பரிகாசப் பறவையை கொல்வது….

யூதர்களுக்கு எதிராக ஹிட்லரின் அட்டகாசங்களை பறைசாற்றிய உலகம், சமகாலத்திலும், காலம் காலமாக நடைபெற்று வந்துக் கொண்டிருந்த பிற அட்டகாசங்களை பற்றியும் எந்தவித குற்றவுணர்ச்சியும் அடைந்ததாகத் தெரியவில்லை. இங்கொன்றும் அங்கொன்றுமாக மனசாட்சி உள்ள மக்கள் சிலர் பிரச்சனைகளை பற்றிக் கதறினாலும் அவர்கள் கதறல் அவ்வளவு காதில் விழும்படியாக இல்லாததால் தவறுகள் மறுக்கப்பட்டு வருவதும், மறைக்கப் பட்டு வருவதும் அறிந்ததே. அரசியல் சாசனங்களில் கொடுமைகள் ஆதரிக்கப்பட்டு சட்டங்களாக மாறி கொடுமை புரிபவர்களுக்கு ஆதரவாகவும் அவர்களின் பாதுகாவல் கவசங்களாகவும் இருந்து வந்திருக்கிறது.

ஹிட்லர் ஒரு தனி மனிதர். கொடுங்கோலர், சர்வாதிகாரி என்று தன்னை அடையாளப் படுத்திக் கொண்டவர். ஒரு இனத்தை தன் தொலை நோக்கற்ற, மூர்க்கமான நம்பிக்கையால் கொடுமைப்படுத்தினார். ஆனால் ஒரு சமூகமே, ஒரு நாடே, ஏன் ஒரு கண்டமே (இன்னும் சொல்லப்போனால் பல கண்டங்கள்) எந்த வித வெட்கமும், கூச்சமும் இன்றி அடிமைத்தனத்தை ஆதரித்து வந்திருக்கிறது. அடிமைப்படுத்துவது எதோ பிறப்பிரிமை போல் பாவித்து வந்திருக்கிறது. இன்று ஆப்ரிக்க-அமெரிக்கர்கள் என்று கூறப்பட்டு வரும் கறுப்பினத்தவர்கள் (அன்றைய கால்கட்டத்தில் “நிக்கர்கள்” என்பது துவேசிக்க பயன்படும் வார்த்தை, “நீக்ரோ”க்கள் என்பது அரசியல்-சரி என்று கருதப்பட்டது. இன்று “நிக்கர்”, “நீக்ரோ”, ”கறுப்பர்கள்” அனைத்துமே தடை செய்யப்பட்ட வார்த்தைகள்) அன்று அமெரிக்க வெள்ளையர்களால் அடிமைகளாக விற்க்கப்பட்டும், அல்லல்களுக்கு ஈடுபடுத்தப்பட்டும், குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்டும் வந்திருக்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், பேச்சு சுதந்திரம், மதச் சுதந்திரம் வேண்டுமென்று ஐரோப்பாவை விட்டு “பில்கிரீம்களாக” வந்து சேர்ந்த வெள்ளையர்கள் வந்தது முதலே அந்த உரிமைகள் தங்களுக்கு மட்டும் தான் என்று நினைத்துக் கொண்டார்கள் போலும். ஆப்ரிக்க-அமெரிக்க இனத்திற்கு இந்த உரிமையை அவர்கள் கொடுக்கவில்லை.

