அசோகமித்திரன் பேட்டி

அசோகமித்திரன் விகடனில் கொடுத்த பேட்டியை இட்லிவடை தளத்தில் மறு பிரசுரம் செய்திருக்கிறார்கள். அசோகமித்திரன் எழுத்தைப் போலவே அவரது பேச்சும் ரத்தினச் சுருக்கமாக இருக்கிறது. இது ஒரு மோசமான பேட்டி, மண்டபத்தில யாரோ எழுதிக் கொடுத்ததைப் போட்டிருக்கிறார்கள் என்று சில நண்பர்கள் சொன்னார்கள். எனக்கு இதில் அசோகமித்ரனின் டச் தெளிவாகத் தெரிகிறது. இது வரை பார்க்காவிட்டால் கட்டாயமாகப் பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன். விகடனுக்கும் இட்லிவடைக்கும் நன்றி!

சில excerpts:

“இந்த வயதில் இருந்து பார்க்கும்போது, வாழ்க்கை எப்படி இருக்கிறது?”
“ரொம்பச் சோர்வாக இருக்கிறது. தள்ளாமையும் வியாதிகளும் வலியும் கொல்கின்றன. உலகம் விடை கொடுத்துவிடாதா என்று காத்திருக்கிறேன்.”

“உங்கள் 60 ஆண்டு எழுத்து வாழ்க்கை திருப்தியைத் தருகிறதா?”
“இதுவரைக்கும் 9 நாவல்கள், முந்நூற்றிச் சொச்ச சிறுகதைகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கிறேன். என்னுடைய எழுத்து மேல் திருப்தி இருக்கிறது. வாழ்க்கை மேல் புகார்கள் கிடையாது. ஆனால், என் எழுத்தைப் படித்துவிட்டு எழுத்தாளனாகப் போகிறேன் என்று சொல்லிக்கொண்டு யாராவது என்னைப் பார்க்க வந்தால் மட்டும் எனக்குப் பொல்லாத கோபம் வரும். ‘போடா மடையா… உருப்படியாக ஏதாவது வேலையைத் தேடிக் கொள்’ என்று கத்தத் தோன்றும். நான் எப்படியோ வாழ்ந்துவிட்டேன். எதிர்பார்ப்புகள் இல்லாத வாழ்க்கை. மற்றவர்களுக்கு இந்தக் கஷ்டம் வேண்டாம்.”

“தமிழ், ஆங்கிலம் இரண்டிலுமே சிறப்பாக எழுதக் கூடியவர் நீங்கள். ஆனால், தமிழைச் சுற்றியே உங்கள் படைப்பு உலகத்தை அமைத்துக் கொண்டீர்கள். ஏன்?”
“1952-ல் நான் எழுத வந்தேன். அப்போது தமிழில்தான் செய்ய வேண்டியது நிறைய இருப்பதாகத் தோன்றியது. அதற்கு நிறையப் பேரின் தேவையும் இருந்தது. தமிழைத் தேர்ந்தெடுத்தேன்.”

“புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, கு.ப.ரா. எனப் பலர் அந்தக் காலகட்டத்திலேயே புதுப் புது முயற்சிகளில் ஈடுபட்டு இருந்தார்கள் இல்லையா?”
“ஆமாம்; ஆனால் அது தொடக்கம்தான். செல்ல வேண்டிய தூரம் அதிகம் இருந்தது.”

“ஒரு வாசகராக உங்களை மிகவும் பாதித்த படைப்புகளைச் சொல்லுங்கள்?”
உ.வே.சா-வின் ‘என் சரித்திரம்’, நாமக்கல் கவிஞரின் ‘என் கதை’, கல்கியின் ‘தியாக பூமி’, புதுமைப்பித்தனின்சித்தி’, சரத்சந்திர சாட்டர்ஜியின் ‘சந்திரநாத்’, அலெக்சாண்டர் டூமாஸின் ‘The Count of Montecristo’, சார்லஸ் டிக்கன்ஸின் ‘A Tale of Two Cities”

“கடந்த ஒரு நூற்றாண்டில் இந்திய அளவில் மகத்தான இலக்கியச் சாதனையாக எதைச் சொல்வீர்கள்?”
தாகூரின் ‘கோரா’.”

“ஒரு விமர்சகராக நீங்கள் கறாராகச் செயல்பட்டது இல்லை என்ற குற்றச்சாட்டு உண்டு…”
“ஏன் கறாராகச் செயல்பட வேண்டும்? விமர்சகனாக அடையாளப்படுத்திக்கொள்ளக் கூட நான் பிரியப்பட்டது இல்லை.”

“உங்கள் அளவில் நல்ல இலக்கியத்துக்கான வரையறை என்ன?”
“மனிதன் மீது அக்கறை காட்டுகிற எல்லாமே இலக்கியம்தான். மனிதர்களைப் பிரிக்கிற எதுவுமே இலக்கியம் இல்லை.”

“தமிழில் இப்போது எழுதுபவர்களில் நம்பிக்கை அளிப்பவர்களாக யாரைக் கருதுகிறீர்கள்?”
ஜெயமோகன். அவருக்கு இருக்கும் அனுபவங்களும் வாசிப்பும் இன்னும் அவரைப் பெரிய உயரங்களுக்குக் கொண்டு செல்லும் என்று நினைக்கிறேன். ஆனால், படைப்புகளைத் தாண்டி அவர் எழுதுவதும் பேசுவதும்… ம்ஹூம்…”

“உங்களை நீங்கள் சுயவிமர்சனம் செய்துகொள்வது உண்டா? உங்கள் படைப்புகளை எப்படி மதிப்பிடுகிறீர்கள்?”
“ஒவ்வொருவருக்கும் அது அவசியம் இல்லையா? எல்லாக் காலங்களிலுமே என்னை சுயவிமர்சனம் செய்து வந்திருக்கிறேன். உலகத் தரத்தில் என் எழுத்துகளை ஒப்பிடச் சொன்னால், நான் யாருக்கும் தாழ்ந்தவன் இல்லை என்று சொல்வேன்.”

“நாட்டுநடப்புகள், அரசியல் போக்குகள்பற்றி நீங்கள் அதிகம் விமர்சித்தது இல்லை…”
“வாழ்க்கையோடு முட்டி மோதி நின்றவன் அல்ல நான். வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்தவன். அரசியலையும் அப்படித்தான் பார்த்தேன்.”


தொகுக்கப்பட்ட பக்கம்: அசோகமித்திரன் பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்: முழு பேட்டியும் இங்கே

ஜெயமோகனின் நேர்மை

பழைய விஷயம்தான். (2003-இல் நடந்திருக்கிறது). இருந்தாலும் மீண்டும் ஒரு முறை.

கருணாநிதியின் இலக்கிய பங்களிப்பைப் பற்றி சொல்ல ஒன்றுமில்லை. ஆனால் பலரும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள் என்பதுதான் பிரச்சினை. மேடை நாகரீகம் என்று நினைத்துக் கொண்டு அளவுக்கு அதிகமாக புகழ்வது, ஏறக்குறைய பொய்யே சொல்வது என்று நமக்கு ஒரு துரதிருஷ்டமான மரபு இருக்கிறது. பாணன் உள்ளூர் பண்ணையாரை பாட ஆரம்பித்த காலத்திலிருந்தே இப்படித்தான்.

இந்த துதிபாடிகள் லிஸ்டில் வண்ணதாசனையும் பார்ப்பது துரதிருஷ்டம். அவர், ஞானக்கூத்தன் என்று பலரும் கருணாநிதியை ஆஹா ஓஹோ என்று ஒரு கூட்டத்தில் புகழ்ந்திருக்கிறார்கள். ஜெயமோகன் அடுத்த நாள்

இந்த மேடையில் நின்று அந்த 3 சதவீத முணுமுணுப்பின் பிரதிநிதியாகச் சொல்கிறேன், திரு மு. கருணாநிதி அவர்கள் எழுதும் எழுத்துக்கள், தீவிர இலக்கியத்தின் எப்பிரிவிலும் பொருட்படுத்தக் கூடியவை அல்ல

என்று சொல்லி இருப்பது மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. ஜெயகாந்தன் அண்ணாதுரை மறைவுக் கூட்டத்தில் பேசியதை நினைவுபடுத்துகிறது.

பத்ரி சேஷாத்ரி இந்த நிகழச்சியைப் பற்றி விரிவாக இங்கே எழுதி இருக்கிறார். படித்துப் பாருங்கள்.


தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயமோகன் பக்கம்

சுஜாதாவின் “மறுபடியும் கணேஷ்”

இன்னொரு கணேஷ்-வசந்த் கதை.

Inverted detective story என்று ஒரு sub-genre உண்டு. இதில் குற்றவாளி என்று யார் என்று கண்டுபிடிக்கும் வேலை கிடையாது. முதலில் குற்றவாளி எப்படி குற்றம் புரிகிறார் என்று விவரிக்கப்படும். அந்த விவரணையிலேயே குற்றத்தைக் கண்டுபிடிக்கத் தேவையான தடயங்களை விட்டுச் செல்வதும் இருக்கும். எப்படி அந்தத் தடயங்களைக் கண்டுபிடித்து குற்றவாளியைப் பிடிக்கிறார்கள் என்பதுதான் கதை. மறுபடியும் கணேஷ் அப்படிப்பட்ட ஒரு கதைதான்.

பிரபாகருக்கு மனைவி மேல் சந்தேகம். மனைவியும் பழைய காதலனோடு ஓடிவிடலாமா என்ற குழப்பத்தில் இருக்கிறாள். பிரபாகருக்கு இது தெரிய வருகிறது, மனைவியைக் கொன்றுவிட்டு சாமர்த்தியமாக alibi உருவாக்குகிறார். கணேஷ்-வசந்த் எப்படி கண்டுபிடிக்கிறார்கள், என்ன denouement என்பதுதான் கதை.

