பாலகுமாரனின் இதிகாச, தொன்ம, அமானுஷ்யக் கதைகள்

பொதுவாக புத்தகப் பரிந்துரைகள்தான் இங்கே. இன்று புத்தகத் தவிர்த்துரை! பாலகுமாரனின் இதிகாசம், தொன்மம், மகான்களின் வாழ்க்கை, அமானுஷ்யக் கதைகளைப் அனேகமாகத் தவிர்த்துவிடலாம்.

பாலகுமாரன் படைப்புகளில் வெகு சிலவே இலக்கியம். அவர் தொன்மங்கள், இதிகாசங்கள், மகான்கள் பற்றி எழுதுவதெல்லாம் அனேகமாக இலக்கியத் தரத்தோடு இருக்காது. முதல் காரணம் அலுப்புத் தட்டுவதுதான். சுவாரசியம் என்பது குறைவாகவே இருக்கும். வாய்ப்பு கிடைத்தால் உபதேசமாக பொழிந்துவிடுவார். நிறைய அலட்டல், pretentiousness தெரியும். ஏதோ கோவிலில் போரடிக்கும் கதாகாலட்சேபம் கேட்பது போல இருக்கும். சுருக்கமாகச் சொன்னால் இவை மறுவாசிப்புகள், மறு ஆக்கங்கள், ஏன் சுவாரசியமான கதைகள் கூட அல்ல. பக்த விஜயம் (பக்தி இயக்கத்தின் பெரும் தலைகளின் வாழ்க்கைக் குறிப்புகள் – நாமதேவ், சோகாமேளர், துக்காராம், மீராபாய், கோராகும்பார், சாந்த சக்குபாய், ஜனாபாய்…) கூட இவரது பல மகான்களின் கதைகளை விட படிக்கக் கூடிய விதத்தில் இருக்கும். இவற்றின் ஒரே பயன் நமக்கே மறந்து போயிருக்கும் சில தொன்மக் கதைகளை நினைவு கூர்வதுதான். தொன்மங்களில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு என்பதால் நான் கையில் கிடைப்பதை விடாமல் படித்திருக்கிறேன். ஆனால் இவற்றில் ஒன்றைக் கூட நான் பரிந்துரைக்க மாட்டேன்.

இவற்றைத் தவிர அமானுஷ்யக் கூறு உள்ள கதைகளை நிறைய எழுதித் தள்ளி இருக்கிறார். பொதுவாக அவை மகா மோசமாக இருக்கும். மந்திரங்களின் மகிமைகள், அந்தணர்கள் (பிராமணர்கள் இல்லை அந்தணர்கள்) வேதம், யோகம், பூஜை, மந்திரம் இத்யாதியை கருத்தோடு பேண வேண்டிய அவசியம், ஏதோ ஒரு குரு அல்லது கடவுள் வழிநடத்திப் போவது என்று ஒரு தீம் வரும். பல சமயம் குழந்தைத்தனமாக பிரார்த்தனை செய், ஆத்தாவுக்குப் படையல் வை, கணபதி உச்சிஷ்ட மந்திரம் ஜபி, உனக்கு எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்ற ரேஞ்சில்தான் கதை இருக்கும். அவரது சொந்த நம்பிக்கையாக இருக்க வேண்டும், அதை அம்புலி மாமாத்தனக் கதைகளில் எழுதுவார். இவற்றில் அநேக கதைகள் தவிர்க்க வேண்டியவையே. Wish fulfilment, அவர் கண்ட பகல் கனவு எல்லாம் கதையாகிவிடுமா? சில சமயம் இந்தக் கதைகளில் பிற கூறுகள் இணைந்து வரும், உதாரணமாக மஞ்சக்காணியில் பட்டிமன்றக் காட்சிகள், எம்ஜிஆர் ஒரு ஊனமுற்ற பெண் வீட்டுக்குப் போய் பசும்பால் குடித்த காட்சிகள். அவை மட்டுமே கொஞ்சமாவது சுமாராக இருக்கும்.

ஆனால் இவற்றிலும் ஒரு ஜெம் உண்டு. என்னருகில் நீ இருந்தால் கச்சிதமான, சிறப்பான கதை. ராஜராஜ சோழனின் படைத்தலைவன் காரி குளிப்பாகை இப்போது தாம்பரத்தில் பிறந்திருக்கிறான். அவனுக்கு ராஜராஜன், மற்றும் அவரது சபையினரின் ஆவிகள் அறிவுரை சொல்லி அவனைப் பிறவிப் பெருங்கடலிலிருந்து மீட்கின்றனர். இதற்கு நான் எழுதி இருக்கும் கதை சுருக்கம் சரியில்லை, நேராக புத்தகத்தை படித்துக் கொள்ளுங்கள். இதை பாலகுமாரனின் சரித்திரக் கதை என்றும் வகைப்படுத்தலாம். இப்படி ஒரு முத்துக்காக நூறு மாத நாவல் படிக்க வேண்டி இருப்பது பெரிய கஷ்டம்!

இன்னும் ஒரு படிக்கக் கூடிய கதை நினைவு வருகிறது. கதை பெயர்தான் மறந்துவிட்டது. (கடல் பாலம்? கடலோரக் குருவிகள்?) அம்மன் வழிபாடு பற்றி ஒரு கதை. ஆரம்பத்தில் ஏதோ பைப்பிலிருந்து தண்ணீர் இழுப்பதோடு ஆரம்பிக்கும். இறுதியில் அம்மன் சிலையோடு ஓடிவிடுவார்கள். புடவை கட்டிக் கொண்டு அம்மனை வழிபடுவது என்றெல்லாம் வரும்.

கீழே கண்ட குறிப்புகள் புத்தகங்களைத் தவிர்க்கத்தான்.

இதிகாசக் கதைகள்

உத்தமன்: பரசுராமர், விஸ்வாமித்திரர் தொன்மங்களைத் திருப்பிச் சொல்கிறார். படிக்கலாம். இதிகாசக் கதைகளில் எதையாவது படித்தே ஆக வேண்டும் என்றால் இதைத்தான் பரிந்துரைப்பேன்.

பட்டாபிஷேகம்: மீண்டும் விஸ்வாமித்திரர் தொன்மம். விஸ்வாமித்ரர் வசிஷ்டரோடு பிணங்கி பிரம்ம ரிஷியானது, மற்றும் பாலகாண்டத்து ராம லட்சுமணர்களை வழி நடத்தியது. இதையெல்லாம் படிப்பதை விட காலட்சேபம் கேட்கலாம்.

கடவுள் வீடு: மகாபாரதப் பித்து உள்ள எனக்கே அலுப்பு தட்டும்படி எழுதி இருக்கிறார். விதுரனின் கதை, எக்கச்சக்க உபதேசம்.

கிருஷ்ண அர்ஜுனன்: கிருஷ்ணன் ஒரு கந்தர்வனின் தலையை தன காலடியில் வீழ்த்துவதாக சபதம் செய்ய அவனைக் காப்பாற்றுவதாக அர்ஜுனன் வாக்கு கொடுத்துவிட்டு கிருஷ்ணனோடு போர் புரிவதாக ஒரு கதை உண்டு. அதை எழுதி இருக்கிறார், தவிர்க்கலாம்.

என்னுயிர்த் தோழி: வசுதேவர்-தேவகி-கம்சனைப் பற்றி ஒரு மாத நாவல். தவிர்க்கலாம்.

அம்பையின் கதை: அம்பையின் கதையேதான், சொல்லும்படி ஒரு விஷயமும் இல்லை. தவிர்க்கலாம்.

பெண்ணாசை: பீஷ்மர் கதையை ஜாதியை வைத்து மறு வாசிப்பு செய்திருக்கிறார். அதாவது சத்யவதியின் படகுக்கார ஜாதியினர் க்ஷத்ரியர்களால் நசுக்கப்பட்டதாகவும், அவர்களின் துயர் தீர்க்கவே தங்கள் ரத்தம் உள்ள வாரிசு ஆட்சிக்கு வரவேண்டும் என்று கேட்டதாகவும், இதை பீஷ்மரும் புரிந்துகொண்டதாகவும் கதை. சரியாக வரவில்லை. கல்யாணம் ஆனபிறகு சத்யவதி க்ஷத்ரியர் தவிர்த்த மற்ற ஜாதியினருக்கு ஏதாவது செய்ததாக பாரதத்தில் இருந்திருந்தால் கதையின் நம்பகத்தன்மை கூடி இருக்கும். பஸ்ஸில் படிக்கலாம்.

இதை விட நான் எழுதிய “மீன்வாசம்” சிறுகதை நன்றாக இருக்கும். ஜெயமோகன் எழுதி வரும் வெண்முரசிலும் க்ஷத்ரியர்-பரதவர் பற்றி எல்லாம் வருகிறது. அது மலை என்றால் என் கதை சமவெளி, இது மடு.

தனிமைத் தவம்: – கீசக வதம் கதை.

செம்மை: பாரதப் போரைத் தடுக்க வழி உண்டா என்று கண்ணன் கேட்க, சகதேவன் உன்னைக் கட்டிப் போட்டால் தடுக்கலாம் என்று சொன்னானாம், செய்தும் காண்பித்தானாம். அதை போரடிக்கும் விதத்தில் எழுதி இருக்கிறார்.

கர்ணனின் கதை: – கர்ணனைப் பற்றியும் ஒரு கதை உண்டு, பெரிதாக சொல்ல எதுவுமில்லை.

திருவடி: வாமன அவதாரக் கதையை இவ்வளவு தூரம் அலுப்புத் தட்டும்படி யாரும் சொல்லி நான் பார்த்ததில்லை. அலட்டல் வேறு நிறைய தெரிகிறது.

நாரதர் கதைகள்: எல்லா கதைகளிலும் நாரதரைப் புகுத்தி கடுப்படிக்கிறார். பசுவைப் பற்றி படித்துவிட்டு வந்த மாணவனிடம் தென்னைமரம் பற்றி கட்டுரை எழுதச் சொன்னால் பசுவைப் பற்றி எழுதிவிட்டு தென்னைமரத்தில் அந்தப் பசுவை கட்டினார்கள் என்று முடித்துவிட்டானாம். அந்த மாதிரி எந்தக் கதையாக இருந்தாலும் நாரதர் வந்து விசாரித்தார் என்று எழுதிவிடுகிறார்.

கதை கதையாம் காரணமாம்: பல் தொன்மக் கதைகளை மீண்டும் சொல்கிறார்.

தொன்மக் கதைகள்

ஆலமரம்: பாடகச்சேரி ராமலிங்கம் பற்றி ஒரு கதை

அன்பரசு: மாணிக்கவாசகர்தான் கதையின் ஹீரோ. நரியை பரியாக்குவதும் மீண்டும் நரியாக்குவதும்தான் கதையின் முக்கிய நிகழ்ச்சி. லாஜிக் இல்லை. குதிரை வாங்கினால் அதைக் கண்டு மற்ற மன்னர்கள் பொறாமைப்படுவார்கள், குதிரை வாங்க வரி விதித்து மக்கள் கஷ்டப்படுவார்கள் என்றெல்லாம் யோசிக்கும் மணிவாசகர் மற்ற அரசுகளை பயமுறுத்த 1008 தேர், சக்கரம் வீசும் தனிப்படையை மட்டும் உருவாக்குவாராம். ஏன்யா அப்போது பிற மன்னர்கள் பொறாமைப்படமாட்டார்களா இல்லை படைக்கு சம்பளம் கொடுக்க வரி எல்லாம் வேண்டாம், நேராக என்னிடமிருந்தே வாங்கிக் கொள்ளலாம் என்று சிவபெருமான் சொன்னாரா? திருவிளையாடல் புராணத்தையோ, பெரிய புராணத்தையோ நேரடியாக படிக்கலாம், இதை தவிர்த்து விடலாம்.

சக்ரவாஹம்: துகாராம் கதை

என் கண்மணித் தாமரை: பெயர் சரிதானா என்று நிச்சயமாகத் தெரியவில்லை. அபிராமிபட்டர் பற்றிய கதை. இதுதான் இந்த மாதிரி கதைகளில் சிறந்தது. That’s not saying much.

காதல் அரங்கம்: உறங்காவில்லி-பொன்னாச்சி கதை.

காதற்பெருமான்: அருணகிரிநாதரின் கதை. பஸ்ஸில் படிக்கலாம்.

முதிர்கன்னி: அவ்வையின் கதை போரடிக்கும் விதத்தில்

ஒரு சொல்: ஒரு legend உண்டு – முஸ்லிம்களால் கைப்பற்றப்பட்ட ஒரு பெண் மீண்டும் வந்து தன் கணவன் தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்கிறாள். கற்பிழந்த பெண்ணாயிற்றே என்று குழப்பம். கடைசியில் ஒரு “மகானிடம்” கேட்கிறார்கள். அவர் சொல்கிறார் ராமா ராமா ராம என்று மூன்று முறை சொல்லி குளத்தில் முங்கி எழுங்கள் என்று. மகானின் கூட இருப்பவர் கோபிக்கிறார், ராம நாமத்தின் சக்தி அறியாதவனா நீ, மூன்று முறை எதற்கு, ஒரு முறையே போதுமே என்று. இந்த நிகழ்ச்சியை போதேந்திரர் பார்ப்பதாக பாலகுமரான் இந்த கதையை எழுதி இருக்கிறார். தவிர்க்கலாம்.

பேய்க்கரும்பு: பட்டினத்தார் கதையை வைத்து போரடிக்கிறார்.

