இன்று படித்தது – ஜெயமோகனின் “அறம்”

சும்மா வளவள என்று அறிமுகப்படுத்துவதில் அர்த்தமே இல்லை. நேராக படித்துக் கொள்ளுங்கள். ஜெயமோகனின் சிறுகதை – அறம். என் anthologyயில் இடம் பெறும்.

ஒரு உண்மையான எழுத்தாளர் வாழ்க்கையில் நடந்த இந்த நிகழ்ச்சியைப் பற்றி ஜெயமோகன் சொல்லி இருக்கிறார். எழுத்தாளர் யாரென்று சுலபமாக யூகிக்கலாம். அவருடைய அனுமதி இல்லாமல் நான் வெளியே சொல்வது சரி இல்லை. எனக்கு இப்போது இருக்கும் எரிச்சல் எல்லாம் இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சியைப் பற்றி அவர் சொல்லியும் எனக்கு இதில் ஒரு சிறுகதையை காண முடியவில்லையே, நான் எழுத முயற்சி கூட செய்யவில்லையே என்பதுதான். 🙂

பக்கத்து வீட்டுக்காரர் கண்களில் பாரதியார்

சாவி எழுதிய இந்த கட்டுரை என்னை நெகிழ வைத்தது. பாரதியின் முகங்களில் எதையும் அறியாத அவரது பக்கத்து வீட்டுக்காரர், எதிர் வீட்டுக்காரர் கண்களில் பாரதி எப்படி தென்பட்டார் என்பதை சாவி விவரிக்கிறார். அந்த நாற்காலி ஃபோட்டோ இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். 13-9-1964-இல் வெளி வந்திருக்கிறது. விகடன் பொக்கிஷத்தில் மறுபதிப்பு செய்யப்பட்டது. நன்றி விகடன்!

“இதுதான் பாரதியார் குடியிருந்த வீதி!” என்றார் புதுவை நண்பர்.

”இந்த வீதிக்குப் பெயர்?”

”ஈசுவரன் கோயில் தெரு!”

கிழக்கு மேற்காகச் செல்லும் அந்த வீதி, கடற்கரையில் போய் முடிகிறது.

”பத்துப் பன்னிரண்டு வருஷ காலம் இந்தத் தெருவில்தான் குடியிருந்தார். அதோ தெரிகிறது பாருங்கள், இடது சாரியில் இருபதாம் நம்பர் வீடு, அதுதான் பாரதியார் குடியிருந்த வீடு!”

கவியரசர் வாழ்ந்த அந்த மாடி வீட்டையே சற்று நேரம் இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். பூட்டப்பட்ட கதவுகளுடன் பாழ்பட்டு நின்ற அந்த இல்லத்தின் தோற்றம், என் உள்ளத்தில் ஏதேதோ சிந்தனைகளைக் கிளறிவிட்டன.

பாரதியாரின் இல்லத்துக்கு அடுத்த வீட்டு வாசல் திண்ணையில், சாதுவாக ஒரு மனிதர் உட்கார்ந்தபடி எங்களைக் கவனித்துக் கொண்டிருந்தார். அவர் நெற்றியிலே பளிச்சென்று திருநீறு ஒளி வீசிக்கொண்டிருந்தது.

”அடுத்த வீட்டில்தானே பாரதியார் குடியிருந்தார்?” என்று மெதுவாக அவரிடம் விசாரித்தேன்.

”ஆமாம். இப்போது அது என் வீடு. 1953-ல் நான் விலைக்கு வாங்கிவிட்டேன். பத்து வருஷமா சும்மாவேதான் பூட்டி வெச்சிருக்கேன். போன வருசமே சர்க்கார்லே இந்த வீட்டை வாங்கறதா இருந்தது. இந்த வருசத்துக்குள்ளேயாவது முடிஞ்சுடும்னு எம் புத்தியிலே படுது. தனிப்பட்டவங்க யாருக்கும் இதை விக்கறதா உத்தேசமில்லை. சிவாஜி கணேசன் கூட வந்து பார்த்துட்டுப் போனாரு.”

”நீங்க பாரதியாரை நேரிலே பார்த்திருக்கீங்களா? பேசியிருக்கீங்களா?”

”பார்க்காமல் என்ன? அடுத்த வீட்டுலேதானே பத்து வருசத்துக்கு மேல இருந்தாரு! கவர்மென்ட்டுக்கு விரோதமாக இங்கே வந்தாரு. தங்கமான குணம். எல்லார்கிட்டேயும் சகஜமா பழகுவாரு. குழந்தைங்களைக் கண்டால் தூக்கிட்டுப் போய் விளையாடுவாரு. குழந்தைங்க ஏணையிலே தூங்கிக்கிட்டு இருந்தாக் கூட தூக்கிட்டுப் போயிடுவாரு. குழந்தைங்கன்னா அவ்ளோ பிரியம்! அவரும் சரி, அவர் பெண்ஜாதியும் சரி. ரொம்ப நல்ல குணம். ஒருத்தரையும் கடுமையாப் பேசமாட்டாரு. யார் கூப்பிட்டு சாப்பாடு போட்டாலும் சாப்பிடுவாரு. வித்தியாசமே கிடையாது.”

”பார்க்க எப்படி இருப்பார்?”

”எப்பப் பார்த்தாலும் கறுப்புக் கோட்டு ஒண்ணு போட்டுக்கிட்டிருப்பாரு. தலையிலே ஒரு துணியைச் சுத்திக்குவார். மாடி மேலே உலாத்திக்கிட்டே பாடிக்கிட்டிருப்பார்.”

”எந்தப் பாட்டாவது ஞாபகம் இருக்குதா?”

”அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க. அந்தக் காலத்திலே இவர் இவ்வளவு பெரிய ஆசாமியாவார்னு தெரிஞ்சிருந்தா, கொஞ்சம் உன்னிப்பாவே கவனிச்சிருக்கலாம்!”

”அவர் உங்களோடு பேசியிருக்காரா?”

”ஆமாம். ‘என்ன செட்டியாரே’ன்னுதான் கூப்பிடுவார்.”

”உரக்கப் பாடுவாரா?”

