தரம் பிரித்தல் II

bags_rv_jeyamohanநான் பெருமதிப்பு வைத்திருக்கும் வாசகரும் எழுத்தாளருமான ஜெயமோகன் என் “இலக்கியக் கோட்பாடுகளும் தரம் பிரித்தலும்” பதிவுக்கு சிறப்பான எதிர்வினை புரிந்திருக்கிறார்.

தரம் பிரிக்காமல் படிக்க முடியாது என்று அவர் சொல்வதில் எனக்கு முழு சம்மதமே. நீங்கள் சரோஜா தேவி புத்தகங்கள் மட்டுமே படித்தாலும் அதிலும் உங்களுக்கு இதுதான் டாப், இது மகா மோசம் என்ற பாகுபாடு இல்லாமல் இருக்க முடியாது. படிப்பு, இசை, சினிமா, ஓவியம், சமையல் என்று ஆய கலை அறுபத்திநான்கில் எதுவாக இருந்தாலும் அதைத் தரம் பிரிக்காமல் ரசிப்பது சாத்தியமே இல்லை. என் பதிவிலும் நான் தரம் பிரித்தலைப் பற்றி ஒரு வார்த்தை கூட எழுதவில்லை என்பதை கவனித்திருக்கலாம். சொல்லத் தேவையில்லை என்று விட்டுவிட்டேன், இப்போது படித்தால் அந்தப் பதிவு – குறிப்பாக அந்தத் தலைப்பு – இலக்கியக் கோட்பாடும் தேவையில்லை தரம் பிரிப்பதும் தேவையில்லை என்ற பொருள் தருகிறதோ என்று சந்தேகம் வருகிறது. தரம் பிரிப்பது தேவையா இல்லையா என்பதை விடுங்கள், தரம் பிரிக்காமல் படிப்பது சாத்தியமே இல்லை.

தரம் பிரிப்பதற்கு எது அடிப்படை என்பதுதான் எனக்கும் ஜெயமோகனுக்கும் இடையில் உள்ள கருத்து வேறுபாடு. எனக்கு படிப்பவர் ஒவ்வொருவரும் அவரவரது சொந்த ரசனையை வைத்துத் தரம் பிரிப்பதே இயற்கையானது என்று தோன்றுகிறது. (நல்ல்) புத்தகத்தைப் படிக்கும்போது அந்தப் புத்தகத்தில் மூழ்கிவிடுகிறோம், அப்போது கோட்பாட்டைப் பற்றி எல்லாம் எப்படி யோசிக்க முடியும்? புத்தகத்தைப் படிக்கிறோம், பிடிக்கிறது/பிடிக்கவில்லை என்று ரசனையின் அடிப்படையில் முடிவு செய்கிறோம், தன்னிச்சையாகத் தரம் பிரிக்கிறோம். அதற்கப்புறம் வேண்டுமானால் இது முற்/பிற்போக்குப் புத்தகம், முன்/பின் நவீனத்துவம், சர்ரியலம்/சொரியலிசம் என்று பாகுபடுத்தலாம், அந்தந்த கோட்பாடு சரியாக வெளிப்பட்டிருக்கிறதா என்று யோசிக்கலாம். புத்தகத்தைப் படிக்காமல் கோட்பாட்டைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தால் புத்தகத்தை கோட்டை விட்டுவிடுவோம் என்றே நான் கருதுகிறேன்.

ஜெயமோகனும் அப்படித்தான் புத்தகங்களை அணுகுகிறார் என்றே நான் நினைக்கிறேன். இலக்கியக் கோட்பாடு என்பதே தனக்குப் பிடித்த புத்தகங்களில் உள்ள பொதுக் கூறுகள் என்னென்ன என்று யோசித்து அவற்றை synthesize செய்து தொகுப்பதுதான். ரசனைதான் கோட்பாட்டுக்கும் அடிப்படை என்றால் அது என் ரசனையாக இருப்பதுதான் எனக்கு சரிப்படும்.

ஜெயமோகனே கூட மாஸ்டர் கிரிஸ்டியன் என்ற புத்தகத்தைப் பற்றி – விமர்சகர்கள் ஒதுக்கும் புத்தகம் அது – சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார். அது தன் கோட்பாட்டுக்கு ஒத்து வருகிறதா என்று யோசித்துக் கொண்டா அந்தப் புத்தகத்தைப் படித்திருப்பார்?

இன்னொரு விதமாகவும் யோசித்துப் பார்க்கலாம். படிப்பதில் ஆர்வமே இல்லாதவர் கூட ஷேக்ஸ்பியரையும் கம்பனையும் பற்றி கேள்விப்பட்டிருப்பான்(ள்). அவர்கள் பயன்படுத்தியதை விடப் பல நூறு மடங்கு வார்த்தைகளை அவர்களை ஆராய்ச்சி செய்பவர்கள், விமர்சிப்பவர்கள், கோட்பாடுகளை முன் வைப்பவர்கள் எழுதி இருக்கிறார்கள். அவர்களில் எத்தனை பேரை நமக்குத் தெரியும்? ஏன் நாம் மூல நூல்களையே தேடிப் போகிறோம்?


அவரது சில particular கருத்துக்களுகு எதிர்வினைகள் கீழே. இவை என் சொந்த அனுபவங்களினால் உருவானவை. எனக்கும் என் சில நண்பர்களுக்கும் பொருந்துவதை நான் பொதுமைப்படுத்த முடியாதுதான். ஆனால் என் அனுபவங்கள் ஜெயமோகனின் கருத்துக்களுக்கு எதிர் உதாரணஙகளாக இருக்கும்போது அவரும் பொதுமைப்படுத்த முடியாது இல்லையா?

இலக்கியக் கோட்பாடுகள், அழகியல் கொள்கைகள் எதற்காக? எந்த இலக்கியக் கொள்கையிலும் பயிற்சி இல்லாத இலக்கியவாசகர் என எவரும் இல்லை. சமகாலத்தில் எது மேலோங்கியிருக்கிறதோ, எது வெகுஜனப்புகழ் பெற்றிருக்கிறதோ அதை தன்னை அறியாமலேயே அவர் அறிந்து வைத்திருப்பார். முயற்சி செய்து இலக்கியக் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் கற்காவிட்டால் தனக்கு தன்னிச்சையாகத் தெரியவந்த வாசிப்பு முறையையே முழுமையான ஒரே முறை என நம்பி பிற அனைத்தையும் நிராகரிக்கும் இடத்துக்குச் செல்வார். ஆகவேதான் இலக்கியக் கொள்கைகள் தொடர்ந்து விமர்சகர்களால் அறிமுகம் செய்யபப்டுகின்றன. எந்த இலக்கிய விமர்சனமும் வாசிபப்பதற்கான பயிற்சியே. பயிற்சி தேவையில்லை என்பவர் முன்னகர்வை மறுதலிக்கிறார். பயிற்சி எதுவானாலும் அதற்கு முடிவே இல்லை.

சமகாலத்தில் எது மேலோங்கி இருக்கிறதோ என்று ஜெயமோகன் சொல்லி இருப்பதை contemporary fiction என்று நான் பொருள் கொள்ளவில்லை. ஷேக்ஸ்பியர் காலத்தில்தான் கிரிஸ்டோஃபர் மார்லோவும் எழுதினார், ஆனால் இன்று சமகாலப் புகழ் பெற்றிருப்பதும் அன்றும் புகழ் பெற்றிருந்ததும் ஷேக்ஸ்பியர்தான். மார்லோவையும் படிக்க எனக்கும் ஆசைதான், ஆனால் நேரம் குறைவாக இருக்கிறது. மார்லோவைப் படிக்கலாமா வேண்டாமா என்று முடிவெடுக்க எனக்கு வேண்டியது என்னோடு ஒத்த ரசனை உள்ள ஒருவர் சொல்லும் பரிந்துரை – ஜெயமோகன் மார்லோவைப் படிக்கத் தவறாதீர்கள் என்று சொன்னால் கட்டாயம் படிப்பேன். மார்லோ நேர விரயம் என்று அவர் சொன்னால் மேலே போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதான்.

Wisdom of the Crowds எனக்குப் அந்நாளைய புத்தகங்களில் எதைப் படிக்கலாம் என்று சில அறிவுரைகள் தருகிறது. அவற்றைப் படிக்கவே நேரம் போதவில்லை. இருக்கும் நேரத்தில் கோட்பாடுகளைப் படிப்பதை விட, புத்தகங்கள் அந்தக் கோட்பாட்டுக்கு பொருந்துகின்றனவா என்று அறிந்து கொள்வதை விட, மூல நூல்களைப் படிப்பதேயே நான் விரும்புகிறேன். அதற்கு எனக்குத் தேவை ஒத்த ரசனை உள்ளவர்களின் பரிந்துரைகள் மட்டுமே. கோட்பாடுகள், விமர்சனங்கள், சில சமயம் விட்டுப் போகும் இடங்களை நிறைவு செய்கின்றனதான். ஆனால் என் கண்ணில் அவற்றின் Return on (Time) Investment குறைவுதான்.

ஒரு தமிழக ஓவிய ரசிகர் ரவிவர்மா பாணி ஓவியத்துக்குப் பழகியிருப்பார். அவர் வான்கா ஓவியத்தை பார்த்தால் அது பிழையாக வரையப்பட்டிருக்கிறது என்று நினைப்பார். தெளிவில்லாமல் இருக்கிறது என குற்றம் சாட்டுவார். அவருக்கு இம்பிரஷனிசம் பற்றி அறிமுகம் செய்து அதை புரிந்துகொள்ளும் மனநிலையும் அவருக்கிருந்தால் அதை அவர் ரசிக்க முடியும்.

நான், மற்றும் என் பல நண்பர்களைப் பார்த்த வரையில் இதெல்லாம் சும்மா. ரவி வர்மா ஓவியங்களைப் பார்த்து வளர்ந்த நாங்கள் பலரும் மோனே, ரஃபேல், மைக்கெலாஞ்செலோ, ப்ருகெல், வான் கா, ஜாமினி ராய், அம்ரிதா ஷெர்கில், ரெம்ப்ராண்ட், வெர்மீர், நார்மன் ராக்வெல், டாலி, கனலெட்டோ போன்றவர்களின் ஓவியங்களை முதல் முறை பார்த்தபோது அசந்துதான் போனோம். பிக்காசோவின் பல ஓவியங்கள் எனக்குப் புரிய்வில்லைதான், ஆனால் குயர்னிகாவை முதல் பார்வையிலேயே ரசிக்காத நண்பர்கள் யாரும் எனக்கில்லை. ஓவியங்களைப் புரிந்து கொள்ள எங்களுக்கு உதவி செய்தது ஓவிய வரலாறு பற்றிய புத்தகங்கள்தான். கியோட்டோவின் எந்த ஓவியமும் எனக்கு சிறப்பானதில்லை, ஆனால் கியோட்டோவின் இடம் என்ன என்று புரிந்து கொள்ள முடிகிறது.

வழக்கமான பாலகுமாரன் ராஜேஷ்குமார் கதைகளை வாசிக்கும் ஒருவர் நீல. பத்மநாபனை வாசித்தால் அவர் தேவையில்லாமல் சில்லறை விஷயங்களை பரப்பிச் சொல்லி கதையை விட்டுவிடுகிறார், கதை பரபரப்பாக இல்லை என்று நினைப்பார். அது இயல்புவாத எழுத்துமுறை, அதன் அழகியல் இப்படிப்பட்டது என அவர் அறிந்துகொண்டால் அந்த மனத்தடையை அவர் தாண்டமுடியும்.

என் அனுபவத்தில் இது முழுவதும் தவறு. சுஜாதா, கல்கி, ஜெயகாந்தனைத் தாண்டி தமிழ் இலக்கியம் இல்லை என்று நான் நினைத்த காலம் உண்டு. (இத்தனைக்கும் சிறு வயதிலேயே தலைமுறைகள், சாயாவனம் ஆகியவற்றைப் படித்திருந்தேன்.) புதுமைப்பித்தனையும், தி.ஜா.வையும், சுந்தர ராமசாமியையும், ஏன் ஜெயமோகனையும் முதல் முறை படித்தபோது ஆனந்தமாகத்தான் இருந்தது. இன்றும் எனக்கும் இலக்கிய விமர்சனத்தோடு அறிமுகம் இல்லை என்றுதான் சொல்வேன். அதனால் எந்த மனத்தடையும் உருவாவதாக எனக்குத் தெரியவில்லை. நீல. பத்மநாபனே பரபரப்பாக இல்லை என்று நினைப்பவர், இயல்புவாத எழுத்து முறை பற்றிய விளக்கங்களை எப்படிப் பொறுமையாகப் படிப்பார்?

