விவாதச் சூழல்

நண்பர் முத்துகிருஷ்ணனின் பதிவு.

நண்பர் ஒருவருடன் காலை நடையின் போது இலக்கியம் குறித்தும், எழுத்தாளர் ஒருவரின் கட்டுரை குறித்தும் விவாதித்துக் கொண்டிருந்தேன். அந்த விவாதம் தீர்க்கமான புள்ளியில் இருந்து ஆரம்பிக்கவில்லை. தினசரி வாழ்க்கையை குறித்து ஒருவருக்கொருவர் தகவல் பரிமாற்றத்தின் இடையே ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அந்த தலைப்பு உள்ளே நுழைந்து விட்டது. முடிவில் அது சுவாரசியமான விவாதமாக அமைந்தது. அதன் தலைப்பை தோராயமாக இப்படி வைத்துக் கொள்ளலாம் – “மனிதனுக்கு கலை, இலக்கியம் போன்ற துறைகளில் ஆர்வம் பிறப்பிலேயே எழுகிறதா அல்லது தொடர் பயிற்சியின் விளைவாக உருவாவதா?” எங்களுடைய நிலைப்பாடு அந்த கட்டுரையுடன் உடன்பட்டும், எதிர்த்தும் இருக்கவில்லை. இங்கு விவாதத்திற்கு உள்ளானது அக்கட்டுரையை குறித்த எங்களுடைய நுண்புரிதல்கள் மட்டுமே.

விவாதத்தின் முடிவு என்ன, அப்போது பகிரப்பட்ட கருத்துக்கள் என்ன என்பதை இங்கு விளக்க முற்படவில்லை. எல்லாம் முடிந்து வீட்டிற்கு வந்து அதைப் பற்றி – விவாதச் சூழலைப் பற்றி – யோசித்துப் பார்க்கையில் சில விஷயங்கள் புலப்பட்டன. அவைகளே இங்கு பகிரப்பட உள்ளன.

முதலாவதாக, நல்ல விவாத சூழல் உருவாவதற்கு பங்கெடுப்பவர்களின் இடையே பொதுவான கூறுகள் இருத்தல் வேண்டும். எங்களுக்கிடையில் அன்று இருந்தது இரு பொதுக் கூறுகள். ஒன்று – நாங்கள் இருவரும் நன்கு பரிச்சயமானவர்கள். அந்த காலையல்ல நாங்கள் முதலில் சந்தித்துக் கொள்வதோ அல்லது மற்றவரை அறிந்து கொள்வதோ. இரண்டு – பேசுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரையை நாங்கள் முன்னரே வாசித்திருந்தோம். விவாதத்தின் தளம் குறித்து பேசுபவர் அனைவரும் (ஒரு வாக்கியம் எதிர்வினை ஆற்றுபவர் கூட) சுயமாக அறிந்திருக்க வேண்டும்.

இரண்டாவதாக, விவாதத் தளத்தை குறித்து அனைவருக்கும் தோராயமாக சம அளவில் உள்ளார்ந்த ஆர்வம் இருக்க வேண்டும். (தீவிரமற்ற சமமான ஈடுபாடுதான் வெற்று அரட்டைகளை மிக ஆர்வமுடையதாக்குகிறதோ எனத் தோன்றுகிறது) . வெறும் கோட்பாடு சார்ந்த சார்பு நிலை நலம் பயக்கும் விவாதத் தளத்தை உருவாக்கும் என்ற கூற்றின் மேல் எனக்கு ஐயமுண்டு. யதார்த்த வாழ்வில் கேள்விகளை உருவாக்கி, நம்மை சலனப்படுத்திய விஷயங்கள் விவாதமாக வருகையில், அங்கே ‘விளங்கிக் கொள்ளல்’ என்ற தேவை ‘என் நிலைப்பாட்டை வலியுறுத்தல்’ என்ற தேவையை மீறி நிற்கிறது. அதன் முக்கிய பயன், ஒருவர் மற்றொருவரின் வாதத்தை செவிமடுத்துக் கேட்டுக் கொள்கிறார். இங்கு ‘கேட்டல்’ என்பது வெறுமே பேசுவதற்கு கொடுக்கப்படும் அவகாசம் என்பதற்கு மேலாக, மற்றவர் பேசுகையில் நம் மனதில் கோட்டைகளை எழுப்பி, அகழிகளை நிரப்பி அவருடைய கருத்துக்கள் உள்ளே நுழையும் முன்னரே கொல்லாமல் விடுவது என்ற பொருளில் எடுத்துக் கொள்ளலாம்.

மூன்றாவதாக, ஒரு விவாதத்தின் போக்கு கடைசிவரை திசை திரும்பாமல் இருத்தல் வேண்டும். லேசர் ஒளியைப் போன்ற கூர்மையை கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் தரையில் சிந்திய பாதரசம் போல் சிதறிவிடக் கூடாது. மட்டுறுத்தல் என்பதன் தேவையை அங்கு உணர முடிகிறது. நாங்கள் இருவர் மட்டுமே இருந்ததாலோ என்னவோ விவாதம் வெகுவாக திசை திரும்பவில்லை. ஆனால் பங்கு கொள்பவர்களின் எண்ணிக்கை உயருகையில் நிச்சயமாக ‘விவாத அதிகாரியின்’ அவசியம் வருகிறது. யோசிக்கையில் மட்டுறுத்தல் என்பது இரு பகுதிகளைக் கொண்டது. ஒன்று – விவாதத்தின் நகர்வு அதற்கு மறைமுகமாகக் கூட தொடர்பில்லாத விஷயங்களால் திசை மாறாமல் கண்காணித்தல் (தனி மனித விமர்சனம், தேவையற்ற உதாரணங்கள், மட்டு மீறிய உணர்ச்சி இன்ன பிற). இரண்டு – இது விவாதத்தின் நெடுக வர வேண்டிய ஒன்று. பொதுவாக, ஒரு விவாத தலைப்பிற்குள் பல சிறு தலைப்புகள் பகிரப்படும். ஒரு பெரும் போரின் உள்ளே வெவ்வேறு படைகளுக்கிடையில், வெவ்வேறு இடங்களில் நடக்கும் சிறு சண்டைகள் போல. அந்த போரின் முடிவு என்பது சிறு பூசல்களின் வெற்றி தோல்வியின் கூட்டலே. மட்டுறுத்துபவர் இந்த சிறிய தலைப்புகளை முடித்து வைக்க வேண்டும். உதிரி நூல்களாக விவாதங்கள் ஊசலாடிக் கொண்டிருக்கக் கூடாது. குறைந்தபட்சம் முடிக்க முடியாத சிறு திரிகளை விவாதப் போக்கில் உருவான அடுத்த திரியுடன் இணைக்க செய்யலாம். காரணம், சிறு வாதங்களுக்காக சொல்லப்பட்ட கருத்துக்களும், எதிர்கருத்துக்களும், மனதில் உருவான உணர்வுகளும் முடிக்கப் படாமல் இருந்தால் அதுவும் ஒரு விதமான திசை திருப்பலே. நம்மை அறியாமலேயே விவாதத்தின் அடுத்த கட்டங்களில் அவை மனதிற்குள் பாரமாகி விடுகின்றன.

இறுதியாக பங்குபெறுபவர்கள் செய்ய வேண்டியது – ஒருவர் தன் கருத்தை கூறி முடிக்கும் வரை காத்திருந்து, பிறகு தனது ஆதரவையோ, எதிர்ப்பையோ, மாறுபட்ட கண்ணோட்டத்தையோ தெரிவித்தல் வேண்டும். ‘நீங்க சொல்றத ஒத்துக்குறேன்’ என்பதும் ‘அதெப்படீங்க நீங்க சொல்றது?’ என்பதும் விவாதத்தின் தரத்தை ஒரு போலவே தாழ்த்தி விடுகிறது என எனக்குத் தோன்றுகிறது. எங்களுடைய விவாதத்தில் எவரும் தன்னுடைய தரப்பை ஒவ்வொரு முறையும் மிக அதிக நேரம் எடுத்துக் கொண்டு பேசவில்லை. தன் கருத்துக்களை அதிக நேரம் எடுத்து விலாவாரியாக விளக்குவதால் ஏற்படும் தாக்கம் பற்றி என்னால் கணிக்க முடியவில்லை.

நான் அன்று காலைப் பொழுதில் பேசியதை அசை போடுகையில் ஒன்று புலப்பட்டது. என் தரப்பை முன் வைப்பதற்கும், நண்பரின் வாதங்களுக்கு எதிர்வினையாற்றுவதற்கும் உபயோகப்படுத்திய உதாரணங்கள், அந்த கணத்தில் உருக்கொண்டவை. அவை வேர் கொண்டிருந்த பின்புலத் தகவல்களை இந்த விவாதத்தின் கண்ணோட்டத்தில் முதலில் வாசிக்கவில்லை. எங்களுடைய அறிதலின் பரப்பு விரிந்தால் அவ்விவாதம் மேலும் செறிவாகக் கூடிய சாத்தியம் உள்ளது என்பது தெளிவாகிறது. மேலும், அந்த விவாதத்தையோ அல்லது அதன் சாரமான கேள்வியை முன்வைத்தோ தகவல்களை தெரிந்து கொண்டு பேசினால் இன்னும் பல திறப்புகளை அடைய முடியும் எனத் தோன்றுகிறது. (குறைந்த பட்சம் அந்தக் கட்டுரையின் பிரதி கையில் இருந்திருந்தால் கூட போதுமானது). ஒரு விவாதம் என்றுமே முடிவடைவதில்லை. விவாதிப்பவர் நகர்ந்து விட்டாலும் பரஸ்பரம் மனதிற்குள் கொளுத்தப்பட்ட திரி மேலதிகத் தகவல்களையும், அனுபவங்களையும், கால மாற்றங்களையும் பற்றிக் கொண்டு சதா மனதிற்குள் எரிந்து கொண்டேதான் இருக்கும்.


தொகுக்கப்பட்ட பக்கம்: முத்துகிருஷ்ணன் பதிவுகள்

பம்மல் சம்பந்த முதலியாரின் “நாடகத்தமிழ்”

நாடகத்தமிழ் (1933) சிறந்த ஆவணம். தமிழ் நாடக வரலாறு என்றே சொல்லலாம். தொல்காப்பியத்தில் ஆரம்பித்து நாடகம் பற்றி தமிழ் இலக்கியங்களில் உள்ள எல்லா குறிப்புகளையும் ஏறக்குறைய எழுதி இருக்கிறார். தமிழ் நாடகத்தில் ஆர்வம் உள்ளவர்கள் கட்டாயமாகப் படிக்க வேண்டும். மின்னூலை இணைத்திருக்கிறேன்.

முதலியார் நல்ல நாடகம் என்று நினைத்து எழுதியதெல்லாம் இன்று காலாவதி ஆகிவிட்டனதான். இருந்தாலும் அவர் காலத்துக்கு அவர் ஒரு முன்னோடி என்பதை மறுப்பதற்கில்லை.

அவர் குறிப்பிடும் பத்தொன்பதாம் நூற்றாண்டு இறுதியில் வெளியான நாடகங்கள் பலவற்றின் பேரைக் கூட நான் கேட்டதில்லை. அன்றைய நாடக ஆசிரியர்கள் என்று எனக்குத் தெரிந்ததே சங்கரதாஸ் சுவாமிகள், முதலியார், மற்றும் சதாவதானம் கிருஷ்ணசாமிப் பாவலர் மூவர்தான். முதலியார் குறிப்பிடும் பழைய நாடகங்களின் பட்டியலைக் கீழே கொடுத்திருக்கிறேன்.

