மகாபாரதமும் மற்ற தொன்மங்களும்

எனக்கு மகாபாரதத்தின் மீது பெரிய பித்து உண்டு. மகாபாரதத்தின் வாசனை லேசாக அடித்தாலே போதும் எனக்கு அந்த கதையோ சினிமாவோ பிடித்துவிடும். உண்மையில் மகாபாரதத்தை பின்புலமாக வைத்து வரும் படைப்புகளை சரியாக தரம் பார்க்க எனக்கு தெரியுமா என்பது எனக்கு சந்தேகம்தான். இதை விட சிறந்த இலக்கியம், மனிதர்களை சித்தரிக்கும் காவியம் எங்கும் இல்லை.

ராமாயணம் நல்ல இலக்கியம்தான். ஆனால் அதில் வரும் பாத்திரங்கள் பொதுவாக தெய்வப் பிறவிகள். ஹனுமான் போன்று ஒரு பக்தன் முன்னாலும் இருந்ததில்லை இனி மேலும் வரப் போவதில்லை. லக்ஷ்மணன் போல ஒரு தம்பி, பரதன் போல ஒரு தியாகச்சுடர், சீதை போல ஒரு பத்தினி, கும்பகர்ணன் போல ஒரு வீரன், இந்திரஜித் போல ஒரு ஒரு சாகசக்காரன், ராவணன் போல ஒரு அரசன் கிடையாது. உண்மையில் குறைகள் உள்ள பாத்திரம் ராமன்தான் – வாலியை மறைந்திருந்து கொன்றான், சீதையை நெருப்பில் ஏற்றினான், அப்பாவின் சாவுக்கு அவன்தான் காரணம். துரோணரின் சாவுக்கு முன் யுதிஷ்டிரனின் தேர் எப்போதும் பூமிக்கு இரண்டடி மேலேதான் நிற்குமாம். அவ்வளவு நல்ல மனிதனின் தேர் மண்ணில் படக் கூடாதாம். ராமாயணத்தில் அநேகமானவர்கள் நடக்கும்போது பூமிக்கு இரண்டடி மேலேதான் நடப்பார்கள். அவர்கள் எல்லாம் லட்சிய மனிதர்கள். ஆனாலும் நிஜமானவர்கள். அவர்கள் பிரச்சினைகளை நாமும் இன்று சந்திக்கிறோம். மகாபாரதத்துக்கு அடுத்தபடியாக சொல்லக் கூடிய தொன்மம் இதுதான்.

கிரேக்க காவியங்கள் – இலியட் (Iliad), ஆடிசி (Odyssey), மற்ற தொன்மங்கள் – பற்றி சொல்லவே வேண்டாம். அகிலிசுக்கும், யுலீசசுக்கும், ஹெக்டருக்கும் முன்னாலும் பின்னாலும் இரண்டு கடவுள்கள் நின்று கொண்டே இருப்பார்கள். சண்டையே அவர்களுக்குள்தான். நேராகவே சண்டை போட்டுத் தொலைக்கலாம். எரசும், அதீனாவும், சூசும், ஹேராவும், அப்போலோவும்தான் அடித்துக் கொள்கிறார்கள். வீரமும், விதியும், கடவுளர்களின் விருப்பமும்தான் கதையில் மீண்டும் மீண்டும். நட்பு கூட கொஞ்சம்தான் வருகிறது. எது நடந்தாலும் அதில் ஒரு கடவுளின் பங்கு இருக்கிறது. பாரிசுக்கும் ஹெலனுக்கும் நடுவில் இருப்பது காதலா? இல்லை அது வீனஸ் பாரிசுக்கு தந்த பரிசு. கடவுள்கள் ஆட்டி வைக்கும் பொம்மைகள்தான் இந்த கிரேக்க வீரர்கள்.

