அரசியலை வைத்து ஒரு உலகத்தைப் படைத்திருக்கிறார். படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

தொடர்புடைய சுட்டிகள்: சோ ராமசாமி – ஒரு மதிப்பீடு

4 thoughts on “சோவின் “சர்க்கார் புகுந்த வீடு”

  1. சோ-வின் ‘எங்கே பிராமணன்?’ கொஞ்சம் தேவலாம்…வேதங்களை ஆராய்ச்சி செய்து எழுதப்பட்டது…சொல்ல வந்த விஷயத்தை சுமாராக நமக்குக் கடத்தியிருப்பார். அப்போதைய போலி பகுத்தறிவுவாதிகளின் (Read DK, DMK) துவேஷப் பிரசாரத்துக்கு பதிலடிக் கொடுக்க முயன்றார். ஆனாலும் அதை ஒரு milestone என்றெல்லாம் சொல்ல மாட்டேன். வழக்கம் போல over dramatization, immature characterization, பெண்களைக் கண்டபடி மட்டம் தட்டி எழுதப்பட்டிருக்கும்.

    Like

  2. “சர்க்கார் புகுந்த வீடு’ தொடரில் சோ வடித்த கவிதையில் ஒரு சிறு பகுதி இது :

    மனதிலே டென்ஷன்
    இருந்தால், அவன்
    அப்பா.

    பையிலே பென்ஷன்
    இருந்தால், அவன்
    தாத்தா’.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.