14 தமிழறிஞர் பட்டியல

14 தமிழறிஞர் பட்டியல் என்று ஒன்று பாஸ்டன் பாலா தளத்தில் கண்ணில் தென்பட்டது. வசதிக்காக கீழே கொடுத்திருக்கிறேன்.

இதில் ஏறக்குறைய எல்லா பேர்களும் கேள்விப்பட்டவையே. ஆனால் இவர்களில் பலர் தமிழுக்கு என்ன செய்தார்கள் என்று தெரியாது. எடுத்துச் சொல்ல எங்கள் சேதுராமனும் இல்லை. சரி எனக்குத் தெரிந்த வரை குறிப்புகள் எழுதுகிறேன்.

மு. வரதராஜன் (மு.வ.): ஒரு காலத்தில் பாப்புலராக இருந்து இப்போது யாருடைய பிரக்ஞையிலும் இல்லாத எழுத்தாளர். இவருடைய திருக்குறள் உரை இன்னும் பாப்புலராக இருக்கிறதா? ஆனால் இவர் எழுதிய இரண்டு நாவல்கள் – கரித்துண்டு மற்றும் அகல் விளக்கு – எனக்குப் பிடித்தமானவை. சேதுராமன் எழுதிய அறிமுகம் இங்கே.

கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை: பேரைக் கூட நான் கேள்விப்பட்டதில்லை. இந்தப் பதிவுக்காக கூகிளில் தேடியபோது வடமொழி கலப்பு இல்லாத தனித்தமிழ் வேண்டும் என்று முயன்றிருக்கிறார் என்று தெரிகிறது. அவருடைய நல்வினை, இன்றைய பீட்டர் தமிழைக் கேட்பதற்குள்ளாகவே மறைந்துவிட்டார்.

ரா.பி. சேதுப்பிள்ளை: அலங்காரத் தமிழில் எழுதுவார், சில கட்டுரைகள் படித்திருக்கிறேன். ஆனால் தமிழில் என்ன ஆராய்ச்சி செய்தார் என்று தெரியவில்லை. தமிழுக்காக முதல் சாகித்திய அகாடமி விருது பெற்றவர் – தமிழ் இன்பம் என்ற கட்டுரைத் தொகுப்புக்காக.

திரு.வி. கல்யாணசுந்தரம் (திரு.வி.க.): திரு.வி.க.வின் தமிழ் படிக்க சுகமானது. உண்மையிலேயே பெரிய மனிதர். தமிழ், அரசியல், தொழிலாளர் இயக்கம், பத்திரிகை உலகம் என்று பல துறைகளில் சாதித்தவர். அவருடைய வாழ்க்கை குறிப்புகள் படிக்க வேண்டிய புத்தகம். அவருடைய தமிழ்த் தொண்டு என்பது பத்திரிகைகள் (தேசபக்தன், நவசக்தி) மூலமும், தமிழ் நூல்களுக்கு உரை எழுதியதும் மட்டுமே என்று நினைக்கிறேன்.

ரசிகமணி டி.கே. சிதம்பரநாத முதலியார் (டி.கே.சி.): டி.கே.சி.யின் இதய ஒலி புத்தகம் குறிப்பிட வேண்டியது. தன் ரசனையை மட்டுமே அடிப்படையாக வைத்து கம்பனையும் முத்தொள்ளாயிரத்தையும் மற்றும் பல தமிழ் செய்யுள்களையும் சாதாரண வாசகனுக்கு புரிய வைத்தார். அவருடைய மிக பெரிய தொண்டு என்பது அவர் உருவாகிய வட்டம்தான். பல அறிஞர்கள் – ராஜாஜி, கல்கி, கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை, பாஸ்கரத் தொண்டைமான் இன்னும் நிறைய பேரின் மேல் அவரது தாக்கம் பெரியது. அது தமிழை முன்னே கொண்டுபோனது.

வித்துவான் தியாகராஜச் செட்டியார்: இவர் உ.வே.சா.வின் சம காலத்தவர், மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணவர் என்று நினைவு. ஆனால் இவர் ஆற்றிய பணி என்ன என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

ஆறுமுக நாவலர்: நாவலர் சைவத்தையும் தமிழையும் போற்றியவர். மிஷனரிகளினால் மனக் கொதிப்பு அடைந்து அவர்கள் பாணியிலேயே சைவத்தை பரப்ப முயற்சி செய்தவர். மிஷனரிகளை எதிர்த்து அவர் எழுதிய சைவ தூஷணப் பரிகாரம் சுவாரசியமான புத்தகம். ஆனால் இவர் என்ன செய்தார் என்றும் என்னால் சொல்ல முடியவில்லை.

நாவலர் சோமசுந்தர பாரதியார்: 1937-38-இல் ராஜாஜி அரசுக்கு எதிராக நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றிருக்கிறார் என்பதைத் தவிர வேறு எதுவும் எனக்கு முக்கியமாகத் தெரியவில்லை. சுவாரசியமான விஷயம் – வ.உ.சி.யின் கப்பல் கம்பெனியில் செயலாளராக இருந்தாராம்.

பரிதிமாற் கலைஞர் தமிழ்ப்பற்றால் பேரை மாற்றிக் கொண்டார். தாங்க முடியாத சில புனைவுகளை (மதிவாணன்) எழுதி இருக்கிறார். அதைத் தவிர?

