தென்கரை பிரகாஷ்

தென்கரை பிரகாஷ் எனக்கு ஜெயமோகன் குழுமம் மூலம் அறிமுகமானவர். அவருடைய சில சிறுகதைகளை எனக்கு அனுப்பி இருந்தார். எனக்கு வந்த வாழ்வு! நான் வழக்கம் போல மெதுவாகப் படித்து பதில் எழுதுவதற்குள் சில மாதங்களே ஓடிவிட்டன. அவர் அதற்குள் ஒரு தளம் ஆரம்பித்து அங்கே தன் புனைவுகளை, கவிதைகளைப் பதிக்க ஆரம்பித்துவிட்டார்.

எனக்கு இவர் எழுதுவது பிடித்திருக்கிறது. எழுத்தில் intensity அதிகம். கவிதையைப் பற்றி எல்லாம் பேசும் அளவுக்கு நமக்கு பத்தாது. ஆனால் இது வரை மூன்று கதைகள் படித்திருக்கிறேன்.மூன்றிலும் ஏதாவது நல்ல கூறு இருக்கிறது.

ஞானலோலன் கதை நன்றாக ஆரம்பிக்கிறது. ஸ்ரீமூலநாதரோடும் யானையோடும் பேசுபவன் என்பது கொஞ்சம் அட! என்று பார்க்க வைக்கிறது. ஆனால் பின்பகுதி என் கண்ணில் சரியாக வரவில்லை. முன்பகுதியோடு ஒட்டவே இல்லை. இரண்டு பகுதிகளும் இயங்கும் தளங்களும் வேறு வேறாக இருப்பது போலத் தெரிந்தது.

அன்னை என்ற கொஞ்சம் நீளமான கதையின் பிளாட் சாதாரணமானதுதான். ஆனால் அதில் ஒரு காலகட்டம், தொன்மத்தைப் படிப்பது போன்ற ஒரு உணர்வு ஆகியவற்றைக் கொண்டு வந்திருக்கிறார்.

அன்னதாதாவில் அந்த கிழவரின் அலைச்சல் நன்றாக வந்திருக்கிறது.

பிரகாஷ் நன்றாக எழுதக் கூடியவர் என்று தெளிவாகத் தெரிகிறது. வாழ்த்துக்கள்!

அரு. ராமநாதனின் “வீரபாண்டியன் மனைவி”

வீரபாண்டியன் மனைவி என் படித்தே ஆக வேண்டிய நாவல்கள் லிஸ்டில் வராது. ஆனால் நான் படிக்க வேண்டும் என்று நினைத்திருந்த லிஸ்டில் இருந்தது. அதனால்தான் மாற்றங்கள் நடக்கும் என்று சொன்ன பிறகும் இதைப் பற்றி எழுதுகிறேன்.

தமிழில் சரித்திர நாவல்கள் என்று ஆரம்பித்த ஒரு சீரிஸ் இந்த தளத்தின் நல்ல பதிவுகள் பலவற்றைக் கொண்டது. நான் படிக்க வேண்டிய சரித்திர நாவல்கள் என்று சில பல நாவல்களை குறிப்பிட்டிருந்தாலும் உண்மையிலேயே படிக்க விரும்பியவை நான்குதான் – வீரபாண்டியன் மனைவி, டணாய்க்கன் கோட்டை, உடையார் மற்றும் காவல் கோட்டம். இந்த வருஷம் படிக்க வேண்டும் என்று நினைத்திருந்த புனைவுகளில் ஒன்று.

வீரபாண்டியன் மனைவி புத்தகத்தில் முதல் ஐம்பது பக்கம் தாண்டியதும் இது அரண்மனைச் சதி genre லெவலைத் தாண்டப் போவதில்லை என்று புரிந்தது. இன்னும் எத்தனை பக்கம் படிக்க வேண்டும் என்று சோர்வு வந்தது. ஆனாலும் விடாமல் படித்தேன். ஓரளவு ஜவ்வுதான், ஆனால் அகிலன், ஜெகசிற்பியன் மாதிரி பேப்பருக்குப் பிடித்த கேடு என்று சொல்லமாட்டேன். கல்கி, சாண்டில்யன் ரேஞ்சில் இருக்கிறது என்று நிச்சயமாகச் சொல்லலாம். தமிழின் நல்ல சரித்திர நாவல்களில் ஒன்று. ஆனால், in absolute terms, இது சில நல்ல கூறுகள் கொண்ட சுமாரான நாவல் மட்டுமே.

புத்தகத்தில் நினைவிருக்கப் போவது ஜனநாதக் கச்சிராயன் பாத்திரப் படைப்பு மட்டுமே. எந்த விதமான போலித்தனமும் இல்லாத சிந்தனையாளனாக, முடியாட்சியின் குறைகளை உணர்ந்து அதற்கு மாற்று தேடும் ஒருவனாக, உருவாக்கி இருக்கிறார். நிச்சயமாக எழுதப்பட்ட காலத்தில் பெரிய அளவு ஹிட் ஆகி இருக்கும். இன்று வாய்ச்சவடால் அதிகமாக இருப்பதாகத் தோன்றுகிறது, இருந்தாலும் ரசிக்கக் கூடிய பாத்திரப் படைப்புதான்.

