கடந்த இருபது ஆண்டுகளின் முக்கிய தமிழ் படைப்புகள் – வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன் திண்ணை இணைய இதழில் இரண்டு வருஷத்துக்கு முன்பு ஒரு கட்டுரை (பாகம் 1, பாகம் 2, பாகம் 3) எழுதி இருக்கிறார். கடந்த இருபது வருஷங்களில் அவர் முக்கியமானவையாக நினைக்கும் புத்தகங்கள், எழுத்தாளர்கள் பற்றியும் இவற்றில் எழுதி இருக்கிறார். அந்த காலத்தில் இருந்த ஒழுக்கங்கள் இன்று கைவிடப்படுகின்றன என்று அலுத்தும் கொள்கிறார்.

அன்றைக்கிருந்தாப் போல இன்றைக்கில்லை என்பது எல்லா பெரிசுகளும் சொல்லும் குறைதான். இன்னும் 20 வருஷம் கழித்து நான் உயிரோடு இருந்தால் நானும் இப்படித்தான் பேசுவேன். ஆனால் காந்தியின் தாக்கம் கணிசமானவர்களை ஒழுக்கமானவர்களாக மாறியது என்றுதான் தோன்றுகிறது. இன்று காந்தியின் தாக்கம் மதுக் கடைகள் அவர் பிறந்த நாள் அன்று மூடப்படுவது மட்டும்தான். நம்முடைய ரோல் மாடல்கள் இன்று அம்பானியும், மாறன்களும், பில் கேட்சும், நாராயண மூர்த்திகளும், ப்ரேம்ஜிகளும், ரஜினிகாந்த்களும், விஜய்களும், அஜித்களும், டெண்டுல்கர்களும், தோணிகளும்தான். காந்தி, நேரு, காமராஜ், படேல், ராஜாஜி, வ.உ.சி. போன்றவர்கள் அல்ல. அதனால் நமது value system மாறித்தான் விட்டது.

சரி அதை விடுவோம். புத்தகங்கள், எழுத்தாளர்கள் பற்றி அவர் நிறைய எழுதி இருக்கிறார். அவற்றை பற்றி என் குறிப்புகள் கீழே.

முதல் பாகத்தில் அவர் குறைகள்தான் பெரிதாக இருக்கிறது. கடைசியில் சில பெயர்களை மட்டும் சொல்கிறார். அவர்களைப் பற்றிய விவரங்கள் அடுத்த இரண்டு பகுதிகளில் வருகின்றன. நேரடியாக சிபாரிசுகளைப் பற்றி படிக்க விரும்புபவர்கள் முதல் பாகத்தை தவிர்க்கலாம்.

இரண்டாம் பகுதியில் அவர் குறிப்பிடுபவர்களில் அ. முத்துலிங்கம் கொண்டாடப்பட வேண்டியவர். அவர் கதைகளை நான் ஓசியில் இணையத்தில்தான் படித்தேன். அசோகமித்ரனின் வாரிசு இவர்தான். ஆனால் அசோகமித்ரனை விட இவரது எழுத்துக்கள் கொஞ்சம் optimism உள்ளவை. பல கதைகளை படித்து புன்னகை வரும்.

ராஜமார்த்தாண்டனின் கொங்குதேர் வாழ்க்கை ஒரு சிறப்பான கவிதை தொகுப்பு என்று குறிப்பிட்டிருக்கிறார். நான் கவிதையை கண்டாலே ஓடுபவன். எங்கேயாவது ஓசியில் கிடைத்தால் புரட்டிப் பார்க்கலாம். சல்மா, உமாமகேஸ்வரி, மாலதி மைத்ரி, திலகபாமா ஆகியோரை முக்கியமான பெண், பெண்ணிய கவிஞர்கள் என்று குறிப்பிடுகிறார். நமக்கு கவிதையே ததிங்கிணத்தோம், பெண்ணியக் கவிதை என்றால் பேச்சு மூச்சே நின்றுவிடும்!

ஜெயமோகனின் விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல், ஏழாம் உலகம் ஆகிய நூல்களை சிலாகிக்கிறார். நான் காடு என்ற புத்தகத்தையும் இந்த லிஸ்டில் சேர்த்துக் கொள்வேன். என் கருத்தில் ஜெயமோகன் நோபல் பரிசு வாங்கும் தரத்தில் எழுதுகிறார். ஆழமாகவும், அதே சமயத்தில் விரிவாகவும் எழுதுகிறார். Deep and wide. பேய் பிடித்தவன் போல் எழுதுகிறார். ஒரு வருஷத்துக்கு 2000-3000 பக்கங்கள் எழுதுவார் போலிருக்கிறது. நானும் எழுத முயற்சித்தேன், ஒரு பக்கம் எழுதவே எனக்கு ஒரு வாரம் ஆகிறது. 😦 ஜெயமோகனின் விமர்சனங்களும் முக்கியமானவை.

வெ.சா. ஜெயமோகனை புதுமைப்பித்தனுக்கு இணையான சாதனை என்கிறார். என் கண்ணிலும் ஜெயமோகன் ஜீனியஸ்தான், ஆனால் புதுமைப்பித்தன் இன்னும் கொஞ்சூண்டு மேலே நிற்கிறார். 🙂 இவர்கள் இருவர், மற்றும் அசோகமித்ரன் ஆகியோரே தமிழ் எழுத்தாளர்களில் (என் கண்ணில்) ஜீனியஸ்கள்.

எம். கோபாலகிருஷ்ணன் எழுதிய மணல் கடிகை ஒரு புது உலகத்தை நம் முன் வைக்கிறது என்று சொல்கிறார். நான் படித்ததில்லை. சூத்ரதாரி என்ற பேரில் எழுதுபவரும் கோபாலகிருஷ்ணன்தானோ?

ஜோ டி குருசின் ஆழிசூழ் உலகு பற்றி சிலாகித்து சொல்கிறார். இந்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன். அருமையான புத்தகம் என்று ஒரு நூறு பக்கம் படித்ததும் தெரிந்தது. ஆனால் ஒரு பக்கம் வைத்துவிட்டேன். சில சமயம் இப்படி ஆகிவிடுகிறது.

பெருமாள் முருகன் கவுண்டர்-தலித் பற்றி உண்மையாக எழுதுவதாக குறிப்பிடுகிறார். நான் நிழல் முற்றம் மட்டுமே படித்திருக்கிறேன். திருச்செங்கோடு மாதிரி ஒரு சிறு நகரத்தில் இருக்கும் ஒரு தியேட்டரை பின்புலமாக வைத்து எழுதப்பட்ட மிக நல்ல நாவல். ஏழாம் உலகம் அளவுக்கு தாக்காவிட்டாலும், இந்த நாவல் சித்தரிக்கும் விளிம்பு நிலை மனிதர்கள் நிஜமாகத்தான் தெரிகிறார்கள்.

