கடல் சாகசக் கதைகள் – காப்டன் ராமேஜ்

dudley_popeகடல் சாகசக் கதைகள் என்றால் நினைவு வருவது ரஃபேல் சபாடினி, பாட்ரிக் ஓ’ப்ரையன், மற்றும் சி.எஸ். ஃபாரஸ்டர்தான். அவர்கள் வரிசையில் டட்லி போப் எழுதும் ராமேஜ் நாவல்களையும் நிச்சயமாக வைக்கலாம்.

ராமேஜ் பெரிய பிரபு குடும்பத்தில் பிறந்தவன். பெரும் பணக்காரக் குடும்பம் வேறு. நெப்போலியன் காலத்தில் கடற்படையில் சேர்ந்தவன். அவன் அப்பாவும் புகழ் பெற்ற அட்மிரல், சில பல பிரச்சினைகளால் கடற்படையிலிருந்து விலக வேண்டியதாகிவிட்டது. அந்தப் பிரச்சினைகள் இவனுக்கும் பல எதிரிகளை கடற்படையில் உருவாக்கி இருக்கிறது. ராமேஜின் பெரிய பலம் அவன் துணைவர்கள். அவனோடு எப்போதும் பணியாற்றும் மாஸ்டர் சவுத்விக், டாக்டர் பவன், கடற்படை வீரர்கள் ஜாக்சன், ஸ்டாஃப்போர்ட், ரோஸ்ஸி எல்லாரும் திறமையானவர்கள், அவனுக்காக உயிரையே கொடுப்பார்கள். கடல்புறாவின் அமீர், கூலவாணிகன் மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

முதல் நாவலில் – Ramage – அவன் ஒரு சாதாரண லெஃப்டினன்ட். அவனுடைய மேலதிகாரிகள் எல்லாரும் கொல்லப்பட அவன் தலைவனாகிறான். ஒரு சின்ன படகில் வோல்டெரா என்ற சின்ன நாட்டின் அரசியை நெப்போலியனின் படைகளிடமிருந்து மீட்டு ஆங்கில கடற்படையிடம் ஒப்படைக்கிறான். அவனுடைய எதிரிகள் அவன் கோழை என்று ஒரு கோர்ட் மார்ஷியல் நடத்த நெல்சனின் உதவியோடு தப்பிக்கிறான். அரசியும் அவனும் காதலில் விழுகிறார்கள். அதற்குப் பிறகு பல போர்க்களங்கள், சண்டைகள்.

சாண்டில்யனின் நாவல்களோடு ஒப்பிட்டால் இவை உண்மையிலேயே சாகசங்கள். சாண்டில்யனின் எழுத்துக்கள் அனைத்து அவர் படித்த புத்தகங்களிலிருந்து வந்தவையே. அவர் குதிரை மீது ஒரு நாளும் ஏறி இருக்கமாட்டார், காய்கறி நறுக்கக் கூட கத்தியை பயன்படுத்தி இருக்கமாட்டார், சென்னையிலேயே வாழ்ந்தாலும் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையைக் கூட சுற்றிப் பார்த்திருக்க மாட்டார். டட்லி போப் போன்றவர்கள் ஓரளவாவது கப்பல்களில் சுற்றி, விவரிக்கப்படும் இடங்களைப் பார்த்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. அவரால் காற்றையே நம்பி இருந்த பாய்மரக் கப்பல்களின் காலத்தை நம்பகத்தன்மையோடு விவரிக்க முடிகிறது. Tacking போன்றவற்றை ஓரளவாவது புரிய வைக்க முடிகிறது. கப்பல்களின் இட நெருக்கடியை, பீரங்கிகளை எப்ப்டி வைத்து போரிட வேண்டும் என்பதை, கப்பல் காப்டன்களின் சர்வாதிகாரத்தை, அவர்களின் தனிமையை எல்லாம் நம்பும்படி சொல்ல முடிகிறது.

பதின்ம வயதில் படிக்க வேண்டிய புத்தகங்கள். இப்போதும் படிக்கலாம். ஒரே ஒரு புத்தகம் படிக்க வேண்டும் என்றால் Governor Ramage RN (1973) அல்லது Ramage’s Diamond (1976) படியுங்கள். முன்னதில் ஒரு convoy எப்படி செல்ல வேண்டும் என்பது நன்றாக விவரிக்கப்படுகிறது. பின்னதில் கப்பல்களின் உதவியோடு பீரங்கிகள் மலை மீது ஏற்றப்படுகின்றன.

அனுபந்தம் – இது வரை வந்த ராமேஜ் நாவல்கள்

ramage_touch

  1. Ramage (1965): முதல் கதை இதுதான். ராமேஜ் ஒரு கப்பலில் சின்ன அதிகாரி. போரில் மேலதிகாரிகள் எல்லாரும் இறந்துவிட, பொறுப்பு ராமேஜ் தலையில் விழுகிறது. இத்தாலியின் ஒரு சின்ன அரசின் ராணி கியான்னாவைக் காப்பாற்ற வேண்டும். அவனது டீம் -மாலுமி சவுத்விக், வீரர்கள் ஜாக்சன், ஸ்டாஃபோர்ட், ராஸ்ஸி – இங்கே பாதி உருவாகி விடுகிறது. கியான்னாவுடன் காதல், ராமேஜின் அப்பா மீது உள்ள விரோதத்தால் ராமேஜின் மீது கோழைத்தனத்துக்காக கோர்ட் மார்ஷியல் என்று கதை போகிறது.
  2. Ramage and the Drumbeat (aka Drumbeat) (1968): செயின்ட் வின்சென்ட் கடற்போரில் நெல்சன் புதிய முறைகளில் போரிடுகிறார். ராமேஜ் அதைப் புரிந்து கொண்டு தன் சிறு கப்பலை ஸ்பெயினின் ஒரு பெரிய கப்பல் மீது இடிக்கிறான். ராமேஜின் கப்பல் சுக்குநூறானாலும் பெரிய கப்பலுக்கு ஏற்படும் சேதங்களால் அது தப்ப முடியவில்லை.
  3. Ramage and the Freebooters (aka The Triton Brig) (1969)
  4. Governor Ramage RN (1973): போர்க்கப்பல்களின் பாதுகாப்புடன் செல்லும் வணிகக் கப்பல்கள். அதில் ஒரு எதிரிக் கப்பல் நுழைந்துவிடுகிறது…
  5. Ramage’s Prize (1974)
  6. Ramage and the Guillotine (1975): ஃப்ரான்சுக்கு ஒற்று வேலை செய்யப் போகிறான்.
  7. Ramage’s Diamond (1976): மேற்கிந்தியத் தீவுகளில் ஃப்ரான்சின் அதிகாரத்தில் இருக்கும் ஒரு தீவு. அதை ராமேஜின் கப்பல் முற்றுகை இடுகிறது. பக்கத்தில் இருக்கும் இன்னொரு ஆளில்லாத தீவையும் கைப்பற்றி அதில் ஒரு மலையின் மீது பீரங்கியை ஏற்றுகிறார்கள்.
  8. Ramage’s Mutiny (1977)
  9. Ramage and the Rebels (1978)
  10. Ramage Touch (1979)
  11. Ramage’s Signal (1980): மத்தியதரைக் கடலில் பல சிக்னல் டவர்களை ஃப்ரான்ஸ் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. ராமேஜ் இவற்றைக் கைப்பற்றி தவறான சிக்னல்களைக் கொடுத்து எதிரிக் கப்பல்களைக் கைப்பற்றுகிறான்.
  12. Ramage and the Renegades (1981): கியான்னாவும் ராமேஜும் பிரிகிறார்கள். தென்னமரிக்கா பக்கத்தில் ஒரு ஆளில்லாத தீவை இங்கிலாந்தின் வசப்படுத்த ராமேஜ் அனுப்பபடுகிறார். அங்கே கடற்கொள்ளையர் ஒரு கிழக்கிந்தியக் கம்பெனி கப்பலை கைப்பற்றி இருக்கிறார்கள். ராமேஜ் கப்பலை மீட்கிறான், தன் மனைவி சாராவை முதல் முறையாக சந்திக்கிறான்.
  13. Ramage’s Devil (1982): இங்கிலாந்து-ஃப்ரான்ஸுக்கு நடுவில் ஏற்பட்ட சமரசம் உடைந்து மீண்டும் போர்! ஆனால் ராமேஜும் சாராவும் தேனிலவுக்காக அப்போது ஃப்ரான்சின் ஒரு பழைய பிரபு குடும்பத்து வீட்டில் தங்கி இருக்கிறார்கள். ஒரு சின்னக் கப்பலைக் கைப்பற்றி தப்புகிறார்கள். அந்தப் பிரபு ஒரு சிறைத் தீவுக்கு அனுப்பப்பட, ராமேஜ் அவரை மீட்கிறான்.
  14. Ramage’s Trial (1984): போன நாவலில் மனைவியை இங்கிலீஷ் சானலில் ஒரு சின்னக் கப்பலில் விட்டுவிட்டு ராமேஜ் விரைய வேண்டி இருக்கிறது. மனைவி இங்கிலாந்து திரும்பவில்லை, என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. மன உளைச்சலோடு ராமேஜ் மேற்கிந்தியத் தீவுகளிலிருந்து திரும்பும்போது ஒரு மூத்த காப்டன் மிகவும் வினோதமாக நடந்து கொள்கிறான். ராமேஜ் அந்தக் காப்டனை கைதில் வைக்கிறான். மூத்த அதிகாரியை அவமதித்த குற்றத்துக்காக கோர்ட் மார்ஷியல் நடக்கிறது. அதிகாரிக்கு மன்நிலை பிறழ்ந்துவிட்டது தெரிய வந்து ராமேஜ் விடுதலை ஆகிறான்.
  15. Ramage’s Challenge (1985): ராமேஜுக்கு இந்த முறை இத்தாலியில் சிறை வைக்கப்பட்டிருக்கும் மூத்த கப்பற்படை, ராணுவ அதிகாரிகளை விடுவிக்கும் பணி. மனைவி சாராவையும் விடுவித்துக் கொள்கிறான்.
  16. Ramage at Trafalgar (1986): இந்த முறை நெல்சனின் அணியில் சேர்ந்து ட்ரஃபால்கர் போரில் பங்கேற்கிறார்கள்.
  17. Ramage and the Saracens (1988):
  18. ஆஃப்ரிக்க கடல் கொள்ளையர்கள் சிசிலியிலிருந்து ஆட்களை கடத்தி அடிமைகள் ஆக்குகிறார்கள். நட்பு நாடான இங்கிலாந்தின் கேப்டன் ராமேஜ் அடிமைகளை மீட்கிறார். கியான்னா திரும்பி வருகிறாள்.

