சரித்திர நாவல் சரித்திர நாவல் என்று ஆறேழு பதிவு எழுதியாயிற்று. இன்னும் எழுத விஷயம் இருந்தாலும் எனக்கே கொஞ்சம் போரடிக்கிறது. ஒரு ப்ரேக் எடுத்துக் கொள்கிறேன்.
நண்பர் கோபி ராஜத்தின் மனோரதம் பற்றி எழுதேன் என்று கேட்டிருந்தார். தற்செயலாக போன வாரம்தான் அந்தப் புத்தகத்தைப் படித்தேன். சரி கோபியின் மனோரதத்தையும் பூர்த்தி செய்வோமே!
வீடு கட்டுவது என்பது மத்தியதர வர்க்கத்தினரின் கனவு மட்டுமல்ல, nightmare-உம் கூட. இதுதான் கதை.
வீடு கட்டுவது என்று கிளம்பியாகிவிட்டது. அப்புறம் காண்ட்ராக்டர், மேஸ்திரி, சிமென்ட், கல், கிணறு, ஜன்னல், கதவு, வெள்ளையடிப்பது, பூச்செடி வைப்பது என்று ஒவ்வொரு கட்டத்திலும் படும் அவஸ்தையை விவரித்திருக்கிறார். நம்மில் அநேகமானவருக்கு தொழில் நுட்பம் தெரியாது. இன்னும் இரண்டு மூட்டை சிமென்ட் வேண்டுமென்றால் உண்மையிலேயே வேண்டுமா என்று ஒரு கேள்வி நிச்சயமாகத் தோன்றும். அந்தப் பிரச்சினையை தத்ரூபமாக கொண்டு வந்திருக்கிறார். வீடு கட்டி அனுபவப்பட்ட முக்கால்வாசிப்பேருக்கு தாங்கள் பட்ட கஷ்டங்கள் நிச்சயமாக நினைவு வரும்.
ஆனால் கதை என் கண்ணில் சுமார்தான். இது ஒரு மார்க்கெட்டை – சொந்த வீடு கட்டியவர்கள் – குறி வைத்தும், கொஞ்சம் சுய இரக்க உணர்ச்சியிலும் எழுதப்பட்ட கதை. அன்றைக்கு புன்முறுவலை வரவழைத்திருக்கக் கூடும் பகுதிகள் இன்று வேலை செய்யவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். மகா மோசம் என்றில்லை, ஆனால் பிரமாதம் என்றும் சொல்வதற்கில்லை. படிக்காவிட்டால் ஒன்றும் குடி முழுகிவிடாது.
கோபி தேவனின் ரசிகர் என்று நினைக்கிறேன். அவருக்கு இந்த விமர்சனம் அதிருப்தியைத் தரலாம். என்ன செய்வது, எனக்கு என்ன தோன்றுகிறதோ அதைத்தான் எழுத முடியும்…
தேவனின் புத்தகங்களை அலையன்ஸ் பதிப்பகம் வெளியிடுகிறது. இந்தப் புத்தகம் இப்போது கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடாகவும் வந்திருக்கிறது. விலை 80 ரூபாய்.