பி.ஏ.கிருஷ்ணனின் புலிநகக்கொன்றை பற்றி குறிப்பிடுகிறார். மிக அருமையான புத்தகம். லா.ச.ராவின் பாற்கடலுக்கு பிறகு குடும்ப உறவுகளை வைத்து இவ்வளவு அருமையான autobiographical நாவல் படித்ததில்லை. இதைப் போலத்தான் எனக்கும் ஒரு புத்தகம் எழுத ஆசை.

மேலும் கண்மணி குணசேகரனின் அஞ்சலை, யூமா. வாசுகியின் ரத்த உறவு இரண்டையும் சிலாகிக்கிறார். நான் படித்ததில்லை. படித்தவர்கள் யாராவது இருந்தால் உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்!

மூன்றாவது பகுதியில் அவர் குறிப்பிடுபவர்கள் தோப்பில் முகம்மது மீரான், சல்மா (இரண்டாம் ஜாமங்களின் கதை), இமையம் (செடல், கோவேறு கழுதைகள்), சோ. தர்மன்(கூகை, தூர்வை), பாமா (கருக்கு) மற்றும் தேவகாந்தன். ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் போன்றவர்கள் சினிமாவில் நுழைந்திருப்பது நல்ல விஷயம் என்று குறிப்பிடுகிறார். அதே நேரத்தில் சுஜாதா போன்ற அறிவாளிகளும் சினிமா என்ற கடலில் அடையாளம் தெரிவதில்லை என்பதையும் சொல்கிறார். ஜெயகாந்தன் மட்டுமே தான் தானாகவே இருந்த எழுத்தாளராம். எனக்கு உன்னைப் போல் ஒருவன் பார்க்க மிகவும் ஆசையாக இருக்கிறது. பிரிண்ட் இருக்கிறதோ இல்லையோ?

மீரானின் ஒரு கடலோர கிராமத்தின் கதை மட்டுமே நான் படித்திருக்கிறேன். நல்ல புத்தகம். மீரான், சல்மா இருவரும் எப்படி தங்கள் மதக் கட்டுகளை கொஞ்சம் தாண்டி வந்து எழுதுகிறார்கள் என்று வியக்கிறார்.

இமையம், சோ. தர்மன், பாமா ஆகியோரை முக்கியமான தலித்திய எழுத்தாளர்களாக கருதுகிறார். நான் படித்திருப்பது பாமாவின் வன்மம் மட்டுமே. அருமையான நாவல். பள்ளர் பறையர் உப ஜாதிகளுக்கு இடையே உள்ள தகராறுகளை பற்றி எழுதி இருக்கிறார்.

கனடாவின் தேவகாந்தன் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களின் வாழ்க்கையை ஒரு ஆவணம் போன்ற நாவலாக எழுதி இருக்கிறாராம். பேர் என்ன என்று சொல்லவில்லை. யாருக்காவது தெரியுமா?

முதல் பகுதியில் அவர் குறிப்பிடும் பிற எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், சுப்ரபாரதிமணியன், யுவன் சந்திரசேகர் ஆகியோர்தான். எஸ். ரா.வைக் காணோம்.

சமீபத்தில்தான் நாஞ்சிலின் சிறுகதைத் தொகுதி ஒன்றைப் படித்தேன். இன்னும் எழுத கைவரவில்லை.

சுப்ரபாரதிமணியனை நான் கிட்டத்தட்ட இருபது வருஷங்களுக்கு முன் சந்தித்திருக்கிறேன். அருமையான மனிதர். அவருடைய “அப்பா” என்ற சிறுகதைத் தொகுதியை நான் மிகவும் ரசித்தேன்.

யுவன் சந்திரசேகரின் ஒளி விலகல் புத்தகம் அபாரமான புத்தகம். விக்ரமாதித்தன் கதை பாணியை வைத்துக் கொண்டு இவ்வளவு அருமையாக எழுத முடியுமா? வேறு புத்தகங்கள் இல்லை, என்றாவது வாங்கி படிக்க வேண்டும்.

ஜான் கார்லினின் “ப்ளேயிங் தி எனிமி”

ஒரு தலைவனால் என்ன கிழித்துவிட முடியும்? எந்த ஒரு நாட்டையும் எடுத்துக் கொள்ளுங்கள், இருக்கும் பிரச்சினைகள் அநேகம். எந்த ஒரு தனி மனிதனாலும் தீர்க்கக்கூடியதில்லை இந்த பிரச்சினைகள். அப்படி இருக்க நாம் ஏன் ஒரு தலைவனை தேடுகிறோம்?

எந்த நல்ல தலைவனாலும் செய்யக் கூடியது ஒன்றுதான். பிரச்சினைகளை நாமே தீர்த்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தமுடியும். காலம் காலமாக நடந்து வரும் அநியாயங்களை உணர்த்த முடியும். அநியாயங்களுக்கு எதிராக போராடுவதில் long term vision கொண்டுவர முடியும். அவ்வளவுதான். இவை அனைத்தையும் ஒரு symbolic லெவலில்தான் செய்யமுடியும்.

காந்தி அதைத்தான் செய்தார். ஜாதி என்ற பேரில் நடந்த அடக்குமுறையை கண்டிக்க தானே மலம் வாரிப் போட்டார். தன் மனைவியை அப்படி செய்ய கட்டாயப்படுத்தினார். உப்பு என்னங்க பெரிய விஷயம்? எத்தனை பேர் உப்பு எடுத்திருப்பார்கள்? அரசு அதை உதாசீனப்படுத்தி இருந்தால் காந்தியின் நோக்கம் நிறைவேறி இருக்குமா?

நெல்சன் மண்டேலாவும் அதைத்தான் செய்திருக்கிறார். அவரது அணுகுமுறையை விளக்கி எழுதப்பட்ட புத்தகம்தான் John Carlin எழுதிய Playing the Enemy.

மண்டேலா எப்போதுமே வன்முறையை ஒதுக்கியவர் இல்லை. ஆஃப்பிரிக்க தேசிய காங்கிரசின் (African National Congress – ANC) ஆயுதம் தாங்கிய அமைப்பை அவர்தான் உருவாக்கினார். அதனால்தான் அவர் ஜெயிலுக்கு போக நேர்ந்ததே. இருபத்தேழு வருஷம் ஜெயில். அரசோடு பேச்சுவார்த்தை நடத்திய கடைசி சில வருஷங்களைத் தவிர மிச்ச நாளெல்லாம் சின்ன ரூம், இல்லாவிட்டால் தனிமைச்சிறை, கடின உழைப்பு என்றுதான் வாழ்க்கை.

