பாலகுமாரனின் “காதல் வெண்ணிலா”

பாலகுமாரனின் கச்சிதமான குறுநாவல்.

மகா சிம்பிள் கதை. பெருங்களத்தூர் ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸில் வேலை செய்யும் பெரியவர் அய்யாசாமி. இளைஞன் திருநா என்ற திருநாவுக்கரசு. இருவருக்கும் நடுவில் கொஞ்சம் அன்பு. ஒரே ஊர்க்காரர்கள், செங்கல்பட்டிலிருந்து வந்து போவார்கள். அய்யாசாமி ஜாக்கிரதையானவர். இரண்டு வயது வந்த பெண்கள் உண்டு. என்னதான் அன்பு என்றாலும் திருநாவை வீட்டுக்குள் அழைத்தது இல்லை. அவர் ரிடையர் ஆகும் அன்றுதான் அவன் வீட்டுக்குள் வருகிறான். சின்னவள் வெண்ணிலாவை சைட் அடிக்க ஆரம்பிக்கிறான். அவளுக்கும் ஈர்ப்பு இருக்கிறது. அண்ணியை தாஜா செய்து பெண் கேட்க அனுப்புகிறான். ஏதோ குழப்பத்தில் பெரியவள் மனோன்மணியோடு நிச்சயம் ஆகிவிடுகிறது. நிச்சயம் ஆன பிறகு மாற்ற முடியாது என்று அண்ணன், அண்ணி, காதலித்த வெண்ணிலா எல்லாரும் உறுதியாகச் சொல்லிவிடுகிறார்கள். பிறகு?

சிம்பிள் முடிச்சு, சிம்பிளாக அவிழ்கிறது. கதையை உயர்த்துவது உண்மையான மனிதர்களின் சித்திரம். இந்த மாதிரி உறவு, இந்த மாதிரி காதல் எல்லாம் நானும் பார்த்திருக்கிறேன். இதற்கு மேல் ஒன்றும் விலாவாரியாக எழுதப் போவதில்லை.

பாலகுமாரனின் ஒரு பலம் கதைகளை பல ஊர்களில் – குறிப்பாக சிறு நகரங்கள், கிராமங்களில் – அமைத்து அங்குள்ள மனிதர்களை உண்மையாகக் காட்டியது. எல்லா முறையும் அவர் வெற்றி பெறவில்லை, ஆனால் முக்கியமான முயற்சி. இந்தக் குறுநாவலைப் படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

விசா பப்ளிகேஷன்ஸில் கிடைக்கிறது. விலை 65 ரூபாய்.

5 thoughts on “பாலகுமாரனின் “காதல் வெண்ணிலா”

  1. மூடப்பட்ட ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ் பற்றி தெரிந்து கொள்ள எனக்கு மிகவும் ஆர்வம். உங்கள் பதிவை படித்த உடன் இந்த புத்தகத்தை தேடி வாங்கினேன். ஆனால் பெருத்த ஏமாற்றம். கதை ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸில் நடப்பதாகவே தெரியவில்லை. இருந்தாலும் சற்று சுவையான ஒரு நாவலை படித்த திருப்தி.

    பாலகுமாரன் டாஃபேயில் வேலை செய்தார் என கேள்விப்பட்டு இருக்கிறேன். முழுக்க முழுக்க தொழிற்சாலை மய்யப்படுத்தி எதாவது நாவல் படைத்துள்ளாரா?? (fleet management related இரும்புக்குதிரை தவிர)

    Like

  2. அன்புள்ள சிவ்,

    நீங்கள் ‘தாயுமானவன்’ படித்திருக்கிறீர்களா ?

    தாயுமானவன், எழுத்தாளர் பாலகுமாரனின் ஒரு புகழ்பெற்ற புதினமாகும். இப்புதினத்தை பாலகுமாரன் தன் வாழ்க்கை அனுபவத்தை தழுவி எழுதியுள்ளார் என்று கூறப்படுகிறது. இப்புதினம் முதலில் ஆனந்த விகடன் கிழமை இதழில் ஒரு தொடர் கதையாக வெளிவந்தது. பின்னர் இதை விகடன் பதிப்பகம் நூல் வடிவில் வெளியிட்டது.

    கதைச்சுருக்கம்:
    வாகனங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் தொழிற்சங்க தலைவராகவும், தலைமை தொழிலாளியாகவும் பணிபுரியும் பரமசிவத்தையும் மனைவி சரஸ்வதியையும் மையமாக கொண்டது இப்புதினம். தொழிற்சாலை அரசியல் காரணமாக ஏற்படும் ஒரு சூழ்நிலையில் தனது தன்மானத்தை காப்பற்றுவதற்காக பரமு வேலையை ராஜினாமா செய்கிறான். வீட்டின் பொருளாதார நிலையை காப்பதற்காக சரசு வேலைக்கு செல்லும் கட்டாயம் ஏற்படுகிறது. இதனால் அந்த குடும்பத்தில் ஏற்படும் மாற்றங்கள், சண்டை சச்சரவுகள், மற்றும் மாறுகிற பந்தங்களை விவரிக்கும் கதை இது.

    Like

  3. சிவ், பால்ஹனுமான் சொன்ன கதையைத் தவிர வேறு ஒரு கதையும் நினைவு வருகிறது. தொழிற்சாலையில் பைப்பிங் பற்றி நன்றாகத் தெரிந்து வைத்திருக்கும் டிப்ளமா ஹோல்டர் ஒருவனுக்கு ப்ரமோஷன் கிடைக்காததால் வேலையை விட்டுவிட்டு வீட்டு ப்ரோக்கர் தொழிலில் இறங்குவான். தொழிற்சாலை சித்தரிப்புகள் ஓரளவு நன்றாக இருக்கும். கதை பேர் நினைவு வரவில்லை.

    ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ் இந்தக் கதையில் ஒரு குறிப்பு மட்டுமே. தவறான இம்ப்ரஷன் ஏற்படுத்திவிட்டேன் போலிருக்கிறது.

    Like

BaalHanuman -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.