இந்தக் கதை மாலைமதியின் மாதப் பிரசுரமாக வெளிவந்த காலம் நினைவிருக்கிறது. அப்போது நான் பள்ளி மாணவன். நண்பர்களிடையே ஒரு காப்பி சுற்றி சுற்றி வந்தது. எங்களுக்கெல்லாம் சுஜாதா மோகம் பெரிதாக இந்தப் புத்தகமும் ஒரு காரணம். அப்போதெல்லாம் inverted detective story பற்றி தெரியாது. ஆஹா, எப்படி தோசையை திருப்பிப் போட்டு கலக்கி இருக்கிறார், ஒரு சின்ன மாற்றம் மூலம் கோணத்தையே மாற்றிவிட்டாரே, துப்பறியும் கதைகளின் ஸ்கோப் இத்தனை விரிவாகிவிட்டதே என்றெல்லாம் வியந்து கொண்டிருந்தோம்.

இன்று கான்செப்ட் பழையதுதான் என்று தெரிகிறது. இருந்தாலும் நல்ல மர்ம நாவல்தான். படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

மணிபால்

எனக்கு பேஸ்பால் குன்ஸாகத்தான் புரியும். மணிபால் (Moneyball) பேஸ்பால் புள்ளிவிவரங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டிருக்கும் புத்தகம். At bat, on base என்று நிறைய சொல்கிறார். இதெல்லாம் என்ன என்றே எனக்கு சரியாகத் தெரியாது. இருந்தாலும் புத்தகத்தை ரசித்துப் படித்தேன்.

புத்தகம் ஓக்லாண்ட் ஏ (Oakland A) பேஸ்பால் அணி பற்றியது. குறிப்பாக அதன் ஜெனரல் மானேஜர் பில்லி பீன் (Billy Beane) எப்படி அந்த அணியை குறைந்த பணத்தை வைத்துக் கொண்டு ஒரு வலுவுள்ள அணியாக மாற்றினார் என்பதைப் பற்றியது.

நம்மூரில் கிரிக்கெட்டுக்கு ஐபிஎல் போலத்தான் அமெரிக்காவில் பேஸ்பாலுக்கு மேஜர் லீக் பேஸ்பால். முப்பது அணிகள் விளையாடுகின்றன. நியூ யார்க் யாங்கீஸ் போன்ற அணிகளிடம் நிறைய பணம் உண்டு. அவர்களால் சிறந்த விளையாட்டு வீரர்களை சுலபமாக “வாங்க” முடிகிறது. ஓக்லாண்ட் ஏ அணியிடம் பணம் மிகக் குறைவு.

பில்லி பீன் சிறந்த விளையாட்டு வீரர் என்றால் என்ன என்று கேள்வி கேட்க ஆரம்பிக்கிறார். பதிலைக் கண்டுபிடிக்க பால் டிபோடெஸ்டாவின் (Paul DePodesta) உதவி கிடைக்கிறது. புள்ளிவிவரங்களை வேறு கோணத்தில் பார்க்க ஆரம்பிக்கிறார்கள். அன்று வரை முக்கியமாக இருந்த சராசரி (batting average) மட்டுமில்லாமல் பிற விவரங்களையும் கவனிக்க ஆரம்பிக்கிறார்கள். ஒவ்வொரு புள்ளிவிவரமும் அந்த வீரரைப் பற்றி நமக்கு என்ன சொல்கிறது, ஆட்டத்தில் வெற்றி பெறும் வாய்ப்பை அதிகரிக்கிறதா இல்லையா என்று மறுபரிசீலனை செய்கிறார்கள்.

பேஸ்பால் அணிகள் புதிய வீரர்களை – பள்ளிகளில், கல்லூரிகளில் விளையாடிக் கொண்டிருப்பவர்கள் – பற்றி ஆராய்வதற்காக “baseball scouts”-களை வேலைக்கு வைத்திருக்கின்றன. இவர்கள் ஊர் ஊராகப் போய் அங்கே கல்லூரி/பள்ளிகளுக்குள் நடக்கும் போட்டிகளைப் பார்த்து அவர்கள் கண்ணில் யார் நன்றாக வரக் கூடியவர்கள் என்பதை முடிவு செய்பவர்கள். இது அனேகமாக அவர்களுடைய ஜட்ஜ்மென்ட். இதையும் மாற்றுகிறார்கள். புள்ளிவிவரங்களுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். பள்ளிப் போட்டிகளை விட கல்லூரிப் போட்டிகள் அதிகம் நடப்பதால் கல்லூரிப் போட்டிகள் statistically significant என்று கல்லூரி வீரர்களை அதிகமாக சேர்க்கிறார்கள்.

எந்தப் புது முயற்சிக்கும் எதிர்ப்பு இருக்கத்தான் செய்யும். இதற்கும் அப்படித்தான். ஆனால் விடாமல் போராடி இந்த அணுகுமுறையில் விளையாட ஆரம்பிக்கிறார்கள். மீண்டும் மீண்டும் playoffs வரை போகமுடிகிறது. இன்னும் போட்டியை வெல்லவில்லை.

பேஸ்பால் விளையாட்டை ஒரு அறிவியலாக (science) மாற்றி இருக்கிறார்கள். அந்த அணுகுமுறையை புரிந்து கொள்ள நமக்கு பேஸ்பால் பற்றி பிரமாதமாக தெரிய வேண்டியதில்லை. நான் ரசித்துப் படித்தேன். நீங்களும் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

மைக்கேல் லூயிஸ் 2003-இல் எழுதி இருக்கிறார். பிராட் பிட் (Brad Pitt) நடித்து திரைப்படமாகவும் வந்தது. திரைப்படமாக பார்ப்பது இன்னும் சுலபம்.

Flash Boys (2014) இன்னுமொரு சிறந்த புத்தகம். பங்கு சந்தையில் சில நொடிகள், சில மில்லி நொடிகள் இடைவெளியில் யார் எதை வாங்குகிறார்கள், விற்கிறார்கள் என்று கண்டுபிடித்து அவற்றை அவர்களுக்கு முன்னால் வாங்கி விற்று பில்லியன்கள் கணக்கில் பணத்தை சுருட்டும் பற்றிய High Frequency Trading புத்தகம்.

பின்குறிப்பு: நான் படித்த இன்னொரு புத்தகம் Coach. தவிர்க்கலாம். அதிஉணர்ச்சிவசப்படும் ஒரு பள்ளி விளையாட்டு கோச்சிடம் கற்ற வாழ்க்கைப்பாடங்கள்.


தொகுக்கப்பட்ட பக்கம்: அபுனைவுகள்

இளம் கவிஞனுக்கான கடிதங்கள் – 7

ரோம்,
மே 14, 1904

அன்புள்ள திரு. கப்பஸ்,
கடைசியாக நீங்கள் அனுப்பிய கடிதம் எனக்கு கிடைக்கப் பெற்று பல நாட்கள் கழிந்து விட்டன. அதற்கு பதிலளிக்காததற்காக என் மீது வருத்தம் கொள்ளாதீர்கள். முதலில் வேலைப் பளு, பிறகு பல இடைஞல்கள், இறுதியாக தொடர்ந்து கொண்டேயிருக்கும் உடல் நலக்குறைவு எல்லாம் சேர்ந்து என்னை பதிலளிக்க விடவில்லை: ஏனென்றால் என் பதிலகள் அமைதியுடன் கூடிய மகிழ்ச்சியான நாட்களில் இருந்து உங்களை அடைய வேண்டும் என விரும்பினேன். இப்போது உடல் நிலை மறுபடியும் சீரடைந்தது போல உணருகிறேன் ( வசந்த காலத்தின் ஆரம்பத்தில் ஏற்படும் சீதோஷண நிலைமாற்றங்களை இங்கும் தாங்கிக் கொள்ள கடினமாக உள்ளது). திரு. கப்பஸ் மறுபடியும் என் வாழ்த்துக்களை சொல்லி உங்களுடன் அதைப் பற்றியும், உங்களுடைய கடிதத்திற்கான பதிலையும் என்னால் இயன்ற வரை பேச முயற்சிக்கிறேன்.

நீங்கள் அனுப்பிய பாடலை பிரதி எடுத்துள்ளேன் ஏனென்றால் அது அற்புதமானதாகவும், எளிமையுடன் மனதிற்குள் நுழைய கூடியதுமாக இருந்தது. நீங்கள் எனக்கு வாசிக்க அனுப்பிய கவிதைகளில் அதுவே மிகச் சிறந்த கவிதையாகும். இப்போது நான் எடுத்த பிரதியை உங்களுக்கு அனுப்புகிறேன் ஏனென்றால் மற்றவருடைய கையெழுத்தில் தன்னுடைய படைப்பை வாசிப்பதால் கிடைக்கும் புதிய அனுபவங்கள் மிகவும் முக்கியமானது என நான் அறிவேன். இந்த கவிதையை இதற்கு முன் அறிந்திராதது போல வாசித்துப் பாருங்கள்; உங்கள் மனதின் ஆழத்தில் அக்கவிதை உங்களுக்கேயானது என உணர்வீர்கள்.
இந்த பாடலையும், அதோடு உங்கள் கடிதத்தையும் வாசித்தது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. அதற்காக உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.

ஏதோ ஒன்று நீங்கள் உணர்ந்து கொண்டிருக்கும் தனிமையிலிருந்து உங்களை வெளியில் தள்ளுவதைப் போன்று உருவாகும் உணர்வை நினைத்து குழம்பிவிடாதீர்கள். அந்த உணர்வையே பொறுமையுடனும், விவேகத்துடனும் உபயோகித்தால் உங்கள் ஏகாந்தத்தை இன்னும் பல தொலைவிற்கு நீட்டிக் கொள்ள இயலும். பெரும்பான்மையான மனிதர்கள் (பாரம்பரியத்தின் வழியே) தங்களுக்கான பதில்களை ஏளிமையிலும் எளிமையான தீர்வை நோக்கி திருப்பியிருக்கிறார்கள். ஆனால் எது கடினமானதோ அதன் மேல் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். உயிருள்ளவை அனைத்தும் அதன் மேல் நம்பிக்கை கொண்டுள்ளன; இயற்கையில் உள்ள சகலமும் வளர்ந்து தன்னையே இயன்ற வரை பாதுகாத்துக் கொள்கின்றன, அதே நேரம் தன்னுடைய இயல்பை மாற்றாமல் எல்லா எதிர்ப்புகளையும் தாங்கிக் கொண்டு தொடர்கின்றன. தனிமையில் இருப்பது நல்லது ஏனென்றால் தனிமை கடினமானது; ஒன்று கடினமானது என்பதே அதை மேற்கொள்வதற்கான இன்னொரு காரணமாகும்.

