சுப்ரபாரதிமணியன் தளத்தில் என் பதிவு

இன்று எதேச்சையாக எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் தளம் பக்கம் போனேன். அவர் என்னுடைய ஒரு பதிவை அங்கே வெளியிட்டிருப்பதைக் கண்டு அப்டியே ஷாக்காயிட்டேன். ரொம்ப நாளைக்கு முன்னால் அவரது அப்பா என்று சிறுகதைத் தொகுப்பைப் பற்றி எழுதி இருந்தேன். அதை ஒரு பொருட்டாக மதித்து அவர் மீள்பதித்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது.

எனக்கு அப்பா சிறுகதைத் தொகுப்பு பிரமாதம். ஆனால் அதைப் படிப்பதற்கான மெச்சுரிடி 25 வருஷத்துக்கு முன்னால் அதை வாங்கியபோது எனக்கு இல்லை. புத்தகத்தை விடுங்கள், அதற்கு சுஜாதா எழுதிய முன்னுரை கூட அப்போது சரியாகப் புரியவில்லை. ஒரு பத்து பதினைந்து வருஷத்துக்கு முன்தான் அதில் உள்ள subtle ஆன சில கதைகள் புரிந்தன.

சுப்ரபாரதிமணியன் ஒரு acquired taste என்பதை மீண்டும் அழுத்திச் சொல்கிறேன். அவரது கதைகளில் யதார்த்தம் அதிகம், சுவாரசியம் குறைவு. அதை அவர் வேண்டுமென்றேதான் தன் பாணியாக வைத்திருக்கிறார். கவனமாகப் படிக்க வேண்டும், இல்லாவிட்டால் இதெல்லாம் ஒரு கதையா என்று தோன்றிவிடலாம். எந்த அற்ப விஷயத்திலும் ஒரு கதையைக் காண்பதுதான் அவரது ஸ்பெஷாலிடி – வெயில் காலத்தில் மரத்தடியில் ஒருவன் தூங்குகிறான் என்பதெல்லாம் அவருக்கு கதைக்கரு. அவரது சாயத்திரை எடுத்து வைத்திருக்கிறேன், இந்த வருஷம் முடிவதற்குள்ளாவது படிக்க வேண்டும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: சுப்ரபாரதிமணியன் பக்கம்
தொடர்புடைய சுட்டி: என் ஒரிஜினல் பதிவு

சுரதா தொகுத்த “நெஞ்சில் நிறுத்துங்கள்”

இந்த புத்தகத்தை தமிழ் virtual பல்கலைகழகத்தின் மின் நூலகத்தில் படித்தேன். பல அரிய ஆவணங்களைத் தொகுத்திருக்கிறார். கட்டாயம் படியுங்கள்!

ஆவணங்களின் அட்டவணை:

  1. பெரிய மருதுவின் மரண வாக்குமூலம் (இது உண்மையிலேயே பெரிய மருதுவின் வாக்குமூலமா என்று கொஞ்சம் சந்தேகத்தோடு குறிப்பிடுகிறார்)
  2. பச்சையப்ப முதலியாரின் உயில்
  3. ஆறுமுக நாவலரின் ஐந்து முடிவுகள்
  4. ராமலிங்க வள்ளலாரின் விளக்கப் பத்திரிகை
  5. பகடாலு நரசிம்ம நாயுடுவின் முதல் காங்கிரஸ் மாநாட்டு அனுபவங்கள்
  6. உ.வே. சாமிநாதய்யரின் சீவக சிந்தாமணி பதிப்பில் குறை கண்ட முருகேசப் பிள்ளையின் சவால்
  7. காரைக்கால் ராஜகோபாலப் பிள்ளையின் கல்வி அறிக்கை
  8. சூளை சோமசுந்தர நாயக்கரின் மன்னிப்புக் கடிதம்
  9. தினமணி டி.எஸ். சொக்கலிங்கத்தின் வேண்டுகோள்

தொடர்புள்ள சுட்டிகள்:

  • தமிழ் virtual பல்கலைக்கழகத்தின் மின் நூலகம்
  • சுரதாவின் “நெஞ்சில் நிறுத்துங்கள்” தொகுப்பு
  • பிரபஞ்சனின் “வானம் வசப்படும்”

    Chronologically, மானுடம் வெல்லும் புத்தகத்தின் தொடர்ச்சி. இரண்டு புத்தகங்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை. ஒரே கருத்து, ஒரே பின்புலம், ஏறக்குறைய அதே மனிதர்கள். மா. வெல்லும் நாவலின் அநேக பலங்களும் இதிலும் உண்டு. ஒரு பலவீனம் இல்லை. அதிலே கொஞ்சம் rambling, தொடர்பில்லாத பல துணைக் கதைகள் உண்டு. இது இன்னும் கொஞ்சம் கோர்வையாக இருக்கிறது. அப்படி கோர்வையாக இருப்பதே ஒரு விதத்தில் பலவீனமாகவும் இருக்கிறது. சுவாரசியமான துணைக் கதைகள் இதில் கொஞ்சம் குறைவு.