  19. Ramage and the Dido (1989)

தொகுக்க வேண்டிய பக்கம்: சாகச நாவல்கள்

தொடர்புடைய சுட்டி: டட்லி போப் – விக்கி குறிப்பு

குயில் பாட்டு

bharathiஇரண்டு மூன்று வாரங்களுக்கு முன் இந்திரா பார்த்தசாரதி எழுதிய இந்தக் கட்டுரையைப் படித்தேன். முதன்முதலில் குயில் பாட்டு படித்த நாட்கள் நினைவு வந்தன. மீண்டும் தேடி எடுத்துப் படித்தேன். What a delightful romp!

எனக்கும் கவிதைக்கும் ரொம்ப தூரம். சாதாரணமாக எனக்குக் கவிதை புரிவதே இல்லை. ஆயிரம் லட்சம் கவிதை படித்தால் ஒரு கவிதை மனதைத் தொடும். அத்தனை கவிதை படிக்கும் அளவுக்கு பொறுமை கிடையாது. ஆனால் பாரதியே எனக்கு quintessential கவிஞன். சிறு வயதிலிருந்தே பாரதி மஹாகவி என்று மூளைசலவை செய்யப்பட்டிருப்பதால்தான் இப்படி நினைக்கிறேனா, உண்மையிலேயே பாரதி பெரிய கவிஞன்தானா, தமிழிலிருந்து மொழிபெயர்த்தாலும் பாரதி கவிஞனாகத் தெரிவானா என்றெல்லாம் எனக்கே சந்தேகம் உண்டு. But who gives a damn? பாரதியே எனக்குப் பெரிய கவிஞன். நான் படித்த (மிகக் குறைந்த) அளவில் கம்பனை விட, தாகூரை விட பாரதியே என் உள்ளத்துக்கு நெருக்கமானவன். பாரதியின் கவிதைகளைத்தான் நான் முழுவதாகப் படித்திருக்கிறேன், கம்பன் எல்லாம் கொஞ்சம்தான் என்பதையும் ஒத்துக் கொள்ள வேண்டும். ஏதோ நாஞ்சில் தயவு, கொஞ்சம் ஜடாயு தயவு, கொஞ்சம் பள்ளித் தமிழ் புத்தகங்கள் தயவு.

பாரதியின் கவிதைகள் எனக்கு எப்போதுமே உத்வேகம் அளிப்பவை. ஆனால் கவித்துவம் எனக்குப் பெரிதாகத் தெரிந்து குயில் பாட்டிலும் வசன கவிதைகளிலும்தான். பாஞ்சாலி சபதமும் கண்ணன் பாட்டும் ஆங்காங்கே என் உள்ளத்தைக் கவர்ந்தாலும் குயில் பாட்டையே நான் பாரதியின் மிக உயர்ந்த கவிதையாகக் கருதுகிறேன். அதை முதல் முதல் படிக்கும்போது ஏற்பட்ட மகிழ்ச்சி சொல்லித் தீராது. பிற்காலத்தில் Alice in the Wonderland, எட்வர்ட் லியரின் நான்சென்ஸ் கவிதைகள், சுகுமார் ரேயின் (சத்யஜித் ரேயின் அப்பா) ஹா ஜா போ லா ரா, நான் படித்த முதல் பி.ஜி. வுட்ஹவுஸ் புத்தகம் Right Ho Jeeves, பெர்னார்ட் ஷாவின் Arms and the Man ஆகியவற்றைப் படிக்கும்போது ஏற்பட்ட மகிழ்ச்சியையே இதற்கு நெருக்கமானதாகச் சொல்லலாம். இவற்றில் தெரியும் joie de vivre – தமிழில் குதூகலம் என்று சொல்லலாமா? – இலக்கியத்தில் மிகவும் அபூர்வமானது, படிக்கப் படிக்கத் திகட்டாதது.

ஏதோ ஒரு புத்தக முன்னுரையில் இது வரை இதனைப் படிக்காதவர்கள் அதிருஷ்டசாலிகள், அவர்களுக்கு ஒரு அற்புதமான அனுபவம் காத்திருக்கிறது என்று எழுதி இருந்தார்கள். அது குயில் பாட்டுக்கும் முழுதும் பொருந்தும்.

வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க
யாதேனும் சற்று இடமிருந்தால் கூறீரோ

என்று பாரதியே சொல்லி இருந்தாலும் குயில் பாட்டில் வேதாந்தம் தேடுவது எனக்கு உவப்பானதல்ல. அதை இப்படியே ஜாலியாகப் படிப்பதுதான் உத்தமம்.

எனக்கு மிகவும் பிடித்த பகுதி குரங்கிடம் குயில் பாடுவதுதான். அதுவும் “வானரர் போலாவாரோ? வாலுக்குப் போவதெங்கே?” என்ற வரி! ஐயா, நீ கவிஞன்! என் போன்றவர்களுக்கு கூட அந்தக் கற்பூர வாசனையை தெரிய வைத்துவிட்டாய்!

சும்மா வளவளவென்று இழுப்பானேன்? நேராக அந்தப் பகுதியைப் படித்துக் கொள்ளுங்கள்.

பேடைக் குயிலிதனைப் பேசியது: – “வானரரே!
ஈடறியா மேன்மையழகேய்ந்தவரே! பெண்மைதான்
எப்பிறப்புக் கொண்டாலும், ஏந்தலே! நின்னழகைத்
தப்புமோ? மையல் தடுக்குந் தரமாமோ?
மண்ணிலுயிர்க்கெல்லாந் தலைவரென மானிடரே,

எண்ணி நின்றார் தம்மை; எனிலொருகால் ஊர் வகுத்தல்,
கோயில், அரசு, குடிவகுப்புப் போன்ற சில
வாயிலிலே, அந்த மனிதர் உயர்வெனலாம்.
மேனியழகினிலும், விண்டுரைக்கும் வார்த்தையிலும்
கூனியிருக்கும் கொலுநேர்த்தி தன்னிலுமே,

வானரர்தஞ் சாதிக்கு மாந்தர் நிகராவாரோ?
ஆன வரையும் அவர் முயன்று பார்த்தாலும்,
பட்டு மயிர் மூடப்படாத தமதுடலை
எட்டுடையால் மூடி எதிருமக்கு வந்தாலும்,
மீசையையும் தாடியையும் விந்தை செய்து வானரர்தம்

ஆசை முகத்தினைப் போலலாக்க முயன்றிடினும்
ஆடிக் குதிக்கும் அழகிலுமை நேர்வதற்கே
கூடிக் குதிக்கும் குதித்தாலும், கோபுரத்தில்
ஏறத் தெரியாமல் ஏணி வைத்துச் சென்றாலும்,
வேறெத்தைச் செய்தாலும் வேகமுறப் பாய்வதிலே

வானரர் போலாவரோ? வாலுக்குப் போவதெங்கே?
ஈனமுறுங் கச்சை இதற்கு நிகராமோ?
பாகையிலே வாலிருக்கப் பார்த்ததுண்டு கந்தைபோல்;
வேகமுறத் தாவுகையில் வீசி எழுவதற்கே
தெய்வங் கொடுத்த திருவாலைப் போலாமோ?

சைவசுத்த போசனமும் சாதுரியப் பார்வைகளும் –
வானரர் போற் சாதியொன்று மண்ணுலகின் மீதுளதோ?
வானரர் தம்முள்ளே மணிபோல் உமையடைந்தேன்,
பிச்சைப் பறவைப் பிறப்பிலே தோன்றிடினும்,
நிச்சயமா முன்புரிந்த நேமத் தவங்களினால்….