மீண்டும் ஒரு முறை: தரம் பிரித்தலைத் தவிர்க்க முடியாது, அது மூச்சு விடுவதைப் போல. ஆனால் தரம் பிரிப்பதின் அடிப்படை உங்கள் தனிப்பட்ட ரசனையாக இருப்பதுதான் இயற்கையானது. இலக்கியக் கோட்பாட்டை வைத்துத் தரம் பிரிப்பது படித்து முடித்த பின்னால் மட்டுமே நடக்கக் கூடியது. அதில் ஒரு செயற்கைத்தனம் இருக்கிறது. அதை பேராசிரியர்களுக்கும் ஜெயமோகன்களுக்கும் விட்டுவிடுங்கள்!

ஜெயகாந்தன் பேட்டி

jeyakanthanஹிந்து பத்திரிகையின் தமிழ் பதிப்பில் வெளிவந்திருக்கிறது. தவறவிடாதீர்கள்!

அதுவும் முன்னாள் விகடன் ஆசிரியர் எஸ். பாலசுப்ரமணியன் ஜெயகாந்தனைப் பற்றி நினைவு கூர்வது மிகப் பிரமாதம். கட்டாயம் படியுங்கள்! விகடனில் ஜெயகாந்தன் எழுத ஆரம்பித்தது பல வேறு விசைகள் ஒன்றாகச் சேர்ந்து ஒரு நல்ல விளைவை உருவாக்கியது போல இருக்கிறது.

வசதிக்காக சில பகுதிகளை கீழே கொடுத்திருக்கிறேன்.

அக்னிப்பிரவேசம் சிறுகதை பற்றி:
பாலியல்ரீதியாக ஏமாற்றப்பட்ட மகளின் தலையில் அவளுடைய தாய் தண்ணீரைக் கொட்டி, ‘இது அக்கினி மாதிரி… நீ சுத்தமாயிட்ட’ என்று சொல்லி சுத்தமாக்கும் ‘அக்கினிப் பிரவேசம்’ கதையை 1966-லேயே துணிச்சலாக வெளியிட்டிருக்கிறீர்கள். எதிர்வினைகள் ஏதும் வரவில்லையா?
நல்லாக் கேட்டீங்க! பெரிய களேபரமே ஆகிப்போச்சு. ஆசிரியர் இலாகாவுக்குள்ளேயே எதிர்ப்பு. விகடன் இப்படி ஒரு கதையை எப்படிப் போடலாம்னு ஆசிரியர் குழுவிலேயே சிலர் கடுமையா எதிர்த்தாங்க. கடைசியா விஷயம் பாஸ் காதுக்குப் போயிட்டு (தந்தையார் எஸ்.எஸ். வாசன் பற்றி இப்படித்தான் குறிப்பிடுகிறார்). அப்போ அவர் விகடனை அதிகம் கவனிக்கலை. சினிமாவுல பிஸி. நிறைய பேர் அவர்கிட்ட பேசவும், என்னைக் கூப்பிட்டு, ‘என்னப்பா பாலு! அக்கினிப் பிரவேசம்னு ஒரு கதை போட்டிருக்கியாமே’ன்னார். ‘ஆமா சார், ஜெயகாந்தன்னு ஒருத்தரோட கதை’ன்னேன். ‘அதுக்கு முத்திரையெல்லாம் போட்டிருக்கியாமே?’ன்னார். ‘ஆமாம் சார்’ன்னேன். ‘அந்தக் கதையைப் போட்டதே தப்பு’ன்னு (கொத்தமங்கலம்) சுப்பு மாதிரியானவா சொல்றாளே’ன்னார்.
நான் அந்தக் கதை வந்த விகடனை பாஸ்கிட்டே குடுத்து, ‘நீங்க கதையைப் படிங்க. படிச்சுட்டு, நான் பண்ணினது தப்புதான்னு சொன்னா, வாசகர்கள் உட்பட அத்தனை பேர்கிட்டேயும் மன்னிப்பு கேட்டுக்குறேன்’னு சொல்லிட்டு வந்துட்டேன். மறுநாள் கூப்பிட்டார். போனேன். ‘ஏம்ப்பா, இந்தக் கதையையா நல்லால்லேன்னு சொன்னாங்க! ஒருமுறை அந்த ஜெயகாந்தனை வரச்சொல்லு. நான் பார்க்கணும்’னார்… இவ்வளவு கதை இருக்கு, அந்த ஒரு கதைக்குப் பின்னால…

ஜெயகாந்தனுக்கும் விகடனுக்கும் இருந்த உறவு பற்றி:
சிறுபத்திரிகைகளில் எழுதிக்கொண்டிருந்த ஜெயகாந்தனை எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?
ஒரு நாள் மணியன்தான் வந்து ‘இந்தக் கதையைப் படிச்சுப் பாருங்க’னு ஒரு கதையை வாசிக்கக் கொடுத்தார். கதையைப் படிச்சப்போ பிரமிப்பா இருந்தது. அதுவரைக்கும் படிச்ச மாதிரி இல்லை அந்த எழுத்து. ஒண்ணு சொல்லணும்னு முடிவு பண்ணிட்டா அதை அப்படியே தலையில ஆணி அடிச்சு சொன்னாப்ல இருந்துச்சு. ஆனா, பாலியல் வர்ணனைகளும் கொஞ்சம் இருந்துச்சு. ‘எழுத்து பிரமாதமா இருக்கு. ஆனா, இந்த மாதிரி வர்ணனைகள் நமக்கு சரிப்படாதே’ன்னேன். ‘நீங்க ஒருமுறை அவரைச் சந்தியுங்களேன்’னார் மணியன். ‘ஓ, சந்திக்கலாமே’ன்னேன். அப்படித்தான் விகடன் ஆபீஸுக்கு ஜெயகாந்தன் வந்தார். வரும்போதே ஒரு கதையைக் கையில் எடுத்துட்டு வந்தார். ‘விழுதுகள்’ன்னு நெனைக்கிறேன். என் கையில கொடுத்துட்டு, கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருந்தார். அவர் போன உடனே அந்தக் கதையைப் படிச்சா, அவ்ளோ பிரமாதமா இருக்கு!
அப்போ வாரம் ஒரு நல்ல கதையைத் தேர்வு பண்ணி அதுக்கு முத்திரை குடுக்குறது வழக்கம். அப்படி முத்திரைக் கதையா இருந்தா பரிசு ஐநூறு ரூபாய். அப்போ அது பெரிய காசு. அதாவது, எங்க கம்பெனி ஜெனரல் மேனேஜருக்கே எண்ணூறு ரூபாய்தான் சம்பளம். அந்த வார முத்திரையை ஜெயகாந்தன் கதைக்குக் கொடுத்தோம். கதை பிரசுரமானதும், ஜெயகாந்தன் வந்து என்னைப் பாத்தார். சன்மானத் தொகைபற்றி அவருக்கு ஆச்சரியம். ‘இந்தப் பணம் பெரிசு இல்ல. இப்படிப்பட்ட ஒரு கதைக்கு இதைக்கூட கொடுக்கலைன்னா நாங்க தப்பு பண்ணவா ஆயிருவோம்’னு சொன்னேன். ‘தொடர்ந்து விகடனுக்கு எழுதுங்கோ’ன்னும் சொன்னேன். இப்படித்தான் ஜெயகாந்தன் எங்களுக்கும் எங்க வாசகர்களுக்கும் அறிமுகம் ஆனார்.

அதற்குப் பின் தொடர்ந்து முத்திரைக் கதைகளாக ஜெயகாந்தனின் கதைகள் வெளியாயின. அவர் எழுதிய எல்லாக் கதைகளும் நீங்கள் நிர்ணயித்த தரத்தில் இருந்தனவா அல்லது அவர் நிறைய கதைகளை அனுப்பி, அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளை முத்திரைக் கதைகளாகப் பிரசுரித்தீர்களா?
அதாவது, தொடர்ந்து நீங்க கதை அனுப்புங்கன்னு சொன்னப்பவே ஜெயகாந்தன் ஒரு கோரிக்கை வெச்சார். ‘நான் எழுதுறேன். ஆனா, அது முத்திரைக் கதைக்கான தரத்தோட இருந்தா போடுங்க; இல்லாட்டித் திருப்பி அனுப்பிச்சிடுங்க. முத்திரைக் கதைக்கான காசை வேணும்னா கூடக்குறைச்சுக் கொடுங்க. ஆனா, அந்தத் தகுதி இல்லாத கதைகளைப் பிரசுரிக்க வேணாம்’னார். நான் சொன்னேன், ‘நீங்க ரொம்ப கஷ்டமான நிபந்தனையைப் போடுறீங்க. இருந்தாலும் பார்க்குறேன்’னு. ஆச்சரியம் என்னன்னா, அவர் அனுப்பின ஒவ்வொரு கதையும் முத்திரைக் கதைக்கான தகுதியோடதான் இருந்தது. ஒரு கதையைக்கூடத் திருப்பி அனுப்பத் தேவையே ஏற்படலை.

ஜெயகாந்தன் கறாரானவர்; தன்னுடைய கதைக்குத் தானே ராஜா என்று நினைப்பவர்; ஒரு வார்த்தையைத் திருத்தக்கூட அவரிடம் அனுமதி கேட்க வேண்டும் என்றெல்லாம் சொல்லப்படுவது உண்டு. அதேசமயம், ஒரு பத்திரிகையைப் பொறுத்தவரை அதன் ஆசிரியரே இறுதி முடிவை எடுப்பவர். ஒரு ஆசிரியர் – ஒரு எழுத்தாளர் இருவருக்குமான சுதந்திரத்தின் எல்லைகளை எப்படிக் கையாண்டீர்கள்?
கதை வேணுமா, வேணாமான்னு ஆசிரியர்தான் முடிவெடுக்குறார். அப்புறம் ஆசிரியர் கேட்குற திருத்தங்கள் அந்தப் படைப்பு மேல உள்ள அக்கறையில வர்றது. நான் ஜெயகாந்தனோட கறாரை ஒரு எழுத்தாளனோட கர்வமாப் பார்க்கல. ஒரு எழுத்தாளனோட தன்னம்பிக்கையாவும் துணிச்சலாவும் பார்த்தேன். ‘நீ யாரா வேண்ணா இரு. எனக்குத் தெரியும், என் கதையில இருக்கிற அழகு, அழுத்தம், ஆழம்’கிற சுய மதிப்பீட்டோட வெளிப்பாடா பார்த்தேன். அதேசமயம், ஜெயகாந்தன் நான் சொல்ற திருத்தங்களை ரொம்ப கவனமாக் கேட்பார். சரின்னு பட்டா ஏத்துக்குவார். நாம எதிர்பார்க்குற திருத்தங்களை நாமளே ஆச்சரியப்படுற வகையில அற்புதமா திருத்தி மறுநாள் அனுப்புவார்.

விகடனோடு தனக்கிருந்த உறவைப் பற்றி ஜெயகாந்தன் சொல்வது:
ஆனால், பத்திரிகை ஆசிரியர்கள் திருத்தங்களை வலியுறுத்தும்போது ஏற்றுக்கொண்டிருப்பீர்கள் இல்லையா? அப்படியான திருத்தங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் எழுத்துக்களில் மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கும் இல்லையா?
நான் மூர்க்கன் இல்லை. இது பரஸ்பரப் பகிர்தல். என்னிடமிருந்து அவர்களும் அவர்களிடமிருந்து நானும் கற்றுக்கொள்வது. நிச்சயமாக அந்தத் திருத்தங்கள் எழுத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனால், ஒருபோதும் எழுத்துக்கு விரோதமான திருத்தங்களுக்கு நான் செவிசாய்த்ததில்லை.

ஊடகங்களுடனான உங்களுடைய உறவில் ஓர் எழுத்தாளருக்கும் பத்திரிகையாளருக்குமான உறவு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைப்பது எந்தப் பத்திரிகையை, எந்தப் பத்திரிகை ஆசிரியரை?
விகடனை. அதன் அன்றைய ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியனை.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயகாந்தன் பக்கம்

இலக்கியக் கோட்பாடுகளும் தரம் பிரித்தலும்

bags_rv_jeyamohanஜெயமோகன் நீல. பத்மநாபன் பற்றி எழுதிய கட்டுரையைப் படித்தபோது தோன்றியவை:

என்னைப் பொறுத்த வரையில் எழுத்தாளனும் படைப்பாளியும் வாசகனும் வேறு வேறு ஜந்துக்கள். எழுத்தாளன் என்ன நினைத்து எழுதினான், படைப்பாளி என்ன சொல்ல விரும்புகிறான் என்பதற்கும் வாசகன் என்ன எடுத்துக் கொள்கிறான் என்பதற்கும் எந்த வித சம்பந்தமும் இருக்க வேண்டியதில்லை. வாசகனுக்கு என்ன தோன்றுகிறது என்பதுதான் முக்கியம். பல தலைமுறை வாசகர்களுக்கு ஒரே மாதிரி தோன்றினால், wisdom of the crowds புத்தகத்தின் தரத்தைப் பற்றிய ஒருமித்த சித்திரத்தை நிர்ணயிக்கிறது, கால ஓட்டத்தில் எந்தப் புத்தகம் நிற்கும் என்பதை தீர்மானிக்கிறது. அது எழுத்தாளன் சொல்ல வந்ததோடு ஒத்தும் போனால் அது எழுத்தாளனின் பேரதிருஷ்டம்.