    பாண்டிச்சேரிக்கு ஒரு புது கவர்னர் – டூப்ளே. ஆனந்தரங்கம் பிள்ளைக்கு இன்னும் தலைமை துபாஷ் வேலை கிடைக்கவில்லை என்றாலும் அவர்தான் தமிழர்களில் முக்கியஸ்தர். பெரிய வியாபாரி, நிர்வாகி, துபாஷ் எல்லாம் அவர்தான். ஒரே ஒரு பிரச்சினை. டூப்ளேயின் மனைவி பிள்ளையின் நலம் விரும்பி இல்லை. டூப்ளேக்கு பிள்ளையின் அருமை பெருமை எல்லாம் தெரிந்தும், பிள்ளை எத்தனையோ உண்மையாக உழைத்தும், பிள்ளைக்கு கிடைக்க வேண்டிய பதவி, நிலை முழுதாகக் கிடைப்பதில்லை. அவரை மையமாக வைத்து அன்றைய சமுதாயம், வாழ்க்கை முறை சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

    அரண்மனைச் சதி genre-இல் என்னதான் சுவாரசியம் இருந்தாலும், மக்களின் வாழ்க்கையைப் பற்றிப் பேசும் புத்தகங்களைப் படிப்பதில் ஏற்படும் மகிழ்ச்சி வருவதில்லை. தமிழர்-பறையர்-துருக்கர்-பரங்கியர் வாழ்க்கை, கிருஸ்துவப் பாதிரியார்கள் ஜாதி பார்ப்பது, (ஜாதி கிடையாது என்று பறையர்-மேல் ஜாதியாருக்கு நடுவில் இருக்கும் சுவரை உடைக்கும் பாதிரியாரும் உண்டு) வேதபுரீஸ்வரர் கோவிலை உடைக்க முயல்பவர்கள், டூப்ளேயின் மனைவி அப்பட்டமாகத் திருடுவது, தாசிகள், லஞ்சம் வாங்குவது அதிகார வர்க்கத்தின் சாதாரண நிகழ்ச்சியாக இருப்பது என்று பல நிகழ்ச்சிகளை அருமையாகக் கோர்த்திருக்கிறார்.

    நாவலுக்கு 1995-ஆம் ஆண்டு சாஹித்ய அகாடமி விருது கிடைத்திருக்கிறது. தகுதி உள்ள நாவலே, ஆனால் மா. வெல்லும் என் கண்ணில் இன்னும் கொஞ்சூண்டு பெட்டர். எந்த வருஷம் வெளியானது என்று தெரியவில்லை. உடுமலை தளத்தில் கிடைக்கிறது. விலை இருநூறு ரூபாய்.

    ஜெயமோகன் இதைத் சிறந்த தமிழ் நாவல்களின் இரண்டாம் பட்டியலில் (பல்வேறு வகையில் முக்கியத்துவம் உடைய ஆனால் முழுமையான கலைவெற்றி கைகூடாத படைப்புகள்) சேர்க்கிறார்.

    என்னதான் மா. வெல்லும் கொஞ்சம் rambling என்றாலும் எனக்கு இதை விட அதுதான் ஒரு மாற்று ஒசத்தி. இருந்தாலும் சிறந்த வரலாற்று நாவல், சிறந்த நாவல். நிச்சயமாக தமிழின் டாப் மூன்று வரலாற்று நாவல்களில் ஒன்று. (மற்றவை, மானுடம் வெல்லும் – obviously. மற்றும் பொன்னியின் செல்வன். இதைப் படிப்பதற்கு முன்னால் மூன்றாவது இடத்தில் இருந்தது சிவகாமியின் சபதம்.) படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

    தொடர்புடைய சுட்டி: பிரபஞ்சனின் “மானுடம் வெல்லும்”

    இந்திரா பார்த்தசாரதியின் “கிருஷ்ணா கிருஷ்ணா”

    இ.பா.வின் புத்தகங்களின் எனக்கு ஓரளவு பிடித்த ஒன்று. எனக்கிருக்கும் மகாபாரதப் பித்து காரணமாக இருக்கலாம்.