பொன்வட்டில்: தொண்டரடிப்பொடியாழ்வார்

புருஷ வதம் கதை பெயர் நினைவில்லை. பழையனூர் நீலி. நீலியை விட்டுவிட்டு அவள் கணவன் புவனபதியின் பிரதாபம்தான் பெரிதாக இருக்கிறது. தவிர்த்துவிடுங்கள்.

பெரிய புராணக் கதைகள்: அனேகமாக நேரடியாக பெரிய புராணக் கதைகளை திருப்பி சொல்கிறார். சில சமயங்களில் கோணத்தை மாற்றுகிறார். எடுத்துக்காட்டாக சிறுத்தொண்டர் கதையை வீட்டு வேலைக்காரி சொல்கிறார். இப்படி கோணத்தை மாற்றுவது நல்ல ஐடியா, ஆனால் அதை சரியாக செயல்படுத்த வேண்டுமே? என்னை பெரிதாகக் கவரவில்லை.

சிநேகிதன்: சுந்தரர் நாயன்மார்களில் சுவாரசியமானவர். அவருக்கு மட்டும் சிவன் தூது போவானேன்? அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் போல உதவி செய்வானேன்? இந்த சுவாரசியமான விஷயத்தை போரடிக்கும் விதத்தில் எழுதி இருக்கிறார்.

தங்கக் கை: சேஷாத்ரி சுவாமிகள் பற்றி கொஞ்சம்.

அமானுஷ்யக் கதைகள்

சொர்க்கம் நடுவிலே: கலந்து கட்டி அடிக்கிறார். இறப்புக்குப் பிறகு என்ன என்ற பௌராணிக யூகங்களை எழுதி இருக்கிறார். ஒன்றும் பிரமாதப்படுத்திவிடவில்லை என்றாலும் அந்தத் தளத்தைத் தொட்டவர்கள் மிகக் குறைவு. எனக்குத் தெரிந்து சம்பத்தின் இடைவெளி மட்டுமே.

திருப்பூந்துருத்தி: இந்தப் புத்தகத்திலும் குறிப்பிட வேண்டிய அம்சம் அனேகமாக இறந்து உயிர் பிழைக்கும் ஒருவனின் out of body அனுபவங்கள் மட்டுமே. ஆனால் உடனே சாமியார், கூடுவிட்டுக் கூடு பாய்வது என்று போய்விடுகிறார்.

காசும் பிறப்பும்: இது ஓரளவு பிரபலமான நாவல்.  அவர் கண்ட பகல் கனவு மட்டுமே. சும்மா உட்கார்ந்திருக்கும் நேரத்தில் தான் கர்நாடகத்தில் ஒரு விவசாயியாக, தஞ்சாவூரில் ஒரு நாதஸ்வரக்காரனாக, திருப்பதியில் ஒரு வேத விற்பன்னனாக, ஒரு சாமியாராகப் பிறந்திருந்தால் வாழ்க்கை எப்படிப் போயிருக்கும் என்று யோசித்து அதை தன் நான்கு பிறவிகளாக எழுதி இருக்கிறார். Pretentiousness, அலட்டல் அதிகம். தவிர்க்கலாம்.

மஞ்சக்காணி: எம்ஜிஆர் அரசியல், supernatural ஆவி, காமம் என்று பல ஃபேவரிட் தீம்கள் இணைந்து வருகின்றன. பட்டிமன்றத்தில் தூள் பரத்தும் மாதவி; காதலன்+முறைப்பையன் செல்வா; செல்வாவின் அமைச்சர் அப்பா; அப்பா கைவிட்ட செல்வாவின் அம்மா; அம்மாவுக்கு சொந்தமான நிலத்தில் அலையும் ஆவிகள் என்று கதை போகிறது. படிக்கலாம். குறிப்பாக மதுரையில் எம்ஜிஆர் ஒரு ஊனமுற்ற பெண் வீட்டுக்குப் போய் பசும்பால் குடித்த காட்சிகள் நன்றாக வந்திருக்கின்றன.

ஆயிரம் கண்ணி: ஒரு சின்ன neighborhood. அங்கே ஆயிரம் கண்ணி அம்மனின் கோவில். கோவிலில் கும்பிடுபவர்கள் நன்றாக இருக்கிறார்கள். இதெல்லாம் ஒரு கதை என்று எழுதுகிறார்.

அருகம்புல்: ஆவியாக இருக்கும் ஒரு அம்மா இன்று வீடு கட்டும்/இடிக்கும் இருவரை சேர்த்து வைக்கிறாள். தவிர்க்கலாம்.

அவரும் அவளும்: சீனிவாசன் ஊர் ஊராய் சுற்றுவாராம். போகிற ஊரில் எல்லாம் யாராவது வந்து வீட்டுக்குக் கூட்டிப் போய் உபசரிப்பார்களாம். இதில் ஒரு கோவில் புராணம் வேறு. வாசகர்கள் மேல் என்ன கோபமோ இவ்வளவு மோசமாய் எழுதுகிறார்.

தாசி: இந்த ஜன்மத்தில் பியூட்டி பார்லர். போன ஜன்மத்தில் தாசி. பாலகுமாரனுக்கு இந்த தாசி obsession விடாது.

எட்ட நின்று சுட்ட நிலா: பாபு ஞானி ஆகிவிடுகிறான். அவன் குடும்பத்தில் யாரும் நல்ல வழியில் போகவில்லை. அக்கா ஊர் மேய்கிறாள், அப்பா கோவில் சொத்தை திருடுகிறார்… தவிர்க்கலாம்.

பூசுமஞ்சள்: மஞ்சள் வியாபாரம் செய்து வாழும் குடும்பம் ஒன்று விட்ட அண்ணனால் ஏமாற்றப்படுகிறது. அப்பா இறக்க, அம்மா ஏறக்குறைய சூனியம் வைத்து அண்ணன் குடும்பம் அழிகிறது. இதெல்லாம் ஒரு கதையா? பாலகுமாரன் வீணாக தன் தனிப்பட்ட மத, அமானுஷ்ய நம்பிக்கைகளை பரப்புகிறார்.

புஷ்பக விமானம்: பல கதைகளை கலந்து கட்டி அவியலாக்கி கெடுத்துவிட்டார். பட்டிக்காட்டு வேளாளர் குடும்பத்திலிருந்து டாகடர் ஆகும் பையனின் கதை, வீராயி என்ற நாட்டார் தெய்வம், தலித் ஜாதியினர் ஒடுக்கப்படுதல் என்று பல கோணங்கள். தவிர்க்கலாம்.

வாலிப வேடம்: பத்மினி என்ற பெண்ணின் மேல் சமயபுரம் மாரியம்மன் வருகிறாள். அதனால் முரளி என்ற, எம்.எஸ். சுவாமிநாதனிடம் வேலை செய்யும் ஒரு வாலிபனின் வாழ்க்கை மாறுகிறது. திருமங்கலக்குடி என் ஒன்று விட்ட சித்தியின் ஊர். சித்தி கல்யாணத்துக்கு சிறு வயதில் அங்கே போயிருக்கிறேன். இந்த கதையின் தளம் அந்த ஊர்தான். நாஸ்டால்ஜியா! தவிர்க்கலாம்.

தேடிக் கண்டுகொண்டேன் என்ற அபுனைவையும் பற்றி இங்கேயே எழுதிவிடுகிறேன். பல ஊர் கோவில்கள் பற்றி எழுதி இருக்கிறார்.

ஸ்ரீரமண மஹரிஷி பற்றியும் ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார்.

சுருக்கமாகச் சொன்னால் தொன்மம், மகான், இதிகாசம், அதிசய நிகழ்ச்சிகள் பற்றிய பாலகுமாரன் கதை என்றால் தவிர்த்துவிடுங்கள் – என்னருகே நீ இருந்தால் தவிர.

தொகுக்கப்பட்ட பக்கம்: பாலகுமாரன் பக்கம்

ஈ.வெ.ரா.வுடன் ஒரு பேட்டி (updated)

கிட்டத்தட்ட ஐம்பது வருஷங்களுக்கு முன்னால் ஈ.வெ.ரா.வை விகடன் எடுத்த பேட்டியை இங்கே மீள்பதிக்கிறேன். விகடனுக்கு நன்றி! வைக்கம் போராட்டம், சேரன்மாதேவி குருகுல விவகாரம், காங்கிரசிலிருந்து விலகியது, ராஜாஜியுடன் நட்பு என்று பலதையும் பற்றிப் பேசுகிறார். பேட்டியை சாவி எடுத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். கூடவே மணியன் இருந்திருக்கிறார். இதன் இரண்டாவது பாகத்தைக் கொடுத்த ரெங்கசுப்ரமணிக்கு நன்றி! இதன் தொடர்ச்சியும் கிடைத்தால் நன்றாக இருக்கும்…

இந்தப் பேட்டியை இந்தத் தளத்தில் பதிக்க ஒரே காரணம்தான். சர்ச்சைக்குள்ளான சில விஷயங்கள் அவர் வாயாலேயே தெளிவாகின்றன. அதனால் இந்தப் பேட்டிக்கு ஆவண முக்கியத்துவம் இருக்கிறது.

  • இணையத்தில் அடிக்கடி வைக்கத்தில் ஈ.வெ.ரா. என்னதான் செய்தார் என்ற கேள்வியைப் பார்க்கிறேன். வைக்கம் போராட்டம் அதன் முதல் தலைவர்களின் சிறைவாசத்தால் கொஞ்சம் துவண்டிருந்தபோது இவரை அழைத்து வழி நடத்தச் சொல்லி இருக்கிறார்கள், இவரும் விடாமல் போராடி இருக்கிறார். (ஆனால் இறுதி வரை இல்லை). அதாவது இவருக்கும் ஒரு முக்கிய பங்கு உண்டு, ஆனால் இவர் முதன்மைத் தலைவர் இல்லை.
  • சேரன்மாதேவி குருகுல விஷயத்தில் தவறு வ.வே.சு. ஐயருடையதே. ஆனால் என் கண்ணில் அதற்கு அவர் கொடுத்த விலை மிக அதிகம். அந்த விலை அவர் செய்த தவறுக்காக அல்ல, அன்றைய பிராமணர்களின் மேட்டிமைத்தனம் மற்றவர்களை எத்தனை தூரம் பாதித்திருக்கிறது என்பதை உணராமல் இருந்ததற்காக. (For his insensitiveness.)
  • எதையும் பிராமணர்-அபிராமணர் வியூகத்திலிருந்தே ஈ.வெ.ரா. பார்த்திருக்கிறார். ஸ்வராஜ்யக் கட்சியை காந்தி பொறுத்துக் கொண்டதற்கு உண்மையான காரணம் ஜஸ்டிஸ் கட்சி ஆட்சிக்கு வராமல் இருக்கத்தான் என்கிறார். சென்னை மாகாணத்தில் ஜஸ்டிஸ் கட்சிதான் ஆட்சிக்கு வந்தது. பிற மாகாணங்களில்தான் – குறிப்பாக வங்காளத்தில் சி.ஆர். தாஸ், இன்றைய உத்தரப் பிரதேசத்தில் மோதிலால் நேரு – ஸ்வராஜ்யக் கட்சிக்கு கொஞ்சமாவது தாக்கம் இருந்தது.

ரெங்கசுப்ரமணி கொடுத்த இரண்டாவது பகுதியிலிருந்து என் கண்ணில் முக்கியமாகத் தெரிபவை:

  • ராஜாஜி தன் பகுதி நேரக்கல்வி (குலக்கல்வி திட்டம் என்று பிரபலமாகத் தெரிவது) திட்டத்தின்போது 6000 பள்ளிகளை மூடினார் என்று ஈ.வெ.ரா. திட்டவட்டமாகச் சொல்கிறார். மறைந்த டோண்டு அப்படி ஒன்று நடக்க வாய்ப்பே இல்லை என்று அடிக்கடி சொல்வார்.
  • ராஜாஜியோடு நெருங்கிய நட்பு இருந்திருக்கிறது. கூடவே இருக்கும் ஜஸ்டிஸ் கட்சி முக்கியஸ்தர்கள் யார் யாரோ சொல்லியும் மந்திரி சபை அமைக்கமாட்டேன் என்று உறுதியாக நின்றவர் ராஜாஜி சொன்னதும் சரி என்று கிளம்பி இருக்கிறார். மற்ற தலைவர்கள் ஒத்துழைக்காததால்தான் மந்திரிசபை அமைக்கவில்லை

ஓவர் டு விகடன்!

திருச்சி பெரியார் மாளிகைக்குள் காலடி எடுத்துவைக்கும்போதே, எங்கள் பார்வையில் பட்ட கறுப்புச் சட்டை இளைஞர் “ஐயா உள்ளேதான் இருக்கார். நீங்க வரப்போறீங்கனு சொல்லியிருக்கேன். உள்ளே போங்க” என்று புன்சிரிப்போடு வழி காட்டுகிறார்.

உள்ளே கட்டிலின் மீது சம்மணமிட்டு அமர்ந்திருந்த பெரியாரைப் பார்த்ததும் “வணக்கம் ஐயா!” என்று கும்பிடுகிறோம்.

“வாங்க வாங்க, ரொம்ப சந்தோசம்” எங்களை மிக்க மகிழ்ச்சியுடன் வரவேற்றபடியே “இப்படி உட்காருங்க” என்கிறார்.

சாதாரண வெள்ளைப் பனியன். நாலு முழம் வேட்டி. வயிற்றின் நடுப் பாதியில் வேட்டியின் இரு முனைகளையும் பனியனுக்கு மேல் கட்டியிருக்கிறார். அந்த முனைகள் இரண்டும் அவ்வப்போது தளர்ந்துபோகும் நேரங்களில் கைகள் தாமாகவே அவற்றை இறுக்கிவிடுகின்றன. நாய் ஒன்று வீட்டுக்குள்ளேயே குறுக்கும் நெடுக்கும் அலைகிறது, சிற்சில சமயங்களில் பலமாகக் குரைத்து வீட்டையே அதிர வைக்கிறது. பெரியாரின் பேச்சு எதனாலும் தடைபடவே இல்லை.