பல புத்தகங்களில் – குறிப்பாக வணிக எழுத்துகள், அதிலும் துப்பறியும் கதைகள் – வாசகன் மனதில் ஒரே ஒரு விளைவைத்தான் ஏற்படுத்தும் என்பதை மறுப்பதற்கில்லை. ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளைப் படிப்பவர்கள் எல்லாருக்கும் கானன் டாயில் என்ன நினைத்து எழுதினார் என்பது தெளிவாகத் தெரியும். அவர் நினைத்தது அனேக வாசகர்கள் மனதில் நடக்கவும் நடக்கிறது, அதனால் அது காலம் காலமாக ஒரு minor classic என்ற அளவிலாவது நிலைத்து நிற்கும் என்று நினைக்கிறேன். இலக்கியம் என்று கருதப்படும் பல minor classic-களிலும் எழுத்தாளன் சொல்ல வந்தது தெளிவாகத் தெரிகிறது, அதை அனேக வாசகர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவும் செய்கிறார்கள். டிக்கன்சின் பல நாவல்கள், Vanity Fair, Pride and Prejudice, Wuthering Heights, Moon and Six Pence, All Quite on the Western Front, பொன்னியின் செல்வன், மானுடம் வெல்லும், புத்தம் வீடு, தலைமுறைகள், அம்பையின் பல சிறுகதைகள், ப்ரேம்சந்தின் பல சிறுகதைகள், காண்டேகரின் யயாதி, பைரப்பாவின் வம்ச விருக்‌ஷா, பர்வா என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

எதிர்-உதாரணமாகவும் (counter-example) நிறைய சொல்லலாம். நான் படித்தவற்றிலேயே மிகச் சிறந்த புத்தகமாகக் கருதும் To Kill a Mockingbird தேர்ந்த விமர்சர்கர்கள் யாருடைய பட்டியலிலும் இடம் பெறுவதில்லை. அதைப் பற்றி எழுதும் விமர்சகர்கள் எல்லாம் அன்றைய தெற்கு அமெரிக்க மாநிலங்களில் கறுப்பர்கள் நடத்தப்பட்ட விதம், கதையை சிறுவர்கள் கண் மூலம் சித்தரிப்பது எல்லாவற்றையும் பற்றி பேசுவார்கள். ஆனால் அதில் எனக்குத் தெரிவது அப்பா-மகள் உறவின் உச்சம், அப்படி நானும் என் பெண்களும் இருந்துவிட்டால் என் வாழ்க்கை வெற்றி அடைந்துவிட்டது. அந்தக் கோணத்தில் ஒருவரும் இந்தப் புத்தகத்தைப் பார்த்ததாக எனக்குத் தெரியவில்லை. என் நெருங்கிய நண்பர்கள் கபி அல்வித நா கெஹனா மாதிரி ஒரு குப்பை திரைப்படத்திலிருந்து வாழ்க்கைக்கு இன்றியமையாத பாடங்களைக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

நிலைமை இப்படி இருக்கும்போது இலக்கியக் கோட்பாடு என்ற ஒரு சட்டகத்தின் மூலம் எந்தப் படைப்பையும் அணுகுவது எனக்கு மடத்தனமாகத் தெரிகிறது. கோட்பாடு இருத்தலியமோ (existentialism), வடிவ இலக்கணமோ, ஃப்ராய்டிசமோ, முன்/பின் நவீனத்துவமோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஒரு படைப்பு என்னைத் தொடுகிறதா இல்லையா என்பதல்லவா முக்கியம்? வாங்கும் சட்டை எனக்குச் சரியாக இருக்க வேண்டும், எனக்குப் பிடிக்க வேண்டும். அது அர்மானியின் ஃபாஷன் கோட்பாட்டுக்கு ஏற்ப இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன? சரி சட்டையாவது சில விதிகளுக்கு உட்பட்டது, உங்கள் அலுவலகத்தில் சில விதமான சட்டைகளைப் போட்டு வந்தால் அது சில எழுதப்படாத விதிகளை மீறுவதாகலாம். படிப்பது தனி மனித ரசனைக்கு மட்டுமே உரிய சங்கதி இல்லையா?

எந்த விதி எல்லா படைப்புகளுக்கும் ஒத்து வருகிறது? சிறுகதை என்றால் ஒரு துவக்கம், நடுப்பகுதி, ஒரு உச்சக்கட்டமான முடிவு இருக்க வேண்டும் என்கிறார்கள். வடிவகச்சிதம் நிறைந்த சுந்தர ராமசாமியின் கதைகளுக்கு இவை அனேகமாக ஒத்துவரலாம். ஆனால் அசோகமித்ரனின் புலிக்கலைஞனில் உச்சக்கட்டம் கதையின் நடுவில் வருகிறதே! பஷீரின்பகவத்கீதையும் சில முலைகளும்” சிறுகதையில் பாயிண்டே கிடையாது, துவக்கமாவது, முடிவாவது? அதனால் என்ன குடிமுழுகிவிட்டது? உணர்ச்சிகள் கொந்தளிக்கும் ஜெய்மோகனின் கதைகளும் சரி, எங்கேயோ என்னவோ நடக்கிறது என்று பார்க்கும் அசோகமித்ரனின் கதைகளும் சரி உயர்ந்த இலக்கியம்தான். வெளிப்படையாகப் பேசும் ஹ்யூகோவும் என்னென்னவோ எழுதிக் குழப்பும் மார்க்வெசும் எழுதியது இலக்கியம்தான். ஷேக்ஸ்பியரின் வெளிப்படையாகப் பேசும் உணர்ச்சிகரமான நாடகங்களும் சரி, மனிதர்கள் தங்களைப் பற்றி தாங்களே புரிந்து கொள்ளும் கணங்களை முன் வைக்கும் இப்சனும் சரி, லெக்சர் அடித்தே காலத்தை ஓட்டும் பெர்னார்ட் ஷாவும் சரி, வெங்காயம் உரிப்பது போல மெதுமெதுவாக உள்ளே என்ன இருக்கிறது என்று காட்டும் ஆர்தர் மில்லரும் சரி, அருமையான நாடகங்களைத்தான் படைத்திருக்கிறார்கள்.

பெரும் படைப்பாளிகளின் எழுத்துக்களின் பொதுவான சில கூறுகளை வைத்து இலக்கியத்தில் இப்படி இருக்கலாம் என்றுதான் சொல்ல முடியும். மறைமுகமாகச் சொல்ல வேண்டும், கதாசிரியர் நேரடியாகப் பேசக் கூடாது, முதல் வரியிலேயே சிறுகதை ஆரம்பித்துவிட வேண்டும், சிறுகதையின் இறுதியில் ஒரு ஓ. ஹென்றி ட்விஸ்ட் இருக்க வேண்டும், சிறுகதை ஒரு குறுகிய காலகட்டத்தைத்தான் விவரிக்க வேண்டும் என்பதெல்லாம் ஆரம்பநிலை எழுத்தாளர்களுக்கான அறிவுரைகள். மேதைகளுக்கு விதிகள் இல்லை, அவர்கள் எழுதுவதிலிருந்துதான் ஆரம்பநிலை எழுத்தாளர்களுக்கு சில ஆலோசனைகளை எடுத்துக் கொள்ளலாம், அவ்வளவுதான்.

அதனால் கோட்பாடு எல்லாம் சுத்த விரயம் என்று நான் முழுமையாக நிராகரிக்கவில்லை. உங்களுக்கு சர்ரியலிசப் படைப்புகள்தான் பிடிக்கின்றன என்றால் ஒரு கதை சர்ரியலிச எழுத்தா இல்லையா என்று சொல்வது உங்களுக்கு உதவியாக இருக்கத்தானே செய்யும்? எனக்கு Metamorphosis பிடிக்கவில்லை (புரிந்ததா என்றே சந்தேகம்). இதோ இன்னொரு சர்ரியலிசப் படைப்பு என்றால் நான் அந்தப் புத்தகத்தை கொஞ்சம் பயந்துகொண்டேதான் தொடுவேன். ஹாரி பாட்டர் பிடிக்கிறது என்றால் டோல்கியனை பரிந்துரைக்கலாம் இல்லையா? அந்த மாதிரி சில பயன்கள் இருக்கத்தான் செய்கின்றன.

என் வரையில் கோட்பாடு என்பது சுத்த அனேகமாக விரயம். அனேகமாக என்று மாற்றி எழுத ஒரே காரணம்தான். சில சமயம் கோட்பாடு என்ற சட்டகத்தில் மூலம் பார்த்தால் நான் தவற விட்ட சில இடங்கள் இன்னும் துல்லியமாகத் தெரிகின்றன. ஆனால் விமர்சனங்களைப் படிப்பதை விட மூல எழுத்தைப் படிப்பதுதான் பயனுள்ளது என்று நான் நினைக்கிறேன். உலகத்தினர் எல்லாரும் அப்படித்தான் நினைக்கிறார்கள். ஷேக்ஸ்பியரைப் படிப்பவர்கள்தானே அதிகம்? யார் ஷேக்ஸ்பியர் நாடக விமர்சனங்களைப் படிக்கிறீர்கள்?

ஜெயமோகனை முதல் முறை சந்தித்தபோது அவரது “நாவல்” புத்தகத்தில் படைப்புகளை அவர் நாவல், நீள்கதை என்றெல்லாம் பாகுபடுத்துவதைப் பற்றிக் கேட்டேன். இந்தப் பகுப்பினால் என்ன பயன், இது நீள்கதையா இல்லையா என்று தெரிந்து கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன் என்று கேட்டேன். (இதெல்லாம் இங்கிதம் இல்லாத கேள்விகள் என்று இப்போதுதான் தெரிகிறது.) என்ன எதிர்பார்க்கலாம் என்று தெரிந்துவிடும் என்று சொன்னார். அது உண்மைதான். அதனால்தான் நான் புத்தக அறிமுகம் என்றே என் கட்டுரைகளை சொல்லிக் கொள்கிறேன். என் கட்டுரைகளைப் படித்தால் புத்தகத்தில் என்ன எதிர்பார்க்கலாம் என்று தெரிய வேண்டும் என்றுதான் எழுதுகிறேன். இது அனேகமாக க.நா.சு.வின் பாதிப்பாக இருக்கலாம். அவரும் இப்படித்தான் தன் ரசனையை அடிப்படையாக வைத்து புத்தகங்களை அறிமுகப்படுத்தினார் என்று கேள்வி. எனக்கு seminal புத்தகமான படித்திருக்கிறீர்களா? அப்படிப்பட்ட புத்தகம்தான்.

சுருக்கமாகச் சொன்னால்: கோட்பாடு கீட்பாடு எல்லாவற்றையும் தமிழ்ப் பேராசிரியர்களுக்கும் ஜெயமோகன் போன்றவர்களுக்கும் விட்டுவிடுங்கள். சும்மா ஜாலியாகப் படியுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்

அகிலனின் கயல்விழி

akilanஅகிலன் எனக்கு ஒரு pet peeve. என்னால் கொஞ்சம் கூட சகித்துக் கொள்ள முடியாத ஒரு எழுத்தாளர். ஒரு காலகட்டத்தின் ஆதர்சமாக இருந்தவர், விருது பெற்ற எழுத்தாளர் இவ்வளவு மோசமாகவா எழுதுவார் என்ற சந்தேகத்திலேயே நானும் ஏழெட்டு புத்தகம் படித்துப் பார்த்துவிட்டேன், எல்லாமே பேப்பருக்குப் பிடித்த கேடுதான்.

சிறு வயதில் குற்றம் குறை அவ்வளவாகத் தெரியாது, அப்போதே என்னால் கயல்விழியை தாங்க முடியவில்லை. பின்னே என்னங்க, இரண்டு பெரிய படைகள் ஒன்றை ஒன்று எதிர்த்துப் போராட தயாராக இருக்கிறதாம், அப்போது நடுவே ஒரு பெண் ஓடி வந்து போரை நிறுத்தி விடுகிறாளாம். காதில் பூ சுத்துவதற்கும் ஒரு எல்லை வேண்டும். ஆனால் கயல்விழிக்கு அந்தக் காலத்தில் நிறைய விசிறிகள் இருந்தார்கள். போடா நீ சின்னப் பையன் உனக்கு இதெல்லாம் புரியாது என்பார்கள். சிறந்த வாசகரான ஜெயமோகன் கூட இந்த நாவலை தன் பரப்பிலக்கிய லிஸ்டில் வைக்கிறார். எனக்கு நாலு வார்த்தை எழுதவே அலுப்புத் தட்டுகிறது. இதெல்லாம் நாற்பதுகளின் மிகை மெலோட்ராமா நாடகம், ஐம்பதுகளின் சிவாஜி கணேசன் சினிமாதான். இந்தப் பதிவுக்காக மீண்டும் படிக்கும்போது சிவாஜி, பத்மினி, தங்கப்பதுமை சினிமா மாதிரி ஒரு பிம்பம் தோன்றிக் கொண்டே இருந்தது.

