நான் விரும்பிப் படித்த முதல் இலக்கிய விமர்சகர் க.நா.சு.தான். அவரது படித்திருக்கிறீர்களா புத்தகம் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒன்று. அவரது விமர்சன அடிப்படைகள் – விமர்சனம் கறாராக இருக்க வேண்டும், படைப்பை மதிப்பிட (ஒப்பிட) வேண்டும், ஆனால் இவை அனைத்தும் தனி மனித ரசனையின் மேல் கட்டப்பட்டவை, அதனால் என் மதிப்பீடும் உங்கள் மதிப்பீடும் ஒத்துப் போக வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை, படைப்புகளை விவாதிப்பதன் முக்கிய நோக்கமே அவற்றைப் பரிந்துரைப்பதுதான் – என்பவற்றை நான் முழுமையாக ஏற்கிறேன். எனக்கு ரமணி சந்திரன் சகிக்கவில்லை என்பதற்காக நீங்களும் அவரை நிராகரிக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் ரசனையும் என் ரசனையும் ஒத்துப் போகவில்லை, உங்கள் பரிந்துரைகள் எனக்கும் என் பரிந்துரைகள் உங்களுக்கு சரிப்படாது, அவ்வளவுதான்.
ஜெயமோகன் க.நா.சு.வின் அணுகுமுறை பற்றி ஒரு அருமையான பதிவு எழுதி இருக்கிறார். படிப்பில் ஆர்வம் உள்ளவர்கள் கட்டாயமாகப் பார்க்க வேண்டிய பதிவு.
ஜெயமோகன் இன்னொரு அணுகுமுறை பற்றி குறிப்பிடுகிறார். சி.சு. செல்லப்பா போன்றவர்கள் ஒரு ஆக்கத்தை எப்படி வகுத்துக் கொள்வது என்பதில் குறியாக இருந்தார்களாம். எனக்கு ஜெயமோகனே கொஞ்சம் அப்படித்தான். ரசனை முக்கியமாக இருந்தாலும் அவரது அணுகுமுறை எப்போதும் வரையறைகள், அந்த வரையறைகளுக்குப் பொருந்தும் படைப்புகள் என்று இருக்கிறது. அந்த அணுகுமுறையை நான் நிராகரிக்கவில்லை, ஆனால் அதை விட எனக்கு ரசனை சார்ந்த அணுகுமுறையே உயர்வானதாகத் தெரிகிறது.
கறாரான மதிப்பீடு பற்றி ஒரு தன்னிலை விளக்கம் கொடுக்க வேண்டும். எல்லாருக்கும் நாஸ்டால்ஜியா உண்டு. முதன் முதலின் வாசிப்பின் சாத்தியங்களைக் காட்டிய சில புத்தகங்கள் மீது எல்லாருக்கும் ஒரு soft corner உண்டு. ஆனால் அவையும் கறாராகவே மதிப்பிடப்பட வேண்டும். நான் எல்லா கணேஷ்-வசந்த் புத்தகங்களையும் படிக்க விரும்புகிறேன் என்றால் நான் எல்லா கணேஷ்-வசந்த் புத்தகங்களையும் பரிந்துரைக்கிறேன் என்று பொருளில்லை. அது என் தனிப்பட்ட விருப்பம், அதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம், ஆனால் எல்லா கணேஷ்-வசந்த் புத்தகங்களையும் நான் கறாராகவே மதிப்பிடுவேன், மதிப்பிட வேண்டும். அசோகமித்ரனுக்கு அந்தக் கால எர்ரால் ஃப்ளின் சாகசப் படங்கள், மாண்டிகிறிஸ்டோ, தியாகபூமி போன்ற புத்தகங்கள் பிடித்திருப்பதைப் பார்த்திருக்கலாம். ராஜாம்பாளும் வடுவூரார் புத்தகங்களும் கல்கியின் மனத்தைக் கவர்ந்தவை என்பதை அவர் பதிவு செய்திருக்கிறார். ஆர்.கே. நாராயண் மேரி கோரல்லியின் புத்தகங்களை விரும்பிப் படித்ததை எழுதி இருக்கிறார். ஜெயமோகன் முக்கியமானவை என்று குறிப்பிடும் இலக்கியங்கள் எனக்கு அனேகமாக உன்னதப் படைப்புகளாகத் தெரிந்தாலும், அவர் பரிந்துரைக்கும் (தமிழ்) வணிகப் படைப்புகள் எனக்கு பல சமயம் தேறுவதில்லை. உங்கள் மனதை சிறு வயதில் எப்படியோ தொட்ட புத்தகங்களை தயவு தாட்சணியம் பார்க்காமல் விமர்சிப்பது கஷ்டம்தான், ஆனால் அப்படித்தான் செய்தாக வேண்டும். (எனக்கு தயவு தாட்சணியம் உண்டு. அப்படி இல்லாவிட்டால் என் சிறுகதைகளை நான் பிரசுரித்திருக்கவே மாட்டேன். 🙂 )
தொகுக்கப்பட்ட பக்கம்: க.நா.சு. பக்கம், ஜெயமோகன் பக்கம்
தொடர்புடைய சுட்டிகள்: ஜெயமோகன் பதிவு
Please give me books by ka.na.su. with publisher details.
thanks
LikeLike
கேசவமணி, என்னிடம் இருக்கும் பொய்த்தேவு காலச்சுவடு வெளியீடு.
LikeLike
Thanks Mr.RV. I have also “oru Nall’ by Ka.Na.Su. But I don’t know the books by Ka.Na.Su other than novels. Such as critics, essays and translations.
Please provide the details if you have.
Once again thanks.
LikeLike