ஜனநாதனைக் கழித்தால் புத்தகத்தில் வேறு ஒன்றுமே இல்லை. தட்டையான பாத்திரப் படைப்பு, போரடிக்கும் தெய்வீகக் காதல், எதிர்பார்க்கக் கூடிய திருப்பங்கள் என்றுதான் போகிறது. அதுவும் வீரபாண்டியனின் மனைவியை சிறை மீட்க நடக்கும் முயற்சிகள், அவற்றின் தோல்வி எல்லாம் ஒரு ஆயிரம் பக்கத்துக்கு மேல் இழு இழு என்று இழுக்கிறார். தொடர்கதையாகப் படித்தால் தெரிந்திருக்காது, புத்தகமாகப் படிக்கும்போது எப்படா கடைசிப் பக்கம் வரும் என்று திருப்பிப் திருப்பிப் பார்த்தேன்.

மூன்றாம் குலோத்துங்க சோழன் வீரபாண்டியனை முறியடித்து விக்கிரம பாண்டியனை பாண்டிய அரியணையில் அமர்த்தினான் என்பது வரலாறு (என்று நினைக்கிறேன்). அந்தப் பின்புலத்தில் சோழ அதிகாரிகள் – ஒற்றர் படைத்தலைவன் ஜனநாதன், மதுரையைப் பிடித்ததில் பெரும் பங்கேற்று அதிகாரியாக உயர்ந்த வீரசேகரன் -, அவர்களது அதிகாரச் சண்டைகள், வீரசேகரன்-பாண்டிய “சதிகாரி” ஊர்மிளா காதல், வீரபாண்டியனின் மனைவியைப் பிடித்து சிறையில் வைத்தல், அவளை மீட்க வீரபாண்டியனின் முயற்சிகள், ஜனநாதன் அவற்றை தோற்கடித்தல், தொடர்கதைகளுக்கு வேண்டிய திடுக்கிடும் திருப்பங்கள், அசாதாரண நிகழ்ச்சிகள் என்று கதை போகிறது.

எவ்வளவு வரலாறு, எவ்வளவு கற்பனை என்று தெரியவில்லை. குறிப்பாக ஜனநாதன் என்று ஒரு அதிகாரி இருந்தானா என்று சந்தேகமாக இருக்கிறது. ஆதாரங்கள் பற்றி அரு. ராமநாதன் எதுவும் குறிப்பிடவில்லை.

1940களில் எழுதப்பட்ட கதை. வருஷம் சரியாகத் தெரியவில்லை. அவரே நடத்திய காதல் இதழில் தொடர்கதையாக வெளிவந்தது.

ஜெயமோகன் இதை நல்ல வரலாற்று romances லிஸ்டில் சேர்க்கிறார். எஸ்.ரா. இதை நூறு சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்றாகக் கருதுகிறார். எனக்கு இதை சிறந்த தமிழ் சரித்திர நாவல்களில் ஒன்றாகச் சேர்க்கலாம், ஆனால் சுமாரான நாவலே.

அரு. ராமநாதன் ராஜராஜ சோழன் என்ற நாடகத்தையும் எழுதி இருக்கிறார். இதை டி.கே.எஸ். சகோதரர்கள் அரங்கேற்றினர். பிற்காலத்தில் சிவாஜி கணேசன் நடித்து ஏ.பி. நாகராஜன் இயக்கத்தில் நாடகமாகவும் வந்தது. இவரைப் பற்றி மேலும் தகவல்களுக்கு தோழி அருணாவின் அப்பா கிருஷ்ணன் வெங்கடாசலம் எழுதிய கட்டுரையைப் பார்க்கலாம்.

புத்தகத்தை மீனாட்சி கல்லூரி எதிரில் உள்ள பிரேமா பிரசுரத்தில் வாங்கினேன். இது அரு. ராமநாதன் ஏற்படுத்திய நிறுவனம். இன்றும் அவரது மகன் ரவிதான் நடத்தி வருகிறார். பார்த்தால் அசப்பில் அப்பா மாதிரிதான் இருக்கிறார். விலை 225 ரூபாய்.

அரு. ராமனாதனின் அசோகன் காதலி என்ற சிறு நாவலையும் படித்தேன். அதே பாணி. அசோகனை புத்த மதத்தின் பக்கம் திருப்பியது அவன் காதலி காரூவகி என்று எழுதி இருக்கிறார். நான் ரசித்தது சாணக்யனின் பேச்சுக்களை மட்டுமே.

நாயனம் சௌந்தரவடிவு என்ற இன்னொரு நாவலும் கிடைத்தது. நாதஸ்வரம் வாசிக்கும் நாயகன், நாயகி அவர்களுக்குள் காதல், போட்டி என்று போகிறது. பாய்ஸ் கம்பெனி நாடகம் பார்ப்பது மாதிரி இருக்கிறது.

மாற்றங்கள்

நான் கையில் கிடைத்ததை படிக்கும் பழக்கம் உடையவன். சின்ன வயதில் மளிகை சாமானைக் கட்டித் தந்த பேப்பரைக் கூட ஒரு பார்வை பார்ப்பேன். எப்போதுமே ஒரு விஷ்ணுபுரத்தை படிப்பதை விட ஒரு த்ரில்லரைப் படிப்பதும் சுலபம், அதைப் பற்றி எழுதுவதும் சுலபம். அதனால்தானோ என்னவோ வர வர “வணிக எழுத்துகளைப்” பற்றிய பதிவுகள் அதிகமாக வருகின்றன என்று நினைக்கிறேன். சில நண்பர்களும் இதை சுட்டிக் காட்டி இருந்தார்கள்.