ஆனால் அரசு பேச்சுவார்த்தை நடத்த ஆரம்பித்த காலத்திலிருந்தே அவர் மனதில் ஒரு விஷயம் உறுதியாக இருந்திருக்கிறது. அதிகாரம் எண்ணிக்கை அதிகமான கறுப்பு ஆப்ரிக்கர்களிடம் மாறுவது வெள்ளை ஆப்ரிக்கானர்களை பழிவாங்க கிடைத்த லைசன்ஸ் இல்லை என்று தெளிவாக இருந்திருக்கிறார். தென்னாப்ரிக்கா எல்லாருக்கும் சொந்தமானது, அங்கே அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும், அதற்காக தேவைப்பட்டால் கறுப்பர்கள் விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் எப்படி உருவானது என்று தெரியவில்லை, ஆனால் உருவாகி இருக்கிறது.

அதே நேரத்தில் அவருக்கு தன் எண்ணம் பெரும்பான்மை கறுப்பர்களால் ஏற்க முடியாதது என்று தெரிந்திருக்கிறது. மெதுவாக மெதுவாகத்தான் தன் கருத்தை வலியுறுத்தி இருக்கிறார். இதற்காக அவர் தேர்ந்தெடுத்த symbol ரக்பி.

ரக்பி அன்றைக்கு பெரும்பாலும் வெள்ளை ஆஃப்ரிக்கானர்களால் விளையாடப்பட்டது. இந்தியர்களுக்கு கிரிக்கெட் எப்படியோ அப்படித்தான் அவர்களுக்கு ரக்பி. பிற நாடுகளை எதிர்த்து விளையாடும்போதெல்லாம் கொடியை ஆட்டி தேசிய கீதம் பாடி கும்மாளம் போடுவார்கள். Apartheid கொள்கையால் பல வருஷங்களாக பிற நாடுகளுடன் விளையாட முடியாத நிலை. பிற நாடுகளுடன் விளையாடக்கூடாது என்று மும்முரமாக கறுப்பர்கள் போராடினார்கள்.கறுப்பர்களுக்கு ரக்பி அடக்குமுறையின் சின்னம். ரக்பி விளையாட்டு, பழைய தென்னாப்பரிக்க கொடி, பழைய தென்னாப்பரிக்க தேசிய கீதம், ரக்பி டீமை ஸ்ப்ரிங்பாக் என்று அழைப்பது இவை எல்லாமே பெரும்பான்மை கறுப்பர்களுக்கு கடுப்பேற்றுபவை.

புதிய அரசியல் சட்டம் உருவாகிவிட்டது. முதல் முறையாக எல்லாரும் ஓட்டு போடும் தேர்தல். மண்டேலா நாட்டின் அதிபர் ஆகிவிட்டார். கொடியை மாற்ற வேண்டும் என்று பெரும்பான்மை கறுப்பர்கள் கிளம்பினார்கள். கொடி மாற்றப்பட்டது. பழைய கொடியோடு, ANC-யின் கொடியை சேர்த்து ஒரு கொடி.

தேசிய கீதம் மாற்றப்பட வேண்டும் என்று ஒரு போராட்டம். மண்டேலா பழைய தேசிய கீதம் தேசிய கீதமாக தொடரும், புதிதாக ந்கொசி சிகொலேலே என்ற கறுப்பர்கள் வந்தேமாதரம் போல பாடிக்கொண்டிருந்த பாட்டும் தேசிய கீதமாகும், இரண்டுமே எல்லா நிகழ்ச்சிகளிலும் பாடப்படும் என்று அறிவித்தார். நூற்றுக்கு தொண்ணூறு வெள்ளையர்களுக்கு இந்த புதிய தேசிய கீதத்துக்கு வார்த்தைகள் தெரியாது.

ஸ்ப்ரிங்பாக் பேரை மாற்ற மண்டேலா ஒத்துக்கொள்ளவில்லை.

ரக்பி உலகக் கோப்பை தென்னாப்ரிக்காவில் நடக்க இருக்கிறது. ஃபிரான்ஸ்வா பீனார் (Francois Pienaar) அப்போதைய ரக்பி கேப்டன். மண்டேலா அவரை அழைத்துப் பேசுகிறார்.

வெள்ளையர்களுக்கு ஆச்சரியம். எப்படி ரக்பியை, இத்தனை நாள் எதிர்த்த ஒரு விளையாட்டை, கறுப்பர்களுக்கு ஒரு உணர்ச்சிபூர்வமான தொடர்பு இல்லாத விளையாட்டை, தங்களுக்கு விட்டுத் தருகிறார்கள்? மெதுவாக மெதுவாக அவர்கள் மண்டேலாவும் பெரும்பான்மை கருப்பர்களும் தங்களை பழி வாங்கத் துடிக்கவில்லை என்று உணர்கிறார்கள். கருப்பர்களோ மண்டேலா தரும் அழுத்தத்தால் ரக்பியோடு மேலும் மேலும் ஒன்றுகிரார்கள்.

மண்டேலா திட்டமிட்டு சின்ன சின்ன காரியங்கள் மூலம் ஊக்கம் தருகிறார். ஒரு காலத்தில் நானும் ரக்பியை எதிர்த்தவந்தான், ஆனால் இன்றைக்கு ரக்பி விளையாடுபவர்கள் என் தேசத்து மக்கள் என்று பேட்டி கொடுக்கிறார். விளையாட்டுக்கு முன்பு பயிற்சி முகாமுக்கு போய் ரக்பி வீரர்களை சந்திக்கிறார். முதல் ஆட்டத்தை உட்கார்ந்து பார்க்கிறார்.

ஆனால் அன்றைக்கு தென்னாப்பரிக்கா அவ்வளவு வலிமையான டீம் இல்லை. நியூசிலாந்துதான் வலிமையான டீம். அவர்கள்தான் வெல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியோ கடுமையாக போராடி தென்னாப்பரிக்கா இறுதி ஆட்டத்துக்கு வருகிறது. நியூசிலாந்தோடு விளையாட வேண்டும். கோப்பையை வென்றால் அது தென்னாப்ப்ரிக்காவை ஒன்றாக இணைக்கும், நிற வேறுபாடுகள், பழைய அநீதிகள் அனேகமாக மறக்கப்படும் என்பதை மண்டேலா உணர்ந்திருக்கிறார்.