”சிவில் வார்”ன் போது ஆப்ரிக்க-அமெரிக்கர்களுக்கு கொடுக்கப்பட்ட உரிமைகள் எதோ மனித நேயத்திற்கு பயந்து, கடவுளுக்கு பயந்து, நியாய-அநியாத்திற்கு பயந்து கொடுக்கப்பட்ட உரிமைகள் அல்ல. ஆப்ரகாம் லிங்கனின் பேரத்தை ஏற்றுகொள்ள மறுத்த கான்ஃபெடரேட்ஸை தண்டிப்பதற்க்காக கொடுக்கப் பட்டதே ஆப்ரிக்க-அமெரிக்கர்களின் அளவான சுதந்திரம். அவர்களின் சுதந்திரத்தை, சுதந்திரம் கொடுத்த அரசாங்கமே மனதளவில் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மக்களைக் பற்றி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. எல்லோரும் சமமாக கருதப்படாத நிலைமை இருபதாம் நூற்றாண்டின் மையப் பகுதியையும் தாண்டி வந்துள்ளது. மார்டின் லூதர் கிங் போராடங்கள் வரை நீடித்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில் தான் நெல்லி ஹார்ப்பர் லீ, தான் சிறு குழந்தையாக இருந்த போது ஆப்ரிக்க-அமெரிக்கர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களை பார்த்த அனுபவத்தை வைத்து 1959ல் To Kill a Mockingbird என்ற நாவலை எழுதி J.B.Lippincott & Co. என்ற பதிப்பகத்தார் மூலம் 1960 கோடையில் வெளியிட்டார்கள். நாவல் அந்த வருடத்தின் Pulitzer Prizeஐ தட்டிச் சென்றது. சந்தேகமே இல்லாமல் கண்ணை மூடிக்கொண்டு உலகின் சிறந்த புத்தகங்களில் ஒன்றாக கூறுவேன்.

ஜெம், ஸ்கௌட் (ஜீன் லூயிஸ்) என்ற பள்ளிசெல்லும் சிறார்கள். மேகோம் கவுண்டியின் பிரபல வக்கீல் அட்டிகஸ் ஃபிஞ்ச் இவர்களின் தந்தை. மன்ரோ நகரம் சிறியது. அதில் ஒரு சிறிய தெருவில் வசித்து வருகிறார்கள். தாய், ஜெம் சிறுவயதாக இருக்கும் பொழுதே இறந்துபோகிறார். கல்பூர்னியா என்ற ஆப்ரிக்க-அமெரிக்கர்  வேலைக்காரி. டில் என்னும் சிறுவன் மிஸிஸிப்பியில் உள்ள மெரிடியன் கிராமத்தில் பெற்றோர்களின் பராமரிப்பு சரியில்லாமல் உறவினர்களிடம் வளருகிறான். ரேச்சல் என்ற தன் அத்தையின் வீடு மேகோம்மில் ஸ்கௌட்டின் வீட்டருகில் இருக்கிறது. கோடை விடுமுறைக்கு அங்கு வந்து தங்குகிறான். ஜெம், ஸ்கௌட், டில் மூவருக்கும் எதிர் வரிசையில் கடைசி வீட்டில் இருக்கும் மர்மமான பூ ரேட்லி என்ற மனிதரைப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் ஏற்ப்படுகிறது. அதன் மர்மத்தை ஒட்டி ஏற்படும் சம்பவங்கள், டூபோஸ், மாடி என்ற அண்டைவீட்டு மாதர்களுடன் ஏற்படும் சம்பவங்கள், இவைகளுடன் அந்த வருடக் கோடை முடிகிறது. அடுத்த வருடக் கோடை மிகவும் பயங்கரமாகி விடுகிறது. டில் மீண்டும் மெரிடியனிலிருந்து மேகோம் வருகிறான், ஸ்கௌட்டின் தந்தையை நீதிபதி ஜான் டெய்லர், டாம் ராபின்ஸன் என்ற ஒரு ஆப்ரிக்க-அமெரிக்க இளைஞருக்குகாக டிஃபன்ஸ் தரப்பில் ஆஜராகும்படி உத்தரவிடுகிறார். டாமின் மேல் சுமத்தப்பட்ட குற்றம் கற்பழிப்பு. மெயெல்லா இவல் என்ற பெண்ணிடம் தகாத முறையில் நடந்துக் கொண்டதாக அந்தப் பெண்ணும், தந்தை பாப் இவெல்லும் சாட்சி கூறுகிறார்கள். அட்டிகஸ் ஃபிஞ்ச், டாமுக்காக வாதிடுகிறார்.வழக்கு நடக்கும் பொழுது ஸ்கௌட், ஜெம், டில் மூவரும் “கறுப்பினத்தவர்”களுடன் அமர்ந்து வழக்கை கேட்கிறார்கள். பின்னர் நடக்கும் சம்பவங்களை உங்கள் வாசிப்பணுபவத்திற்கு விட்டு விடுகிறேன்.