பிற்காலத்தில் எம்ஜிஆர் இதை “மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்” என்ற திரைப்படமாக எடுத்தார்.

ஒன்று சொல்ல வேண்டும். இந்த நாவல் எனக்கு நா.பா.வை அடிக்கடி நினைவுபடுத்தியது. மீண்டும் மீண்டும் இது நா.பா. எழுத்து இல்லை, அகிலனுடையது என்று நினைவுறுத்திக் கொண்டேன்.

அகிலன் எழுதியவற்றில் எனக்கு ஓரளவாவது தேறுவது வெற்றித் திருநகர் என்ற சரித்திர நாவல்தான். விஸ்வநாத நாயக்கர் அப்பா நாகமரை எதிர்த்து வென்றது ஒரு உன்னதமான நிகழ்ச்சி. அதை அகிலனால் கூட கெடுக்க முடியவில்லை. 🙂

படித்த மிச்சப் புத்தகத்துக்கு எல்லாம் தனித்தனியாக பதிவு எழுதுவதற்கில்லை. சகோதரர் அன்றோ என்று சிறுகதைத் தொகுதியில் ஒன்று கூட எனக்குத் தேறவில்லை. பொன்மலர் என்ற நாவலும் வழக்கமான புலம்பல்தான். சிநேகிதி எல்லாம் வாசகர்களை அதிர்ச்சி அடையவே எழுதப்பட்டவை. வயதான கணவன் தந்தை ஸ்தானத்தில் நின்று இளம் மனைவியை காதலனோடு சேர்த்து வைக்கிறானாம். எதுக்கு கல்யாணம் செய்து கொண்டு பிறகு சேர்த்து வைக்க வேண்டும்? திருமணத்தைத் தவிர்த்திருக்க வேண்டியதுதானே?

ஜெயமோகன் பரிந்துரைகளில் உள்ள எல்லா நாவல்களையும் – வணிக நாவல்களையும் சேர்த்துத்தான் – படிக்க வேண்டும் என்று எனக்கு ஒரு விபரீத ஆசை உண்டு. டிக் மார்க் போட என்றாவது பாவை விளக்கு, பெண் எல்லாம் படிக்க வேண்டுமென்று நினைத்தால் பயமாக இருக்கிறது. எப்படி ஜெயமோகன் இந்த மாதிரி எழுத்தை எல்லாம் ஒரு seminal பட்டியலில் சேர்த்தீங்க? ஏதாவது ஒரு விஷயமாவது இருக்க வேண்டாமா?

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் சரித்திர நாவல்கள்

தொடர்புள்ள சுட்டிகள்:
வேங்கையின் மைந்தன்
சித்திரப்பாவை
அகிலனைப் பற்றி அவரது மகன்

சட்டநாதக் கரையாளர் எழுதிய “1941 திருச்சி சிறை” – படிக்க விரும்பும் புத்தகம்

சட்டநாதக் கரையாளர் சுதந்திரப் போராட்டத்தில் ஜெயிலுக்குப் போன தேசபக்தர். பின்னாளில் எம்.எல்.ஏ.வாக இருந்திருக்கிறார். இன்று அவர் பெயரில் ஒரு கல்லூரி நடக்கிறது, அதைத் தவிர அவர் நினைவாக எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இணையத்தில் அவரது புகைப்படம் கூடக் கிடைக்கவில்லை.

ஜெயிலில் இருந்த அனுபவத்தை புத்தகமாக எழுதி இருக்கிறார். படிக்க ஆர்வமாக இருக்கிறது. பல மாதங்களுக்கு முன்னால் விகடனில் படித்த சில excerpts-ஐ மீள்பதித்திருக்கிறேன். ஜெயமோகன் தளத்திலும் இரண்டு கட்டுரைகளைக் கண்டுபிடித்தேன். அவற்றுக்கான சுட்டிகள் – 1, 2.

சிறையில் இருக்கும் சக்கரவர்த்தி

எல்.எஸ்.கரையாளர், எம்.எல்.ஏ.

rajaji

ராஜாஜி கைது செய்யப்பட்டபொழுது ஜெர்மன் ரேடியோ அந்தச் செய்தியை, ‘ராஜா ஆஃப் கோபாலபுரம் என்பவர் கைது செய்யப்பட்டு, ஒன்றரை வருஷம் தண்டனை விதிக்கப்பட்டு ஒரு சுரங்கத்தில் தள்ளப்பட்டார்!’ என்று அறிவித்தது.

ராஜா, ராஜாஜி, சக்கரவர்த்தி – எதுவாயினும் சரி – திருச்சி சிறையிலே அவர் உண்மையில் சக்கரவர்த்தியாகவே விளங்குகிறார். மேதாவிகளும் படிப்பாளிகளும் நிறைந்தது திருச்சி முகாம் ஜெயில். இவர்களெல்லோரும் ராஜாஜியிடம் பணிவுடனும் மரியாதையுடனும் நடந்துகொள்கிறார்கள். காரணம்? அவருடைய சீரிய நடத்தைதான்!

ராஜாஜிக்கு 62 வயதாகிறது. காலை 5.30 மணிக்கு ஒரு நாளும் அவரைப் படுக்கையில் காணமுடியாது. காப்பி சாப்பிட்டு முடிந்ததும். வால்மீகி வகுப்பு ஆரம்பமாகிவிடும். 10 மணி வரை நடக்கும். பிறகு சாப்பிடும் இடத்திற்கு ஒரு கையில் பீங்கான் தட்டுடனும் மற்றொரு கையில் உட்காருவதற்குரிய சிறிய கோரைப் பாயுடனும் புறப்படுகிறார். எல்லோருடனும் இருந்து சாப்பிடுகிறார்.

பகல் 12 மணி முதல் 1 மணி வரை ஷேக்ஸ்பியரும், உருது வகுப்புகளும் நடத்துகிறார். உஷ்ணம் அதிகரிக்கவே ராஜாஜி நீல நிறக் குட்டை ஒன்றைத் தண்ணீரில் நனைத்துத் தலையில் கட்டிக் கொள்வார். ஏனெனில் ஐஸ், மின்சார விசிறி போன்றவை ஜெயிலில் அனுமதிக்கப்படுவதில்லை. சரியாக 3 மணிக்கு ‘கிளாசரி’ (glossary) வகுப்பு. பௌதிகம், பூகோளம், ரஸாயனம் இவை போன்ற எல்லா சாஸ்திரங்களிலுமுள்ள ஆங்கில வார்த்தைகளுக்குச் சரியான தமிழ்ப் பதங்கள் கண்டுபிடிப்பது இந்த வகுப்பின் வேலை.

அப்பால் சாப்பாட்டு மணி அடிக்கும் வரை குறள், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், பெரியபுராணம், பாரதியார் பாட்டுக்கள் இவைகளைக் கொண்ட சில வகுப்புகள் நடக்கும். சாப்பிட்ட பின் ஆங்கிலக் காவியங்கள், காளிதாசன், சாகுந்தலம், உபநிஷதங்கள் இவைகளில் ஒன்றிரண்டு நடைபெறும். இத்தனை வகுப்புகளிலும் ராஜாஜி கலந்து கொள்கிறார் என்பது மாத்திரமில்லை; அவ்வளவையும் அவரே நடத்தி வருகிறார்.

ராஜாஜி முதலில் கைது செய்யப்பட்டது 1921, டிஸம்பர் மாதம். ஜெயிலில் கைதிகளின் சரித்திரத்தைக் குறித்து வைக்கும் கடுதாசிக்கு ‘ஹிஸ்டரி போர்டு’ என்று பெயர். ராஜாஜியின் ஹிஸ்டரி போர்டில் அதிகாரிகள் என்ன எழுதி வைத்திருக்கிறார்கள் தெரியுமா?

ரிஜிஸ்டர் நம்பர் – 8398
அனுமதித்த தேதி – 21.12.21
அப்பீல் செய்ய மறுத்த தேதி – 24.12.21
பெயர் – ஸி. ராஜகோபாலாச்சாரி, இந்திய தேசிய காங்கிரஸ் பொதுக் காரியதரிசி.
படிப்பு – ஸி.

‘ஸி’ என்றால் எழுதப் படிக்கத் தெரியாது என்று அர்த்தம்!

“இந்தியாவில் மிகவும் முக்கியமான அரை டஜன் மனிதர்களில் ராஜாஜியும் ஒருவர்” என்கிறார் ஜான் கந்தர் என்ற புகழ்பெற்ற பத்திரிகை நிருபர். இதே ராஜாஜியைத்தான் எழுதப் படிக்கத் தெரியாத கைதி என்றார் வேலூர் சிறை அதிகாரி. நமக்கு என்ன தோன்றுகிறது? அந்த வேலூர் சிறை அதிகாரியைப் பார்த்து, ராஜாஜி எழுதியுள்ள ‘தம்பீ வா!‘, ‘இதையும் படி‘ என்ற புஸ்தகங்களைப் படிக்கச் சொல்லலாம் போல் தோன்றுகிறது.

(இந்தக் கட்டுரை, சென்னை நவயுகப் பிரசுராலயத்தார் தயாரித்திருக்கும் ‘திருச்சி ஜெயில்’ என்ற புத்தகத்திலிருந்து எடுத்து வெளியிடப்பட்டிருக்கிறது.)

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் அபுனைவுகள்

தொடர்புடைய சுட்டிகள்: ஜெயமோகன் கட்டுரை 1, 2.

டைம் பாஸ் பாலகுமாரன் கதைகள்

இந்தப் பதிவும் ஒரு ரெகார்டுக்காகத்தான். பாலகுமாரன் எக்கச்சக்க மாத நாவல்களை எழுதித் தள்ளி இருக்கிறார். என்ன கதைக்கு என்ன பேர் என்று நினைவு வைத்துக் கொள்ள முடிவதில்லை. அதனால் அவரது டைம் பாஸ் கதைகளை – ஏதோ ஒரு சின்ன விஷயமாவது இருக்கும், முழு தண்டம் இல்லை, பஸ்ஸில் படித்துவிட்டு தூக்கிப்போட்டுவிடலாம் – பற்றி சின்னச் சின்னக் குறிப்புகள்.

அப்பா குறுநாவலின் பின்புலம் – கொத்தவால் சாவடியில் கமிஷன் வியாபாரம் – நன்றாக வந்திருக்கும். ஆனால் கதைப்பின்னல் ரொம்ப வீக்.

அப்பம் வடை தயிர்சாதம்: சுவாரசியமாக ஆரம்பிக்கிறது. இன்றைய பிராமண, மத்திய தரக் குடும்பம் ஒன்றின் குலச் சடங்கு – என்ன வேலை செய்தாலும், ஒரு பிரார்த்தனையாக சில வருஷங்களுக்கு ஒரு முறை ரயில்வே ஸ்டேஷனின் அப்பம், மசால்வடை, தயிர்சாதம் விற்பது. நாலைந்து தலைமுறைக்கு முன்னால் வைதீகத்திலிருந்து சமையல் தொழிலுக்கு மாறினார்களாம்.ரயில்வே ஸ்டேஷனில் அப்பம், மசால்வடை, தயிர்சாதம் விற்றார்களாம். அதன் நினைவாக இந்தச் சடங்கு. மாயவரத்தில் ஹோட்டல், சென்னையில் ஹோட்டல், சென்னையில் ஆங்கிலேயருக்கு உதவியாக ஒரு பதவி, வியாபாரம் என்று மாறினாலும் இந்தச் சடங்கை விடுவதில்லை. படிக்கலாம், ஆனால் ரொம்பக் கேள்வி கேட்கக்கூடாது. 1800களில் மசால்வடையா? அது மசால்வடை என்று அழைக்கப்பட்டதா? பாசந்தி போன்ற வட இந்திய இனிப்புகளா? விடுதலைக்கு முன்னாலேயே லட்சாதிபதிக் குடும்பம் எப்படி திருப்பி மத்திய தர வாழ்க்கைக்கு வந்துவிட்டது? இப்படி எல்லாம் யோசிப்பவராக இருந்தால் தவிர்த்துவிடுங்கள்.

பவிஷு: கதை “சின்னவர்” அதாவது எம்ஜிஆரின் அரசியல் வாழ்க்கையை ஓரளவு தொடர்கிறது. அவர் ரிக்ஷாக்காரர்களுக்கு ரெயின்கோட் கொடுத்தது, கட்சி உடைந்தது எல்லாம் கதையில் பின்புலமாக வருகிறது. முன்புலமாக ஒரு வியாபாரக் குடும்பத்தின் வாழ்க்கை. படிக்கலாம்.

தனரேகை: சுமாரான கதை. மாடு வைத்து வியாபாரம் செய்யும் யாதவர் குடும்பம். மில் வைத்திருக்கும் முதலியார் குடும்பம் என்று போகிறது.

என் கண்மணி: நடிகை சாவித்திரியின் வாழ்வை வைத்து கற்பனை கலந்து ஒரு கதை.