அன்பு செலுத்துதல் சிறந்தது; காரணம், அதுவும் கடினமானது. ஒரு மனிதன் சகமனிதன் மேல் கொள்ளும் அன்பு என்பது – நமக்கு கொடுக்கப்பட்டவைகளில் மிகவும் கடினமான செயலாகும் – இறுதியான பரீட்சை மற்றும் நிரூபணம் – மற்ற எல்லா செயல்களும் அந்த கடின செயலுக்கான முன்னேற்பாடுகளே. அந்த காரணத்தினாலேயே, இளையவர்கள் – எல்லா விஷயங்களிலும் ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் – அன்பு செலுத்தும் திறனற்று இருக்கிறார்கள்; அது அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று. ஆனால் கற்றுக் கொள்ளும் காலம் என்பது நீண்ட, தனிமை மிகுந்த, வாழ்க்கையில் வெகு தூரம் உள்ளே செல்லும் பயணமாகும். நேசித்தல் என்பது தொடக்கத்திலேயே ஒன்று சேர்ந்து, சரணடைந்து, மற்றவருடன் ஒன்று கலப்பதன்று ( தெளிவற்று, முழுமையடையாமல், பொருந்தாமல் தொடர்வதாக இருந்தால், அவ்விருவர் சேர்ந்ததனால் தான் என்ன பயன்?). தன்னுடைய நேசம் தனிமனிதன் கனிவதற்கும், தனக்குள்ளேயே மற்றொன்றாக மாறுவதற்கும், தன் அன்பு செலுத்தும் மனிதருக்காக தன்னுள்ளே இன்னொரு உலகமாக மாறுவதற்கும் தூண்டுதலாக அமைய வேண்டும். அவனிடத்தில் கோரப்படும் மிகப்பெரிய கோரிக்கையாகும், அவனை தேர்வு செய்ததன் மூலம் அது அவனை பல தொலைவுகளுக்கு இட்டுச் செல்லும். தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற இந்த உணர்வின் மூலமே (எப்போதும் கூர்ந்து கேட்டுக் கொண்டே, இரவு பகலாக தன்னையே செதுக்கி) இளையவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அன்பை வெளிப்படுத்த வேண்டும்; அதை நிகழ்த்தி முடிப்பதற்கான அளவிற்கு மட்டும் தான் நமது வாழ்க்கை பெரியதாக உள்ளது போலும்.

ஆனால் இதே விஷயத்தில் தான் இளையவர்கள் மிக மோசமாக தவறு செய்கிறார்கள் (அவர்களுக்குரிய இயல்பான பொறுமையின்மையால்) . காதலில் ஒருவரின் மேல் மற்றொருவர் பாய்ந்து, தமக்கே உரிய ஒழுங்கின்மையாலும், பதட்டத்தாலும், சீரற்ற இயல்பாலும், தம்மையே சிதறடிக்கிறார்கள்: பிறகு நடப்பது என்ன? தங்களுடைய கூடல் என பாதி உடைந்து போனவைகளையும், அதனால வரக்கூடிய மகிழ்ச்சியையும், எதிர்காலங்களையும் வைத்து வாழ்க்கையால் என்ன செய்ய இயலும்? இப்படியாக மற்றவருக்காக ஒருவர் தன்னயே இழந்து, அடுத்து வருபவரையும் இழந்து, அதற்கடுத்து வருபவரையும் இழக்கிறார். எந்தவொரு நன்மையும் கொடுக்க முடியாத பயனற்ற இந்த குழப்பங்களுக்கு மாற்றாக பலஇதமான நுண்ணுணர்வுகளைக் கொண்ட விஷயங்களை பரிமாற்றம் செய்கிறார்கள். அவர்களுக்கு இறுதியில் எஞ்சுவது கொஞ்சம் அருவருப்பும், ஏமாற்றமும், அகத்தின் ஏழ்மையுமே – பிறகு அவைகளிலிருந்து தப்பி அபாயமான இந்த சாலையில் கட்டப்பட்டிருக்கும் பொதுக் கூடங்கள் போன்ற மரபுகளின் உள்ளே அடைந்து விடுவார்கள். மனித அனுபவத்தின் மற்ற எந்த பரப்பை விடவும் இதில் மட்டுமே அதிகமான பொது மரபுகள் உருவாக்கப்பட்டுள்ளன. பாதுகாக்கப்பட்டும், உயிர்ப்புடனும் பலவிதமான கண்டுபிடிப்புகள், படகுகள், நீர்த்துறைகள் என இதற்கு உண்டு; சமூகம் இவ்விஷயத்தில் எல்லா வகையான அகதி முகாம்களை உருவாக்கி வைத்துள்ளது, ஏனென்றால் காதல் வாழ்வை ஒரு கேளிக்கையாக உருவகித்து வைத்திருப்பதால், அதற்கு எளிமையான, மலிவான, பாதுகாப்பு மிகுந்த சூழ்நிலையை அளிக்க வேண்டியுள்ளது.

பல இளைஞர்கள் தவறாக காதலில் விழுந்து – அதாவது, தங்களுடைய தனிமையை விட்டுக் கொடுத்து, முழுவதுமாக மற்றவரிடம் சரணடைந்து (சராசரி மனிதன் தொடர்ந்து அதையே செய்துக் கொண்டிருப்பான்) – பிறகு தாம் ஒடுக்கப்பட்டதாக உணர்ந்து அந்த சூழ்நிலையையும் வாழத் தகுந்ததாக, பலனளிப்பதாக மாற்ற மிக அந்தரங்கமாக முயலுகிறார்கள் என்பது உண்மை. அவர்களுடைய தன்னியல்பு அவர்களுக்கு உரைப்பது என்னவென்றால் காதலில் உதிக்கும் கேள்விகள், எல்லாவற்றையும் விட முக்கியமான அந்த கேள்விகள், முன்னரே அறியப்பட்ட ஒப்பந்தங்கள் கொண்டு பொதுவெளியில் தீர்க்கப்பட முடியாது; அவை ஒரு மனிதனிலிருந்து மற்றவருக்கு செலுத்தப்படும் மிக அந்தரங்கமான கேள்விகளாகும், அவைகளுக்கு மிகவும் அந்தரங்கமான பதில்களே தேவைப்படுகிறது. ஆனால், தம்மையே மற்றவர் மீது வீசி எறிந்து ஒருவர் மற்றவருடைய எல்லைகோடு எதுவென்று பகுத்தறிய இயலாமல் இருப்பவர்கள், தமக்கென்று தனித்துவமாக எதுவும் இல்லாதவர்கள், எங்ஙனம் ஆழப் புதைந்து போன தனிமையிலிருந்து தம்மை வெளிக் கொண்டுவர இயலும்?

அவர்களின் செயல்பாடுகள் பரஸ்பர இயலாமையால் ஏற்படுகிறது, பிறகு நல்ல எண்ணங்களுடன் தங்களை நோக்கி வரும் சமூக மரபுகளிலிருந்து (உதாரணத்திற்கு திருமணம்) தப்பித்துக் கொள்ள, அதைவிட தெளிவற்ற மற்றொரு மரபு சார்ந்த தீர்வுகளின் பிடியில் போய் விழுந்து விடுகிறார்கள். அதன் பிறகு அவர்களை சுற்றி இருப்பது வெறும் மரபுகளே. எங்கெல்லாம் மனிதர்கள் முதிராமல் உருக்கி, கலங்கிய இணைதலைக் கொள்கிறார்களோ; அங்கு நடைபெறும் செயல்கள் யாவும் மரபானவையே; பிறகு அந்த உறவுகளின் குழப்பங்கள் அவற்றிற்கே உரிய மரபான தளைகளில் சென்று முடிகிறது. அவை எவ்வளவு அசாதாரணமாக தெரிந்தாலும்; அவர்களின் பிரிவு கூட வழக்கமான முறையில், தனிப்பட்டதாக இல்லாமல், உறுதியும், பலனுமற்ற தற்செயலான முடிவாகவே இருக்கும்.

ஆழ்ந்து நோக்கினால் மரணத்திற்கும், இப்படிப்பட்ட கடினமான அன்பிற்கும் எங்கேயும் சரியான தீர்வோ, தெளிவோ, பாதையின் குறிப்போ இல்லாதிருப்பதை புரிந்து கொள்ள முடியும்; ஏனென்றால் நமக்குள் பொதிந்து, அடுத்தவருக்கு அனுப்பிவிடும் இவ்விரண்டு காரியங்களுக்கும் எல்லோராலும் ஒத்துக் கொள்ளப்பட்ட பொது விதிகள் என்று எதுவும் கிடையாது. ஆனால் எங்ஙனம் வாழ்க்கையை தனிமனிதராக சோதித்துப் பார்க்கிறோமோ அதைப் போலவே இவைகளும் தனிமனிதர்களாக நம் உள்ளே நெருக்கமாக சந்திக்கும். இவ்வகையான அன்பு கொள்வதால் நம்முடைய வளர்ச்சியில் அவை ஏற்படுத்தும் மாற்றங்கள் என்பது இவ்வாழ்க்கையையும் தாண்டிய விஷயங்களாகும்; தொடக்க நிலையில் உள்ள நாம் அதற்கெல்லாம் தகுதியானவர்கள் அல்ல. இருந்தாலும் கூட அதை தாங்கிக் கொண்டு, அன்பு செலுத்துதல் என்பதை கற்றுக் கொள்ளலாக கொண்டு, எளிமையான, அற்பமான விஷயங்களில் மற்றவர்களைப் போல நம்முடைய தனி இருப்பை தொலைத்து விடாமல் இருந்தோமென்றால் – நம்மைப் பின்தொடர்பவர்களுக்கு அதுவே ஒரு சிறு பாதையாகவும், முன்னேறிச் செல்வதற்கு ஒளியாகவும் இருக்கக் கூடும். அது போதுமானது.

