இந்திரா சௌந்தரராஜன்

தமிழில் pulp fiction என்றால் பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ்குமார், சுபா மூவரும்தான் என்று நினைத்திருந்தேன். இந்திரா சௌந்தரராஜன் என்றும் ஒருவர் இருக்கிறார் என்று சமீபத்தில்தான் தெரிந்தது. படித்த வரையில் கதைகளின் தரம் ஒன்றும் பெரிதாக பேசும்படி இல்லை. ஆனால் விஷுவலாக சில கதைகளை நினைத்துப் பார்த்தால் சுமாரான திகில் படமாக வரலாம். இவர் பேசாமல் டிவி சீரியல் எழுதலாம் என்று தோன்றுகிறது. நான் படித்த பல கதைகளில் எல்லாம் என்னவோ அமானுஷ்ய நிகழ்ச்சி மாதிரி ஆரம்பித்து கடைசியில் எல்லாம் ஒரு செட்டப், சதி என்று முடிக்கிறார்.

மரகத லிங்கம்: படித்ததில் இது ஒன்றுதான் பஸ்ஸில் படிக்கும் தரத்திலாவது இருக்கிறது. கோவிலிலிருந்து மரகத லிங்கம் திருடு போகிறது, திருடியவர்களுக்கு பல விதமான துன்பங்கள்.

நீலா நீலா ஓடி வா: வேஸ்ட். இதற்கு கதைச்சுருக்கம் எழுதுவது அதை விட பெரிய வேஸ்ட். ஆனால் நாளைக்கு இது என்ன கதை என்று தெரியாமல் திருப்பி படித்துவிடக் கூடாது, அதற்காக எழுதுகிறேன். துணிச்சலான பெண் நீலா, பெரிய மனிதர்கள்/இளம் பெண்களை கடத்தி நிர்வாணமாக ஃபோட்டோ எடுத்து மிரட்டும் ஒரு கும்பலைப் பிடிக்கிறாள்.

கன்னிப் பருந்து: அதே நீலாதான், அதே வேஸ்ட்தான். ஆனால் நீலாவுக்கு இப்போது ரம்யா என்று பேர். பேய் இருக்கும் அபார்ட்மென்ட்டில் குடிபுகுந்து அங்கே பேய் எதுவும் இல்லை, திருட்டு வைரங்கள் ஒளித்து வைக்கப்பட்டிருக்கின்றன என்று கண்டுபிடிக்கிறாள்.

மந்திர வலை: சூனியம் கீனியம் என்று பயமுறுத்தி இரண்டு தொழிலதிபர்கள் பதுக்கி வைத்திருக்கும் தங்கத்தை கண்டுபிடிக்கிறார்கள். இன்னும் ஒரு வேஸ்ட்.

சர்ப்பபலி: எங்கும் துரத்தும் பாம்புகள். மந்திரவலை மாதிரியே முடிச்சு.

தென்கிழக்கு மின்னல்: கொள்ளுத்தாத்தா கட்டிப்போட்ட துர்தேவதைகளால் இன்று பிரச்சினையா?

உச்சியிலே: போதை மருந்து விற்கும் ஒருவன் அப்ரூவர் ஆகிறான். வேஸ்ட்.

ஓசைப்படாமல் ஒரு கொலை: மகா தண்டம்.

ஒன்றின் நிறம் இரண்டு: தண்டம். கிராமம், அப்பாவி ஹீரோ, அப்பாவி ஹீரோயின், ஹீரோயின் மேல் கண் உள்ள வில்லன்களான ஊர்ப் பெரிய மனிதர், சாராயம் காய்ச்சும் ரவுடி என்று கதை போகிறது.

யாகப் பசுக்கள்: தண்டம். கூட்டுறவு சங்கம் வைத்து நெசவாளர்கள் வாழ்க்கையை உயர்த்தும் ஹீரோவின் கையை வெட்டி விடுகிறார்கள். நியாயம் கேட்டு உண்ணாவிரதம் இருந்து இன்ஸ்பெக்டரின் மனதை மாற்றி…

புதிதாய் ஒரு நட்சத்திரம்: தண்டம். மும்பை விபசார விடுதிக்கு கடத்தப்படும் பெண். அவளைக் காப்பாற்றும் எழுத்தாளன், கைவிடும் காதலன். வில்லன்களை போலீசில் அடையாளம் காட்டும் ஹீரோயின். அவளையே மணக்கும் எழுத்தாளன்.