ரக்பி டீம் மண்டேலாவை அடைத்து வைத்திருந்த சிறை அறையைப் போய் பார்க்கிறது. பத்தடிக்கு பத்தடி கூட இல்லாத அறை. பீனார் எப்படி இந்த அறையில் பதினைந்து இருபது வருஷம் தங்கி இருந்த மனிதரால் வெள்ளையர்களை மன்னிக்க முடிகிறது என்று திகைக்கிறார்.

மண்டேலா இறுதி ஆட்டத்தை பார்க்கப் போகிறார். அவர் போட்டிருப்பது பீனாரின் நம்பர் உள்ள பச்சை மற்றும் தங்க நிற ஜெர்சி. அவர் தலையில் ஸ்ப்ரிங்பாக் தொப்பியை அணிந்திருக்கிறார். பயிற்சி அறைக்கு எதிர்பாரதவிதமாக போய் டீமை உற்சாகப்படுத்துகிறார். ஆட்டத்தைப் பார்க்க வந்த வெள்ளையர்கள் “நெல்சன்! நெல்சன்!” என்று கூவுகிறார்கள். நாடு முழுவதும் கறுப்பர்கள் டிவி முன் உட்கார்ந்திருக்கிறார்கள்.


ரக்பி டீம் முதல் முறையாக ந்கொசி சிகொலேலே என்று புதிய தேசிய கீதத்தை பாடுகிறது. கேப்டன் பீனாருக்கு கண்ணீர், அவரால் வாயைத் திறந்து பாடமுடியவில்லை.

தென்னாப்பிரிக்க டீமுக்கு புதிய பலம் பிறந்திருக்கிறது. விடாகண்டன் கொடாக்கண்டனாக இரண்டு டீமும் மோதுகின்றன. கடைசியில் தென்னாப்ரிக்கா வெல்கிறது. கறுப்பர்களும் வெள்ளையர்களும் வித்தியாசங்களை மறந்து ஒரே நாட்டு மனிதர்கள் ஆகிறார்கள். புதிய தென்னாப்ரிக்கா பிறக்கிறது என்றே சொல்லலாம்.

ஜான் கார்லின் இந்த நிகழ்ச்சிகளை அருமையாக எழுதி இருக்கிறார். புத்தகத்தின் excitement என் வார்த்தைகளில் வராமல் இருக்கலாம், அது கார்லினின் தவறு இல்லை. கட்டாயம் படியுங்கள். வித்தியாசங்களை, அநீதிகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று மண்டேலா செய்து காட்டி இருக்கிறார்.

புத்தகம் சிறப்பாக இருக்கிறது. ஆனால் திரைப்படம் இதை விட பிரமாதம். Invictus என்று இது திரைப்படமாக வந்திருக்கிறது. மார்கன் ஃப்ரீமன் (Morgan Freeman) மண்டேலாவாக நடித்திருக்கிறார். மாட் டேமன் (Matt Damon ) பீனாராக. கிளின்ட் ஈஸ்ட்வுட் (Clint Eastwood) இயக்கம். புத்தகத்தை படிக்க சோம்பேறித்தனப்படுபவர்களும் திரைப்படத்தையாவது பாருங்கள்.

திரைப்படத்தில் மண்டேலா தன் இருண்ட நாட்களில் ஒரு கவிதை – வில்லியம் ஹென்லி எழுதிய இன்விக்டஸ் – தனக்கு புத்துணர்ச்சி தந்தது என்று சொல்வார். அதை பீனாருக்கும் எழுதி கொடுப்பார். என்னைக் கூட அந்த கவிதை கவர்ந்தது. (எனக்கும் இப்போது இருண்ட நாட்கள்தான்.)

Out of the night that covers me,
Black as the pit from pole to pole,
I thank whatever gods may be
For my unconquerable soul.
In the fell clutch of circumstance
I have not winced nor cried aloud.
Under the bludgeonings of chance
My head is bloody, but unbowed.
Beyond this place of wrath and tears
Looms but the Horror of the shade,
And yet the menace of the years
Finds, and shall find, me unafraid.
It matters not how strait the gate,
How charged with punishments the scroll,
I am the master of my fate:
I am the captain of my soul.

ஏசுவின் தோழர்கள்

எனக்கு பொதுவாக இந்திரா பார்த்தசாரதி அவ்வளவாக பிடிப்பதில்லை. எல்லாரும் பேசிக் கொண்டே இருப்பார்கள். அதுவும் ஆங்கிலத்தில் அதிகமாக பேசுவார்கள். ஜெயகாந்தனைப் பற்றியும் எனக்கு இப்படி ஒரு நினைப்பு உண்டு. ஆனால் ஜேகேயின் படைப்புகளில் ஒரு அழுத்தமான நீதி, கொள்கை ஏதாவது இருக்கும். இ.பா.வின் படைப்புகளிலோ அங்கதம்தான் அடித்தளம். அவரது அங்கதம் எனக்கு புன்முறுவலைக் கூட வரவழைப்பதில்லை, அதுதான் பிரச்சினை. அதனால்தான் அவரது எந்த படைப்புமே எனக்கு நினைவில் வைத்துக் கொள்ளக் கூடியதாக இல்லை. அவரது புகழ் பெற்ற குருதிப்புனல் (கீழ்வெண்மணி சம்பவத்தை பின்புலமாக வைத்து எழுதப்பட்டது) கூட எனக்கு பிரமாதம் என்று படவில்லை.ஏசுவின் தோழர்களும் அப்படித்தான். பிரமாதம் என்று சொல்வதற்கில்லை.

கும்பகோணத்து பிராமணப் பையன் படித்து ஒரு போலந்துப் பெண்ணை மணமுடித்து போலந்திலேயே செட்டில் ஆகிவிடுகிறான். குடும்பமே வழக்கம் போல அறிவுஜீவி. மனைவிக்கு இந்தியாவில் ஏற்பட்ட ஒரு கசப்பான சம்பவத்தால் தன் இந்திய வேர்களை அறுக்கும் முயற்சியில் இருக்கிறார். அவரது மகள் ஆஷா இந்தியாவுக்கு திரும்பி தன் உறவினர்களை பார்க்கப் போகிறாள். அப்பா படிக்க, முன்னேற உதவி செய்த அத்தையை தன் அப்பா அம்போ என்று கைவிட்டதும், இன்று தன்னுடைய அத்தை பெண் விபசாரம் செய்து குடும்பத்தை நடத்துவதும் தெரிகிறது. கசின் ஆஷாவை நிராகரித்தாலும் அத்தை முழு மனதோடு ஆஷாவை ஏற்கிறாள். ஆஷாவுக்கு ஒரு குங்குமச் சிமிழை பரிசாகத் தருகிறாள். ஆஷா திரும்பிப் போய் அப்பாவிடம் விஷயத்தை சொன்னதும் அப்பா குற்ற உணர்ச்சியில் இறக்கிறார்.