தொகுக்கப்பட்ட பக்கம்: பாரதி பக்கம்

சாண்டில்யனின் ராஜபுதனக் கதைகள்

sandilyanசாண்டில்யனின் மனதுக்கு நெருக்கமான புத்தகம் Colonel James Tod எழுதிய Annals and Antiquities of Rajasthan என்றுதான் தோன்றுகிறது. ravi_varma_painting_of_rana_pratapமீண்டும் மீண்டும் இந்தப் புத்தகத்திலிருந்து ஒரு வரியை எடுத்து அதை ஒரு சின்ன கதையாக எழுதுவார். ராஜபுத்திர வீரர்கள், ராணாக்கள், ராணிகளைப் பற்றி எழுதும்போது அவரே மிகவும் என்ஜாய் செய்து எழுதுவது போலத் தெரியும். சிறு வயதில் சேரன் சோழன் பின்புலக் கதைகளை விட நீண்ட அங்கிகளும் இடையில் தொங்கும் வாள், கச்சையில் ஒரு குறுவாள், தலைப்பாகை அணிந்த வீரர்களும் பெருத்த மார்புகளை சரியாக மூடாத இளவரசிகளும் நடை போடும் இந்தக் கதைகள் exotic ஆக இருந்தன, இவற்றின் கவர்ச்சியை மேலும் அதிகரித்தன. நன்றாகப் புரியக்கூடிய பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி மாதிரி பேர்களை விட கேள்விப்பட்டே இருக்காத சந்தாவத், ஜாலா மாதிரி பேர்கள் வேறு இந்தக் கவர்ச்சியைக் கூட்டின. அதுவும் ஜீவபூமி, மஞ்சள் ஆறு, நாகதீபம் போன்ற நாவல்களை மீண்டும் மீண்டும் படித்திருக்கிறேன். ராணா சங்காவும் ராணா அமர்சிங் ஜஹாங்கீரோடு சமரசம் செய்து கொண்டதும் நினைவிருப்பது இந்தப் புத்தகங்களின் மூலம்தான். இன்று கூட மேவார் அரசுதான் ராஜபுதன அரசுகளில் first among equals என்ற பிம்பம் இருக்கிறது!

அவரது ராஜபுதனக் கதைகளைப் பற்றி இங்கே சின்ன சின்ன குறிப்புகளைத் தந்திருக்கிறேன். இவற்றைத் தொகுத்து ஒரு omnibus ஆகப் போடலாம்.

ராணா ஹமீர்: மேவார் ராணா வம்சம் அழியும்போது தூரத்து சொந்தமான ராணா ஹமீர் ஒரு palace coup மூலம் முடிசூடினான் என்ற வரலாற்றை கதையாக எழுதி இருக்கிறார். தவிர்க்கலாம்.

rajasthan-mapமலை அரசி: ராவ் ஜோடா ஜோத்பூர் நகரத்தை உருவாக்கினார், மார்வாரின் அரசர் என்பது வரலாறு. அதை அடிப்படையாக வைத்து ஒரு சுவாரசியமான கதையை எழுதி இருக்கிறார். ராவ்ஜோடா பல ராஜபுதன வம்சாவளிகளுக்கு மூதாதையர். விக்கி குறிப்பைப் படித்துப் பாருங்கள்.

மஞ்சள் ஆறு: ராணா சங்கா பட்டமேற்பதில் இருந்த பிரச்சினைகள், பாபரோடு போர். தவிர்க்கலாம்.

மண்மலர்: ராணா பிரதாப் அக்பரை தனியாக எதிர்த்து நின்றார் என்பது வரலாற. அவருக்கும் ராஜா மான்சிங்குக்கும் இருந்த பூசல்களைப் பின்புலமாக வைத்து எழுதி இருக்கிறார். படிக்கலாம்.

நாகதீபம்: ராணா பிரதாப்பின் காலத்துக்குப் பிறகு ஜஹாங்கீரிடம் ராணா அமர்சிங் சமாதானம் செய்துகொண்டான் என்பது வரலாறு. அந்த சமாதானத்தின் பின்புலத்தில் ஹரிதாஸ் ஜாலா என்ற வீரனை ஹீரோவாக்கி, அவன் மேவாரின் ஒரு ரத்தினத்தை ஜஹாங்கீரிடம் சேர்த்தான் என்று கதை. டைம் பாஸ்.

ஜீவபூமியில் எவ்வளவு தூரம் சரித்திரம் என்பது தெரியவில்லை. அவுரங்கசீப் காலத்தில் ஒரு ராஜபுத்திர வீரனை வைத்து எழுதி இருக்கிறார்.

உதயபானு: அவுரங்கசீப்பின் தளபதி நூர் அலியை உதயபானு தோற்கடித்தான் என்ற ஒரு வரியை கதையாக்கி இருக்கிறார். தவிர்க்கலாம்.

மோகினி வனம்: ராணா பீம்சிங் என்ற பிற்கால ராணா காலத்தில் மேவார் அரசு உள்நாட்டுப் பூசல், மராத்தியர் ஆதிக்கம் காரணமாக மெதுமெதுவாக செயலிழந்ததை வைத்து ஒரு கதை. கதாபாத்திரங்கள் consistent ஆக இருக்க வேண்டும் என்றெல்லாம் சாண்டில்யன் கவலைப்படவே இல்லை. முதல் அத்தியாயத்தில் அதிகார வெறி உள்ளவளாக வரும் ராஜமாதா இரண்டு மூன்று அத்தியாயங்களில் நாட்டு நலனுக்காக தன் மரியாதையை விட்டுக் கொடுத்து அடுத்தவரிடம் கெஞ்சுகிறாள். பல துணைப்பாத்திரங்களின் நிலை மாறிக் கொண்டே இருக்கிறது.

இளையராணி: இன்னொரு ராஜபுதனக் கதை. இளவரசன் அமரன் சித்தியின் சூழ்ச்சிகளை முறியடித்து அம்பர் ராஜகுமாரி ரஜனியை மணக்கிறான்.

ராணியின் கனவு: ராஜபுதன பின்புலத்தை வைத்து கதைகள். டைம் பாஸ்.

சந்திரமதி: ராணா அமரசிம்மனை வைத்து ஒரு கதை.

இதைத் தவிரவும் நிறைய எழுதி இருப்பார் என்று தோன்றுகிறது. உங்களுக்குப் பிடித்த ராஜபுதனக் கதைகள் ஏதாவது இருந்தால் சொல்லுங்களேன்!


தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் சரித்திர நாவல்கள்

நாடக ஆசிரியர் டேவிட் மாமெட்

david_mametஎனக்கு நாடகம் என்பது ஆர்தர் மில்லர், டென்னசி வில்லியம்ஸ், பெர்டோல்ட் ப்ரெக்ட் ஆகியோரோடு நின்றுவிடுகிறது. நண்பர் பாலாஜியோடு பேசிக் கொண்டிருந்தபோது அவர் இன்றைய நாடக ஆசிரியர்கள் என்று மாமெட், மற்றும் ஆரன் சோர்கின் ஆகியோரைக் குறிப்பிட்டார். சரி படித்துப் பார்ப்போமே என்று சில கேள்விப்பட்ட பெயர்களைப் படித்தேன்.

நாடகம் எல்லாம் படிக்க இல்லை, பார்க்க வேண்டியவை என்று நான் உறுதியாகக் கருதுகிறேன். ஆனால் என்ன செய்ய, நாடகம் எல்லாம் போய்ப் பார்க்கும் வசதி இல்லை. படிப்பதை விட திரைப்படமாகப் பார்ப்பது நல்லது என்றே சொல்வேன். (இதெல்லாம் பொதுவாக பிராட்வே ஷோவாக வரும். சமீபத்தில் ஒரு பிராட்வே ஷோ போனபோது டிக்கெட் விலை 120 டாலரோ என்னவோ. தியேட்டரில் சினிமா பார்த்தால் 10 டாலர் ஆகும். ரெட்பாக்ஸில் டிவிடி வாடகைக்கு எடுத்தால் ஒரு டாலர். இன்னும் காத்திருந்து நூலகத்தில் இருந்து டிவிடி கொண்டுவந்தால் செலவே இல்லை. :-)) ஆனால் எனக்கு படித்தால்தான் திருப்தி.

மாமெட்டின் இரு நாடகங்கள் – Glengarry Glen Ross மற்றும் American Buffalo – நாடகங்களைப் பார்க்க வேண்டும் என்ற என் எண்ணத்தை மேலும் உறுதிப்படுத்துகின்றன. இரண்டு நாடகங்களையுமே நமக்கு கொண்டு வர திறமையுள்ள நடிகர்கள் தேவைப்படுகிறார்கள். மாமெட் வெறும் கோடு மட்டுமே போட்டிருக்கிறார். அதை ரோடாக்க ஜாக் லெம்மனும் அல் பசினோவும் டஸ்டின் ஹாஃப்மனும் தேவைப்படுகிறார்கள். இரண்டு நாடகங்களை வைத்து சொல்ல முடியாதுதான். ஆனால் மாமெட் எப்படியாவது முழுகிவிடாமல் தப்பித்துக் கொள்ள வேண்டும் என்று துடிக்கும் மனிதர்களை நன்றாக சித்தரிக்கிறார்.

American Buffalo-வில் மூன்று losers. ஒரு திருட்டை திட்டமிடுகிறார்கள். அதில் வெளிப்படும் அவர்கள் குணசித்திரம்தான் நாடகம். டீச் பாத்திரம் நடிப்பதற்கு மிகவும் scope உள்ள பாத்திரம். இதையும் திரைப்படமாகப் பாருங்கள் என்றே பரிந்துரைப்பேன். 1975-இல் முதலில் நடிக்கப்பட்டது.