”பெரிய குரல் கொடுத்துத்தான் பாடுவார். பேச்சும் அப்படித்தான் ஆவேசமாயிருக்கும். எப்பவும் ஒரு வேகம்தான்; ஆவேசந்தான். சில சமயம் ‘ஓம் சக்தி! ஓம் சக்தி’ன்னு கூவுவாரு. சின்னக் குரலே கிடையாது. உறைப்பாப் பேசுவாரு. அடிக்கிறாப்போல இருக்கும். ‘என்னடா இவர் இப்படிப் பேசறாரே’னு கூடத் தோணும். அது அவரு சுபாவம். கவர்மென்ட் பேரிலே இருக்கிற வெறுப்பு அப்படி.”

”உங்க பேரு?”

கு.மா.சி.எம். அண்ணாமலைச் செட்டியார்.”

”செட்டிநாடா?”

”இல்லே. இந்த ஊரேதான். இவர் என் மகன். காளத்தின்னு பேரு.”

”எதிர் வீட்டிலே ராஜரத்தினம் செட்டியார் இருக்கிறார். அவருக்கும் பாரதியாரோடு பழக்கம் உண்டு. அவர் வீட்டிலே பாரதியார் உட்கார்ந்த நாற்காலி கூட ஒண்ணு இருக்குது. பார்த்துட்டுப் போங்க. வாங்க, நானே அழைச்சிட்டுப் போறேன் அவரிடம்” என்று கூறி, எங்களை எதிர் வீட் டுக்கு அழைத்துச் சென்றார் காளத்தி.

”ரொம்பக் கஷ்டம்தாங்க அவருக்கு, அந்தக் காலத்திலே! எந்த நேரமும் யூனியன் போலீஸ் ஸி.ஐ.டிங்க தெருக் கோடியிலே இருந்துக்கிட்டு ‘வாச்’ பண்ணிக்கிட்டே இருப்பாங்க. அப்பெல்லாம் அவரைக் காப்பாத்தினது ரௌடி வேணுதான்” என்றார் ராஜரத்தினம் செட்டியார்.

”என்ன? ரௌடி வேணுவா?!”

”ஆமாங்க! பாரதியார்கிட்டே அவனுக்கு என்னவோ அவ்வளவு அன்பு. அவர் கூடவே இருந்து பந்தோபஸ்து கொடுப்பான். பாரதியார் அவன் கூடத்தான் தென்னந்தோப்புப் பக்கமெல்லாம் உலாத்தப் போவாரு. ‘பாரதியாரை புதுச்சேரி பார்டர் தாண்டி இட்டுக்கிட்டு வந்துடு. ஆயிரம் ரெண்டாயிரம் தரேன்’னு இங்கிலீஷ் போலீஸ் சொல்லுவாங்க. ஆனாலும் வேணு ரொம்ப நேர்மையானவன். பாரதியாருக்கு உண்மையாய் இருந்தான். கடைசி வரைக்கும் அவரைக் காப்பாத்தினான்.”

”உங்களுக்கு அப்ப என்ன வயசு இருக்கும்?”

”இருபதுக்குள்ளே இருக்கலாம். அவருக்கு முப்பது இருக்கலாம்.”

”அவர் பாடறப்போ நீங்க கேட்டிருக்கீங்களா?”

”உம். மெத்தையிலேருந்து உரக்கப் பாடுவாரு. காளி பூஜை பண்ணுவாரு. சுதேசமித்திரன் ஆபீசிலேருந்து மாசா மாசம் முப்பது ரூபா வரும் அவருக்கு. அதிலேதான் ஜீவனம். ஏழு ரூபாயோ என்னமோதான் வாடகை. அதையே அவரால கொடுக்க முடியாது. ஒரு நாள் அவர் சம்சாரம் வந்து ‘ராஜம்! – அந்தம்மா என்னை ராஜம் ராஜம்னுதான் கூப்பிடும் – அவசரமா எனக்கு ஏழு ரூபா கொடு. இந்த நாற்காலியை வெச்சுக்கோ. இதை விலைன்னு வெச்சுக்க வேணாம். உதவி செய்யறதா நினைச்சுக் கொடு’ன்னாங்க. இன்னுங்கூட அந்த நாற்காலி இருக்குது. பத்திரமா வெச்சிருக்கேன். பிரம்பு பின்னின நாற்காலி. நாலு ரூபா கூட பெறாது. பிரம்பு கூட மேலேதான் பின்னினோம். அடியிலே இருப்பது அப்படியேதான் இருக்குது. மாத்தல்லே. கடையிலே இருக்குது நாற்காலி. போய்ப் பாருங்க. டேய் இவங்களை அழைச்சுக்கிட்டுப் போய்க் காட்டுடா! ரொம்பப் பேரு வந்து பாக்கறாங்க. ‘எனக்குக் கொடுத்துடு’ன்னு கேக்கறாங்க. பாரதியார் ஞாபகார்த்தமா இருக்கட்டும்னு யாருக்கும் கொடுக்கல்லே!” என் றார் ராஜரத்தினம் செட்டியார்.

அவருடைய பேரனுடன் சென்று அந்த நாற்காலியைத் தரிசித்தோம்.

சித்திரக்காரர் அதைப் படம் வரைந்துகொள்ளும் நேரத்தில் நான் அதைத் தொட்டு, நகர்த்தி, நிமிர்த்திப் புரட்டிச் சாய்த்துக் கவிழ்த்து ஒருக்களித்து எத்தனை கோணங்களில் எப்படியெல்லாம் பார்க்கமுடியுமோ அத்தனை கோணங்களிலும் ஆசை தீரப் பார்த்தேன்.

கடைசியாகக் கவியரசரின் ஆசனத்தைத் தொட்டு வணங்கி விட்டுப் புதுவையிலிருந்து ஒரு புதிய உணர்ச்சியோடும் ஊக்கத்தோடும் திரும்பி வந்தேன்.

என் மூச்சிலே இப்போது ஒரு சக்தியே பிறந்திருக்கிறது!

பிற்சேர்க்கை:
காலநேசனின் இந்தப் பதிவில் பாரதியின் எட்டயபுரம் வீட்டின் சில புகைப்படங்கள் காணக் கிடைக்கின்றன.
நண்பர் ஸ்ரீனிவாஸ் தரும் தகவல்: ரா.அ. பத்மநாபன் எழுதிய சித்திரபாரதி (ஆதாரப்பூர்வமான பாரதி வாழ்க்கை வரலாறு 220 அரிய புகைப்படங்களுடன்) இப்போது காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கிறதாம்.