கதை எனக்கு பெரிதாக தேறவில்லை. இப்படி நடக்காது என்று சொல்ல வரவில்லை, ஆனால் எல்லாம் கொஞ்சம் மெலோட்ராமாவாக இருக்கிறது – குறிப்பாக அத்தையின் பெண் விபசாரம் செய்துதான் பிழைக்க வேண்டி இருக்கிறது என்ற நிலை. அங்கங்கே தெரியும் அங்கதமும் கொஞ்சம் forced ஆக இருக்கிறது. உதாரணமாக போலந்தில் விவாகரத்து ஆன பிறகும் கணவன் மனைவி வீடு பற்றாகுறையால் ஒரே வீட்டில் இருக்க வேண்டிய நிலையை விவரிப்பது.

90 ரூபாய் விலையில் கிழக்கு தளத்தில் வாங்கலாம்.

தவிர்க்கலாம். பிறகு எதற்கு இந்த பதிவு என்கிறீர்களா? ஏசுவின் தோழர்கள் நான் ஃப்ரீமான்ட் நூலகத்துக்கு நன்கொடையாக கொடுத்த புத்தகங்களில் ஒன்று. சான் ஃப்ரான்சிஸ்கோ அருகே இருந்தால் நீங்கள் சுலபமாக படிக்கலாம். நூலகத்துக்கு நன்கொடை கொடுத்தது பெரிய கதை. அதை இன்னொரு நாள் விபரமாக எழுதுகிறேன்.

ஜீவியின் “மறம்”

நண்பர் ஜீவி வாரப் பத்திரிகை எழுத்தாளர்கள் உள்ளிட்ட பல எழுத்தாளர்களின் பெரிய விசிறி. வணிக எழுத்துக்கு ஆதரவாக தன் கருத்துகளை மறம் என்ற கொஞ்சம் நீளமான கதையில் (பகுதி 1, பகுதி 2, பகுதி 3, பகுதி 4) சொல்லி இருக்கிறார். உண்மையில் இது கட்டுரைதான், கதை என்ற போர்வை போர்த்தி இருக்கிறார்.

நான் ஜீவியின் கருத்துகளை முழுமையாக ஏற்கவில்லை. அவருக்கு வணிக, வாரப் பத்திரிகை எழுத்து என்றால் கல்கியும் தேவனும் நா.பா.வும் அகிலனும் லக்ஷ்மியும் அனுத்தமாவும் நினைவு வருகிறார்கள். எனக்கு சுஜாதாவும் புஷ்பா தங்கதுரையும் சாண்டில்யனும் சிவசங்கரியும் பாலகுமாரனும் நினைவு வருகிறார்கள். எங்கள் தலைமுறைகள் வேறு. என் லிஸ்டில் சிவசங்கரியைத் தவிர்த்த அனைவரும் காமம் என்பதை வாசகர்களை கவரும் ஒரு உத்தியாக பயன்படுத்தினார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. புஷ்பா தங்கதுரையை என் பதின்ம பருவத்தில் விரும்பிப் படிக்க ஒரே காரணம் செக்ஸ் வருணனைகள்தான்.

ஆனால் அர்ப்பணிப்புடன் எழுதியவர்கள் உண்டு என்பதையும் மறுப்பதற்கில்லை. நா.பா. ஒரு நல்ல உதாரணம்.

கதை என்ற விதத்தில் தோல்விதான் என்றாலும் அவரது வாதங்களுக்காக படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

படுகை – ஜெயமோகன்


ஜெயமோகனின் படுகை சிறுகதையை அழியாச்சுடர்கள் ராம் பதித்திருக்கிறார். எனக்கு பிடித்த சிறுகதைகளில் ஒன்று.

நான் தொன்மங்களை விரும்புபவன். எந்த மொழி, எந்த பண்பாடு என்றாலும் அதன் தொன்மங்கள்தான் என்னை ஈர்க்கின்றன. இப்படி தொன்மம் உருவாகும் ஒரு கதையை எழுத வேண்டும் என்று ஆசை, மனதில் இருக்கும் கதை தொண்டைக்குள் மாட்டிக்கொண்ட உணவுத் துணுக்கு மாதிரி சரியாக உருவாகவும் மாட்டேன் என்கிறது, துப்பிவிடவும் முடியவில்லை.

மிஸ் செய்யாதீர்கள்.

சமீபத்தில் ஜெயமோகன் தளத்திலும் பதிக்கப்பட்டிருக்கிறது.

எழுத்தாளர் கந்தர்வனின் டாப் டென் தமிழ் நாவல்கள்

  1. மோகமுள் – தி. ஜானகிராமன் மிக அருமையான புத்தகம். அந்த கால கும்பகோணத்தின் தூசியை இதன் பக்கங்களில் சுவாசிக்கலாம்.
  2. தலைமுறைகள் – நீல. பத்மநாபன்
  3. சாயாவனம் – சா. கந்தசாமி சிறு வயதிலேயே என்னை கவர்ந்த இலக்கியத்தரம் வாய்ந்த புத்தகம்.
  4. மலரும் சருகும் – டி. செல்வராஜ் படித்ததில்லை.
  5. கோபல்ல கிராமம் – கி. ராஜநாராயணன் மிக அருமையான புத்தகம். ராஜநாராயணனின் பல புத்தகங்கள் அருமையானவை.
  6. கடல்புரத்தில் – வண்ணநிலவன் படிக்கலாம், ஆனால் எல்லாரையும் போல் நான் இந்த புத்தகத்தை சிலாகித்து சொல்ல மாட்டேன்.
  7. கீறல்கள் – ஐசக் அருமைராஜன் கேள்விப்பட்டதே இல்லை.
  8. புத்தம் வீடு – ஹெப்சியா ஜேசுதாஸன் நல்ல புத்தகம்.
  9. பொய்த்தேவு – க.நா. சுப்ரமணியம்
  10. கோவேறுகழுதைகள் – இமையம் படித்ததில்லை.

க.நா.சு. பற்றி பாரதிமணி

ஒரு பழைய கட்டுரைக்கு சுட்டி. கட்டுரை பழையதாக இருந்தாலும் சுவாரசியமானது. முன்பு கூட்டாஞ்சோறு தளத்திலும் லிங்க் கொடுத்திருந்தேன்.

க.நா. சுப்ரமண்யம் நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கிய பங்களிப்பாளர்களில் ஒருவர். படிப்பது, எழுதுவது தவிர வேறு எதுவும் செய்யாதவர். அவரது பொய்த்தேவு மிக அருமையான நாவல். அவரது படித்திருக்கிறீர்களா? எனக்கு பர்சனலாக மிக முக்கியமான படைப்பு – நல்ல தமிழ் படைப்புகளைப் பற்றி எனக்கு சொன்ன முதல் புத்தகம் அதுதான்.