என்னவளே அடி என்னவளே: சிம்பிளான காதல் கதை. யோகா டீச்சருக்கும் விளம்பரம் செய்யும் ராமச்ச்சந்திரனுக்கும் காதல். பெண் வீட்டில் எதிர்ப்பு. பையன் வீட்டில் கொஞ்சம் குறைவான எதிர்ப்பு. அவர்களே பேசி, ஏற்பாடு செய்து சம்பிரதாயமாக கல்யாணம் செய்து கொள்கிறார்கள். அனாவசிய digression இல்லாதது பெரிய நிம்மதி. அதற்காகவே படிக்கலாம்.

என்றென்றும் அன்புடன் அவரது தன்வரலாற்றின் ஒரு பகுதி. இரண்டாவது மனைவி வந்த கதை.

எழில்: சினிமா டைரக்டர் கனவோடு சென்னைக்கு வருபவன் வீடியோ எடுப்பவனாக மாறுகிறான். தவிர்க்கலாம்.

என்னுயிரும் நீயல்லவோ: சுமாரான நாவல்தான், ஆனால் ஏலக்காய்த் தோட்டப் பின்புலம் இதை குறிப்பிட வைக்கிறது. சிம்ப்ளிஸ்டிக்கான விவரிப்புதான் என்றாலும் கொஞ்சம் அந்தத் தொழிலின் போக்கு புரிகிறது. செட்டியார் இறந்த பிறகு அவரது மகன் அவரது வைப்பாட்டி மேற்பார்வை பார்க்கும் தோட்டத்தை எடுத்து நடத்துகிறான்.

இனி இரவு எழுந்திரு: கமாண்டோ தன் தங்கை மீது திராவகம் வீசியவர்களைத் தேடுகிறான்.

ஜீவநதி: அரசியல்வாதி, அவருக்கு துணையாக அவரது சித்தப்பா பையன். பஸ்ஸில் படித்துவிட்டு தூக்கிப் போட்டுவிடலாம்.

காதல் சிறகு: நான் என் வாழ்க்கையில் இது வரையிலும் ஒரு டிவி மெகாசீரியலை – ஒரு எபிசோட் கூட முழுதாகப் பார்த்ததில்லை. இந்த நாவல் மாதிரிதான் இருக்கும் என்று தோன்றுகிறது. நிச்சயதார்த்தம் நடந்து கல்யாணம் முடிவதற்குள் துபாய்க்கு வேலைக்குப் போகும் பையன். இதை வைத்து நானூத்தி சொச்சம் பக்கம்! சும்மா இசு இசுன்னு இசுத்திருக்கிறார்.

கடல் நீலம்: அப்பா வேசியோடு கூட ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கும்போது இறந்துவிடுகிறார். அவரிடமிருந்த பணம் இருந்த சிவப்புப் பெட்டியை மகள் தேடுகிறாள்.

கடலோரக் குருவிகள்: கஷ்டப்படும் பிராமணப் பையன். அவனுக்கு திடீரென்று ஒரு கோடீஸ்வரப் பெண்ணின் நட்பு கிடைக்கிறது. அவளுக்கு உதவி செய்கிறான், வளர்ந்து காதலாகிறது. தமிழ் சினிமாவில் ஒரு பாட்டு முடிவதற்குள் பணக்காரன் ஆவது போல இருக்கிறது. உபதேசம் செய்வதற்காகவே இந்த கதையை எழுதி இருக்கிறார் என்று நினைக்கிறேன். பஸ்ஸில் படிக்கலாம். இதை இயக்குனர் ஷங்கர் வெகுவாகப் புகழ்ந்து பாலகுமாரனுக்கு எழுதிய கடிதமும் புத்தகத்தோடு வெளியிடப்பட்டிருக்கிறது.

கை வீசம்மா கை வீசு – இந்த நாவலைக் காப்பாற்றுவது இந்த நாவல் வந்த காலகட்டத்தின் (88-89) பெண்களின் மனக் குழப்பத்தை நம்பகத்தன்மையோடு விவரிப்பது. பெண்களைக் கணக்கு பண்ண நினைக்கும் பையன்கள், அவர்கள் போடும் சீன்கள், குடும்பம் vs காதலிக்கும் பெண் என்று வந்தால் ஏற்படும் குழப்பங்கள் என்று விவரிக்கிறார். ஆனால் வளவளப்பு அதிகம்…

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை: இசையைத் தவிர வேறு எதுவும் தெரியாத ஒரு இசை அமைப்பாளர்; அவருக்கு உண்மையான ஒரு மானேஜர்; அவருக்கு விசுவாசமான அவர் மனைவியின் தம்பி. இவர்களை வைத்து கொஞ்சம் சினிமா பின்புலத்தை வைத்து ஒரு கதை. படிக்கலாம். ஆனால் பிரமாதம் என்றெல்லாம் இல்லை.

கள்ளி: வழக்கறிஞர் சுமதியைப் பின்புலமாக வைத்து ஒரு சின்னக் கதை

கனவு கண்டேன் தோழி: பாட்டுப் பாடும் செல்வராணி.

கண்ணாடி கோபுரங்கள்: ஒரு மாஃபியா டான் சிறு தொழிலதிபர் சிவப்பிரகாசத்திடம் கடத்தல் பொருளை கொடுத்தனுப்புகிறான். சிவப்பிரகாசத்துக்கு என்ன என்று தெரியாது. மாட்டிக் கொள்கிறான். ஒரு வருஷம் விசாரணை இல்லாமல் ஜெயில் என்று கூட்டிப் போய்விடுகிறார்கள். மனைவி தைரியமாக நின்று தொழில் செய்கிறாள். கதை ஓரளவு நன்றாக வந்திருக்கும். ஆனால் சிவப்பிரகாசம் ஆன்மீக வழியில் போகிறான் என்று ஆரம்பித்து கதையின் கட்டுக்கோப்பை குலைத்துவிடுகிறார். மோசம் என்று சொல்வதற்கில்லை, படிக்கலாம்.

கற்பு நெறி: மூன்று தங்கைகளை கஷ்டப்பட்டு வளர்க்கும் அண்ணன். அதில் இரண்டு பேர் அண்ணனிடம் சம்மதம் கேட்காமல் தஙகள் துணையைத் தேர்ந்தெடுக்கிறார்கள்

குங்குமத்தேர்: காதல், ஊரில் எதிர்ப்பு.

குயிலே குயிலே: ஓவியம் வரையும் ஒருவன்.

மணல் நதி: காசிக்கு யாத்திரை போகும் சீனிவாசன். சீனிவாசன் என்ற பெயர் உள்ள ஒருவர் அவ்வப்போது பாலகுமாரன் கதைகளில் வருவார். எப்போதுமே அவர் ஐயர்தான். ஹிந்து மத சடங்கு, சம்பிரதாயம், மந்திரம் பற்றி எல்லாம் பேசுவார். அது பாலகுமாரனேதான் என்பதைப் புரிந்து கொள்ள பெரிய மூளை ஒன்றும் தேவையில்லை…

மரக்கால்: கால் போன ஒரு இளைஞன், வாழ்க்கையில் முன்னேறினாலும் பெண்கள் என்ன நினைப்பார்களோ என்ற பயம் இருக்கிறது. பரவாயில்லை.

மீட்டாத வீணை: அப்பாவால் கைவிடப்பட்ட குடும்பம். பையனும் பெண்ணும் துடிப்பாக இருக்கிறார்கள். அம்மா ராமா ராமா என்று கனவுலகில். டைம் பாஸ்…

முந்தானை ஆயுதம்: அக்கா கல்யாணம் ஆன பிறகும் தன் முன்னாள் காதலன், இந்நாள் வெற்றி அடைந்த சினிமா இயக்குனரோடு ஓடிப் போகிறாள். தங்கை வாழ்க்கைப்பட்ட குடும்பத்தில் நன்றாக ஒட்டிக் கொள்கிறாள். சுமார், படிக்கலாம்.

நெல்லுக்கு இறைத்த நீர்: இசை வேளாளர் குடும்பத்திலிருந்து படித்து வரும் முதல் ஆள்; முறைப் பெண்ணையும் படிக்கத் தூண்டுகிறான். இருவரையும் இணைய விடாமல் செய்வது செயற்கையாக இருக்கிறது.

நேற்று வரை ஏமாற்றினாள்: கணவன் கணேசன் மனைவியைப் புரிந்து நடந்து கொள்கிறான். கதை வந்த காலத்தில் நிச்சயமாக நாலு கல்யாண வயசுப் பெண்கள் கணேசன் மாதிரி ஒருவனை நினைத்து பெருமூச்சு விட்டிருப்பார்கள்.

நிலாவே வா: மன வளர்ச்சி இல்லாத ஒரு பையனை வைத்து பிச்சை எடுத்துப் பிழைக்கும் கிழவி. அவளிடமிருந்து அந்தப் பையனைக் காப்பாற்றும் நிருபன். அந்த மாதிரிப் பிள்ளைகளுக்காக ஒரு இல்லம் நடத்தும் விதவைப் பெண். படிக்கலாம்.

பச்சை வயல் மனது: கல்யாணம் ஆகாத மூன்று சகோதரிகள். மாப்பிள்ளைக்கு விளம்பரம் கொடுத்துவிட்டு ஒரு சின்ன விளையாட்டு என்று ஆரம்பிக்கிறார்கள். பஸ்ஸில் படிக்கலாம்.

பணம்காய்ச்சி மரம்: ஓவியர் தன் திறமையால் பணக்கஷ்டத்திலிருந்து மீள்கிறார்.

பழமுதிர்குன்றம்: நீங்கள் மலை என்று நினைப்பது 800 அடிக்கு குறைவாக இருக்கிறது, அதனால் ஊர் பேரை பழமுதிர்மேடு என்று மாற்ற வேண்டும் என்று ஆங்கிலேய சர்வேயர் சொல்ல, ஊர் மலைக்கு மேல் பாறைகளை ஏற்றி பத்தடி உயரத்தை அதிகப்படுத்துகிறது.

பொய்மான்: சின்ன வயதில் காதலில் தோற்று பின்னால் வென்ற கதை. ஏறக்குறைய சூரியவம்சம் திரைப்படம் மாதிரி இருக்கிறது.

சிநேகமுள்ள சிங்கம்: காலேஜ் அரசியலில் கொலை செய்துவிட்டு ஜெயிலுக்குப் போகும் பாண்டியன் திரும்பி வந்து மீண்டும் காலேஜ் அரசியலில் மாட்டிக் கொள்கிறான். கதைப்பின்னல் சரியில்லை. ஆனால் சீன் சீனாகப் பார்த்தால் நல்ல சீன்கள் இருக்கின்றன – தலைவரை காலேஜுக்கு அழைப்பது, கவிதை பாடுவது எல்லாம் நன்றாக வந்திருக்கின்றன.

தெம்மாங்கு ராஜ்ஜியம்: கதை யாரைப் பற்றியது என்ற முடிவை நடுவில் மாற்றிவிட்டார் என்று நினைக்கிறேன். ஜெயிலில் வாத்தியாராக இருக்கும் ஒருவனைப் பற்றி கதை ஆரம்பிக்கிறது. மூன்றாவது சாப்டரில் அது ஒரு கைதியின் கதையாக மாறிவிடுகிறது. கைதி ஒரு கைநாட்டு, கிராமத்தில் அவனை ஏமாற்றி நிலத்தை பிடுங்குகிறார்கள். அவன் வீட்டுப் பெண்களை நாசம் செய்வோம் என்று மிரட்டும்போது அவன் கொலை செய்துவிட்டு மீண்டும் ஜெயிலுக்கே திரும்புகிறான். பஸ்ஸில் படிக்கலாம்.

திருமணத் தீவு: கொஞ்சம் கஷ்டத்திலிருக்கும், அப்பா கடனை அடைக்கப் பாடுபடும் டீச்சர் தமயந்தி கஷ்டத்திலிருக்கும் இன்னொரு பையனோடு இணைகிறாள். படிக்கலாம்.

தொட்டால் பூ மலரும்: சுயமாகத் தொழில் செய்யும் இரண்டு இளைஞர்கள். குடும்பங்கள் இணைகின்றன. சில சித்தரிப்புகள் நிஜமாக இருக்கின்றன. படிக்கலாம்.

வன்னி மரத் தாலி: அம்மாவை மிதிக்கும் அப்பா கையை உடைத்து அதற்காக ஜெயிலுக்கு போன பையன் பிரம்பு பின்னுவதைக் கற்றுக் கொள்கிறான். அம்மனுக்கு சீரியல் செட் போட பிரம்பில் சட்டம் செய்யும்போது ஒரு பெண்ணுடன் பேசிப் பழகி… மோசம் என்று சொல்வதற்கில்லை.

வேட்டை: என்னவோ ஒரு வெட்டிக்கதை. இதற்கெல்லாம் கதைச்சுருக்கம் வேறு எழுத வேண்டுமென்றால் போரடிக்கிறது.