நாம் இப்போதுதான் ஒரு மனிதனுக்கும் இரண்டாவது மனிதன் மீது உள்ள உறவைக் குறித்த பாரபட்சமற்று, முன்முடிவுகளற்று பார்க்க ஆரம்பித்திருக்கிறோம். அப்படிப்பட்ட உறவுகளில் வாழ்வதற்கான நமது முயற்சிகளுக்கு முன் உதரணங்கள் கிடையாது. இருந்தாலும் கூட காலத்தின் மாற்றங்கள் பல விஷயங்களை தொடக்க காலங்களில் நமக்கு அளித்துள்ளது.

சிறுமியும், பெண்ணும் அவர்களுடைய சமீபத்திய தனிப்பட்ட வளர்ச்சியில் சிறிது காலங்களுக்கு மட்டுமே ஆணின் குணத்தையும், செயல்களையும் பிரதிபலிப்பார்கள். நிலைமாற்றத்தின் உறுதியற்ற காலங்கள் கழிந்த பின்பு – அவர்கள் ஆண்களின் உருக்குலைக்கும் தாக்கங்களிலிருந்து அவர்களுடைய தன்னியல்பை தூய்மைப்படுத்தி எடுத்துக் கொள்வதற்கே இத்தனை வேஷங்களின் வழியே பயணித்தார்கள் என்பது புரிய வரும். மேம்போக்கான பார்வையை கொண்டிருக்கும் ஆண் – அவன் அன்பு செலுத்தும் எதையும் குறைத்தே மதிப்பிடுபவன் – போலன்றி; தன்னுள்ளே ஒரு உயிரை இன்னும் நெருக்கமாகவும், உயிர்ப்போடும், நம்பிக்கையுடனும் கொண்டிருக்கும் பெண் தன் ஆழங்களில் கூடுதல் கனிவுடனும், மனிதத்துவத்துடனும் இருப்பாள். கருப்பையில் எல்லா துன்பத்திற்கு மத்தியிலும் சுமக்கப்படும் பெண்ணின் மனிதாபிமானம், மரபு சார்ந்த பெண்மை என்ற வெளித்தோற்றத்தை அவள் உதிர்க்கையில் வெளிப்படும் – அதன் வரவை எதிர்ப்பார்க்காத ஆண்கள் அதைக் கண்டு அதிர்ச்சியடைவார்கள். இன்னும் சில காலங்களில் (இப்போதே வட ஐரோப்பாவின் சில நாடுகளில் நம்பிக்கை ஏற்படுத்தக் கூடிய அறிகுறிகள் தெரிய ஆரம்பித்து விட்டன) பெண்களின் பெயர்கள் வெறும் ஆண்களின் எதிர்மறை என்பதைக் கடந்து தனித்துவமான வாழ்க்கையாகவும், யதார்த்தமாகவும் மாறிவிடுவார்கள்: பெண் மானுட இனம்.

இந்த முன்னேறல் (ஆரம்பத்தில் ஆணின் விருப்பத்திற்கு எதிராக இருப்பினும்) காதல் அனுபவத்தை மாற்றி அமைத்துவிடும்: தவறுகள் நிரம்பிய அனுபவங்களிலிருந்து வடிவமாற்றம் பெற்று ஒரு மனிதனுக்கும் மற்றொரு மனிதனுக்கும் இடையே ஏற்படும் உறவு என்றாகி விடும். இனிமேலும் அது ஆணிடம் இருந்து பெண்ணை நோக்கி பாயும் உறவு என்று இருக்காது. கூடுதல் மனிதத்துவம் கொண்ட இந்த அன்பு ( முடிவில்லா பரிவும், மென்மையும், கருணையும், தெளிவும் கொண்ட) நம்மை சிரமத்துடன் தயார்படுத்திக் கொண்டிருக்கும் அன்பிற்கு ஒத்ததாகும் : இரு மனிதர்களின் தன்னியல்பும், தனிமையும் தம்மையே பாதுகாத்து, வரையரை செய்து கொண்டு ஒன்று மற்றொன்றை வாழ்த்தி வரவேற்க வழிவகுக்கும் அன்பாகும்.

இன்னும் ஒரு செய்தி. நீங்கள் சிறுவனாக இருந்த பொழுது உணர்ந்த பெரும் அன்பு உங்களுக்கு தொலைந்து போய்விட்டது என எண்ணாதீர்கள். உங்களுடைய அந்த கால ஆசைகள் அன்று முதிராமல் இருந்த தால் தான் இன்று வாழ்கிறீர்கள் என்பதை எப்படி அறிந்து கொள்ள இயலும்? அன்பு, உங்கள் நினைவுகளில் உறுதியுடனும், உக்கிரத்துடனும் இருப்பதற்கு காரணம் அதுவே முதல் முறையாக ஆழ்ந்த தனிமையிலும், அக செயல்பாடுகளிலும் உங்களை ஈடுபட வைத்ததால் தான் என நான் நம்புகிறேன்.
திரு. கப்பஸ், என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

உங்களுடைய,
ரெய்னர் மரியா ரில்கே.


தொகுக்கப்பட்ட பக்கங்கள்: முத்துகிருஷ்ணன் பதிவுகள், மொழிபெயர்ப்புகள்

தொடர்புடைய சுட்டிகள்: முந்தைய கடிதங்கள் – கடிதம் 1, கடிதம் 2, கடிதம் 3, கடிதம் 4, கடிதம் 5, கடிதம் 6

பாஸ்கரத் தொண்டைமான்

தமிழில் பயண இலக்கியம் என்ற வகை எழுத்து அவ்வளவு சுகப்படவில்லை. தி.ஜா. மற்றும் சிட்டி எழுதிய “நடந்தாய் வாழி காவேரி” மற்றும் ஜெயமோகன் தான் ஊர் ஊராக சுற்றுவதைப் பற்றி எழுதுவது இரண்டுதான் எனக்குத் தெரிந்து குறிப்பிட வேண்டியவை.

மணியன் டைப் நான் அமெரிக்காவில் வத்தக்குழம்பு சாப்பிட்டேன், ஆஃப்பிரிக்காவில் ரசம் குடித்தேன் எழுத்து, இல்லாவிட்டால் கோவில் கோவிலாகப் போய் அந்தக் கோவிலின் தலபுராணம், ஊருக்கு எப்படி போவது என்ற வழி குறிப்புகள், ஊரில் அவருக்கு உதவிய மணியக்காரர், குருக்கள் பற்றி நாலு பாரா என்றுதான் இருக்கிறது. பரணீதரனின் எழுத்துக்கள் இப்படிப்பட்டவையே.

கொஞ்சம் நிதானமாகப் படித்தால் பாஸ்கரத் தொண்டைமான், ஏ.கே. செட்டியார் இருவரையும் இந்தப் பட்டியலில் சேர்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது. தொண்டைமான் ரசிகர். உண்மையிலேயே சிற்பங்களை அனுபவித்திருக்கிறார். படிப்பவர்களுக்கும் அவற்றைக் கண்டு அவர் மகிழ்ந்தது தெரிகிறது.

வேங்கடம் முதல் குமரி வரை classic. வேங்கடத்துக்கு அப்பாலும் அருமையாக எழுதப்பட்டிருக்கிறது. என்ன, அவரது கடவுள் நம்பிக்கை வெளிப்பட்டது – உதாரணமாக ஆறுமுகமான பொருள், பிள்ளையார்பட்டி பிள்ளையார் போன்ற நூல்களில் – முதலில் இவற்றை skim செய்ய வைத்தது. நிதானமாகப் படித்தால்தான் இவற்றின் அருமை தெரிகிறது.

ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும் அவர் பல சமயங்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. மனிதருக்கு எத்தனை தேடல் என்று வியக்க வைத்தது.

கம்பன் சுயசரிதம் போன்ற புத்தகங்கள் கம்பனிடம் இத்தனை ஈடுபாடு கொண்ட ஒரு தலைமுறை இருந்ததா என்று வியக்க வைத்தது. பாலகாண்டத்தில் இருந்து 100 பாடல்களைத் தேர்ந்தெடுத்து அவர் வெளியிட்டிருக்கும் சீதா கல்யாணம் என்ற புத்தகமும் கம்பனை எல்லாரிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற அவர் ஆவலைத் தெளிவாகக் காட்டுகிறது. அவரது பட்டிமண்டபம் என்ற புத்தகமும் – அவர் வழங்கிய பட்டிமண்டபத் தீர்ப்புகளின் தொகுப்பு – புத்தகமும் இதே வியப்பை ஏற்படுத்தியது. கம்பனைப் பற்றித்தான் அனேக பட்டிமண்டபங்கள் இருந்திருக்கின்றன. உடன்பிறவா தம்பியரின் சிறந்தவன் குகனா, சுக்ரீவனா, விபீஷணனா? சேவையில் சிறந்தவன் லக்ஷ்மணனா, ஹனுமனா, விபீஷணனா? இந்த மாதிரி நிறைய பேசி இருக்கிறார்கள். கம்பன் கவிதையை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று முனைந்திருக்கிறார்கள். தொலைக்காட்சி இல்லாத அந்த நாளில் இந்த மாதிரி பட்டிமண்டபத்துக்கு நூறு பேர் வந்திருப்பார்களா? பணம் எதுவும் கிடைத்திருக்காது. அந்த முனைப்பு எல்லாம் எங்கே போயிற்று?

கலைக் களஞ்சியம் என்ற புத்தகத்தில் அவர் பால் நாடார், டிகேசி, தேசிக விநாயகம் பிள்ளை போன்ற பலரைப் பற்றி எழுதி இருந்தவை நன்றாக இருந்தது.

