ஜெயமோகனின் ‘வெண்முரசு’

மகாபாரதம் – தமிழில் – நாவல் வடிவில்
10 வருடங்கள் – தினமும் இணையத்தில்
2014 புத்தாண்டு முதல்…

Venmurasu

வியாசனின் பாதங்களில் – ஜெயமோகன் .

இந்தப்புத்தாண்டு முதல் ஒருவேளை என் வாழ்க்கையில் இதுவரை நான் ஏற்றுக்கொண்டதிலேயே மிகப்பெரிய பணியைத் தொடங்குகிறேன். மகாபாரதத்தை ஒரு பெரும் நாவல்வரிசையாக எழுதவிருக்கிறேன்.
திட்டத்தை நினைத்தால் எனக்கு பிரமிப்பாகவே இருக்கிறது. ஐநூறு பக்கங்கள் கொண்ட பத்து நாவல்கள். இன்றிலிருந்து ஒவ்வொருநாளும் ஓர் அத்தியாயம் என பத்துவருடங்கள். ஆனால் எந்த பெரும் பயணமும் ஒரு காலடியில்தான் தொடங்குகிறது. தொடங்கிவிட்டால் அந்தக் கட்டாயமும், வாசகர்களின் எதிர்வினைகளும் என்னை முன்னெடுக்குமென நினைக்கிறேன். இப்போது தொடங்காவிட்டால் ஒருவேளை இது நிகழாமலேயே போய்விடக்கூடும்.
இது ஒரு நவீன நாவல். தொன்மங்களையும் பேரிலக்கியங்களையும் மறு ஆக்கம் செய்யும் இன்றைய இலக்கியப்போக்குக்குரிய அழகியலும் வடிவமும் கொண்டது. ஓர் இலக்கிய வாசகனுக்கு இது உள்விரிவுகளை திறந்துகொண்டே செல்லக்கூடும். ஆனால் எந்த ஒரு எளிய வாசகனும் உணர்ச்சிகரமான ஈடுபாட்டுடன் வாசிக்கக்கூடியதாகவே இது இருக்கும். மகாபாரதத்தின் மகத்தான நாடகத்தருணங்களையே அதிகமும் கையாளும். அதன் கவித்துவத்தையும் தரிசனத்தையும் தீண்டிவிடவேண்டுமென்ற கனவுடன் இது எழும். வியாசனெழுதிய ஒவ்வொன்றையும் இன்று இங்கே என உள்வாங்கிக்கொள்ளவேண்டுமென இது முயலும்.
இந்நாவல் மகாபாரதத்தை மட்டுமே ஆதாரமாகக் கொண்டதல்ல. மகாபாரதக் கதைகளையும் கதைமாந்தர்களையும் வெவ்வேறு திசைகளில் வளர்த்தெடுத்த பிற புராணங்களையும் கருத்தில்கொண்டிருக்கிறது. மகாபாரதத்துக்குப்பின் குறைந்தது ஈராயிரம் வருடங்கள் கழித்து எழுதப்பட்ட பாகவதம், மேலும் ஐநூறு வருடங்கள் கழித்து உருவான தேவிபாகவதம் ஆகியநூல்களின் மகாபாரதக் கதைகளும் பல நாட்டார் பாரதக்கதைகளும் இந்நாவலில் உள்ளன என்பதை வாசகர்கள் காணலாம்.
 இது ஒவ்வொருநாளும் கொஞ்சமேனும் வாசிக்கக்கூடியவர்களுக்கான படைப்பு. ஒவ்வொருநாளும் வாசித்தவற்றைப்பற்றி தியானிக்கக்கூடியவர்களுக்கானது. அவர்களின் வாழ்க்கையை மேலும் சிலவருடங்கள் வியாசனின் மானுடநாடகம் ஒளியேற்றுவதாக! அவர்கள் தங்கள் வியாசனை எனதுவியாசனிலிருந்து கண்டுகொள்ள நேர்வதாக!
அன்புடன்

ஜெயமோகன்

www.jeyamohan.in

விஷ்ணுபுரம் விருது 2013

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அறிவிப்பு

தமிழின் மூத்த படைப்பாளுமைகளைக் கவுரவிக்கும் பொருட்டு ‘விஷ்ணுபுரம் விருது’ கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பில் வழங்கப்படும் இந்த விருது பாராட்டு கேடயமும், ரூ.50,000/- ரொக்கப் பணமும் உள்ளடக்கியது. இந்த ஆண்டு முதல் விருதுத் தொகை ரூ.1,00,000/- ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

thelivatthai_joseph

2013-ஆம் ஆண்டிற்கான விருது இலங்கை மலையகத்தைச் சேர்ந்த மூத்த தமிழ்ப் படைப்பாளியான தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. டிசம்பர் 22-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோவை நாணி அரங்கில் (மணி ஸ்கூல், பாப்பநாயக்கன்பாளையம்) நடைபெற இருக்கும் விருது விழாவில் இந்திரா பார்த்தசாரதி, பாலசந்திரன் சுள்ளிக்காடு, ஜெயமோகன், இயக்குனர் பாலா, சுரேஷ்குமார் இந்திரஜித், ரவி சுப்ரமண்யம் உள்ளிட்ட ஆளுமைகள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்க இருக்கிறார்கள்.