இதை மாற்றலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். நல்ல படைப்புகளைப் பற்றி மட்டுமே எழுத வேண்டும் என்று ஆசை; குறைந்த பட்சம் அதிகமாக நல்ல படைப்புகளைப் பற்றி, படிக்க வேண்டும் என்று நினைத்திருந்த படைப்புகளைப் பற்றி மட்டும் எழுத கொஞ்ச நாளாவது முயற்சிக்கிறேன்.

நல்ல படைப்புகளைப் பற்றி எழுத அதிக நேரம் தேவை. அதனால் frequency குறையும். ஏற்கனவே எழுதி வைத்திருக்கும் சில நோட்ஸ், அடுத்தவர் பதிவுகளுக்கு சுட்டிகள் எல்லாம் வைத்து கொஞ்ச நாளைக்கு ஓட்டுகிறேன்.

இரு நூலகங்கள்

சென்னைக்கு சென்றபோது புதிய அண்ணா நூற்றாண்டு நூலகத்தையும் கன்னிமாரா நூலகத்தையும் போய்ப் பார்த்தேன்.

அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆரம்பித்து ஒரு வருஷம் இருக்கலாம். இன்னும் யாரும் உறுப்பினர் ஆக முடியாது. எல்லா புத்தகங்களுக்கும் இருப்பிடம் – அமெரிக்காவின் லைப்ரரி ஆஃப் காங்கிரஸ் மாதிரி – என்ற எண்ணத்துடன் துவங்கப்பட்டதாம். தமிழ்ப் புத்தகங்கள் கூட குறைவாகத்தான் இருக்கின்றன. எந்தப் புத்தகம் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிப்பது சுலபம் இல்லை. அற்ப விஷயம் கூடத் தெரியவில்லை – க.நா. சுப்ரமண்யத்தின் புத்தகங்கள் “K” எழுத்தின் கீழும் வைக்கப்பட்டிருக்கின்றன, “S ” எழுத்தின் கீழும் வைக்கப்பட்டிருக்கின்றன. புத்தகங்களை அடுக்கி வைக்கும்போது பேர் ஒன்று மேலிருந்து கீழாகப் படிக்கும்படி இருக்க வேண்டும், இல்லாவிட்டால் கீழிருந்து மேலாக. இரண்டு முறையிலும் வைத்தால் கழுத்தை திருப்பி திருப்பி படிக்க வேண்டி இருக்கிறது. இதைப் புரிந்து கொள்ள என்ன ஸ்பெஷல் பயிற்சி வேண்டும்?

கன்னிமாராவிலோ எக்கச்சக்க புத்தகங்கள். ஆனால் எந்தப் புத்தகம் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிப்பதற்குள் தாவு தீர்ந்துவிடுகிறது. தேடிப் பிடிக்கும் புத்தகங்களோ மக்கிக் கொண்டிருக்கின்றன. புத்தகம் இருந்து என்ன பயன்? நுழையும்போதே ஃபினாயில் வாசனை வேறு ஊரைத் தூக்குகிறது.

நூலகம் என்பது எனக்குத் தெரிந்து இரண்டு வகையினருக்காக. ஒன்று பொது ஜனம், அவர்களுக்கு பாப்புலர் புத்தகங்கள் இருக்க வேண்டும், கிளாசிக் புத்தகங்கள் இருக்க வேண்டும், அவர்களுக்கு இரண்டு வகை புத்தகங்களும் சுலபமாக கிடைக்க வேண்டும், உறுப்பினராவது சுலபமாக இருக்க வேண்டும். இரண்டாம் வகை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள். அவர்களுக்கு அரிய புத்தகங்கள், references எல்லாம் சுலபமாகக் கிடைக்க வேண்டும். அண்ணா நூலகத்தில் கட்டடம் கட்டுவதில்தான் குறியாக இருந்திருக்கிறார்கள், பயனர்களைப் பற்றி அவர்களுக்கு கவலை இருந்த மாதிரி தெரியவில்லை. புத்தகங்கள் மேஜை நாற்காலி மாதிரி கட்டடத்தை நிரப்பும் ஒரு பொருள் என்ற viewpoint-தான் தெரிகிறது. கன்னிமாராவிலோ பயனர்களைப் பற்றி மட்டுமல்ல, புத்தகங்களைப் பற்றியும் அலட்சியம்தான் தெரிகிறது.

எனக்கு வயிறு எரிகிறது, என்ன செய்வது என்றுதான் தெரியவில்லை.

சுபா

எனக்கு டைம்பாஸ் படிப்பு என்றால் அனேகமாக pulp fiction , த்ரில்லர்கள்தான். சிறு வயதில் இரும்புக்கை மாயாவியிலிருந்து ஆரம்பித்த பழக்கம் இன்னும் விடவில்லை. ஏறக்குறைய மூளையை ஆஃப் செய்துவிட்டு டிவி பார்ப்பது போல. நாஸ்டால்ஜியா இன்னும் நிறைய இருக்கிறது.