  1. காசி விஸ்வநாத முதலியார் எழுதிய டம்பாச்சாரி விலாசம் (இதுதான் ரத்தக் கண்ணீர் நாடகம்/சினிமாவின் மூலம்), பிரம்ம சமாஜ நாடகம், தாசில்தார் நாடகம்
  2. ராமஸ்வாமி ராஜு எழுதிய பிரதாபசந்திர விலாசம் (1877)
  3. அப்பாவு பிள்ளை எழுதிய சத்தியபாஷா ஹரிச்சந்திர விலாசம், சோழவிலாசம் (1886), இந்திரசபா (1889), பத்மினி விலாசம் (1894)
  4. ஆதிலட்சுமி அம்மாள் எழுதிய ரத்னாவளி நாடக அலங்காரம் (1892) – இதுதான் ஒரு பெண் எழுதிய முதல் நாடகமாம்.
  5. T.T. ரங்கசார்யார் எழுதிய நந்திதுர்கம் (1892)
  6. பரிதிமால் கலைஞர் எழுதிய ரூபாவதி (1896), கலாவதி (1898), மானவிஜயம்

இணையத்திலோ, இல்லை காகிதத்திலோ புத்தகங்களைப் பார்த்தால் சொல்லுங்கள்!


தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாடகங்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
பம்மல் சம்பந்த முதலியார்
நாடகத்தமிழ் – மின்னூல்

பம்மல் சம்பந்த முதலியார்

முதலியாரைப் பற்றி நான் முதலில் கேள்விப்பட்டது மனோகரா திரைப்படத்தின் மூலமாகத்தான். கருணாநிதி ஒரு வசனகர்த்தாவாக அந்தப் படத்தில்தான் தன் உச்சத்தை அடைந்தார். சிவாஜி அனல் பறக்க வசனம் பேசுவதைக் கேட்டு சின்ன வயதில் ஆ என்று வாயைப் பிளந்துகொண்டு உட்கார்ந்திருக்கிறேன். இன்றும் எனக்குப் பிடித்த படம்தான்.

முதலியார் எக்கச்சக்க நாடகங்களை எழுதித் தள்ளி இருக்கிறார். பற்றாக்குறைக்கு வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்கார் எழுதிய சில ஆங்கில நாடகங்களை தமிழில் மொழிபெயர்த்து நடித்திருக்கிறார். ஐயங்காரின் Domestication of Dhamu மனை ஆட்சி ஆகி இருக்கிறது. ஐயங்கார் எழுதிய என்ன நேர்ந்திடினும், மனைவியால் மீண்டவன் என்ற சிறு நாடகங்களை மொழிபெயர்த்திருக்கிறார். ஷேக்ஸ்பியரையும் மொலியரையும் கூட விட்டுவைக்கவில்லை. Merchant of Venice வாணிபுர வணிகன் ஆகி இருக்கிறது. காளப்பன் கள்ளத்தனம் (1931) (மொலியரின் Les Fourberies de Scapin) போன்ற மொழிபெயர்ப்புகள் ரசிக்கப்பட்டிருக்கும். ஆபெராவான La Sonnambulaவைக் கூடத் தழுவி எழுதி இருக்கிறார். (பேயல்ல பெண்மணியே). Topical ஆக எழுதுவார். (இரண்டாம் உலகப்போர் உச்சத்தில் இருந்த 1942-இல் அவர் எழுதிய நாடகம் – இந்தியனும் ஹிட்லரும்!) அந்த நாடகங்கள் எல்லாம் அவர் காலத்தில் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும்தான். ஆனால் அவை எதுவும் – மனோகரா உட்பட – காலத்தைத் தாண்டி நிற்கக் கூடியவை அல்ல. மனோகராவும் நாடக வடிவத்தில் சுமார்தான். 1895-இல் எழுதப்பட்டதால் முன்னோடி நாடகம் என்று சொல்லலாம்.

அவருடைய சிறந்த நாடகமாக நான் கருதுவது சபாபதியைத்தான். இன்றும் கொஞ்சம் சிரிக்க முடிகிறது. திரைப்படமும் எனக்குப் பிடித்த ஒன்று. ஆனால் அவரது பிற ஹாஸ்ய நாடகங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை. ஹரிச்சந்திரனை உல்டா செய்து பொய்யே பேசும் சந்திரஹரி (1923), சபாபதியை வைத்து அவர் எழுதிய இன்னொரு நாடகமான ஒரு விருந்து, வைகுண்ட வைத்தியர் (1943), சதி சக்தி (1947) எல்லாம் சுகப்படவில்லை. சபாபதி பாத்திரத்தை வைத்து ஹாஸ்யக் கதைகள் என்றும் ஒரு புத்தகம் இருக்கிறது. அந்தக் காலத்து எஸ்.வி. சேகர் நாடகம் போல இருக்கிறது.

அவருடைய பல நாடகங்கள் தொன்மக் கதைகளின் retelling-தான். சஹதேவன் சூழ்ச்சி (1928), சதி சுலோச்சனா (1935), நல்லதங்காள் (1936), ஹரிச்சந்திரா, கொடையாளி கர்ணன், வள்ளித் திருமணம், யயாதி, சாரங்கதரன், சிறுத்தொண்டர், புத்த அவதாரம், புத்த சரித்திரம் போன்றவை இப்படித்தான். சில ஒரிஜினல் நாடகங்களையும் எழுதி இருக்கிறார்.

பிராமணனும் சூத்திரனும் (1933) போன்ற நாடகங்களில் அவர் கலப்புத் திருமணத்தை வலியுறுத்த இன்றும் கொஞ்சம் சுவாரசியம் இருக்கிற, ஆனால் யூகிக்கக் கூடிய கதைகளை எழுதி இருக்கிறார். கள்வர் தலைவன் நாடகம் பல திடுக்கிடும் திருப்பங்களைக் கொண்டது. அந்தக் காலத்தில் வெற்றி பெற்றிருக்கலாம். காதலர் கண்கள் (1902), உத்தம பத்தினி (1934), குறமகள் (1943), தீயின் சிறு திவலை (1947), தீபாவளி வரிசை (1947), இல்லறமும் துறவறமும் (1952), கலையோ காதலோ, முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும், ரத்னாவளி, விஜயரங்கம், சர்ஜன் ஜெனரல் விதித்த மருந்தும் போன்றவை மிகச் சாதாரணமான, ஆனால் கோர்வையான, சரளமாகச் செல்லும் கதைகள். நாடகமாக பார்க்க, அதுவும் அந்தக் காலத்தில் சுவாரசியமாக இருந்திருக்கும்.

நற்குல தெய்வம் என்ற நாடகத்தில் ஒரு சுயம்வரக் காட்சி நன்றாக இருக்கும். வில்லை வளைத்து குறியை வீழ்த்த வேண்டும் என்றால் எல்லா மன்னர்களும் சாக்கு சொல்வார்கள். ஒருவர் இது விஷ்ணுவின் வில், நானோ வைஷ்ணவன், அது உடைந்துவிட்டால் அபசாரம் என்பார். அடுத்தவர் நான் சைவன், விஷ்ணுவின் வில்லைத் தொடமாட்டேன் என்பார்!

முதலியாருக்கு ஒரு ட்ரேட்மார்க் உண்டு. நாடகத்தில் அவ்வப்போது “லோ கிளாஸ்” மனிதர்கள் கொச்சையான பாஷை பேசுவார்கள். பெரிய மனிதர்கள் சபையில் அது ரசிக்கப்பட்டிருக்கும். பல நாடகங்களின் இந்த கொச்சை மொழி பேசும் பாமரர்கள் வரும் காட்சிகள் தனி காமெடி ட்ராக்காக வருகின்றன. சில சமயங்களில் அந்த காமெடி ட்ராக்கே தனியாக நடிக்கப்படுமாம். மாண்டவர் மீண்டது, ஆஸ்தானபுர நாடகசபை, சங்கீதப் பைத்தியம் எல்லாம் அப்படி காமெடி ட்ராக்கை நாடகமாக்கியது போலத்தான் இருக்கின்றன. வேதாள உலகம் (பிற்காலத்தில் டி.ஆர். மஹாலிங்கம், சாரங்கபாணி நடித்து திரைப்படமாகவும் வந்தது) போன்றவற்றின் நகைச்சுவை அந்தக் காலத்தில் ரசிக்கப்பட்டிருக்கும். விச்சுவின் மனைவிதீட்சிதர் கதைகள் (1936) – குசும்புக்கார தீட்சிதர் செய்யும் விஷமங்கள் – போன்ற நகைச்சுவை நாடகங்களும் கதைகளும் ரசிக்கப்பட்டிருக்கும்.

முதலியாரின் நாடகங்கள் எல்லாம் காலாவதி ஆனவையே. ஆனால் அவர் முன்னோடி என்பதை மறுப்பதற்கில்லை. நாடகம் நடிப்பதற்காக – அவரது மொழியில் சொன்னால் நாடகம் ஆடுவதற்காக அவர் நிறைய கஷ்டப்பட்டிருக்கிறார். சுகுண சுந்தரி சபை என்ற அமைப்பை நிறுவி தொழில் முறை நாடகங்களை நடத்தி இருக்கிறார். இவர்தான் அனேகமாக எழுதுவார். இவரது உயிர் நண்பரான ரங்கவடிவேலு முதலியார்தான் ஸ்த்ரீபார்ட்.

சில நவீன நாடக உத்திகளை அன்றே முயன்று பார்த்திருக்கிறார். இடைச்சுவர் இரு புறமும் நாடகத்தில் நாடக மேடையை இரண்டாகப் பிரித்து இரு புறமும் வேறு வேறு காட்சிகள் (பக்கத்து பக்கத்து வீடுகள்).

சில அபுனைவுகளையும் முதலியார் எழுதி இருக்கிறார். நாடகத்தமிழ் (1933) முக்கியமான ஆவணம். பல பழைய நாடகங்களைப் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. இந்த நாடகங்கள் எல்லாம் இன்று கிடைக்கின்றனவா இல்லையா என்று தெரியவில்லை. நாடக மேடை நினைவுகள் புத்தகத்தில் சுகுணவிலாச சபா உருவானவிதம், ஒவ்வொரு நாடகமும் எழுதப்பட்ட பின்புலம், நாடகம் நடிக்கப்பட்ட விதம், நடிகர்கள் என்று மிக விலாவாரியாக எழுதி இருக்கிறார். அன்றைய நாடக உலகிற்கு முக்கிய ஆவணம். நாடகங்கள் உரைநடைப்படுத்த வேண்டும், நாடகங்கள் நன்றாக நடக்க வேண்டும் என்று உண்மையிலேயே நினைத்து உழைத்திருக்கிறார். நான் கண்ட நாடகக் கலைஞர்கள் இன்னொரு முக்கியமான ஆவணம். பல கலைஞர்களைப் பற்றி சிறு குறிப்புகளைத் தருகிறது. யான் கண்ட புலவர்கள் புத்தகமும் அன்றைய தமிழறிஞர்களைப் பற்றி சிறு குறிப்புகளைத் தருகிறது. சில சுவாரசியமான குறிப்புகள் உட்பட – உதாரணமாக சி.வை. தாமோதரம் பிள்ளை நல்ல குண்டாக இருப்பாராம். என் சுயசரிதை கொஞ்சம் dry ஆன அபுனைவு. ஆனால் அந்தக் காலத்து பெரிய மனிதர் ஒருவரின் வாழ்வுக்கு ஒரு ஜன்னல். நடிப்புக் கலையும் பேசும் படக்காட்சியும் அன்றைக்கு பயன்பட்டிருக்கலாம். நாடக நடிகர்கள் தங்களை எப்படி தயார்படுத்திக் கொள்ள வேண்டும், திரைப்படங்கள் எப்படி எடுக்கப்பட வேண்டும் என்று தன் அனுபவத்திலிருந்து எழுதி இருக்கிறார். தமிழன்னை பிறந்து வளர்ந்த கதை, சிவாலய சிற்பங்கள் என்ற புத்தகங்களையும் எழுதி இருக்கிறார்.