    கிருஷ்ணனின் கதையை ஏறக்குறைய ஒரு காலட்சேப ஸ்டைலில் சொல்கிறார். கிருஷ்ணனே தன்னைக் கொன்ற வேடனிடம், தான் இறப்பதற்கு முன் சில பகுதிகளை நேரடியாக சொல்கிறான். சில பகுதிகளை நாரதர் சொல்கிறார். பாரதம், பாகவதத்தின் பல பகுதிகளை – திரௌபதி சுயம்வரம், வஸ்திராபஹரணம், ஸ்யமந்தகமணி, பாரதப் போர், ஜராசந்தன் வதை, கம்சன், ராதா, பீஷ்மர், கர்ணன், துரியோதனன் மனைவி பானுமதி, ஷைல்பியா – சுவாரசியமாகத் திருப்பிச் சொல்லப்படுகின்றன. மீள்வாசிப்பு என்றோ வேறு கோணம் என்றோ எதுவும் இல்லை, ஸ்டைல்தான் வேறு மாதிரி இருக்கிறது.

    உடுமலை தளத்தில் கிடைக்கிறது. விலை தொண்ணூறு ரூபாய்.

    மகாபாரதப் புத்தகம். எனக்குப் பிடித்திருப்பதில் ஆச்சரியமில்லை. அந்தப் பித்து இல்லாதவர்களுக்கு கூறியது கூறலாகத் தெரியலாம்.

    தொடர்புடைய சுட்டிகள்:

  • இ.பா. பக்கம்
  • எழுத்தாளர் இரா. முருகனின் விமர்சனம்
  • பத்ரி சேஷாத்ரியின் விமர்சனம்
  • க.நா.சு. பற்றி பாரதி மணி II

    க.நா. சுப்ரமண்யம் நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கிய பங்களிப்பாளர்களில் ஒருவர். படிப்பது, எழுதுவது தவிர வேறு எதுவும் செய்யாதவர். அவரது பொய்த்தேவு மிக அருமையான நாவல். அவரது படித்திருக்கிறீர்களா? எனக்கு பர்சனலாக மிக முக்கியமான படைப்பு – நல்ல தமிழ் படைப்புகளைப் பற்றி எனக்கு சொன்ன முதல் புத்தகம் அதுதான்.

    பாரதிமணி க.நா.சு.வின் மாப்பிள்ளை. பாரதி திரைப்படத்தில் பாரதியின் அப்பா சின்னச்சாமியாக நடித்தவர். அவர் க.நா.சு.வை நினைவு கூரும் பதிவு ஒன்று இட்லிவடை தளத்தில் இருக்கிறது. கட்டாயமாக படியுங்கள்!

    இரண்டு வருஷங்களுக்கு முன் அவர் க.நா.சு.வைப் பற்றி எழுதிய இன்னொரு பதிவும் அருமையானது. க.நா.சு. என்ற ஆளுமையை அருமையாகச் சித்தரிக்கிறது. அதைப் பற்றியும் முன்னால் எழுதி இருந்தேன். இப்போது ஏறக்குறைய அதே வார்த்தைகளை வைத்து இந்தப் பதிவுக்கும் சுட்டி…

    தொடர்புடைய பதிவுகள்
    பொய்த்தேவு
    படித்திருக்கிறீர்களா?
    முந்தைய பதிவு

    காகிதப் புத்தகங்களை விட மின் புத்தகங்களே லாபகரமானவை!

    சமீபத்தில் வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் படித்த கட்டுரை.

    மின் புத்தகங்கள் சராசரியாக 5.92 டாலர் லாபம், இது காகிதப் புத்தகங்களை விட 7 செண்டுகள் (கிட்டத்தட்ட மூன்றேகால் ரூபாய்) அதிகம். ஆனால் சதவிகிதப்படி பார்த்தால், மின் புத்தக வருமானத்தில் 46 சதவிகிதம் லாபம். காகித்தப் புத்தகத்திலோ 23 சதவிகிதம்தான் லாபம்! கீழே உள்ள படத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

    நம்மூரில் மின் புத்தகங்களில் லாபம் என்ற பேச்சே இல்லை என்று நினைக்கிறேன்.

    தொடர்புடைய சுட்டி: புத்தகங்களின் எதிர்காலம்

    ஆயுள் தண்டனை – நரசய்யா

    (திருமதி லலிதாவின் புத்தக விமர்சனம் – அது சரி யார் இந்த லலிதா?  இந்தத் தளத்தின் ஆசிரியர்களுள் ஒருவரான RVக்கு படிக்க சொல்லிக் கொடுத்ததே அவர் தான். இவர் ஒரு தேர்ந்த வாசகர். சிலிக்கன் ஷெல்ப் இலக்கிய வட்டத்தின் guest உறுப்பினர்.  சென்னையில் வசிக்கிறார். ஆமாம், திருமதி லலிதா ஆர்வியின் தாய்தான் 🙂 )

    அண்மையில நான் படித்த நரசய்யாவி்ன் ஆயுள் தண்டனை மனதைத் தொட்ட சிறுகதைகளில் ஒன்று 94-வயது மூதாட்டி வாழ்க்கையின் நிலையாமையை எவ்வளவு எளிதாக விளக்கி விடுகிறார். தன் வாழ்க்கையில் குறுக்கிட்ட பல்வேறு ஏற்றத்தாழ்வுகளை, மேடு பள்ளங்களை மனதில் இருத்தி தன் பேரனுக்கு அரிய தத்துவங்களச் சுலபமாக புரிந்துகொள்ளக் கூடிய வகையில் விளக்கும் பாங்கு உண்மையிலேயே பாராட்டுதலுக்கு உரியது.