தமிழில் pulp fiction பாரம்பரியம் வடுவூரார் காலத்திலிருந்து இருக்கிறது. ஆனால் முக்கால்வாசி நேரம் இவற்றைப் படித்தது ஏமாற்றம்தான் அடைந்திருக்கிறேன். தமிழின் சிறந்த த்ரில்லர் எழுத்தாளர் என்று சுஜாதாவைத்தான் – குறிப்பாக கணேஷ்-வசந்த் கதைகளைத்தான் – கருதுகிறேன். ஆனால் அவர் கதைகளையும் இன்று படிக்கும்போது நிறைய சொதப்பி இருப்பது தெரிகிறது. நல்ல ஆக்ஷன் சீன் உள்ள சிறுகதை என்றால் ஜெயமோகனின்அவதாரம்” நினைவு வருகிறது. அருமையான ஒரு சண்டைக் காட்சியை சித்தரித்திருப்பார்.

இப்போது இந்த மார்க்கெட்டின் ராஜா யார் என்று தெரியவில்லை. ராஜேஷ்குமாரா? ஆனால் சுபா என்ற பேரில் எழுதும் இந்த இரட்டையர்களுக்கு பெரிய மார்க்கெட் இருந்தது. அனேகமாக இப்போதும் இருக்கலாம். இவ்வளவு பாப்புலராக இருக்கிறார்களே, இவர்கள் எழுத்தை என்றாவது சாம்பிள் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். சமீபத்தில் சில புத்தகங்கள் கிடைத்தன. இவர்கள் என்னை ஏமாற்றவில்லை, நான் படித்த டஜன் கதைகளும் வேஸ்ட். 🙂 நான் படித்த வரையில் இவர்கள் நல்ல pulp fiction-ஐ இது வரை எழுதவில்லை. ஒரு குழந்தைத்தனமான மர்மம், “கிளுகிளுப்புக்கு” வைஜயந்தி என்ற ஒரு பெண் என்று ஒரு ஃபார்முலாவை வைத்து ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

பிறகு எதற்கு இந்தப் பதிவு என்கிறீர்களா? மூன்று காரணங்கள். ஒன்று, தமிழில் நீங்கள் படித்த நல்ல த்ரில்லர்கள் ஏதாவது உண்டா என்று தெரிந்துகொள்ள. இரண்டாவது, சிலிகான் ஷெல்ஃப் ஆரம்பித்த பிறகு படித்ததை எல்லாம் அனேகமாக பதிவு செய்யும் பழக்கம் வந்துவிட்டது. மூன்றாவது, மொக்கை எழுத்தைப் பற்றி எல்லாம் பதிவு போடும் வத்தலகுண்டு பித்தன் என்ற பேரை எப்படி தக்க வைத்துக் கொள்வது? 🙂

வாசகர்களை இவர்கள் அநியாயத்துக்கு குறைத்து மதிப்பிடுகிறார்கள். உதாரணமாக அன்புள்ள அச்சமே என்ற கதையில் கணவன் பணக்கார மனைவியை ஆவி கீவி என்று பயமுறுத்தி பைத்தியம் பிடிக்க வைக்கிறான். அடுத்த நாளே மாமனாரின் ஆவி வருகிறது. அதைப் பார்த்து இவனுக்கு பைத்தியம் பிடிக்கிறது. இந்த மாமனாரின் ஆவி ஒரு நாலு நாள் முன்னால் வந்திருந்தால் தன் பெண்ணைக் காப்பாற்றி இருக்கலாமே!

சில கதைகளில் potential தெரிந்தது. உதாரணமாக நிலா வரும் நேரம் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. திருமணமான பெண்களின் செக்ஸ் வேட்கைகளைப் பற்றி நிறைய எழுதி இருந்தார். கடைசியில் அதை க்ரைம் நாவலாக முடிக்க வேண்டிய கட்டாயம், கதை சொதப்புகிறது.

படித்ததில் பெஸ்ட் என்றால் தீர்க்க வேண்டிய கணக்குதான். ஒரு வரைபடத்தை (map) திருட வரும் இரண்டு பேரை ஏறக்குறைய வேட்டை ஆடுகிறார். ஆக்ஷன் சீன்கள்தான் பெரும்பாலும்.

இவர்களை முழுமையாக நிராகரிக்கிறேன்.ஆனால் இவர்களின் ஃபார்முலா வெற்றி பெற்றிருக்கிறது என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை

படித்த கதைகளின் லிஸ்ட் கீழே.