முதலியார் திரைப்படங்களில் நடித்திருக்கிறார், படங்களை இயக்கி இருக்கிறார். அந்த அனுபவங்களை ‘பேசும் பட அனுபவங்கள்‘ என்ற புத்தகமாகவும் எழுதி இருக்கிறார். அவரது மனோகரா நாடகமே நிறைய மாற்றங்களுடன் வெளிவந்து சொதப்பிவிட்டதாம்.

அவரது எழுத்துக்கள் 2009-இல் நாட்டுடமை ஆக்கப்பட்டன. அதுவும் சரியான காரியமே. இன்னும் நல்ல தமிழ் நாடகங்கள் அவர் லெவலில் இருந்து அவ்வளவாக முன்னேறாமல் இருப்பது நம் துரதிருஷ்டமே.

முதலியாருக்கு பத்மபூஷன் விருது கிடைத்திருக்கிறது. அவரைப் பற்றி இந்திய இலக்கிய சிற்பிகள் வரிசையில் சாஹித்ய அகடமிக்காக அ.நா. பெருமாள் ஒரு புத்தகத்தை எழுதி இருக்கிறார்.

மறைந்த சேதுராமன் அவரைப் பற்றி எழுதிய அறிமுகம் கீழே:

வழக்கறிஞர், நீதியரசர், நாடகாசிரியர், மேடை நாடக நடிகர், எழுத்தாளர், நாடக இயக்குனர் என்ற பல அவதாரங்களில் திளைத்தவர் பம்மல் சம்பந்தம் முதலியார். இவர் நாடகக் கலைக்கு ஆற்றிய தொண்டு என்றும் நினைவில் வைக்கத் தக்கது. நாடக மேடை நடிகர்களைக் கூத்தாடிகள் என்றழைக்கப்பட்ட பழக்கத்தை மாற்றி அவர்களைக் கலைஞர்கள் என்ற சிறப்பான நிலைக்கு உயர்த்தியவர்.

பம்மல் சம்பந்த முதலியார் 1873ம் வருடம் ஃபிப்ரவரி 9ம் தேதி சென்னையில் பிறந்தவர். இவரது பெற்றோர் பம்மல் விஜயரங்க முதலியார், மாணிக்கவேலம்மாள் என்பவர்கள். விஜயரங்க முதலியார் முதலில் தமிழ் உபாத்தியாயராகவும், பின்னர் இன்ஸ்பெக்டர் ஆஃப் ஸ்கூல்ஸ் என்ற அரசு உத்தியோகத்திலும் இருந்தவர். அவர் தானே தமிழ் வாசக புத்தகங்கள் பல வெளியிட்டு வந்தார். இதன் காரணமாக அவர்கள் வீட்டில் ஆங்கிலத்திலும் தமிழிலும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருந்தன. படிக்கத் தெரிந்த நாள் முதல் சம்பந்தம் இப்புத்தகங்களையெல்லாம் ஒன்றொன்றாக ஆர்வமுடன் படித்து வந்தார். அவரது சிறு வயதில் அவரது தாயார் உணவு ஊட்டும்போது, ராமாயணம், பாரதம், பெரிய புராணம் போன்ற இதிகாச புராணங்களிலிருந்து தினமும் ஒரு புதுக் கதையும் சொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தான் நாடக ஆசிரியன் ஆனதற்கு, இவைகளே காரணம் என்று நினைவு கூறுகிறார் சம்பந்தம் தனது நாடக மேடை நினைவுகள் என்ற புத்தகத்தில்.

மாநிலக்கல்லூரியிலும், பின்னர் சட்டக் கல்லூரியிலும் படித்து பி.ஏ., பி.எல். பட்டங்கள் பெற்றார். சில காலம் வழக்கறிஞராகவும், நீதியரசராகவும் பணியாற்றினார்.

உயர்குடியில் பிறந்தவர்களையும், கற்றவர்களையும், அறிஞர்களையும், சம்பந்தம் தம்முடைய நாடகங்களில் நடிக்கச் செய்தார். இவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் சர். சி.பி.ராமஸ்வாமி அய்யர், எஸ்.சத்தியமூர்த்தி, எம்.கந்தசாமி முதலியார் (எம்.கே.ராதாவின் தந்தை), சர். ஆர்.கே. ஷண்முகம் செட்டியார், வி.வி.ஸ்ரீனிவாச அய்யங்கார், வி.சி.கோபாலரத்தினம் ஆகியோர். நாடகம் என்றால் தெருக்கூத்து என்றும், சிற்றூர் மக்கள் மட்டுமே காண்பவர்கள் என்ற நிலையை மாற்றி, நகரங்களிலே நல்ல மேடையமைத்து, பல வகை நாடகங்களை நடத்திக் காட்டினார்.

அக்காலத்தில் நடை பெற்ற நாடகங்கள் இரவு பூராவும் நடக்கும், மங்களமாகவே முடியும் என்ற பழக்கத்தை மாற்றி, இன்பமும் துன்பமும் கொண்ட முடிவுகளுடன் நாடகங்கள் படைத்தார். ஆங்கில நாடகங்கள், வடமொழி நாடகங்கள் முதலியவற்றை தமிழ்ச் சூழலுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்து மேடையேற்றினார். இரவு பூராவும் நடந்த நாடகங்களை மூன்று மணி நேரத்துக்குள் சுருக்கிய பெருமையும் அவரதே.

பெல்லாரி கிருஷ்ணமாச்சார்யலு என்பவரது சரச வினோத சபா நாடகக்குழு சென்னையில் நடத்திய சிரகாரி, மற்ற நாடகங்கள் அவரை வெகுவாகக் கவர்ந்தன. மேலும் இக்குழுவில் வழக்கறிஞர்கள், நல்ல வேலையிலிருந்தவர்கள், படிப்பறிவு மிகுந்தவர்கள் தொழில் முறையிலில்லாமல், பொழுதுபோக்குக்கெனவே நடத்தியது சம்பந்தத்திற்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாகவே நண்பர்கள் அறுவருடன் சென்னை ஜார்ஜ்டௌனில், 1891ம் வருடம் ஜூலை ஒன்றாம் தேதி, சுகுண விலாச சபை என்ற நாடகக் குழுவை உருவாக்கினார்.

அதே சமயம் சென்னைக்கு விஜயம் செய்த பார்சி நாடகக் குழு சம்பந்தத்தை ஈர்த்தது. முக்கியமாக அவர்களது மேடை அமைப்புகள், உடை அலங்காரங்கள், பின்னணிப் படுதா, பக்கத் திரைகள், மேலே தொங்கட்டான்கள், ஜாலர்கள் எல்லோரையும் கவரும் வண்ணம் இருந்தன. அவர்களது நேரம் தவறாமையும் ஒரு காட்சிக்கும் மற்றோர் காட்சிக்கும் இடையே இருந்த இடைவெளியும், அவருக்கு மகிழ்ச்சியளித்தன. தன்னுடைய நாடகங்களிலும் இதே போல் அமைப்புகள் இருக்க வேண்டும் என்றெண்ணியவர், பின்னர் இதை நிறைவேற்றிக் காட்டினார் என்பது குறிப்பிடத் தக்கது.

சுகுணவிலாச சபையின் நாடகங்களில் எல்லாம் சம்பந்தமே ஹீரோ – ரங்கவடிவேலு முதலியார் அவர்கள்தான் ஹீரோயின் – இந்த அமைப்பு 1895லிருந்து 1923ம் வருஷம் வரை தொடர்ந்தது. சம்பந்தம் 529 முறை நாடக மேடையில் தோன்றியிருக்கிறார். 109 வெவ்வேறு நாடகப் பாத்திரங்கள் பூண்டுள்ளார். அவர் எழுதி அச்சிட்டுள்ள நாடகங்களின் தொகை 68 – அவரது அனுமதியுடன் 1891லிருந்து, 1934ம் வருடம் வரை சுகுண விலாச சபையாராலும், நகரிலும், வெளியூர்களிலும் உள்ள மற்ற சபைகளாலும், அவரது நாடகங்கள் 4070 முறை மேடையேறியுள்ளன.

அரசு பதவியிலிருந்து 1928ல் ஓய்வு பெற்ற பிறகு, அடுத்த ஏழு வருஷங்கள் வரை சுகுண விலாச சபையில் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட ஒரு மனக்கசப்பின் காரணமாக சபையின் நடவடிக்கைகளில் தனது ஈடுபாட்டைக் குறைத்துக் கொண்டார். ஆனால் நாடக மேடையில் தோன்றும் அவர் ஆர்வம் சற்றும் குறையவில்லை என்பது, ஐம்பதுகளின் ஆரம்பத்தில் எங்களுடைய நடராஜா அமெச்சூர் குழு (தோட்டக்கார விசுவனாதன் தலைமையில்) சுகுண விலாச சபையில் ஒரு நாடகம் நடத்திய போது, தானே வலிய வந்து தோட்டக்காரன் அண்டை வீட்டுக்காரனாக இரண்டு நிமிடம் மேடையில் தோன்றி வசனம் பேசிய போது எழுந்த கரகோஷம் இன்னமும் எனக்கு நினைவிலுள்ளது.

முதலியார் 1967ம் வருஷம் செப்டம்பர் மாதம் 24ம் தேதி மறைந்தார். அவர் மறைந்தாரே தவிர அவரது நாடகத் தொண்டு இன்னமும் எல்லாருடைய நினைவிலும் பசுமையாகவே உள்ளது.