சில புத்தகங்கள் அவர் பேசிய உரைகளின் தொகுப்பு. உதாரணமாக இந்திய கலைச்செல்வம். ஒரு காலத்தில் உபயோகமுள்ள அறிமுகமாகவும் இருந்திருக்கலாம். ஆனால் இன்று கொஞ்சம் போரடிக்கிறது.

பாஸ்கரத் தொண்டைமானைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். அவரது எழுத்துக்கள் 2009-இல் நாட்டுடமை ஆக்கப்பட்டன. அவரது வேங்கடம் முதல் குமரி வரை என்ற புத்தகம் மின்நூலாகக் கிடைத்தது. (பகுதி 1, பகுதி 2, பகுதி 3, பகுதி 4) இதுவும் வழக்கமான ஊர், கோவில், தல புராணம், கோவில் கட்டப்பட்ட வரலாறு, அனுபவம் என்ற அளவில்தான் இருக்கிறது. ஆனால் நல்ல ஆவணம், என்றைக்காவது நானும் கோவில் குளம் என்று சுற்றும்போது பயன்படும். மதுரை மீனாட்சி புத்தகமும் இதைப் போன்றதுதான்.

ஆனால் தொண்டைமானைப் போன்றவர்களின் தாக்கம் அசாதாரணமானது. அது அவர்கள் எழுதிய புத்தகங்களை விட பெரியது. ஜெயமோகன் எங்கேயோ இவர் பரணீதரனின் கோவில் உலா கட்டுரைகளுக்கு இவரே முன்னோடி என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தொண்டைமான் வெள்ளக்கால் சுப்ரமணிய முதலியார் பற்றி ஒரு அருமையான நூலை எழுதி இருக்கிறார். முதலியாரின் பங்களிப்பு என்ன என்று புரிந்து கொள்ள முடிந்தது.

தொண்டைமானின் எழுத்துக்கள் நாட்டுடமை ஆனபோது மறைந்த சேதுராமன் எழுதிய அறிமுகம் கீழே:

நாற்பத்தைந்து ரூபாய் எழுத்தராக வருவாய்த் துறையில் நுழைந்து, மாவட்ட ஆட்சியராக உயர்ந்தவர் திரு. பாஸ்கரத் தொண்டைமான். தான் பணியாற்றிய பகுதிகளில் கலை ஆய்வு மேற்கொண்டவர். கோயிற்கலையில் இவருக்கு இருந்த ஈடுபாடும், இவரது பெருமுயற்சியும் தான் தஞ்சைக் கலைக்கூடத்தை உருவாக்கியது. ஆட்சித் துறையினைக் கலை அழகும் இலக்கிய மணமும் கொள்ளச் செய்தவர். நல்ல எழுத்தாளர், வல்ல பேச்சாளர், சிறந்த ரசிகர் (மது.ச.விமலானந்தம் – தமிழ் இலக்கிய வரலாறு)

அண்மையில் 2005ல் நடைபெற்ற அவரது நூற்றாண்டு விழாவின் போது தொகுத்து வெளியடப்பட்ட கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் – கலைக் களஞ்சியம் என்ற புத்தகத்தில் அவரது மகள் ராஜேஸ்வரி நடராஜன் எழுதுவதைப் படிக்கலாமா?

** திரு. தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் அவர்கள், ‘திக்கெலாம் புகழும் திருநெல்வேலி’ என்று ஞானசம்பந்தப் பெருமானால் பாடப்பெற்ற நெல்லை மாநகரில் 1904ம் வருடம் ஜூலை மாதம் 22ம் தேதி, திரு தொண்டைமான் முத்தையா அவர்களுக்கும், திருமதி முத்தம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். இவருடன் பிறந்தவர் ஐவர். நல்ல தமிழ்ப் புலமையும், கலைஞானமும் செறிந்த குடும்பம்.. தந்தையார் முத்தையா தமிழ்ப் புலமையும் ஆங்கிலப் புலமையும் ஒருங்கே அமையப் பெற்றவர்.. ( தந்தை வழி பாட்டனார் திரு சிதம்பரத் தொண்டைமானும் நல்ல தமிழ்ப் புலவர் – வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளிடத்தில் முறையாகத் தமிழ் பயின்றவர்)

பாஸ்கரத் தொண்டைமானுடைய மாணவப் பருவம், திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் கழிந்தது. அவருக்குத் தமிழாசிரியராக இருந்தவர் மேலகரம் சுப்பிரமணியக் கவிராயர்.

கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே, அவரது திருமணமும் நடந்தேறியது. முறைப்பெண்ணான பாலம்மாள் என்பவரே அவருக்குத் துணைவியாக வாய்த்தார். இனிய இல்வாழ்க்கையின் பயனாக நான்கு மக்கள் பிறந்தனர். இளையவர் இருவரும் இளமையில் மறைந்து போக, மூத்த இருவரும் உள்ளனர்.

கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றதுமே, வேலையும் தேடி வந்தது. இப்போது வனவளத்துறை என்றழைக்கப்படும் காட்டிலாகாவில் முதலில் சேர்ந்து பின்னர் வருவாய்த்துறை ஆய்வாளரானார். அங்கிருந்து படிப்படியாக முன்னேறி தாசில்தார், முதல் வகுப்பு நடுவர், உதவி மாவட்ட ஆட்சியாளர் என்று பல்வேறு பதவிகளை வகித்து, ஐ.ஏ.எஸ்.ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவராக ஓராண்டுக்கும் மேலாக பதவி வகித்த பின்னர், 1959ம் ஆண்டில் ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற பின் மீண்டும் திருநெல்வேலிக்கே வந்து பரம்பரை வீட்டில் தங்கி தனது இலக்கியப் பணியை மேற்கொண்டார்.

சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப் பிள்ளையவர்கள் தூண்டுதல் பேரில், கல்லூரி நாட்களிலேயே ஆனந்தபோதினி பத்திரிகையில், கம்ப ராமாயணக் கட்டுரைகள் எழுதியவர். பின்னர் ரசிகமணி திரு டி.கே.சிதம்பரநாத முதலியாரவர்களுடன் தொடர்பு ஏற்பட்டு, முழுக்க முழுக்க ரசிகமணியின் பிரதம சீடராகவே தம்மை அர்ப்பணித்துக் கொண்டார்.

தஞ்சையில் பணி புரிந்த போது அங்கு கலைச் செல்வங்கள், சிற்ப வடிவங்கள் கேட்பாரற்றுக் கிடப்பதைக் கண்டு, அவற்றைச் சேகரித்து, தஞ்சையில் அற்புதமான ஒரு கலைக்கூடமே அமைத்து விட்டார். ஓய்வு பெற்ற பின், தமிழகமெங்கும் சுற்றி அங்குள்ள கோயில்களைக் கண்டு, அவற்றின் வரலாற்றுச் சிறப்பு, கலை நயம் ஆகியவற்றை நுணுகி ஆராய்ந்து கட்டுரைகள் எழுதினார். இந்தக் கட்டுரைகளை, வேங்கடம் முதல் குமரி வரை என்ற தலைப்பில் தொடர்ச்சியாக வெளியிட்டுக் கல்கி பத்திரிகை பெருமை அடைந்தது.

திருநெல்வேலியின் ஒரு பகுதியான வண்ணாரப் பேட்டையில் ரசிகமணி டி.கே.சி.யின் வீட்டில் நடு முற்றமாக இருந்த, வட்டவடிவமான ஒரு தொட்டிக்கட்டு அமைப்பில் தான் அன்பர்கள் மாலை வேளையிலும், ஞாயிற்றுக் கிழமைகளிலும் கூடுவார்கள். இந்தக் கூட்டத்திற்குத் தான் வட்டத்தொட்டி என்ற பெயர் ஏற்பட்டது. மேலை நாட்டில் டாக்டர் ஜான்சனின் Literary Club க்கு எவ்வளவு பெருமையும் முக்கியத்துவமும் உண்டோ, அந்த அளவுக்கு இந்த திருநெல்வேலி வட்டத்தொட்டிக்கும் உண்டு. வட்டத்தொட்டியின் தலைவரும், ஸ்தாபகரும் ரசிகமணி என்றால், அதைத் தாங்கி நின்ற கற்றூண் செயலாளர் தொ.மு. பாஸ்கரத்தொண்டைமான் தான். பாஸ்கரத் தொண்டைமான் ரசிகமணியுடன் தனக்குள்ள தொடர்பின் அடிப்படையில் ரசிகமணி டி.கே.சி என்றோர் அருமையான புத்தகம் எழுதியுள்ளார். இன்னூல் மட்டுமன்று, ரசிகமணி தம் நண்பர்களுக்கு எழுதிய கடிதங்களையெல்லாம் திரட்டி, ரசிகமணியின் கடிதங்கள் என்ற தலைப்பில் ஒரு தொகுப்பு நூலும் வெளியிட்டுள்ளார். மூதறிஞர் ராஜாஜியிலிருந்து, கவிமணி தேசிக வினாயகம் பிள்ளை, திருப்புகழ் மணி, டாக்டர் திருமூர்த்தி, கல்கி, ஜஸ்டிஸ் மகாராஜன், மீ.ப.சோமு போன்ற பல நண்பர்களுக்கும், குழந்தைகளுக்கும் ரசிகமணி எழுதிய கடிதங்கள் இதில் உள்ளன. (தொண்டைமானின் மகள் ராஜேஸ்வரி நடராஜன் அவர்கள் ரசிகமணியின் கடிதங்கள் – நண்பர் பாஸ்கரத் தொண்டைமானுக்கு — பேசும் கடிதங்கள் (இரு பகுதிகள்) என்று தொகுத்து வெளியிட்டுள்ளார்)

பாஸ்கரத் தொண்டைமானின் உற்ற நண்பர்கள் கம்பர் அடிப்பொடி சா.கணேசன், மு. கு. அருணாசலக் கௌண்டர் (திருத்திய நா. கணேசனுக்கு நன்றி!), ஜஸ்டிஸ் மகாராஜன், மீ.ப.சோமு, ஏ.சி. பால் நாடார் ஆகியோர். இலக்கிய உலகில் வெள்ளகால் சுப்பிரமணிய முதலியார் அவர்களும், ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார் அவர்களும் முக்கிய நண்பர்கள். முற்போக்கு எழுத்தாளர் தொ.மு.சிதம்பர ரகுநாதன், தொண்டைமானுடைய இளைய சகோதரர். ‘எதைச் செய்வது என்பது முக்கியமல்ல, எப்படிச் செய்வது என்பதே முக்கியம்’ என்ற கோட்பாட்டுடன் தன் வாழ்க்கையைத் திறம்பட அமைத்துக் கொண்டவர், பாஸ்கரத் தொண்டைமான்.