    உயர் பதவியில் இருக்கும் தன் பேரனைப் பார்த்து பாட்டி கேட்கிறாள். ‘உன் கடடுப்பாட்டில் பணியாற்றும் ஒருவரை வேறு பணியிடத்திற்கு மாற்றும் அதிகாரம் உனக்கு உள்ளதா?’

    ‘ஆம். உண்டு’ இது பேரனின் பதில். அந்த நபர் பணிமாற்றத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால் என்னசெய்வாய்? என்று பாட்டி கேட்க, ‘வலுக்கட்டாயமாகப் பணியிலிருந்து விடுவித்து அனுப்பி விடுவேன்’என்கிறான் பேரன்.

    மீண்டும் கேள்விக்கணை தொடுக்கிறாள் பாட்டி. ‘மேலும் அந்தக் காலிப் பணியிடத்தில் வேறு ஒரு நபரை மாற்றவோ அல்லது நியமிக்கவோ கூட உனக்கு அதிகாரம் உண்டா?’ ‘இல்லை’ என்கிறான் பேரன்.

    பாட்டி மெளனம் காக்கிறாள். சற்று நேரம் பதில் இல்லை. கண் முன்னே அவள் வாழ்க்கை சினிமா போல் மனத்திரையில் மலர்கிறது.

    ‘வாழ்க்கைப் பயணத்தில் நீண்டகாலம் பயணிக்கும் பயணி நான். ஆனால் என்னுடன் இருந்த பலரும் என்னைவிட்டுப் பிரிந்துவிட்டார்கள்.அதில் முதியவர்கள், இளையவர்கள் என எத்தனையோ பேர்  அடக்கம். என்னை வேறு இடத்திற்கு மாற்ற இறைவனுக்கு மனமில்லை போலும். ஒரு வேளை என்னை அனுப்பக் காலி இடம் ஏதுமில்லையோ என்னவோ? இருந்து அனுபவிக்கவேண்டும் என்பதுதான் எனக்கு விதிக்கப்பட்டுள்ளதோ? இதுதான் எனக்குக் கிடைத்த ஆயுள் தண்டனை என்று நினைக்கிறேன்.’ பாட்டியின் குரலில் விரக்தி தொனித்தது.

    பாட்டியின் கூற்று எத்தனை உண்மை! ‘தண்டனை ஆயுளுக்கும் இருக்கலாம். ஆயுசாலேயும் இருக்கலாம் இல்லையா?’ பாட்டியின் வினா பேரனின் சிந்தனையைத் தூண்டியது. இன்றைய ஆதர்சவாதியான பேரன் ‘constant quantity theory’ என்பதையும் உடலில் எந்த விதக் கோளாறும் இல்லாமல் இருக்கும் பாட்டியின் உடல்நிலை டாக்டர்களே வியக்கும் “clinical wonder”என்பதையும் ஒப்பிட்டுப் பாரக்காமல் இருக்க முடியவில்லை.

    கடைசியில் பாட்டி ‘சதாயுசா நன்னா ஐஸ்வர்யத்தோடு, ஆரோக்கியத்தோடு வாழவேண்டும்’ என்று மனமார பேரனை வாழ்த்துகிறாள். பேரனுக்கு சற்றே நெருடல் மனதில். உடனே பிறக்கிறது கேள்வி.

    ‘பாட்டி நீண்ட ஆயுஸ் உங்களுக்குத் தண்டனை என்றால் எனக்கும் அதே தண்டனைதானா?’ பேரன் குழம்புகிறான். பாட்டி சொன்னாள். ‘முகூர்த்தம் ஜ்வலிதம் ஸ்ரேயோ நது தூமாயுதம் சிரம். இது மகாபாரதத்திலே, உத்யோக பர்வத்திலே வரது. ராணி விதுலை சொல்றா. அப்படீன்னா யுகங்களுக்கும் பொகஞ்சுண்டு இருக்கிறத விட ஒரு கணத்துக்குப் ப்ரகாசிச்சுட்டுப் போறது உத்தமம்.”

    ஆயுள் தண்டனையை விட ஆயுளால் கிடைக்கும் தண்டனை கொடியதுதான் என்பதுதான் கதையின் முத்தாய்ப்பே.