“ஆனந்த விகடன் பத்திரிகையிலிருந்து வந்திருக்கோம்.”

“தெரியுமே. வாசன் அவங்களை எனக்கு ரொம்பக் காலமாத் தெரியும். நான் குடியரசு பத்திரிகை ஆரம்பிச்ச காலத்திலே அடிக்கடி சந்திச்சுக்குவோம். கல்கி கிருஷ்ணமூர்த்தியும் என்கிட்டேதான் கதர் போர்டிலே கிளார்க்கா இருந்தார். ரொம்ப யோக்யமானவரு. கதர் போர்டு ஆட்டம் கொடுத்ததும் நான்தான் திரு.வி.க-வுக்கு கடுதாசி கொடுத்தனுப்பிச்சேன். நவசக்தியிலே சேர்ந்து கொஞ்ச நாளைக்கு வேலை செஞ்சாரு. அப்புறம்தான் விகடன்லே சேர்ந்துட்டார்.”

“ராஜாஜியோடு தங்களுக்குப் பழக்கம் ஏற்பட்டது எப்போது?”

“அதுவா? அந்தக் காலத்துலே ஈரோட்லே பி.வி.நரசிம்மய்யர்னு எனக்கு ரொம்ப வேண்டிய வக்கீல் ஒருத்தர் இருந்தார். ஈரோட்லே நான் சேர்மனா இருந்தப்போ குடியானவங்க வழக்கெல்லாம் என்கிட்டே நிறைய வரும். அந்த கேஸ் எல்லாம் அவருக்கு அனுப்புவேன். யாருக்கு? நரசிம்மய்யருக்கு. நான் சேர்மனா வர்றது சில பேருக்குப் பிடிக்கலே. பொறாமையினாலே எம் பேரிலே கலெக்டருக்கு பெட்டிஷன் எழுதிப் போட்டாங்க. சேர்மன் பதவின்னா இப்ப மாதிரி எலெக்ஷன்ல ஜெயிச்சதும் நேராப் போயி சேர்ல உட்கார்ந்துட முடியாது. கலெக்டர் சிபாரிசு செய்யணும்னு வெச்சிருந்தாங்க. அந்தச் சமயத்துலே சர் பி.ராஜகோபாலச்சாரிங்கிறவர் சப்-கலெக்டரா இருந்தார். அவருக்கு என்னைப் பத்தி நல்லாத் தெரியுமானதாலே பெட்டிஷனைப் பொய்னு தள்ளிட்டு என்னை சேர்மனாக்கிட்டார்.”

“ஆமாம். அந்த மாதிரி உங்களைப் பற்றித் தவறா பெட்டிஷன் எழுதிப் போட்ட ஆசாமி யார்?”

சீனிவாச முதலின்னு ஒரு வக்கீல். ஒரு நான்பிராமின் வக்கீலாயிருக்காரே, முன்னுக்குக் கொண்டாருவோம்னு நான்தான் அவரை முன்னுக்குக் கொண்டுவந்தேன். ஆனால் அவரே என் பேரில் பெட்டிஷன் கொண்டு வந்தார். அப்ப ராஜகோபாலாச்சாரி சேலத்துலே வக்கீல். கெட்டிக்கார வக்கீல்னு சொல்வாங்க. அதனாலே என்கிட்டே வர்ற கேஸெல்லாம் அவருக்கு அனுப்பிவைப்பேன். அந்தப் பழக்கத்துலே அவர் வரப் போக இருந்தாரு. எங்க வூட்டுக்கு அடிக்கடி வருவார். அவரும் அப்ப சேலத்துலே சேர்மன்.”

“எந்த வருஷம் அது?”

“தொள்ளாயிரத்துப் பத்தொன்பதுனு ஞாபகம்…”

வரதராஜுலு நாயுடு கேஸ் சம்பந்தமா அவர் மதுரைக்குப் போறப்ப நீங்களும் கூடப் போறது உண்டு இல்லையா?”

“ஆமா; போயிருக்கேன். ‘நீ சேர்மன் பதவியை விட்டுட்டு காங்கிரஸ்ல சேர்ந்துடு. நானும் விட்டுடறேன். ரெண்டு பேரும் சேர்ந்து பொதுப் பணி செய்யலாம்’னார். வரதராஜுலு நாயுடுவும் வற்புறுத்தினார். சரின்னு விட்டுட்டேன். அப்ப காங்கிரஸ் சத்தியமூர்த்தி குரூப் கையிலே இருந்தது. அமிர்தசரஸ் காங்கிரஸின்போது காங்கிரஸ் பிளவுபட்டு ரெண்டு குரூப்பாப் பிரிஞ்சுட்டது. சத்தியமூர்த்தி, ரங்கசாமி ஐயங்கார், திலகர் இவங்க ஒரு குரூப். காந்தி, ராஜகோபாலாச்சாரி, டாக்டர் ராஜன் இவங்களெல்லாம் ஒரு குரூப். நான் காங்கிரஸ்ல சேர்ந்ததே அமிர்தசரஸ் காங்கிரஸுக்கு அப்புறம்தான். அதுவரைக்கும் ராஜகோபாலச்சாரியும் நானும் நண்பர்கள்தான். அப்புறம்தான் சேர்ந்து வேலை செஞ்சோம்.”

“அதுக்கப்புறம் என்ன ஆச்சு?”

“எங்க நட்பு வளர்ந்தது. காங்கிரஸும் வளர்ந்தது. எங்களுக்குள்ளே ஒற்றுமையாயிருந்தோம். நான் கோவை ஜில்லா காங்கிரஸ் காரியதரிசி. அப்பவெல்லாம் செகரெட்டரிதான்; பிரசிடென்ட் கிடையாது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வந்தது. அப்பவும் நான்தான் செகரெட்டரி.”

“ஆமாம்; ராஜாஜி உங்களை எதுக்கு காங்கிரஸுக்கு இழுத்தார்?”

“ஜஸ்டிஸ் பார்ட்டிக்கு எதிரா காங்கிரஸ் வளர்றதுக்கு காங்கிரஸ்ல நான்பிராமின்ஸ் இருக்காங்கன்னு காட்டிக்க வேண்டியிருந்தது.”

“உங்களோடு வேறு யாரும் இல்லையா?”

“இருந்தாங்க. திரு.வி.க-வும் வரதராஜுலு நாயுடுவும் இருந்தாங்க. எங்க மூணு பேரையும்தான் எந்தக் கூட்டத்துலேயும் முதல்லே பேச விடுவாங்க. வரதராஜுலு நாயுடு பேச்சில் வசவு இருக்கும். திரு.வி.க. பேச்சு தித்திப்பா இருக்கும். நல்ல தமிழ் பேசுவார். என் பேச்சில் பாயின்ட் இருக்கும். பாயின்ட்டாப் பேசி கன்வின்ஸ் பண்ணுவேன். நாங்க மூணு பேரும் பேசினப்பறம்தான் சத்தியமூர்த்தி, ராஜகோபாலாச்சாரி எல்லாம் எழுந்து பேசுவாங்க.”

“இந்த பிராமின்-நான்பிராமின் தகராறு முதல் முதல் எப்ப ஏற்பட்டது?”

“எப்படி வந்தது வினைன்னா – வ.வே.சு. ஐயரால் வந்தது. சேரன்மாதேவியில் ‘நேஷனல் காலேஜ்’னு ஒண்ணு ஆரம்பிச்சு வீரர்களை உற்பத்தி செய்யப் போறதாச் சொன்னாங்க. பரத்வாஜ் ஆசிரமமோ என்னவோ அதுக்குப் பேர். அந்த குருகுலத்துக்கு எல்லாரும் ஆதரவு கொடுத்தாங்க. சிங்கப்பூர், மலேயாவில் இருந்தெல்லாம் பணம் வசூல் செஞ்சாங்க. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியிலேருந்தும் பணம் கேட்டாங்க. நான் அப்ப தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செகரெட்டரி. ராஜாஜி ‘நாயக்கரைக் கேளு’ன்னுட்டார். வ.வே.சு. ஐயர் வந்து உட்கார்ந்துக்கிட்டு இருபதாயிரம் வேணும்னார். நான் ‘முதல்லே பத்தாயிரம் இருக்கட்டும், அப்புறம் பார்க்கலாம்’னு சொன்னேன். ராஜாஜி சரின்னுட்டார். வ.வே.சு.ஐயர் அன்னிக்கு சாயந்திரமே பணம் வேணும்னு அவசரப்படுத்தினார். ஐயாயிரம்தான் கொடுத்தனுப்பிச்சேன்…”

“பத்தாயிரம் இருக்கட்டும்னு சொன்னீங்களே!”

“ஆமாம்; அப்படித்தான் சொன்னேன். ஆனா எனக்கென்னவோ சரியாப் படலே, அதனாலே ஐயாயிரம்தான் கொடுத்தேன். நான் சந்தேகப்பட்டதுக்குத் தகுந்தாப்பலேயே காரியம் நடந்துட்டுதே!”

“என்ன ஆச்சு?”

“முதல் மந்திரியாயிருந்தாரே ஓ.பி.ஆர். ரெட்டியார்…”

“ஆமாம்…”

“அவர் மகன் அந்தக் குருகுலத்துலே படிச்சுட்டிருந்தான். அடுத்த மாசமே அவன் வந்து கம்ப்ளெய்ன்ட் சொன்னான். என்னடானு கேட்டோம். ‘குருகுலத்துலே பார்ப்பனப் பிள்ளைங்களையும் எங்களையும் வித்தியாசமா நடத்துறாங்க. அவங்களுக்கு இலை போட்டு சாப்பாடு. எங்களுக்கு பிளேட். அவங்களுக்கு உப்புமா, எங்களுக்கு பழைய சோறு. அவங்க உள்ளே படுக்கணும். நாங்க வெளியே படுக்கணும். அவங்களுக்கு ஒரு பிரார்த்தனை. எங்களுக்கு ஒரு பிரார்த்தனை’னான். அவ்வளவுதான். ஜாதி வேற்றுமையை வளர்க்கிற குருகுலத்துக்கு இனி பணம் கிடையாதுன்னுட்டேன். அத்தோடு இந்த சங்கதியைப் பற்றி ராஜகோபாலாச்சாரிக்குத் தெரியப்படுத்தினேன். அவர் உடனே வ.வே.சு. ஐயரைக் கூப்பிட்டு விசாரிச்சாரு. ‘என்ன இது? காலம் என்ன? இதான் தேசியமா? தேசாபிமானமா? கொஞ்சம்கூட நல்லாயில்லே’னு கோபிச்சுக்கிட்டார்.”

“வ.வே.சு. ஐயர் அதுக்கு என்ன சொன்னார்?”

“என்ன சொன்னாரு! ‘நான் என்ன செய்யட்டும்? குருகுலம் ஆரம்பிச்சிருக்கிற இடம் ஒரு வைதீக சென்டர். அதனாலே அந்த இடத்துல அப்படி நடக்க வேண்டி வந்துட்டுது’னு சமாதானம் சொன்னார். அப்ப ரெண்டு ஜாயின்ட் செகரெட்டரிங்க. கே.எஸ். சுப்பிரமணியம்னு கடையத்துக்காரர் ஒருத்தர். அவர் ஒரு செகரெட்டரி. வ.வே.சு. ஐயர் எனக்குத் தெரியாம அவர்கிட்டே போய் இன்னொரு ஐயாயிரத்துக்கு செக்கை வாங்கிட்டுப் போயிட்டார். அதுக்குப் பின்னாலே ஒரு மாசம் கழிச்சுத்தான் இந்த சங்கதி அம்பலத்துக்கு வந்தது.”

“கடையத்துக்காரர் எப்படி செக் கொடுக்கலாம்?”

“செகரெட்டரி டு சைன்ங்கிறது ரெசல்யூஷன். கடையத்துக்காரர் ஒரு செகரெட்டரிங்கிறதால அவர்கிட்டே தந்திரமா கையெழுத்து வாங்கிட்டுப் போயிட்டார்.”

“அந்தக் கடையத்துக்காரர் இப்போ எங்கே இருக்காரு?”

“அவரா! அவர் அப்ப எடுத்த ஓட்டம்தான். அப்புறம் எங்கே போனாரோ? ஆசாமி திரும்பி வரலே. ராஜாஜிக்கு அப்பவே எல்லாம் புரிஞ்சு போச்சு, கோளாறு வந்துட்டுதுன்னு. அதுக்கப்புறம் நான் சும்மா இருக்க முடியுமா? அந்த விஷயத்தை ஒரு முக்கியப் போராட்டமா எடுத்துக்கிட்டேன். அதுக்கு சேரன்மாதேவி குருகுலப் போராட்டம்னு பேர். டாக்டர் வரதராஜுலு நாயுடு, திரு.வி.க. இவங்க ரெண்டு பேரும் எனக்கு ஆதரவு கொடுத்தாங்க. வரதராஜுலு நாயுடுவே இந்தப் போராட்டத்தை நடத்தினார். குருகுலம் ஒழிஞ்சது.”

“ராஜாஜி உங்க போராட்டத்தில் சேர்ந்தாரா?”