இதன் அனேக பகுதிகள் ஹார்பர் லீயின் சொந்தக்கதை தான். கதையை தன்மையில் (first person) ஸ்கௌட் சொல்லுகிறார். ஹார்ப்பர் லீ தான் நாவலில் ஸ்கௌட். பிரபல் அமெரிக்க நாவல் ஆசிரியர் ட்ருமேன் கபோட்டே (Truman Capote – In Cold Blood) தான் டில் என்ற மெரிடியன் சிறுவன். பிரான்ஸிஸ் கன்னிங்ஹாம் ஃபிஞ்ச் (ஹார்ப்பர் லீயின் உண்மையான தந்தை – வழக்கறிஞர்) தான் அட்டிகஸ் பிஞ்ச். நல்ல இலக்கியம் வாழ்வனுபவம் சார்ந்தே இருக்கும் என்று சொல்கிறார்கள். சொந்தக் கற்பனை என்று பறை சாற்றாமல் இந்த அனுபவத்தை எதையும் மறைக்காமல் ஹார்ப்பர் லீ தன் நாவலில் இடம்பெறச் செய்கிறார். சட்டங்கள் நியாமாக இல்லாவிட்டாலும் ஒரு சாரார் மனதில் எப்பொழுதும் நியாங்கள் இருந்து கொண்டே இருக்கும் என்பதும் , அதற்காக போராடத் துணிவார்கள் என்பதும் வெளிப்படுகிறது.

ரிச்மண்ட் பள்ளி மாவட்டம் (விர்ஜீனியா மாநிலம்) “டு கில் எ மாக்கிங்பேர்ட்” நாவலை தடை செய்ய படாத பாடு பட்டிருக்கிறது. காரணம் – தகாத இலக்கியமாம்.

பரிகாசப்பறவையை கொல்வது மிகப் பாவமான ஒரு செயல். ”பரிகாசப்பறவையை கொல்வது” என்பது என் தமிழாக்கம். இந்த புத்தகம் உண்மையில் தமிழில் டிரான்ஸ்லேட் செய்யப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை. அவசியம் படியுங்கள்.

இது கிரகரி பெக் நடித்து திரைப் படமாக வந்துள்ளது.

தமிழில் சரித்திர நாவல்கள்

நாலாம் வகுப்பில் தெரியாத்தனமாக மரியசூசை சாரிடம் “பாபரின் பேரன் அக்பராக இருந்தால் என்ன, அக்பரின் பேரன் பாபராக இருந்தால் என்ன, இதை எல்லாம் தெரிந்து கொள்வதில் வாழ்க்கைக்கு ஏதாவது பயன் உண்டா?” என்று கேட்டுவிட்டேன். வாத்தியார் வீட்டுப் பிள்ளையே இப்படி கேள்வி கேக்குதே, அய்யர் வீட்டுப் பிள்ளைங்கதான் படிப்பாங்க, நீயே இப்படி கேக்கறியே என்றெல்லாம் மூச்சு விடாமல் திட்டினார். நல்ல வேளை, அப்பா அம்மாவிடம் போட்டுக் கொடுக்கவில்லை.

ஆனால் எனக்கு உண்மையிலேயே அந்த சந்தேகம் இருந்தது. அப்போதுதான் சாண்டில்யன் புத்தகங்களை எல்லாம் படிக்க ஆரம்பித்திருந்தேன். சும்மா கதைப்புத்தகம் மாதிரி படிக்க வேண்டியவற்றை எதற்காக கஷ்டப்பட்டு உருப்போட்டு பரீட்சை எழுதி அவஸ்தைப்பட வேண்டும் என்று அப்போது புரியவில்லை. இப்போதும் புரியவில்லை. உண்மையில் சாண்டில்யன் நாவல்களில் படித்த சரித்திரம்தான் இன்னும் நினைவிருக்கிறது.

அநேகம் பேர் என் போல்தான் என்று நினைக்கிறேன். ஏதோ படித்தோம், அசோகர் சாலையின் இரு புறமும் மரங்களை நட்டார், அதற்கப்புறம் வந்த ஏதோ ஒரு குப்தர் அந்த மரங்களை பிடுங்கிப் போட்டுவிட்டு வேறு மரங்களை அதே சாலையின் இரு புறமும் நட்டார், அசோகர் வெட்டிய குளங்களை தூர் வாரினார் என்று பரீட்சையில் எழுதினோம், பாசானோம், பத்தாவது முடிந்த பிறகு மறந்துவிட்டோம் என்று இருப்பவர்கள்தான். எங்களுக்கெல்லாம் நல்ல சரித்திர நாவல் என்றால் என்ன? அதற்கும் நல்ல சமூக நாவலுக்கும் என்ன வித்தியாசம்?