    இந்தப் பதிவைப் பார்த்துவிட்டு நரசய்யாவே எழுதிய மறுமொழி:

    எப்படி ஏன் என்று தெரியாமல் வைத்திருப்பது ஆண்டவனின் முக்கியமான விளையாட்டுகளில் ஒன்று. செப் 15, 2011 ல் இடபபட்ட இந்த இடுகை இன்று, மதுரையில் எங்கள் தாயார் சிரார்த்தத்திற்கு வந்திருக்கும் எனது கண்களில் பட்டது! நானே மறந்துவிட்டேன். ஆனால் இன்று பார்க்கநேர்ந்தபோது இவ்விடுகை இட்டவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளவேண்டும் எனவே தோன்றிற்று.
    உங்களுக்கும் உமது தாயாருக்கும் எனது நன்றிகள்.
    ஏனென்றால் நான் தான் அக்கதை எழுதிய நரசய்யா!

    தொடர்புடைய சுட்டிகள்:
    தென்றல் இதழில் நரசய்யாவின் நேர்காணல் முதல் பகுதி, இரண்டாம் பகுதி (Registration Required) சுட்டிகள் கொடுத்த நண்பர் அரவிந்துக்கு நன்றி!

    ஸ்டூவர்ட் நெவில் எழுதிய “கோஸ்ட்ஸ் ஆஃப் பெல்ஃபாஸ்ட்”

    எனக்கு ஒரு தியரி உண்டு. பொழுதுபோக்குக்காக எழுதப்படும் “வணிக” எழுத்தில் சில ஏதோ ஒரு கூறு பிரமாதமாக அமைந்து இலக்கியம் என்ற நிலையை எட்டிவிடுகின்றன. பொன்னியின் செல்வனின் கதைப் பின்னல், சாத்திரம் சொன்னதில்லையின் கச்சிதமான அமைப்பு, நிர்வாண நகரத்தில் வெளிப்படும் ஒரு இளைஞனின் பாத்திரப் படைப்பு, ஜான் லே காரின் பல புத்தகங்கள் – குறிப்பாக ஸ்மைலி சீரிஸ் என்று நிறைய உதாரணம் சொல்லலாம். அந்த லிஸ்டில் ஸ்டூவர்ட் நெவில் எழுதிய Ghosts of Belfast-க்கும் ஒரு இடம் உண்டு.

    கதையின் ஒன் லைனரை ரொம்ப சிம்பிளாக இப்படி சொல்லலாம். முன்னாள் ஐரிஷ் தீவிரவாதி ஜெர்ரி ஃபெகன். 12 பேரைக் கொன்றதற்காக ஜெயிலில் இருந்துவிட்டு இப்போதுதான் வெளியே வந்திருக்கிறான். அவன் பின்னாலேயே அந்த 12 பேரின் ஆவிகளும் பிரம்மஹத்தி போல, கிரேக்க தொன்மங்களின் furies போல, அலைகின்றன. இப்போது வடக்கு அயர்லாந்தில் பிரச்சினைகள் “முடிந்து” முன்னாள் தீவிரவாதித் தலைவர்கள் அரசு பொறுப்பில் இருக்கிறார்கள். இந்த 12 பேர் இறந்த குண்டு வெடிப்புக்கு ஆணை இட்டவர்கள், உதவியாக இருந்தவர்கள் இத்யாதியினரில் 12 பேர் இறந்தால்தான் இந்த ஆவிகள் அவனை விட்டு விலகும். “முடிந்து போன” பிரச்சினையைக் கிளற யாருக்கும் விருப்பமில்லை. அடுத்தது என்ன?

    நான் இதை ஒரு த்ரில்லர் என்றுதான் எடுத்துப் படித்தேன். இது சர்வ நிச்சயமாக இலக்கியமே என்பது முதல் இருபது முப்பது பக்கத்திலேயே தெரிந்துவிட்டது. எக்கச்சக்க ஆக்ஷன் சீன்கள் உண்டு. ஆனால் இந்தக் கதையின் கரு ஜெர்ரியின் redemption -தான். ஜெயிலுக்குப் போவதற்கு முன் ஜெர்ரி தான் ஒரு வேலை பார்ப்பதாகவே நினைக்கிறான். அவனுடைய மாற்றம், குற்ற உணர்வு, முன்னாள் முதலாளிகளை எதிர்ப்பதைத் தவிர வாழ வேறு வழியே இல்லை என்று அவனும் அவன் மூலம் நாமும் உணர்வது, அவனை விடாமல் துரத்தும் ஆவிகள் (அவன் ஒவ்வொரு காரணியாகக் கொல்லக் கொல்ல ஒவ்வொரு ஆவியாக மறைகிறது) எல்லாம் மிக அற்புதமாக வந்திருக்கிறது.