  1. குளிர குளிர குற்றம்: தங்கையை கற்பழித்த நாலு பேரை பழி வாங்கும் அண்ணன். வேஸ்ட்.
  2. அன்புடன் உன் அடிமை: வேஸ்ட். ஒரு பெண்ணை கெடுத்த இரண்டு பேரை ஹீரோ கொல்கிறான். அதை பாராட்டும் ஒரு இன்ஸ்பெக்டர் பிறகு அவன் ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்ளும்போது காப்பாற்றுகிறார்.
  3. அடிபட்ட புலி: வேஸ்ட். கொஞ்சம் கொஞ்சம் Bound என்ற சினிமாவை நினைவுபடுத்துகிறது. மாஃபியா ஆள் வைப்பாட்டி, ஜெயிலிலிருந்து திரும்பி வரும் பக்கத்து வீட்டு திருடனால் கவரப்படுகிறாள். அவர்கள் திருடப் போடும் திட்டம்…
  4. திருப்பித் தாக்கு: மகா வேஸ்ட். காதலன், காதலி, பர்மிஷன் தர மறுக்கும் அப்பா. காதலி தற்கொலை செய்து கொள்கிறாள், காதலனை கிட்டத்தட்ட பைத்தியம் ஆக்குகிறார்கள்.
  5. தீர்ப்பு நாள்: (நரேந்திரன்) ஒரு திரைக்கதை காணாமல் போய்விடுகிறது. ஒரு சினிமா நடிகனின் மனைவி கடத்தப்படுகிறாள். நரேந்திரன் திரைக்கதை மனைவியின் கடந்த கால வாழ்க்கையை நினைவுபடுத்துகிறது என்பதை கண்டுபிடிக்கிறான்.
  6. என்னைத் தேடு: (நரேந்திரன்) வெட்டி. பறக்கும் தட்டு, வேற்று கிரக மனிதர்கள் என்று புரளி கிளப்பி ஒரு வீட்டில் இருக்கும் பல கோடி மதிப்புள்ள சிலையை திருடப் பார்க்கிறார்கள்.
  7. உயிர்மூச்சு: விஞ்ஞானி, செயற்கை முத்து செய்யும் ஃபார்முலா, நரேந்திரன்-வைஜயந்தி என்று போகும் கதை
  8. வசந்தம் வரும்: சிறுகதைத் தொகுப்பு. எதுவும் தேறவில்லை.
  9. பனிமலையில்: அமைச்சரின் மகள் கடத்தப்படுகிறாள். அதை கண்டுபிடிக்கும் போலீஸ்.
  10. கொஞ்சுகிற கைதான் கொல்லும்: (நரேந்திரன்) ஒரு கால் கர்ளை கொலை செய்கிறார்கள். அவள் அப்போது ஒருவனுக்கு மனைவியாக இருக்கிறாள். கணவன் மீது சந்தேகம் விழுகிறது. கணவனின் உயிர் நண்பனின் பிணம் வேறு கிடைக்கிறது. பிறகு?
  11. ஈர உதடுகள்: கால் கர்ளை உண்மை தெரியாமலே காதலிக்கும் ஃபோட்டோகிராஃபர். நல்ல வாழ்க்கைக்கு திரும்ப நினைப்பவளை தடுக்கிறான் அவள் முதலாளி. முதலாளி கொலை, இவள் ஜெயில், இவன் காத்திருக்கிறான். வேஸ்ட்.
  12. பௌர்ணமிப் பாதை: கொள்ளை அடித்த பணத்தை மறைத்து வைத்திருக்கும் ரவுடிகளின் தலைவன், அதை கண்டுபிடிக்க முயலும் அவன் பெண், ஹீரோ.

தொடர்புடைய சுட்டிகள்:
பட்டுக்கோட்டை பிரபாகர்
இந்திரா சவுந்தரராஜன்

பி.சு. கைலாசத்தின் “அனகா”

ஏற்கனவே வணிக எழுத்தாளரைப் பற்றி மொக்கை போடும் வத்தலக்குண்டு பித்தன் என்று பேர் கிடைத்துவிட்டது. இதில் அவ்வளவாகத் தெரியாத பி.சு. கைலாசத்தைப் பற்றி வேறு எழுதுகிறேன். 🙂

நான் இவரைப் பற்றி கேள்விப்பட்டதே இல்லை. என் அம்மா லோகல் நூலகத்திலிருந்து எடுத்து வந்ததை நானும் புரட்டினேன். கலைமகள், கல்கி மாதிரி பத்திரிகைகளில் வரக்கூடிய கதைகள். பெரும் இலக்கியம் என்றோ, தரிசனங்கள் என்றோ எதுவும் உயர்வாகச் சொல்வதற்கில்லை. ஒரு கன்சர்வேடிவ், பிராமண, சனாதன வாழ்க்கையை முன் வைக்கும் குறுநாவல்கள் இரண்டு. நானோ இந்த சனாதன வாழ்க்கையில் நம்பிக்கை இல்லாதவன். நாளை மீண்டும் படித்தால் தூக்கிப் போட்டுவிட வாய்ப்புகள் அதிகம். ஆனால் எதிர்பார்த்ததை விட பரவாயில்லை என்று இன்றைக்கு தோன்றுவதும் உண்மை. தெளிவாக articulate செய்ய முடியவில்லை.

அனகா குறுநாவலில் அம்மாவை கைவிட்ட அப்பா, மாமா தயவில் வளர்ந்த குழந்தைகள். இன்று அனகாவுக்கு கல்யாணம் ஆகிவிட்டது. ஆனால் அனகாவின் புருஷனும் ஊர் மேய்கிறான். விவாகரத்து என்று பேச்சு வரும்போது அம்மாவின் வாழ்க்கைதான் தனக்கு முன்னுதாரணம் என்கிறாள் அனகா.

இன்று புதிதாய்ப் பிறந்தோம் குறுநாவலில் பக்கா வைதீகப் பிராமணப் புருஷன். வேறு மாதிரி வளர்ந்த மனைவி. தன்னைத் தூக்கி வளர்த்த வேற்று ஜாதி ஆயாவிடம் ஜாதி வித்தியாசம் பார்க்கக் கூடாது, வீட்டுக்கு விலக்கானால் கோடி அறையில் உட்காரமாட்டேன் என்று சின்ன சின்னதாக புரட்சி. பெரிதாக வெடித்து இருவரும் பிரிகிறார்கள். அறுபது வயதாகும்போது போனால் போகிறது என்கிற மாதிரி நான் தப்பு செய்திருந்தால் என்னை மன்னித்துவிடு மனநிலைக்கு வரும் கணவர். என்னை மன்னியுங்கள் மனநிலையில் இருக்கும் மனைவியோடு இணைகிறார்.

