நாஞ்சில்நாடன் vs ஜெயமோகன் – ஆறு வித்தியாசங்கள்

நாஞ்சில்நாடனோடு ஊர் சுற்றியதைப் பற்றி எல்லாம் பக்ஸ் விலாவாரியாக எழுதிவிட்டான். சரி என் பங்குக்கு ஜெயமோகன் நாஞ்சில்நாடன் இருவருக்கும் உள்ள ஆறு வித்தியாசங்களைப் பற்றி எழுதிவிடுகிறேன்.

ஜெயமோகனோடு பேசும் எங்களைப் போன்றவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்று ஜெயமோகனுக்கு நன்றாகத் தெரியும். அதனால் காது கொடுத்துக் கேட்கவில்லை என்றால் அவருக்கு கோபம் வந்துவிடும். நாஞ்சிலாருக்கும் அது தெரியும், இருந்தாலும் ஒரு வேளை ஏதாவது தெரிந்திருக்குமோ என்று benefit of doubt கொடுக்கிறார்.

நாஞ்சிலாரின் பேச்சு உணர்வுபூர்வமானது, அவரது இதயத்திலிருந்து எழுகிறது. ஜெயமோகனுடைய பேச்சு அறிவுபூர்வமானது, நமது தர்க்க புத்திக்கு appeal ஆகிறது. இதை குறிப்பாக கவிதைகள் பற்றி அதுவும் கம்பன் பற்றி பேசும்போது கவனிக்கலாம்.

நாஞ்சிலாருக்கு தன்னடக்கம் அதிகம், தனது எழுத்துக்களைப் பற்றி பேச அவர் கொஞ்சம் தயங்குகிறார். இது தனது எழுத்து என்ற பிரக்ஞை அவரிடம் இருக்கிறது. ஜெயமோகனால் தன் எழுத்தை ஒரு வாசகன் மட்டுமே என்ற நிலையில் இருந்து சுலபமாக விவாதிக்கிறார். இதன் corrolary: ஜெயமோகனின் எழுத்தை அவரிடம் சுலபமாக விமரிசிக்க முடிகிறது. கொஞ்சம் கூட இங்கிதம் இல்லாமல் இது எனக்குப் பிடிக்கவில்லை, இப்படி நீங்கள் எழுதுவதால் ஒரு பயனும் இல்லை என்று அவர் முகத்துக்கு நேராக சொல்லி இருக்கிறேன். அவருக்கு பிரச்சினையே இல்லை. அது ஏன் என்று கேட்டார். என் விளக்கம் எதுவும் அவருக்கு சுவாரசியமாக இல்லை என்பது வேறு விஷயம். 🙂 ஆனால் நாஞ்சில்நாடனிடம் அவரது எழுத்துகளை விமரிசிக்க கொஞ்சம் தயக்கமாக இருக்கிறது.

ஜெயமோகனுக்கு நேரத்தைப் பற்றி எல்லாம் பெரிதாக அக்கறை கிடையாது. நாலு மணிக்கு போக வேண்டும் என்றால் ஐந்தாகலாம், ஆறாகலாம், ஏழு கூட ஆகலாம். நாஞ்சிலாருக்கு அது ரொம்ப முக்கியம். நான் நாஞ்சிலாரை சான் ஃபிரான்சிஸ்கோ அழைத்துச் சென்றிருந்தேன். படகில் கோல்டன் கேட் பாலம் அடியில் எல்லாம் போகலாம், அப்படி போக வேண்டும் என்று எனக்கு ஆர்வம் இருந்தது. ஆனால் நாஞ்சிலார் நேரம் ஆகிவிட்டது என்பதை உணர்ந்து திரும்பலாம் என்று சொல்லிவிட்டார். ஜெயமோகன் இப்படி சொல்லமாட்டார் என்று அப்போது நினைத்துக் கொண்டேன். 🙂

ஜெயமோகன் எல்லாரையும் இழுத்து வைத்துப் பேசுவார். சாதாரணமாக எங்கள் வீடுகளில் கூடும்போதெல்லாம் குழந்தைகள் மாடியில் விளையாடுவார்கள், மனைவிகள் சமையலறையில் பேசிக்கொண்டிருப்பார்கள், ஆண்கள் சோஃபாவில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்போம். ஜெயமோகனால் எல்லாரையும் கவரும்படி பேச முடிகிறது. இலக்கியத்தில், படிப்பதில் பெரிதாக ஈடுபாடு இல்லாதவர்கள் எல்லாம் கூட ஜெயமோகனின் பேச்சில் கட்டுண்டு கிடந்தார்கள். நாஞ்சிலாருக்கும் அது முடியும்தான், ஆனால் அவரிடம் நீங்கள்தான் போய்ப் பேசவேண்டும்.

நாஞ்சிலாரின் வாழ்க்கையில் ருசி மிகவும் முக்கியம். சாப்பாட்டின் ருசி அறிந்தவர் என்றாலும் ஜெயமோகன் வாழ்வதற்காக மட்டுமே சாப்பிடுகிறார்.

சுருக்கமாகச் சொன்னால் ஜெயமோகனிடம் ஒரு அண்ணனிடம் உரிமையோடு பேசுவது போல பேச முடிகிறது. நாஞ்சிலாரிடம் சித்தப்பாக்களிடம் இருக்கும் மரியாதை கொஞ்சம் தடுக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கங்கள்: ஜெயமோகன், நாஞ்சில்நாடன், தமிழ் எழுத்தாளர்கள்