Glengarry Glen Ross-இல் வீடு வாங்க விற்க உதவும் ப்ரோக்கர்களை வேலைக்கு வைத்திருக்கும் ஒரு ரியல் எஸ்டேட் கம்பெனி. கம்பெனி அவர்களுக்குள் ஒரு போட்டி வைக்கிறது. யார் நிறைய ஆர்டர் கொண்டு வருகிறார்களோ அவருக்கு பரிசு. யார் குறைவான ஆர்டர் கொண்டு வருகிறாரோ அவருக்கு வேலை காலி. முக்கியமான கருவி வீடு, நிலம் வாங்க வேண்டும் என்று நினைத்திருப்பவர்களின் பட்டியல். இதை வைத்து ஒரு powerful நாடகத்தை உருவாக்கி இருக்கிறார். குறிப்பாக ரோமா லிங்க் என்பவருக்கு நிலத்தை விற்பது, லிங்கின் மனம் மாறும்போது ரோமாவும் லெவீனும் ஆடும் நாடகம், லெவீன் மாட்டிக் கொள்வது எல்லாம் மிக நல்ல காட்சிகள். ஆனால் நாடகத்தின் முழு சக்தியும் படிக்கும்போது அல்ல, Glengarry Glen Ross திரைப்படத்தைப் பார்த்தபோதுதான் வெளிப்பட்டது. லெவீனாக நடிக்கும் ஜாக் லெம்மன் தன் desperation-ஐ மிக நன்றாகக் கொண்டு வந்திருப்பார். ரோமாவாக நடிப்பது அல் பசினோ. முடிந்தால் திரைப்படத்தைப் பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

Glengarry Glen Ross முதலில் நடிக்கப்பட்டது 1983-இல். 1984-இல் புலிட்சர் பரிசை வென்ற நாடகம். திரைப்படம் வெளிவந்தது 1992-இல்.

மாமெட் பல படங்களுக்கு திரைக்கதை எழுதி இருக்கிறார். எனக்குப் பிடித்த சில திரைப்படங்கள் – Verdict, Untouchables, Wag The Dog மற்றும் Ronin. குறிப்பாக Wag The Dog. இது வரை பார்க்கவில்லை என்றால் பார்த்துவிடுங்கள்.

பிறர் நாவல்களுக்கு திரைக்கதை எழுதுவதில் வல்லவர். Verdict முதலில் நாவலாக வெளிவந்தது. Barry C. Reed எழுதியது. படிக்கலாம். ஜேம்ஸ் எம். கெய்ன் எழுதிய Postman Always Rings Twice நாவலுக்கும் திரைக்கதை எழுதி இருக்கிறார். Wag The Dog கூட யாரோ எழுதிய நாவல் என்று நினைவு.

சில படங்களை இயக்கவும் செய்திருக்கிறார். நண்பன் மனீஷ் ஷர்மா பரிந்துரைத்த திரைப்படம் – Spanish Prisoner. நான் இன்னும் பார்க்கவில்லை; ஆனால் மனீஷின் பரிந்துரைகள் எனக்கு சாதாரணமாக work out ஆகும்.


தொகுக்கப்ப்ட்ட பக்கம்: நாடகங்கள், திரைப்படங்கள்

இந்திய சினிமா நூற்றாண்டு விழா பற்றி பிரபல எடிட்டர் லெனின்

editor_leninஇன்றைய பதிவு புத்தகம் பற்றி இல்லை. விதிவிலக்கு.

தமிழ் சினிமா பற்றி ஆதங்கம் இல்லாதவர்கள் குறைவு.நல்ல தமிழ் சினிமா என்பது ஏறக்குறைய oxymoron ஆகிவிட்டது. இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் இந்த நேரத்தில் தமிழ் சினிமாவின் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சினிமாக்களைப் பற்றி தமிழ் ஸ்டுடியோவுக்கு பிரபல எடிட்டர் லெனின் அனுப்பிய கடிதம் எனக்கும் forward செய்யப்பட்டது. அதை இங்கே பதித்திருக்கிறேன்.


இந்திய சினிமா நூறு ஆண்டை கடந்திருப்பது மகிழ்ச்சியைக் கொடுக்கிற செய்தியாக இருந்தாலும், இந்த நூறு ஆண்டுகளில் இந்திய சமூகம், குறிப்பாக தமிழ் சமூகம் கொஞ்சம் கூட சினிமாவை புரிந்துக் கொள்ளவில்லையே என்கிற ஆதங்கமும் இருக்கவே செய்கிறது. சினிமா எடுப்பவர்கள் என்ன செய்துக் கொண்டிருக்கிறார்கள்? சினிமாவில் நடிப்பவர்கள், இயக்குபவர்கள் உள்ளிட்ட வெகு சில கலைஞர்கள் மட்டுமே பொருளாதார ரீதியில் வளர்ந்துக் கொண்டே இருக்கிறார்கள். போகட்டும். பிரச்சனை அதுவல்ல இப்போது. இந்த நூற்றாண்டு கால சினிமாவை நாம் ஏன் கொண்டாட வேண்டும்? சமூகத்திற்கு இதுவரை கொஞ்சமும் பயன்படாத வகையில்தான் இந்தியாவில் சினிமா உருவாகி கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், சமூகத்தை சீரழிப்பதிலும் சினிமா முக்கிய பங்கு வகித்துக் கொண்டிருக்கிறது. பல கொலைகளை செய்த ஒருவன், குறிப்பிட்ட சினிமாவின் பெயரை சொல்லி இந்த படத்தை பார்த்துதான் நான் கொலை செய்தேன், இந்த படமே என்னை இப்படி கொலை செய்யத் தூண்டியது என்று அறிக்கை விட்ட சங்கதியெல்லாம் நடந்த நாடுதானே இது!

தமிழக அரசு இப்போது, இந்திய சினிமாவின் நூற்றாண்டை கொண்டாட பத்து கோடி ரூபாயை கொடுத்திருக்கிறது. இது யாருடைய பணம்? படிக்க வசதியின்றி, அடிப்படை வசதிகள் கூட இல்லாத எத்தனையோ கிராமங்களில் உள்ள மக்களுக்கு, அல்லது மக்களின் சுகாதார மேம்பாட்டிற்கு, ஒரு நகர, கிராமத்தின் உட்புற கட்டமைப்புக்கு இந்த பணத்தை செலவிட்டு இருக்கலாம். சினிமாவில் இருப்பவர்களுக்கு பணத்திற்கு என்ன பிரச்சனை? சினிமாவின் மூலம் கோடிகள் சம்பாதித்தவர்கள், சம்பாதித்துக் கொண்டிருப்பவர்கள், இதற்கான செலவை பகிர்ந்துக் கொண்டால் என்ன? மக்களின் வரிப் பணத்தை, ஏதோ சிலரின் கேளிக்கைக்காக அரசு இப்படி வாரி வழங்குவது எந்த வகையில் நியாயம்?

சரி, இந்திய சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடுவது என்று முடிவெடுத்துவிட்டப் பின்னர் அதை எப்படி உருப்படியாக கொண்டாடுவதே என்றாவது சிந்தித்தார்களா? தொடர்ச்சியாக சென்னை முழுவதும் திரையிடப்படும் படங்களில் எல்லாமும், சினிமாவின் உன்னதத்தை, தமிழர்களின் பண்பாட்டை எந்தவிதத்திலும் பிரதிபலிக்காத, வெறும் கேளிக்கையை கொண்டாடும் படங்கள். இந்த படங்களை திரையிட்டு, நாம் எப்படி நூறு வருடத்தை கொண்டாடுவது? இப்படியான படங்கள்தான் இந்த நூறு வருடத்தில் வந்திருக்கிறது என்றால், நாம் கூச்சப்பட வேண்டாமா என்று நான் கேட்கவில்லை. ஆனால் உண்மையாகவே தற்போது திரையிடப்படும் இந்தப் படங்களையும் தாண்டி, தமிழ் சினிமாவில் நூற்றுக்கணக்கான அற்புதமான படங்களும் வெளிவந்திருக்கிறது. அமெரிக்காவில் இருந்து கேமராவின் பாகங்களை விற்க வந்த எல்லிஸ் ஆர். டங்கன் தமிழ் திரைப்படங்களுக்கு ஒரு புதிய வடிவத்தைக் கொடுத்தார். எம்.ஜி.ஆர், சிவாஜி போன்றவர்களின் படங்களை திரையிடுவதை ஆதரிக்கும் வேளையில், சூப்பர்ஸ்டார் (ரஜினிகாந்த் அல்ல, தியாகராஜ பாகவதர்தான்), பி.யூ. சின்னப்பா போன்றவர்களை நாம மறந்ததையும் நான் இந்த நேரத்தில் நினைவுப் படுத்த விரும்புகிறேன். எம்.ஜி.ஆர் படத்தை திரையிட முனையும்போது, தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றியமைத்த எல்லிஸ். ஆர். டங்கன் இயக்கிய மந்திரிகுமாரி திரைப்படத்தையாவது திரையிட்டு இருக்கலாமே? அல்லது நாவலில் இருந்து சினிமாவாக மலர்ந்து மலைக்கள்ளனை பரிசீலித்து இருக்கலாமே? ஏன் இந்த படங்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன? கலைஞர் இந்த படங்களில் பங்காற்றி இருப்பதாலா?