வில்வமரம்: நடுத்தரக் குடும்பம். அக்காவுக்கு அறுபதுகளில் கல்யாணம் ஆகிறது. அப்போதே கணவனுக்கு ஆயிரத்தைநூறு ரூபாய் சம்பளம். பிறந்த வீட்டில் ஏழ்மை. தங்கச்சிகள், தம்பிகள் படித்து வேலைக்குப் போய் செழிப்பாக இருக்கிறார்கள். அக்காவுக்கு இப்போது பொறாமை. அண்ணன் தங்கைக்குள் வசதிகள் மாறும்போது ஏற்படும் ஆங்காரத்தை அருமையாக எழுதி இருக்கிறார். கதையில் ஓட்டைகள் உண்டு, ஆனாலும் படிக்கலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பாலகுமாரன் பக்கம்

பாலகுமாரனின் வெட்டிக் கதைகள்

balakumaranஇதுவும் தவிர்த்துரைதான். ஒரு காலத்தில் மாத நாவல் என்றால் பாலகுமாரன் முயற்சி செய்து எழுத வேண்டி இருந்தது. அப்போது வேறு வேறு தளங்களில் சில நல்ல கதைகளை எழுதினார். பிறகு அவர் என்ன எழுதினாலும் ஆஹா ஓஹோ என்று புகழும் ஒரு கூட்டம் சேர்ந்துவிட்டது. கொடுமையிலும் கொடுமையாக பல கதைகளை எழுதினார். அவற்றை தவிர்த்துவிடுங்கள் என்று பரிந்துரைக்கவே இந்தப் பட்டியல்.

அடுக்குமல்லி: இதய நோய் உள்ளவனின் ஏக்கங்கள். அவருக்கு கதையை எந்த திசையில் எடுத்து செல்வது என்று குழப்பம் இருந்திருக்க வேண்டும். வேஸ்ட். தவிர்க்கலாம்.

அம்மாவின் தற்கொலை: அப்பாவுக்கு ஒரு சிநேகிதி. சந்தேகத்தால் தற்கொலை செய்து கொள்ளும் அம்மா. மகன் சிநேகிதியைப் போய் பார்க்கிறான். குடவாயில் பாலசுப்ரமணியம் ஒரு பாத்திரமாக வருகிறார். தவிர்க்கலாம்.

அன்புள்ள மான்விழியே: புத்தகத்தின் சிறந்த விஷயம் ஒரு நல்ல பழைய பாட்டை தலைப்பாகப் போட்டிருப்பதுதான். ஏதோ அவசரக் கோலத்தில் எழுதி இருக்கிறார். கொஞ்சம் அசட்டு மாமா, முறைப்பெண், நடுவில் மாமாவை வளைக்க முற்படும் ஒரு பெண் என்று கதை போகிறது.

என் அன்புக் காதலா: ராஜீவ் காந்தி கொலை மாதிரி ஒரு சம்பவம். ஃபோட்டோகிராஃபர் சுரேந்திரபாபு ஸ்பாட்டிலேயே அவுட். காமிரா கடன் கொடுத்த ரவி இசகுபிசகாக மாட்டிக் கொள்கிறான். கதையை பாதியிலேயே முடித்துவிட்ட மாதிரி இருக்கிறது. தவிர்க்கலாம்.

என் அன்புள்ள அப்பா: வீட்டின் மூன்றாவது பையனை தத்துக் கொடுக்கலாமா என்று யோசிக்கிறார்கள். அவனுடைய மன உளைச்சல்கள்தான் கதை. தவிர்க்கலாம்.

ஏழாவது காதல்: சாகேதராமன் வாழ்க்கையில் ஏழு பெண்கள் வருகிறார்கள். ஒவ்வொன்றும் ஒரு டைப். என்னவோ wish fulfilment fantasy மாதிரி இருக்கிறது. டைம் பாஸ்.

இரண்டாவது கல்யாணம்: கணவன் கொடுமை, இரண்டாவது மணம். வெட்டி.

ஞாபகச்சிமிழ், இதுதான் காதல் என்பதா, இதுதான் வயது காதலிக்க, இனிது இனிது காதல் இனிது (2 வால்யூம்கள்), கல்யாணத் தேர், நினைவுப் பறவை, தேடிக் கண்டுகொண்டேன், திருமணமான என் தோழிக்கு: பாலகுமாரன் கட்டுரைகளில் காதலை, கல்யாணத்தை படம் வரைந்து பாகம் குறித்திருக்கிறார். உதாரணங்களில் எவ்வளவு நிஜம் எவ்வளவு கற்பனை என்று தெரியவில்லை. படித்துவிட்டு தூக்கிப் போட்டுவிடலாம்.

இனி என் முறை: பாலகுமாரன் க்ரைம் கதை மாதிரி ஒன்று முயற்சி செய்திருக்கிறார். பஸ்ஸில் படித்துவிட்டு தூக்கிப் போடக் கூடிய தரத்தில் வந்திருக்கிறது. சுபா, ராஜேஷ்குமாரை விட நன்றாக எழுதி இருக்கிறார் என்று சொல்லலாம். அமிர்தசரஸ் பொற்கோவில் தாக்குதலில் பங்கு பெற்ற ஒரு சி.பி.ஐ. அதிகாரி. அவர் மனைவியை நிர்வாணமாக ஃபோட்டோ எடுக்கும் தீவிரவாதக் கூட்டம் என்று கதை. தவிர்க்கலாம்.

இரண்டாவது கல்யாணம்: கொடுமை. நானே இதை விட பெட்டராக எழுதுவேன்.

காதல் கிளிகள்: சபலம் தட்டுகிறது, ஆனால் நாயகன் சுதாரித்துக் கொள்கிறார்.

காதல் வரி: அரசு வேலையில் சேரும் புவனேஸ்வரிக்கு திருமணம் ஆவதில் பிரச்சினைகள். கடைசியில் ஒரு காதல், அவனும் ஏமாற்றுகிறான். தவிர்க்கலாம்.

காமதேனு: புடவை வியாபாரி. தண்டம்.

காசுமாலை: கமலக்கண்ணன் பணம் பண்ணும் ஆள். கப்பல்களுக்கு பர்சேஸ் ஆஃபீசராக இருக்கிறான். சைடில் நிறைய வருமானம். பாலகுமாரனுக்கு அவனை எப்படி சித்தரிப்பது என்று புரியவில்லை. முதல் பாதியில் அவனது drive-ஐ பற்றி நல்ல விதமாக எழுதுகிறார். இரண்டாவது பாதியில் அவன் திடீரென்று கெட்டவன் ஆகிவிடுகிறான்.

கல்யாண முருங்கை: பாலகுமாரனின் இன்னொரு obsession. திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழும் பெண்.

கொம்புத்தேன்: அண்ணாவி என்று ஒரு விளையாட்டு வீரர் ஒரு 25 வருஷத்துக்கு முன் ஏஷியாட் வரைக்கும் போய் மெடல் வாங்கினார் என்று நினைவு. இவர் அந்த அண்ணாவியை ஒலிம்பிக்குக்கு அனுப்புகிறார். தவிர்க்கலாம்.

மனம் உருகுதே: குடும்பத்திற்கு இன்னல் வரும், சங்கர ஐயரைப் பின்பற்றினால் எல்லா இன்னலும் நீங்கும். என்னய்யா எழுதறே!

மானச தேவி: கதையின் ஹீரோ பாலகுமாரன்தான். ரிஷிகேஷ் போகிறார், அங்கே முன் பின் தெரியாத ஒரு பெண் உங்களோடு உங்கள் அறையில் தங்கிக் கொள்கிறேன் என்கிறாள். நல்ல முடிச்சு, ஆனால் கதை சரியாக வரவில்லை. தவிர்க்கலாம்.

எனக்குள் பேசுகிறேன், மண்ணில் தெரியுது வானம் அட்வைஸ் மழை கட்டுரைத் தொகுப்புகள். தவிர்க்கலாம்.

நான்காம் பிறை: குவைத்துக்கு வேலைக்குப் போகிறவர்களை பின்புலமாக வைத்து சகட்டு மேனிக்கு அட்வைஸ் கொடுக்கிறார். பெரியசாமி என்கிற அவ்வளவாகப் படிக்காத, சமையல் வேலை செய்து முன்னேறுபவன்தான் ஹீரோ.

நல்ல முன்பனிக்காலம்: ஹோட்டலில் பேரராக இருக்கும் ஜெகன்னாதனுக்கும் ஹோட்டல் முதலாளி பெண் மனோகரிக்கும் காதல் உண்டாகிறது. வெட்டித்தனமாக கதை எழுதி இருக்கிறார்.

நெருப்புக்கோழி: பினாமி நிலத்தை அபகரிக்கப் பார்க்கிறார். ஒரே கதையில் நாலு கதையை மிக்ஸ் பண்ணி கழுத்தறுக்கிறார். தவிர்க்கலாம்.

நேசமில்லாதவர்கள்: ஏ.சி. ரிப்பேர் செய்யும் ஒருவனின் போலிக் காதல். தவிர்க்கலாம்.

நிழல் யுத்தம்: பொருந்தாத கணவன் மனைவி, குழந்தைகளுக்காக ஒரே வீட்டில் வாழ்கிறார்கள். தவிர்க்கலாம்.

பனிவிழும் மலர்வனம்: அக்கா தங்கைகள். யாருக்கும் மணம் ஆகவில்லை. பெண் பார்க்க வருபவனிடம் ஒரு கேம் ஆடுகிறார்கள். தவிர்க்கலாம்.

பூந்தோட்டம்: வழக்கம் போல genre-களை குழப்புகிறார். முதல் கணவனால் ஏமாற்றப்பட்ட வனிதாதேவி; இரண்டாவது கணவனும் வேறு ஒருத்தியை மணம் செய்து கொள்கிறான். இவள் ஆன்மிகம் என்று போகிறாள். தவிர்க்கலாம்.

போராடும் பெண்மணிகள்: இது எவ்வளவு தூரம் நிஜம், எவ்வளவு கற்பனை என்று தெரியவில்லை. பல பெண்களின் கதை. முத்து என்ற “கீழ்” ஜாதி, “பட்டிக்காட்டுப்” பெண் மருத்துவ கல்லூரியில் படும் அவமானங்கள் genuine ஆகத் தெரிந்தன. தவிர்க்கலாம்.

சரிகை வேட்டி: அமெரிக்கா மச்சினன் மன்னி பார்த்த பெண்ணை வேண்டாமென்று சொல்லி வேறு ஒரு பெண்ணை மணந்துகொள்கிறான். மன்னிக்கு அவமானமாக இருக்கிறது. புதுப் பெண்ணும் அலட்டல். கடைசியில் மச்சினன் இறந்துபோக, மச்சினன் குழந்தையை எடுத்து வளர்க்கிறாள். அமெரிக்காவிலிருந்து நிறைய பணத்தோடு வருபவர்களைப் பற்றி ஒரு வயிற்றெரிச்சல் தெரிகிறது.

செந்தூர சொந்தம்: கணவன் போய் சாமியாரியானியாக ஆகும் ஒருத்தி. தவிர்க்கலாம்.

சுழற்காற்று: மனைவி சி.பி.ஐ. அதிகாரி. கணவனுக்கு அவள் வேலையை விட்டுவிட்டு தன்னுடன் வர வேண்டும். தவிர்க்கலாம்.

தாழம்பூ: பெண்கள் நட்பு. கொடுமைப்படுத்துகிறார்.

தலையணைப் பூக்கள்: கூட்டுக் குடும்பம். பிரச்சினைகள், இத்யாதி. தவிர்க்கலாம்.

தங்கச்சுருள்: ரொம்ப நல்லவரு ஒருத்தர் ராமர் படத்தை தஞ்சாவூர் பாணியில் வரைகிறார். பாலகுமாரனுக்கு வெட்டி அரட்டை எல்லாம் கதை ஆகிவிடுகிறது.

வெள்ளைத்தாமரை: பதிப்பகம் நடத்தும் அண்ணன். அவனுக்கேற்ற மனைவி வருகிறாள். தங்கை பொறாமையால் துடிக்கிறாள். தவிர்க்கலாம்.

வெற்றிலைக் கொடி: திருவல்லிக்கேணி ஒண்டிக் குடித்தனத்தில், வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் பிரசாத் ராகவேந்திரா மடத்துக்குப் போய் ஏதோ சேவை செய்ய, அவன் வாழ்க்கை மெதுமெதுவாகத் திரும்புகிறது. பஸ்ஸில் படித்துவிட்டு தூக்கிப் போட்டுவிடலாம்.