1937லிருந்தே பாரதி குறித்த தேடலைத் துவக்கிவிட்ட ஆய்வாளரான ரா.அ. பத்மநாபனின் அரிய ஆவணங்கள், அபூர்வ புகைப்படங்களைக் கொண்ட தொகுப்பு 1957இல் வெளிவந்திருக்கிறது. பாரதியின் நூல்களும், அவரைப் பற்றிய உறுதிப்படுத்தப்படாத செய்திகளும் நிறைந்திருந்த காலகட்டத்தில் ரா.அ.பத்மநாபனின் சளைக்காத உழைப்பு – பாரதியை நெருக்கத்தில் பார்க்க வைத்திருக்கிறது. பாரதி தலைப்பாகை, கம்பு சகிதமாக காரைக்குடியில் படம் எடுத்துக்கொண்ட போது – அந்த அனுபவம் எந்த மிகையும் இல்லாமல் பதிவாகியிருக்கிறது. பல உண்மை சார்ந்த நிகழ்வுகளுடன் கூடிய வழவழப்பான காகிதத்தில் வெளிவந்துள்ள செம்பதிப்பு.

விருதுகள் (பத்மஸ்ரீ, கலைமாமணி)

ஜெயகாந்தன், இ.பா. ஆகியவர்களுக்கு பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகள் கிடைத்தது ஒரு நல்ல ஆரம்பம், தொடரும் என்று நினைத்தேன். அதுவும் இந்த வருஷம் நாஞ்சில் நாடன், ஆ. மாதவன், திலீப்குமார், அசோகமித்திரன் ஆகியோருக்கு வேறு வேறு கௌரவங்கள் கிடைத்தது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் இந்த வருஷ லிஸ்டிலும் அசோகமித்திரன், ராஜநாராயணன், பூமணி, சா. கந்தசாமி யாரையும் காணோம். தகுதி உள்ளவர்களுக்கு விருது வழங்கப்படாதது பெரிய துக்கம். அதுவும் இவர்களுக்கெல்லாம் வயதாகிக் கொண்டே போகிறது. எப்படி இவர்களை எல்லாம் நம் அரசை கண்டுகொள்ள வைப்பது? ஏற்கனவே விருது வாங்கிய இ.பா., ஜெயகாந்தன், மணிரத்னம் இந்த மாதிரி யாராவது பரிந்துரைக்க முடியுமா? அவர்களுக்கு யார் சொல்வது என்பது அடுத்த விஷயம். 🙂 procedure என்ன என்று தெரியுமா?

விருது கிடைக்காதது ஒரு துக்கம் என்றால் மலினமான கலைமாமணி விருது சா. கந்தசாமிக்கும் நாஞ்சில் நாடனுக்கும் கொடுக்கப்பட்டிருப்பது இன்னொரு துக்கம். என்ன சார் மிமிக்ரி செய்யும் ரோபோ சங்கரும் கலைமாமணி, சாயாவனம் எழுதியவரும் கலைமாமணி என்றால் எப்படி? அதுவும் இரண்டாயிரம் ரூபாயாம். நாஞ்சில் கோவையிலிருந்து சென்னை வந்து போகும் செலவே இதை விட அதிகமாக இருக்குமே!

நம்மூரில் சரியானவருக்கு சரியான விருது கிடைத்தது என்று சந்தோஷப்படுவது அபூர்வமாகவே இருக்கிறது.

சுஜாதாவின் “உள்ளம் துறந்தவன்”

சுஜாதா கடைசி காலத்தில் நிறைய சொதப்பலாக எழுதி இருக்கிறார். அப்படிப்பட்ட சொதப்பல்களில் இதுவும் ஒன்று.

பணக்கார வீட்டுப் பெண். தமிழ் சினிமா மாதிரி ஒரு ஹோட்டல் வெயிட்டரைக் காதலிக்கிறாள். அவள் காதலில் விழும் முதல் சந்திப்பு மாதிரி குழப்படியாக என்னைப் போல ஒரு கத்துக்குட்டி கூட எழுதமாட்டான். ஹோட்டலுக்கு போகிறாளாம், யாரோ கலாட்டா செய்கிறானாம், இந்த வெயிட்டர் அவனை துரத்திவிடுகிறானாம், உடனே ஹீரோயின் ஹோட்டல் முதலாளியான அவள் அப்பாவுக்கு ஃபோன் செய்து அந்த வெயிட்டரை வேலையை விட்டு தூக்கிவிடுகிறாள். என்னங்க இது விபரீதம்? வேலையை விட்டு தூக்கிய பிறகு அவளுக்கு அவன் மீது லவ் வந்துவிடுகிறது. இல்லை ஒரு வேளை லவ் வந்துவிட்டதால் வேலையை விட்டு தூக்க சொல்கிறாளோ தெரியவில்லை. அப்பாவிடம் அவனை வேலைக்கு சேர்த்துக்கொள் சேர்த்துக்கொள் என்று நச்சரிக்கிறாள். “நாயை அடிப்பானேன், …” என்ற பழமொழிதான் நினைவு வந்தது. அப்புறம் அந்த வெயிட்டர் தன் அம்மாவோடு ஒரு வீராணம் திட்ட பைப்பில் வசிப்பவனாம். அந்த பைப்பில் டிவி கூட இருக்கிறதாம். Truth is stranger than fiction என்று சொல்வார்கள்தான், ஆனால் இது கொஞ்சம் ஜாஸ்தி ஆக இருக்கிறது. விட்டால் அந்த பைப்புக்கு ஒரு அட்ரஸ் – தபால் தந்தி எல்லாம் கூட வரும் போலிருக்கிறது. அப்படி பைப்பில் வளர்ந்த டைப்பாக இருந்தாலும் (ஆஹா! பைப்பு, டைப்பு! உங்களுக்கு எல்லாம் என்னை ஹைப் செய்து இரண்டு வார்த்தை டைப் செய்ய ஒரு வாய்ப்பு!) நம்ம ஹீரோ எம்ஜிஆர் மாதிரி – தெரியாத வித்தை இல்லை, பெரிய அறிவுஜீவி! எப்படிங்க கற்றுக்கொண்டான்? அந்த பெண்ணின் அப்பாவுக்கு இருதய நோய் – மாற்று இருதயம் தேவை. பிசினஸ் சண்டை, இருதய மாற்று சிகிச்சை பற்றி டெக்னிகல் விஷயங்கள் பற்றி கொஞ்சம். நம்ம அறிவு ஜீவி பையில் எப்போதும் ஒரு கார்டு இருக்கும் – என் எல்லா உறுப்புகளையும் தானம் செய்கிறேன் என்று. புரிஞ்சிருக்கணுமே?