அனகா செய்வது மடத்தனம் என்பதிலோ, தவறு கணவன் பேரில்தான் என்பதிலோ எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனாலும் இந்தக் கதைகள் மீது எனக்கு ஒரு சின்ன soft corner உருவாக என்ன காரணம் என்று எனக்கே புரியவில்லை. Curiosity value-வுக்காகப் படிக்கலாம்.

இரா. நடராசனின் “ஆயிஷா”

விகடனில் ஆயிஷா என்ற குறுநாவலைப் பற்றிய ஒரு குறிப்பைப் பார்த்தேன். இலவசமாக இணையத்தில் கிடைக்கிறது. நான் பெரிதாக ரசிக்கவில்லை, எனக்கு இது இலக்கியம் இல்லை. டிபிகல் “முற்போக்கு” புனைவுதான்.

ஆனால் என் அம்மா அப்பா பள்ளி ஆசிரியர்கள். நான் இந்த மாதிரிப் பள்ளிகளில் படித்தவன்தான். என் தலைமுறையில் ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானது. வகுப்புக்கு வராமல் ஓபி அடிக்கும் வாத்தியார்களையும் பார்த்திருக்கிறேன், உண்மையான அக்கறை உள்ளவர்களையும் பார்த்திருக்கிறேன். இன்று என் கல்லூரி batch’s 25-ஆவது ஆண்டு reunion வேறு.

என்னுடைய பள்ளி ஆசிரியர்களான வரதாச்சாரி, மரியசூசை (மூன்றாம் வகுப்பு, கணிதம், சரித்திரம், அரசு தொடக்கப் பள்ளி, லாடாகரனை எண்டத்தூர்), வேல்முருகன், அந்தோணிசாமி (ஆறு, ஏழு, எட்டாம் வகுப்புகள், ஆங்கிலம், உடற்பயிற்சி, அரசு மேல்நிலைப் பள்ளி, மானாம்பதி), மதன்மோகன், சூர்யா (ஒன்பது, பத்தாம் வகுப்புகள், கணிதம், அறிவியல், கார்லி மேல்நிலைப் பள்ளி, தாம்பரம்), நடராஜன், ஜெயசீலன் (11-12-ஆம் வகுப்புகள், இயற்பியல், உயிரியல், செயின்ட் ஜோசஃப் மேல்நிலைப் பள்ளி, செங்கல்பட்டு) ஆகியோரை இந்தப் புத்தகம் நினைவுபடுத்தியது. அதற்காக இதை எழுதிய திரு. இரா. நடராசனுக்கு நன்றி!

திரு. இரா. நடராசனின் தளத்திலிருந்து டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

இதைப் படிக்கும்போது உங்கள் ஆசிரியர்களின் நினைவு வந்தால் இந்தப் படைப்பு வெற்றிதான்.

எம்.ஏ.சுசீலாவின் “தேவந்தி” – படிக்க விரும்பும் புத்தகம்

திருமதி எம்.ஏ. சுசீலா ஓய்வு பெற்ற தமிழ் பேராசிரியை. தேர்ந்த வாசகி. அவர் எழுதிய சிறுகதைகள் தொகுக்கப்பட்டு தேவந்தி என்று தொகுப்பாக வந்திருக்கிறது.

ஒரு சிறுகதை இணையத்தில் கிடைக்கிறது. சீதையின் அக்னிபிரவேசத்தை கருவாகக் கொண்டு ஒரு மாறுபட்ட கோணத்தில் இந்தக் புதிய பிரவேசங்கள் என்ற கதையை எழுதி இருக்கிறார். புதுமைப்பித்தனின் சாபவிமோசனம் கதையால் inspire ஆனாராம்.

நடை கொஞ்சம் பழசு. “ஆதவன் தன் கிரணங்களால் பூமியை தழுவிக் கொண்டான்” ஸ்டைல். இது சாபவிமோசனம் இல்லைதான். என் anthology-யில் வராதுதான். ஆனால் கோணம் நன்றாக இருக்கிறது. படித்துப் பாருங்களேன்!

தொடர்புடைய தளம்: எம்.ஏ. சுசீலாவின் தளம்

பார்த்தசாரதி ஜெயபாலன் எழுதிய “ழார் பத்தாயின் குதிரை”

ஒரு விதத்தில் பார்த்தால் இது கிசுகிசு டைப் பதிவு. பூடகமாக குறிப்பிடப்பட்டிருக்கும் எழுத்தாளர்கள் யார் என்ற ஊகங்கள்தான்.

விமலாதித்த மாமல்லன் அருமையாக எழுதக் கூடியவர். ஆனால் நான் அவரது தளத்தைப் பார்ப்பது கொஞ்சம் அபூர்வம்தான். நிறைய கவிதைகள் வரும், எனக்கு கவிதை படிக்கும் அளவுக்கெல்லாம் அறிவு கிடையாது. இல்லாவிட்டால் ஆக்ரோஷமாக யாருடனாவது சண்டை போட்டுக் கொண்டிருப்பார், குறிப்பாக ஜெயமோகனைப் பற்றி நொட்டை சொல்லி நிறைய பதிவுகள் வரும். மனிதர் திறமையை, நேரத்தை வீணடிக்கிறார் என்றுதான் எனக்குத் தோன்றும். சரி, அவர் நேரம், அவர் இஷ்டம்.

