விவேகானந்தர் பாறையின் கதை (பா. ராகவனின் “ஆர்.எஸ்.எஸ்: மதம், மதம் மற்றும் மதம்”)

பா. ராகவன் எழுதிய ஒரு பதிவு இது – ஆர்.எஸ்.எஸ்: மதம், மதம் மற்றும் மதம் என்ற புத்தகத்திலிருந்து ஒரு excerpt-ஐ எடுத்துப் போட்டிருக்கிறார். படிக்க சுவாரசியமாக இருந்தது.

விவேகானந்தர் தியானம் செய்த பாறை; அவரது நூற்றாண்டின்போது அங்கே ஒரு நினைவுச்சின்னம் கட்டலாமே என்று யோசனை வந்திருக்கிறது.

பிரச்சினை அது புனித ஃபிரான்சிஸ் சேவியரும் ஜபம் செய்த பாறை என்பதால். (கிருஸ்துவ) மீனவர்கள்தான் அதை இளைப்பாற பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். ஒரு லோகல் பாதிரியார் கிருஸ்துவர்களைத் தூண்டி விட்டிருக்கிறார். ராவோடு ராவாக அங்கே ஒரு சிலுவை வந்துவிட்டது. (எப்படி 1947-இல் “தானாக” ராமஜன்மபூமி-பாபரி மசூதியில் ராமர் விக்ரகம் வந்ததோ அதே மாதிரி)

பக்தவத்சலம்தான் அப்போது முதலமைச்சர். பாறையிலிருந்து சிலுவையை அப்புறப்படுத்த உத்தரவிட்டிருக்கிறார். அவர் ரம்ஜான் கஞ்சி குடித்துக் கொண்டே ராமன் எந்த எஞ்சினியரிங் காலேஜில் படித்தான் என்று கேட்கும் டைப் இல்லை என்று தெரிகிறது. ஆனால் நினைவுச்சின்னமும் வேண்டாம், வீணாக சட்டம் ஒழுங்குப் பிரச்சினை வரும் என்று சொல்லிவிட்டார்.

ஆர்.எஸ்.எஸ். ஏக்நாத் ரானடே என்பவரை அனுப்பியது. ரானடே பக்தவத்சலத்தையும் சமாளிக்க வேண்டும், சின்னம் கட்டுவதை எதிர்த்த அன்றைய பண்பாட்டு அமைச்சர் ஹுமாயூன் கபீரையும் சமாளிக்க வேண்டும். ஹுமாயூன் கபீர் மேற்கு வங்காள எம்.பி. அவரை விவேகானந்தர் வங்காளி, அவருக்கு நினைவுச்சின்னம் எழுப்ப ஒரு வங்காள எம்.பி.யே தடை போடுவதா என்ற அஸ்திரத்தை எடுத்து சமாளித்தார். இந்தப் பக்கம் அண்ணாதுரையின் ஆதரவைப் பெற்றார். நாடு பூராவும், குறிப்பாக கிருஸ்துவர்கள் அதிகம் உள்ள நாகாலாந்து மாநிலம், கம்யூனிஸ்ட் ஜோதிபாசு என்று பலரின் ஆதரவைப் பெற்றார். நினைவுச்சின்னம் எழும்பிவிட்டது!

கடைசியில் இப்படி ஒரு வரி வருகிறது.

பாறையின் இடத்தில் மசூதி. கிறிஸ்தவர்களின் இடத்தில் முஸ்லிம்கள். ரானடேவின் இடத்தில் அத்வானியும் வாஜ்பாயும் பரிவாரக் கூட்டங்களும். சந்தேகமில்லை. அயோத்தி, ஆர்.எஸ்.எஸ்ஸைப் பொறுத்தவரை ஒரு பரிமாண வீழ்ச்சி.