“சொல்லிக்கிட்டு வர்றேனே கேளுங்க. வரதராஜுலு நாயுடு காங்கிரஸ் கொள்கைக்கு விரோதமா வகுப்பு உணர்ச்சியைத் தூண்டுற மாதிரி நடந்துக்கிறார்னு அடுத்த கமிட்டி மீட்டிங்ல ராஜாஜி ஒரு தீர்மானம் கொண்டுவந்தார். எனக்கு அது சரியாப் படலே. வோட்டுக்கு விட்டாங்க. ஈக்வல் ஓட்டாச்சு. நான் தலைவன்கிற முறையில் ஒரு வோட்டைப் போட்டு ராஜாஜி தீர்மானத்தைத் தோற்கடிச்சேன். ராஜாஜி ராஜினாமா பண்ணிட்டார். என்.எஸ். வரதாச்சாரி, சாமிநாத சாஸ்திரி, டாக்டர் ராஜன், கே. சந்தானம், ஹாலாஸ்யம் இவங்களெல்லாம் ராஜாஜி பக்கம் சேர்ந்துட்டாங்க. நான், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், வரதராஜுலு நாயுடு எல்லாம் ஒரு பக்கம். எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேற்றுமை பச்சையா நான் கண்டிக்கிற அளவுக்கு வளர்ந்துட்டுது…”

“க்ளிக்!” – போட்டோகிராபர் படமெடுத்துக் கொள்கிறார்.

இந்தச் சமயம் கறுப்புச் சட்டை அணிந்த இளைஞர் பெரியசாமி காபி கொண்டுவந்து எங்கள் முன் வைக்கிறார்.

நானும் நண்பர் மணியனும் அந்தக் காபியை எடுத்து அருந்துகிறோம்.

“சாதி வேற்றுமையெல்லாம் இப்போ ரொம்பக் குறைஞ்சுபோச்சு. முப்பது வருஷங்களுக்கு முன்னாலே பிராமணர்கள் யாராவது உங்க வீட்டில் இந்த மாதிரி வந்து சாப்பிட்டிருக்காங்களா?” – இவ்வாறு நான் கேட்டதும் பெரியார் ஒரு கணம் என்னை உற்றுப் பார்க்கிறார்.

“வெங்காயம்! அதுக்கு இத்தனை வருஷமா நான் செய்துக்கிட்டு வர்ற பிரசாரம்தான் காரணம். இன்னும் ரொம்ப மாறணும். புத்தனுக்கு அப்புறம் பகுத்தறிவுப் பிரசாரம் செய்றவன் யாரு? நான் ஒருத்தன்தானே!”

உணர்ச்சியுடன் பேசிக்கொண்டிருக்கும் பெரியாரின் கைகள் தளர்ந்துவிட்ட வேட்டியின் முடிகளைத் தாமாகவே இறுக்கிக் கட்டுகின்றன.

“அந்தக் காலத்துல எங்க வீட்டுக்கு ஒரு ஐயர் வருவார். எங்க அம்மா ரொம்ப ஆசாரம். ஒருநாள் அந்த ஐயர் தாகத்துக்குத் தண்ணி வேணும்னு கேட்டார். குடுத்தோம். அந்த தண்ணியைக் குடிக்க வேண்டியதுதானே? கொஞ்சம் மோர் இருக்குமானு கேட்டார். மோர் கொண்டுவந்து கொடுத்தோம். அந்தத் தண்ணியிலே கொஞ்சம் மோரை ஊத்திக் குடிச்சாரு. அந்த மோர் அந்தத் தண்ணியைச் சுத்தப்படுத்திட்டுதாம். அதெப்படி சுத்தப்படுத்தும்? தண்ணி எங்க வூட்டுது. மோரும் எங்க வூட்டுது. எங்க வூட்டு மோர் எங்க வூட்டுத் தண்ணியைச் சுத்தப்படுத்திடுமா?” – சிரிக்கிறார் பெரியார்.

“வைக்கம் வீரர்னு உங்களுக்கு எப்படிப் பேர் வந்தது?” – மணியன் கேட்கிறார்.

“அதுவா? அது ஒரு கதை… சொல்றேன். நீங்க என்னமோ கேட்டீங்களே, என்னது?” என்று என் பக்கமாகத் தலையைச் சாய்த்து காதைக் கைவிரல்களால் அணைத்துக் கேட்கிறார்.

“‘காந்தியை நீங்க சந்திச்சிருக்கீங்களா?’னு கேட்டேன்…” என்கிறேன் நான்.

“எங்க வூட்டுக்கே வந்து தங்கியிருக்காரே. சட்டசபைப் பிரவேசத்துக்கு காங்கிரஸை அவர் அனுமதிச்சபோது நான் கூடாதுனு தடை பண்ணினேன்; எதிர்த்தேன்; வாதாடினேன். அப்ப அவர் சொன்னார்: “நீ என்ன இப்படிச் சொல்றே? மோதிலால் நேரு, சி.ஆர். தாஸ் இவங்களையெல்லாம் நினைச்சுப் பாக்கணும். அவங்களையெல்லாம் விட்டுட முடியுமா? உனக்கு வேணாம்னா பேசாம இருந்துக்கோ”ன்னாரு. ஏன் அப்படிச் சொன்னாருங்கிற ரகசியம் எனக்குத்தான் தெரியும். என்ன ரகசியம்னா, காங்கிரஸ் சட்டசபைக்குப் போகலேன்னா ஜஸ்டிஸ் கட்சியே நிலைச்சு இருந்துடுங்கிற பயம்தான்!”

“அதுக்கப்புறம் நீங்க என்ன செய்தீங்க?”

“சட்டசபைக்குள் போறதா இருந்தா அம்பது பெர்சன்ட் நான்-பிராமின்ஸ்க்கு ஒதுக்கணும்னு ஒரு தீர்மானம் கொண்டு வந்தேன். ‘இதைக் கொள்கையா வேணும்னா வெச்சுக்குவோம். தீர்மானமாப் போட வேண்டாம்’னு ராஜாஜி கேட்டுக்கிட்டார். 1920-ல் திருநெல்வேலி மகா நாட்டிலே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை வற்புறுத்தி ஒரு தீர்மானம் கொண்டுவந்தேன். அப்ப தலைவராயிருந்த எஸ். சீனிவாசயங்கார் அதை அனுமதிக்காமத் தடுத்துட்டார். அப்புறம் திருப்பூர்ல, சேலத்துல, திருவண்ணாமலையில எல்லா இடத்துலேயும் தடுத்துட்டாங்க…”

“உங்க தீர்மானத்தை அதோடு விட்டுட்டீங்களா?”

“விட்டுடுவனா? திரு.வி.க-வை காஞ்சீபுரம் மகா நாட்டுக்குத் தலைவராக் கொண்டு வந்தேன். சட்டசபைக்குள் போறதா இருந்தா அம்பது பெர்சன்ட் நான் பிராமின்ஸ்க்கு ஒதுக்கணும்கிற தீர்மானத்தைக் கொண்டு வந்தேன். திரு.வி.க. பாலிஸிக்கு விரோதம்னு சொல்லி பிரசிடென்ட்டுங்கிற முறையிலே டிஸ்அலவ் பண்ணிட்டார். நான் கொண்டுவந்த தீர்மானத்தை நான் கொண்டு வந்த தலைவரே அனுமதிக்க மறுத்துட்டார். எதிரிங்ககிட்டேருந்தும் எனக்கு அடி. என் ஆளுகிட்டேருந்தும் அடி. ஆக ரெண்டு பக்கத்திலேருந்தும் அடி.”

“ரொம்பச் சங்கடம்தான்!”

“ஆனாலும் தீர்மானத்தை விட்டுடலே. ஓபன் மகாநாட்டிலே கொண்டுவர்றதுக்குப் பாடுபட்டேன். ஓபன் மகாநாட்டிலே தீர்மானத்தை எடுத்துக்கணும்னா அம்பது பேர் கையெழுத்து வேணும்னாரு. அம்பது என்ன? இந்தா எழுபத்தைந்து கையெழுத்துனு சொல்லிக் கையெழுத்தும் வாங்கிட்டுப் போனேன். திரு.வி.க. பயந்துபோய் தீர்மானத்தை அனுமதிக்க மறுத்துட்டார். எனக்குக் கோவம் வந்துட்டுது. ‘முதலியாரே! உங்களை யோக்கியன்னு நினைச்சேன். கையெழுத்து வாங்கிட்டு வானு சொல்றப்போ சொந்த புத்தி, இப்ப வேற புத்தியா?’னு கேட்டுட்டு இப்படித்தான் துண்டை எடுத்து தோள் மேலே போட்டுக்கிட்டு (பக்கத்திலுள்ள டவல் ஒன்றை எடுத்துத் தோள் மீது போட்டுக்கொள்கிறார்.) வெளியே நடந்துட்டேன். அப்புறம் எல்லாருமாப் பஞ்சாயத்துக்கு வந்தாங்க. காங்கிரஸ்காரங்க போக்கு எனக்குப் பிடிக்கலே. வெளியே வந்துட்டேன். ஆனா அதுக்கப்புறமும் கொஞ்ச நாளைக்கு காங்கிரஸ்காரனாத்தான் இருந்தேன். அப்படி இருந்துக்கிட்டே காங்கிரஸை எதிர்த்துப் பிரசாரம் பண்ணினேன். காங்கிரஸை எதிர்த்தாலும் ஜஸ்டிஸ் கட்சிக்குச் சாதகமா இல்லே.”

“உத்தியோகம், காலேஜ் அட்மிஷன் இதெல்லாம் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இருப்பது சரினு நினைக்கிறீங்களா? திறமையைப் பார்த்துத் தேர்ந்தெடுத்துக்கட்டுமே…” – மணியன் கேட்கிறார்.

பெரியாருக்குக் கோபம் வந்துவிடுகிறது.

“என்ன திறமை வேண்டியிருக்குது? வெங்காயம்! ஜெயிலுக்குள்ளே போய்ப் பாருங்க. ஜாதிக் கணக்குப்படித்தானே அங்கேயும் இருக்காங்க. பார்ப்பன ஜாதி கொஞ்சம் குறைச்சலா இருக்கும். அதுக்குக் காரணம் என்னன்னா அவன் கொஞ்சம் பயந்தவன். கொலை, கொள்ளைக்குப் போவ மாட்டான். அவ்வளவுதானே? மத்தப்படி ஜாதி விகிதாசாரப்படிதானே ஜெயில்லயும் இருக்காங்க? ஆனபடியாலே சர்க்கார் உத்தியோகம், காலேஜ் அட்மிஷன் இதிலேயும் ஜாதி விகிதாச்சாரம் இருந்துட்டுப் போவட்டுமே…”

“காங்கிரஸை விட்டு விலகினீங்களே… அப்புறம் என்ன ஆச்சு?”

“கம்யூனல் ஃபீலிங் வளர ஆரம்பிச்சது. சி.என். முத்துரங்க முதலியார், சி.பி. சுப்பையா, காமராஜ் இவங்களை வெச்சு காங்கிரஸை வளர்த்துட்டாங்க…” சட்டென்று நண்பர் மணியன் பக்கமாகத் திரும்பி “நீங்க என்னமோ கேட்டீங்களே? ஆமா வைக்கம் சங்கதி… சொல்றேன், கேளுங்க” என்கிறார்.

காலை நாங்கள் பெரியார் மாளிகைக்குள் சென்றபோது மணி ஒன்பதரை இருக்கலாம். அப்போது அவர் கட்டிலின் மீது உட்கார்ந்திருந்தார். எங்களுடன் பேசி முடிக்கும்போது மணி இரண்டு. அந்த இடத்தில் எப்போது உட்கார்ந்தாரோ தெரியாது. எங்களுடன் பேசி முடிக்கும் வரை அப்பால் இப்பால் நகரவில்லை. இடையில் காபி கொண்டு வந்து வைக்கப்பட்டபோதுகூட “ஐயா! காபி ஆறிப் போறது” என்று ஞாபகப்படுத்திய பின்னரே அதை எடுத்து அருந்தினார்.

இதற்குள் நான் இருபது முறை கால்களை மாற்றிப் போட்டுக்கொண்டேன். பின்பக்கம் சாய்ந்தேன். முன்பக்கம் சாய்ந்தேன். முகத்தை இடது கையினால் தாங்கிக்கொண்டேன். எத்தனைவிதமான கோணங்களில் உட்கார முடியுமோ அப்படியெல்லாம் மாறி மாறி உட்கார்ந்தேன்.

பத்து நிமிடங்களுக்கு மேல் எந்த இடத்திலும் நிலைத்து உட்கார முடியாதவர் நண்பர் மணியன். அவர் நான்கு முறை எழுந்து நின்றார். இரண்டு முறை டெலிபோனில் பேசிவிட்டு வந்தார். கைகளைச் சொடுக்கினார். கால்களை நீட்டினார். இப்படி ஏதேதோ தேகப் பயிற்சிகள் எல்லாம் செய்துகொண்டிருந்தார். சற்றும் சோர்வின்றி, அலுக்காமல் சலிக்காமல் சளைக்காமல் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருந்த பெரியாரின் அதிசய சக்தியைப் பற்றி நான் மனதுக்குள் வியந்துகொண்டிருந்தேன். பெரியார் மீண்டும் பேச்சைத் தொடர்ந்தார்:

“வைக்கம் என்கிற ஊர் கேரளாவிலே இருக்குது. அந்த ஊரிலே ஒரு தெரு வழியா தாழ்த்தப்பட்டவங்க யாரும் நடக்கக் கூடாதுனு ரொம்ப நாளாக் கட்டுப்பாடு. இந்தப் பக்கத்துலே உள்ளவங்க குடிதண்ணீர் கொண்டுவரணும்னா, குறுக்கே உள்ள அந்தத் தெருவைத் தாண்டித்தான் போய் வரணும்.”