வெறும் நடிகர்களை கொண்டாடுவது மட்டுமல்ல, நூற்றாண்டுக் கொண்டாட்டம். இந்த நூற்றாண்டை சினிமா கடந்து வர முக்கிய காரணம், சினிமாவில் ஆளுமை செலுத்திய இயக்குனர்கள். அதில் முக்கியமானவர் கே. ராம்நாத். ஒரு வெளிநாட்டு இலக்கியத்தை தமிழில் “ஏழை படும் பாடு” என்கிற திரைப்பாமாக எடுத்தார். இன்று வரை தமிழில் அப்படியான திரைப்பட முயற்சி உருவாகவே இல்லை. ராம்நாத்தின் ஏதாவது ஒரு திரைப்படத்தை திரையிடுவதில் இங்கே என்ன பிரச்சனை இருக்கிறது? வெறும் பாடல்களால் நிறைந்த தமிழ் திரைப்படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு பாடல்களே இல்லமால், ஜப்பானிய சினிமா பாணியில் வீணை எஸ். பாலசந்தர் இயக்கிய “அந்த நாள்” திரைப்படம் எத்தனை முக்கியமான திரைப்படம். ஒரு பொம்மையை வைத்து முற்றிலும் வித்தியாசமான காலத்தில் அவர் இயக்கிய பொம்மை திரைப்படத்தையாவது திரையிட்டு இருக்கலாமே? டி.ஆர். ரகுநாத் இயக்கிய திரைப்படங்கள், பி.ஆர். பந்துலுவின் முக்கியமான படமும், தமிழர்களின் சுதந்திரப் போராட்ட பங்கை விளக்கும் ஒரு வீரனின் கதையுமான “கப்பலோட்டிய தமிழன்” திரைப்படம் எல்லாம் எங்கே போனது? ஒரு தெலுங்கு நடிகை சிவாஜிக்கு சமமாக வசனம் பேசி நடித்த, கண்ணகி திரைப்படம் ஏன் காணாமல் போனது? ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிகாமணி என்று மிக நீளமான தலைப்பில் வெளிவந்த திரைப்படமெல்லாம் என்ன ஆனது? தவிர முதல் சகலகலா வல்லியான பானுமதியின் சண்டிராணி படம் என்ன ஆயிற்று. டி.ஆர். ராஜகுமாரி, டி. ஏ. மதுரம், ஜீவரத்தினம் இன்னும் பல திறமையான நடிகைகளை இந்த தமிழ் சினிமா நினைவு கூரப் போகிறது என்று எனக்கு தெரியவில்லை.

எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், அஜித், விஜய் மட்டும் தமிழ் சினிமாவின் தூண்கள் இல்லையே? இவர்களுக்கு முன்னர் பல போட்டுக் கொடுத்த அருமையான பாதையில்தானே இவர்கள் பயணம் செய்கிறார்கள்? இவர்களை செம்மைப்படுத்திய இயக்குனர்களை ஏன் தமிழ் திரையுலகம் மறந்து போனது? தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஏன் இதில் தலையிட்டு நிகழ்வை செம்மைப்படுத்தக் கூடாது?

ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும்,கலைஞர் கருணாநிதி தமிழ் சினிமாவிற்கு அளித்த பங்கை யாராவது மறந்துவிட முடியுமா? இந்தியாவின் மற்ற மாநிலங்களில் அவரவர் மொழிப் படங்களுக்கு மாநில விருது வழங்கப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில், தமிழ்நாட்டில் திரைப்படங்களுக்காக மாநில விருது வழங்கப்படவே இல்லை. அதை கருணாநிதிதான் தொடங்கிவைத்தார். நான், பாலு மகேந்திரா உள்ளிட்டவர்கள், விருதுத் தொகையை அதிகரித்துக் கொடுக்க சொன்னபோது அதை உடனே அதிகரித்து கொடுக்கவும் செய்தார். தவிர, உலகில் இந்த வயதிலும் பேனா பிடித்து எழுதும், அதுவும் யார் கேட்டாலும் சினிமா என்றால், தன்னை மறந்து அதில் மூழ்கிப் போகும், ஒரு கலைஞன் இந்த சினிமாவிற்கு அளித்த கொடையை ஏன் தமிழ் சினிமா மறந்துப் போனது? சிவாஜி கணேசன் என்கிற ஆளுமையை அடையாளம் காண வைத்து, தமிழர்களின் பகுத்தறிவை உசுப்பிவிட்ட, திராவிட இயக்கத்தின் தொடக்க கால காவியமான “பராசக்தி” திரைப்படம் எங்கே போனது? வீர வசனங்களுக்கு பேர்போன கண்ணாம்பாவை நிலைநிறுத்திய “மனோகரா” என்ன ஆனது? கலைஞரின் எத்தனையோ படங்களில் எதையாவது ஒன்றையாவது திரையிட்டு இருக்கலாம். அரசியலுக்கு அப்பாற்பட்டு, தொடர்ந்து இந்த வயதிலும், திரைத் துறையில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு கலைஞனாகவாவது கருணாநிதியை இந்த தமிழ் திரையுலகம் கொண்டாடியிருக்கலாம். கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது, அவரை கொண்டாடிய கூட்டம் ஏன் இதைப் பற்றி பேசவில்லை? கலைஞரின் மூலமே சினிமாவில் பெரிய இடத்தைப் பிடித்த வித்தக கவிஞர் என்கிற பா.விஜய் இந்நேரம் எங்கே போனார்? அப்துல் ரகுமான், வைரமுத்து என்று ஒரு பெரிய பட்டாளமே கலைஞரால்தான் இங்கே நிலையான இடத்தை அடைந்தது. கலைஞரின் படத்தை திரையிடாதது கண்டு ஏன் இவர்கள் வெகுண்டெழவில்லை என்று நான் கேட்கவில்லை!

இந்த சினிமாக்காரர்கள் அழைக்காவிட்டாலும், ஒரு தயாரிப்பாளராக, வசனகர்த்தாவாக, பாடல் ஆசிரியராக இந்திய சினிமாவின் இந்த நூற்றாண்டுக் கொண்டாட்டத்தில் கலந்துக் கொள்ளும், எல்லா உரிமையும், தகுதியும் கலைஞர் கருணாநிதிக்கு இருக்கிறது. நிச்சயம் கலைஞர் இந்த நூற்றாண்டுக் கொண்டாட்டத்தில் கலந்துக் கொண்டு தமிழ் திரையுலகின் முகத்திரையை கிழிக்க வேண்டும் என்று நான் கேட்கவில்லை!

கலைஞரைத் தாண்டியும், திராவிட இயக்கத்தின் ஆணிவேர் அறிஞர் அண்ணாவின் படங்கள் என்ன ஆனது? நல்லதம்பி படம் பற்றி இங்கே யாருக்காவது தெரியுமா? பகுத்தறிவை வளர்த்ததாக சொல்லப்படும் அண்ணாவின் படங்களுக்கே இந்த நிலையா? எனில் அண்ணா நாமம் எங்கே வாழ்வது? இன்னொரு முக்கியமான கலைஞனான வி.கே. ராமசாமி, டி.ஆர். மகாலிங்கம் எங்கே போனார்கள்? ஏன் தமிழ் சினிமா சரித்திரம் மறந்துபோனது? ரத்னகுமார் என்கிற படம் பற்றிய குறிப்புகளாவது இங்கே இருக்கிறதா என்று நான் உங்களை கேட்கவில்லை. எனக்குள்ளேயே யோசித்துப் பார்க்கிறேன்.

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், நூற்றாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, உடனடியாக தமிழ் சினிமா பற்றிய ஒரு கண்காட்சியை ஏற்பாடு செய்ய வேண்டும். மறக்கப்பட்ட எல்லா கலைஞர்களையும் (நடிகர்கள், இயக்குனர்கள், லைட்மேன், மேக்கப்மென் உட்பட) மீண்டும் மக்களுக்கு நினைவுப்படுத்த அவர்களுக்கு தனியாக ஒரு விழா நடத்த வேண்டும்.

தமிழ்,மலையாளம் ,தெலுங்கு,கன்னடம்,ஹிந்தி,ஆங்கிலம்,சினிமாவின் படங்களை படத்தொகுப்பு செய்தவன், தமிழுக்கு நான்கு முறை தேசிய விருதைப் பெற்றுக் கொடுத்தவன் என்கிறதால் இதை நான் எழுதவில்லை. ஒரு சாதாரண பார்வையாளனாக, சினிமாவை நேசிக்கும் ஒரு ஆர்வலனாக இதை கேட்கிறேன். இந்த கலைஞர்கள், இயக்குனர்கள் எல்லாம் இல்லையென்றால் இந்திய சினிமாவுக்கு நூற்றாண்டு இல்லை, எனவே அவர்களை இந்த தருணத்திலாவது நாம் ஒருமுறை நினைவுகூர்வோம்.

கவுதம் பாஸ்கரன், ராண்டார்கை, தியடோர் பாஸ்கரன் போன்ற திரைப்பட அரசியலை சாராத, திரைப்பட வரலாற்றையும், அழகியலையும் முன்னிறுத்தி எழுதியும், பேசியும் கொண்டிருக்கும் ஆளுமைகளை திரையிடப்பட வேண்டிய படங்களை தெரிவு செய்ய ஏன் அரசு நியமித்திருக்க கூடாது என்று நான் கேட்கவில்லை. இவர்களை வைத்து திரைப்படங்களை தெரிவு செய்திருக்கலாம் என்று எனக்குள் நினைத்துப் பார்க்கிறேன்.


லெனின் முக்கியக் கருத்தோடு – பல முன்னோடிகளை நினைவு கூர சினிமாவின் நூற்றாண்டு விழா பொருத்தமான தருணம் – நான் உடன்படுகிறேன். ஆனால் கருணாநிதியின் திரைப்பட பங்களிப்பு அவ்வளவு பெரியது இல்லை (பராசக்தி, மனோகரா, சரி போனால் போகட்டும் மந்திரி குமாரியையும் சேர்த்துக் கொள்கிறேன் – மட்டும்தான் குறிப்பிடப்பட வேண்டிய திரைப்படங்கள்) என்றே நான் கருதுகிறேன். பத்து படம்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் டி.ஆர். ரகுநாத், டி.ஆர். மகாலிங்கம், டி.ஆர். ராஜகுமாரி, டி.ஏ. மதுரம், ஜீவரத்தினம், பி.யூ. சின்னப்பா, வி.கே. ராமசாமி, சண்டிராணி, நல்லதம்பி, ரத்னகுமார் இதற்கெல்லாம் இடமில்லை என்றும் கருதுகிறேன்.