    இதுதான் நெவில்லின் முதல் நாவலாம். 2009-இல் இங்கிலாந்தில் ட்வெல்வ் (Twelve) என்ற பேரில் வெளிவந்திருக்கிறது. அமெரிக்க எடிஷனின் பேர் கோஸ்ட்ஸ் ஆஃப் பெல்ஃபாஸ்ட். பல பரிசுகளை வென்றிருக்கிறது. இதற்கு ஒரு sequel-உம் உண்டு – “Collusion“. அதிலும் ஜெர்ரிதான் ஹீரோ, இன்னும் படிக்கவில்லை அதைப் பற்றிய பதிவு இங்கே..

    தொடர்புடைய சுட்டிகள்:

    ஜோ டி க்ரூஸின் “ஆழிசூழ் உலகு”

    ஒரு இரண்டு வருஷம் முன்னால் படிக்க ஆரம்பித்த புத்தகம். கவனமாகப் படிக்க வேண்டிய புத்தகம் என்று தெரிந்தது. சரி அப்புறம் படிக்கலாம் என்று எடுத்து வைத்தேன், படிக்க இப்போதுதான் நேரம் வந்தது.

    சிறந்த புத்தகங்களில் ஒன்று. எந்த வித சந்தேகமும் இல்லை. குறிப்பாக கடல் காட்சிகள் அற்புதமானவை. உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும்போது சுற்றி இருக்கும் மீன்களில் கூட்டத்தின் அழகை ரசிக்கும் தருணம் புத்தகத்தின் ஒரு உச்சம். தொம்மந்திரை, கோத்ரா, போஸ்கோ மூவரும் சுறா வேட்டைக்குப் போகும் காட்சி ஒரு தொன்மம் ஆவதற்கான தகுதி உள்ள சித்தரிப்பு. தென் மாவட்டத்து மீனவர் வாழ்க்கையை இத்தனை நுண்விவரங்களுடன் படிப்பது ஆனந்தமாக இருக்கிறது.

    மீனவர் வாழ்க்கையை – அதுவும் கிருஸ்துவ பரதவர் வாழ்க்கையை – இது வரையில் இவ்வளவு அருமையாக யாரும் சித்தரித்தே இல்லை. (கடல்புரம் நாவலையும் கணக்கில் வைத்துக்கொண்டுதான் இதைச் சொல்லுகிறேன்)

    நான் கதைச் சுருக்கம் எல்லாம் எழுதப் போவதில்லை. பரதவர் வாழ்க்கை, அவ்வளவுதான். இதில் யார் யாருக்கு துரோகம் செய்தான்(ள்), யார் குடும்பம் வாழ்ந்தது, யார் குடும்பம் வீழ்ச்சி அடைந்தது, யார் யாரை கொன்றது, யார் யாரோடு படுத்தது எல்லாம் வெறும் பரதவர் வாழ்க்கையை விவரிக்க உதவும் ஒரு சட்டம்தான் (framework). குசும்பு, அடிதடி, காதல், காமம், கோபம், வன்மம், துரோகம், அடுத்த ஊர்க்காரர்களோடு சண்டை, கடைசி வரை நல்லவர்களாகவே இருந்த சிலர், தவறு செய்யும் பலர், அவர்களில் திருந்தி வாழும் சிலர், ஊரின் நீண்ட கால பொருளாதார முன்னேற்றத்துக்கு உழைத்த ஒரு பாதிரி (நிஜ மனிதராம்), ஊரைச் சுரண்டும் பல பாதிரிகள் என்று கதை போகிறது.

    எனக்குப் பிடித்த காட்சிகளில் சில: சுறா வேட்டை; பெரிய மீன் கட்டுமரத்தைத் தூக்குவது; பரதவர்கள் கிருஸ்துவர்கள் ஆக மாறி பல நூறு ஆண்டுகள் ஆனாலும் கன்னியாகுமரி அம்மனை விட முடியாதது; சவேரியார் குகைக்கு போகும் சேகர்; ஒரு ஓரத்தில் காட்டப்படும் நாடார்களின் வளர்ச்சி; உயிருக்குப் போராடும்போது மீன் கூட்டத்தின் அழகை ரசிக்கும் சூசையும் சிலுவையும்; தங்கள் பாதுகாப்பில் விடப்பட்ட நகைப்பெட்டி என்ற பெரும் பொறுப்பின் சுமையில் அழுந்திக் கொண்டிருப்பவர்களிடம் ஒரு வருஷமாக அது காலியாகத்தான் இருக்கிறது என்று அலட்சியமாக சொல்லும் செலின்; சண்டையைத் தவிர்க்க விரும்பும் முன்னாள் சண்டியர் ஜஸ்டின் தன் மகனிடம் உன்னால்தான் கோழையாகிவிட்டேன் என்று சொல்வது; ஜஸ்டினின் இறப்பு; சுந்தரி-சூசை உறவு சூசையின் மனைவிக்குத் தெரியும் என்று சுந்தரி உணரும் இடம்; ஹிந்து-கிருஸ்துவ மதங்களைப் பற்றிப் பேசும் இடம்; மனைவியை முதலாளிக்குக் கூட்டிக் கொடுக்க முயல, முதலாளி நாசூக்காக மறுப்பது…