“வேற வழி இல்லையா?”

“வேறொரு தெருப் பக்கமாகவும் போகலாம். ஆனால் அது சுத்து வழி. ‘ஜாதிப் பேரால நடக்கிற இந்த அக்கிரமத்தை ஒழிச்சுடணும் தெருவிலே நடந்துபோறதுக்கு எல்லாருக்கும் சம உரிமை இருக்கணும்கிறதுதான் போராட்டம். அந்தப் போராட்டத்தை ஜார்ஜ் ஜோசப், நீலகண்ட நம்பூதிரி இவங்கள்லாம் நடத்தினாங்க. திருவாங்கூர் சர்க்கார் அவங்க எல்லோரையும் புடிச்சு ஜெயில்லே போட்டுது. போராட்டம் கலகலத்துப் போச்சு. எனக்கு லெட்டர் போட்டாங்க. யாரு? ஜார்ஜ் ஜோசப்பும் நீலகண்ட நம்பூதிரியும். நீங்க உடனே வைக்கத்துக்கு வந்து போராட்டத்தை ஏற்று நடத்தினால்தான் எங்க மானம் மிஞ்சும், கால தாமதம் செய்யாமல் புறப்பட்டு வரணும்னு ஜெயிலுக்குள்ளேயிருந்து லெட்டர் எழுதி அனுப்பிச்சாங்க.

அப்ப எனக்கு உடம்பு சரியில்லை. ஆனாலும் உடனே புறப்பட்டுப் போய்ப் போராட்டத்தை நடத்தினேன். ரொம்பப் பேர் என்னோடு சேர்ந்து வந்தாங்க. மலையாளத்துக்காரங்களும் வந்தாங்க. தமிழ்நாட்டுக்காரங்களும் வந்தாங்க. போராட்டம் வலுவடைஞ்சுது. நான் ரெண்டு முறை ஜெயிலுக்குப் போனேன். கடைசியிலே சத்தியாக்கிரகம் வெற்றி அடைஞ்சுது. அதோடு அந்தத் தெரு வழியா எல்லோரும் நடக்கலாம்னு ஆயிட்டுது.”

வைக்கத்திலே உள்ள கோயில், கோயிலுக்குப் பக்கத்திலே உள்ள அந்தத் தெரு, குடி தண்ணீருக்குச் சுற்றிக்கொண்டு போக வேண்டிய இன்னொரு வழி இவ்வளவையும் ஒரு காகிதத்தில் பிளான் போட்டுக் காட்டுகிறார் பெரியார்.

“ரெண்டு முறை எதுக்கு ஜெயிலுக்குப் போனீங்க?”- நான் கேட்கிறேன்.

“முதல் முறை ஒரு மாசம் போட்டாங்க. இருந்துட்டு வெளியே வந்தேன். அப்புறம் கேரளாவுக்குள்ளேயே கால் வைக்கக் கூடாதுனு தடை போட்டாங்க; மீறினேன். மறுபடியும் தண்டனை கொடுத்து திருவாங்கூர் சென்ட்ரல் ஜெயில்ல கொண்டுபோய்ப் போட்டாங்க…”

அண்ணாதுரை உங்க கட்சியிலே எப்போது சேர்ந்தார்னு சொல்ல முடியுமா?” மணியன் கேட்கிறார்.

பொப்பிலி ராஜாகிட்டே கணக்கு எழுதிட்டிருந்தாரு. என்கிட்டே வந்தாரு. இருக்கச் சொன்னேன். கூட்டத்துக்கெல்லாம் கூடவே வருவாரு. ஒருநாள் எழுந்து பேசினாரு. இப்படியே பேசிப் பேசித் தலைவனாயிட்டாரு…” (“விடுங்க, இப்ப எதுக்கு அந்தப் பேச்செல்லாம்” என்ற பாவனை பெரியார் முகத்தில் தெரிகிறது.)

“ராஜாஜி உங்களை ஜெயில்ல போட்டாரே, அது எப்போ?”

”முப்பத்தேழுலே நடந்த எலெக்ஷன்ல ஜஸ்டிஸ் கட்சி தோத்தது. அப்ப அந்தக் கட்சிக்கு பொப்பிலி ராஜாதான் தலைவர். பொப்பிலி, பெத்தாபுரம் எல்லாரும் தோத்துப்போனாங்க. காங்கிரஸ் ஜெயிச்சுட்டுது. ராஜாஜி மந்திரிசபை அமைச்சாரு. அப்பத்தான் கட்டாய இந்தியைக் கொண்டுவந்தாங்க. நான் எதிர்த்தேன். புரொகிபிஷனைக் காரணம் காட்டி விற்பனை வரி போட்டாங்க. என்னை ஜெயில்ல போட்டாங்க. ஜஸ்டிஸ் கட்சி மெம்பர்களைப் பழிவாங்க ஆரம்பிச்சாங்க. நான் ஜெயிலுக்குள்ளே இருக்கிறபோதே பொப்பிலி எல்லாம் சேர்ந்து என்னை ஜஸ்டிஸ் கட்சித் தலைவனாக்கிட்டாங்க.”

”அப்புறம் எப்ப ஜெயில்லருந்து வந்தீங்க?”

”அஞ்சாறு மாசத்துக்கெல்லாம் என்னை விட்டுட்டாங்க. ஆனா இந்தியை மட்டும் விடாம வெச்சுட்டிருந்தாங்க…”

”எப்பத்தான் விட்டாங்க?”

”இதுக்குள்ளே காங்கிரஸிலேயே தகராறு. ‘பட்டாபி சீதாராமய்யா தோல்வி என் தோல்வி’னு காந்தி சொன்னாரே ஞாபகம் இருக்குதா? அந்தத் தகராறுதான். தலைவர் தேர்தல்ல பட்டாபி தோத்துட்டாரு, சுபாஷ் போஸ் ஜெயிச்சுட்டாரு. போஸ் கட்சியைச் சேர்ந்தவங்க காங்கிரஸுக்குப் பதவி மோகம்னு சொன்னாங்க. கொஞ்ச நாளைக்கெல்லாம் ராஜாஜி மந்திரிசபை ராஜினாமா செய்ய வேண்டி வந்துட்டுது. அந்தச் சமயத்திலே கவர்னர் என்னைக் கூப்பிட்டு மந்திரிசபை அமைக்கச் சொன்னாரு.

சீமையிலே இப்படித்தான் வழக்கம். ஒரு கட்சி விலகிட்டுதுனா அடுத்த பெரிய கட்சியைக் கூப்பிட்டு மந்திரிசபை அமைக்கச் சொல்லுவாங்க. ‘இப்ப காங்கிரஸுக்கு அடுத்த பெரிய கட்சி ஜஸ்டிஸ் கட்சிதான், நீ என்ன சொல்றே?’னாரு. நான் மாட்டேன்னேன். மந்திரிசபை அமைச்சா அத்தோடு ஜஸ்டிஸ் கட்சியே போயிடும். வேண்டாம்னு வந்துட்டேன். சண்முகம் செட்டி, குமாரராஜா, பன்னீர்செல்வம் எல்லாரையுமே கூப்பிட்டுப் பேசினாரு கவர்னர்.”

”அவங்களெல்லாம் என்ன சொன்னாங்க?”

”அவங்கள்ல சில பேருக்கு ஆசைதான். எங்களுக்குள்ளே விவாதம் நடந்தது. ‘ஜஸ்டிஸ் கட்சிக்கு நோ எலெக்ஷன்; நோ மந்திரிசபை இதுதான் என் கொள்கை’ன்னேன். எல்லோரும் oppose பண்ணாங்க. என் மேலே ரொம்பக் கோவம் அவங்களுக்கு. சௌந்தரபாண்டியன் கூட ‘ஏன் இப்படி முரட்டுத்தனமா இருக்கீங்க?’னு கேட்டாரு.”

”நீங்க என்ன சொன்னீங்க?”

”’என்னைத் தலைவனாப் போட்டதுக்கு இதுதான் பலன்’னு சொன்னேன். ‘வேணும்னா என்னைத் தோற்கடிச்சுடுங்க’ன்னேன். பன்னீர்செல்வத்துக்கு மட்டும் என்னை விட்டுடறதுல இஷ்டமில்லே. அவருக்குத் தெரியும், நான் இல்லாட்டி கட்சி ரொம்ப வீக்காப் போயிடும்னு…”

”உங்களை மந்திரிசபை அமைக்கச் சொன்னாரே, அவர் பேர் என்ன?”

”காளை மாடு, விவசாயம்னு சொல்லிக்கிட்டிருப்பாரே ஒருத்தர்… யாரது?”

லின்லித்கோ

”ஆ, லின்லித்கோ! அவனேதான். கிண்டிக்குக் கூப்பிட்டுப் பேசினான். நான் சொன்னேன், ‘மந்திரிசபை அமைச்சா யார் யாருக்கு மந்திரிங்கிறதுலேயே எங்களுக்குள்ளே சண்டை வந்துடும். கொள்கை அடிபட்டுப்போகும். முடியாது’ன்னேன்.

அப்புறம் வேவல் கூட என்னைக் கூப்பிட்டு சம்மதிக்கச் சொன்னாரு. முடியவே முடியாதுன்னுட்டு வந்துட்டேன். அப்புறம்தான் ரொம்ப முக்கியமான சங்கதி ஒண்ணு நடந்தது. கவனிக்கணும்.”

”சொல்லுங்க…”

”ராஜாஜி வந்தாரு. மெதுவா எங்கிட்டே வந்து ‘நாயக்கரே, நல்ல சமயம். கஷ்டப்பட்டுப் பிடிச்ச சர்க்காரை வெள்ளைக்காரன்கிட்டே விட்டுடக் கூடாது. நீங்க மந்திரிசபையை ஒப்புக்கணும். நிலைச்சு நிக்கும்; கவலைப்படாதீங்க. வேணுமானா காந்தி, காங்கிரஸ் எல்லார்கிட்டேயும் நான் சம்மதம் வாங்கித் தர்றேன். இதிலே உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தா, நீங்களும் இஷ்டப்பட்டா, என்னையும் ஒரு மந்திரியாச் சேர்த்துக்குங்க; நானும் உங்ககூட இருந்து பக்கபலமா வேலை செய்யறேன்’னாரு.”

”ராஜாஜிக்கு என்ன பதில் சொன்னீங்க?”

” ‘நீங்க சொல்றதுலே சந்தோஷம்தான். ஆனா யார் யாரோ சொல்லியும் மாட்டேன்னுட்டேன். இப்ப நீங்க சொல்றதுனாலே யோசனை பண்ணிப் பாக்கறேன்’னேன். ‘நல்லா யோசிச்சுச் சொல்லுங்க’னு போயிட்டாரு. எங்க ஆளுங்களோட யோசிச்சேன். முதல்லே மந்திரிசபையை ஒப்புக்கணும்னு சொன்ன ஆசாமிங்க எல்லாம் ராஜாஜி மந்திரிசபைக்கு வர்றார்னு சொன்னதும் வேணவே வேணாம்னுட்டாங்க”

”அப்புறம் என்ன நடந்தது?”

”ஒரு வேடிக்கை நடந்தது. என்ன வேடிக்கைனா, வாருக்கு அப்புறம் வெள்ளைக்காரன் பவரை ஹேண்ட்ஓவர் பண்றப்போ நான் போய்க் கேட்டேன்… ‘நாங்க பாடுபட்டோம், சர்க்காரோடு ஒத்துழைச்சோம். கடைசியிலே பவரை அவங்க கையிலே கொடுக்கிறது என்ன நியாயம்?’னு கேட்டேன்.”

”வெள்ளைக்காரன் அதுக்கு ‘வி நோ ஹிண்டு அண்டு முஸ்லிம் ஒன்லி. ரெண்டே ரெண்டு பார்ட்டிதான் எங்களுக்குத் தெரியும். பிராமின்-நான்பிராமின் இந்த விஷயமெல்லாம் தெரியாது’னு பதில் சொல்லிட்டான்.”

”அதோடு நீங்க திரும்பி வந்துட்டீங்களா?”

”வருவேனா? இதுதான் வெள்ளைக்காரன் யோக்கியதையான்னு கேட்டேன்.”

”என்ன பதில் சொன்னாங்க?”

”என்னத்தைச் சொல்லுவான். சிரிச்சு மழுப்பிட்டான். சரி இத்தோட விட்டுடக் கூடாதுன்னு ஜின்னாவைப் பார்த்துப் பேசறதுக்காக பம்பாய் போயிருந்தேன். அவரைக் கண்டு எல்லா சங்கதியையும் பேசினேன். நான் சொல்றதையெல்லாம் கவனமாக் கேட்டுக்கிட்டு ‘சரி, நான் மெட்ராஸுக்கு வர்றப்போ முஸ்லிமும் ஜஸ்டிஸ் பார்ட்டியும் சேர்ந்து சப்ஜெக்ட்டை ஒண்ணா டேபிள் பண்ணுவோம்’னு சொன்னாரு.”

”அப்பறம் ஜின்னா வந்தாரா?”

”வந்தாரு. ‘உன் கட்சி விஷயம் என்னா?’னு கேட்டாரு. ‘என் கட்சியிலே முக்கியமா ஒன்பது பேரு இருக்கோம். ஒன்பது பேரும் ஒன்பது ஜாதி. ஆனா ஆல் நான்பிராமின்ஸ்’னேன். ஜின்னா சிரிச்சுட்டு ‘என்ன நினைச்சு இப்படி ஒரு கட்சி வெச்சிருக்கீங்க? நல்ல கட்டில்தான். ஆனா கால் இல்லாக் கட்டிலாயிருக்குதே’ன்னு கேலி பண்ணாரு. ‘என்ன செய்யறது? எப்படியோ இதைத்தான் ஒரு கட்டிலா வெச்சு ஓட்டிட்டிருக்கோம்’னேன்.”