யானை வேட்டை: பாலகுமாரனுக்கு திருமணத்துக்கு வெளியே உறவு என்பது பெரும் கவர்ச்சி. இந்தக் கதையிலும் அதுதான். அதுவும் தி.ஜா. எழுதிய மரப்பசு தாக்கம் தெளிவாகத் தெரிகிறது. நாயகி ஆர்க்கியாலஜி துறையில் பணி புரிகிறாள். இஷ்டப்பட்டவனோடு படுக்கிறாள். கதை நடுவில் அக்காவின் காதல் முறிவு என்று கொஞ்சம் ramble ஆகிறது. ஒருவனோடு வாழ்கிறாள், குழந்தை என்றதும் இருவரும் மணக்கிறார்கள். பஸ்ஸில் படிக்கலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பாலகுமாரன் பக்கம்

பாலகுமாரனுக்கு பிடித்த புத்தகங்கள்

பாலகுமாரனின் ஒரிஜினல் சுட்டி இங்கே. யார் போட்ட பட்டியலும் இன்னொருவருக்கு முழுதாக ஒத்துப் போகப் போவதில்லை, இருந்தாலும் அவர் சொல்லி இருக்கும் புத்தகங்களில் பெருவாரியானவை நல்ல படைப்புகள். வசதிக்காக பட்டியலை இங்கே மீண்டும் போட்டிருக்கிறேன், என் குறிப்புகளுடன்.

படித்த நாவல்கள்:

  1. கமலாம்பாள் சரித்திரம் – ராஜம் ஐயர்: கமலாம்பாள் சரித்திரத்தைத்தான் நான் தமிழின் முதல் நாவல் என்று கருதுகிறேன். பிரதாப முதலியார் ட்ரெய்லர் மாதிரிதான்.
  2. பொன்னியின் செல்வன்கல்கி: அற்புதமான கதைப் பின்னாலும் முடிச்சுகளும் கொண்ட நாவல். தமிழின் சிறந்த சரித்திர நாவல் இதுவே என்று ஒரு காலத்தில் எண்ணி இருந்தேன். இப்போது வானம் வசப்படும், மானுடம் வெல்லும் இரண்டும் பொ. செல்வனோடு முதல் இடத்துக்கு போட்டி போடுகின்றன.
  3. மோகமுள், செம்பருத்திதி.ஜானகிராமன்: மோகமுள் தமிழின் சிறந்த நாவல்களில் ஒன்று. செம்பருத்தி இப்போது சரியாக நினைவில்லை.
  4. மிஸ்டர் வேதாந்தம், ஜஸ்டிஸ் ஜகந்நாதன்தேவன் மிஸ்டர் வேதாந்தம் என் கண்ணில் தேறாது. ஜ. ஜகன்னாதன் நல்ல நாவல்.
  5. பசித்த மானுடம்கரிச்சான் குஞ்சு: எனக்கு முழுதாகப் புரிந்துவிட்டது என்று சொல்வதற்கில்லை. ஆனாலும் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
  6. ஜே.ஜே. சில குறிப்புகள்சுந்தர ராமசாமி: படித்துப் பல வருஷம் ஆகிவிட்டது. சாதனை என்று அப்போது நினைத்தேன், மீண்டும் ஒரு முறை படித்துப் பார்க்க வேண்டும்.
  7. ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்ஜெயகாந்தன்: பிரமாதமான பாத்திரப் படைப்பு. சாதனை.
  8. 18வது அட்சக்கோடு, கரைந்த நிழல்கள்அசோகமித்திரன்: கரைந்த நிழல்கள் ஒரு tour de force. ப. அட்சக்கோடும் சிறந்த நாவல்.
  9. சாயாவனம்சா. கந்தசாமி: சாயாவனம்தான் நான் முதன்முதலாகப் படித்த இலக்கியம் என்று நினைக்கிறேன். கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்.
  10. குருதிப்புனல்இந்திரா பார்த்தசாரதி: என் கண்ணில் இது முழுதாக வெற்றி அடையாத படைப்புதான்.
  11. வாடிவாசல்சி.சு.செல்லப்பா: குறுநாவல் என்றுதான் சொல்ல வேண்டும். அற்புதமான புத்தகம்.
  12. தலைமுறைகள்நீல. பத்மநாபன்: சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்று. வட்டார வழக்குக்காகவே படிக்கலாம்.
  13. குறிஞ்சி மலர்நா. பார்த்தசாரதி: இன்று மகா தட்டையான படைப்பாகத்தான் தெரிகிறது. ஆனால் எழுதப்பட்டபோது இதன் லட்சியவாதம் பெரிய தாக்கத்தை உருவாக்கியது என்பதை மறுப்பதற்கில்லை.
  14. ஒரு புளியமரத்தின் கதைசுந்தர ராமசாமி: நல்ல நாவல், படிக்க வேண்டிய நாவல்.
  15. வாசவேஸ்வரம்கிருத்திகா அற்புதமான நாவல்.
  16. தரையில் இறங்கும் விமானங்கள்இந்துமதியின் பிற புத்தகங்கள் எல்லாம் குப்பையாக இருக்கும்போது எப்படி இந்த ஒரு புத்தகம் மட்டும் இலக்கியமாக இருக்கிறது என்று வியந்திருக்கிறேன்.
  17. பிறகுபூமணி இன்னும் ஒரு சிறந்த நாவல்.
  18. கதவு/கோபல்ல கிராமம்கி. ராஜநாராயணன்: கி.ரா.வெல்லாம் ஆங்கிலத்தில் எழுதி இருந்தால் நோபல் நிச்சயம்.
  19. கடல்புரத்தில்வண்ணநிலவன்: பல வருஷங்கள் முன்னால் படித்தபோது என்னைப் பெரிதாகக் கவரவில்லை. மீண்டும் படித்துப் பார்க்க வேண்டும்.
  20. என் பெயர் ராமசேஷன் – ஆதவன்: சில புத்தகங்கள் மனதில் ஒரு ஸ்பெஷல் இடத்தைப் எடுத்துக் கொள்கின்றன. எ.பெ. ராமசேஷன் எனக்கு அப்படித்தான். படிக்காதவர்கள் அதிருஷ்டசாலிகள், அவர்களுக்கு ஒரு நல்ல வாசிப்பு அனுபவம் காத்திருக்கிறது.
  21. நாளை மற்றுமொரு நாளே – ஜி.நாகராஜன்: இதுவும் ஒரு சாதனை.
  22. புத்தம் வீடு – ஹெப்சிபா ஜேசுதாசன்: ஹெப்சிபா எழுத்தாளர். அவர் படைத்திருப்பது இலக்கியம். அவருக்கு பெண் எழுத்தாளர் என்று அடைமொழி எல்லாம் கொடுக்கத் தேவையில்லை.
  23. யவனராணிசாண்டில்யன்: சிறு வயதில் படித்தபோது இளஞ்செழியனின் சாகசங்கள் மனதைக் கவர்ந்தன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அவையெல்லாம் எம்ஜிஆர் பட சாகசங்கள் என்பதையும் சொல்லத்தான் வேண்டும்.
  24. வழிப்போக்கன் – சாவி உப்பு சப்பில்லாத வாரப் பத்திரிகை தொடர்கதை. இதையெல்லாம் பாலகுமாரன் எப்படி விரும்பிப் படித்தாரோ தெரியவில்லை. இந்த லிஸ்டில் உள்ள மற்ற புத்தகங்களுக்கும் இதற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்.

படிக்காதவை:

  1. வேள்வித்தீ -எம்.வி. வெங்கட்ராம்:
  2. எங்கே போகிறோம் – அகிலன்: அகிலன் உருப்படியாக எதையாவது எழுதி இருப்பார் என்று எனக்கு நம்பிக்கையே இல்லை.
  3. அலைவாய்க் கரையில் – ராஜம் கிருஷ்ணன்:
  4. புதிய கோணங்கி – கிருத்திகா
  5. கடலோடி – நரசையா
  6. சின்னம்மாஎஸ்.ஏ.பி.
  7. படகு வீடு – ரா.கி.ரங்கராஜன்
  8. புயலில் ஒரு தோணி – ப.சிங்காரம்

சிறுகதைகள், தொகுப்புகள்:

  1. மங்கையர்க்கரசியின் காதல்வ.வே.சு.ஐயர்: முன்னோடி சிறுகதை. பேரை கிளிக்கினால் அழியாச்சுடர்கள் தளத்தில் படிக்கலாம்.
  2. புதுமைப்பித்தன் சிறுகதைகள்: புதுமைப்பித்தனைத்தான் நான் தமிழின் நம்பர் ஒன் எழுத்தாளர் என்று கருதுகிறேன். என்றாவது நான் பணக்காரன் ஆனால் அவரது எழுத்துகளை மொழிபெயர்த்து விளம்பரம் செய்து எல்லாரையும் படிக்க வைப்பேன்…
  3. மூங்கில் குருத்துதிலீப் குமார் மீண்டும் மீண்டும் anthologize செய்யப்படும் இந்தச் சிறுகதை சிறப்பானதுதான். ஆனால் திலீப் குமாரின் கடவு சிறுகதையே எனக்கு எல்லாவற்றிலும் மிகவும் பிடித்தமானது.
  4. சிறிது வெளிச்சம்கு.ப.ரா.: நல்ல சிறுகதை, படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
  5. தெய்வம் பிறந்ததுகு. அழகிரிசாமி
  6. கலைக்க முடியாத ஒப்பனைகள்வண்ணதாசன்: நல்ல சிறுகதை.
  7. சிறகுகள் முறியும்அம்பை: இந்த மாதிரி பெண்ணிய சிறுகதை எழுத அம்பைக்கு சொல்லித் தர வேண்டுமா என்ன?
  8. இன்று நிஜம் – சுப்ரமண்ய ராஜு
  9. தேவன் வருகைசுஜாதா
  10. ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள், ஒரு மனுஷிபிரபஞ்சன்
  11. கல்லிற்கு கீழும் பூக்கள் – மாலன்
  12. அப்பாவும் இரண்டு ரிக்ஷாக்காரர்களும் – ம.வெ. சிவகுமார்
  13. பச்சைக்கனவுலா.ச.ரா.
  14. நுணலும் புனலும்ஆ. மாதவன்
  15. மௌனி சிறுகதைகள் – மௌனி
  16. நினைவுப் பாதை – நகுலன்
  17. சம்மதங்கள் – ஜெயந்தன்
  18. நீர்மைந. முத்துசாமி பேரை கிளிக்கினால் அழியாச்சுடர்கள் தளத்தில் படிக்கலாம். எனக்கு சிறுகதை புரியவில்லை.
  19. சோற்றுப்பட்டாளம் – சு. சமுத்திரம்
  20. குசிகர் குட்டிக் கதைகள் – அ. மாதவய்யா
  21. ஒரு ஜெருசேலம் – பா. ஜெயப்ரகாசம்
  22. ஒளியின் முன்ஆர். சூடாமணி

கவிதைகள்

  1. அன்று வேறு கிழமை – ஞானக்கூத்தன்
  2. பெரிய புராணம் – சேக்கிழார்
  3. நாச்சியார் திருமொழி – ஆண்டாள்
  4. அழகின் சிரிப்பு – பாரதிதாசன்
  5. வழித்துணை – ந. பிச்சமூர்த்தி
  6. தீர்த்த யாத்திரை – கலாப்ரியா
  7. வரும் போகும் – சி. மணி
  8. சுட்டுவிரல்/பால்வீதி – அப்துல் ரஹ்மான்
  9. கைப்பிடி அளவு கடல் – தர்மு சிவராமு
  10. ஆகாசம் நீல நிறம் – விக்ரமாதித்யன்
  11. நடுநிசி நாய்கள் – சுந்தர ராமசாமி

கட்டுரைகள்

  1. பாரதியார் கட்டுரைகள் – சி. சுப்பிரமணிய பாரதி
  2. பாலையும் வாழையும் – வெங்கட் சாமிநாதன்
  3. சங்கத் தமிழ் – கலைஞர் மு. கருணாநிதி
  4. வளரும் தமிழ் – தமிழண்ணல்
  5. மார்க்சியமும், தமிழ் இலக்கியமும் – ஞானி
  6. இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் – வைரமுத்து

வாழ்க்கை சரித்திரம்

  1. என் சரித்திரம் – உ.வே. சாமிநாத ஐயர்
  2. காரல் மார்க்ஸ் – வெ. சாமிநாத சர்மா

நாடகங்கள்

  1. சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்சி. என். அண்ணாதுரை எழுதிய இந்த நாடகம் என் ரசனைக்கு ஒத்து வராவிட்டாலும் தமிழுக்கு முக்கியமான நாடகம்தான். ஆவணம் என்ற விதத்திலும் முக்கியமானது.

மொழிபெயர்ப்புகள்:

  1. அழிந்த பிறகு, பாட்டியின் நினைவுகள் – சிவராம கரந்த்
  2. அந்நியன் – ஆல்பெர் காம்யு
  3. வால்காவிலிருந்து கங்கை வரைராகுல சாங்க்ரித்தியாயன் இன்னுமொரு பிரமாதமான எழுத்து. இதை பாலகுமாரன் கட்டுரை என்று வரிசைப்படுத்தி இருக்கிறார்!
  4. சிறுகதைகள் – ஓ. ஹென்றியின் சிறுகதைகள் பலவற்றைப் படித்திருக்கிறேன். Gift of the Magi, Last Leaf மாதிரி ஒரு சில சிறுகதைகளே மனதில் நிற்கின்றன. அவரை பேரிலக்கியம் படைத்தவர் என்று சொல்வதற்கில்லை.