இதுதான் அவர் கடைசியாக எழுதிய தொடர்கதையாம். கல்கியில் வந்திருக்கிறது. அவருக்கும் இதய நோய் இருந்தது என்று கேள்வி. அதைப் பற்றி தெரிந்து கொள்ள ஏதாவது படித்திருப்பார், அதை வைத்து ஒரு கதையை எழுதிப் பார்ப்போமே என்று எழுதி இருக்க வேண்டும்.

பெரிய கொடுமை இதை ப்ரூஃப் படிக்கவே இல்லை போலிருக்கிறது. டயலாக் நடு நடுவே ஜம்ப் ஆகிறது. கதாபாத்திரங்கள் பேசுவதில் மட்டுமே சுஜாதா தெரிகிறார். அதையும் விசா பப்ளிகேஷன்காரர்கள் கெடுத்து வைத்திருக்கிறார்கள்.

நேரத்தை வீணடிக்காதீர்கள்.

பிற்சேர்க்கை: உள்ளம் துறந்தவன் நாவல் பற்றி சுஜாதா –

உள்ளம் துறந்தவன் கல்கி இதழில் தொடர்கதையாக வந்தபோது, வாசகர்களின் பேராதரவைப் பெற்றது. ‘உள்ளம் துறந்தவ’னில் இதயமாற்று தொடர்பான செய்திகளில் கற்பனை எதுவும் இல்லை. மாற்றுவதற்கான சூழ்நிலையும், காதலும் அதைச் சார்ந்த இழப்பும்தான் கதைக்கு வலுவூட்டுவது. அழகேசனின் தாயைப் போல், மன வலிமை படைத்த ஏழைகள் பலர் நம்மிடையே உள்ளனர்.

நா. ரகுநாதனின் (ரசிகன்) சிறுகதை – பலாச்சுளை

பலாச்சுளை

இந்தக் கதையை சிறு வயதில் எப்போதோ படித்திருக்கிறேன். ஆனால் இப்போது நா. ரகுநாதன் யாரென்று அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. இவர்தான் ரசிகன் என்ற பேரில் எழுதியவர் என்று ஸ்ரீனிவாஸ் தகவல் தருகிறார். ரசிகன் கதைகளை சிறு வயதில் ரசித்திருக்கிறேன், ஆனால் இப்போது எதுவும் நினைவில்லை. தமிழினி பதிப்பகம் இவரது கதைகளை வெளியிட்டிருக்கிறதாம்.

பிராமண பின்புலத்தை தத்ரூபமாக கொண்டு வருகிறார். ஒரு எளிய கதை, சுலபமாக யூகிக்கக்கூடிய கதை அந்த பின்புலத்தால்தான் நல்ல கதை என்ற அளவுக்கு வருகிறது. கலைமகள் மாதிரி ஒரு பத்திரிகையில் வந்திருக்கலாம். இந்த கதை காட்டும் வாழ்க்கை முறை, இந்த மாதிரி கதைகளை பிரசுரிப்பது என்ற காலமே முடிந்துவிட்டது. இருந்தாலும் அதை ஆவணப்படுத்தவாவது இந்த மாதிரி கதைகள் வேண்டுமே!

கதையை அனுப்பிய கௌரி கிருபானந்தன் இதை தெலுங்கில் மொழிபெயர்க்க விரும்புகிறார் மொழிபெயர்த்திருக்கிறார். “விபுலா” என்ற தெலுங்கு பத்திரிக்கையில், ஜூன் 2012 மாத இதழில் வெளியாக உள்ளது. யாருக்காவது நா. ரகுநாதனைத் தெரியுமா? அவரது வாரிசுகள்? அவர் கதைகளைப் படித்திருக்கிறீர்களா? ஏதாவது தெரிந்தால் கௌரிக்கு தெரியப்படுத்துங்களேன்!

கௌரி உங்களுக்கு நன்றி!

நண்பர் ராதாகிருஷ்ணன் துரைசாமி தரும் தகவல்:

ரஸிகன் என்னும் நா.ரகுநாதன் ஹிந்து நாளிதழில் நீண்டகாலம் உதவியாசிரியராக இருந்தார். ஆங்கிலத்தில் நிறைய எழுதியுள்ள இவர் தமிழிலும் எழுதியுள்ள அருமையான சிறுகதைகள் மற்றும் நான்கு அருமையான நாடகங்கள் ஒரு தொகுப்பாக அ.சதீஷ் என்பவரால் (பதிப்பாசிரியர்) தொகுக்கப்பட்டு யுனைடட் ரைட்டர்ஸால் நவம்பர் 2006ல் வெளியிடப்படுள்ளது. தஞ்சை மாவட்டப் பின்னணியில் அமைந்த கதைகள். நான்கு நாடகங்களும் மிக அருமையான குடும்ப சித்திரங்கள். யுவன் சந்திரசேகர் முன்னுரை வழங்கியுள்ளார். அவசியம் படிக்க வேண்டியவை.

தமிழ் தெரியாத நண்பர்களுக்கு என்ன புத்தகம் பரிசாகத் தரலாம்?

எனக்கு மனீஷ் ஷர்மா என்று ஒரு நண்பன். இப்போது டெல்லி ஐஐடியில் வேலை பார்க்கிறான். எங்கள் ரசனை கொஞ்சம் ஒத்துப் போகும். அவனுக்கு அவ்வப்போது சில தமிழ் புத்தகங்களின் மொழிபெயர்ப்புகளை கொடுப்பது வழக்கம். ஒரு பத்து புத்தகம் கொடுத்திருந்தால் ஜாஸ்தி, புளியமரத்தின் கதை, அசோகமித்ரனின் சில புத்தகங்கள், ஜெயகாந்தனின் சில புத்தகங்கள் கொடுத்தது நினைவிருக்கிறது.