முதலியார் 94 நாடகங்கள் எழுதியுள்ளார் – அவற்றுள் முக்கியமானவை கீழே:

  1. மனோஹரா (1895 – சுகுணவிலாச சபையிலும், மற்ற இடங்களிலும் 859 முறை நடிக்கப் பட்டது)
  2. லீலாவதி சுலோசனா – (50 தடவை சபையிலும், மற்ற இடங்களில் 286 முறையும்)
  3. புஷ்பவல்லி (சம்பந்தத்தினுடைய முதல் நாடகம்)]
  4. சுந்தரி – (சுகுண விலாச சபையின் முதல் நாடகம்)
  5. சாரங்கதரன் (198 முறை – மேடையில் முதல் முத்தக் காட்சி!)
  6. கள்வர் தலைவன்
  7. காலவ ரிஷி (1899 – 307 முறை மேடையேறியது)
  8. காதலர் கண்கள் (1902 – 190 முறை மேடையேற்றம்)
  9. விரும்பிய விதமே ( As You Like It தமிழாக்கம்)
  10. வாணீபுர வணிகன் (Merchant of Venice தமிழாக்கம்)
  11. அமலாதித்தன் (Hamlet தமிழாக்கம்)
  12. மகபதி ( Macbeth தமிழாக்கம்)
  13. சிம்ஹலநாதன் (Cymbaline தமிழ் வடிவம்)
  14. பேயல்ல பெண்மணியே (La Somnambula தமிழ் வடிவம்)v
  15. காளப்பன் கள்ளத்தனம்
  16. சாகுந்தலம்
  17. மாளவிகாக்கினிமித்திரம்
  18. விக்ரமோர்வசீயம்
  19. ரத்னாவளி
  20. ம்ருச்சகடிகம்
  21. யயாதி
  22. இரு நண்பர்கள்
  23. சபாபதி
  24. விஜயரங்கம்
  25. சர்ஜன் ஜெனரலின் பிரஸ்கிரிப்ஷன்
  26. சதி சுலோசனா
  27. சுல்தான்பேட்டை சப் அசிஸ்டண்ட் மாஜிஸ்ட்ரேட்
  28. நல்லதங்காள்
  29. ஸ்த்ரீ சாஹசம்
  30. விருப்பும் வெறுப்பும்

வெள்ளித் திரையில் வெளிவந்த நாடகங்கள்:

  1. காலவரிஷி (1932)
  2. ரத்னாவளி (1935)
  3. மனோஹரா (1936, 1954)
  4. லீலாவதி சுலோசனா (1936)
  5. சபாபதி (1941)
  6. வேதாள உலகம் (1948)

தகவல் ஆதாரம்:

  1. பம்மல் சம்பந்தம் முதலியாரின் “நாடக மேடை நினைவுகள்” – உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியீடு 1998
  2. ஹிந்து தினசரியில் எஸ்.முத்தையாஎழுதிய கட்டுரை

சாரங்கதரன் நாடகத்தை சங்கரதாஸ் சுவாமிகளும் எழுதி இருக்கிறார். இது ஒரு கர்ண பரம்பரை கதையாக இருக்கலாம். சேதுராமன் சாரங்கதாரா பற்றி விளக்குகிறார்.

இருவருமே சாரங்கதரா எழுதி இருக்கலாம். பம்மல் எழுதியது நிச்சயம் என்பது கீழ்க்கண்ட குறிப்பிலிருந்து தெரிகிறது – பக்கம் 167 நாடக மேடை நினைவுகள்
“”இனி மனோஹரனுக்குப் பின் நான் எழுதிய, எனது ஏழாவது நாடகமாகிய ‘சாரங்கதரன்’ பற்றி எழுதுகிறேன் – என் நண்பன் அப்பு என்னிடம் ‘இனிமேல் நீங்கள் என்ன நாடகம் எழுதப் போகிறீர்கள்?’ என்று கேட்டான். — ‘இதை நீ ஏன் கேட்கிறாய் உன் மனதில் உள்ளதைச் சொல்’ என்றேன் — நான் சாரங்கதரா நாடகம் எழுத வேண்டுமென்றும் அதில் அவன் சாரங்கதரனாக நடிக்க விரும்புவதாகவும் தெரிவித்தான்…
இந்த நாடகம் எங்கள் சபையால் நடிக்கப் பட்ட போது சசிரேகா என்ற தெலுங்குப் பத்திரிகையின் நிருபர் சேஷாச்சாரியார் என்பவர், சித்ராங்கி சாரங்கதரனை முத்தமிட்டதும் அதற்கு சாரங்கதரன் இணங்கியதும் தவறு என்று தன் பத்திரிகையில் எழுதினார்.— நான் எழுதியிருக்கும் நாடகப் புத்தகத்தைப் படித்துப் பார்த்திருப்பார்களாயின் இதில் அவர் கூறியபடி தவறு ஒன்றுமில்லை என்று நன்கு அறிவார்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாடகங்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
விக்கி குறிப்பு
ஹிந்து தினசரியில் எஸ். முத்தையா எழுதிய கட்டுரை
மனோகரா திரைப்படம்
சபாபதி திரைப்படம்
டோண்டு எழுதிய ஒரு பதிவு

இளம் கவிஞனுக்கான கடிதங்கள் – 5

ரோம்,
அக்டோபர் 29, 1903

உங்களுடைய கடிதம் ஆகஸ்ட் 29 அன்று ஃப்ளோரன்ஸ் நகரத்தில் என்னை வந்தடைந்தது; அதற்கு மிகவும் தாமதமாக – இரண்டு மாதங்கள் கழித்து – பதிலளிக்கிறேன். என்னுடைய மெத்தனத்தை மன்னிக்கவும். நான் பயணம் செல்லுகையில் கடிதம் எழுதுவதை விரும்புவதில்லை. ஏனென்றால் கடிதம் எழுதுவதற்கு மிக அத்தியாவசியமான உபகரணங்களுடன் சேர்த்து அமைதியும், ஏகாந்தமும், மிகவும் பரிச்சயமற்ற நேரமும் எனக்கு தேவைபடுகிறது.

நாங்கள் ஆறு வாரங்களுக்கு முன், ஆட்களற்ற, வெக்கை மிகுந்த ரோம் நகரத்திற்கு வந்து சேர்ந்தோம். அந்த சூழ்நிலையில், தங்குவதற்கு ஏற்ற இடம் கிடைப்பதற்க்கு உண்டான பிரச்சனைகளால், எங்களை சூழ்ந்திருந்த அமைதியின்மை முடிவற்றது போல தோன்றியது. அதோடு, ரோம் நகரம் ( அதோடு பழக்கப்படுத்திக் கொள்ளாதவருக்கு) ஒருவரை ஆரம்ப நாட்களில் துயரத்தால் கட்டிப் போட்டுவிடுகிறது. அதற்கு காரணம் இந்நகரத்தின் ஜீவனற்ற அருங்காட்சியகத்தை ஒத்த சூழல்; கடந்த காலங்களின் செல்வ செழிப்புகளை வலிந்து முன்னே கொண்டு வந்து (கடந்த கால செழிப்புகளை நம்பி தற்காலத்தின் ஒரு சிறு பகுதி வாழ்ந்து வருகிறது), கல்விமான்களாலும், கலை ஆர்வலர்களாலும் மட்டுமீறிய அளவிற்கு அவற்றின் மதிப்பு உயர்த்தப்பட்டு உள்ளது. அவர்களின் நகலாக நடந்து கொள்ளும் இத்தாலியின் சராசரி சுற்றுலாப் பயணியின் பார்ப்பவை எல்லாமே மற்றொரு காலகட்டத்தின், நம்மைச் சாராத மற்றொரு வாழ்க்கை சூழலின் தற்செயலாக எஞ்சியுள்ள சிதைந்து, அழிந்து கொண்டிருக்கும் பொருட்களே; இறுதியில், சில வாரங்கள் மன எதிர்ப்பு கழிந்த பின் ஒருவர் இந்நகரில் மிச்சமிருக்கும் சிறு குழப்பத்துடன் சமநிலையை அடைய முடியும். பிறகு தனக்குத் தானே ஒருவர் சொல்லிக் கொள்வது: “மற்ற இடங்களை விட இந்த இடம் கூடுதல் அழகுடையது அல்ல. தலைமுறைகளாக போற்றப்பட்டும், மிகச் சிறந்த பணியாளர்களின் கைகள் கொண்டு செப்பனிடப்பட்டு பாதுகாக்கப்படும் இப்பொருட்களில் மதிப்போ, அழகோ, உணர்வோ எதுவும் இல்லை, இல்லவே இல்லை”.

ஆனால் இங்கும் அழகுள்ளது ஏனென்றால் எல்லா இடங்களுமே மிகுதியான அழகு கொண்டவை. முடிவில்லா உயிர்த்துடிப்புடைய நீர் இங்கே சிறு புராதன கால்வாய்களினூடே ஓடி, பெரு நகரை வந்தடைந்து, அந்நகரின் பல சதுக்கங்களில் வெள்ளைக் கற்களால் அமைக்கப்பட்ட வட்டில்களில் நடனமாடிக் கொண்டிருக்கிறது. அதே நீர் தன்னையே விரித்து அகலமான பல குளங்களில் பகல் முழுவதும் முணமுணுத்துக் கொண்டேயிருக்கிறது; நட்சத்திரங்கள் நிறைந்த, மென்காற்று வீசும் பரந்த இரவு முணுமுணுப்பின் ஓசையை கூடுதலாக உயர்த்துகிறது. இங்கு தோட்டங்கள் உள்ளன, இருபுறமும் வரிசையான மரங்கள் உடைய சாலைகளை மறக்க இயலாது மற்றும் மைக்கேலேஞ்சலோ வடிவமைத்த படிகட்டுகள், கீழ்நோக்கிச் செல்லும் அருவியைப் போன்ற உருவமைப்பில் உருவாக்கப்பட்ட படிக்கட்டுகள்; அவை இறங்குகையில் அலைகளிலிருந்து படிகள் உருவாகி வரும். இக்காட்சிகளின் வழியே ஒருவர் தன்னை மறுபடியும் திரட்டிக் கொண்டு, இறுகப் பிடித்து பாரமேற்றும் மற்றவைகளின் ஓயாத இரைச்சலில் இருந்து தன்னை காத்துக் கொள்ள இயலும். நாம் அன்புகொள்ளக் கூடிய நித்தியதன்மையையும், பங்கேற்க கூடிய தனிமையையும் தன்னகத்தே கொண்டுள்ள வெகு சில பொருட்களை இங்கே ஒருவர் மெதுவாக இனம் காண கற்றுக் கொள்வார்.

நான் இன்னும் நகரத்தில் தான் வசிக்கிறேன், காபிடாலில், பண்டைய ரோமின் கலைகளிலிருந்து நம்மிடம் வந்துள்ள மிக அழகான குதிரை வீரனின் சிலை இருக்கும் இடத்திற்கு அருகில்; அது மார்க்கஸ் ஆரெலியஸ்யின் சிலை. ஆனால் சில வாரங்களில் இந்நகரின் இரைச்சல்களிலும், சம்பவங்களிலும் இருந்து ஒளிந்து பெரிய சோலை ஒன்றின் உள்ளே அமைந்திருக்கும் அமைதி கொண்ட, பழைய கோடைவீடு ஒன்றிற்கு என் வசிப்பை மாற்றி விடுவேன். பனிக்காலம் முழுவதும் அங்கே இருப்பேன்; அந்த தனிமையை அனுபவித்து, மகிழ்ச்சிகரமான வேலை நிரம்பிய மணிநேரங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

அங்கு இன்னும் இயல்பாக இருப்பேன்; உங்களுக்கு நீண்ட கடிதம் ஒன்றை எழுதுவேன், அதில் நீங்கள் அனுப்பிய கடிதத்தை குறித்து நான் சொல்ல வேண்டிய சிலவற்றை கூறுவேன். இப்போது உங்களிடம் ஒன்றை கூற வேண்டும் (முன்னரே அதை சொல்லாமல் இருந்தது என் தவறு தான்); நீங்கள் அனுப்பிய புத்தகம் (அதில் உங்களுடைய படைப்புகள் சிலவும் உள்ளது என கடிதத்தில் குறிப்பிட்டிருந்தீர்கள்) இன்னும் வந்து சேரவில்லை. உங்களிடம் அவை வார்ப்ஸ்விட் நகரத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டதா? (அவர்கள் வெளிதேசங்களுக்கு பொதிகளை மேலனுப்புவதில்லை). இருப்பதில் அது தான் நம்பிக்கை மிகுந்த சாத்தியம், அது உறுதிபட்டால் மிகவும் மகிழ்ச்சியடைவேன். நீங்கள் அனுப்பிய பொதி தொலைந்து போகவில்லை என எதிர்பார்க்கிறேன் – துரதிருஷ்டவசமாக இத்தாலியின் அஞ்சல் துறை இருக்கும் நிலையில், அப்படி நடந்திருந்தாலும் அதில் அசாதாரணம் ஏதுமில்லை.