பழைய ஏற்பாடு கதைகள் காட்டும் உலகமே வேறு. அவற்றின் ஹீரோ ஜெஹோவாதான். அவர் கை காட்டினால் செங்கடல் பிரியும்; ஜெரிகோவின் சுவர்கள் இடிந்து விழும்; டேவிடின் கவண்கல் கோலியாத்தை சாய்க்கும். ஆனால் அவருக்கு எப்போதும் பால் மீது பொறாமை. அவருக்கு இருக்கும் பெரிய கவலையே பாலை கும்பிடுகிறார்களே என்பதுதான். மனித உணர்ச்சிகளுக்கு அங்கே இரண்டாம் இடம்தான். பழைய ஏற்பாடு என்பது ஒரு மதப் புத்தகம், இலக்கியம் இல்லை. சில இடங்கள் மட்டுமே – நோவா, அப்ரஹாம் ஐசக்கை பலி கொடுக்க துணிவது, ஜேகபின் மகன் ஜோசஃப், மோசஸ், டேவிட் போன்ற சில இடங்கள் மட்டுமே அது தொன்மங்களுக்கு வேண்டிய உச்சத்தை அடைகிறது.

பியோவுஃல்ப் (Beowulf) போன்ற நார்டிக் தொன்மங்கள் (இன்றைய நார்வே, ஸ்வீடன், ஃபின்லாந்து, டென்மார்க் நாடுகள்) வீரத்தை, இல்லை இல்லை உடல் பலத்தை மட்டுமே முதன்மைப்படுத்துகின்றன. பீமன் இந்த ஸ்காண்டிநேவிய கேளிக்கைக் கூடங்களில் தூள் கிளப்பி இருப்பான்.

ஆர்தர் ராஜா மற்றும் அவரது வட்டமேஜை வீரர்கள் (King Arthur and the Round Table Knights) போன்றவை ஒரு லட்சிய வீரனை உருவகப்படுத்துகின்றன. மனிதர்களின் ஒரு சிறு பகுதியையே அது காட்டுகிறது.

அரேபிய ஆயிரத்தொரு இரவுகளில் சில கதைகள் மட்டுமே சுவாரசியமானவை. அலிபாபா, அலாவுதீன், சிந்துபாத் கதையின் சில இடங்கள் மாதிரி. பொதுவாக போர் அடிக்கும் கதைகள்.

பாரசீகத்தின் தொன்மம் ஆன ஷாநாமா (Shahnama)வும் பொதுவாக போர்தான். ருஸ்தம் சோராபின் கதை மட்டுமே அதில் இலக்கியம்.

மகாபாரதம் இப்படி இல்லை. ஒவ்வொரு பாத்திரமும் அங்கே இரண்டு சரியான வழிகளில் ஒன்றை மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கிறார்கள். பீஷ்மர் நியாயத்தை தன் பிரதிக்னைக்காக பலி இடுகிறார். துரோணர் துருபதனிடம் தான் பட்ட அவமானத்தை வாழ்நாள் முழுவதும் சுமக்கிறார். அதுவே அவரை செலுத்துகிறது. கர்ணனைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. திருதராஷ்டிரனுக்கு சரியோ தவறோ என் மகன் என்ற உணர்வுதான் வாழ்க்கை பூராவும். கிருஷ்ணன்! விதிகள் தெரியும், தர்ம நியாயம் தெரியும், அதை எப்போது மீற வேண்டும் என்றும் தெரியும். அய்யா நீரே ஆதர்ச புருஷர். சின்ன சின்ன காரக்டர்கள் கூட கலக்குகிறார்கள். சாத்யகியின் கையில் அநியாயமாக செத்த பூரிஸ்ரவஸ், கண்ணுக்கு மேல் விழும் சதையை துணியால் கட்டிக்கொண்டு போரிடும் பகதத்தன், பிறந்தவுடன் விட்டுவிட்டுப் போன அப்பாவுக்காக வந்து போரிடும் அரவான், மருமகன்களுக்கு எதிராக போரிடும் சல்யன் என்று மறக்க முடியாத காரக்டர்களால் நிரம்பியது இந்த இலக்கியம். ஒவ்வொரு கதாபாத்திரமும் உண்மையான, சதையும் ரத்தமும் உள்ள மனிதன். ஒவ்வொரு பாத்திரமும் எடுக்கும் முடிவுகளை நாம் இன்றும் நம் வாழ்க்கையில் தினமும் எடுக்கிறோம். எல்லா கதைகளும் மகாபாரதத்திலிருந்துதான் வருகிறது என்று லோகிததாஸ் சொன்னாராம். மிகவும் சரி. மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும் என்று தோன்றிக் கொண்டே இருக்கும். எத்தனை முறை படித்தாலும் போதவில்லை.