ஆனால் மொழிபெயர்ப்புகள் கிடைப்பது அபூர்வமே. மேலும் புத்தகமும் நன்றாக இருந்து மொழிபெயர்ப்பும் நன்றாக இருக்க வேண்டும் இல்லையா? உதாரணமாக விஷ்ணுபுரம், யுவன் சந்திரசேகரின் கதை சொல்லும் ஸ்டைல், கி.ரா. போன்றவை மொழிபெயர்ப்பில் நன்றாக வருமா என்பது எனக்கு சந்தேகம்தான். ஆனால் இ.பா., அசோகமித்திரன் போன்றவர்களை மொழிபெயர்ப்பது கொஞ்சம் சுலபம்.

உங்களுக்கு தெரிந்த நல்ல மொழிபெயர்ப்புகளை சொல்லுங்களேன்!

New Horizon Media-வின் இந்த சுட்டியில் நிறைய மொழிபெயர்ப்புகள் கிடைக்கின்றன. (தகவல் தந்த சுல்தானுக்கு நன்றி)

நண்பர்கள் குறிப்பிட்டிருக்கும் மொழிபெயர்ப்புகள்:

  1. கே.எஸ். சுப்பிரமணியம் தொகுத்த Tamil New Poetry, Tamil Poetry Today (குறிப்பிட்டவர் பாஸ்கர்) – இவற்றைப் பற்றி வெங்கட் சாமிநாதன் இங்கே எழுதி இருக்கிறார்.
  2. நாஞ்சில் நாடனின் Against All Odds (குறிப்பிட்டவர் சுல்தான்)
  3. ஜெயமோகனின் Forest (தமிழ்ப் பெயர்: காடு) (குறிப்பிட்டவர் சுல்தான்)
  4. அசோகமித்ரனின் தண்ணீர் (குறிப்பிட்டவர் ஜெயமோகன்)
  5. இந்திரா பார்த்தசாரதியின் குருதிப்புனல், கிருஷ்ணா கிருஷ்ணா (குறிப்பிட்டவர் “நுனிப்புல்” ராமச்சந்திரன் உஷா)
  6. பெருமாள் முருகனின் கூளமாதாரி (குறிப்பிட்டவர் “நுனிப்புல்” ராமச்சந்திரன் உஷா)
  7. யுவன் சந்திரசேகரின் கானல்நதி புத்தகம் பத்மா நாராயணால் ஆங்கிலத்தில் Illusory River என்ற பேரில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.

ஜெயமோகனின் குறுநாவல் – லங்காதகனம்

நாலைந்து பாராவுக்குள் தளம் தெளிவாகிவிடுகிறது. ஒரு பழைய மடம். அதற்கு ஒரு தம்பிரான், காரியஸ்தர், போத்தி, ஓரிரு பேரிளம்பெண்கள் (பழைய கால தாசிகளோ?) சமையல்கட்டு, பழைய கால கதகளி ஆட்டக்காரர் ஆசான், நமக்கு கதை சொல்லும், இங்கே தங்கி சின்ன சின்ன வேலைகளை செய்துகொண்டே காலேஜில் படிக்கும் ராமன். வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் மடம் இனி மேல் மாறாது, அதன் சம்பிரதாயங்கள் எல்லாம் ஏற்கனவே நிறுவப்பட்டுவிட்டன, கொஞ்சம் கொஞ்சமாக அது செத்துக் கொண்டிருக்கிறது.

ஆசானுக்கும் ராமனுக்கும் கொஞ்சம் நட்பு இருக்கிறது. ஆனால் அங்கே தண்டச்சோறு சாப்பிடும் ஆசானைக் கண்டால் எல்லாருக்கும் கொஞ்சம் இளக்காரம். ஆசான் அனுமன் வேஷம் போடுபவர். லங்காதகனம் காட்சியில் கலையின் உச்சத்தை அடைந்தவராக இருக்கலாம். எப்போதாவது கலையின் உச்சத்தை அடைந்தால் தானே அந்த க்ஷணத்தில் அனுமன் ஆவோம் என்று நம்புகிறார். எப்போதும் அனுமன் தியானம்தான். லங்காதகனத்தை இன்று யாரும் பார்ப்பதில்லை, எவருக்கும் அக்கறை இல்லை. அவருடைய நளின நடையைக் கண்டு தம்பிரானும் நண்பர்களும் சிரிக்கிறார்கள். தம்பிரான் தன் நண்பர்களுக்காக அவரை ஆடிக் காட்டக் கூப்பிட்டால் ஆசானே தான் சீப்படப்போவதை உணர்ந்து தன்னிடம் சிநேகமாக இருக்கும் ஒரு பிறவியான ராமனை அங்கே வராதே என்று தடுக்கிறார்.

திருவிழாக்காலம். பத்து நாள் கதகளி. பல செட்டுகள் வருகின்றன. ஆசானின் பயிற்சி உக்ரமாகிக் கொண்டே போகிறது. ஆசான் அனுமனாகவே மாறிவிடுவாரோ என்று பழைய கதகளி ஆட்டக்காரர் ஒருவர் பயப்படுகிறார். கடைசி நாள். கூட்டம் எல்லாம் போய்விட்டது. எப்போதும் கலையின் உச்சத்தை அடைந்து தானே பாத்திரமாகிவிடக் கூடாது (அதற்காகத்தான் திருஷ்டிப் பொட்டு) என்று மேக்கப் போடும் வைத்தியரிடம் திருஷ்டிப்பொட்டு, இன்னும் ஒரு குறையை வைக்க சொல்கிறார். ஆசான் குரங்காகவே மாறிவிட்டாரோ என்று தோன்றுகிறது. ராமனின் முயற்சிகளையும் மீறி ஆசான் தன் மேக்கப் குறைகளை களைகிறார். அவர் லங்காதகனம் ஆட மேடைக்கு பாய்ந்து வருவதோடு கதை முடிகிறது.