எனக்கு (வழக்கம் போல) ரொம்ப சிம்பிளான definition-தான். சரித்திர நாவல் என்றாலும் ஒரு நல்ல நாவலுக்குண்டான எல்லா லட்சணங்களும் இருக்க வேண்டும். அது ஒரு காலகட்டத்தை, அன்றைய உலகத்தை காட்ட வேண்டும். என்றைக்கும் இருக்கக் கூடிய மனித இயல்பை, உச்சங்களை, அதீத உணர்ச்சிகளை, பிரச்சினைகளை, அன்றைய காலகட்டத்தின் வார்ப்புருவில், அன்றைய பிரச்சினைகளை வைத்து காட்ட வேண்டும். சிந்திக்க வைக்க வேண்டும். நல்ல பாத்திரப் படைப்பு இருக்க வேண்டும். சுவாரசியம் இருக்க வேண்டும், அலுப்புத் தட்டக் கூடாது. அப்படி இல்லாவிட்டால் அது ராஜராஜ சோழன் காலத்தில் இருந்தாலும் சரி, கருனாநிதிச் சோழன் காலத்தில் இருந்தாலும் சரி, எனக்குத் தேறப்போவதில்லை.

என்றாலும் அதன் களம் ஒரு நூறு வருஷம் முன்னாலாவது இருக்க வேண்டும். நூறு வருஷம் முன்னால் என்றால் ஒரு சம்பவத்தின் பரபரப்பு அடங்கி இருக்கும். அதைப் பற்றி விருப்பு வெறுப்பின்றி எழுதுவது கொஞ்சம் சுலபம். ருக்மிணி தேவி என்ற இளம் இந்தியப் பெண் அருண்டேல் என்ற வெள்ளைக்காரரை மணந்ததை எதிர்த்து அன்றைக்கு பக்கம் பக்கமாக வ.உ.சி. உட்பட்ட பலர் எழுதித் தள்ளினார்கள். அதில் எவ்வளவு xenophobia, எவ்வளவு தேசபக்தி என்று இன்றைக்கு ஆய்வு மனப்பான்மையோடு எழுதுவது கொஞ்சம் சுலபம். புலிகேசி மகேந்திரவர்மனை வென்றதாகவும், மகேந்திரவர்மன் புலிகேசியை வென்றதாகவும் – இரண்டு விதமாகவும் – கல்வெட்டு இருக்கிறதாம். இந்த முரணை வைத்து மகேந்திரவர்மன் காலத்தில் எழுதினால் தலை போய்விடலாம். இன்றைக்கு ஆய்வு செய்து எழுத முடியும்.

தமிழில் அப்படி நல்ல சரித்திர நாவல் என்று இருப்பதை விரல் விட்டு எண்ணிவிடலாம். இதற்கு கல்கி ஒரு முக்கிய காரணம்.