பாஸ்கரத் தொண்டைமான் 1965 ம் வருடம், மார்ச்சு மாதம் 31ம் தேதியன்று இறைவனடி சேர்ந்தார்.

இவர் எழுதிய பல நூல்களுள் குறிப்பிடத்தக்கவை கீழே:

  1. வேங்கடம் முதல் குமரி வரை (இது வரை நான்கு பதிப்புகள் வெளி வந்துள்ளன. பகுதி 1, பகுதி 2, பகுதி 3,

சி. மோகன்

(மேம்படுத்தப்பட்ட மீள்பதிவு)

எனக்கு சி. மோகன் பற்றி அதிகம் தெரியாது. ஆனால் அவர் பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவரது பரிந்துரைகள் மூலமே அவரை அறிந்திருக்கிறேன். அவரது தேர்வுகள் எல்லாம் என் டாப் டென்னில் வரும் என்று சொல்வதற்கில்லை, ஆனால் நல்ல புத்தகங்களைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

மறக்கப்பட்டிருந்த ப. சிங்காரத்தை மீண்டும் கண்டெடுத்தவர் இவர்தானாம். ஜேஜே சில குறிப்புகள் நாவலுக்கு சிறப்பான எடிட்டராக பணி புரிந்தாராம்.

சமீபத்தில் அவரது சில புத்தகங்களைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நீராட இருக்கிறது நதி தமிழ் திரைப்படங்களைப் பார்த்து வளர்ந்த ஒருவரின் உண்மையான நினைவுகள். அதுவும் நானும் அவர் விவரிக்கும் ஐம்பது-அறுபதுகளின் பழைய படங்களை விரும்பிப் பார்ப்பவன், அதனால் இந்தப் புத்தகத்தை நான் ரசித்தேன்.

மோகனைப் பற்றிய சிறு அறிமுகம் என்று எங்கோ பார்த்து இங்கே பதித்திருக்கிறேன், யார் எழுதியது என்றே தெரியவில்ல.

தமிழ்க் கலை உலகத்தின் ஏதாவது ஒரு திக்கு நோக்கி நடப்பவராக நீங்கள் இருந்தால், நிச்சயம் சி. மோகனை சந்தித்திருக்கலாம். அவரது கைபடாத இலக்கியமோ, புத்தகமோ கடந்த 40 ஆண்டுகளில் இருந்திருக்க முடியாது. ஒரு படைப்பைச் செதுக்குவதில் சி. மோகனின் லாகவம் அனைவராலும் உணரப்பட்டது. அதனால்தான் நவீன எழுத்தில் மிகப் பெரிய சலனம் ஏற்படுத்திய தனது ஜே.ஜே. சில குறிப்புகள் நாவலை சுந்தர ராமசாமி இவரை அழைத்து எடிட் செய்தார். அதே போல, புத்தகங்கள் தயாரிப்பிலும் நவீன உத்திகளைப் பயன்படுத்தியவர் மோகன். அதற்கு எத்தனையோ புத்தகங்கள் சாட்சிகள். அவர் எழுதிய கட்டுரைகள் இப்போது மொத்தமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. படைப்பை சுவாரஸ்யமாக மட்டுமே பார்க்காமல் மனித அறமாகப் பார்ப்பவராக மோகன் அவரது ஒவ்வொரு கட்டுரையிலும் தெரிகிறார்.

‘நவீனத் தமிழ் இலக்கிய வியாபாரம் பெருத்து விட்டிருக்கிறது. அறங்களுக்குப் பதிலாக அதிகார மிடுக்குகள், தார்மீகங்களுக்குப் பதிலாக சாதுர்யங்கள், அர்ப்பணிப்புகளுக்குப் பதிலாக வியாபார உத்திகள் என இன்று நவீன இலக்கிய வியாபாரம் செழித்துக் கொண்டிருக்கிறது’ என்ற வருத்தங்களின் ஊடாக… கடந்த காலத் தமிழ் இலக்கியங்களின், இலக்கியவாதிகளின் உன்னதங்களை மோகன் விளக்குகிறார். தன்னுடைய படைப்புகள் அல்லது தன்னுடைய கோஷ்டியினர் படைப்புகளை மட்டுமே வியந்தோதும் இன்றைய சூழலில் புயலிலே ஒரு தோணி ப.சிங்காரத்துக்காகவும், நாளை மற்றுமொரு நாளே நாகராஜனுக்காகவும், இடைவெளி சம்பத்துக்காகவும் ஒலிக்கும் குரலாக மோகனுடையது இருக்கிறது. கடற்கரையில் நிற்கும் ராய் சௌத்ரியின் உழைப்பாளர் சிலையின் வடிவமைப்பு கொச்சைப்படுத்தப்பட்டபோது, அதற்காக கம்பீரமாக எழுந்த ஒரே குரல் இவருடையது. பாரதி, புதுமைப்பித்தன் முதல் தருமு சிவராம், கோபிகிருஷ்ணன் வரை, வறுமையும் புலமையும் இணைந்து பயணித்த படைப்பாளிகளின் சொற்செழிப்பை மோகனது வார்த்தைகளில் படிக்கும்போது தமிழ் இவ்வளவு பொக்கிஷங்களைக் கொண்டதா என்று பெருமிதம் ஏற்படுகிறது.

தி. ஜானகிராமனின் எழுத்துக்குள் ஊடாடிய தவிப்பு, தருமு சிவராமின் கவிதைக்குள் எழுந்த சிலிர்ப்பு,  க.நா.சு.வின் இலக்கியப் பங்களிப்பு, சி.சு. செல்லப்பாவின் அர்ப்பணிப்பு, எம்.ஆர். ராதாவுக்குள் எழுந்த கலகக் குரல், சரோஜாதேவியின் நடையைச் சுற்றிச் சுழன்ற கேமரா, சந்திரபாபுவின் பாடலுக்குப் பின்னால் இருந்த வறுமை, எம்.பி. சீனிவாசனின் இசை, கே.சி.எஸ். பணிக்கர் மற்றும் எஸ். தனபாலின் கையில் இருந்து பிறந்த இசைச்சித்திரங்கள், எழுத்துப் பிரதிகள் எங்கு கிடைத்தாலும் தேடித்தேடிச் சேகரித்த ரோஜா முத்தையாவின் ஆர்வம்… என்று தமிழகக் கலைப்பரப்பில் கால் பதித்த அனைத்து ஆளுமைகளையும் உள்வாங்கிக் கொள்ளும் இந்தப் புத்தகத்தை சி. மோகன் கட்டுரைகள் என்பதை விட தமிழ் கலைகளின் ஆவணமாகச் சொல்லலாம்!

அறம், யதார்த்தம், தர்க்கம் ஆகிய மூன்றையும் மட்டும் வைத்து படைப்பையும் படைப்பாளியையும் ஒரே பார்வை கொண்டு பார்க்கிறார். மொத்தத் தமிழ்க் கலையையும் புரிந்துகொள்ள இந்த ஒரு புத்தகம் போதும்!

அவரது பரிந்துரைப் பட்டியல் கீழே

    1. இடைவெளி – எஸ். சம்பத் பதிவு இங்கே.
    2. புயலிலே ஒரு தோணி – ப. சிங்காரம் ஆரம்பித்தேன். ஆரம்பம் மிக நன்றாக இருந்தது. புத்தகம் பிடிக்கும் என்று தோன்றியது. ஆனால் மேலே தொடர முடியாமல் ஒரு சோம்பேறித்தனம்.
    3. விஷ்ணுபுரம்ஜெயமோகன் அபாரமான புத்தகம். சுலபமாக சுஜாதா புஸ்தகம் மாதிரி படிக்க முடியாது. அதிகாரம் எப்படி அநீதியில் விளைகிறது, இதிகாசங்கள் எப்படி உருவாகின்றன, பல கோணங்களில் படிக்கலாம்.
    4. நினைவுப் பாதை – நகுலன் படித்ததில்லை.
    5. நாளை மற்றுமொரு நாளே – ஜி. நாகராஜன் ஒரு ரவுடி மிக லாஜிகலாக சிந்தித்து தன் வைப்பாட்டிக்கு இன்னொரு வாழ்க்கையை ஏற்பாடு செய்கிறான். ஜி. நாகராஜன் இன்னும் தமிழ் உலகை அதிர்ச்சி அடையச் செய்யக் கூடியவர்.
    6. ஜே.ஜே. சில குறிப்புகள்சுந்தர ராமசாமி அற்புதமான புஸ்தகம் என்று என் இருபதுகளில் நினைத்தேன். ஆனால் இருபது சொச்சம் வயதில் நான் அற்புதம் என்று நினைத்த சில புத்தகங்கள் இப்போது அப்படி தெரிவதில்லை. திருப்பிப் படிக்க வேண்டும்.
    7. மோகமுள்தி. ஜானகிராமன் இது கிளாசிக். எனக்கு இன்னும் அலுப்பு தட்டவில்லை.
    8. பள்ளிகொண்டபுரம் – நீல. பத்மநாபன் படித்ததில்லை
    9. தண்ணீர்அசோகமித்திரன் இந்த முறை அவரது எழுத்து எனக்கு புரிந்துவிட்டது – என்று நினைக்கிறேன். ஜமுனா, அவளுக்கு பிறக்கப் போகும் குழந்தை, தண்ணீர் பஞ்சம் எல்லாம் நன்றாக வந்திருக்கும்.
    10. சாயாவனம்சா. கந்தசாமி சரியான தேர்வு.