பாரதிமணி க.நா.சு.வின் மாப்பிள்ளை. பாரதி திரைப்படத்தில் பாரதியின் அப்பா சின்னச்சாமியாக நடித்தவர். அவர் க.நா.சு.வை நினைவு கூரும் பதிவு ஒன்று இட்லிவடை தளத்தில் இருக்கிறது. கட்டாயமாக படியுங்கள்!

தொடர்புடைய பதிவுகள்
பொய்த்தேவு
படித்திருக்கிறீர்களா?

சா. கந்தசாமியின் டாப் டென் தமிழ் நாவல்கள்

சா. கந்தசாமியின் சாயாவனம் என் சிறு வயதில் அம்மா, அப்பா, நான் எல்லாரும் பல முறை விரும்பி படித்த புத்தகம். என் சிறு வயதிலேயே என்னை கவர்ந்த இலக்கியத்தரம் வாய்ந்த புத்தகம் அதுதான் என்று நினைக்கிறேன். மாற்றம் என்றால் என்ன என்பதை மிகவும் ஆக சுட்டி இருப்பார்.

அவருக்குப் பிடித்த டாப் டென் தமிழ் நாவல்களை இங்கே பட்டியல் இடுகிறார்.

  1. பிரதாப முதலியார் சரித்திரம் – மாயூரம் வேதநாயகம் பிள்ளை தமிழின் முதல் நாவல் என்பதால் இது பலரால் சிபார்சு செய்யப்படுகிறது. என் கருத்தில் இது படிக்கப்பட வேண்டியது இல்லை. கொஞ்சம் போரடிக்கும்.
  2. நாகம்மாள் – ஆர். சண்முகசுந்தரம் க.நா.சு. படித்திருக்கிறீர்களா புத்தகத்தில் குறிப்பிட்ட நாவல். எனக்கு ஏமாற்றம்தான்.
  3. ஒரு நாள் – க.நா. சுப்பிரமணியம் இன்னும் தேடிக் கொண்டிருக்கிறேன்.
  4. வாசவேஸ்வரம் – கிருத்திகா கிருத்திகா இரண்டு வருஷத்துக்கு முன்தான் மறைந்தார். புத்தகத்தை இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்.
  5. 18ஆவது அட்சக்கோடு – அசோகமித்திரன் அசோகமித்திரன் மிக subtle ஆன ஆசிரியர். இந்த புத்தகம் எனக்கு too subtle. அவரது தண்ணீர், மானசரோவர், கரைந்த நிழல்கள் போன்ற புத்தகங்களை சிபாரிசு செய்கிறேன்.

  6. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் – ஜெயகாந்தன் எனக்கு பிடித்த புத்தகங்களில் ஒன்று.
  7. பள்ளிகொண்டபுரம் – நீல. பத்மநாபன் படித்ததில்லை.
  8. அவன் ஆனது – சா. கந்தசாமி படித்ததில்லை.
  9. வானம் வசப்படும் – பிரபஞ்சன் படிக்கலாம், ஆனால் எனக்கு இந்த புத்தகம் நினைவு வைத்துக்கொள்ள வேண்டிய புத்தகம் இல்லை.
  10. ரப்பர் – ஜெயமோகன் ஜெயமோகனின் முதல் நாவல். அவரது potential நன்றாக தெரியும், ஆனால் அவர் எழுத்தாளராக இன்னும் பல படிகள் ஏறிவிட்டார். இதை விட பின் தொடரும் நிழலின் குரல், விஷ்ணுபுரம், காடு, ஏழாம் உலகம் போன்ற புத்தகங்களை நான் சிபாரிசு செய்கிறேன்.

என்ன ஆச்சரியம், தி.ஜா., கி.ரா., சுரா ஆகியோரைக் காணோம்.

ஜெயமோகன் தனக்கு பிடித்த நாவல் லிஸ்டில் தான் எழுதியவற்றை சேர்த்ததற்கு இன்னமும் திட்டு வாங்கிக் கொண்டிருக்கிறார். இங்கே கந்தசாமியும் தன் புத்தகத்தை டாப் டென் லிஸ்டில் சேர்த்திருக்கிறார், யார் கண்ணிலும் படவில்லை. (சா. கந்தசாமி “நல்லா இருப்பா!” என்று சொல்வது கேட்கிறது) ஜெயமோகன் ஒரு வசை காந்தம்தான்!

ஜெயமோகனுடன் கொஞ்ச நேரம்

சமீபத்தில் ஜெயமோகன் எழுதிய சில கதைகளைப் படித்துவிட்டு மீண்டும் மீண்டும் அந்தக் கதைகளேதான் மனதில் ஓடிக் கொண்டிருக்கின்றன. என்னை விடுங்கள், என் பனிரண்டு வயதுப் பெண்ணுக்கு வணங்கான் என்ற கதையை (பகுதி 1, பகுதி 2) சொல்ல ஆரம்பித்தேன், அவள் ஹோம்வொர்க் பண்ணமாட்டேன் கதையை சொல் என்கிறாள். அவளுக்கு ஜாதி என்றால் என்ன என்று சரியாகத் தெரியாது, அவளையே கதை கட்டிப் போடுகிறது. (மொழிபெயர்த்து தருகிறேன், நீயே படித்துக் கொள் என்று கொஞ்சம் அடக்கி வைத்திருக்கிறேன்.)

ஜெயமோகன் எழுத்தில் மட்டுமல்ல, பேச்சிலும் பிஸ்தாதான். அவர் அமெரிக்கா வந்தபோது அவரை சில சமயம் சந்திக்க முடிந்தது. சுவாரசியமான, எதிரில் இருப்பவர் லெவலில் பேசும், அதே நேரத்தில் அவர்களை patronize செய்யாமல் பேசுபவர். (ஆண்டன் செகாவும் இப்படிப்பட்ட குணம் உடையவர் என்று படித்திருக்கிறேன்.) அப்போது எழுதிய பதிவை மீண்டும் மீள்பதித்திருக்கிறேன்.

ஜெயமோகன் ஃப்ரீமாண்டுக்கு வருகிறார் என்று தெரிந்தபோது அவரை சந்திக்கப் போவதா வேண்டாமா என்று எனக்கு இரண்டு மனதாக இருந்தது. காரணம் ரொம்ப சிம்பிள் – அவருடன் என்னத்தை பேசுவது? அவரிடம் எனக்கு விஷ்ணுபுரம், பி.தொ.நி. குரல், காடு போன்ற புத்தகங்கள் பெரும் சாதனைகளாக தெரிகின்றன என்று சொல்லலாம். அது அவருக்கு தெரியாமலா இருக்கும்? எனக்கு கன்யாகுமரி பிடிக்கவில்லை என்று சொல்லலாம் – அது அவ்வளவு மரியாதையாக இருக்குமா? வயதாக ஆக புதியவர்களுடன் small talk தவிர வேறு எதுவும் சாத்தியம் இல்லாமல் போகிறது.