இந்தப் பட்டியல் முழுமையானதாய் கருத வேண்டாம். என் நினைவில் தைத்தவரை எழுதியிருக்கிறேன். நல்லவை சில மறந்து போயிருக்கலாம். இதை தவிர என் அபிப்பிராயம் என்னவெனில் ஜெயகாந்தன், தி. ஜானகிராமன், லா.ச.ரா, அசோகமித்திரன், சுஜாதா, சுந்தர ராமசாமி ஆகியோரின் எல்லா படைப்புகளையும் படிக்க வேண்டுமென்று வற்புறுத்துகிறேன். —— பாலகுமாரன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: புத்தகப் பரிந்துரைகள்

வல்லிக்கண்ணன் – அந்தக் காலத்து சிலிகன் ஷெல்ஃப்?

vallikkannanவல்லிக்கண்ணனுக்கு தமிழ் இலக்கிய வரலாற்றில் நிச்சயமாக இடமில்லை. ஆனால் அவர் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்!

அவரது முக்கியத்துவம் தமிழ் இலக்கிய வரலாற்றை ஓரளவுக்கு ஆவணப்படுத்தியதுதான் என்று நினைக்கிறேன். நிறையப் படித்திருக்கிறார் (குறிப்பாக ஐம்பதுகள், அறுபதுகள் வரை வந்த க்ளாசிக் தமிழ் புத்தகங்கள்), அதை எளிமையாக, கோர்வையாக அறிமுகப்படுத்தி இருக்கிறார். வாசகர்கள், விமர்சகர்கள் மற்றும் பாரதிக்குப் பின் தமிழ் உரைநடை (1981) புத்தகங்கள் எனக்கு ஓரளவு பிடித்திருந்தன. நான் எழுதும் அறிமுகம் போலத்தான் இருக்கின்றன. எனக்குத் தெரியாத விஷயம் என்று எதுவுமில்லை, இருந்தாலும் சரளமான நடையில் தமிழ் எழுத்தாளர்கள், சிறுகதைகள், பத்திரிகைகள், நாவல்கள், கவிதைகள், என்று பல்வேறு தொடர்புள்ள தளங்களின் trend-களை விவரிக்கின்றன. சிலிகன் ஷெல்ஃபை முப்பது நாற்பது வருஷத்துக்கு முன் தொடங்கி இருந்தால் எனக்கும் சாஹித்ய அகடமி விருது கிடைத்திருக்குமோ? 🙂 இரண்டு புத்தகங்களையும் மின்னூலாக இணைத்திருக்கிறேன்.

ஆனால் அவர் எழுதிய புதுக் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் (சாஹித்ய அகாடமி விருது பெற்ற புத்தகம்) (1977), எழுத்தாளர்கள்-பத்திரிகைகள், சரஸ்வதி காலம், தீபம் யுகம், தமிழில் சிறு பத்திரிகைகள் ஆகியவை எனக்கு சுவாரசியப்படவில்லை. எனக்குப் பத்திரிகைகள், புதுக் கவிதை ஆகியவற்றில் எல்லாம் பெரிய interest கிடையாது. விரும்பிப் பார்த்தது சி.சு. செல்லப்பாவைப் பற்றிய ஒரு தொகுப்பு. அதில் அனேகமாக எழுத்து பத்திரிகையில் வந்த பல கட்டுரைகள், கதைகள் எல்லாம்தான். எழுத்து பத்திரிகையைப் பற்றி நானெல்லாம் கேள்விப்பட்டதோடு சரி, பார்த்தது கூட இல்லை. பார்க்க விரும்புபவர்களுக்காக இங்கே இணைத்திருக்கிறேன்.

போராட்டங்கள், மற்றும் நிலை பெற்ற நினைவுகள் இரண்டும் அவரது வாழ்க்கை வரலாற்று நூல்கள். மனிதர் அங்கே சைவாள் ஹோட்டலில் சாப்பிட்டேன், இங்கே தண்ணீர் குடித்தேன் என்று எக்கச்சக்க விவரம் கொடுக்கிறார் – யார் படிப்பது? சின்ன வயதில் ராஜவல்லிபுரத்தில் இருந்து சென்னை வரை நடந்து வந்ததைத் தவிர வாழ்க்கையில் சுவாரசிய நிகழ்ச்சி எதுவும் தெரியவில்லை.

ஆனால் சாஹித்ய அகாடமிகாரர்களை உதைக்க வேண்டும். என்ன நினைத்துக்கொண்டு இவருக்கெல்லாம் விருது கொடுக்கிறார்கள்? கொஞ்சம் கூட விவஸ்தையே இல்லாதவர்கள். (க.நா.சு.வுக்கே “இலக்கியத்துக்கு ஓர் இயக்கம்” என்ற புத்தகத்துக்காகத்தான் சாஹித்ய அகடமி விருது கிடைத்தது என்று ஞாபகம்.) விருது பெற்ற எழுத்தாளராயிற்றே, ஏதாவது இருக்கும் என்ற நப்பாசையில் நான் ஒரு டஜன் படைப்புகளைப் படித்தேன். படித்த எந்த சிறுகதை, நாவல், நாடகமும் எனக்குத் தேறவில்லை. அதுவும் விடியுமா என்ற நாடகம் டிபிகல் தி.மு.க. நாடகம் மாதிரி இருக்கிறது. குஞ்சாலாடு கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் பாதிப்பில் எழுதப்பட்டதாம். புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதைதான். துணிந்தவன் (1959), அன்னக்கிளி, சுதந்திரப் போராட்டப் பின்னணி உள்ள நாவலான வீடும் வெளியும், சரித்திரக் கதையான விடிவெள்ளி மாதிரி நாவல்களை விட ஆறு வயதுக் குழந்தை நல்லதாக ஒரு கதை சொல்லும்.

வல்லிக்கண்ணன் நல்ல இலக்கியம் படைக்கவில்லை. நல்ல இலக்கியம் படைத்த பலரோடு அவருக்கு நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது, அவ்வளவுதான். இலக்கிய முயற்சிகளுக்கு அவர் ஒரு பார்வையாளராக இருந்திருக்கிறார், அந்த முயற்சிகளை ஆவணப்படுத்தி இருக்கிறார். ஆவணம் என்றால் memoirs டைப் ஆவணம்தான், சிறந்த ஆய்வு என்றெல்லாம் இல்லை. அவரது முக்கியத்துவம் அவ்வளவுதான்.

பிற்சேர்க்கை: ஜெயமோகன் வல்லிக்கண்ணனைப் பற்றி என்ன சொல்கிறார் என்று தேடிப் பார்த்தேன். “இலக்கிய வாசகர்களுக்கு அவர் ஒரு சென்ற காலக் கறை” என்று தீர்மானமாகச் சொல்கிறார். வல்லிக்கண்ணனின் “சிவப்புக் கல் மூக்குத்தி” என்ற ஒரு சிறுகதை ஜெயமோகன் தேர்ந்தெடுத்த தமிழின் சிறந்த சிறுகதைகள் பட்டியலில் இடம் பெறுகிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
பழ. அதியமானின் அஞ்சலி
திருப்பூர் கிருஷ்ணனின் அஞ்சலி
வல்லிக்கண்ணன் பற்றி வெங்கட் சாமிநாதன்

எழுத்து: சி.சு. செல்லப்பா – மின்னூல்
வாசகர்கள், விமர்சகர்கள் – மின்னூல்
பாரதிக்குப் பின் தமிழ் உரைநடை – மின்னூல்

விந்தன்

விந்தனுக்கு தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு சின்ன இடம் உண்டு என்றுதான் நினைத்திருந்தேன். நான் படித்த வரையில் எந்தப் புத்தகமும் தேறவில்லை. அவருக்குத் தமிழ் இலக்கிய வரலாற்றில் footnote ஆகக் கூட இடம் பெறும் தகுதி இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். தவிர்த்துவிடுங்கள் என்று எச்சரிக்கவே இந்தப் பதிவு.

படித்த பிராமணர்கள், தமிழ் பரிச்சயம்+பாரம்பரியம் உள்ள செட்டியார்கள், பிள்ளைமார், முதலியார் மாதிரி எந்த பின்புலமும் இல்லாமல் அச்சுக் கோர்க்கும் தொழிலாளியாக ஆரம்பித்து எழுத்தாளராக மாறியதாலோ என்னவோ சமூக இழிவுகள் என்று தனக்குத் தோன்றியவற்றைப் பற்றி கிழி கிழி என்று கிழிக்க முயற்சித்திருக்கிறார். அதில் அவர் வெற்றி பெறவில்லை. எழுத்துக்கு வேண்டிய எந்த வித நுட்பமும் நயமும் அவருக்கு கைகூடவில்லை. குறைந்த பட்சத் தேவையான சுவாரசியம் கூட இல்லை. அவருக்கு இலக்கியம் கை வரவில்லை, அவ்வளவுதான். நேர்மையாக முயற்சித்திருக்கிறார் என்று வேண்டுமானால் சொல்லலாம். கல்கி அவ்வப்போது பாராட்டி இருக்கிறாரே என்றுதான் இவரைப் படித்தேன். கல்கி இவரை ஊக்குவித்தது இவரது blue-collar பின்புலத்துக்காகத்தான் இருக்க வேண்டும், எழுத்தின் சிறப்புக்காக இருந்திருக்க முடியாது. ஜெயமோகன் எச்சரித்த பிறகும் இவரைப் படித்தது என் முட்டாள்தனம்தான்.

அவரது நாவல்களில் சிறந்தது என்று சொல்லப்படும் பாலும் பாவையும் எல்லாம் ஒரு நாவலே இல்லை. முட்டாள்தனமான கதை. அந்தக் காலத்தில் பெண் தானாகச் சென்று ஒரு ஆணிடம் ஏறக்குறைய “என்னை வச்சுக்க” என்று சொல்வது புரட்சியாக இருந்திருக்க வேண்டும். தெரியாத்தனமாக அதை நான் படிக்க நேர்ந்தது என் துரதிருஷ்டம். கண் திறக்குமா?, மனிதன் மாறவில்லை எல்லாம் வேஸ்ட். ஒரு போலியான தமிழ் பேராசிரியரை வில்லனாக வைத்து கதை எழுதி இருக்கிறார். சுயம்வரம், காதலும் கல்யாணமும் எல்லாம் பேப்பருக்குப் பிடித்த கேடு. அவரது சிறுகதைகள் (ஒரே உரிமை, முல்லைக்கொடியாள், மிஸ்டர் விக்ரமாதித்தன் கதைகள் மாதிரி பல தொகுதிகள்) எதுவும் எனக்குத் தேறவில்லை.

அன்பு அலறுகிறது என்ற நாவலில் அவர் சினிமாவைப் பற்றி எழுத ஆரம்பித்திருக்கிறார். ஜெயகாந்தன் முதல் சில அத்தியாயங்களை விந்தன் எழுதியதாகவும் பிற அத்தியாயங்களை விந்தனுக்காக தான் ghost-write செய்தததாகவும் ஒரு இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள் புத்தகத்தில் குறிப்பிடுகிறார். ஜெயகாந்தனாலேயே இந்த நாவலைக் காப்பாற்ற முடியவில்லை.

விந்தன் கட்டுரைகள் புத்தகத்தில் பாரதியைப் பற்றிய கட்டுரையைப் படிக்கலாம். மற்றவை எதுவும் சுகமில்லை.

விந்தன் மனிதன் என்று ஒரு இதழை நடத்தி இருக்கிறார். அந்த இதழை தொகுத்திருக்கிறார்கள். சு.ரா., ஜெயகாந்தன், வையாபுரிப் பிள்ளை போன்றவர்கள் எழுதி இருக்கிறார்கள். எனக்கு எதுவும் தேறவில்லை என்றாலும் ஆவணம், அதனால் இங்கே pdf சுட்டியைக் கொடுத்திருக்கிறேன்.

பரமசிவம் என்ற விந்தன் பக்தர் அவரது திரையுலக அனுபவங்களைப் பற்றி “திரையுலகில் விந்தன்” என்ற புத்தகத்தில் எழுதி இருக்கிறார். இது இந்தப் படத்திற்கு வசனம் எழுதினார், இந்தப் பாட்டை எழுதினார் என்று வழக்கமாகப் போடும் லிஸ்ட் மட்டுமே. அவரது திரையுலகப் பங்களிப்பு முக்கியமானதும் இல்லை, வெற்றியும் பெறவில்லை.

அவர் “எழுதிய” புத்தகங்களில் நினைவு வைத்துக் கொள்ள வேண்டியது எம்.ஆர். ராதாவை பேட்டி கண்டு தொகுத்ததுதான். அதற்குக் காரணம் எம்.ஆர். ராதாவின் வெளிப்படையான பேச்சுதான், இவர் இல்லை.

மொத்தத்தில் தவிர்க்கப்பட வேண்டிய எழுத்தாளர்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்