அவருடைய தளத்தில் சமீபத்தில் பார்த்தசாரதி ஜெயபாலன் என்பவர் எழுதிய ழார் பத்தாயின் குதிரை என்ற கதையைப் பதித்திருந்தார். கதை எனக்கு டைம் பாஸ் அளவில்தான் இருந்தது. ஆனால் நிறைய எழுத்தாளர்களைப் பற்றி references இருந்தது. அந்தக் காலத்தில் குமுதத்தில் கிசுகிசு படித்து யார் இது என்று யோசித்தது போல இங்கேயும்.

சில excerpt-களையும், அவர்கள் யார் என்ற என் ஊகத்தையும் தந்திருக்கிறேன். ஒருவர் யார் என்று எனக்குத் தெரியவில்லை. ழார் பத்தாய் (Georges Bataille) யார் என்று கூடத் தெரியவில்லை. ஆங்கிலத்தில் இந்தப் பேரை எப்படி எழுதுவது? பற்றி தகவல் தந்த ராஜ் சந்திராவுக்கு நன்றி!

முதலில் ஒருவர் ஏறினார். கையில் சாட்டை ஒன்று தரப்பட்டது.
….
மணலும், காற்றும் மட்டுமே உள்ள ஒரு கட்டற்ற பெருவெளியில் பாய்ந்தோடிய அக்குதிரைகள் ஒரு புளிய மரத்தைக் கண்டதும் நின்று விட்டன. அதற்கு மேல் நகரவில்லை. அவ்வளவுதான். அவர் இறக்கி விடப்பட்டார்.

இது சுந்தர ராமசாமி.

இரண்டாமவர். குஸ்தி வாத்தியாரோ எனும்படியான தோற்றம் கொண்டிருந்தார்.
….
இப்போது அக்குதிரைகள் சென்ற வழியெல்லாம் இலைகள் நிரம்பியிருந்தன. சீரான வேகத்தில் சென்ற அக்குதிரைகள் சிறிது ஒய்வெடுத்து விட்டு மறுபடியும் ஏவுகணைகள் போன்று சீறின. ஒரு இடத்தில் முட்டையும், பழைய பேப்பரும் விற்பனை செய்யும் கடையைக் கண்டதும் அவை நின்று விட்டன. அவர் இறக்கி விடப்பட்டார்.

இது விமலாதித்த மாமல்லனேதான்.

மூன்றாமவர். மோட்சம் அளிப்பதற்காகவே வானத்திலிருந்து இறங்கி வந்தவர் போல் காணப்பட்டார்.

முதல் இருவரும் தேரை ஓட்டும் போது வாயைத் திறக்கவில்லை. ஆனால் இவர் ஓயாது சொற்பொழிவாற்றிய வண்ணம் வந்தார். அவர் செய்த உபதேசத்திற்கு குதிரைகள் தான் தூங்கியிருக்க வேண்டும். ஆனால் அவர் தூங்கியபடியே உபன்யாசம் செய்து வந்தார். வாய் எதையோ பிதற்றியபடியே இருந்தது.

ஒரு இடத்தில் குதிரைகள் வளைவைக் கடக்கும் போது தூங்கிக் கொண்டிருந்தவர் புரண்டு படுத்தார். குதிரைகள் நின்று விட்டன.

இது ஜெயமோகன்.

நான்காமவர். இவர் முகம் மிகவும் சாந்தமாகக் காணப்பட்டது. அத்தனை குதிரைகளையும் அன்போடு தடவிக் கொடுத்தார்.

குதிரைகள் நெகிழ்ந்தன. தேரில் ஏறியவர் குதிரைகளை சாட்டையால் விளாசவில்லை.வலது காலை எடுத்து இடது கால் மேல் போட்டுக் கொண்டு இன்னும் ஒரு நூற்றாண்டுக்குப் பின் பிரபலமாகப் போகும் பப்புவா நாட்டைச் சேர்ந்த ஒரு எழுத்தாளரின் நூலைப் படித்தபடி வந்தார். குதிரைகள் நிற்காமல் ஓடிக் கொண்டேயிருந்தன. ஒரு இடம் வந்தது. அந்த இடத்தில் வெயில் தவிர வேறு எதுவும் இல்லை. பாறைகளில் வெயில். கள்ளிச் செடிகளில் வெயில். வெயில் அந்தப் பிரதேசக் கிண்ணத்தில் வழிந்து வழிந்து நிரம்பிக் கொண்டிருந்தது.

குதிரைகள் நிற்கவில்லை. இவராகவே குதித்து விட்டார்.

இது எஸ். ராமகிருஷ்ணன்.

ஐந்தாமவர். இவரைக் கண்டதும் அத்தனை குதிரைகளின் முகத்திலும் இனம் புரியாத பீதி (இந்த “இனம் புரியாத பீதி” எனும் வார்த்தைப் பிரவாகம் ஆரம்ப நிலை எழுத்தாளர்களால் மட்டுமே பயன்படுத்தப் படக் கூடியது என்று ஒரு பெரிய எழுத்தாளர் சொல்லியிருக்கிறார்.ஆகவே “இனம் புரியாத பீதி”).