நாட்டார் தொன்மங்கள் பற்றி தெரிந்துகொள்ள எனக்கு ஆர்வம் உண்டு. மதுரை வீரன், முத்துப்பட்டன், காத்தவராயன், நல்லதங்காள் எல்லாமே ஏதோ ஒரு நிஜ சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். எனக்குத் தெரிந்து அ.கா. பெருமாள் நாட்டார் தொன்மங்கள் பற்றி நிறைய எழுதி இருக்கிறார்.

உங்களுக்கு தொன்மங்களில் ஆர்வம் உண்டா? பிடித்த தொன்மம் என்று ஏதாவது உண்டா? ஏன் பிடித்திருக்கிறது என்று சொல்லுங்களேன்!

கவிஞர் பாரதி – ஒரு மதிப்பீடு

இது ஒரு மீள்பதிப்பு, திருத்தங்களுடன்.

எனக்கு கவிதை என்றால் கொஞ்சம் அலர்ஜி. பிடித்த கவிதைகள் மிகவும் கொஞ்சமே. அதுவும் பிடித்த நவீன தமிழ்க் கவிதைகள், புதுக்கவிதைகள் அபூர்வம். இதற்கு இரண்டே இரண்டு விதிவிலக்குகள் – ஒன்று பாரதி, ஒன்று ந. பிச்சமூர்த்தி. ந. பிச்சமூர்த்தியின் கவிதைகளை என் இருபதுகளில் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் பலத்த சிபாரிசில் படித்தேன். இப்போது ஏதோ கடவுள் வரும் கவிதை ஒன்றுதான் ஞாபகம் இருக்கிறது. ஆனால் பல கவிதைகள் பிடித்திருந்த ஞாபகம் இருக்கிறது. மீண்டும் ஒரு முறை படிக்க வேண்டும்.

பாரதியை ஏன் பிடித்திருக்கிறது? சிறு வயதிலிருந்தே அவர் ஒரு மகாகவி என்று மூளைச்சலவை செய்யப்பட்டதாலா? இல்லை அவர் உண்மையிலேயே மகாகவியா? இதற்கு பதில் சொல்வது கஷ்டம்.

கவிதையை பற்றி எனக்கு மனதில் ஒரு பிம்பம் இருக்கிறது. நல்ல கவிதைக்கு மொழி ஒரு தடையாக இருக்கக்கூடாது. அது உணர்ச்சிகளை தட்டி எழுப்ப வேண்டும். படித்த பிறகு நிச்சயமாக கொஞ்ச நேரமாவது அதில் வெளிப்படையாக சொல்லப்படாத விஷயங்களைப் பற்றி யோசிக்க வைக்க வேண்டும். கதையும் கட்டுரையும் போல மெதுவான பில்டப் இருக்க முடியாது. ஒரு கவிதை என்ன மிஞ்சி மிஞ்சி போனால் நூறு வரி இருக்குமா? அதற்குள் சொல்ல வருவதை சொல்லிவிட வேண்டும். (பெரும் கவிதைகள் காவியமாகிவிடுகின்றன.) சந்தம் இருந்தால் இன்னும் உத்தமம். ஆனால் சந்தம் மொழிபெயர்ப்பிலும் வருவது கஷ்டம். மொழி இல்லாவிட்டால் ஏது சந்தம்? (புதுக் கவிதைக்காரர்களுக்கு பிரச்சினை குறைவு) “சூதர் மனைகளிலே அண்ணே தொண்டு மகளிருண்டு” என்று வரும் பீமனின் சபதத்தை படிக்க முடியாது, பாடத்தான் முடியும். அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் அந்த சந்தத்துக்கு எங்கே போவது? பொழுது போகாத நேரத்தில் உங்களுக்கு பிடித்த ஒரு பாரதி கவிதையை வேறு மொழியில் எழுதிப் பாருங்கள். தமிழின் வேகம், சந்தம், நயம் வருகிறதா? நான் கன்னடியனுக்கும், கனடியனுக்கும், அமெரிக்கனுக்கும், ஆந்திரனுக்கும் இதை எப்படி கொண்டு போக முடியும்?