”ரெண்டு பேரும் சேர்ந்து டேபிள் பண்ணலாம்னு சொன்ன விஷயம் என்ன ஆச்சு?”

”உன் பிரச்னையைத் தனியாவே எடுத்துச் சொல்லிக்கோனுட்டுப் போயிட்டாரு. அப்பத்தான் ராமசாமி மூஞ்சியிலே ஜின்னா கரியைப் பூசிட்டார்னு பத்திரிகையிலே எழுதினாங்க.”

”52-லே ஜெனரல் எலெக்ஷன் நடந்ததே, அப்ப நீங்க யாரை ஆதரிச்சீங்க?”

”காங்கிரஸை எதிர்த்துப் பிரசாரம் செஞ்சேன். காங்கிரஸ் தோத்தது. நல்லபடியாத் தோத்தது. மந்திரிசபை அமைக்கிறாப்ல எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கலே. மறுபடியும் ராஜாஜி வந்தாரு. படையாச்சி, கவுண்டரு எல்லாரையும் சரிபண்ணிக்கிட்டு மந்திரிசபை அமைச்சாரு. குலக்கல்வி, ஒரு நேரப் படிப்புன்னாரு. 6000 பள்ளிக்கூடங்களை மூடினாரு. எதிர்த்தோம். அதுக்குப் பின்னாலதான் காமராஜ் முதல் மந்திரியா வந்தாரு. தமிழர் நலனுக்காக நல்ல காரியமெல்லாம் செய்ய ஆரம்பிச்சாரு. அதிலிருந்து வெளிப்படையா நான் காங்கிரஸை ஆதரிக்க ஆரம்பிச்சுட்டேன்.”

”காமராஜை நீங்க எப்பவாவது சந்திச்சிருக்கீங்களா?”

”எப்பவோ ஒரு சமயம் நான் ஜெனரல் ஆஸ்பத்திரியில படுத்திருக்கப்போ, அவராகவே வந்து எப்படி இருக்கீங்கனு விசாரிச்சாரு. அந்த நேரம் சி. சுப்பிரமணியமும் அதே ஆஸ்பத்திரியிலே படுத்திருந்தாரு. அவரைப் பார்க்க வந்தப்போ என்னையும் பார்த்துட்டுப் போனாரு.”

”அந்தக் காலத்துலே இந்தியை எதிர்த்துப் போராட்டமெல்லாம் நடத்தினீங்களே, இப்ப ஏன் சும்மா இருக்கீங்க?”

காதை வலது கையால் அணைத்து நான் சொல்வதை உற்றுக் கேட்டுக்கொண்ட பெரியார் கோபத்தை வெளியே காட்டாமல் ”அப்படியா? மன்னிக்கணும்; இப்ப இந்தி எங்கே இருக்குது? தெரியாமத்தான் கேக்கறேன். சொல்லுங்கோ?”

”இந்திதான் ஆட்சி மொழியா வந்துட்டுதே…”

”எங்கே வந்துட்டுது? உனக்குத்தான் இங்கிலீஷ் இருக்குதே. இந்தியா ஒண்ணா இருக்கணும்னா பொதுவா ஒரு ஆட்சிமொழி வேணும்தானே? இந்திக்காரன் உங்களை மாதிரி இங்கிலீஷை நினைக்கலையே. இங்கிலீஷை அவமானம்னு நினைக்கிறானே. தமிழ்நாட்டுக்காரன் சொல்றபடி இந்தியா நடக்குமா? அது ஜனநாயகமா?”

”ஒரு நாளைக்கு இல்லாவிட்டால் ஒரு நாளைக்கு இந்தி வரத்தானே போகுது?”

”நல்லாருக்குதே! ஒரு நாளைக்கு இல்லாட்டி ஒரு நாளைக்குச் சாவு வரத்தானே போகுதுன்னு எவனாவது இப்பவே போய் கிணத்துலே விழுவானா? அப்படியே ஒருவேளை இந்தி வந்ததுன்னா, உயிரோடு இருந்தா அதை எதிர்க்கப்போறவன் நான்தானே?”

”மத்திய சர்க்கார்ல உத்தியோகம் கிடைக்கிறதுக்கு இந்தி அவசியம் இல்லேன்னாலும் உத்தியோகத்துலே சேர்ந்தப்புறம் படிக்கச் சொல்றாங்களே?”

”படிச்சிட்டுப்போயேன். தாசில்தார் உத்தியோகம் படிக்கப்போறவங்க சர்வே படிப்பு படிக்கிறதில்லையா? அந்த மாதிரி இந்தியைப் படிச்சுக்கிறது. உனக்கு இதிலே என்ன கஷ்டம்? இல்லே நஷ்டம்? அவன் நேரத்துலே அவன் கொடுக்கிற சம்பளத்துல நீ இன்னொரு மொழியைப் படிச்சுத் தெரிஞ்சுக்கப்போறே. இது லாபம்தானே?”

பிற தளங்களில் பதிவுகள்

எப்படியோ இந்த வாரத்துக்கும் ஒரு கூட்டாஞ்சோறு பதிவு போட்டுவிட்டேன். என் வாழ்வில் நடந்த ஒரே அதிசய, அமானுஷ்ய நிகழ்ச்சி பற்றி.

நண்பர் ராஜன் என்ற Love in India திரைப்படத்தைப் பற்றி அவார்டா கொடுக்கறாங்க தளத்தில் எழுதி இருக்கிறார்.

முடிவை நோக்கி?

JK

எழுத்தாளர் ஜெயகாந்தன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார். நிலைமை கவலைகிடம் என்ற தகவல்கள் வந்துக் கொண்டிருக்கின்றன.

அவருக்கு யூலஜி பற்றி ஒரு கருத்து உண்டு. மனிதர் யூலஜி என்றால் பாராட்ட வேண்டும் என்று ஒரு வரைமுறை கிடையாது என்று கூறியிருக்கிறார். அதை டெமான்ஸ்ட்ரேட் பண்ணவும் செய்திருக்கிறார். அண்ணாவின் யூலஜியில். அதை பல முறை இங்கே நாம் பதிந்திருக்கிறோம்.

ஜெயாகாந்தன் சந்தேகமில்லாமல் தன் கருத்துகளை முன்வைத்த ஒரு சமுதாய முற்போக்கு எழுத்தாளரே. அந்த முற்போக்கு எழுத்தில் எழுந்த நன்மைகள் சந்தேகமில்லாமல் பல. சந்தேகமில்லாமல் சில தீமைகளும் உண்டு. அந்த விளக்கங்கள் எல்லாம் இன்னொரு சமயம். ஆனால் என்னைக் கவர்ந்த எழுத்துக்களில் அவருடைய எழுத்துக்களும் உண்டு.

அவர் இன்னும் எழுதியிருக்கலாம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. மிக “சிறிய” வயதில் நிறுத்திக் கொண்டார். கவனம் சிதறி வாழ்க்கைப் போராட்டத்தில் அரசியலுடன் சமரசம் செய்து அரசியலிலும் சில சமரசங்கள் செய்துள்ளார். ஆனால் தேவையிருக்கிறது. Free will என்று ஒன்று உண்மையில் உள்ளதா?

அவர் உடல்நலம் தேறி மீண்டும் எழுத்துலகை அலங்கரிக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்… என்று சொன்னால் மருத்துவமனையிலிருந்து எழுந்து வந்து என்னுடைய பின்னங்கழுத்தில் ஒரு அடி வைப்பார். அது அவருக்குப் பிடிக்காத முகஸ்துதி என்பதால் இதைச் சொல்கிறேன்: முடிவு என்பது நாம் நம்மின் அகத்தையும் புறத்தையும் பிரயோகம் மற்றும் துர்ப்பிரயோகப் படுத்தியதால் இயற்க்கைக்கு கட்ட வேண்டிய வரி. அந்த வரியை நாம் கட்டித்தான் ஆக வேண்டும். வரியை பின்னகர்த்தாலும் (postpone). ஆனால் இயற்கை அதை வசூலிக்காமல் விடாது.  எனவே உடல் நலம் தேறினாலும் தேறாவிட்டாலும் மேலும் கஷ்டங்கள், உபாதைகள் அனுபவிக்கக்கூடாது என்று மட்டும் ஆசைப் பட்டுக் கொள்கிறேன். 80 வயதில் (மனதால் தாங்க முடியும் என்றாலும்) உடல் தடுமாறும்.

ரகோத்தமன் எழுதிய “ராஜீவ் கொலை வழக்கு”

இது ஒரு மீள்பதிவு. முருகன், சாந்தன், பேரறிவாளன் விடுதலை பற்றி சர்ச்சை அடிபட்டுக் கொண்டிருப்பதால் மீண்டும் பதித்திருக்கிறேன்.

தமிழர்களுக்கு மறக்க முடியாத அதிர்ச்சி ராஜீவ் படுகொலை. ராஜீவின் உடல் சின்னாபின்னமாகிக் கிடந்த புகைப்படம் மறக்க முடியாத ஒன்று.

அதுவும் ஓரிரு மாதங்களில் சிவராசனைப் பிடித்தார்களா, கேஸ் முடிந்ததா என்றால் அதுவுமில்லை. நாலைந்து வருஷம் ஜெயின் கமிஷன், சந்திரசாமி சதி, சுப்ரமணியசாமியின் “திடுக்கிடும்” குற்றச்சாட்டுகள் என்று ஏதாவது நியூஸ் வந்துகொண்டே இருந்தது. இதில் வெளியே வராத விஷயங்கள் இருக்கிறது என்று தோன்ற வைத்தது.

வழக்கைத் துப்பறிந்த முக்கிய அதிகாரியான ரகோத்தமன் எழுதிய இந்தப் புத்தகம் சில விஷயங்களைத் தெளிவுபடுத்துகிறது. ரகோத்தமன் தலைமை அதிகாரி கார்த்திகேயனுக்கு அடுத்த இடத்தில் இருந்திருக்கிறார். அவருக்கு புலனாய்வில் என்ன நடந்தது, என்ன நடக்கவில்லை என்பதாவது நிச்சயமாகத் தெரிந்திருக்கும்.

ராஜீவ் இறந்த அன்று இதைச் செய்தது பஞ்சாப் தீவிரவாதிகளா, அஸ்ஸாம் தீவிரவாதிகளா என்றெல்லாம்தான் யோசித்திருக்கிறார்கள். புலிகளின் பேர் அவ்வளவாக அடிபடவில்லை. ராஜீவைக் கொன்று புலிகள் தமிழகத்தின் ஆதரவை இழக்கமாட்டார்கள் என்று நம்பி இருக்கிறார்கள். அவர்களுக்குக் கிடைத்த ஒரே க்ளூ ஹரிபாபுவின் காமிரா.

காமிராவை வைத்து ஹரிபாபுவின் வீட்டுக்குப் போயிருக்கிறார்கள். ஹரிபாபுவை வேலைக்கு வைத்திருந்த சுபா சுந்தரத்தின் மீது கண் விழுந்திருக்கிறது. நளினியைத் தொடர ஆரம்பித்திருக்கிறார்கள். முருகன், சின்ன சாந்தன், சிவராசன் என்று ஒவ்வொன்றாக கண்ணிகளைப் பிடித்திருக்கிறார்கள். திறமையான சதி, சிறப்பான புலனாய்வு.

ஆனால் ஹரிபாபுவின் காமிரா தற்செயலாகக் கிடைக்கவில்லை என்றால் புலனாய்வு தடுமாறிப் போயிருக்கும், எங்கே ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை என்பதை ரகோத்தமனே ஒத்துக் கொள்கிறார். அதிர்ஷ்டவசமாகக் கிடைத்த சதியின் ஒரு முனையை வைத்துக் கொண்டு எல்லாவற்றையும் கண்டுபிடித்திருக்கிறார்கள். சதிகாரர்களுக்கு ஹரிபாபுவின் அவசியம் என்ன? ராஜீவ் துண்டு துண்டாக சிதறி இருப்பதை ஃபோட்டோ பிடித்து வைத்துக் கொண்டு பார்த்து பார்த்து மகிழ்வார்களா? பயங்கர சைக்கோத்தனமாக இருக்கிறது.