பஸ்ஸில் படிக்கலாம் என்றால் கூட பட்டுக்கோட்டை பிரபாகர் பெட்டர் என்று தோன்றுகிறது. இவரை முழுமையாக தவிர்க்கலாம். ஆனால் இவர் பாப்புலராக இருக்க வாய்ப்புகள் இருக்கின்றன. இவர் கதைகளை படித்தவர்கள் யாராவது இருந்தால் என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்லுங்களேன்!

15 thoughts on “இந்திரா சௌந்தரராஜன்

  1. உங்களுக்கு தமிழ் டெலிவிஷன்ஸ் பார்க்க வாய்ப்புகள் இல்லையோ? மர்ம தேசம், விடாது கருப்பு, ருத்ர வீணை, அதுமட்டும் ரகசியம் எல்லாம் தமிழ் நாட்டை ஒரு கலக்கு கலக்கிய தொடர்களாயிற்றே! எல்லாம் “காதுல பூ” சமாசாரம்தான் என்றாலும் அதை சுவாரஸ்யமாகச் சொல்வது இவருக்குக் கைவந்த கலை. ”கிருஷ்ணதாசி” சன் டிவியில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற தொடர்.

    சில கதைகள், சொன்னதையே திரும்பச் சொல்கிறாரோ என்று எண்ணத் தோன்றினாலும் இன்று வெகுஜன நாவல் உலகில் அமானுஷ்யக் கதைஞராக இவர் மட்டுமே இருக்கிறார்.

    இவருடைய சிவம், விக்ரமா, விக்ரமா, கோட்டைப்புரத்து வீடு, விட்டு விடு கருப்பா, காற்று காற்று உயிர் போன்ற பல நூல்களைப் படித்திருக்கிறேன்

    ஒரு காலத்தில் பேய்க்கதைகளை பி.டி.சாமி, ராஜேந்திர குமார் போன்றவர்கள் சுமாராக எழுதிக் கொண்டிருந்தார்கள். அதிலும் வழக்கமான தன் முத்திரையைப் பதித்து அசத்தியவர் நம்ம ரா.கி.ரங்கராஜன் (கிருஷ்ண குமார் என்ற புனைபெயரில் எழுதினார்) அவருடைய புரொபசர் மித்ரா, எனக்குள் ஒரு ஆவி, கோஸ்ட் போன்ற தொடர்கள் குமுதத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியவை. விற்பனை அதிகரிக்க உதவியவை. அதுசரி, அவருடைய “நான் கிருஷ்ணதேவராயன்” படித்திருக்கிறீர்களா? அது, அவருடைய மாஸ்டர் பீஸ்களுள் ஒன்று.

    இந்திரா சௌந்தர்ராஜனின் அமானுஷ்ய, மாந்த்ரீக நாவல்களை விட “சித்தர்கள்’ பற்றி எழுதியிருக்கும் நாவல்கள் வெகு சுவாரஸ்யமாக இருக்கும். சமீபத்தில் அவர் நேர்காணலைக் கூட தென்றலில் வாசித்தேன்.

    Like

  2. இந்திரா சௌந்தர்ராஜனின் கதைகள் விறு விறுப்பாக இருக்கும். ஜென்ம ஜென்மமாய் ….என்ற ஒரு கதை.. ராணி முத்துவில் வந்திருந்தது.

    கடவுள் நம்பிக்கையே அற்ற ஒரு பணக்காரர் எதிர்பாராத விதமாய் ஒரு சாமியை சந்திக்கிறார்..சாமியோ அவரின் ஆயுள் இன்னும் 108 நாட்கள் தான் என்று கூறுகிறார்…..நீ நான் சொல்வதை நம்பாவிட்டாலும் நீ இங்கிருந்து திரும்பி செல்லும் போது 3 சம்பவங்கள் நடக்கும்..அவை நடந்தால் அவரின் ஆயுள் 108 நாட்கள் தான் என்றும் கூறுகிறார்..

    இதற்கு பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் கதை….கொஞ்சம் நம்புவதற்கு கஷ்டமாக இருந்தாலும் நல்ல கதை…

    அவரின் சமீபத்திய நேர்காணல் — தென்றல் மாத இதழ், மார்ச், 2011
    http://www.tamilonline.com/thendral/Auth.aspx?id=124&cid=4&aid=7004&m=m&template=n

    Like

  3. உங்களுக்குப் பொறுமை அதிகம். நான் ஒரே கதையில் இவரிடமிருந்து அம்பேல். சித்தர் ஒருவரைத் தேடிப் போகும் கதை. பி.டி. சாமி விட்ட இடத்தை இந்திரா சௌந்திரராஜன் நிரப்புகிறார். Stephen King என்று நினைத்து சூடு போட்டிக் கொள்ளும் எழுத்தாளர்.