ஒரு காலாவதியாகும் கலைஞனின் நிலை; கலையின் உச்சத்தை அடையும்போது எது நிஜம், எது நிழல் என்று ஒரு கலைஞனால் உணர முடியுமா என்ற கேள்வி; எல்லாவற்றையும் விட அன்று மடம் தகனம் ஆனதா இல்லையா என்ற கேள்வி. புத்தகத்தை மூடிய பிறகும் மண்டைக்குள் ஓடுகின்றன. அந்த மடத்தின் சித்திரம் அருமையாக இருந்தது. மடத்தைப் பற்றி அவர் சொன்னது கொஞ்சம்தான், ஆனால் இந்த மடம் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்று ஒரு பெரிய சித்திரம் மனதில் உருவாகிறது. ஆசானின் பாத்திரப் படைப்பு அபாரம். அவர் படும் அவமானங்கள், சோற்றுக்காக அங்கே இருக்க வேண்டிய நிலை, கலை, கலையின் உச்சத்தைப் பற்றி அவர் பேசுவது எல்லாமே மிக நன்றாக இருந்தது. ஜெயமோகன் எங்கோ நல்ல இலக்கியம் தொன்மம் ஆகக் கூடிய தன்மை உடையதாக இருக்க வேண்டும் என்று சொல்லி இருந்தார். இது நிச்சயமாக தொன்மம் ஆகக் கூடியதுதான். (அவரே டெஸ்ட் பேப்பர் வச்சு அவரே பதில் எழுதிக் கொள்கிறாரோ? :-))

ஆனால் எழுத ஆரம்பித்ததின் விளைவோ என்னவோ, கதையின் உத்திகள் எனக்கு உறுத்துகின்றன. குறியீடுகள் மீண்டும் மீண்டும் வருவது எனக்கு கதையின் ஓட்டத்தில் குறுக்கிடுவது போல இருக்கிறது. அடிக்கடி சிவப்பு நிறம், தீ, கொழுந்து விட்டெரிவது என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார். இத்தனை அழுத்தி சொல்ல வேண்டுமா என்று தோன்றியது. மடம் அன்று எரிந்ததா இல்லையா என்பதை வாசகர்கள் யூகத்துக்கு விட்ட உத்தியும் பிடித்திருந்தாலும், கதையில் மூழ்கி இருப்பவனை கொஞ்சம் மேலே தூக்கிவிடுவது போல ஒரு உணர்வு.

இதை ஜெயமோகனின் குறுநாவல்கள் என்ற தொகுப்பில் படித்தேன். படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

கோபால் ராஜாராமின் சிபாரிசுகள்

கோபால் ராஜாராம் திண்ணை இணைய இதழின் ஆசிரியர். ஜெயமோகன் தன் நாவல் சிபாரிசுகளை பத்து வருஷத்துக்கு முன் பதித்தபோது, அதற்கு ஒரு எதிர்வினையாக தன் சிபாரிசுகளை லிஸ்ட் போட்டிருக்கிறார். அவருக்கும் ஜெயமோகன் தன் நாவல்களை சிறந்தவை என்று சொல்லக்கூடாது, தன்னடக்கம் வேண்டும் என்ற எண்ணம் இருந்திருக்கிறது. 🙂

  1. ஜெயகாந்தன்ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் (மற்றவை: பாரிசுக்குப் போ, ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், சில நேரங்களில் சில மனிதர்கள்): எனக்கும் மிகவும் பிடித்த புத்தகம் ஒ.ம.ஒ.வே.ஒ. உலகம்தான். சி.நே.சி. மனிதர்கள், ஒ.ந.நா. பார்க்கிறாள் ஆகியவையும் எனக்குப் பிடித்த புத்தகங்களே. பேர்களை க்ளிக்கினால் என் பதிவுகளை காணலாம். இவற்றைத் தவிர ஜயஜய சங்கர சீரிசும் பிடிக்கும். பாரிசுக்கு போ புத்தகத்தை நான் இன்னும் படிக்கவில்லை. படித்தவர்கள் யாராவது எழுதுங்களேன்!
  2. தி. ஜானகிராமன்அம்மா வந்தாள் (மற்றவை: மலர்மஞ்சம், அன்பே ஆரமுதே, செம்பருத்தி, மோகமுள், நளபாகம், மரப்பசு): அம்மா வந்தாள் எனக்கும் பிடித்த நாவல்களில் ஒன்று. என்றாவது அதைப் பற்றி எழுத வேண்டும். மோகமுள்ளைப் பற்றி பக்ஸ் எழுதுவான் எழுதுவான் என்று பார்க்கிறேன், இன்னும் அவனுக்கு கை வரவில்லை. மரப்பசு பற்றிய பதிவு இங்கே. அது என் கண்ணில் சுமாரான நாவலே. ஒரு லெவலுக்கு மேல் தி.ஜா.வின் நாவல்கள் அரைத்த மாவையை அரைப்பது போல ஒரு உணர்வு.
  3. லா.ச. ராமாமிர்தம்புத்ர: லா.ச.ரா.வின் சிறந்த படைப்புகளில் ஒன்று. வழக்கம் போல உணர்ச்சிப் பிழம்புதான். ஆனால் இவை போன்றவைதான் தொன்மம் ஆகக் கூடியவை.
  4. பிரபஞ்சன் – மானுடம் வெல்லும்: சிறந்த நாவல் மட்டுமில்லை, சரித்திரக் கதை என்றால் அரண்மனை சதிதான் என்ற trend-ஐ மாற்றும் நாவல். அதனால் முக்கியமான நாவலும் கூட.
  5. வண்ணநிலவன்கடல்புரத்தில்: நல்ல நாவல்தான், ஆனால் ஏதோ குறைகிறது.
  6. அசோகமித்ரன்கரைந்த நிழல்கள் (மற்றவை: தண்ணீர், 18-ஆவது அட்சக்கோடு, இன்று): கரைந்த நிழல்கள் ஒரு tour de force. வாத்யார் ஒரு ஜீனியஸ். தண்ணீர் எனக்கு பிடித்த நாவல்களில் ஒன்று. 18-ஆவது அட்சக்கோடு அனேகமாக எல்லாருக்கும் பிடித்திருக்கிறது, எனக்கு இதில் என்ன விஷயம் இருக்கிறது என்று இது வரை புரியவில்லை.
  7. இந்திரா பார்த்தசாரதிகால வெள்ளம்: எனக்கு இ.பா. அவ்வளவாக ரசிப்பதில்லை. படித்ததில் இது ஓரளவு பிடித்திருந்தது. பதிவு இங்கே.
  8. நீல. பத்மநாபன்தலைமுறைகள்: சிறந்த வட்டார நாவல். பதிவு இங்கே.
  9. சுஜாதாஎன் இனிய இயந்திரா: இதுதான் அநேக தமிழர்களுக்கு Science Fiction என்ற genre-ஐ அறிமுகம் செய்து வைத்த நாவல். இதன் தாக்கம் அதிகம், முக்கியமான, ஆனால் ஒரு சாதாரணமான நாவலே.