விழா அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளோம். தாங்கள் வருகை தந்து விழாவினைச் சிறப்பிப்பதோடு, விழா குறித்த செய்தியினை தங்களது பத்திரிகை / தொலைக்காட்சி / வலைதளம் / முகநூல் – ஆகியவற்றில் வெளியிடச் செய்து உதவுமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி.

மிக்க அன்புடன்,

செல்வேந்திரன்

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
900 393 1234

விஷ்ணுபுரம் விருது இதுவரை:

2010-ஆம் ஆண்டு – ஆ. மாதவன்

2011-ஆம் ஆண்டு – பூமணி

2012-ஆம் ஆண்டு – தேவதேவன்

2013-ஆம் ஆண்டு – தெளிவத்தை ஜோசப்

தெளிவத்தை ஜோசப்: ஓர் எளிய அறிமுகம்:

தெளிவத்தை ஜோசப்பின் இயற்பெயர் சந்தனசாமி ஜோசப். பெப்ரவரி 16, 1934 இலங்கை தோட்டம் ஒன்றில் பிறந்தவர்.கொழும்பு நகரில் ஒரு சாக்லேட் நிறுவன ஊழியராக இருந்து ஓய்வுபெற்றார்.இப்போது கொழும்பு நகரில் வசிக்கிறார்.

தெளிவத்தை ஜோசப்பை கவனத்துக்குக் கொண்டுவந்த முதல் நாவல் 1974ல் வெளிவந்த காலங்கள் சாவதில்லை. வீரகேசரி வெளியீடாக இந்நாவல் வெளிவந்தது. 1979ல் வெளிவந்த நாமிருக்கும் நாடே சிறுகதைத் தொகுதிக்காக இலங்கையின் சாகித்திய விருது பெற்றார்.

இலங்கையின் மலையக இலக்கியம் என்ற இலக்கிய வகைமையை நிலைநாட்டிய முன்னோடி என தெளிவத்தை ஜோசப்பைச் சொல்லலாம். ‘மலையகச் சிறுகதைகள்’ ‘உழைக்கப் பிறந்தவர்கள்’ என்ற இரு தொகைநூல்கள் வழியாக மலையக இலக்கியத்தை கவனப்படுத்தியிருக்கிறார். 2000 ஆம் ஆண்டில் வெளிவந்த இவரது ‘மலையகச் சிறுகதை வரலாறு’ அவ்வகையில் முக்கியமான கொடை.

தெளிவந்தை ஜோசப்பின் குடை நிழல் என்ற நாவல் 2010 ல் வெளிவந்தது. இந்நாவல் கோமல் சுவாமிநாதன் நடத்திய சுபமங்களா மாத இதழும் தேசிய கலையிலக்கியப்பேரவையும் இணைந்து நடத்திய இலக்கியப்போட்டியில் பரிசுபெற்ற படைப்பு. இப்போது எழுத்து பிரசுரம் அதை தமிழகப் பதிப்பாக வெளியிடவிருக்கிறது.

தெளிவத்தை ஜோசப்பின் படைப்புகள்:

  1. காலங்கள் சாவதில்லை (1974, நாவல், வீரகேசரி வெளியீடு)
  2. நாமிருக்கும் நாடே (1979, சிறுகதைகள், வைகறை வெளியீடு)
  3. பாலாயி (1997, மூன்று குறுநாவல்கள், துரைவி வெளியீடு)
  4. மலையக சிறுகதை வரலாறு (2000, துரைவி வெளியீடு)
  5. இருபதாம் நூற்றாண்டின் ஈழத்து இதழியலும் இலக்கியமும் (மூன்றாவது மனிதன் வெளியீடு)
  6. குடை நிழல் (நாவல், 2010)

தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள், தெளிவத்தை ஜோசஃப்

தை பிறந்தால் வழி பிறக்கும்

மீண்டும் பொங்கல் வாக்கில் ரெகுலராக எழுத ஆரம்பிக்கலாம் என்று நினைத்திருக்கிறேன் – touchwood.