    குறை என்று பெரிதாக எதுவும் சொல்வதற்கில்லை. 1936-இல் கலர் என்றும் லோன் என்றும் ஆங்கில வார்த்தைகளை சாதாரணர்கள் பயன்படுத்துவது கொஞ்சம் நெருடியது. அதே வருஷத்தில் சிதம்பரம் பிள்ளைக்கு என்னாயிற்று என்று விசாரிப்பது anachronism ஆகத் தெரிகிறது. அப்போது அவர் இறந்தே போய்விட்டார், ஜெயிலிருந்து வந்தே இருபது வருஷம் ஆகிவிட்டது.

    மனித மனத்தின் உள்ளுணர்வுகள் பற்றிய தரிசனங்கள் சொல்லும்படியாக இல்லை, அப்படி இருந்திருந்தால் புத்தகத்தை இன்னும் உயர்ந்த இடத்தில் வைத்திருப்பேன். ஆசிரியர் முயன்றிருக்கிறார்; வசந்தாவுக்கு ஜஸ்டின் மீது உள்ள வன்மமும், சூசை-சிலுவை உறவும் அவற்றுக்கான முயற்சிகள்தான். ஆனால் அவற்றில் ஏதோ குறைகிறது.

    நண்பர் பாலாஜி இது நேர்கோட்டில் செல்லும் straightforward narrative என்று சொன்னார்; உண்மைதான், ஆனால் ஒரு literary டெக்னிக் பயன்படுத்தப்படவில்லை என்பது எனக்கு குறையாகத் தெரியவில்லை. தனித்துவமுள்ள பாத்திரங்கள் இல்லை என்ற அவர் விமர்சனத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன், ஆனால் அதுவும் அப்படி இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்றுதான் சொல்ல முடியும்.

    என் அப்பா படித்துவிட்டு இத்தனை “கெட்ட” வார்த்தைகளை ரியலிசத்துக்காக அப்படியே பயன்படுத்தி இருக்க வேண்டாம் என்று சொன்னார். அவருடைய வால்யூ சிஸ்டம் வேறு என்பதைப் புரிந்து கொள்கிறேன், ஆனால் அவரது நிலையை நிராகரிக்கிறேன். நான் ரசித்த ஒரு வார்த்தைப் பிரயோகத்தை அவருடைய நிலை கருதி இங்கே பிரசுரிக்கவில்லை. 🙂

    தோழி காவேரி சில உடல் உறவுக் காட்சிகள் மிகவும் graphical ஆக இருப்பது கொஞ்சம் நெருடியதாகச் சொன்னார்; எனக்கு அப்படித் தெரியவில்லை. நாங்கள் சிறு வயதில் படித்த புத்தகங்கள் வேறு என்று தெளிவாகத் தெரிகிறது. 🙂

    எஸ்.ரா.வின் நூறு சிறந்த நாவல்கள் லிஸ்டில் இருக்கிறது. ஆனால் ஜெயமோகனின் லிஸ்டில் இல்லை. அவரது லிஸ்ட் வெளியான பிறகு பதிப்பிக்கப்பட்ட புத்தகம் என்பதுதான் காரணமாக இருக்க வேண்டும். பேசும்போது புகழ்ந்து பேசி இருக்கிறார். ஒரு பதிவும் எழுதி இருக்கிறார்.

    தமிழினி வெளியீடு. விலை 320 ரூபாய். தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான பரிசைப் பெற்றிருக்கிறது. 2004-இல் வெளிவந்திருக்கிறது.

    சாதனை. கட்டாயமாகப் படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

    தொடர்புடைய சுட்டி: ஆழி சூழ் உலகு பற்றி ஜெயமோகன் பதிவு

    பாரதி வைத்த மூன்று நெருப்புகள்

    இன்று பாரதி நினைவு நாள். (செப்டம்பர் 11) என் அப்பா ராமசாமி எழுதிய guest post. அப்பாவின் நடைக்கும் என் நடைக்கும் உள்ள வித்தியாசம் ஆச்சரியப்படுத்துகிறது. ஓவர் டு அப்பா!