படிக்காதவை:

  1. பொன்னீலன் – புதிய தரிசனங்கள்
  2. ஆ. மாதவன் – கிருஷ்ணப் பருந்து
  3. தமிழவன் – ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் (மேலும் ஜி.கே. எழுதிய மர்ம நாவல்)
  4. கிருத்திகா – வாசவேஸ்வரம்

விவேகானந்தர் பாறையின் கதை (பா. ராகவனின் “ஆர்.எஸ்.எஸ்: மதம், மதம் மற்றும் மதம்”)

பா. ராகவன் எழுதிய ஒரு பதிவு இது – ஆர்.எஸ்.எஸ்: மதம், மதம் மற்றும் மதம் என்ற புத்தகத்திலிருந்து ஒரு excerpt-ஐ எடுத்துப் போட்டிருக்கிறார். படிக்க சுவாரசியமாக இருந்தது.

விவேகானந்தர் தியானம் செய்த பாறை; அவரது நூற்றாண்டின்போது அங்கே ஒரு நினைவுச்சின்னம் கட்டலாமே என்று யோசனை வந்திருக்கிறது.

பிரச்சினை அது புனித ஃபிரான்சிஸ் சேவியரும் ஜபம் செய்த பாறை என்பதால். (கிருஸ்துவ) மீனவர்கள்தான் அதை இளைப்பாற பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். ஒரு லோகல் பாதிரியார் கிருஸ்துவர்களைத் தூண்டி விட்டிருக்கிறார். ராவோடு ராவாக அங்கே ஒரு சிலுவை வந்துவிட்டது. (எப்படி 1947-இல் “தானாக” ராமஜன்மபூமி-பாபரி மசூதியில் ராமர் விக்ரகம் வந்ததோ அதே மாதிரி)

பக்தவத்சலம்தான் அப்போது முதலமைச்சர். பாறையிலிருந்து சிலுவையை அப்புறப்படுத்த உத்தரவிட்டிருக்கிறார். அவர் ரம்ஜான் கஞ்சி குடித்துக் கொண்டே ராமன் எந்த எஞ்சினியரிங் காலேஜில் படித்தான் என்று கேட்கும் டைப் இல்லை என்று தெரிகிறது. ஆனால் நினைவுச்சின்னமும் வேண்டாம், வீணாக சட்டம் ஒழுங்குப் பிரச்சினை வரும் என்று சொல்லிவிட்டார்.

ஆர்.எஸ்.எஸ். ஏக்நாத் ரானடே என்பவரை அனுப்பியது. ரானடே பக்தவத்சலத்தையும் சமாளிக்க வேண்டும், சின்னம் கட்டுவதை எதிர்த்த அன்றைய பண்பாட்டு அமைச்சர் ஹுமாயூன் கபீரையும் சமாளிக்க வேண்டும். ஹுமாயூன் கபீர் மேற்கு வங்காள எம்.பி. அவரை விவேகானந்தர் வங்காளி, அவருக்கு நினைவுச்சின்னம் எழுப்ப ஒரு வங்காள எம்.பி.யே தடை போடுவதா என்ற அஸ்திரத்தை எடுத்து சமாளித்தார். இந்தப் பக்கம் அண்ணாதுரையின் ஆதரவைப் பெற்றார். நாடு பூராவும், குறிப்பாக கிருஸ்துவர்கள் அதிகம் உள்ள நாகாலாந்து மாநிலம், கம்யூனிஸ்ட் ஜோதிபாசு என்று பலரின் ஆதரவைப் பெற்றார். நினைவுச்சின்னம் எழும்பிவிட்டது!

கடைசியில் இப்படி ஒரு வரி வருகிறது.

பாறையின் இடத்தில் மசூதி. கிறிஸ்தவர்களின் இடத்தில் முஸ்லிம்கள். ரானடேவின் இடத்தில் அத்வானியும் வாஜ்பாயும் பரிவாரக் கூட்டங்களும். சந்தேகமில்லை. அயோத்தி, ஆர்.எஸ்.எஸ்ஸைப் பொறுத்தவரை ஒரு பரிமாண வீழ்ச்சி.

பா.ரா. சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று நினைக்கிறேன். கன்யாகுமரியில் நினைவுச்சின்னம் எழுப்புவது மட்டுமே குறிக்கோள். ராமன் பேரை வைத்து ஓட்டு அரசியல் நடத்துவதுதான் இங்கே குறிக்கோள். பா.ஜ.க.வின் அரசியல் strategists எல்லாருக்கும் கேஸ் முடிந்துவிட்டது ஒரு பிரச்சினைதான்!

புத்தகத்தை இந்த சுட்டியில் வாங்கலாம். கிழக்கு வெளியீடு. விலை 75 ரூபாய்.

சுஜாதாவின் “ஒரு லட்சம் புத்தகங்கள்”

(மீள்பதிவு)

வாசிப்பு அனுபவம் சுலபமாக பகிர்ந்து கொள்ள முடியாதது என்று எனக்கு தோன்றுகிறது. ஆனாலும், ஒரு சிறுகதை தந்த வாசிப்பு அனுபவம் என்ன என்பதை இந்தப் பதிவில் எழுத முயற்சி செய்யப் போகிறேன்.

பல வருஷங்களுக்கு முன் விகடனில் பாரதியார் நூற்றாண்டை முன்னிட்டு பல எழுத்தாளர்கள் பாரதியின் வரிகளை வைத்து கதை எழுதினார்கள். எனக்கு இன்னும் ஞாபகம் இருப்பது சுஜாதா எழுதிய ஒரு லட்சம் புத்தகங்கள் என்ற கதைதான்.