உ.வே. சாமிநாதையர்: உ.வே.சா.வைப் பற்றி நான் சொல்லித்தானா தெரிய வேண்டும்?

பண்டிதமணி கதிரேசன் செட்டியார்: செட்டியாரும் பேராசிரியராக இருந்திருக்கிறார் என்பதைத் தவிர எனக்கு வேறு எதுவும் முக்கியமாகத் தெரியவில்லை.

மறைமலையடிகள்: இருபது வருஷங்களுக்கு முன்பே படிக்க முடியாத பண்டிதத் தமிழில் பல கட்டுரைகள் எழுதி இருக்கிறார். இவரையெல்லாம் அவரது தாக்கத்தின் அடிப்படையில்தான் மதிப்பிட வேண்டும் என்று நினைக்கிறேன்.

மீனாட்சிசுந்தரம் பிள்ளை: பத்தொன்பதாம் நூற்றாண்டின் பெரிய தமிழறிஞர் இவராகத்தான் இருக்க வேண்டும். உ.வே.சா.வின். ஆசிரியர். சிறு காவியங்களை எழுதி இருக்கிறார். இவரது சீடர் சவேரிநாதப் பிள்ளைக்கு? இவரே அரிச்சந்திர புராணத்தை எழுதிக் கொடுத்தார் என்று சொல்வார்கள்.

பாண்டித்துரைத் தேவர்: மீண்டும் தமிழ்ச்சங்கத்தை ஸ்தாபித்தார் என்பதைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை.

இவர்களில் பலரும் தமிழ்ப் பேராசிரியர்களாக இருந்து தமிழில் ஆர்வும் உள்ள ஓரிரு தலைமுறைகளை உருவாக்கி இருக்கிறார்கள் என்று தெரிகிறது. அது tangible பணியாக இல்லாமல் போகலாம், ஆனால் பெரிய பணிதான். இவர்களில் பலரை அவர்களது தாக்கத்தின் அடிப்படையில்தான் மதிப்பிட வேண்டும் என்று நினைக்கிறேன். இரண்டு ராகவையங்கார்கள், கம்பன் அடிப்பொடி சா. கணேசன், ம.பொ.சி., அ.ச.ஞானசம்பந்தம், ஜேசுதாசன், சாலமன் பாப்பையா, கு. ஞானசம்பந்தன் ஆகியோருக்கும் இப்படிப்பட்ட தாக்கம் இருந்திருக்கும்/இருக்கும் என்று நினைக்கிறேன்.

இந்தப் பட்டியலில் முக்கியமான விடுபடல் சி.வை. தாமோதரம் பிள்ளை மற்றும் வையாபுரிப் பிள்ளை. அது என்னவோ உ.வே.சா.வுக்கு இருக்கும் புகழில் தாமோதரம் பிள்ளைக்கு பத்தில் ஒரு பங்கு கூட இல்லை. ஆனால் அவரது பணியும் உ.வே.சா. அளவுக்கு முக்கியமானதுதான். முதல் அகராதி வையாபுரிப் பிள்ளை பதித்ததுதான் என்று நினவு. அந்தக் காலத்தில் வெள்ளக்கால் சுப்ரமணிய முதலியார், வேங்கடசாமி நாட்டார் ஆகியோரும் இடைப்பட்ட காலத்தில் நா. வானமாமலை போன்றோரும் இப்போது அ.கா. பெருமாள், வேதசகாயகுமார், அ.இரா. வேங்கடாசலபதி (சில குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டாலும்) ஆகியோரும் குறிப்பிடப்பட வேண்டிய முக்கியமான களப்பணி புரிந்திருக்கிறார்கள்/புரிகிறார்கள் என்று நினைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்

7 thoughts on “14 தமிழறிஞர் பட்டியல

  1. Thanks for this post. I translated a collection of Tamil essays on stalwarts who served the cause of the language. The collection was published as Sculptors of Classical Tamil during the Semmozhi Manadu. I could send them and the translations to you. What is your email ID?

    Like

  2. ரமேஷ்,
    முதலில் யாரோ என்று நினைத்தேன், அப்புறம்தான் நீங்கள் ஓப்பன் ரீடிங் ரூம் ரமேஷ் என்று புரிந்து கொண்டேன்.
    உங்களுக்கு அடிக்கடி ஜே போடுவது உண்டுதான், ஆனாலும் இந்த மொழிபெயர்ப்புகளை அனுப்புகிறேன் என்று சொன்னீர்கள் பாருங்கள், அதற்காக ஒரு ஸ்பெஷல் ஜே! என் முகவரி rv dot subbu at gmail

    Like

  3. ஆர்வி

    நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பல தமிழ் அறிஞர்களைப் பற்றிய கட்டுரைகள் உங்களூர் இணைய இதழிலேயே இருக்கிறதே! நீங்கள் வாசிப்பதில்லையோ?

    நூற்றுக்கும் மேற்பட்ட தமிழறிஞர்களைப் பற்றிய கட்டுரைகள் இங்கே உள்ளன.

    http://tamilonline.com/thendral/channels/munnodi/munnodipics.aspx?Page=1

    http://tamilonline.com/thendral/channels/munnodi/munnodipics.aspx?Page=2

    http://tamilonline.com/thendral/channels/munnodi/munnodipics.aspx?Page=3

    http://tamilonline.com/thendral/channels/munnodi/munnodipics.aspx?Page=4

    – கீர்த்தனா

    Like

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.