பெருமாள் முருகனின் “நிழல் முற்றம்”

ஒரு பி சென்டர் – அதாவது ஒரு நடுவாந்தர ஊரின் (திருச்செங்கோடு) சினிமா தியேட்டர். தியேட்டர் கூட இல்லை, டெண்டு கொட்டாய். அதன் உப தொழில்களாய் ஒரு சோடாக்கடை, ஒரு டீக்கடை. அங்கே வேலை செய்யும் பதினைந்து சொச்சம் வயது இளைஞர்கள். இந்த சர்வசாதாரண பின்புலத்தை வைத்துக் கொண்டு என்னத்தை இலக்கியம் படைப்பது?

பெருமாள் முருகன் படைத்திருக்கிறார். அவர்களின் வாழ்க்கையை மிகுந்த நம்பகத்தன்மையோடு எழுதி இருக்கிறார். இத்தனைக்கும் இந்தியாவிலிருந்து வரும் வரைக்கும் இந்த மாதிரி டெண்டு கொட்டாய்கள் என் வாழ்க்கையின் ஒரு முக்கியப் பகுதி. எண்டத்தூர், மானாம்பதி, கூடுவாஞ்சேரி, கருப்பூர், கரக்பூர், திப்பசாந்திரா டெண்டு கொட்டாய்களில் நான் எக்கச்சக்க சினிமா பார்த்திருக்கிறேன். இந்த மாதிரி இளைஞர்கள்தான் சோடா விற்பார்கள். பெருமாள் முருகன் அவர்கள் வாழ்க்கையைப் பற்றி எந்தப் பிரக்ஞையும் இல்லாத என் போன்றவர்களுக்குக் கூட இப்படித்தான், இவ்வளவு குரூரமாகத்தான் இவர்கள் வாழ்க்கை இருக்கிறது என்று நம்ப வைக்கிறார். சாதித்திருக்கிறார்.

சின்னப் புத்தகம். 150 பக்கம் இருந்தால் அதிகம். நான் படித்த காப்பி காலச்சுவடு வெளியீடு. (2005) எப்போது எழுதப்பட்டது என்று தெரியவில்லை.

என்ன கதை? ஒன்றுமில்லை. இவர்கள் வாழ்க்கைதான் கதை. எம்ஜிஆர் படம் வந்தால் சோடா அதிகமாக விற்பதும் தூங்குபவனிடமிருந்து செருப்பு திருடுவதும் பாக்கெட் அடிப்பதும் கஞ்சா அடிப்பதும் குஷ்டரோகி அப்பனை தான் வேலை செய்யும் தியேட்டர் பக்கம் வராதே என்று விரட்டுவதும், அந்த அப்பன் தான் பிச்சை வாங்கி வந்த “சுவையான” உணவை தன் மகனுக்குத் தரத் துடிப்பதும் படத்துக்கு கஸ்டமரோடு வந்த வேசியைக் காலில் மயிர் கூட முளைக்காத இளைஞன் தடவிப் பார்ப்பவதும் அந்த கஸ்டமர் தூங்கும்போது கடைக்காரனிடம் வேசி போய் வருவதும் பெண்டாட்டியைப் பார்க்க முடியாமல் காய்ந்து கிடக்கும் படத்தின் கமிஷன் ஏஜென்ட் ஒரு இளைஞனுக்கு ஊற்றிக் கொடுத்து அவனோடு படுப்பதும்தான் கதை. ஓர் இடத்தில் கூட சின்ன நம்பிக்கை கூட வராமல் பார்த்துக் கொள்கிறார், ஆனாலும் கதையைப் படிக்கும்போது ஒரு மன எழுச்சி ஏற்படுகிறது, சிறந்த இலக்கியம் என்று தெரிகிறது. மனிதர் வித்தைக்காரர்தான்.

ஜெயமோகன் இதை சிறந்த தமிழ் நாவல்களின் இரண்டாம் பட்டியலில் சேர்க்கிறார். எஸ்.ரா.வும் இதை நூறு சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்றாகக் குறிப்பிடுகிறார். ஜெயமோகன் இலக்கியத்தில் யதார்த்தம் என்பதை விளக்கும்போது

நல்ல படைப்பு முதலில் ஒரு மெய்நிகர் வாழ்க்கையனுபவத்தை வாசகனுக்கு அளிக்கிறது. அவன் வாழ்ந்து கொண்டிருக்கும் புற யதார்த்தத்தைக் கற்பனையால் மீறி இன்னும் பல யதார்த்தங்களில் அவன் வாழச் செய்கிறது. அதன் வழியாக அவனை அது ஒரு சுயதரிசனத்துக்கு, வாழ்க்கைத் தரிசனத்துக்கு, பிரபஞ்ச தரிசனத்துக்குக் கொண்டு செல்கிறது

என்று எழுதி இருந்தார். இது மெய்நிகர் வாழ்க்கை அனுபவத்தை அளித்தும், வேறு யதார்த்தத்துக்கு வாசகனைக் கொண்டு சென்றும், சுயதரிசனம், வாழ்க்கை தரிசனம், பிரபஞ்ச தரிசனம் இல்லை என்று கருதியே இதை இரண்டாம் பட்டியலில் வைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். இவ்வளவு குரூரமான, வாழ்க்கையைப் பற்றி எந்த நம்பிக்கையும் உருவாக முடியாத நிலையிலும் அர்த்தமுள்ள வாழ்க்கை நடப்பது எனக்கு மன எழுச்சியைத் தருகிறது, தரிசனமாக இருக்கிறது. அவருக்கு அப்படி இல்லை போலும்.

சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்று. கட்டாயம் படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

நண்பர் சிவ் ஒரு முக்கியமான பகுதியை நினைவுபடுத்துகிறார். அவரது வார்த்தைகளிலேயே:

ஓனரின் குழந்தையுடன் சோடா விற்கும் பையன் விளையாடுவதாக செல்லும் ஒரு அத்தியாயம் மிகவும் அருமையான ஒன்று. கரடு முரடாக செல்லும் கதையில் இனிமையான ஒரு அத்தியாயம்

தொடர்புடைய சுட்டிகள்:
பெருமாள் முருகனின் தளம்

8 thoughts on “பெருமாள் முருகனின் “நிழல் முற்றம்”

  1. ஓனரின் குழந்தையுன் சோடா விற்கும் பையன் விளையாடுவதாக செல்லும் ஒரு அத்தியாயம் மிகவும் அருமையான ஒன்று. கரடு முரடாக செல்லும் கதையில் இனிமையான ஒரு அத்தியாயம்.

    Like

  2. பெருமாள் முருகனின் நிழல் முற்றம் வாசித்திருக்கிறேன். மிக அருமையான நாவல். உள்ளூரில் உள்ள எளிய திரையரங்கில் இருப்பவர்களைக் குறித்த கதை.

    Like

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.