      1. தொகுக்கப்பட்ட பக்கம்:

புத்தக சிபாரிசுகள்

      1. தொடர்புடைய சுட்டிகள்:

பின்குறிப்பு:

சுஜாதாவின் “மெரீனா”

இன்னொரு கணேஷ்-வசந்த் கதை.

பணக்கார வீட்டு spoilt brat பையன். அவன் கோஷ்டியில் நாலு பேர். பீச்சில் ஜல்சா செய்ய வந்திருக்கும் ஒரு ஜோடியை தன் நண்பன் யாரையோ தள்ளிக்கொண்டு வந்திருக்கிறான் என்று நினைத்து அருகே போய் ஃபோட்டோ பிடிக்கிறான். அது வேறு யாரோ. அடிதடியில் ரத்தம், பாடி விழுந்துவிடுகிறது, ஓடி வந்துவிடுகிறான். இன்ஸ்பெக்டர் கொலை கேசை மூடி மறைக்க லஞ்சம் கேட்கிறார். கணேஷ்-வசந்த் வந்து தீர்த்து வைக்கிறார்கள். குற்றம் புரிந்தவனுக்கு தண்டனையும் உண்டு.

சுமாரான கதைதான். கணேஷ்-வசந்த் ரசிகர்களுக்கு மட்டும்தான்.

NHM தளத்தில் கிடைக்கிறது. விலை 50 ரூபாய்.

தொகுக்கப்பட்ட பக்கங்கள்: சுஜாதா பக்கம், கணேஷ்-வசந்த் பக்கம்

கார்னகி கதைகள் – பேய் பிசாசு ஆராய்ச்சி

வில்லியம் ஹோப் ஹாட்க்சனுக்கு (William Hope Hodgson) ஒரு cult following இருக்கிறது. இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் நடைபெறுவதாக அவர் எழுதிய பேய்க் கதைகள் ஒரு சின்ன வட்டத்தில் இன்னும் பாப்புலராக இருக்கின்றன.

கார்னகி (Carnacki) கதைகளைப் படிக்கும்போது வடுவூரார் கதைகளைப் படிப்பதைப் போன்ற ஒரு உணர்வுதான் எனக்கு ஏற்படுகிறது. கார்னகி அமானுஷ்ய நிகழ்ச்சிகளை ஆராயும் ஷெர்லாக் ஹோம்ஸ். ஹோம்ஸ் போலவே அவரும் ஒரு “consulting detective”. கொஞ்சம் வினோதமான நடை.

பேயோட்ட அறிவியலும் பயன்படுகிறது, அத்தைப்பாட்டி நம்பிக்கைகளும் பயன்படுகிறது. மின்சார கேபிள் ஐங்கோணத்துக்குள் (electric pentacle) உட்கார்ந்து கொண்டால் அமானுஷ்ய சக்திகளால் கார்னகியை அணுக முடிவதில்லை. சில நேரத்தில் பூண்டையும் உடலில் மாட்டிக் கொள்வார். Hog என்ற கதையில் வானவில்லின் எல்லா நிறங்களும் உள்ள வட்டங்கள் பன்றி உருவில் உள்ள ஒரு மாபெரும் தீய சக்தியைத் தடுத்து நிறுத்துகின்றன. எல்லாக் கதைகளிலும் ஃபோட்டோ எடுக்க முயற்சி செய்வார். சில சமயம் ஓசைகளை ஒலிப்பதிவு செய்யவும் முயற்சிப்பார். பழைய புத்தகப் பிரதிகளில் சொல்லப்படும் விஷயங்களைப் பயன்படுத்துவார். அவற்றில் ஒன்று சாமா சடங்கு! (சாம வேதம்?)

பேய் பிசாசு நிகழ்ச்சிகளில் அநேகமானவை பொய்; மிச்சம் இருப்பவற்றில் பல ஏமாற்று வேலை; ஆனால் வெகு சில உண்மை நிகழ்ச்சிகளும் இருக்கின்றன என்பதுதான் கார்னகி கதைகளின் தீம். ஒன்பது கார்னகி கதைகளில் ஒன்று (Find) அமானுஷ்ய நிகழ்ச்சிகள் எதுவும் இல்லாதது. இரண்டில் (Thing Invisible, House Among the Laurels) ஏமாற்ற முயற்சி. என்னைப் பொறுத்த வரையில் இந்தக் கதைகளின் charm இப்படி அறிவியலைக் கலந்து கட்டி அடிப்பதுதான்.

எல்லாக் கதைகளும் ஒரு format-இல் இருக்கும். கார்னகி தன் நண்பர்களை இரவு உணவுக்கு அழைப்பார். உணவு முடிந்த பிறகு தான் சமீபத்தில் ஆராய்ந்த ஒரு நிகழ்ச்சியை விவரிப்பார். நான் சிறந்த கதையாகக் கருதுவது Horse of the Invisible. அதன் denouement எனக்குப் பிடித்திருந்தது. Whistling Room மற்றும் Hog கதைகளில் ஓரளவு டென்ஷன் இருக்கும். Hog பின்னால் வந்த H.P. Lovecraft போன்றவர்களுக்கு inspiration ஆக இருந்திருக்க வேண்டும்.

கார்னகி கதைகள் எல்லாமே இணையத்தில் கிடைக்கின்றன. கதைச்சுருக்கங்கள் விக்கியில் கிடைக்கின்றன. இவற்றின் cult following ஆச்சரியப்படுத்துவது. சில வருஷங்களுக்கு முன் கூட புதிய கார்னகி கதைகளை வேறு இரண்டு பேர் சேர்ந்து எழுதி இருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! (No. 472 Cheyne Walk: Carnacki, the Untold Stories by A. F. Kidd and Rick Kennett)

இவை நல்ல இலக்கியம் இல்லை. மிகவும் த்ரில்லிங் ஆக இருக்கும் கதைகள் கூட இல்லை. சுருக்கமாகச் சொன்னால் இவை எல்லாருக்குமான கதைகள் இல்லை. ஆனால் இவற்றுக்கு ஒரு curiosity value இருக்கிறது. என் கண்ணில் கொஞ்சம் charm இருக்கிறது. கொஞ்சம் கிறுக்குத்தனம் உள்ளவர்களுக்குப் பிடிக்க வாய்ப்பு இருக்கிறது. நான் கொஞ்சம் கிறுக்கு.

ஜெயமோகன் தேர்ந்தெடுத்த அசோகமித்ரன் சிறுகதைகள்

தமிழ்ச் சிறுகதை : ஜெயமோகன் பட்டியல் பாகம் 2

ரொம்ப நாள் கழித்து இந்த சீரிசைத் தொடர்கிறேன். புதுமைப்பித்தன் என்ற ஜீனியசைப் பற்றி முதல் பகுதியில் எழுதினேன். இப்போது அசோகமித்ரன் என்ற ஜீனியஸ் எழுதிய சிறுகதைகளைப் பற்றி.

மூன்று தமிழ் எழுத்தாளர்களை நான் ஜீனியஸ் என்று கருதுகிறேன். அசோகமித்ரன் இந்த மூவரில் ஒருவர். அவரது பாணி அலாதியானது. அவர் சமுத்திரத்தைப் பற்றி எல்லாம் எழுதுவதில்லை, அவர் எழுதுவது ஒரு துளி தண்ணீரைப் பற்றி. அனாவசியமாக ஒரு வார்த்தை எழுதமாட்டார். அவரது பிரயாணம், புலிக்கலைஞன், காலமும் ஐந்து குழந்தைகளும், ஒருவனுக்கு திடீரென்று கார் டிரைவிங் வசப்படும் ஒரு நிமிஷம் பற்றிய சிறுகதை (திருப்பம்) என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

முதலில் ஒரு உண்மையை வெளிப்படையாக ஒத்துக் கொள்கிறேன். அசோகமித்ரனின் எல்லா கதைகளும் எனக்கு புரிந்துவிடுவதில்லை. மிகவும் subtle ஆன எழுத்தாளர். வெளிப்படையாக எதையும் சொல்லும் பழக்கம் கிடையாது. தேவைக்கு அதிகமாக ஒரு சொல் இருக்காது. எனக்கோ நேரடியாக சொன்னாலே சில சமயம் புரிவதில்லை. ஆனால் புரியும்போது சில சமயம் மண்டையில் பல்ப் எரிகிறது, மணி அடிக்கிறது. அந்த அனுபவத்தை நான் அதிகமாகப் பெற்றது அசோகமித்ரன் கதைகளிலேயே. அதனால்தானோ என்னவோ எனக்கு இவரது கதைகளை எத்தனை முறை வேண்டுமானாலும் படிக்க முடிகிறது.

அவர் கதைகள் எல்லாம் என்னவோ அவர் மறைந்து நின்று நடப்பதைப் பார்த்து அதை அப்படியே ரெகார்ட் செய்வது போன்ற ஒரு உணர்வைத் தருகின்றன. எழுத்தாளர் குரல் எப்போதும் ஒலிப்பதில்லை. உபதேசம் என்ற பேச்சே கிடையாது. அவர் ரெகார்ட் செய்யும் சம்பவங்களோ சர்வ சாதாரணமானவை. ரயில் டிக்கெட் வாங்குவது, பொறியில் விழுந்த எலி, சிகரெட் பிடிக்க விரும்பும் ஒருவன் இதை எல்லாம் வைத்து என்ன எழுதுவது? ஒரு அசாதாரண சம்பவம் நடந்தால்தான் அதைப் பற்றி ஒரு கதை எழுதலாமா என்று என்னால் யோசிக்கக் கூட முடிகிறது.