அவரை சந்திக்க முக்கியமான காரணம் என் மனைவிதான். ஹேமா திருப்பி திருப்பி சொன்னாள் – அவர் புத்தகங்களை பற்றி நிறைய எழுதுகிறார், உங்களுக்கும் புத்தகப் பித்து அதிகம், போய்ப் பாருங்களேன் என்று ஹேமா கொடுத்த ப்ரெஷரில்தான் நான் அவரை சந்திக்க போனேன்.

நடுத்தர உயரம், பருமன். தலையில் இன்னும் நிறைய கருப்பு முடியும் கொஞ்சம் நரையும் இருக்கிறது, ஆனால் பின் தலையில் வழுக்கை லேசாக தெரிகிறது. (நான் புதிதாக யாரைப் பார்த்தாலும் முதலில் தலையில் எவ்வளவு முடி இருக்கிறது என்று கவனிப்பேன். சொந்தக் கதை சோகக் கதை) மீசையை எடுத்த பிறகு இன்னும் இளமையாக தெரிகிறார். மலையாள accent உள்ள பேச்சு – Condemborary என்றால் Contemporary என்று அர்த்தம். நாஞ்சில் நாட்டு பேச்சு அவ்வப்போது வருகிறது – சொல்லுதேன் என்பார்.

தங்கு தடையில்லாத பேச்சு. சொல்ல வரும் விஷயம் சாதாரண பேச்சில் கூட பல வருஷம் யோசித்து வைத்தது போல் செறிவாகவும், திட்டவட்டமாகவும் வந்து விழுகிறது. அடுத்தவர்கள் பேச்சை கவனிக்கிறார், பதில் சொல்கிறார் ஆனால் பெரும்பாலும் நடப்பது உரையாடல் இல்லை, லெக்சர்தான். ஒரு ப்ரொஃபஸர் – மாணவர்களோடு நன்றாக கலந்து பேசுபவர் – க்ளாஸ் எடுக்கிற மாதிரித்தான். அது பாந்தமாகவும் இருக்கிறது. ஏனென்றால் மனிதர் படித்திருப்பது நிறைய. வாழ்க்கை அனுபவங்கள் மூலமும், சிந்தனை மூலமும், புரிந்து கொண்டிருப்பதும் நிறைய. விஷயம் தெரிந்தாலும் பலரால் அதை கோர்வையாக எடுத்து சொல்ல முடியாது – இவருடைய பெரிய பலம் சொல்ல வரும் விஷயத்தை கோர்வையாக, ஒரு சதஸில் தன் கருத்தை எடுத்து வைப்பவர் போல் சொல்ல முடிவதுதான்.

தூணையும் பற்றி பேசுவார், துரும்பையும் பற்றி பேசுவார் – சுவாரசியமாக. நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் விருந்து உபசரிப்பு முறைகள், இந்திய பண்பாட்டின் கூறுகள், ஜாதியை பற்றி டி.டி. கோசாம்பி என்ன கூறுகிறார், காந்தளூர்சாலை கலமறுத்தருளி என்று ராஜ ராஜ சோழனின் மெய்க்கீர்த்தியில் வருவதன் பொருள் என்ன என்று கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை எழுதிய பேப்பர், திருவண்ணாமலை தீபம் என்ற ஐதீகம் எங்கிருந்து வந்திருக்க வேண்டும் எதை பற்றி வேண்டுமானாலும் பேச ரெடி. மார்க்சிய முறைப்படி வரலாற்று ஆய்வுகள், மலையாள சினிமா, மத்திய பிரதேசத்தில் இருக்கும் வறுமை, இலக்கிய சர்ச்சைகள், மேல் நாட்டு இலக்கியங்கள் எல்லாம் grist to his mill. அதே நேரத்தில் வெட்டி பேச்சு கிடையாது. நடிகை நிலாவுக்கும் நடிகர் ஆர்யாவுக்கும் என்ன உறவு, நயனதாரா பிரபு தேவா கல்யாணம் நடந்துவிட்டதா என்றெல்லாம் பேசுவதில்லை. சுவாரசியமாக, அதே நேரத்தில் உருப்படியாக பேச வேண்டும் என்பதை ஒரு கோட்பாடாகவே வைத்திருக்கிறார்.

எப்படி மறுத்து பேசினாலும் கோபம் வருவது இல்லை. சுற்றி இருக்கும் யாருக்கும் தன்னை போல் படிப்பும் உழைப்பும் இல்லை, இந்திய வரலாற்றை, தத்துவத்தை, பண்பாட்டை மேலோட்டமாகவே அறிந்தவர்கள் என்று தெரிந்தாலும் அவர்கள் கேட்கும் எந்த இடக்கு மடக்கு கேள்விக்கும் சலிக்காமல் விளக்கம் சொல்கிறார். அவரை எரிச்சல் ஊட்டுவது இரண்டு விஷயங்கள் (எனக்கு தெரிந்து) – ஒன்று அவர் பேசும்போது கவனிக்காமல் பராக்கு பார்ப்பது; இரண்டு இந்தியாவை தாழ்த்தி பேசும் மனப்பான்மை. பலரும் நான் பெரிய பிஸ்தா, இந்தியாவில் இருக்கும் இந்தியர்களுக்கு ஒரு மண்ணும் தெரியாது என்ற ரேஞ்சில் இவரிடம் பேசி இருக்கிறார்கள் போல தெரிகிறது. நான் பார்த்த கூட்டத்தில் உண்மையில் பிஸ்தா அவர்தான்.

தான் பெரிய எழுத்தாளர், தமிழின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் என்ற பெருமிதம் அவரிடம் இருக்கிறது. (என் கண்ணில் அவர் உலகின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர்.) ஆனால் கர்வம் என்பது கொஞ்சம் கூட இல்லை. எதிரில் இருப்பவனுக்கு ஒன்றும் தெரியாது என்ற மனப்பான்மை துளியும் இல்லாதவர். அடுத்தவர்கள் சொல்வதை கூர்ந்து கவனித்து அதை மறுத்தோ ஆமோதித்தோ விளக்கம் சொல்வார். நாம் ஏதாவது சொல்லும்போது கவனிக்காமல் பராக்கு பார்க்கும் பழக்கம் கிடையாது.