சிறு வயதிலிருந்து அவர் கவிதைகள் அருமையானவை என்று எனக்கு சொல்லப்பட்டிருக்கிறது. வெள்ளிப்பனிமலை, ஜய ஜய பவானி, பாருக்குள்ளே நல்ல நாடு, செந்தமிழ் நாடென்னும் போதினிலே, ஓம் சக்தி ஓம் சக்தி ஓம், காற்று வெளியிடை கண்ணம்மா, கூலி மிக கேட்பான், சின்னஞ்சிறு கிளியே, வெற்றி எட்டு திக்கும் எட்ட கொட்டு முரசே, ஓடி விளையாடு பாப்பா, ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா, சுட்டும் விழி சுடர்தான் போன்ற பல கவிதைகள் என் மனதில் ஏற்படுத்தும் கிளர்ச்சி, உத்வேகம் கொஞ்சநஞ்சம் இல்லை. அஞ்சு தலைப் பாம்பென்பான் அப்பன், மகன் ஆறு தலை என்றுவிட்டால் நெஞ்சம் பகைத்திடுவார் என்று பாடும்போது கூடவே அடச்சே! என்று இன்னும் தோன்றுகிறது. எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே என்ற வரிகளைக் கேட்டால் இப்போதும் சில சமயம் கண்ணில் நீர் மல்குகிறது. ஆனால் அந்த உத்வேகத்தை தமிழுக்கு மிக நெருங்கிய உறவுள்ள ஒரு மலையாளியிடம் கூட என்னால் பகிர்ந்துகொள்ள முடியவில்லை. அப்படி என்றால் இவை எல்லாம் உண்மையிலே நல்ல கவிதையா இல்லை சிறு வயதில் ஆழப் பதிந்தவையா?

சிறு வயதில் இவை எல்லாம் பிடித்திருந்ததற்கு சந்தமும் ஒரு முக்கிய காரணம். அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் என்று பாட ஆரம்பித்தால் உடம்பு தானாக கொஞ்சம் ஆடுகிறது. தொண்டு செய்யும் அடிமை உனக்கு சுதந்திர நினைவோடா! என்று சொல்லிப் பாருங்கள்! மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் என்று பாடிப் பாருங்கள்!

ஆனால் இவரை மொழிபெயர்த்தால்?

செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே – When someone mentions Tamil Nadu, Sweet honey pours into my ear

உங்களுக்கு எது பிடித்திருக்கிறது? தமிழ் அறியாத உங்கள் நண்பரிடம் இந்த ஆங்கில மொழிபெயர்ப்பை சொல்லிப் பாருங்கள். நான் நல்ல மொழி பெயர்ப்பாளன் அல்லன். ஆனால் இதை எப்படி மொழி பெயர்த்தாலும் இவ்வளவுதான்! Enough said.

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்றே சங்கே முழங்கு என்ற பாட்டும் உத்வேகத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் அது சிறந்த கவிதை இல்லை, சிறந்த சந்தம் மட்டுமே கொண்டது என்று எனக்கு தெரிகிறது. பாரதியாரின் பாட்டுகளை பற்றி என்னால் இப்படி சொல்ல முடிவதே இல்லை.

கவிதையை ரசிக்க தெரியாதது என்னுடைய பலவீனமாக இருக்கலாம். ஆனால் எனக்கு தோன்றும் வரை – பாரதி ஒரு அபாரமான தமிழ்க் கவிஞர். அவ்வளவுதான். உலக மகாகவி எல்லாம் இல்லை. என் கண்ணில் யாருமே உலக மகாகவி இல்லை, அது வேறு விஷயம்.