பா.ரா. சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று நினைக்கிறேன். கன்யாகுமரியில் நினைவுச்சின்னம் எழுப்புவது மட்டுமே குறிக்கோள். ராமன் பேரை வைத்து ஓட்டு அரசியல் நடத்துவதுதான் இங்கே குறிக்கோள். பா.ஜ.க.வின் அரசியல் strategists எல்லாருக்கும் கேஸ் முடிந்துவிட்டது ஒரு பிரச்சினைதான்!

புத்தகத்தை இந்த சுட்டியில் வாங்கலாம். கிழக்கு வெளியீடு. விலை 75 ரூபாய்.

சுஜாதாவின் “ஒரு லட்சம் புத்தகங்கள்”

(மீள்பதிவு)

வாசிப்பு அனுபவம் சுலபமாக பகிர்ந்து கொள்ள முடியாதது என்று எனக்கு தோன்றுகிறது. ஆனாலும், ஒரு சிறுகதை தந்த வாசிப்பு அனுபவம் என்ன என்பதை இந்தப் பதிவில் எழுத முயற்சி செய்யப் போகிறேன்.

பல வருஷங்களுக்கு முன் விகடனில் பாரதியார் நூற்றாண்டை முன்னிட்டு பல எழுத்தாளர்கள் பாரதியின் வரிகளை வைத்து கதை எழுதினார்கள். எனக்கு இன்னும் ஞாபகம் இருப்பது சுஜாதா எழுதிய ஒரு லட்சம் புத்தகங்கள் என்ற கதைதான்.

அவர் எடுத்துக்கொண்ட வரி “சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்“. ஒரு இலங்கை தமிழ் நூலகத்தில் புத்தகங்கள் சிங்களர்களால் எரிக்கப்பட்டன. இதை பின்புலமாக வைத்து எழுதப்பட்ட கதை.

ஏதோ ஒரு கருத்தரங்கமோ என்னவோ. அமைச்சர் வருகிறார். “தமிழறிஞர்” ஒருவர் – பல பதவி கனவுகளில் இருப்பவர் – சிறப்புரை. அப்போது அவருக்கு தெரிந்த ஒரு ஈழத் தமிழன் – அவன் குடும்பம் கலவரத்தில் அழிந்துவிட்டது – ஒரு லட்சம் புத்தகங்கள், ஒரு நூலகம், ஒரு அறிவு சொத்து, ஒரு mob -ஆல் எரிக்கப்பட்டதை பற்றி இங்கே யாருக்கும் தெரியவில்லை, எடுத்து சொல்ல வேண்டும் என்று ஆவேசத்தோடு இருக்கிறான். அவன் குடும்பம் அழிந்ததை விட இதுதான் முக்கியமான விஷயமாக படுகிறது, இது யாருக்கும் தெரியவில்லையே, தெரிந்தவர்களும் பொருட்படுத்தவில்லையே என்ற ஆவேசத்தில் இருக்கிறான். “தமிழறிஞர்” சபையில் அமைச்சர் முன்னால் எல்லாம் சுமுகமாக இருக்க வேண்டும், அமைச்சர் embarass ஆனால் தன் பதவிக் கனவு என்னாகுமோ என்ற பயத்தில் என்று போலீசை வைத்து அவனை அப்புறப்படுத்திவிடுகிறார்.

சுஜாதாவின் மிக சிறந்த சிறுகதைகளில் இதுவும் ஒன்று. இதற்கு அவர் வேறு வரிகளை – உதாரணமாக “சொந்த சகோதரர்கள் துன்பத்திற் சாதற்கண்டும் சிந்தை இரங்காரடி” சொல்லி இருக்கலாம். இந்த வரிகளில் உள்ள வஞ்சப் புகழ்ச்சிதான், sarcasm-தான் இந்த சிறுகதையை உயர்த்துகின்றன.