    கூடிய சீக்கிரமே சாகித்திய அகாடமி பரிசு வாங்கினால் ஆச்சரியப்படமாட்டேன்.

    Like

  4. ரமணன், ஆம் நான் தமிழ் டிவி பார்க்க வாய்ப்பு குறைவு. தமிழ் சானல்கள் இருந்தபோதும் இந்த மெகாசீரியல்களை பார்த்ததே இல்லை. அதைத்தான் சிமுலேஷனும் கிண்டல் செய்கிறார். 🙂
    ராஜ், // நான் ஒரே கதையில் இவரிடமிருந்து அம்பேல் // நீங்க புத்திசாலியா இருக்கீங்க!
    ஸ்ரீனிவாஸ், ஊரிலிருந்து திரும்பிவந்துவிட்டீர்களா?

    Like

  5. ஆர்வி சார் சில கதைகளை மட்டும் படித்து முடிவு கட்டினால் எப்படி? அவருடைய மாத நாவல்கள் எல்லாம் பெரும்பாலும் சுமார் ரகம்தான். நான் குறிப்பிட்டிருப்பது மெகா நாவல்களை.

    அவருடைய ’சிவம்’ நாவல் சுமார் 800 பக்கங்கள். அதுபோல பல தொடர் நாவல்களை (1000 பக்கங்களாவது இருக்கும்) கொஞ்சம் கூட சுவாரஸ்யம் குன்றாமல் எழுதியிருக்கிறார். சில விகடன், தமிழன எக்ஸ்பிரஸ், தேவி போன்றவற்றில் தொடராக வந்து ஒரு கலக்கு கலக்கியவை.

    இவர் நாவல்கள் தீவிர இலக்கியமல்ல. அதே சமயம் எல்லாமே வெறும் பொழுதுபோக்கு நாவல்கள் என்றும் சொல்ல முடியாது. இவர் நாவல்களைப் படித்து பர்வத மலை, சதுரகிரி மலை, கொல்லி மலை என்று சித்தர்களைத் தேடி ஆன்மீகப் பயணம் மேற்கொண்டு பலனடைந்ததாக பல வாசகர்கள் பல மாத நாவல்களில் கடிதங்கள் எழுதியிருக்கிறார்கள்.

    ”பதினெண் சித்தர்கள்” பற்றி அவர் டிடியில் உரையாற்றியது உண்மையிலேயே ஆன்மீக ஆர்வலர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. அவரது தென்றல் நேர்காணலும் சுவையாக இருந்தது.

    Like

    1. ரமணன், ஏழெட்டு கதை படித்தால் எப்படி எழுதுவார் என்று புரிந்து கொண்டுவிடலாம் என்று நினைத்தேன். இப்படி இன்னும் படிக்க சொல்கிறீர்களே! 🙂

      Like

    1. செந்தில், இந்திரா சவுந்தரராஜன் புத்தகங்களில் படிக்க வேண்டும் என்று நினைத்திருந்தது சேது நாட்டு வேங்கை மட்டுமே. இப்போது இதையும் புரட்டிப் பார்க்கிறேன்.

      Like

    2. ரகசியமாய் ஒரு ரகசியம்
      விட்டு விடு கருப்பா போன்ற கதைகள் விறுவிறுப்பாக இருக்கும் கதை முதலில் நன்றாக போகும் கடைசியில் நம்மை ஏமாற்றி விடுவார் ரசமணி தங்க புதையல் சித்தர்கள் ரசவாதம் தங்கம் செய்யும் முறை நான் படித்த பெரும்பாலும் இந்திரா சௌந்தர்ராஜன் கதைகளில் திரும்ப திரும்ப வந்த plot இது தான் அமானுஷ்ய எழுத்தாளர்கள் குறைவு ஆனால் இவர் திறமைசாலி தான் 😀😀

      Like

  6. இந்திரா சௌந்தர் ராஜனின் எழுத்துக்களில் எனக்கு மிகப்பிடித்தவை. சிவமயம் மற்றும் சமூக நாவலான ரங்கநதி குறிப்பிடத்தக்க நாவல். அவர் எழுத்தில் முதலிடம் என்னளவில் ரங்கநதி நாவலுக்குத்தான்.

    Like

    1. செந்தில், இ. சௌந்தரராஜனின் எழுத்துக்களில் லிஸ்டில் இருப்பது சேதுநாட்டு வேங்கை மட்டும்தான். ரங்கநதியா? தேடிப் பார்க்கிறேன்…

      Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.