ராத்திரி தூங்கவே மாட்டாரோ என்று தோன்றியது உண்டு. ஒரு நாள் இரவு பனிரண்டு ஒரு மணி வரை பேசிவிட்டு வீட்டுக்கு வந்தேன். கம்ப்யூட்டரை திறந்து பார்த்தால் நான் வீட்டுக்கு வந்த பதினைந்து நிமிஷத்துக்குள் இரண்டு பதிவு போஸ்ட் செய்திருக்கிறார். அட ஏற்கனவே எழுதி வைத்திருந்தாலும் அதை கடைசி ஒரு முறை சரி பார்க்க மாட்டாரா?

அவருடன் நாலைந்து முறை பேச முடிந்தது. ராஜன் வீட்டில் சில முறை சந்தித்தோம்; என் மற்றும் பக்ஸ் வீட்டுக்கு வந்தார். ஒரு கலந்துரையாடலில் வந்தவர்களை அப்படியே கட்டிப்போட்டுவிட்டார். ஒரு உரை, மற்றும் கேள்வி பதில் நன்றாக அமைந்திருந்தது. இவரை மாதிரி ஒரு தமிழ் இல்லை சரித்திர வாத்தியார் இருந்தால் அது பெரிய அதிர்ஷ்டம்.

சுருக்கமாக சொன்னால் அவரை இன்னும் 4 முறை பார்த்திருக்கலாமே, இன்னும் பேசி இருக்கலாமே, பேசுவதை கேட்டிருக்கலாமே, என்று தோன்றுகிறது. மிக அபூர்வமான மனிதர். அவர் எழுத்துக்கள் மட்டும் இல்லை, அவர் பேச்சும் மீண்டும் மீண்டும் யோசிக்க வைக்கிறது. என்னவோ ஊரிலிருந்து நிறைய நாளாக பார்க்காத ஒரு அதி புத்திசாலி ஒன்று விட்ட அண்ணன் வந்து போனது போல் இருக்கிறது.

சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் தவறவிடாதீர்கள்.

கிரிக்கெட் வீரர்களுக்கு பிடித்த புத்தகங்கள்

எனக்கு கிரிக்கெட் பைத்தியம் உண்டு. புத்தகப் பைத்தியம் பற்றி சொல்லவே வேண்டியதில்லை.

உலகக் கோப்பை தருணத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு பிடித்த புத்தகங்கள் என்று ஒரு பதிவு – என்னை கவராமல் இருக்குமா? 🙂

தமிம் இக்பாலுக்கு (பங்களாதேஷ்) ஹாரி பாட்டர் சீரிஸின் முதல் புத்தகமான Sorcerer’s Stone பிடிக்குமாம். என்றாவது ஹாரி பாட்டரைப் பற்றி எழுத வேண்டும். எனக்கு பிடிக்கும் என்பதோடு இப்போது நிறுத்திக் கொள்கிறேன்.

ஷேன் வாட்சன் (ஆஸ்திரேலியா), மற்றும் விராட் கோலிக்கு (இந்தியா) டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே அகாசியின் சுசசரிதையான ஓபன் (Open) பிடிக்குமாம். அனேகமாக படிக்கமாட்டேன்.

ஜூபின் சர்க்காரிக்கு (கனடா) ரோலிங் ஸ்டோன்ஸ் ராக் இசைக்குழுவை சேர்ந்த கீத் ரிச்சர்ட்சின் சுயசரிதையான Life பிடிக்குமாம்.

இங்கிலாந்தின் லூக் ரைட்டுக்கு ஆர்.எல். ஸ்டைனின் (R.L. Stine) Goosebumps சீரிஸ் பிடிக்குமாம். இவை சிறுவர் சிறுமியருக்கான கதைகள்!

அயர்லாந்தின் எட் ஜாய்ஸ் கொஞ்சம் highbrow போலிருக்கிறது. அவர் விரும்பிப் படிப்பது ஜார்ஜ் ஆர்வெலின் 1984.

கென்யாவின் ஸ்டீவ் டிகொலோவுக்கு பிடித்த புத்தகம் நெல்சன் மண்டேலாவின் சுயசரிதையான Long Walk to Freedom.

பாகிஸ்தானின் ஷாஹித் ஆஃபிரிடி கொஞ்சம் religious ஆசாமி போலிருக்கிறது. அவர் சொல்லும் புத்தகம் கண்ட்லாவி ( Muhammad Zakariya Khandlawi) எழுதிய ஃபஸ்லே அமால் (Fazail-e-Amaal) இது குரான், மற்றும் பிற மத புத்தகங்களின் சொல்லப்படும் நீதிகளின் தொகுப்பாம்.

நியூசீலாந்தின் கேன் வில்லியம்சனும் த்ரில்லர்களை விரும்பிப் படிப்பவர் போலிருக்கிறது. அவர் சிபாரிசு செய்வது லீ சைல்டின் ஜாக் ரீச்சர் சீரிஸ். ஜாக் ரீச்சர் புத்தகங்கள் பயணப் படிப்புக்கு ஏற்றவை. படித்துவிட்டு தூக்கிப்போட்டு விடலாம்.

ஸ்ரீலங்காவின் ஏஞ்சலோ மாத்யூஸ் சுய முன்னேற்றப் புத்தகங்களை விரும்புபவர் போலிருக்கிறது. அவர் சிபாரிசு செய்வது ஜான் மாக்ஸ்வெல் எழுதிய Talent is not Enough .

மேற்கிந்தியத் தீவுகளின் சுலைமான் பென் விரும்புபவது முன்னாள் மேற்கிந்தியத் தீவு கிரிக்கெட் காப்டன் கிளைவ் லாய்டின் சுயசரிதையான Supercat.

ஹாலந்தின் பீட்டர் போரன் இன்னொரு highbrow போலிருக்கிறது. பாஸ்கல் மெர்சியர் (Pascal Mercier) எழுதிய Night Train to Lisbon புத்தகத்தை சிபாரிசு செய்கிறார்.

ஜிம்பாப்வேயின் கிராம் கிரேமர் சைக்கிள் வீரர் லான்ஸ் ஆர்ம்ஸ்ட்ரான்கின் சுயசரிதையான Its Not About the Bike புத்தகத்தை சிபாரிசு செய்கிறார்.

நிறைய பேர் சுயசரிதைகளைத்தான் விரும்புகிறாற்போல இருக்கிறது. நானும் மண்டேலா, லாயிட், ஆர்ம்ஸ்ட்ராங் ஆகியோரின் சுயசரிதைகளை படிக்க விரும்புகிறேன். இவற்றைத் தவிர Talent is Not Enough புத்தகத்தையும் புறட்டியாவது பார்க்க வேண்டும்.