பாக்கியம் ராமசாமியின் அப்புசாமி கதைகள்

appusamiseethap_paattiஒரு காலத்தில் – பத்து வயது இருக்கலாம் – இவற்றை படித்து சிரித்திருக்கிறேன். அப்புசாமியும் ஆஃபிரிக்க அழகியும், மாணவர் தலைவர் அப்புசாமி, அப்புசாமியும் ஆயிரத்தொரு இரவுகளும் ஆகிய மூன்றையும் இந்த சீரிஸில் சிறப்பானவை என்று சொல்லலாம். இப்போது படித்தால் சிரிப்பு வரமாட்டேன் என்கிறது. குமுதத்தின் பக்கங்களை நிரப்ப ஒரு முயற்சி, அவ்வளவுதான். தமிழில் அவ்வளவாக இல்லாத நகைச்சுவை genre முயற்சிகள் என்பதுதான் இவற்றின் முக்கியத்துவம். கல்கி, தேவன், எஸ்விவி மூவரைத் தவிர வேறு யாரும் இந்த genre-இல் வெற்றி அடைந்ததாக எனக்குத் தெரியவில்லை. அதுவும் எஸ்விவியைப் படித்து பல வருஷங்கள் ஆகிவிட்டன, இப்போது படித்தால் என்ன நினைப்பேனோ தெரியாது. நாடோடி, துமிலன் போன்றவர்களுக்கு இவர் பரவாயில்லை, சாவி, இவர், கடுகு ஆகியோர் ஏறக்குறைய ஒரே தரத்தில் இருக்கிறார்கள் என்று சொல்லலாம்.

ja_raa_sundaresanஅப்புசாமியும் ஆஃப்ரிக்க அழகியும்: இதுதான் முதல் அப்புசாமி படைப்பு என்று நினைவு. எழுதப்பட்ட காலத்தில் புதுமையாக இருந்திருக்கும், அந்தப் புதுமை அப்போது பலரை ஈர்த்திருக்கும் என்று நினைக்கிறேன். ஆஃப்ரிக்க இளவரசி இடீலி அப்புசாமியின் குறுந்தாடியைப் பார்த்து காதல் வசப்படுகிறாள்.

மாணவர் தலைவர் அப்புசாமி: கல்லூரி மாணவர்கள் நினைத்தால் ஊர்வலம், போராட்டம் என்று கிளம்பிய காலத்தில் எழுதப்பட்ட கதை. தற்செயலாக மாணவர் ஊர்வலத்தில் அப்புசாமி பங்கேற்று, தலைவராகி…

அப்புசாமியும் ஆயிரத்தொரு இரவுகளும்: பேல் பூரி வாங்கித் தராத கோபத்தில் அப்புசாமி பாட்டியை அரேபிய ஷேக்குக்கு விற்றுவிடுகிறார். அங்கே சீதாப்பாட்டி ஷேக்குக்கு மந்திரி ஆகிவிடுகிறாள். அப்புசாமியோ ஷேக்கின் எதிரிக்கு தளபதி ஆகிறார். ஷேக்கின் வெளிநாட்டு பிரயாண திட்டத்தை திருடித் தருகிறார். ஆனால் எல்லாரும் சீதாப்பாட்டியின் தந்திரத்தால் ஷேக்கிடம் மாட்டுகிறார்கள். பிறகு கிஸ்சின்ஜர் வந்து சமாதானம் செய்து வைக்கிறார், அப்புறம் பாட்டியும் தாத்தாவும் எஸ்கேப்!
அந்த காலத்தில் இதை படித்து சிரித்திருக்கிறேன், இப்போது நாஸ்டால்ஜியாதான் இதை திருப்பி படிக்க காரணம். சுகப்படவில்லை. ஜெயமோகன் இதை சிறந்த வணிக எழுத்துகளில் ஒன்றாகக் கருதுகிறார்.

சீதாப்பாட்டியின் சபதம் நாவலில் இரட்டை வேஷம் வேறு. இவர் மாதிரியே உருவம் உள்ள மணவாள முதலியார் வில்லனாக வருகிறார்.

இதைத் தவிர நிறைய எழுதிக் குவித்திருக்கிறார். எல்லாமே குமுதத்தில் வந்தவைதானா என்று நிச்சயமாகத் தெரியவில்லை. ஏனென்றால் வீரப்பன் காட்டில் அப்புசாமி, அப்புசாமியும் ஹிப்னாடிச பூனையும், அப்புசாமி படம் எடுக்கிறார், அப்புசாமியும் அற்புத விளக்கும் போன்றவை அனுபவம் மிக்க ஜ.ரா.சு. இவ்வளவு மோசமாக எழுத வேண்டாம் என்று நினைக்க வைக்கின்றன. இவற்றை எஸ்.ஏ.பி. அனுமதித்திருப்பாரா என்று சந்தேகமாக இருக்கிறது.

பொதுவாக நாவல்களுக்கு சிறுகதைத் தொகுப்புகள் பரவாயில்லை. வழக்கமான ஃபார்முலாதான், படித்துவிட்டு தூக்கிப் போட்டுவிடலாம், எதுவும் நினைவு வைத்துக் கொள்ள வேண்டியவை இல்லை என்றாலும் டைம் பாஸ். கமான் அப்புசாமி கமான், அப்புசாமி பரீட்சை எழுதுகிறார், அப்புசாமி செய்த கிட்னி தானம், அப்புசாமியும் பாரதி நாற்காலியும், பியூட்டி பார்லரில் அப்புசாமி, கூழுக்கொரு கும்பிடு, அம்மா வாரம், வளவள வைரஸ் என்று சில சிறுகதைகள் நினைவு வருகின்றன.

பாக்கியம் ராமசாமி என்ற புனைபெயரில் எழுதிய ஜ.ரா. சுந்தரேசன் குமுதம் துணை ஆசிரியர்களில் ஒருவர். எஸ்.ஏ.பி. அண்ணாமலையின் டீமில் முக்கியமானவர். சொந்தப் பேரிலும் – ஜ.ரா. சுந்தரேசன் – சில சமயம் எழுதுவார். அவர் எழுதி நான் படித்த வேறு சில நாவல்களைப் பற்றி:

பிரமாதமான, நல்ல நாவல் என்றெல்லாம் சொல்வதற்கில்லை, ஆனால் இருப்பதில் சிறந்த நாவல் என்றால் பூங்காற்றுதான். ஒரு இசைக்கலைஞனை ஹீரோவாக வைத்து எழுதப்பட்ட நாவல். இதைத் தவிர குங்குமம் என்ற உப்பு சப்பில்லாத நாவல், தொடர்கதையாக வந்திருக்கிறது. கதையின் சிறந்த அம்சம் மனநிலை பிறழ்ந்த தாயின் சித்திரம். ஜ.ரா.சு.வின் அம்மாவே மனநிலை பிறழ்ந்தவர்தானாம். அம்மாவால்தான் புத்தகத்தை எழுதினாராம். அந்த ஒரு காரணத்தால்தான் இந்தக் கதையை இருப்பதில் சிறந்ததாகக் கருதுகிறேன். மற்றபடி கதம்பாவின் எதிரி (வெட்டி தொடர்கதை. சின்ன வயது திருமணம், திருமணம் மறந்தே போதல், கணவனோடேயே காதல், வில்லன் தான்தான் பழைய கணவன் என்று சொல்லிக் கொண்டு நுழைவது…), பாசாங்கு (வயதான கணவன் தன இளம் வயது மனைவியை மீண்டும் கச்சேரி செய்ய வைப்பதற்காக குருடனாக நடிக்கிறான், கொஞ்ச நாளில் அவள் மீது சந்தேகம்…) எல்லாம் வேஸ்ட்.

அவரது சில சிறுகதைகளை இங்கே படிக்கலாம்.

நண்பர் ரெங்கசுப்ரமணி குறிப்பிடுவது போல சில டைம் பாஸ் நகைச்சுவைக் கட்டுரைகளையும் எழுதி இருக்கிறார். (ஒரு டஜன் கீர்த்தனை என்ன விலை?, பீரோவின் பின்னால்). மேலும்
ரெங்கசுப்ரமணி சொல்லி புஷ்பா தங்கதுரை ஸ்டைலில் ஜ.ரா.சு. எழுதிய மனஸ் என்ற நாவலையும் படித்தேன். பெண் ஓரினச் சேர்க்கை, காம வெறி பிடித்த பெண் என்று போகிறது. அவர் இளைஞராக இருந்த காலத்தில் இந்த மாதிரி எழுத்து போர்னோக்ராஃபி என்று மதிக்கப்பட்டிருக்குமோ என்னவோ.

ஜ.ரா.சு. என்ற எழுத்தாளரை இலக்கியப் படைப்பாளி என்ற விதத்தில் பொருட்படுத்த வேண்டியதில்லைதான். ஆனால் தமிழ் பரப்பிலக்கிய வரலாற்றில் குமுதத்தின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம், நகைச்சுவை genre-இல் முயற்சித்தவர் என்ற அளவில் நிச்சயமாக அவருக்கு ஒரு இடம் உண்டு.


தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாவல்கள், தமிழ் வணிக எழுத்து

தொடர்புடைய சுட்டிகள்:
அப்புசாமிக்கு ஒரு தளம்
ஜ.ரா.சு.வின் வாழ்க்கைக் குறிப்பு
விக்கி குறிப்புத்
தென்றல் மாத இதழில் ஜ.ரா.சு. (Registration Required)
முதல் அப்புசாமி கதை

பாலகுமாரனின் “ஆனந்த வயல்”

balakumaranபாலகுமாரனைப் பற்றி பல மாதங்கள் முன்னால் ஜெயமோகன் தளத்தில் ஒரு சர்ச்சை. பாலகுமாரனுக்கு “ஆதரவாக” பேசிய பலரும் ஜெயமோகன் என்ன சொல்ல வருகிறார் என்று புரிந்து கொள்ள முயற்சி கூட செய்யவில்லை. அவர்களது கோபம் வெறும் (ஆனால் உண்மையான) உணர்ச்சியின் வெளிப்பாடு, ஜெயமோகன் சொல்வதைப் புரிந்து கொண்டு அதற்கு எதிராக எழுந்த வாதம் இல்லை. அதே நேரத்தில் ஜெயமோகனும் பாலகுமாரன்=சுஜாதா+தி.ஜா.+ஒரு மேல் காமப் பூச்சு என்று சுலபமாக புறம் தள்ளியது எனக்கு சரியாகப் படவில்லை. பாலகுமாரன் பல எக்கச்சக்க குப்பைகளை எழுதி இருக்கிறார் என்பது வாஸ்தவம்தான். ஆனால் அவருக்கு சில சாதனைகளும் உண்டு, தமிழ் இலக்கியத்தில் ஒரு footnote அளவுக்காவது இடம் உண்டு என்றே நான் கருதுகிறேன்.

aanandha_vayalமெர்க்குரிப் பூக்கள், பந்தயப் புறா, இரும்புக் குதிரைகள், கரையோர முதலைகள், அகல்யா, ஆனந்தவயல் போன்ற நாவல்கள் இந்த மாதிரி நான் நினைப்பதற்கு ஒரு முக்கியமான காரணம். நான் பாலகுமாரனைப் படிக்க ஆரம்பித்தபோது இந்த நாவல்கள், மற்றும் பல தளங்களில் (பூ வியாபாரி, காய்கறி மார்க்கெட், சென்னையில் நடக்கும் கண்காட்சி, நிலக்கடலை விவசாயம்…) அவர் எழுதியதைப் பார்த்து அவரை தி.ஜா.வை விடவே ஒரு படி அதிகமாக மதிப்பிட்டேன். என்ன தற்செயலோ, அவரது குப்பைகள் எதுவுமே அப்போது கண்ணில் படவில்லை. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல, அந்த முதல் பிரமிப்பு குறைந்துபோய் பாலகுமாரன் எங்கே, தி.ஜா. எங்கே என்பது புரிந்தது.

ஆனந்த வயல் உலகத்தரம் வாய்ந்த நாவல் என்று சொல்வதற்கில்லை. குறைகள் இல்லாத நாவல் இல்லை. மெலோட்ராமா அதிகம். அங்கங்கே வலிந்து sexual references-ஐ புகுத்தி இருக்கிறார். ஆனால் எந்த ஒரு நாவலுக்கும் வேண்டிய அடிப்படைத் தேவையான சுவாரசியம் இருக்கிறது. பாத்திரங்களில், உரையாடல்களில் நிஜம் தெரிகிறது. சம்பவங்களில்தான் கொஞ்சம் செயற்கைத் தன்மை. முதலிலேயே திட்டமிட்டு எழுதாமல் வாராவாரம் தொடர்கதையாக எழுதி இருப்பார் என்று நினைக்கிறேன், அதனால் அவ்வப்போது கதையை எப்படி கொண்டு போவது என்ற குழப்பம் தெரிகிறது. ஆரம்பத்தில் இருக்கும் ஜோர் போகப் போகக் குறைந்துவிடுகிறது.

ஆனந்த வயலின் பெரிய பலம் பாத்திரங்கள். அதுவும் குறிப்பாக நாயகன் பன்னீர்செல்வத்தின் மாமியார். இந்த மாதிரி ஆட்கள் இப்போதும் இருப்பார்கள் என்று தோன்றவில்லை, ஆனால் சிறுவனாக இருந்த காலத்தில் நான் பார்த்து பழகி இருக்கிறேன். பதினைந்து பதினாறு வயதுக்குப் பின் – லுங்கி கட்ட ஆரம்பித்த பின் – நான் அவர்களுக்கு திடீரென்று வேற்று மனிதனாகிவிட்டது அதிசயப்படுத்தியது. அந்த மாதிரி மனிதர்களை தத்ரூபமாக கொண்டு வந்திருக்கிறார். ஒரு கிராமத்து “பெரிய” மனிதர்கள் சூழல், மிகுந்த அன்புள்ள கணவன் மனைவி, “பங்காளிகளுக்குள்” உள்ளுக்குள் புழங்கும் கடுப்பு எல்லாம் நன்றாக வந்திருக்கும்.

அதே போல சில காட்சிகளும் – கப்பலோட்டிய தமிழன் படத்தை இலவசமாகத் திரையிடும் பன்னீர், அடிக்க வந்த செண்பகாவின் உறவினர்களுக்கு சுக்குக்காப்பி வைத்துக் கொடுக்கும் பன்னீரின் அப்பா, கோவிலுக்கு மாமியாரை அழைத்துச் செல்லும் பன்னீர் – நன்றாக இருக்கும்.

இதெல்லாம் இருந்தாலும் கதை கொஞ்சம் பலவீனமானது. கதையில் முடிச்சை எப்படிப் போடுவது என்று சரியாகப் புரியாமல் என்னவோ பழைய கதை, பங்காளி கதை என்றெல்லாம் இழுத்திருப்பார்.

உடுமலை தளத்தில் கிடைக்கிறது. விலை 95 ரூபாய்.

பாலகுமாரனின் படைப்புகளில் முக்கியமான ஒன்று. படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.


தொகுக்கப்பட்ட பக்கம்: பாலகுமாரன் பக்கம்

தொடர்புடைய சுட்டி: பாலகுமாரனின் தளம்

வாடிவாசல் பற்றி அசோகமித்ரன்

asokamithranஹிந்து பத்திரிகையில் அசோகமித்ரன் எழுதி இருக்கும் கட்டுரை. கட்டுரை அப்படி ஒன்றும் பிரமாதம் இல்லை. பிறகு எதற்காக இந்தப் பதிவு என்கிறீர்களா?

சமீப காலமாக வாசிப்பு அனுபவம் என்பது அவரவருக்கு மட்டுமே புரியக் கூடியது, மற்றவர்களுக்கெல்லாம் புரிய வைத்துவிட முடியாது என்று தோன்றிக் கொண்டே இருக்கிறது. இதில் என்ன இழவுக்காக சிலிகான் ஷெல்ஃபும் இன்னொன்றும், படித்தோமா, அத்தோடு விட்டுவிட வேண்டியதுதானே என்று அவ்வப்போது அலுத்துக் கொள்கிறேன். பாருங்கள், அசோகமித்ரன் மாதிரி மேதையே தன் வாசிப்பு அனுபவத்தை அடுத்தவருக்கு உணர வைக்க முடியவில்லை என்றால் நான் எல்லாம் எம்மாத்திரம்?

விமரிசனத்தின் குணமே அதுதானே? ஷேக்ஸ்பியர் நாடகங்கள் இன்னும் பல நூறு வருஷங்கள் படிக்கப்படும், நடிக்கப்படும். கோடி கோடிப் பக்கங்களில் எழுதப்பட்டிருக்கும் நாடக விமர்சனங்களை யார் சீந்துவார்கள்? படைப்பு முக்கியம், விமரிசனம் என்பது சும்மா முதுகு சொரிவதுதான். தன் வாசிப்பு அனுபவத்தை மற்றவருக்கு சொல்ல வேண்டும் என்ற அரிப்புதான். அதன் முக்கியப் பங்களிப்பே நல்ல படைப்பு இது என்ற தகவலை அடுத்தவருக்கு சொல்லுவதுதான். அசோகமித்ரனின் இந்தக் கட்டுரையின் takeaway என்பது என்னைப் பொறுத்த வரையில் ஒரு ஆங்கில மொழிபெயர்ப்பு வந்திருக்கிறது, தமிழ் படிக்கத் தெரியாத நண்பர்களுக்கு வாங்கித் தரலாம் என்பதுதான்.

ka.naa.su.படித்திருக்கிறீர்களா என்ற க.நா.சு. புத்தகத்தைப் பற்றி பல முறை குறிப்பிட்டிருக்கிறேன். அதற்கு முன்னால் சாயாவனம், சில புதுமைப்பித்தன் கதைகள், சில ஜெயகாந்தன் நாவல்கள், பொன்னியின் செல்வன் ஆகியவற்றைப் படித்திருந்தாலும் க.நா.சு. பரிந்துரைகளைப் படிக்கும் முன்னர் தமிழில் நல்ல உரைநடை இலக்கியம் உண்டு என்று நான் உணர்ந்ததில்லை. அந்தப் புத்தகம் என் கண்களைத் திறந்தது. அதற்குப் பிறகுதான் நான் தமிழில் இலக்கியப் படைப்புகளைத் தேடிப் பிடித்து படிக்கத் தொடங்கினேன். ஆனால் க.நா.சு. குறிப்பிட்ட பல புத்தகங்கள் – இதய நாதம், நாகம்மாள், கரித்துண்டு – எனக்கு பெரும் இலக்கியப் படைப்புகள் அல்ல. அழகிரிசாமியின் சிறுகதைத் தொகுப்பில் நல்ல சிறுகதைகளைத் தேட வேண்டி இருக்கிறது. நான் அவரோடு முழுமையாக இசைவது புதுமைப்பித்தன் விஷயத்தில் மட்டும்தான். என்னை விடத் தேர்ந்த வாசகர் என்று நான் கருதும் க.நா.சு. பரிந்துரைக்கும் பல இலக்கியப் படைப்புகள் என்னைப் பொறுத்த வரையில் வெற்றி பெறாதவையே என்றால் அவரது படிப்பு அனுபவம் எனக்கு கைகூடவில்லை, என் படிப்பு அனுபவம் அவருக்கு கைகூடவில்லை என்றுதானே பொருள்?