ரகோத்தமனுக்கு புலனாய்வின் போக்கில் முழு திருப்தி இல்லை. தனக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்படவில்லை என்று நினைக்கிறார். குறிப்பாக மரகதம் சந்திரசேகரின் குடும்பத்தவர், கருணாநிதி, வைக்கோ, தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களை விசாரிக்க வேண்டாம் என்று தான் கட்டுப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டுகிறார். இது உண்மையாக இருக்கும் என்றுதான் நான் நினைக்கிறேன். வைக்கோவுக்கு சதியில் சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ பிரபாகரனுக்கும் புலிகளுக்கும் நெருக்கமானவர் அவர் என்பது தெரியாத தமிழன் கிடையாது. புலிகள் இப்படி தமிழ்நாட்டில் புகுந்து ராஜீவை படுகொலை செய்திருக்கிறார்கள், உங்களுக்கு ஏதாவது தெரியுமா என்றாவது விசாரிக்க வேண்டாமா? நாலைந்து வருஷம் கழித்து ஜெயின் கமிஷன் மட்டும்தான் அவரை விசாரித்ததாம். மரகதம் சந்திரசேகர் இந்திரா-ராஜீவுக்கு நெருக்கமானவராம். ராஜீவ் தமிழ்நாட்டுக்கு வந்ததே ம. சந்திரசேகர் மேல் இருந்த அன்பினால்தானாம். ஆனால் அவரது குடும்பத்தவரை ஏமாற்றிதான் ராஜீவுக்கு அருகே வந்திருக்கிறார்கள் என்பது தெளிவு. அவர்கள் யாரையும் எம்பராஸ் செய்ய வேண்டாமென்று மேல் அதிகாரிகள் நினைத்ததால் அவர்களை நெருங்க முடியவில்லையாம். கருணாநிதி அதே நாளில் ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் கூட்டத்துக்கு சில மணி நேரம் முன்னால் நடக்க இருந்த பொதுக் கூட்டத்தை ரத்து செய்திருக்கிறார். மேற்பார்வைக்கு இது ஒரு தற்செயல் நிகழ்ச்சி போலத் தெரியலாம். கருணாநிதியும் இது சாதரணமாக நடப்பதுதானே என்று சொன்னாராம். ரகோத்தமன் அப்படி கருணாநிதி கலந்து கொள்ளும் கூட்டம் ரத்து என்பது நடந்ததே இல்லை என்கிறார். இது நிச்சயமாக ஒரு சந்தேகத்துக்குரிய நிகழ்ச்சி. ஆனால் விசாரிக்க வேண்டாம் என்று முட்டுக்கட்டை போடப்பட்டதாம். சிவராசனை தன்னால் உயிரோடு பிடித்திருக்க முடியும், ஆனால் கமாண்டோ படைகளோடு காத்திருக்கும்படி பணிக்கப்பட்டேன், அதற்குள் சிவராசன் தற்கொலை செய்துகொண்டுவிட்டான் என்கிறார்.

ரகோத்தமன் வைக்கும் இரண்டாவது முக்கியக் குற்றச்சாட்டு மெத்தனம் – குறிப்பாக ராஜீவ் பாதுகாப்பு ஏற்பாடுகளில். ராஜீவ் வர வேண்டிய விமானம் சில பிரச்சினைகளால் மெதுவாக கிளம்பி இருக்கிறது, கூட்டத்துக்கு தாமதமாக வந்திருக்கிறார். அவர் அப்படி தாமதமாக வருவது பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும் போலீசுக்குத் தெரியவில்லை, ஆனால் சிவராசனுக்குத் தெரிந்திருக்கிறது. ராஜீவுக்கு யார் யார் மாலை போடுவார்கள் என்பதை ஒரு துண்டுக் காகிதத்தில் எழுதி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் யார், என்ன அட்ரஸ் என்று ஒரு அடிப்படை விவரமும் போலீசிடம் கிடையாது.

புத்தகத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சொல்லப்படும் விவரங்களை வைத்துப் பார்த்தால்:

  1. ராஜீவைக் கொலை செய்ய இவ்வளவு திறமையாக சதி செய்ய முடியும் என்ற பிரக்ஞையே நமக்கு அப்போது இல்லை. பாதுகாப்பு என்றால் பத்து போலீஸ்காரர்கள் பழைய போல்ட் ஆக்ஷன் துப்பாக்கிகளோடு கீழே நிற்பார்கள். அதி முக்கியத் தலைவர், நிறைய பாதுகாப்பு என்றால் நூறு போலீஸ்காரர்கள். இப்படிப்பட்ட ஒரு சதியை தடுக்கும் வல்லமை நமக்கு அப்போது இல்லை.
  2. ராஜீவ் கொல்லப்படுவதை ஃபோட்டோ எடுத்து வைத்துக் கொள்ளும் எண்ணம் இல்லாவிட்டால், ஃபோட்டோ எடுத்த ஹரிபாபு இறந்திருக்காவிட்டால், காமிரா ஸ்தலத்திலேயே விட்டுப் போயிருக்காவிட்டால், கொலையாளிகள் தப்பி இருக்க நிறைய வாய்ப்பு இருந்திருக்கும்.
  3. தமிழ்நாட்டில் அப்போது புலிகளுக்கு எல்லா லெவலிலும் தொடர்பு இருந்திருக்கிறது – இந்திரா குடும்பத்தின் மீது பக்திப் பரவசத்தோடு இருந்த மணிசங்கர் ஐயர், வாழப்பாடி ராமமூர்த்தி, மரகதம் சந்திரசேகர் உட்பட. அன்று ஈழத் தமிழர்களிடம் இருந்த அனுதாபத்தை எப்படி உபயோகித்துக் கொள்வது என்று புலிகளுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது.
  4. வைக்கோ போன்றவர்களுக்கு இப்படி ஒரு முயற்சி நடக்கப் போகிறது என்று தெரிந்திருக்கலாம். இல்லை பிரபாகரன் புத்திசாலித்தனமாக யாருக்கும் விஷயத்தைச் சொல்லாமலும் இருந்திருக்கலாம். ஆனால் விசாரிப்பதற்கான முகாந்திரம் இருக்கிறது. அரசியல் தலைவர்களை soft ஆகத்தான் நடத்தி இருக்கிறார்கள்.
  5. எனக்கு இந்திய தரப்பில் சதி எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் இந்தியர்களுக்கே உரிய மெத்தனம், பழைய தொடர்புகள் இன்று வெளியே தெரியக்கூடாது என்ற எண்ணம் இருந்ததாகத் தெரிகிறது.

எது எப்படி இருந்தாலும் சிறப்பாகத் துப்பறிந்திருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ரகோத்தமன் சுட்டிக் காட்டும் குறைகள் இன்றாவது நீக்கப்பட்டால் நன்றாக இருக்கும்.

நல்ல ஆவணம், சுவாரசியமாகவும் இருக்கிறது. படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

தொடர்புடைய சுட்டிகள்:
ஈழத் தமிழர்கள், விடுதலைப் புலிகள் பற்றி சில பதிவுகள்

தமிழ் ஹிந்து தளத்தில் மேலும் ஒரு சிறுகதை

ஆயிரம் துச்சாதனர் என்று இன்னும் ஒரு மகாபாரதச் சிறுகதை. பதித்த தமிழ் ஹிந்து தளத்தினருக்கும் ஜடாயுவுக்கும் நன்றி!

சிறுகதை கொஞ்சமாவது உருப்படியாக உருவாக உதவியவர்கள் எம்.ஏ. சுசீலா மேடம், விசு மற்றும் முகின் மற்றும் ஜடாயு. சுசீலா இந்தக் கதையின் முதல் வடிவம் மிகவும் வெளிப்படையாக இருக்கிறது என்று சொன்னார். அவர் சொன்ன பிறகு மீண்டும் படித்துப் பார்த்தேன், எனக்கும் அப்படித்தான் தோன்றியது. மாற்றி எழுதியே தீர வேண்டும் என்று தெரிந்தது.

முதலில் சிறுகதைக்கு “முகநக நட்பது” என்று பேர் வைத்திருந்தேன். ஜடாயு மிகவும் வெளிப்படையான பெயர், வேறு மாற்ற முடியுமா என்று கேட்டார். “ஆயிரம் துச்சாதனர்” கொஞ்சம் பரவாயில்லை. ஜடாயு

கர்ணனின் குடும்பம், பேரக் குழந்தைகள் பற்றியெல்லாம் பைரப்பா “பருவ”த்தில் எழுத்யிருக்கிறார். சூதர்களின் சமூக அந்தஸ்து, அவர்கள் ஒரு குழுவாக இயங்குவது எல்லாம் வரும். உங்கள் கதை எழுப்புவது ஒரு சுவாரஸ்யமான ஊகம். அத்தகைய ஊகத்திற்கு வியாச பாரத்தில் இடமும் இருக்கிறது

என்று சொன்னது சரி ஐடியா ரொம்ப மோசமில்லை என்று கொஞ்சம் நம்பிக்கை தந்தது.

Visuவிசு மிகத் தெளிவாக சில கருத்துகளை சொல்லி இருந்தான். அது எழுத ஆசைப்படும் எல்லாருக்குமே உதவும் என்று இங்கு பதிக்கிறேன்.

உங்கள் கதையை படித்தேன். உரையாடல்கள் நன்றாக இருக்கிறது. சிக்கலில்லாத, நேரிடையான எளிய கதை. கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளை “அறிய” முடிகிறது. (உதா: த்யுதிக்கு வருத்தமே இல்லை. பானுமதிக்கு வருத்தம், காட்டமுடியவில்லை. துச்சாதனனுக்கும், சகுனிக்கும் வெளிப்படையாகவே வருத்தம்). தூணைப் பிளந்து வந்த சீயம் உவமை நன்றாக இருந்தது.

எனக்கு கதையை “உணர” வேண்டும். அதற்கு காட்சிப்படுத்துதல் நிறைய உதவும். உதாரணம்: அந்த அரண்மனை, அவர்கள் அனிந்த உடைகள், ஆபரணங்கள், அமரும் ஆசனங்கள், சேடியர்/காவலர் அறிவிக்கும் முறைகள்,… கதையின் நீளம் அதிகரித்துவிடும் சாத்தியம் இருக்கிறது. பரவாயில்லை, எழுதுங்கள். தேவைப்பட்டால் சிறுகதைக்கு பதிலாக குறுநாவலாக தலைப்பிட்டுக்கொள்ளலாம்.

மேலும் புதிய உவமைகள் தேவை.

முடிந்த வரை இதுபோன்ற வரிகளை தவிர்க்கவும். (கொலைவெறி) “துச்சாதனன் உன் மீது கொலை வெறியில் இருக்கிறான்.”

அதே போல, இந்தக் கதை மரபான, ஏற்கனவே தெரிந்த ஒரு முடிவை மீண்டும் சொல்வது போல இருக்கிறது. (கர்ணனுக்கும் துரியனுக்கும் உள்ள நட்பின் ஆழம்). மாற்று சாத்தியங்கள் கதையில் வெளிப்படவில்லை; கதையை படித்ததற்குபின் மனதில் விரியும் கதை என எதுவும் இல்லை. ( நீங்கள் கடைசியில் சேர்த்திருக்கும் அடிக்குறிப்பு, ஒரு நல்ல மாற்று வாசிப்பு சாத்தியத்தை உள்ளடக்கியது.)

மாற்று சாத்தியங்கள் பற்றி விசு சொல்வது சரியே, முழுமையாக உடன்படுகிறேன். ஆனால் அந்த மாற்று சாத்தியங்கள் மனதில் கதையாக உருவாகவே இல்லை என்பதுதான் பிரச்சினை.

முகின் அடித்த சில கமெண்டுகள்.

தொடக்கத்தில் உள்ள “அதிகாரி”களை எடுத்துவிட்டு அந்த கால வார்த்தைகளை போடவும். எனக்கு “அதிகாரி வந்தா சல்யூட் அடிக்க தெரியாதா ராஸ்கல்” என்ற வடிவேலு ஜோக் ஞாபகம் வந்து கொண்டேயிருக்கிறது.
…”ஓடோடி வருகிறாரம்மா உன் கணவர்!” நடிகை சாவித்திரி பேசுவதைப் போல உள்ளது. அதைப் போல தான் “ஏனடா கர்ணா..பாரடா கர்ணா” இன்ன பிற.

தமிழ் ஹிந்து தளத்தில் Karna’s Wife: The Outcast’s Queen என்று ஒரு புத்தகத்தின் அட்டைப்படம் சேர்க்கப்பட்டிருக்கிறது. நான் இது வரை இந்தப் புத்தகத்தைப் பற்றி கேள்விப்பட்டதில்லை. யாராவது படித்திருக்கிறீர்களா?

தொகுக்கப்பட்ட பக்கம்: எழுத்துக்கள்

விளையாட்டு எழுத்து – குண்டப்பா விஸ்வநாத் பற்றி

gundappa_viswanath

என் வாழ்வில் இரண்டு விளையாட்டு நிகழ்ச்சிகள் என்னால் மறக்க முடியாதவை. ஒன்று சென்னையின் 1974-இல் விஸ்வநாத் 97 ரன்கள் அடித்த டெஸ்ட் மாட்ச். அப்போது எனக்கு பத்து வயது கூட இருக்காது. கிராம வளர்ப்பு. கில்லி, கோலி, பம்பரம், கபடி எல்லாம் தெரியும். பாட்மிண்டன், வாலிபால் இரண்டும் பார்த்திருக்கிறேன். கிரிக்கெட் பேர் மட்டுமே கேள்விப்பட்டிருந்தேன். சென்னைக்கு எப்போதாவது போவோம். மாட்ச் ஆரம்பித்த அன்று என் பெரியப்பா என்னை அவரது நண்பர் வீட்டு டெலிவிஷனில் மாட்ச் பார்க்க அழைத்துப் போனார். ஆவென்று பார்த்துக் கொண்டிருந்தேன். ஸ்லிப், ஷார்ட் லெக், கல்லி, ஸ்க்வேர் கட் என்று கேட்கும்போது ஒன்றும் புரியவில்லை, ஏதோ மந்திரம் ஜெபிப்பது போல இருந்தது. ஆனால் ஒன்று தெளிவாகத் தெரிந்தது. விஸ்வநாத் வேறு லெவலில் விளையாடிக் கொண்டிருந்தார். ஆண்டி ராபர்ட்ஸை எதிர்கொள்ளும் திறமை அன்று வேறு யாருக்கும் இல்லை. அதைப் புரிந்து கொள்ள கிரிக்கெட்டின் நுணுக்கங்கள் எதுவும் தெரிய வேண்டியதில்லை.

அன்றிலிருந்து என் மனதுக்கு மிக நெருக்கமான கிரிக்கெட் வீரராக விஸ்வநாத்தை மட்டுமே உணர்ந்திருக்கிறேன். காவஸ்கரும் சந்திரசேகரும் கபிலும் ஸ்ரீகாந்த்தும் சச்சினும் திராவிடும் கங்குலியும் தோணியும் கும்ப்ளேயும் என்னதான் விளையாடினாலும் விஸ்வநாத்தின் இடத்தைப் பிடிக்க முடியவில்லை.