25-30 வருஷம் கழித்தும் இந்த கதை மறக்கவில்லை. ஏனென்றால் சுஜாதா ஸ்கூல் பையனுக்கு சொல்வது போல பார்த்தாயா இது எவ்வளவு பெரிய அநியாயம் என்று சொல்வதில்லை. சிங்களத் தீவுக்கு பாலம் என்று சொல்வதில் இருக்கும் sarcasm சுர்ரென்று உரைக்கிறது. அதே நேரத்தில் இது ஒரு propaganda கதைதான். இதில் இருப்பது art இல்லை, craft-தான். இந்த கதை எந்த தருணத்தை நோக்கி முன்னே போகிறதோ – அந்த தமிழறிஞரின் சுயநலம் – என்பது உங்களை ஐயோ என்று அலற வைக்கும் தருணம் இல்லை, மனிதனின் சுயநலம் இவ்வளவு கேவலமானதா என்று நம்மை நாமே வெறுக்கும் தருணமும் இல்லை. அலற வைக்கும் தருணம் நூலகம் எரிக்கப்பட்டதுதான். சாவுகளை கேட்டு மனம் மரத்து போயிருந்த காலம் அது. அப்போதெல்லாம் பேப்பரை திறந்தால் பஞ்சாபில் நாலு பேர் சாவு என்று செய்தி வராத நாளே கிடையாது. அந்த சமயத்தில் வேறொரு விதமான கொடுமை, உலக சரித்திரத்தில் மிக அபூர்வமாகவே நடந்திருக்கும் கொடுமை, உங்கள் கண் முன்னால் வைக்கப்படுகிறது. அந்தக் கட்டத்தில் அடப் பாவிகளா என்று மனதுக்குள் ஒரு கூக்குரல். இன்னும் ஓரிரு பக்கம் போனபின் அந்த தமிழறிஞரை பார்த்து அடச்சீ என்று ஒரு அருவருப்பு. பிறகு சிங்களத் தீவுக்கு பாலம் என்று சொல்லி இருக்கும் வரிகளை மீண்டும் ஒரு முறை நினைவு கூர்ந்து முகத்தில் ஒரு சுளிப்பு. மனதில் எழுந்த அந்த கூக்குரல் இந்த சிறுகதையின் பலம் மட்டுமல்ல, பலவீனமும் கூட. அது இந்த கதையின் க்ளைமாக்சைக் கூட dominate செய்கிறது.

படிக்க வேண்டிய கதை, மறக்கக் கூடாத துயரம் என்று சொல்லத் தோன்றுகிறது. படிக்க வேண்டிய கதை என்று நிறுத்தாமல் துயரத்தைப் பற்றியும் பேசுவதுதான் இந்த கதையின் தோல்வி. ஆனால் அதைத்தான் சுஜாதா விரும்பி இருக்க வேண்டும். இது எழுத்தாளனின் வெற்றி.

ஒரு லட்சம் புத்தகங்கள் எரிக்கப்பட்டன. நினைத்து பாருங்கள், இது நம் அனைவரின் செல்வம். எரித்தவனுக்கும் இந்த செல்வம் சொந்தம். எரித்ததால் அவனுக்கு எந்த லாபமும் இல்லை. லும்பத்தனம், அவ்வளவுதான்.

இன்று ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மனிதர்கள் இறந்திருப்பார்கள். இன்னும் சிந்தை இரங்காதவர்கள் அநேகம். அப்படி இறந்தவர்களை அந்த “அறிஞர்” போல சுய லாபத்துக்காக அரசியல் ஆக்கும் கும்பல்தான் இன்னும் தமிழ் நாட்டில் மலிந்து கிடக்கிறது.

தொடர்புடைய சுட்டிகள்:
சிறுகதையைப் படிக்க
உயிர்மையில் வந்த ஒரு கட்டுரை
இந்த கதையைப் பற்றி தமிழ் பேராசிரியர் அ. ராமசாமி
கொளுத்தப்பட்ட ஜாஃப்னா நூலகம்