அந்த புத்தகம் என்னை வந்தடைந்திருந்தால் மகிழ்ந்திருப்பேன் (உங்களுடமிருந்து வரும் எதுவும் எனக்கும் மகிழ்ச்சியே); அதைப் போலவே இந்த இடப்பட்ட காலத்தில் உங்களிடமிருந்து உருவான கவிதைகளும். நான் எப்பொழுதும் ( நான் வைத்துக் கொள்வதற்காக அனுப்பும்) உங்கள் கவிதைகளை திரும்பத் திரும்ப வாசித்து, அவற்றை உள்ளார்ந்து அனுபவிக்கிறேன்.
நல்வாழ்த்துக்கள் மற்றும் வணக்கங்களுடன்.

உங்களுடைய,
ரெய்னர் மரியா ரில்கே.


தொகுக்கப்பட்ட பக்கம்: மொழிபெயர்ப்புகள், முத்துகிருஷ்ணன் பதிவுகள்

தொடர்புடைய சுட்டிகள்: கடிதம் 1, 2, 3, 4

அ. முத்துலிங்கம் விமர்சிக்கிறார் – “வாசகனுக்கு ஒரு வலை”

முழு கட்டுரை “அங்கே இப்போ என்ன நேரம்” தொகுப்பில் இருக்கிறது. முக்கால்வாசி கட்டுரை கீழே.

… எனக்கு இலக்கியம் பற்றி ஓர் உண்மை புலப்பட்டது. எவ்வளவுக்கு ஒரு படைப்பு வாசகனுடைய பங்கீட்டைக் கேட்கிறதோ அவ்வளவுக்கு அந்தப் படைப்பு உயர்ந்து நிற்கிறது. ஓர் உன்னதமான இலக்கியம் உண்மையில் வாசகனாலேயே பூர்த்தி செய்யப்படுகிறது.

பென் ஒக்கிரி (Ben Okri) என்பவர் புகழ் பெற்ற ஆப்பிரிக்க எழுத்தாளர். இவருடைய The Famished Road என்ற நாவல் 1991-இல் புக்கர் பரிசு பெற்றது. நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டவர். இவரைப் பற்றி லிண்டா கிரான்ட் எழுதுகிறார். “ஒக்கிரி அலுப்பூட்டும் வசனம் ஒன்று கூட எழுத முடியாதவர்… (அவருடைய) இந்தப் புத்தகத்தை வாசித்து முடித்துவிட்டு வெளியே வந்தேன். அந்தக் கணம் தெற்கு லண்டன் தெருக்களில் உள்ள மரங்களெல்லாம் தேவதைகளினால் நிரப்பப்பட்டு காட்சியளித்தன.”

தமிழ் நாட்டிலும் இப்படிப்பட்ட ஒரு இலக்கியக்காரர் இருக்கிறார். எவ்வளவு முயன்றாலும் அவரால் ஒரு அலுப்பூட்டும் வசனம் எழுத முடியாது. கண்ணாடித்தன்மையான வார்த்தைகள் கவிதையின் உள்ளே இருப்பதை சுலபத்தில் காட்டிவிடுவதைப்போல இவருடைய வார்த்தைகளும் கண்ணாடித்தன்மை கொண்டவை. அவற்றைக் கொண்டு தொடுக்கப்படும் வசனங்கள் அவர் சொல்ல வரும் கருத்தை துலாம்பரமாகக் காட்டிவிடுகின்றன.

இப்படி ரத்தினக் கற்களை நெருக்கி இழைத்தது போல வசனங்களை அடுக்கிச் செய்த இவருடைய சிறுகதை ஒன்றை சமீபத்தில் படித்தேன். கடந்த பதினைந்து ஆண்டுகளில் வெளிவந்த மிகச் சிறந்த தமிழ் சிறுகதைகளில் இதுவும் ஒன்று என்றே நான் கருதுகிறேன்.

இதன் தலைப்பு “வலை“. ஏழு பக்கத்தில் எழுதப்பட்ட கதை. கதாசிரியர் எழுதியது ஆறு பக்கமே. கடைசி ஏழாவது பக்கத்தை வாசகர்தான் பூர்த்தி செய்ய வேண்டும். கதை இதுதான்.

பெரிதாக், ஓயாமல் இருபத்து நாலு மணி நேரமும் சத்தம் எழுப்பும் பெயின்ட் தொழிற்சாலை ஒன்றில் கதைசொல்லி வேலை பார்க்கிறார். இவர் நிர்வகிக்கும் ‘எண்ணிக்கை’ பகுதியில் இன்னும் நாலு பேர் பணி செய்கிறார்கள். இந்தப் பகுதியை எலெக்ட்ரானிக்ஸ் முறைக்கு மாறுவதற்கு அதிகாரம் முயற்சி செய்கிறது. ‘முப்பத்தியெட்டு வருடங்கள் உழைத்தும் பிழை போகாத உபகரணங்கள்; மகத்துவமான தடையில்லாத செயல்பாடு. இன்னும் இருபத்தைந்து வருடங்கள் தாக்குப் பிடிக்கும். ஆனபடியால் அரிதான மூலதனத்தை இதில் செலவு செய்வது வியர்த்தமாகும்.’ இப்படியெல்லாம் சொல்லி காரணம் காட்டி, எண்ணிக்கைப் பகுதியை மூடும் ஆலோசனையைத் தகர்த்தாகிவிட்டது; கதைசொல்லியின் வேலையும் காப்பாற்றப்பட்டுவிட்டது. இது வரை நாலு கண்டம் தாண்டிவிட்டது. இனி மேல் ஒரு கண்டமும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வேலை சுலபமானது. மனக்கோட்டை கட்டலாம். கவிதை எழுதலாம். புத்தகம் படிக்கலாம். ஈ, எறும்பை அவதானிக்கலாம்.

உண்மையில் அதுதான் நடந்தது.

செத்த புழு ஒன்று ஒரு கம்பித்துண்டில் ஒட்டியபடி கிடந்தது. ஓர் எறும்பு இழுத்துப் போகிறது. இன்னொரு எறும்பு சேர்க்கிறது. பார்த்தால் அது எதிர்த்திசையில் இழுக்கிறது. ஒரு சிறு போர். கதைசொல்லி இந்த விவகாரத்தில் கவரப்பட்டு இதையே பார்த்துக் கொண்டு அந்த எறும்பின் பின்னால் போகிறார்.

சிறிது நேரத்தில் அலுப்பு வந்துவிடுகிறது. ஏதாவது செய்து சமனைக் குலைத்து சுவாரஸ்யம் ஏற்படுத்த நினைக்கிறார். ஓர் எறும்பைக் கொன்று என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். அல்லது இரண்டையும் நசுக்கி அந்தத் தருணத்தை தீர்மானிக்கலாம். அல்லது நசுக்காமல் உயிர் கொடுத்து புதுத் தருணத்தையும் சிருஷ்டிக்கலாம். இந்த மூளைப் போராட்டம் அடுத்த கனத்தை நோக்கி நகர்கிறது. ஒரு வினாடி அவருடைய சிருஷ்டிப் பிரம்மாண்டத்தில் மயங்கி பார்வை தடைப்படுகிறது.

புழுவையும் எறும்புகளையும் காணவில்லை. ஒரு மெல்லிய நீக்கலுக்குள் அவை மறைந்துவிட்டன. எதிர்பாராதது.

அலாரம் வீறிடத் தொடங்கியது. எண்ணிக்கை ரிலேயில் ஃப்யூஸ் போய்விட்டது. சிவப்பு விளக்குகள் மின்னின. ராட்சத மெசின்கள் உராய்ந்து ஓய்வுக்கு வந்தன. பேரிரைச்ச்சல்கள் அடங்கின. கற்பனைக்கும் மீறிய அமைதி உண்டாகியது.

இப்படி கதை முடிகிறது. பேரிரைச்சலில் தொடங்கி பெரும் அமைதியில் முடிகிறது.

வலை என்ற தலைப்பு. ஆண் பெண்ணுக்கு வலை வீசலாம்; பெண் ஆணுக்கும் வலை வீசலாம். மனிதன் விலங்குக்கு வலை வீசலாம்; சில சமயம் விலங்கு மனிதனுக்கு வலை வீசலாம்.

ஒரு நுட்பமான கணத்தில் எறும்பின் உயிர் கதைசொல்லியின் கையில்; ஆனால் மன்னித்து கடவுள் போல சிருஷ்டியின் உன்னதத்தை அனுபவிக்கிறார். அடுத்த கணம் இவருடைய எதிர்காலத்தை செத்துப் போன ஓர் அற்பப் புழு தீர்மானித்துவிடுகிறது.

வெகு விரைவில் எண்ணிக்கை பகுதியின் தகுதியின்மை ஆராயப்படும். எலெக்ட்ரானிசின் ஆக்கிரமிப்பில், கதைசொல்லியையும் சேர்த்து ஐந்து பேர் சீக்கிரத்தில் வேலை இழக்க நேரிடலாம்.

இவை வாசகன் இட்டு நிரப்ப வேண்டிய பகுதிகள். செப்புக்கம்பி ஒட்டியபடி செத்துப்போன ஒரு புழு, மிகவும் சாமர்த்தியமாகப் பேசும், நுட்பமான அறிவு பெற்ற புத்திசாலிக்கு வலை விரித்துவிடுகிறது.

கதைசொல்லி விட்டதை நிரப்பியதும் கதை புரிகிறது. இப்பொழுது அந்தக் கதை எனக்கும் சொந்தமாகிவிடுகிறது. இன்னொரு முறை படித்துப் பார்க்கிறேன்.

அந்த ஆசிரியருடைய பெயர் ஜெயமோகன்.


தொகுக்கப்பட்ட பக்கம்: முத்துலிங்கம் பக்கம், ஜெயமோகன் பக்கம்

சுப்ரபாரதிமணியனின் கடிதம்

பழைய காகிதங்களைக் கிளறிக் கொண்டிருந்தபோது கிடைத்த கடிதம். அவர் வருஷாவருஷம் கஷ்டப்பட்டு செகந்தராபாதில் ஒரு தமிழ் புத்தகக் கண்காட்சி நடத்துவார். முதல் முறை நான் போய் சாயாவனம் வாங்கியபோது அவரது கண்ணில் ஆயிரம் வாட் பல்ப் எரிந்தது. சுஜாதாவும் கல்கியும் மட்டுமே விற்றுக் கொண்டிருந்த காலம் அது. அவர் என் லெவலும் அதுதான் என்று தெரியாமல் எனக்கு நல்ல நல்ல புத்தகங்களை எல்லாம் சிபாரிசு செய்தார். நானும் அவரால் கொஞ்சம் நல்ல புத்தகங்கள் படித்தேன்.

1990-ஆம் வருஷம் வாக்கில் எனக்கு பம்பாய்க்கு மாற்றல் ஆனது. அப்போது அவரிடம் ஏன் எழுதுகிறீர்கள் என்று கடிதம் எழுதிக் கேட்டிருக்கிறேன். அதற்கு அவர் எழுதிய பதிலில் அவருடைய creative தவிப்பும் தெரிகிறது, தான் காலம் கடந்து நிற்கும் எழுத்தாளன் என்ற பெருமிதமும் தெரிகிறது.