இந்த உணர்வை ஸ்ரீராம் தயானந்த் எழுதி இருக்கும் இந்தக் கட்டுரை மிக அற்புதமாகக் காட்டுகிறது. குள்ளா (விஸ்வநாத்துக்கு வைத்த செல்லப் பெயர்) மீது இந்தக் கட்டுரையாளருக்கு உள்ள அபிமானம், 20-30 ரன்களே அடித்தாலும் அதிலேயே மனம் திளைப்பது, எல். சிவராமகிருஷ்ணன் சென்சுரி அடித்து விஸ்வநாத் விளையாடுவதைப் பார்க்க முடியாமல் செய்தபோது வந்த எரிச்சல் என்று ஒரு தீவிர ரசிகனின் மனநிலையை மிகத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறார். கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

joe_montana

விளையாட்டு பற்றி பொதுவாக தமிழில் அதிகம் எழுதப்படுவதில்லை. ஆங்கிலம்தான். அதுவும் என் தலைமுறைக்காரர்களுக்கு விளையாட்டு எழுத்து அறிமுகம் ஆனது ஹிந்து பத்திரிகை மூலம்தான். நான் எழுதினால்தான் உண்டு போலிருக்கிறது! புனைவுகளோ வெகு அபூர்வம். கிரிக்கெட் பற்றி சுஜாதா இரண்டொரு கதைகள் எழுதி இருக்கிறார், அவ்வளவுதான். அவற்றில் பேப்பரில் பேர் சிறுகதை எனக்குப் பிடித்த ஒன்று.

பின்குறிப்பு: இரண்டாவது மறக்க முடியாத விளையாட்டு நிகழ்ச்சி? அமெரிக்கா வந்த அன்று (1992 டிசம்பர்) ஹோட்டல் அறையில் டிவி சானல்களை மாற்றிக் கொண்டிருந்தேன். அமெரிக்கன் ஃபுட்பால் என்றால் என்னவென்றே தெரியாது.  ஜோ மான்டானா என்ற quarterback சில வருஷங்களுக்குப் பிறகு உடல்நிலை தேறி மீண்டும் ஆடும் முதல் ஆட்டம் அது. யார் வென்று கொண்டிருக்கிறார்கள் என்பதே சரியாகப் புரியாவிட்டாலும் மான்டானா விளையாடுவது வேறு லெவல் என்று மட்டும் தெளிவாகத் தெரிந்தது….

தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்

தொடர்புடைய சுட்டி: ஸ்ரீராம் தயானந்தின் கட்டுரை

கூட்டாஞ்சோறு

சிலிகன் ஷெல்ஃபுக்கே ஒழுங்காக எழுத முடியாத நிலை. இதில் இன்னொரு ப்ளாகையும் செயலாக மாற்றுவது கஷ்டம்தான். இருந்தாலும் முயற்சி செய்து பார்க்கிறேன். நண்பர் ராஜனின் 2014 தேர்தல் கணிப்பை இன்று பதித்திருக்கிறேன். பா.ஜ.க. கூட்டணி கட்சிகளோடு சேர்ந்து 252 தொகுதிகளில் வெல்லும் என்கிறார் ராஜன். ஒவ்வொரு மாகாணத்திலும் எத்தனை தொகுதிகளில் வெல்லும் என்று கணித்திருக்கிறார்…

 

மொழி – எமர்சன்

emerson

மனிதனுக்கு இயற்கையின் மூலம் கிடைத்த மூன்றாவது பயன் மொழி ஆகும். இயற்கை என்ற ஊடகம் மூலம் மொழி மூன்று படி நிலைகளில் மனிதனுள் மொழி உருவாகிறது.

1. மனித மனதிற்குள்ளே உள்ள சகல சொற்களும் இயற்கையில் அவன் கண்டு, அனுபவப்பட்ட ஏதோ ஒன்றின் அடிப்படயிலேயே உருவாக்கப்பட்டுள்ளன. அவன் அனுபவத்திற்குள் வந்த இயற்கையின் உறுப்பை மற்றொன்றை சுட்டும் சின்னமாக மாற்றி சேர்த்துக் கொள்கிறான். சொற்களின் மூலத்தை தேடிச் சென்றால், ஆதிமொழியில் இயற்கையில் காணக் கிடைக்கும் ஒரு பொருளின் வரைபடத்தில் தான் சென்று முடியும். அதனாலேயே பழங்குடிகளும், குழந்தைகளும் தங்களைச் சுற்றி உள்ள உலகத்தை பெயற்சொற்கள் கொண்டு மட்டுமே குறிப்பிடுகிறார்கள்.

 2. முதல் நிலையில் வார்த்தைகள் இயற்கை அங்கங்களின்  குறியீடு என்றால் அடுத்ததாக இயற்கையின் அங்கங்கள் மனித எண்ணங்களின் கூறியீடுகளாக உள்ளன. அவற்றைக் கொண்டே மனிதன் தன் மனவோட்டங்களை வெளிப்படுத்துகிறான். மனித மனம் அருவமான உணர்ச்சிகளுக்கு குறியீடுகளாக இயற்கை செயல்பாடுகளையும், மாறும் அதன் நிலைகளையும் தொடர்புறுத்திக் கொள்கிறது. மாறும் பருவ நிலைகளை மனநிலைகளை உணர்த்தும் உவமைகளாக, பாயும் வேங்கையை வீரனை சுட்டுவதாக, எறும்பின் இயல்பை விடாமுயற்சியின், சுறுசுறுப்பின் சின்னமாக, இன்னும் பல விதங்களில் இயற்கையில் காணகிடைக்கும் செயல்களை தன் மனதின் வெளிப்பாடுகளாக பெரிதாக்கி, மாற்றி அமைத்து தன் மொழியில் சேர்த்துக் கொண்டேயிருக்கிறது.

 இயற்கையை தன் என்ண்ணங்களின் மொழிபெயர்ப்பாக மிக சிறந்த முறையில் மாற்ற கூடிய ஒருவன் தன் மொழியை இயற்கையின் அருகிலிருந்து அவதானிப்பதன் வழியாகவே உருவாக்கியிருப்பான். அதன் பொருட்டே ஒரு விவசாயியின், முதிர்ந்த கிராமத்தானின் சொற்கள் என்றும் மனிதர்களுக்கு நேர்மையின், உண்மையின் வாக்காக தோன்றுகின்றன. எண்ணங்களில் தூய்மையும், எளிமையும், தன் மனதை துல்லியமாக மற்றவர் அறிய உரைக்க வேண்டும் என்ற உந்துதலையும் கொண்டவர்கள் இயற்கையிலிருந்தே தன்னை வெளிப்படுத்தும் சொற்களை பெற்று இருப்பார்கள்.

 புகழ், அதிகாரம், செல்வம் போன்றவற்றை மட்டுமே அடைய மறைமுகமாக ஆசைப்படுகையில் இயற்கை, மொழியின் வழியே எதை சுட்டுவதற்காக எடுத்தாளப்பட்டதோ அதை விட்டு வெகு தூரத்தில் சென்று விடுகிறது. காகித பணத்தைப் போல ஒரு வார்த்தைக்கு விளக்கமாக மற்றொரு வார்த்தை என திரிக்கப்பட்டு அதன் அசல் மதிப்பு மிகவும் தாழ்ந்து நசிந்து விடுகிறது. என்றும் மனிதனின் வீழ்ச்சியை மொழியின் வீழ்ச்சி பின்தொடர்ந்து வருகிறது. எவ்வளவு காலங்கள் இயற்கையிலிருந்து விலக்கி வைத்து மொழியினூடே உண்மை மறைக்கப்பட்டாலும், மனதின் உண்மையை உரைக்கும் வலுவுடைய, நேர்மையுடைய மனிதன் அதை கையிலெடுக்கையில் இதுவரை படிந்திருந்த களிம்புகளை உதறிக்கொண்டு மொழி இயற்கையிலிருந்து புதிய குறியீடுகளை வாங்கி தன் மேல் உடுத்திக் கொண்டு எழுந்து வரும். அப்படி மீண்டெழுந்த மொழி மனித சமூகங்களை அடுத்த மேல் நிலைக்கு ஒட்டுமொத்தமாக நகர்த்தும் வல்லமையை பெற்றிருப்பதை நாம் காணலாம்.

 3. மனிதனின் எண்ணங்களையும் அவனுடைய சிறிய வாழ்வின் அலுவல்களையும் நடத்திச் செல்லும் மொழியின் வாகனமாக இருப்பது மட்டும் தான் இயற்கை உள்ளதா? அது உண்மையென்றால் மனிதனை சூழ்ந்துள்ள இயற்கையின் பொருட்களும், நிகழ்வுகளும் தங்களுக்கென்று ஒரு உண்மையை கொண்டிருக்கவில்லை என்று பொருள்படுகிறது. இயற்கையின் மொழி வெறுமனே மனித மனதின் உவமைகளே என்று குறுக்கப்பட்டு விடுகிறது. அதுவல்ல உண்மை. இயற்கையின் எல்லா கூறுகளும் தன் இருப்பின் வழியே காலாதீதமான, மேலான உண்மையை, தனி மனிதனுக்கும், மனித இனத்திற்கும் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

Muthukrishnanஇயற்கையின் செயல்கள் வழியே மனிதன் கண்டு கொண்ட அழியா உண்மைகள் பல. அவை எல்லாம் பழமொழிகளாகவும், கதைகளாகவும், விழுமியங்களாகவும், நீதிகளாகவும் அதன் மனதில் தேங்கிவிட்டன. உதாரணமாக காக்கை உட்கார பனை மரம் சரிந்தது, ஓடும் நீர் தெளிந்து இருக்கும், காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்று பல முக்கியமற்ற தினசரி அவதானிப்புகள் சகல மனிதர்களுக்கும் என்றும் அழியாத உண்மைகளை சொல்வதாக மாறிவிட்டன. இங்கு உள்ளவைகளை எல்லாம் உருவாக்கிய ஆற்றல் அல்லது ஆன்மா என்ற ஒன்று இயற்கையின் வழியே ஆதார உண்மைகளை கண்ணாடியினூடே செலுத்தப்பட்ட ஒளியாக உன்னத மனங்களுக்கு சில நேரங்களில் அளிக்கிறது. இயற்கை என்ற புதிரின் முன்னால் மனிதர்களுள் சிறந்த மனங்கள் அந்த செய்தியை எதிர்பார்த்து வரலாறு முழுவதும் காத்துக் கொண்டேயிருக்கிறார்கள். அவ்வண்ணம் இயற்கையை பிரித்து பேருண்மைகளை கண்டு கொள்ளும் மனிதனுக்கு அதன் ஒவ்வொரு பொருளும், நிகழ்வும் ஆன்மாவின் புதியதொரு பக்கத்தை திறந்து வைத்துக் கொண்டேயிருக்கிறது.  புலப்படா உண்மைகள் இயற்கையின் வழியே பிரித்தறியப்பட்டு மனித அறிவின் பகுதியாக சேகரிக்கபடும் போது அவை மனித ஆற்றலின் மற்றுமொரு ஆயுதமாக மாற்றம் கொண்டு விடுகிறது. 


இது வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பல்ல என்பதை மீண்டும் சொல்லிவிடுகிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: முத்துகிருஷ்ணன் பதிவுகள்

தொடர்புடைய சுட்டி: எமர்சனின் மூலக் கட்டுரை
எமர்சனின் “அழகு” கட்டுரை பற்றி முத்துகிருஷ்ணன்

தமிழ் ஆடியோ புத்தகங்கள்

முந்தைய ஒரு பதிவின் நீட்சி இது

சான் ஃப்ரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில் இட்ஸ்டிஃப் என்ற வானொலி நிகழ்ச்சியை பல வருஷங்களாக சிறப்பாக நடத்தி வரும் ஶ்ரீகாந்த்srikanth_srinivasa ஶ்ரீனிவாசா தமிழ்ப் புத்தகங்களை ஆடியோவாகக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கல்கியின் சரித்திர நாவல்களான பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, அலை ஓசை, உ.வே. சாமிநாதய்யரின் “என் சரித்திரம்” ஆகியவை itunes மற்றும் ஆண்ட்ராய்ட் தொழில் நுட்பத்தில் கேட்கலாம். ஶ்ரீ பல தமிழ் நாடகங்களில் நடித்தவர். அவர் இந்த ஆடியோ புத்தகங்களை பாத்திரத்துக்கேற்ப குரலை கொஞ்சம் மாற்றிப் பேசுவது இவற்றை இன்னும் சுவாரசியமாக ஆக்குகிறது.

இந்த ஆடியோ புத்தகங்கள் தமிழ் படிக்கத் தெரியாத இன்றைய தலைமுறையினருக்கு உதவியாக இருக்கும்.

2011இல் வெளியான பொன்னியின் செல்வன் ஆடியோ 75 மணி நேரம்; சிவகாமியின் சபதம் 33 மணி நேரம் (2012); பார்த்திபன் கனவு 11 மணி நேரம் (2011). என் சரித்திரம் 24 மணி நேரம் (2014)

வாங்க இந்தத் தளத்துக்கு செல்லுங்கள்.

இவற்றைப் பற்றிய தினமலர் விமர்சனம் இங்கே. பதிவர் ரமணனின் விமர்சனம் இங்கே. ஸ்ரீயைப் பற்றி ஹிந்து பத்திரிகையில் வந்த குறிப்பு இங்கே.

தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்