பாலகுமாரன் எழுதிய சரித்திர நாவல்களில் உடையார் பெரிதும் பேசப்படுகிறது. நான் இன்னும் படிக்கவில்லை. உடையார் தவிரவும் பல சரித்திர குறுநாவல்களை எழுதி இருக்கிறார். இவை அனேகமாக மாத நாவல் ஃபார்மட்டில் எழுதப்பட்டவை. சில சமயம் மாத நாவல் ஃபார்முலாவை மீறி நல்ல கதைகள் வந்திருக்கின்றன.
பாராட்ட வேண்டிய விஷயம் ஒன்று – பாலகுமாரனின் சரித்திரக் கதைகளில் இளவரசிகளுக்கும், அரண்மனை சதிகளுக்கும், மதியூக மந்திரிகளுக்கும் பெரிய இடம் கிடையாது. (ஆனால் தாசிகளுக்கு பெரிய இடம் உண்டு. 🙂 ) ஒரு கிராமத்தில் ஜாதியின் தாக்கம் என்ன, பெண்கள் மீது போரின் தாக்கம் என்ன, கோவில் வேலை செய்பவனின் ஆசாபாசங்கள் என்று எழுதுவார். சில சமயம் ஒரு கோவில் கல்வெட்டை ஒரு கதையாக மாற்றுவார். அனேகமாக எல்லா கதைகளுமே சோழ அரசு ஓங்கி இருந்த சமயத்தில்தான் – ராஜராஜன்தான் அவருக்கு ஹீரோ என்று நினைக்கிறேன். பிரபஞ்சனுக்கு அடுத்தபடி இவர் ஒருவர்தான் இப்படி சாதாரண மக்களைப் பற்றி எழுதுகிறார் என்று நினைக்கிறேன். தனித்தனி கதைகள் பிரமாதமாக இல்லை என்றாலும் எல்லா கதைகளையும் சேர்த்து வைத்து படிக்கும்போது ஒரு நல்ல ambience இருக்கிறது.
கவிழ்ந்த காணிக்கை: ஆதித்த பெருந்தச்சன் பிரமாண்ட நந்தி சிலை செதுக்குகிறார். அதற்குள் ஒரு தேரை இருக்கிறது, அதை மகன் கண்டுபிடிக்கிறான். தவிர்க்கலாம். இன்னும் இந்த உடைபட்ட பிரமாண்ட நந்தி திருவக்கரை என்ற ஊரில் இருப்பதாக பாலகுமாரன் சொல்கிறார். இது எங்கிருக்கிறது? யாராவது இப்படி ஒரு நந்தியை பார்த்திருக்கிறீர்களா? (ராஜராஜ சோழன் காலம்)
முதல் யுத்தம்: காந்தளூர்சாலையை கலமறுத்தது. காந்தளூர்சாலையை போர்ப்பயிற்சி தரும் ஒரு கடிகையாக காட்டுகிறார். அங்கே படித்த அருண்மொழியே அதை அழிக்க துணை செய்கிறான். நடுவில் பாலகுமாரனுக்கு பிடித்த தாசிகள் வந்து போகிறார்கள். படிக்கலாம், முழு மோசம் என்று சொல்வதற்கில்லை. (ராஜராஜ சோழன் காலம்)
இனிய யட்சிணி: இதிலும் மந்திரம், மாயம் என்று இழுத்தாலும் இதை சரித்திரக் கதை என்றுதான் சொல்ல வேண்டும். சோழர் காலத்தில் வேளாள வீரன் ஒருவன் மயிலை பகுதியில் தலைவனாகிறான். ராஜா, சிற்றரசன், ராணி, சேடி, மந்திரி, ஒற்றன் எல்லாரையும் விட்டுவிட்டு இதை மக்களின் கதையாக எழுதி இருக்கிறார். ஜாதி டென்ஷன்களைப் பற்றி எழுதி இருக்கிறார். பிரச்சினை என்னவென்றால் இந்தக் கதையில் இன்றைய காலத்தைக் கலந்து உச்சிஷ்ட கணபதி மந்திரம், ஆவிகள் என்றெல்லாம் இரண்டு மூன்று கதைகளைக் கலக்கிறார். பிரமாதமான கதை என்று சொல்ல முடியாவிட்டாலும் இப்படி முயற்சி செய்ததற்காகவே படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன். (ராஜராஜ சோழன் காலம்)
மாக்கோலம்: இது wish fullfilment , பகல் கனவு, fantasy கதை. பாலகுமாரன் அநிருத்த பிரம்மராயரின் மகன் அருண்மொழியின் மறு ஜன்மமாம். ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி (எழுத்தாளர் திலகவதி மாதிரி இருக்கிறது) இன்னொரு மறுபிறப்பாம். முன் ஜன்மக் கடனை இந்த ஜன்மத்தில் தீர்க்கிறார்களாம். பஸ்ஸில் படிக்கலாம். (ராஜராஜ சோழன் காலம்)
என்னருகில் நீ இருந்தால்: கச்சிதமான, நல்ல கதை. ராஜராஜ சோழனின் படைத்தலைவன் காரி குளிப்பாகை இப்போது தாம்பரத்தில் பிறந்திருக்கிறான். அவனுக்கு ராஜராஜன், மற்றும் அவரது சபையினரின் ஆவிகள் அறிவுரை சொல்லி அவனைப் பிறவி பெருங்கடலிலிருந்து மீட்கின்றனர். இதற்கு நான் எழுதி இருக்கும் கதை சுருக்கம் சரியில்லை, நேராக புத்தகத்தை படித்துக் கொள்ளுங்கள். ஜெம். ஆனால் இதை சரித்திரக் கதை என்று சொல்லலாமா என்று எனக்கு சந்தேகம்தான்.