திரு RVS,

வணக்கம், நலம் குறித்த விருப்பம். தங்களை நன்கறிவேன். நல்ல புத்தகங்களை புத்தகக் கண்காட்சியின் வாங்கிய தரத்தில் உங்கள் அன்பும் ஆதரவும் உங்களை ஞாபகத்தில் வைத்திருக்கச் செய்கிறது. பம்பாய் வாழ்க்கை எப்படி உள்ளது?

ஏன் எழுதுகிறேன் என்ற தங்கள் கேள்வி நியாயமானது.

வாழ்க்கை எனக்கு பலவிதக் கோணங்களைத் தருகிறது. என் சொந்த அனுபவங்கள், பிறரின் அனுபவங்கள் (இதர நண்பர்களின் அனுபவங்கள், பத்திரிகை செய்திகள் etc.) என்னை வாழ்க்கை பற்றி பல மதிப்பீடுகளைத் தருகிறது. இதனால் காட்சி ரூபமாகவும், படிமமாகவும் பல விஷயங்கள் என் மனதுள் உள்ளன. இந்த காட்சி ரூபங்களை, நினைவுகளை, குறிப்புகளை நான் சும்மா வைத்திருக்க முடிவதில்லை. எழுத்தாளன் என்ற ரீதியில் இவற்றை இலக்கிய ரீதியாக பதிவு செய்து கொள்ள ஆசைப்படுகிறேன். பதிவை எழுத்தாக்குகிறேன். இந்தப் பதிவு கலை, இலக்கியம், கலாச்சார ரீதியில் பாதிப்புகளைக் கொண்டிருக்கலாம்.

என் சமகால வாழ்க்கையின் அனுபவங்களை எழுத்தில் படிக்கும் ஒருவன் என் வாழ்க்கையினூடே இந்தியனின் வாழ்க்கை அனுபவங்களை, கலாச்சார விஷயங்களை, காலத்தின் நிகழ்வுகளை அறிந்து கொள்வான். 20 or 30 or 50 வருஷம் கழித்துப் படிக்கும் ஒரு இலக்கிய ஆசிரியன்/சரித்திர ஆசிரியன் என் இலக்கிய பதிவிலிருந்து பல விஷயங்களைக் காணுவான்.

“நான் எழுதத் தொடங்குவதற்கு முதல் காரணம் என்னை அழுத்திக் கொல்கிற சாரமற்ற வாழ்க்கை என்னை நிர்ப்பந்திப்பது. இரண்டாவது காரணம் என்னுள் காட்சிக் கருத்து வடிவங்கள் நிறைந்திருப்பதால் என்னால் எழுதாமல் இருக்க முடியவில்லை” என்ற கார்க்கியின் வார்த்தைகள் என்னுடையதாகவும்.

6 மாத இடைவெளிக்குப் பின் சந்திப்போம். நலம் குறித்த விருப்பம்.

மணி மணியான கையெழுத்து. ஆனால் நுணுக்கி நுணுக்கி எழுதி இருக்கிறார், 20 வருஷம் கழித்து கண்ணை சுருக்கி சுருக்கி படிக்க வேண்டி இருக்கிறது. 🙂 என் கடிதத்தில் போதுமான அளவு தபால் தலை இல்லாததால் ஒரு ரூபாய் அபராதம் கட்டி வாங்கிக் கொண்டேன் என்று எழுதி இருந்தார். 🙂

பம்பாயிலிருந்து நான் மீண்டும் செகந்தராபாத் திரும்பவே இல்லை. சுப்ரபாரதிமணியனையும் அதற்குப் பிறகு சந்திக்கவே இல்லை. அருமையான மனிதர். என்றாவது ஒரு நாள் அவரை சந்தித்து அவரோடு ஒரு காப்பியாவது சாப்பிட வேண்டும்.


தொகுக்கப்பட்ட பக்கம்: சுப்ரபாரதிமணியன் பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:
சுப்ரபாரதிமணியனும் புத்தகக் கண்காட்சியும்
சுப்ரபாரதிமணியனின் சிறுகதைத் தொகுப்பு – அப்பா

அசோகமித்ரனுக்குப் பிடித்த அவருடைய படைப்புகள்

அசோகமித்திரன் தென்றல் இதழுக்கு அளித்த ஒரு பேட்டியில் தான் எழுதியவற்றில் தனக்குப் பிடித்தவற்றைப் பற்றி சொல்கிறார்.

நானும் ஜே. ராமகிருஷ்ண ராஜுவும் சேர்ந்து எடுத்த படம்” என்ற சிறுகதை எனக்கு மிகவும் பிடித்தது. “அப்பாவின் சிநேகிதர்” என் மனம் கவர்ந்த ஒன்று. “உத்தர ராமாயணம்” என்ற சிறுகதை, “பதினெட்டாவது அட்சக்கோடு” போன்றவையும் என் மனம் கவர்ந்தவைதான். “ராஜாவுக்கு ஆபத்து” என்ற சிறுகதையை பலர் படித்திருக்கக் கூட மாட்டார்கள். ஆனால் அதை ஒரு முக்கியமான சிறுகதையாக நான் கருதுகிறேன். எனக்குப் பிடிக்காதது என்றால் “தண்ணீர்“, “கரைந்த நிழல்கள்” ஆகியவற்றைச் சொல்லலாம். என்னவோ அவற்றை எழுதிவிட்டேன்.

நானும் ஜே. ராமகிருஷ்ண ராஜுவும் சேர்ந்து எடுத்த படம் ஒரு கிளாசிக். படிக்கும்போது புன்னகைத்துக் கொண்டே இருந்தேன். அசோகமித்ரனின் நகைச்சுவை ஃபார்முலா நகைச்சுவை இல்லை. வாழ்க்கையை நுட்பமாக கவனித்து அதில் உள்ள அபத்தங்களை எடுத்துக் காட்டி நம்மை நகைக்க வைப்பவர். இந்த சிறுகதை அதற்கு ஒரு கச்சிதமான எடுத்துக்காட்டு.

அப்பாவின் சிநேகிதர் ஒரு விதத்தில் ஐநூறு கோப்பை தட்டுகள் என்ற சிறுகதையின் தொடர்ச்சி. இதிலும் நல்ல ட்விஸ்ட், ஆனால் என்னால் யூகிக்க முடிந்த அபூர்வமான அசோகமித்திரன் சிறுகதைகளில் ஒன்று. இதை நான் அவரது உயர்ந்த சிறுகதைகள் லிஸ்டில் வைக்கமாட்டேன்.

உத்தர ராமாயணம் இன்னொரு சிறப்பான சிறுகதை. மனிதர் கதையின் கோணத்தை மாற்றும் விதம் அபாரம்!

ராஜாவுக்கு ஆபத்து எனக்கு இன்னும் புரியவில்லை. மனித வாழ்க்கை அபத்தம் என்கிறாரா, என்னதான் சொல்ல வருகிறார்? அவர் செஸ் பற்றி எழுதி இருப்பதெல்லாம் நிஜம்.

எனக்கு கரைந்த நிழல்கள், தண்ணீர் போன்றவை அற்புதமான படைப்புகள். பதினெட்டாம் அட்சக்கோட்டை அவற்றுக்கு அடுத்த படியில்தான் வைப்பேன்.

முழுப் பேட்டியையும் இங்கே படிக்கலாம். (Registration Required)


தொகுக்கப்பட்ட பக்கம்: அசோகமித்திரன் பக்கம்

தொடர்புள்ள சுட்டிகள்:
பதினெட்டாம் அட்சக்கோடு பற்றி ஆர்வி, பக்ஸ்
தென்றல் பேட்டி (Registration Required)

நாஞ்சில்நாடனின் “என்பிலதனை வெயில் காயும்”

இது ஒரு autobiographical நாவல் என்று நினைக்கிறேன். முதல் நாவலான தலைகீழ் விகிதங்களை விட இதில் subtle ஆக சொல்ல முயற்சித்திருக்கிறார், வெற்றியும் பெற்றிருக்கிறார்.

ஏழைக் குடும்பத்தில் பிறந்து கஷ்டப்பட்டு கணித பட்டப் படிப்பு படிக்கும் சுடலையாண்டியின் உணர்வுகள் என்று ஒரு வரியில் சொல்லிவிடலாம். சுடலையாண்டியின் உணர்வுகளைப் பற்றி அதிகமாகப் பேசாமல் அவன் கண்களின் மூலம் நம்மை சம்பவங்களைப் பார்க்க வைப்பதில்தான் இந்த நாவலின் வெற்றி இருக்கிறது. பணக்கார வீட்டு ஆவுடையம்மாளுக்கும் அவனுக்கும் நடுவில் இருக்கும் கவர்ச்சி, டென்ஷன், தாத்தா பாட்டியின் ஒரே நம்பிக்கை, அம்மா அப்பா இல்லாத வீடு, தாய் தந்தையரின் கலப்புத் திருமணம் மூலம் ஏற்படும் அவமானங்கள், கூடப் படிக்கும் எவருக்கும் இல்லாத வேலை செய்தாக வேண்டிய நிலை, அதனால் உணரும் அவமானம் என்று பிரமாதமான சித்தரிப்பு.

நாஞ்சில்நாட்டு பேச்சை, பழக்கவழக்கங்களை சித்தரிக்க ஜெயமோகனை நெருங்கக் கூட ஆள் கிடையாது என்று நினைத்திருந்தேன். நாஞ்சில்நாடன் என்று பேர் வைத்துக் கொண்டிருப்பவருக்கு அது கைவராமல் போய்விடுமா என்று யோசித்திருக்க வேண்டாமா?

பிரச்சினை என்னவென்றால் சித்தரித்து அப்புறம் என்ன? சித்தரிப்போடு நின்றுவிடுகிறது. கதை பாதியில் நின்றுவிட்ட மாதிரி இருக்கிறது. ராஜாராவின் காந்தபுராவைப் படிக்கும்போதும் இப்படித்தான் உணர்ந்தேன். எனக்கெல்லாம் சுபம் (அல்லது துக்கமாக ஒரு வணக்கம்) போட்டு படத்தை முடித்தால்தான் திருப்தி போலிருக்கிறது.

ஜெயமோகன் இதை தமிழ் நாவல்களின் இரண்டாம் பட்டியலில் – பல்வேறு வகையில் முக்கியத்துவம் உடைய ஆனால் முழுமையான கலைவெற்றி கைகூடாத படைப்புகள் – சேர்க்கிறார். எஸ்.ரா.வின் லிஸ்டில் இது இடம் பெறவில்லை.

சித்தரிப்பு மட்டுமே இருப்பது எனக்கு குறையாகப் பட்டாலும் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

உடுமலை தளத்தில் கிடைக்கிறது, விலை எழுபது ரூபாய்.

தொகுக்கப்பட்ட பக்கம்: நாஞ்சில்நாடன் பக்கம்

இளம் கவிஞனுக்கான கடிதங்கள் – 4

வார்ப்ஸ்விட், ப்ரீமென் நகரின் அருகில்,
ஜூலை 16, 1903

சுமார், பத்து நாட்களுக்கு முன் பாரீஸிலிருந்து, தளர்ச்சியும் உடல் நலக்குறைவுடனும், கிளம்பி இந்த அற்புதமான வட சமவெளிப் பகுதிக்கு வந்தேன். இந்த பகுதியின் விசாலமும், அமைதியும், வானமும் என்னை மறுபடியும் சுகப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் நீண்ட மழை காலத்தின் நடுவினில் வந்து சேர்ந்தேன்; அமைதியின்றி ஓலமிட்டுக் கொண்டிருந்த நிலவெளி இன்று தான் முதல் முறையாக அடங்கியது. பிரகாசமான இக்கணத்தில் என் வாழ்த்துக்களை உங்களுக்கு தெரிவிக்கிறேன், ஐயா.