ஆனால் அதே நேரத்தில் படித்திருக்கிறீர்களா என்னைப் பொறுத்த வரையில் ஒரு seminal புத்தகம்தான். அந்தப் புத்தகத்திலிருந்து நான் பெரும் இலக்கியங்களைப் பற்றி தெரிந்து கொள்ளவில்லைதான்; ஆனால் தமிழில் பெரும் இலக்கியங்கள் உண்டு என்று தெரிந்து கொண்டேன். சுஜாதாவின் இலக்கியப் பங்களிப்பு அவரது தாக்கத்தை விட பல மடங்கு குறைந்தது என்று திடீரென்று புரிந்தது. சாண்டில்யனும் அகிலனும் சிவசங்கரியும் வாசந்தியும்தான் பிற முக்கியத் தமிழ் எழுத்தாளர்கள், தமிழ்ப் புத்தகங்களைப் படிப்பது வெறும் டைம் பாஸ், சிலருக்கு சிகரெட், வெற்றிலை பாக்கு, எனக்கு தமிழ் புத்தகங்கள் என்ற இளக்காரப் பார்வை இந்தப் புத்தகத்தை சுப்ரபாரதிமணியன் நடத்திய செகந்தராபாத் புத்தகக் கண்காட்சியில் வாங்கி அங்கேயே கீஸ் பள்ளித் தாழ்வாரத்தில் உட்கார்ந்து புத்தகத்தை ஒரே மூச்சில் படித்தபோதே செத்துவிட்டது.

ஆனால் இந்தப் புத்தகம் எல்லாரிடமும் இதே விளைவை ஏற்படுத்துமா என்ன? நான் அன்றிருந்த மனநிலையில், எனக்கு ஏற்பட்ட வாசிப்பு அனுபவம் இந்தப் புத்த்கத்தை என் அளவில் உயர்த்துகிறது. இது எல்லாருக்கும் பொருந்த வேண்டும் என்று ஒரு அவசியமும் இல்லை.

என்றாவது, யாராவது ஒருவராவது, இந்தத் தளத்தின் மூலம் சில நல்ல புத்தகங்களைப் பற்றித் தெரிந்துகொண்டேன், அவற்றைப் படித்தேன் என்று சொன்னால் இந்தத் தளம் வெற்றி பெற்றிருக்கிறது என்று உணர்வேன்.

வாடிவாசல், அசோகமித்ரன் என்று ஆரம்பித்து படித்திருக்கிறீர்களா, க.நா.சு. சிலிகன் ஷெல்ஃப் என்று முடித்திருக்கிறேன். யாராவது எடிட்டர் இருந்தால் தலைப்பை மாத்துய்யா என்று கடிந்து கொள்வார். 🙂


தொகுக்கப்பட்ட பக்கம்: References

தொடர்புள்ள சுட்டிகள்:
வாடிவாசல் பற்றி ஆர்வி
படித்திருக்கிறீர்களா புத்தகம்
என் அலுப்புக்கு ஜெயமோகன் பதில்

பாலாஜியின் பரிந்துரைகள்

balaji_srinviasanஎனக்கு ஒரு பிரச்சினை உண்டு. நான் படிக்க வேண்டும் என்று நினைத்திருக்கும் சீரியஸ் எழுத்தாளர்கள் பலரும் ஓரிரு தலைமுறைக்கு முந்தியவர்கள். ஜோசஃப் கான்ராடும் ஜான் கால்ஸ்வொர்த்தியும் என்ன மாதிரி எழுதுவார்கள் என்று ஓரளவு ஐடியா இருக்கும், என்ன புத்தகம் படிக்கலாம் என்று தெரியும். ஆனால்  ஒரு முரகாமியோ, ஜான் இர்விங்கோ என்ன மாதிரி எழுதுவார்கள், எந்த நாவலில் ஆரம்பிக்கலாம் என்று எனக்குத் தெரிவதே இல்லை.

என்னை மாதிரி ஆட்களுக்கு நண்பர் பாலாஜி ஒரு வரப்பிரசாதம். ஒரு முறை பக்கத்தில் ஒரு வாக் போனபோது அவர் பரிந்துரைத்த புத்தகங்கள் இவை. ஓரிரண்டு பழைய புத்தகங்கள் உண்டென்றாலும் அனேகமாக இன்றைய புத்தகங்கள்தான்…

  • Salman Rushdie – Satanic Verses
  • Umberto Eco – Foucault’s Pendulum
  • Vikram Seth – An Equal Music
  • Haruki Murakami – Kafka on the Shore
  • Orhan Pamul – Snow
  • Kazuo Ishiguro – Remains of the Day, Never Let Me Go
  • Monica Ali – Brick Lane
  • Toni Morrison – Beloved
  • Gabriel Garcia Marquez – One Hundred Years of Solitude
  • Michael Ondaatje – English Patient
  • Lewis Carroll – Through the Looking Glass
  • John Irving – Cider House Rules
  • Joseph Conrad – Heart of Darkness
  • Joesph Heller – Catch 22
  • John Steinbeck – East of Eden
    • முடிந்தால் நாடகங்களை சினிமாவாக பார்த்துவிடுவேன் என்றார். அப்படி திரைப்படமாக்கப்பட்ட நாடகங்களில் அவர் குறிப்பிட்டவை:

      அவர் குறிப்பிட்ட புத்தகங்களில் Catch-22 தண்டம் என்று நான் கருதுகிறேன்.

      There was only one catch and that was Catch-22, which specified that a concern for one’s safety in the face of dangers that were real and immediate was the process of a rational mind. Orr was crazy and could be grounded. All he had to do was ask; and as soon as he did, he would no longer be crazy and would have to fly more missions. Orr would be crazy to fly more missions and sane if he didn’t, but if he were sane he had to fly them. If he flew them he was crazy and didn’t have to; but if he didn’t want to he was sane and had to. Yossarian was moved very deeply by the absolute simplicity of this clause of Catch-22 and let out a respectful whistle.

      என்ற ஒரு அற்புதமான பாராவைத் தவிர்த்து புத்தகத்தில் ஒன்றுமே கிடையாது. தவிர்த்துவிடுங்கள் என்றுதான் நான் சொல்வேன். 🙂


      தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்

கௌரி கிருபானந்தன் மொழிபெயர்த்த தெலுகு நாவல் – முள் பாதை

Gowri_Kribanandanஇந்தத் தளத்து வாசகர்களுக்கு கௌரி கிருபானந்தனின் பெயர் பரிச்சயமானதுதான். தெலுகிலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து தெலுகுக்கும் பல ஆக்கங்களை மொழிபெயர்த்திருக்கிறார், மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் யத்தனபூடி சுலோசனாராணி எழுதிய மீனா என்ற நாவலை   தெலுகிலிருந்து முள்பாதை என்ற பேரில் மொழிபெயர்த்திருக்கிறார். இது மின்புத்தகமாக கினிகே தளத்தில் கிடைக்கிறது (பகுதி 1, பகுதி 2). கௌரி அதைப் பற்றிய எழுதிய சிறு அறிமுகம் கீழே.

முள்பாதை

பிரபல தெலுங்கு எழுத்தாளர் திருமதி யத்தனபூடி சுலோசனாராணி அவர்களில் நாவல் மீனா தமிழில் முள்பாதை என்ற தலைப்பில் இரண்டு பகுதிகளாக வந்துள்ளது.

அவருடைய எல்லா படைப்ப்புகளும் எனக்கு விருப்பமானவை என்றாலும் முள்பாதை, மற்றும் சங்கமம் இரண்டும் எனக்கு மிகமிக பிடித்தமானவை.

இனி முள் பாதை பற்றி சிறிய அறிமுகம்.

சில சிறைச்சாலைகள் இருக்கும். அவற்றுக்குக் கதவுகள், பூட்டுக்கள் எதுவும் இருக்காது. கட்டுப்பாடு, அந்தஸ்து என்ற பெயரில் மகள் மீனாவை அது போன்ற கண்ணுக்குத் தெரியாத சிறைச்சாலையில் வளர்த்து வருகிறாள் கிருஷ்ணவேணி.

இன்னொரு குழந்தை பிறந்தால் மகள் மீது இருக்கும் அன்பு குறைந்து விடுமோ, தாயின் அன்பைப் பகிர்ந்தளிக்க வேண்டி இருக்குமோ என்ற அளவுக்கு, மகள் மீது அதீதமான பாசத்தை வைத்திருக்கும் கிருஷ்ணவேணி மகளுடைய வருங்கால கணவனை தானே முடிவு செய்கிறாள். மாப்பிள்ளை சாரதியை மீனாவுக்கு முதல் பார்வையிலேயே பிடிக்கவில்லை.

வாழ்க்கையில் நடக்கும் எல்லா விஷயங்களும் நினைவில் இருக்கப் போவதில்லை. ஆனால் சிறு வயதில் மாமி கிருஷ்ணவேணி செய்த அவமானம் கிருஷ்ணன் மனதில் ஆறாத வடுவாய்த் தங்கி விடுகிறது. ஆனால் மாமாவின் மகள் மீனாவைப் பார்த்ததும் அவன் மனதில் இனிமையான உணர்வு ஏதோ ஒன்று மலர்கிறது.

இவர்களின் பிடிவாதங்கள், ஏமாற்றங்கள் மீனாவின் வாழ்க்கையை எப்படி திசை திருப்புகின்றனவோ தெரிந்து கொள்ள “முள்பாதை” நாவலை கையில் எடுங்கள்.


தொகுக்கப்பட்ட பக்கம்: கௌரி பதிவுகள்