அவர் எடுத்துக்கொண்ட வரி “சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்“. ஒரு இலங்கை தமிழ் நூலகத்தில் புத்தகங்கள் சிங்களர்களால் எரிக்கப்பட்டன. இதை பின்புலமாக வைத்து எழுதப்பட்ட கதை.

ஏதோ ஒரு கருத்தரங்கமோ என்னவோ. அமைச்சர் வருகிறார். “தமிழறிஞர்” ஒருவர் – பல பதவி கனவுகளில் இருப்பவர் – சிறப்புரை. அப்போது அவருக்கு தெரிந்த ஒரு ஈழத் தமிழன் – அவன் குடும்பம் கலவரத்தில் அழிந்துவிட்டது – ஒரு லட்சம் புத்தகங்கள், ஒரு நூலகம், ஒரு அறிவு சொத்து, ஒரு mob -ஆல் எரிக்கப்பட்டதை பற்றி இங்கே யாருக்கும் தெரியவில்லை, எடுத்து சொல்ல வேண்டும் என்று ஆவேசத்தோடு இருக்கிறான். அவன் குடும்பம் அழிந்ததை விட இதுதான் முக்கியமான விஷயமாக படுகிறது, இது யாருக்கும் தெரியவில்லையே, தெரிந்தவர்களும் பொருட்படுத்தவில்லையே என்ற ஆவேசத்தில் இருக்கிறான். “தமிழறிஞர்” சபையில் அமைச்சர் முன்னால் எல்லாம் சுமுகமாக இருக்க வேண்டும், அமைச்சர் embarass ஆனால் தன் பதவிக் கனவு என்னாகுமோ என்ற பயத்தில் என்று போலீசை வைத்து அவனை அப்புறப்படுத்திவிடுகிறார்.

சுஜாதாவின் மிக சிறந்த சிறுகதைகளில் இதுவும் ஒன்று. இதற்கு அவர் வேறு வரிகளை – உதாரணமாக “சொந்த சகோதரர்கள் துன்பத்திற் சாதற்கண்டும் சிந்தை இரங்காரடி” சொல்லி இருக்கலாம். இந்த வரிகளில் உள்ள வஞ்சப் புகழ்ச்சிதான், sarcasm-தான் இந்த சிறுகதையை உயர்த்துகின்றன.

25-30 வருஷம் கழித்தும் இந்த கதை மறக்கவில்லை. ஏனென்றால் சுஜாதா ஸ்கூல் பையனுக்கு சொல்வது போல பார்த்தாயா இது எவ்வளவு பெரிய அநியாயம் என்று சொல்வதில்லை. சிங்களத் தீவுக்கு பாலம் என்று சொல்வதில் இருக்கும் sarcasm சுர்ரென்று உரைக்கிறது. அதே நேரத்தில் இது ஒரு propaganda கதைதான். இதில் இருப்பது art இல்லை, craft-தான். இந்த கதை எந்த தருணத்தை நோக்கி முன்னே போகிறதோ – அந்த தமிழறிஞரின் சுயநலம் – என்பது உங்களை ஐயோ என்று அலற வைக்கும் தருணம் இல்லை, மனிதனின் சுயநலம் இவ்வளவு கேவலமானதா என்று நம்மை நாமே வெறுக்கும் தருணமும் இல்லை. அலற வைக்கும் தருணம் நூலகம் எரிக்கப்பட்டதுதான். சாவுகளை கேட்டு மனம் மரத்து போயிருந்த காலம் அது. அப்போதெல்லாம் பேப்பரை திறந்தால் பஞ்சாபில் நாலு பேர் சாவு என்று செய்தி வராத நாளே கிடையாது. அந்த சமயத்தில் வேறொரு விதமான கொடுமை, உலக சரித்திரத்தில் மிக அபூர்வமாகவே நடந்திருக்கும் கொடுமை, உங்கள் கண் முன்னால் வைக்கப்படுகிறது. அந்தக் கட்டத்தில் அடப் பாவிகளா என்று மனதுக்குள் ஒரு கூக்குரல். இன்னும் ஓரிரு பக்கம் போனபின் அந்த தமிழறிஞரை பார்த்து அடச்சீ என்று ஒரு அருவருப்பு. பிறகு சிங்களத் தீவுக்கு பாலம் என்று சொல்லி இருக்கும் வரிகளை மீண்டும் ஒரு முறை நினைவு கூர்ந்து முகத்தில் ஒரு சுளிப்பு. மனதில் எழுந்த அந்த கூக்குரல் இந்த சிறுகதையின் பலம் மட்டுமல்ல, பலவீனமும் கூட. அது இந்த கதையின் க்ளைமாக்சைக் கூட dominate செய்கிறது.

படிக்க வேண்டிய கதை, மறக்கக் கூடாத துயரம் என்று சொல்லத் தோன்றுகிறது. படிக்க வேண்டிய கதை என்று நிறுத்தாமல் துயரத்தைப் பற்றியும் பேசுவதுதான் இந்த கதையின் தோல்வி. ஆனால் அதைத்தான் சுஜாதா விரும்பி இருக்க வேண்டும். இது எழுத்தாளனின் வெற்றி.

ஒரு லட்சம் புத்தகங்கள் எரிக்கப்பட்டன. நினைத்து பாருங்கள், இது நம் அனைவரின் செல்வம். எரித்தவனுக்கும் இந்த செல்வம் சொந்தம். எரித்ததால் அவனுக்கு எந்த லாபமும் இல்லை. லும்பத்தனம், அவ்வளவுதான்.

இன்று ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மனிதர்கள் இறந்திருப்பார்கள். இன்னும் சிந்தை இரங்காதவர்கள் அநேகம். அப்படி இறந்தவர்களை அந்த “அறிஞர்” போல சுய லாபத்துக்காக அரசியல் ஆக்கும் கும்பல்தான் இன்னும் தமிழ் நாட்டில் மலிந்து கிடக்கிறது.

தொடர்புடைய சுட்டிகள்:
சிறுகதையைப் படிக்க
உயிர்மையில் வந்த ஒரு கட்டுரை
இந்த கதையைப் பற்றி தமிழ் பேராசிரியர் அ. ராமசாமி
கொளுத்தப்பட்ட ஜாஃப்னா நூலகம்