என் அன்பிற்குரிய திரு. கப்பஸ்: உங்கள் கடிதமொன்று வெகு காலமாக பதிலளிக்கப்படாமல் என்னிடம் உள்ளது; நான் அதை மறந்து விட்டேன் என்பதனால் அல்ல. மாறாக பல கடிதங்களின் மத்தியில் அதைக் காணும் போதெல்லாம் மறுபடியும் வாசிக்க வைக்கும் கடிதம் அது. அக்கடிதத்தில் நீங்கள் எனக்கு மிக அருகில் இருப்பதைப் போலவே உணர்கிறேன். அது நீங்கள் மே மாதம் இரண்டாம் நாள் அனுப்பிய கடிதம்; நிச்சயமாக உங்களுக்கு அக்கடிதம் நினைவில் இருக்கும் என நம்புகிறேன். இத்தருணத்தில், தொலைதூரத்தில் உள்ள இவ்விடத்தின் அமைதியில் அக்கடிதத்தை வாசிக்கையில், வாழ்க்கையை நோக்கிய உங்களுடைய இனிமையான பதட்டம் என் மனதை உருக்குகிறது – பாரீஸில் இருந்ததை விட மேலாகவே, ஏனென்றால் அங்கு அளவிற்கு அதிகமான கூச்சலால், சகலமும் எதிரொலித்து தேய்ந்து மாறிப் போய்விடுகிறது. இங்கே, கடல் காற்று அசைந்து செல்லும் மிகப்பெரிய நிலவெளியால் சூழப்பட்ட இடத்தில், எனக்கு தோன்றுவது என்னவென்றால்: ஆழங்களில் தமக்கென ஒரு வாழ்க்கையை கொண்டிருக்கும் உங்களுடைய கேள்விகள் மற்றும் உணர்ச்சிகளுக்கு பதிலளிக்கக் கூடியவர் எங்கேயும் இல்லை. நினைத்ததை தெளிவாக உரைக்கும் திறமை கொண்டவர் கூட உங்களுக்கு உதவி செய்ய இயலாது, ஏனென்றால் அவ்வார்த்தைகள் சுட்டுவது சொல்லிவிட முடியாத, நுண்மையான ஒன்றை பற்றியே. இருந்தாலும் கூட, இந்த தருணத்தில் என் கண்களின் முன்னால் உள்ள காட்சியைப் போன்ற விஷயங்கள் மேல் நீங்கள் நம்பிக்கை வைத்தால், உங்கள் கேள்விகளுக்கு விடை கிடைக்காமலேயே இருந்து விடாது என நான் எண்ணுகிறேன். இயற்கையின் மீது நீங்கள் நம்பிக்கை வைத்தால், அதில் யாரும் கவனிக்காமல் விடும் சிறு விஷயங்கள் திடீரென்று அளவிட முடியாத பிரம்மாண்டத்தை அடைந்து விடும்; எளியவைகளின் மீது நீங்கள் அன்பு கொள்வீர்கள் என்றால்; அந்த அன்பை சேவகம் செய்பவரைப் போல, ஒரு ஏழையின் நம்பிக்கையை அடைவதற்கு என்பதைப் போல; மிகவும் அடக்கத்துடன் பிரயோகிப்பீர்கள் என்றால்; கூடுதல் ஒத்திசைவுடனும், சமரசத்தோடும் சகல காரியங்களும் உங்களுக்கு எளிதாகிவிடும்; உங்களுடைய விழிப்பு நிலையில் அப்படி தோன்றாவிட்டாலும், ஆழ் மனதின் அறிவில் தெரிந்துவிடும்.

நீங்கள் மிகவும் இளையவர், எல்லா வகையான ஆரம்பங்களுக்கும் முன்னால் நின்று கொண்டிருப்பவர்; உங்களிடம் என்னால் இயன்றவரை வேண்டிக் கொள்வது இது தான் – இங்கள் இதயத்தில் தீர்க்கப் படாதவைகளுடன் பொறுமையோடு இருங்கள் மற்றும் அக்கேள்விகளை பூட்டிய அறைகளைப் போலவோ அல்லது வேற்று மொழியில் எழுதப்பட்ட புத்தகங்களைப் போலவோ நேசிக்க முயற்சி செய்யுங்கள். பதில்களை தேடாதீர்கள், உங்களுக்கு அவை கொடுக்கப்பட மாட்டாது ஏனென்றால் உங்களால் அவற்றை வாழ்ந்து அறிய முடியாது. எல்லாவற்றையும் வாழ்ந்து உணர வேண்டும் என்பதே முக்கியம். இப்போது உங்கள் கேள்விகளை கொண்டு வாழுங்கள். எதிர்காலத்தில் ஒரு நாள், நீங்கள் அறியாமலேயே படிப்படியாக வாழ்ந்து உங்கள் விடையை அடையலாம். நீங்கள் படைத்தலுக்கும், உருவாக்குதலுக்கும் உரிய உள்ளாற்றலை , ஆசீர்வதிக்கப்பட்ட, தூய வாழ்க்கை முறையாக கொண்டிருக்கலாம். உங்களை அதற்கு பழக்கிக் கொள்ளுங்கள் – ஆனால் நேர்கொள்வது அத்தனையையும் எடுத்துக் கொள்ளுங்கள்; பெரும் நம்பிக்கையோடு, உங்கள் அகத்தின் தேவையை பூர்த்தி செய்வதற்காக, சுயவிருப்பத்தின் மூலம் உங்களிடம் அவை வரும் வரை, எல்லாவற்றையும் தாங்கிக் கொள்ளுங்கள்; எதன் மீதும் வெறுப்படையாதீர்கள். ஆமாம், காமம் கடினமானது. ஆனால் நம் பொறுப்பிலாக்கப்பட்டுள்ள எல்லா கடமைகளும் கடினமானவையே; அநேகமாக முக்கியம் வாய்ந்த விஷயங்கள் எல்லாமே கடினமானது தான்; எல்லா விஷயங்களும் முக்கியமானது. இதை உணர்ந்து கொண்டு, உங்களுடைய இயல்பையும், திறனையும் கொண்டு, உங்களுடைய அனுபவங்களையும், பால்யபருவத்தையும், அதன் உறுதியையும் வைத்து, காமத்தின் பால் உங்களுக்கான தனிப்பட்ட உறவை (பாரம்பரியமும், மரபும் உருவாக்கும் தாக்கம் இல்லாமல்) உருவாக்கிக் கொண்டால், அதில் உங்களை தொலைத்து விடுவீர்களோ என்ற அச்சமும், உங்களுடைய அரிதான உடைமைகளை இழக்க நேரிடுமோ என்ற பதட்டமும் கொள்ளத் தேவையில்லை.

உடலின்பம் என்பது புலனின்பமே, ஒன்றை காண்பதற்கும் அல்லது கனிந்த பழம் நாக்கினில் உருவாக்கும் உணர்வுக்கும் அதற்கும் வேறுபாடு கிடையாது. அது நமக்கு அளிக்கப்பட்ட ஒரு சிறந்த, முடிவற்ற அறிதலாகும். இவ்வுலகைப் பற்றிய முழுமையான, ஒளிரும் அறிவாகும். அதை நாம் ஏற்றுக் கொள்வது தவறல்ல; தவறு எங்கேயென்றால், அவ்வறிவை மனிதர்கள் விரயப்படுத்தி, தளர்ந்து போகும் தருணங்களில் அதை கிளர்ச்சியூட்டுவதற்காகவும் தம்மையே திசை திருப்புவதற்காகவும் உபயோகப்படுத்துகையில் தான். மனிதர்கள் உண்பதைக் கூட வேறு விஷயமாக மாற்றி விட்டார்கள்: தேவை ஒரு பக்கமும், மிகுதி மறுபக்கமுமாக; இந்த தேவையை குறித்த எண்ணத்தின் தெளிவை கலங்கலாக்கி விட்டார்கள்; அதைப் போலவே வாழ்க்கை தன்னையே புதிப்பித்துக் கொள்ளும் எல்லா ஆழமான, எளிய தேவைகளையும் கலங்கலாக்கி விட்டார்கள். ஆனால் தனிமனிதன் அத்தேவைகளை தெளிவுபடுத்திக் கொண்டு அதற்கேற்ப வாழ முடியும் (யாரையும் சார்ந்திருக்காத, தனி மனிதன் மட்டுமே). சகல மிருகங்களிலும், தாவரங்களிலும் காணும் அழகானது, நிலைத்திருக்கும் அன்பும், ஏக்கமும் தான் என்பதை நினைவில் கொள்வான். தாவரங்களும், மிருகங்களும் பொறுமையுடனும், சம்மதத்துடனும் ஒன்று சேர்ந்து, இனவிருத்தி அடைந்து வளர்வது உடலின்பத்தினாலோ, உடல்வலி கொண்டோ அல்லாமல் அதைவிட உயர்ந்த – சுகத்தையும், வலியையும் விட சிறந்த, விருப்பாற்றலையும், எதிர்த்து தாங்கும் சக்தியையும் விட வல்லமை கொண்ட – ஒரு தேவையை பூர்த்தி செய்வதற்கே என்பதைக் காண்பான். சிறு விஷயங்களில் கூட நிரம்பியிருக்கும் இந்த மர்மத்தை, மனிதர்கள் பணிவுடன் ஏற்றுக் கொண்டு, இன்னும் சிரத்தையுடன் தாங்கி, அனுபவித்து, அதன் பாரத்தை உணர்ந்தால் சிறப்பாக இருக்கும். அத்தேவையின் இன்னொரு முகமான, தங்களால் உருவாக்கவல்ல பயனைக் குறித்து மரியாதைக் கொண்டால், நன்றாக இருக்கும். மனிதர்களினால் உண்டாகும் பயன் உடல் கொண்டோ மனம் கொண்டோ ஏற்படலாம், ஏனென்றால் அவை இரண்டும் ஒரே தேவையின் இரு வேறு வெளிப்பாடுகளே. மனதில் உருவாக்கப்படும் படைப்பும் உடல் வழியே தான் ஆரம்பமாகிறது. அதுவும் உடல் உணரும் இன்பத்தின் இயல்பை கொண்டது ஆனால் அதைவிட மிருதுவானதும், அதிக இன்பமுடையதும், பலமுறை திரும்ப உணரக்கூடியதும் ஆகும்.