1895-இலேயே முதல் சரித்திர நாவல் (மோகனாங்கி) வந்துவிட்டதாம். இருந்தாலும் தமிழர்களுக்கு 1942-இல் வந்த பார்த்திபன் கனவுதான் முதல் சரித்திர நாவல். தொடர்கதையாக வந்தது. சமீபத்தில் மீண்டும் படித்தேன், திரைப்படமும் பார்த்தேன். வாண்டு மாமா லெவலில் உள்ள நாவல். ரோமியோ ஜூலியட் மாதிரி ஒரு காதல் ஜோடி, சுலபமாக யூகிக்கக்கூடிய முடிச்சுகள், திருப்பங்கள், இன்டர்நெட்டும் ஈமெயிலும் இல்லாத காலத்திலேயே நாட்டில் ஒவ்வொரு மூலையிலும் நடப்பதைத் அடுத்த நிமிஷமே தெரிந்து கொள்ளும் சக்கரவர்த்தி, caricature என்ற லெவலில் உள்ள பாத்திரங்கள் என்று பலவிதமான பலவீனங்கள் உள்ள நாவல். எனக்கு இது அவருக்கு ஒரு practice நாவலோ, எழுதிப் பழகி கொண்டாரோ என்று தோன்றுவதுண்டு. Fluff என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆனால் இந்த நாவல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும். வாசகர்கள் விரும்பிப் படித்திருக்க வேண்டும். யூகிக்கக் கூடிய கதை என்றாலும் கல்கி அதை சுவாரசியமாகத்தான் எழுதி இருக்கிறார். அவரது சரளமான நடை நிச்சயமாக உதவி இருக்கும். பத்திரிகை பலம் அவருக்கு அப்போது பெரிய வாசகர் வட்டத்தை உருவாக்கி இருக்க வேண்டும். கல்கி எழுதியது ஒரு முன்னோடி நாவல். அன்றைக்கு அது ஒரு பெரும் சாதனையே. ஒரு கட்டுக்கோப்பான கதை, முடிச்சு, சாகசம், ஒரு “பயங்கர” வில்லன், மாமல்லபுரம் பற்றிய பெருமிதம், காவிரி பற்றிய வர்ணனைகள் என்று அவர் எழுதியதை இன்றும் எட்டு ஒன்பது வயதில் படித்தால் சுவையாகத்தான் இருக்கும். ஒரு முன்னோடி முயற்சிக்கு உண்டான பலங்களும் பலவீனங்களும் அதில் நிறைய இருக்கின்றன. அவரைச் சொல்லியும் குற்றமில்லை, ஏனென்றால் அவரது ரோல் மாடல்கள் அலெக்சாண்டர் டூமாவும், வால்டர் ஸ்காட்டும்தான்.

கல்கி கோடு போட்டார், ரோடு போட இன்னும் யாரும் வரவில்லை. அந்த நாவலின் தாக்கத்தில் இருந்து இன்னும் தமிழகம் முழுதாக வெளிவரவில்லை. அன்று அவர் நிறுவிய parameters-ஐ ஒரு பரம்பரையே தொடர்ந்து பின்பற்றி வந்திருக்கிறது. சரித்திரக் கதை என்றால் அது ராஜா-ராணி, இளவரசன், இளவரசி, அவர்களுக்கு உதவி செய்யும் மந்திரிகள், ஒற்றர்கள், போர்கள், அரண்மனைச் சதிகள், அங்கங்கே தமிழ்(இந்திய) கலை+இலக்கியப் பாரம்பரியம் பற்றிய பெருமிதம், ஃபார்முலா மனிதர்கள், எம்ஜிஆர் படம் மாதிரி கொஞ்சம் வீரம்+சாகசம்+காதல்+அன்பு+தந்திரம் எல்லாம் கலந்த ஒரு மசாலா என்றே சரித்திரக் கதை ஆசிரியர்களின் புரிதல் இருக்கிறது.கல்கி போட்ட கோட்டிலேயேதான் அவர்கள் போய்க்கொண்டிருக்கிறார்கள். சரித்திரக் கதைகளில் இருக்கும் எத்தனையோ possibilities பற்றி அவர்கள் யோசிப்பதில்லை. உதாரணமாக ராஜராஜ சோழன் பெரிய போர்களில் ஈடுபட்டான். ஆயுதம் தயாரிக்க வேண்டிய இரும்பு எங்கிருந்து கிடைத்தது? ஆழ்வார்க்கடியான் வைஷ்ணவப் பிராமணன். ஜாதி ஆசாரம் மிகுந்திருந்த அந்தக் காலத்தில் அவன் சாப்பாட்டுக்கு என்ன செய்தான்? தில்லியிலிருந்து அஹமத் நகர் வர அன்றைக்கு இரண்டு மூன்று மாதம் ஆகி இருக்கும். இன்னும் கொஞ்சம் படை வேண்டும் என்றால் அஹமத் நகரில் இருப்பவன் என்ன செய்வான்? கபீரின் சூஃபியிசம் அன்றைய ஜாதி கட்டுப்பாடுகளை தாக்கி இருக்கும். இதை டில்லி சுல்தான்கள் எப்படி எதிர்கொண்டார்கள்? இதை எல்லாம் வைத்து அருமையான கதைகள் எழுதலாம். ஆனால் இங்கே கதாபாத்திரங்களின் பிரச்சினைகள் எப்போதுமே அரண்மனைச் சதிகள்தான்.