சாட்டையைக் கம்பீரமாக வாங்கிக் கொண்டார். சுற்றி ஒரு முறை பார்த்தார். ஆசனத்தில் அமர்ந்து ‘ஹொய்” என்ற பலத்த சத்தத்துடன் சாட்டையை வீசினார். அவ்வளவுதான். குதிரைகள் தேரிலிருந்து பிய்த்துக் கொண்டு திசைக்கொன்றாகப் பறந்தன. காற்றினும் கடிய வேகத்தில் அவை மறைந்தன. ஒரே ஒரு குதிரையைத் தவிர. அது ழார் பத்தாயின் குதிரை. தேருடன் பலமாகப் பிணைத்து விட்டார்களோ என்னவோ. பரிதாபமாக அசைய முடியாமல் அப்படியே நின்றது.

ஐந்தாமவர் விடுவதாக இல்லை. ‘ஹொய்’ என்று மறுபடியும் சாட்டையை வீசினார்.

முன் இரண்டு கால்களையும் சட்டென்று மடித்து தரையில் சாய்ந்து விட்டது.

இப்போது வரை அவர் ‘ஹொய்’ என்று சாட்டையை வீசிக் கொண்டே இருக்கிறார்.

இது யார் என்று தெரியவில்லையே? ராஜ் சந்திரா சொல்வதை வைத்துப் பார்த்தால் இது சாரு நிவேதிதா ஆக இருக்க வேண்டும் என்று யூகிக்கிறேன்.

பார்த்தசாரதி ஜெயபாலனுக்கு வாழ்த்துக்கள்!

பின்குறிப்பு: வி. மாமல்லனின் இலை போன்ற சிறுகதைகளை நான் விரும்பிப் படிப்பவன். உயிர்மை வரை போய் அவரது சிறுகதைத் தொகுப்பை வாங்க இன்னும் நேரம் கிடைக்காதது என் துரதிருஷ்டம்.

மைக்கேல் க்ரைக்டன் எழுதிய “ரைசிங் சன்”

எனக்குப் பிடித்த த்ரில்லர்களில் ஒன்று.

மைக்கேல் க்ரைக்டன் பெரும் வெற்றி பெற்ற எழுத்தாளர். ஜுராசிக் பார்க் திரைப்படத்தின் மூல நாவலை எழுதியவர் இவர்தான்.

ரைசிங் சன் ஒரு பெரும் ஜப்பானிய கம்பெனி – நகோமோடோ கார்ப்பரேஷன் – விழாவில் கொல்லப்படும் ஒரு பெண்ணோடு ஆரம்பிக்கிறது. லாஸ் ஏஞ்சலஸ் போலீஸ் துறை ஜப்பானிய பின்புலம் உள்ள பிரச்சினைகளைப் பார்த்துக் கொள்ள ஸ்மித்தை நியமித்திருக்கிறது. பெரிய கம்பெனி என்பதால் ஜப்பானிய கலாசாரத்தை நன்கு அறிந்த கேப்டன் கானரும் ஸ்மித்தோடு சேர்ந்து கொள்கிறார். கொலை நடந்த அறையில் வீடியோ surveilance இருக்கிறது, ஆனால் வீடியோக்களைத் தர ஜப்பானிய கம்பெனி அதிகாரி இஷிகுரோ முட்டுக்கட்டை போடுகிறார். இறந்தவள் ஒரு ஹை கிளாஸ் விபசாரி என்று தெரிகிறது. அவள் வீட்டில் விசாரித்ததில் சந்தேகம் எட்டி சகமுரா என்ற ஜப்பானியன் மேல் விழுகிறது. கானர், ஸ்மித், லாஸ் ஏஞ்சலஸ் போலீஸ் துறை மேல் ஜப்பானியர்களால் நிறைய அழுத்தம் தரப்படுகிறது. வீடியோக்கள் எடிட் செய்யப்பட்டிருக்கின்றன என்று தெரிகிறது. அரசியல் தொடர்புகள், செனட்டர் மார்ட்டன் என்று சந்தேகம் மாறிக் கொண்டே இருக்கிறது. முடிவு? படித்துக் கொள்ளுங்கள்.

புத்தகத்தை உயர்த்துவது ஜப்பானியர்களைப் பற்றிய சித்திரம்தான். கேப்டன் கானர் ஜப்பானில் வாழ்ந்தவர். ஜப்பானியர்கள் இன வெறி பிடித்தவர்கள், அவர்கள் அமெரிக்கப் பொருளாதாரத்தை கட்டுப்படுத்த முயற்சிக்கிறார்கள், அதை அமெரிக்கர்கள் புரிந்து கொள்ளவில்லை என்ற தியரிதான் கதையின் அடிப்படை. கதையின் கேப்டன் கானர் அதைப் புரிந்து கொண்டிருக்கும் சிலரில் ஒருவர், ஆனால் ஜப்பானிய கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டிருக்கிறார். அவர் மூலம்தான் இந்த சித்திரம் விவரிக்கப்படுகிறது. அது மிகைப்படுத்தப்பட்ட சித்திரம் என்றே நினைக்கிறேன். ஆனாலும் சுவாரசியமான சித்திரம்.

ஷான் கானரி நடித்து திரைப்படமாகவும் வந்தது.

படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

தொடர்புடைய சுட்டிகள்:
க்ரைக்டன் பற்றி விக்கியில்
ரைசிங் சன் திரைப்படம்