படைப்பவனாகவும், வடிவம் கொடுப்பவனாகவும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தின் ஈர்ப்பு – அது புறவடிவில் இவ்வுலகத்தில் தொடர்ந்து நடந்தேறுவதாலும், எல்லா விலங்குகளும், பொருட்களும் அதை ஆயிரம் மடங்கு நம்மிடம் ஒப்புதல் அளிப்பதாலும் உருவானது. அந்த இன்பம் சந்ததிகள் வழியாக கோடிக்கணக்கான உயிர்கள் கருவாகி, உயிர்பெற்ற நினைவுகளை கொண்டிருப்பதால் தான் விவரிக்கமுடியாத அளவிற்கு நாம் அழகுடனும், வளமுடனும் அவற்றை உணர்கிறோம். ஒரு படைப்பூக்கம் கொண்ட எண்ணம் மறக்கப்பட்ட ஆயிரம் காதல் இரவுகளை உயிர்ப்பித்து அவற்றை இன்னும் மேன்மைபடுத்தக் கூடியது. இரவு பொழுதுகளில் ஒன்று கூடி, பிணைந்து இன்பத்தில் திளைப்பவர்கள், எதிர்கால கவிஞர்களின் வார்த்தைகளற்ற பரவசத்தை உரைக்கும் பாடல்களுக்கு தித்திப்பையும், ஆழத்தையும், வலிமையையும் சேகரிக்கும் செயலை புரிந்து கொண்டிருக்கிறார்கள். அதன் வழியே அவர்கள் எதிர்காலத்தை அழைக்கிறார்கள். அவ்வாறு இல்லாமல் வெறும் உடல்களை மட்டும் தழுவிக் கொண்டார்கள் என்றாலும் கூட, எதிர்காலம் வந்தே தீரும், ஒரு புதிய மனிதன் உருவாகிறான், இங்கு நடந்த சிறு விபத்தின் வழியே ஒரு புது விதி விழித்தெழுகிறது, அதன் வழியே விதை ஒன்று தன்னை வரவேற்கும் முட்டை ஒன்றை அடைகிறது. வெளிப்பரப்புகளை கண்டு குழம்பி விடாதீர்கள்; ஆழ் நிலைகளில் எல்லாம் ஒரு விதியாக மாறிவிடுகிறது. இந்த பிரபஞ்ச மர்மத்தை பொய்யாகவும், தவறாகவும் வாழ்பவர்கள் (நிறைய மனிதர்கள் அப்படித்தான் வாழ்கிறார்கள்) அதை இழக்கிறார்கள். ஆனால் திறக்கப்படாத கடிதத்தைப் போல அதை எதிர்காலத்திற்கு அனுப்பி விடுகிறார்கள்.

ஒவ்வொரு தனிப்பட்ட வாழ்க்கையின் சிக்கல்களையும், பெயர்களையும் கண்டு குழம்பி விடாதீர்கள். அவற்றிற்கு எல்லாம் மேலே தாய்மையுணர்வு, பகிர்ந்து கொள்வதற்கான ஏக்கமாக உருமாறி இருக்கலாம். தன்னையே முன்னுணர்ந்து அதற்காக தயார்படுத்திக் கொண்டு, பதட்டத்துடனும், ஏக்கத்துடனும் காத்திருக்கும் தாய்மையுணர்வே ஒரு பெண்ணின் (நீங்கள் அழகாக குறிப்பிட்டதைப் போல – “இன்னும் எதையும் அடையாத”) அழகு. தாயின் அழகு அவள் காட்டும் தாய்மையுணர்வு; வயதான முதிர்ந்தவளின் அழகு அதன் நினைவுகள். எனக்கு தோன்றுவது; ஆணின் உள்ளும் உடலாலும், மனத்தாலும் தாய்மையுணர்வு உண்டு. அவனுள்ளே உள்ள ஆழத்தின் முழுமையிலிருந்து உருவாக்கும் பொழுது ; அவன் வழியே உருவாகும் உயிர் கூட அவன் பிரசவிப்பதைப் போன்றது தான். உலகம் புரிந்து வைத்திருப்பதைக் காட்டிலும் இரு பாலரும் ஒத்த இயல்புடையவர்கள் என நான் நினைக்கிறேன். இவ்வுலகின் புதுப்பிறப்பு நிகழ்வதற்கு ஆணும், பெண்ணும் தம்முள் உள்ள பிழையான உணர்வுகளை களைந்து, ஒருவரையொருவர் எதிர்பதமாக நாடாமல், சகோதரத்துவத்துடன், நட்புணர்ச்சியுடன் சகமனிதர்களாக இணைந்து- தம்மீது ஏற்றப்பட்டிருக்கும் காமம் என்ற பாரத்தை பொறுமையுடனும், முனைப்புடனும் தாங்க வேண்டும்.

என்றோ ஒருநாள் பல மனிதர்களுக்கு சாத்தியப்படக் கூடியதை, தனி மனிதன் தன்னை தயார்படுத்திக் கொண்டு, பெரிய தவறுகளை நிகழ்த்தாமல், இன்றே அடைந்து விடலாம். ஆதலால், உங்கள் தனிமையை நேசித்து, அது தரும் வலியுடன் பாட முயற்சி செய்யுங்கள். எழுதுங்கள், அது அருகிலிருப்பவரையும் தூரத்தில் வைத்து விடும். உங்களுக்கு அருகிலிருப்பதெல்லாம் வெகு தொலைவில் சென்றுவிட்டது என்றால் உங்கள் மனப்பரப்பின் விசாலம் நட்சத்திரங்களுக்கு இடையில் மிகவும் பெரிதாக ஆகிவிட்டது எனலாம். உங்கள் வளர்ச்சியை கண்டு சந்தோஷம் அடையுங்கள்; அதில் மற்ற எவரையும் கூட அழைத்து செல்ல இயலாது, அதனால் பின்தங்கியவர்களின் மீது கருணையோடு இருங்கள்; அவர்களின் முன் அமைதியாகவும், நம்பிக்கையுடனும் நடந்து கொள்ளுங்கள்; அவர்களால் புரிந்து கொள்ளவே முடியாத உங்களுடைய ஐயங்களையும், நம்பிக்கைகளையும், ஆனந்தத்தையும் சொல்லி அவர்களை பயமுறுத்தி, அவதிக்குள்ளாக்காதீர்கள். உங்களுக்கிடையே பொதுவான ஒன்றை கண்டு கொள்ளுங்கள்; அவர்களைக் காணும் பொழுது அவர்களுடைய பார்வையில் இவ்வாழ்க்கையின் மேல் அன்பு கொள்ளுங்கள். வயது முதிர்ந்தவர்களிடம் கூடதலாக விட்டுக் கொடுங்கள் ஏனென்றால் நீங்கள் விரும்பும் தனிமையை கண்டு அவர்கள் அஞ்சுவார்கள். முடிந்தவரை பெற்றவர்களுக்கும், பிள்ளைகளுக்கும் இடையில் ஏற்படும் உறவுப் பிரச்சனைகளுக்கான காரணிகளை தவிர்த்து விடுங்கள். அது குழந்தைகளின் ஆற்றலையும், பெரியவர்களின் அன்பையும் வீணடித்து விடுகிறது. அவர்களிடம் அறிவுரை கேட்காதீர்கள்; அவர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள் என்றும் எதிர்ப்பார்க்காதீர்கள். ஆனால் அவர்களுக்குளே உங்களுக்காக பரம்பரை சொத்தைப் போல சேகரித்து வைக்கப்பட்டுள்ள அன்பின் மீது நம்பிக்கை வைத்திருங்கள். அந்த அன்பில் உள்ள வல்லமையும், ஆசீர்வாதத்தையும் கொண்டு அதனுள்ளேயே வேண்டிய தூரம் வரை பயணிக்க இயலும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

உங்களை முற்றிலும் சுதந்திர மனிதனாக மாற்றப் போகும் தொழில் ஒன்றில் நீங்கள் சேரப் போவது குறித்து மகிழ்ச்சி. இந்த வேலை உங்களுடைய அகவாழ்க்கையை முடக்குகிறதா என பொறுமையோடு கண்டறியவும். என்னைப் பொறுத்தவரை உங்களுடைய தொழில் கடினமானதும், உழைப்பை அதிகம் கோரக்கூடியதும் ஆகும். மிக அதிகமான மரபொழுங்குகளை கடைபிடிக்க வேண்டி வருவதால் அந்த செயல்களைக் குறித்த தனிப்பட்ட உள்ளார்ந்த பார்வைகளை செலுத்த இயலாது. ஆனால் இத்தரப்பட்ட பரிச்சயமற்ற சூழ்நிலைகளிலும் கூட உங்களுடைய தனிமை ஒரு பக்கபலமாக, உறைவிடமாக, சரியான பாதையை காட்டுவதாக இருக்கும் என நினைக்கிறேன்.

என் நல்வாழ்த்துக்கள் உங்களுடன் எப்போதும் இருக்கும், அதைப் போலவே என் நம்பிக்கைகளும் உங்களுடன் இருக்கும்.

உங்களுடைய,
ரெய்னர் மரியா ரில்கே.


தொகுக்கப்பட்ட பக்கம்: மொழிபெயர்ப்புகள், முத்துகிருஷ்ணன் பதிவுகள்

தொடர்புள்ள சுட்டிகள்: கடிதம் 1, கடிதம் 2, கடிதம் 3

சுஜாதாவின் “ஆ!”

இன்னொரு கணேஷ்-வசந்த் கதை.

விகடனில் தொடர்கதையாக 1992-இல் வந்தது. ஒவ்வொரு இதழிலும் வலிந்து “ஆ” என்ற வார்த்தையோடு முடிக்கிறார். தொடர்கதையாகப் படிக்கும்போது இது சுவாரசியமான உத்தியாக இருந்திருக்கலாம். மொத்தமாகப் படிக்கும்போது அலுப்பு தட்டுகிறது.

தினேஷ்குமாருக்கு மண்டையில் குரல்கள் கேட்டுக் கொண்டே இருக்கின்றன. மாடியிலிருந்து கீழே குதி, பால்கனியிலிருந்து குதி, பஸ்சுக்கு முன் காரைத் திருப்பு என்றெல்லாம். தற்கொலை நடக்காமல் தப்பிப்பது அதிர்ஷ்டம்தான். CAT scan, மருந்து மாத்திரை, மனநிலை மருத்துவம், சாமியார், கோவில்-குளம் என்று எல்லா விதமான ட்ரீட்மெண்ட்டும் எடுத்துப் பார்க்கிறான். கடைசியில் ஏதோ முன் ஜென்ம நினைவு என்று அவனுக்குத் தெளிவாகிறது. அவன் உடலில் ஜெயலட்சுமி டீச்சரின் கணவன் சர்மாவின் ஆவி புகுந்து கொள்கிறது. தன்னைக் கொன்ற ஜெயலட்சுமியின் மறுபிறவியும், தினேஷின் மனைவியுமான தேவகியைக் கொன்றுவிட்டு வெளியேறிவிடுகிறது. தினேஷ் நார்மல்! கணேஷ்-வசந்த் கொலையின் போது சுயநினைவில் இல்லை என்று வாதிட்டு விடுதலை வாங்கிக் கொடுக்கிறார்கள். அப்புறம் எதிர்பார்க்கக் கூடிய முடிவு.

லாஜிக் நிறைய உதைக்கிறது. சர்மாதான் அந்தக் குரல். சர்மாவுக்கு தேவகியைக் கொலை செய்வதுதான் குறி. அப்புறம் தினேஷைத் தற்கொலை செய்து கொள்ளத் தூண்டுவானேன்? தினேஷ் போய்விட்டால் தேவகியை ஆவியால் கொல்ல முடியாதே!

தினேஷின் மன உளைச்சல்கள் நன்றாக வந்திருக்கும்.

சுமாரான கதைதான். நல்ல தொடர்கதை என்று சொல்லலாம். கணேஷ்-வசந்த் ரசிகர்களுக்கு மட்டும்தான்.

நூல் உலகம் தளத்தில் கிடைக்கிறது, கிழக்கு வெளியீடு. விலை 120 ரூபாய். 1992ல் ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளியானது.


தொகுக்கப்பட்ட பக்கங்கள்: சுஜாதா பக்கம், கணேஷ்-வசந்த் பக்கம்