கல்கி அடுத்தபடி சிவகாமியின் சபதம் எழுதினார். அதில் மெலோட்ராமா அதிகம். ஆனால் பாத்திரப் படைப்பு, கதையின் சுவாரசியம் எல்லாம் உயர்ந்திருக்கின்றன. நாகநந்தி கொஞ்சம் அதீதம்தான், ஆனால் எல்லா பாத்திரங்களிலும் நம்பகத்தன்மை அதிகம். கார்ட்போர்ட் கட்அவுட் மாதிரி இல்லை. ஆயனருக்கு அரண்மனையை தாண்டி அஜந்தா ஓவியங்களைப் பற்றி கவலைப்பட முடிந்தது. தமிழின் சிறந்த சரித்திர நாவல்களில் ஒன்று. ஒரு விதத்தில் பராசக்தி திரைப்படம் மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்களேன். மெலோட்ராமாதான், ஆனால் நிச்சயமாக பாருங்கள் என்று சிபாரிசு செய்வேன்.

அவரது சாதனை அடுத்து வந்த பொன்னியின் செல்வன்தான். இதை விட சிறந்த கதைப் பின்னலை நான் அபூர்வமாகவே பார்த்திருக்கிறேன். கதாபாத்திரங்கள் மிகவும் அருமையாக செதுக்கப்பட்டிருக்கின்றன. நந்தினி அதீதமான பாத்திரம்தான், ஆனாலும் நம்பகத்தன்மை இருக்கிறது. கட்டுக்கோப்பான கதை, பெருமிதம், அருமையான பாத்திரங்கள், கதை முடிச்சுகள், சுவாரசியம், எல்லாம் உண்டு. அரண்மனைச் சதிகள் என்ற genre -இல் இதை விட சிறந்த புத்தகம் இன்னும் வரவில்லை. (எனக்குத் தெரிந்து) ஒரு டூமாவை விட, ஒரு ஸ்காட்டை விட பல மடங்கு சிறந்த நாவல். லே மிசராபில்ஸ் நாவலின் கதைப் பின்னலை இதனுடன் ஒப்பிடலாம். ஆனால் ஹ்யூகோ அந்தக் கதைப் பின்னலின் மூலம் மனித மனதின் உச்சங்களை எல்லாம் காட்டுகிறார், கல்கி அந்தப் பக்கம் போவதே இல்லை. இருந்தாலும் இது இலக்கியமே. மொழிபெயர்க்கப்பட வேண்டிய நாவலே.

தமிழின் சிறந்த சரித்திர நாவல் ஆசிரியர் கல்கியே. அவரது பாணியின் உச்சம் பொன்னியின் செல்வன். அதன் கதைப்பின்னல் மூலம் அது இலக்கியம் என்ற ஸ்தானத்தை அடைகிறது. அடுத்து வந்தவர்கள் பொ. செல்வன் அளவுக்கு இன்னும் போகவில்லை. சி. சபதம் அளவுக்குப் போனவர்களே அபூர்வம்.

ஜெயமோகன் பொ. செல்வன், சி. சபதம் இரண்டையும் தன் historical romances முதல் பட்டியலிலும் பா. கனவை இரண்டாம் பட்டியலிலும் சேர்க்கிறார். எஸ்.ரா. என் கட்சி போலிருக்கிறது. அவருக்கு பொ. செல்வன் நூறு சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்று.

ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாசா பொ. செல்வனை ஆடியோ வடிவத்தில் இங்கே பதிவு செய்து கொண்டிருக்கிறார். மூன்று நாவல்களுமே சென்னை லைப்ரரி தளத்தில் படிக்கக் கிடைக்கிறது.

கல்கி ஒரு முன்னோடி, அவரைத் தாண்டி அடுத்தவர்கள் போகாததற்கு அவரைக் குறை சொல்லலாமா என்றும் தோன்றுகிறது. கல்கியின் பாணியை எனக்குத் தெரிந்து இரண்டே இரண்டு பேர்தான் தாண்டி இருக்கிறார்கள். ஒருவர் பிரபஞ்சன். இன்னொருவர் பாலகுமாரன். முதலில் கல்கி பாணி எழுத்தாளர்களைப் பற்றி இன்னும் கொஞ்சம் எழுதிவிட்டு அவர்களைப் பற்றி ஆரம்பிக்கலாம் என்று பார்க்கிறேன். ஏற்கனவே பதிவு ரொம்ப நீளமாகிவிட்டது, பகுதி பகுதியாகத்தான் எழுத வேண்டும்.

தொடரும்…