ஒரு காதல் நிவந்தம்: ராஜேந்திர சோழன் கங்கை கொண்டாயிற்று. ஆனால் இன்னும் வீட்டில் நிம்மதி இல்லை. பெண்களுக்கு போரினால் ஏற்படும் இழப்பை ராஜேந்திரர் புரிந்துகொள்ளவில்லை அதனால்தான் அரண்மனைக்கே வருவதில்லை என்று அத்தைக்காரி குந்தவை நினைக்கிறாள். பெண்களின் மனதை புரிந்துகொள்ள ஒரு அணுக்கியை – தளிச்சேரி பெண், தேவரடியார், தாசியை – ஏற்பாடு செய்கிறார். அந்த தாசி – பரவை – அவரிடம் தைரியமாக பேசி அவருக்குள் இருக்கும் நியாய உணர்வை தூண்டிவிடுகிறாள். பரவை நாச்சியார் ஒரு கோவில் கட்டி இருக்கிறாளாம் – விழுப்புரம் அருகே பனையவரம் என்ற இடத்தில். யாருக்காவது தெரியுமா?
நந்தாவிளக்கு: போர், வென்ற தரப்பு பெண்களைக் கைப்பற்றி அடிமையாகவும், தாசியாகவும் மாற்றுகிறது. போர் புரிந்தால் கிடக்கும் பரிசுகளை எண்ணியும், ராஜா மேல் இருக்கும் முரட்டு பக்தியாலும், ஆண் வர்க்கம் பொதுவாக போரை விரும்புகிறது. பெண்கள் விரும்பவில்லை என்று கதை போகிறது. கதை பிரமாதமாக இல்லை, ஆனால் படிக்கலாம். (ராஜேந்திர சோழன் காலம்)
கல் திரை: சென்னை அருகே திருவிடந்தை என்ற ஊரில் உள்ள ஒரு கல்வெட்டை வைத்து இந்தக் கதை. பக்கத்து ஊர் என்பது இந்தக் கதையின் கவர்ச்சியை அதிகப்படுத்துகிறது.
கடிகை: காந்தளூர்சாலை பற்றி எழுத வேண்டும் என்று ஆசை. பொன்னியின் செல்வனைத் தொடர வேண்டும் என்று ஒரு ஆசை. தாசீல் பண்ண ஆசை இருந்தாலும் கழுதைதான் மேய்த்திருக்கிறார்.
ராஜகோபுரம்: கவி காளமேகம், கோனேரிராஜன் ஆகியோரை வைத்து ஒரு கதை. பாலகுமாரன் கதையைப் பற்றி கொஞ்சமாவது திட்டமிட்டு எழுத வேண்டும். வில்லன் மாதிரி வருபவன் திடீரென்று ஹீரோ மாதிரி நடந்து கொண்டால் எப்படி?
செப்புப் பட்டயம்: ஒரு தேவரடியார் பெண் உடன்கட்டை ஏறிவிட அவள் குழந்தைகளுக்கு அப்பா சொத்தில் பங்கு கிடைத்தது ஒரு செப்பேடாக இருக்கிறதாம். அதை வைத்து ஒரு கதை.
யானைப்பாலம்: யானைகளின் முதுகில் கட்டைகளை வைத்து பாலமாக்கி மகாநதியைக் கடந்ததாக ஒரு கதை.
இவை தவிர ஜெம்பை கோவில் கல்வெட்டை பின்னணியிலும் (சோழர் காலம்), சுசீந்திரம் கோவில் பின்னணியிலும் (நாயக்கர் காலம்) இரண்டு கதைகள் நினைவு வருகின்றன. கதை பெயர் மறந்துவிட்டது.
இந்த மாதிரி உள்ள கதைகளை ஒரு தொகுப்பாகப் போட்டால் நன்றாகப் போகும் என்று நினைக்கிறேன். அநேகக் கதைகள் சுமார்தான். ஆனால் ஒரு தொகுப்பாக வருவது நல்ல ambience-ஐ உருவாக்கும்.
தொடர்புடைய சுட்டிகள்:
தமிழில் சரித்திர நாவல்கள்: கல்கி பாணி, கல்கியின் வாரிசுகள், படிக்க விரும்புபவை
பிரபஞ்சனின் மானுடம் வெல்லும்
Like this:
Like ஏற்றப்படுகின்றது...