அவருக்குப் பிடித்தமான தீம் மாறுதல் என்று நினைக்கிறேன். அது விமோசனம் சிறுகதையில் மனைவி உம் என்று சொல்லும் கணமாகட்டும், பெயர் நினைவு வராத ஒரு திருப்பம் சிறுகதையில் கிராமத்தில் இருந்து வந்து கார் ஓட்டக் கற்று கொண்டிருக்கும் ஒருவனுக்கு ஒரு கணத்தில் கார் ஓட்டும் கலை பிடிபட்டு அவன் திடீரென்று நகரத்தில் வசிக்கும் தொழிலாளி ஆவதாகட்டும் அங்கிருந்துதான் உண்மையான கதையே தொடங்குகிறது. அப்படி தொடங்கும் கதையைப் பற்றி அவர் ஒரு வார்த்தை சொல்வதில்லை. அந்தக் கதை எல்லாம் Exercise to the reader என்று விட்டுவிடுவதில்தான் அவருடைய மேதமை தெரிகிறது. ஒரு ஜப்பானிய ஓவியத்தில் பெரிய வெள்ளைக் கான்வாஸின் இடது ஓரத்தில் பறந்து கொண்டிருக்கும் பறவையில் பின்பகுதி மட்டும் தெரியுமாம். மிச்சம் எத்தனைப் பறவை, அதெல்லாம் எங்கே என்றெல்லாம் பார்ப்பவர்களின் கற்பனைக்கு ஓவியன் விட்டுவிடுகிறானாம். அந்த ஓவியன் வம்சத்தில் இவர் வந்திருக்க வேண்டும்.

ஒரு கணம், நொடி, நக்மா இதைப் படம் பிடிப்பதில் சூரன். அந்தக் கணத்தை அவரை விட திறமையாக நமக்கு காட்டுபவர்கள் யாருமில்லை. காலமும் ஐந்து குழந்தைகளும் நல்ல உதாரணம்.

அசோகமித்திரன் நகரத்து எழுத்தாளர். அவர் கதைகளில் நகரமும் ஒரு பாத்திரம். எனக்கு அவர் எழுதிய ஒரு கிராமத்துக் கதை கூட நினைவு வரவில்லை, உங்கள் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்! ஒரு வேளை இருவர் என்ற குறுநாவலைச் சேர்த்துக் கொள்ளலாம். அது வைத்தீஸ்வரன் கோவில், அதன் அருகே உள்ள ஓரிரு சின்ன கிராமங்களைக் கதைக்களமாகக் கொண்டது.

அசோகமித்ரனை மிஞ்சியவர் எவருமில்லை என்றாலும் அவரது பாணியில் எழுதுவதில் வெற்றி பெற்றவர் என்று நான் கருதுவது அ. முத்துலிங்கம் ஒருவரையே. முத்துலிங்கம் optimism என்ற கூறு உள்ள அசோகமித்திரன் என்று எனக்குத் தோன்றுகிறது. மெல்லிய நகைச்சுவை இருவருக்கும் பொதுவாக உள்ள இன்னொரு அம்சம். முத்துலிங்கம், அசோகமித்திரன் இருவரையும் ஒப்பிடுவதை articulate செய்ய எனக்கே இன்னும் கொஞ்சம் நாளாகும். இதைப் படிப்பவர்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று எழுதினால் என் எண்ணங்கள் crystallize ஆக எனக்கு உதவியாக இருக்கும்.

அவரது பாணியில் எழுதும் குறிப்பிட வேண்டிய எழுத்தாளர்கள் என்று நான் கருதுவது திலீப்குமார், சுப்ரபாரதிமணியன், விமலாதித்த மாமல்லன் மூவரையும்தான். அதுவும் அசோகமித்ரனோடு ஒப்பிடக் கூடிய அளவு நகைச்சுவை உள்ளவர் திலீப்குமார்தான். அசோகமித்ரனைப் போல சர்வசாதாரணமான சம்பவங்களில் கதையைக் காண்பவர் சுப்ரபாரதிமணியன். ஆனால் இவர்கள் மூவரில் எவரும் அசோகமித்திரன் லெவலைத் தொட்டுவிடவில்லைதான்.

ஜெயமோகன் 12 சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அவரது தேர்வுகளும், என் சிறு குறிப்புகளும் கீழே.

  1. விமோசனம்: கதை பூராவும் டென்ஷன்தான். கணவனுக்கு அடங்கி வாழும் மனைவி ஒரு தருணத்தில் உம் என்று திருப்பி மிரட்டுகிறாள். கணவன் அவளுடன் பேசுவதையே நிறுத்திவிடுகிறான். ஒரு மகானை தரிசித்து முறையிட்டால் தனக்கு விமோசனம் கிடைக்கும் என்று அவரிடம் போகிறாள். அவரிடம் பேசக்கூட முடியவில்லை. திரும்புகிறாள். விமோசனம் கிடைக்கிறது. என்ன மாதிரி விமோசனம்?
  2. காத்திருத்தல்: தேர்தலில் தோற்ற கட்சித் தொண்டன் அவன். வீட்டில் கல்லெறிகிறார்கள். இதை விவரிப்பது கஷ்டங்க, என்னை விட்டுட்டுங்க! நேராக படிச்சுக்கங்க!
  3. காட்சி: இது ஜெயமோகன் ஸ்டைல் சிறுகதை.நாஜிகளின் யூத முகாம்களைப் பற்றி இத்தனை சிக்கனமாக எழுதி – பத்து வாக்கியம் இருக்கலாம், அவ்வளவுதான் – இப்படி அந்த அவலத்தை உணர வைப்பவர் யாருமில்லை. “பார்த்தால்தான் அவைகளில் நான் பங்கேற்றவனாவேனா?” என்ற வரி எனக்கு சாகும் வரை மறக்காது.
  4. பறவை வேட்டை: மிக subtle ஆன கதை. எனக்கு இரண்டு முறை படித்த பின்தான் புரிந்தது. (என்று நினைக்கிறேன்) அந்தக் கடைசி வரிகள் அற்புதம்!
  5. குழந்தைகள்: அற்புதம்! அம்மையப்பன் என்றால் என்ன, உலகம் என்றால் என்ன என்று பிள்ளையார் கேட்டுவிட்டு சிவன் பார்வதியை சுற்றி வந்து மாம்பழத்தை வாங்கிக் கொள்வது போல சர்வ சாதாரண நிகழ்ச்சியில் உலகத்தையே, வரலாற்றையே காண்பிக்கிறார்.
  6. காலமும் ஐந்து குழந்தைகளும்: ஒரு கணத்தைக் காட்டுவதில் இவருக்கு இணை யாருமே இல்லை. நாரதர் விஷ்ணு இருவர் பற்றி ஒரு தொன்மம் உண்டு – நாரதரை தண்ணீர் எடுத்துக் கொண்டு வரச்சொல்லி விஷ்ணு அனுப்ப, நாரதர் நதிக்கரையில் ஒரு பெண்ணைக் கண்டு, மணம் செய்து, குழந்தை பெற்று… என்று போகும். அந்தத் தொன்மத்தை நினைவுபடுத்துகிறது.
  7. புலிக்கலைஞன்: அற்புதமான சிறுகதை. ஒரு நாலு வரியில் டகர்ஃபைட் காதரை கண் முன்னால் நிறுத்திவிடுகிறார். எத்தனை சிக்கனமான எழுத்தாளர், நாலு வரியே அவருக்குப் போதும்! இந்தக் கதையின் உச்சம் கதையின் நடுவில் நிகழ்கிறது. சிறுகதை என்பது ஒரு உச்சத்தை நோக்கி சீராகச் செல்ல வேண்டும் என்ற விதி எல்லாம் மேதைகளுக்கு இல்லை!
  8. காந்தி: காந்தி எனக்கு சிறுகதையாகவே தெரியவில்லை. என்றைக்காவது மண்டையில் மணி அடிக்குமோ என்று ஏழெட்டு முறை படித்துப் பார்த்துவிட்டேன், இன்னும் அடிக்கவில்லை.
  9. பிரயாணம்: நான் படித்த தலை சிறந்த சிறுகதைகளில் ஒன்று. இந்தக் கதையைப் படித்த பிறகுதான் நான் அசோகமித்ரனின் பக்தன் ஆனேன் என்று நினைக்கிறேன். முதல் முறை படிக்கும்போது கடைசி வரிகளில் “ஆங்? என்னாது? ஓ மை காட்! வாத்யாரே, நீ மேதை!” என்று தோன்றியது. இது ஒரு வேளை காப்பி அடித்த கருவாகக் கூட இருக்கலாம். ஆனால் உன்னதமான படைப்பு.
  10. பார்வை: எனக்குப் புரியாத இன்னொரு சிறுகதை. இன்னும் மண்டைக்குள் பல்ப் எரியவில்லை.
  11. மாறுதல்: இன்னுமொரு சிறப்பான சிறுகதை. வேலை செய்யும் வீட்டில் வெள்ளித்தட்டைத் திருடிவிட்டு மாட்டிக் கொள்ளும் சாயனா மீண்டும் அங்கேயே வந்தால்?
  12. குகை ஓவியங்கள்: கஷ்டப்பட்டு மலை ஏறி குகை ஓவியத்தில் காண்பது என்ன? நல்ல சிறுகதைதான், ஆனால் என் anthology-யில் இடம் பெறாது.

தொகுக்கப்பட்ட பக்கம்: அசோகமித்திரன் பக்கம், ஜெயமோகன் பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:
அழியாச்சுடர்கள் தளத்தில் அசோகமித்ரன் சிறுகதைகள்
ஓப்பன் ரீடிங் ரூம் தளத்தில் அசோகமித்திரன் சிறுகதைகள்
அசோகமித்ரன் படைப்புலகுக்கு ஒரு வாசல்
இரு நகரங்களுக்கு நடுவே- அசோகமித்திரனின் புனைவுலகு
ஜெயமோகனின் படிக்கும் அறையில் உள்ள படங்கள்
அசோகமித்ரன் பேட்டி, இன்னொரு பேட்டி
அசோகமித்ரனின் இன்றைய பொருளாதார நிலை – ஒரு pointer
நோபல் பரிசு பெறத் தகுதி உள்ளவர்
அசோகமித்ரன்-ஜெயமோகன் ஒரு சந்திப்பு
அசோகமித்ரனும் எஸ்.எஸ். வாசனும்