    செப்டம்பர் 11-ஆம் தேதி அன்றுதான் பாரதிர பா ரதம் ஓட்டிய அமரகவி பாரதியின் நினைவு நாள். பாரதி “யார்” என்று கேட்காமல் ஆண்டுதோறும் அந்த நாளைக் கொண்டாடி வருகிறோம். அன்னார் சிலைக்கு மாலை அணிவித்தல், தேசிய கவி, கவிதை மூலம் விடுதலை வேட்கையைத் தூண்டிய புரட்சியாளர் சமுதாயச் சீர்திருத்தவாதி என்பன போன்ற புகழ் மாலைகள் சூட்டிப் பெருமை கொள்கிறோம். ஆனால் அந்தக் கவிஞன் இதயத்தில் கோபம் பல இடங்களில் கொப்பளிக்கிறது. மக்களை,சமூகத்தை பலவகையிலும் சாடுகிறான். கொழுந்து விட்டு எரியும் அந்தக் கனல் மூன்று இடங்களிலும் தீயிட்டுக் கொளுத்துகிற அளவுக்கு இருந்தது என்றால் அது மிகையாகாது.

    முதலாவதாக நாம் பெண்ணியம், பெண் விடுதலை போன்ற விஷயங்களைப் பெருமையுடன் பெருமளவில் விவாதிக்கிறோம். அலசி அலசி பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றுகிறோம். ஆனால் அன்றே பாரதி “பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா” என்றும் “பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்” என்று விடுதலைக் கும்மியிலும் பலவாறு பாடி மகிழ்கிறான். சக்தி, சக்தி எங்கும் சக்தி என உரத்துக் கூறிப் பெருமிதம் கொள்கிறான். ஆனால் பெண்களுக்கு இழுக்கு என்றால் அவன் நெஞ்சம் பொறுப்பதில்லை. “மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்” என்று வெகுண்டெழுகிறான். இதுதான் அய்யா, பாரதி பற்ற வைக்கும் முதல் நெருப்பு!

    இரண்டாவதாக நாம் இலவசக் கல்வி, சமச்சீர் கல்வி,உயர் கல்வி, தொழிற் கல்வி என்றெல்லாம் அதிக அளவில் தர்க்கம் செய்கிறோம். மேடைகளில் முழங்குகிறோம். ஆனால் அடிப்படைக் கல்வியை, வாழ்க்கைக் கல்வியைப் பெருமளவில் மறந்துவிட்டோமே? கல்விக்கு வேண்டிய அடிப்படை வசதிகளைக் கூட செய்து கொடுக்கத் தவறிவிட்டோமே? இளஞ்சிறார் வாழ்க்கை வளம் பெற நல்ல பல ஆயத்தங்கள் செய்துவிட்டோமா? அமைப்புகளை உருவாக்கி இருக்கிறோமா? மீண்டும் பாரதி இங்கும் அறைகூவல் விடுக்கிறான்.

    “அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல்” போன்ற நற்காரியங்கள் பலவிருந்தாலும் “ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” என்ற உண்மையை முழுமையாக பாரதி உணர்ந்த காரணத்தால், “கல்வி வேண்டும், கல்விச் சாலைகள் வேண்டாவா?” என்று வினவுகிறான். மீண்டும் கவிஞன் குரல் உரத்துக் கேட்கிறது.

    வீடுதோறும் கலையின் விளக்கம்
    வீதிதோறும் இரண்டொரு பள்ளி
    …………
    நகர்களெங்கும் பலபல பள்ளி
    தேடு கல்வியிலாத தோரூரை
    தீயினுக்கு இரையாக மடுத்தல்

    மீண்டும் பாரதியின் நெருப்பு; ஆம் பாரதியின் இரண்டாவது நெருப்பு.

    சிறுமை கொண்டு பொங்கியவன் பாரதி. தவறென்று தெரிந்தால் தயக்கமின்றித் தட்டிக் கேட்கும் வல்லமை படைத்தவன். பாண்டவர்களின் மூத்தோன், தருமன் சூதாடி உடைமைகளனைத்தையும் – இளவல்கள், மனைவி அனைவரையும் இழந்தான். பாஞ்சாலி கெளரவ ஸபையில் அவமதிக்கப்பட்டாள். தவறு செய்த அண்ணனை, மூத்தவன் என்று கூடப் பாராமல் பீமன் சொற்களால் கவிஞன் சாடுகிறான்.

    இது பொறுப்பதில்லை தம்பி!
    எரிதழல் கொண்டு வா
    கதிரை வைத்திழந்தான்-அண்ணன்
    கையை எரித்திடுவோம்

    மூன்றாவது முறையாக கவிஞன் பாரதியின் கனல் தெறிக்கும் சொற்கள் இது. பாரதியின் மூன்றாம் நெருப்பு.

    பாரதி நினைவு நாளில், நாமும் வாய்ச்சொல் வீரராக இல்லாமல், செயல் வீரராக மாறி, அவனுடைய முற்போக்கு கருத்துக்களை நடைமுறைப்படுத்த சூளுரைப்போம்.

    P.S. ஏன் அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் கவிதையை விட்டுவிட்டார் என்று தெரியவில்லை.