தமிழ் நாட்டில் அவருக்கு பின்னால் ஒரு ஒளி வட்டம் இருக்கிறது. காந்தி, பெரியார், காமராஜ் போன்றவர்களுக்கு இருப்பதை போல. அந்த ஒளி வட்டத்தை உடைத்து அவரை பார்ப்பது எனக்கு கஷ்டமாக இருக்கிறது. அதனால் அவரது கவித்திறன் என்னவென்று யாருமே அலசி நான் பார்க்கவில்லை. பதிவர் ஜெயபாரதன் என் மதிப்பிற்குரியவர். ஆனால் அவர் எழுதிய மதிப்பீட்டை பாருங்கள், அவர் ஒரு பௌதிக கவி, வேதியியல் கவி என்ற ரேஞ்சில் எழுதி இருக்கிறார். இந்த மாதிரி புகழ்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

இல்லை என்றால் “திராவிட” மதிப்பீடுகள். வீரமணி ஒரு முறை அவர் ஆரியன் என்ற வார்த்தையை உயர்ந்தவன் என்ற பொருளில் பயன்படுத்தி இருக்கிறார் என்று குறை சொல்லி இருந்தார். அவர் எழுதிய காலத்தில் அதுதான் அர்த்தம். கொஞ்சம் விட்டால் “பறையனுக்கும் இன்று தீயர் புலையனுக்கும் விடுதலை” என்று எழுதிவிட்டார், “பறையன்” என்று சொன்னவர் மீது தீண்டாமை கேஸ் போடுங்கள் என்பார்.

ரசிகமணி டி.கே.சி. கம்பனை சாதாரண மக்களுக்கு கொண்டு வந்தாராம். அந்த மாதிரி பாரதியாரை யாருமே அலசவில்லை. அப்படி அலசக் கூடிய திறமை உள்ளவர்களும் எதுக்குடா வம்பு என்று விலகி விடுகிறார்கள். ஒரு காலத்தில் கல்கிக்கும் பல பாரதி பக்தர்களுக்கும் பாரதி மகாகவியா இல்லையா என்று விவாதம் நடந்ததாம். ஒரு வேளை அப்போது நான் நினைக்கும்படி நிறை குறைகள் இரண்டுமே பேசப்பட்டனவோ என்னவோ தெரியவில்லை.

சுற்றி வளைப்பானேன்? என் பலவீனமோ, என்னவோ எனக்கு தெரியாது. பாரதியை ஒரு கவிஞராக மதிப்பிட என்னால் முடியாது. எனக்கு அவர் பிடித்த கவிஞர். அவர் உலக மகாகவியோ இல்லையோ என்னால் சொல்ல முடியாது. எந்த கவிஞரும் மொழி என்ற எல்லையை தாண்டுவது கஷ்டம் என்று நான் நினைக்கிறேன்.

அவரது வசன கவிதைகள் – காற்று, இரண்டு கயிறுகளை வைத்து என்ன கலக்கு கலக்கி இருக்கிறார்! – எனக்கு மிகவும் பிடித்தமானவை. ஒரு விதத்தில் அவைதான் இன்றைய புதுக் கவிதைக்கு முன்னோடி. கவித்துவமான வசனம் என்பது என் போன்ற ஞான சூன்யத்துக்குக் கூட புரிந்துவிடுகிறது.

அவர் எழுதிய புத்தகங்களில் எனக்கு மிகவும் பிடித்தது ஞானரதம். ஆங்கிலத்தின் முதல் அகராதியைப் பதித்த சாமுவேல் ஜான்சன் எழுதிய ரசேலாஸ் என்ற புத்தகத்தோடு ஒப்பிடலாம். (ஆனால் அதை விட சிறந்த புத்தகம்). அந்த அற்புதமான புத்தகத்தை யாரும் – என் reference ஆன ஜெயமோகன் உட்பட – பெரிதாக கண்டுகொள்வதில்லை. என் கண்ணில் அது கமலாம்பாள், பத்மாவதி சரித்திரத்தோடு ஒப்பிடக் கூடியது. முடிவடையாத புத்தகங்களான சின்னச் சங்கரன் கதை, சந்திரிகையின் கதை ஆகியவை முற்றுப் பெற்றிருந்தால் நன்றாக வந்திருக்கும்.

ஆனால் பாரதிக்கு பல முகங்கள் இருக்கின்றன. அவர் அரசியல் விமர்சகர்; இதழியலாளர்; எழுத்தாளர்; சுதந்திர போராட்ட வீரர். தமிழ் எழுத்தில் ஒரு புரட்சியாளர். அதைப் பற்றி எல்லாம் இங்கே.