காவியத் தலைவன் விமர்சனம் – பில்டிங் ஸ்ட்ராங்கு, பேஸ்மெண்ட்தான் கொஞ்சம் வீக்கு

kaaviyath_thalaivanரொம்ப நாளாச்சு முதல் நாள், முதல் காட்சி பார்த்து. விடுமுறை நாள், எனக்கும் என் மனைவிக்கும் ஏதாவது தமிழ்ப்படம் பார்க்கலாம் என்று தோன்றியதால் இங்கே சான் ஹோசேயில் ஒரு தியேட்டரில் காவியத் தலைவனைச் சென்று பார்த்தோம்.

படத்தின் களன் – இருபது, முப்பதுகளின் நாடக உலகம் – நிறைய ஸ்கோப் உள்ள உலகம். ஜெயமோகன் போன்ற ஒரு ஜீனியசிடம் இந்த மாதிரி களன், ஒரு திரைக்கதையை உருவாக்கு என்றால் பிரித்து மேய்ந்துவிடுவார் என்று எதிர்பார்த்தேன். திரைக்கதை சொதப்பிவிட்டது. என் மனைவி என்னைப் பிரித்து மேய்ந்ததுதான் மிச்சம்.

பிரித்விராஜ் அருமையாக நடித்திருக்கிறார். அதுவும் அவருக்கு சித்தார்த்தின் முன்னேற்றத்தைக் கண்டு ஏற்படும் ஆதங்கம் உறுத்தலாக, பின்னால் பொறாமையாக, பின்னால் அசூயையாக மாறுவதை அருமையாகக் காண்பித்திருக்கிறார். ராவணனா, சூரபத்மனா, அந்த ஓவியம் அவருடைய மாற்றத்துக்கு ஏற்ப இன்னும் இன்னும் முழுமையாக மாறுவது (shades of Dorian Gray!) நல்ல காட்சி அமைப்பு. சித்தார்த் என்றால் அழகான சாக்லேட் பாய், அவ்வளவுதான் என்று எனக்கு ஒரு எண்ணம் இருந்தது, அவரிடம் இவ்வளவு தூரம் நடிப்பை நான் எதிர்பார்க்கவில்லை. சில காட்சிகள் – சிஷ்யனை சபிக்கும் குரு, குருவை சபிக்கும் சிஷ்யன், உன்னிடம் மோதித்தான் என் நடிப்பை வளர்த்துக் கொண்டேன் என்று சித்தார்த் சொல்லும் இடம் – நன்றாக இருந்தன. பல குறைகள் உறுத்தினாலும் (தொப்புள் தெரிய லோ-ஹிப் புடவை மற்றும் தாவணி, நவீன உடைகளாக அணியும் சித்தார்த், அன்னியத் துணி எரிப்பின் போது கூட கதர் அணியாத போராளிகள், டூயட்டில் ஓகே என்பது), நாடக சபா சூழல் முதல் பாதியில் தெரிய வருகிறது. பாய்ஸ் நாடகம் என்றாலே மிகை நடிப்புதான் என்று நினைத்திருந்த எனக்கு அதற்கு வேறொரு பக்கமும் இருந்தது என்று நம்பும்படியாக சித்தரித்திருக்கிறார்கள். ஆனால் திரைக்கதையின் வழக்கமான பாதை, முற்றிலும் யூகிக்கக் கூடிய “திருப்பங்கள்”, சுவாரசியமே இல்லாத இரண்டாம் பகுதி எல்லாம் இவை அத்தனையையும் விரயப்படுத்திவிடுகின்றன.

நாடக நடிகர்களிடம் பெண்கள் மயங்குவது அன்று அபூர்வ நிகழ்ச்சி அல்லதான். இருந்தாலும் சித்தார்த்தும் ஜமீந்தார் பெண்ணாக நடிப்பவரும் நீ ஹீரோ, நான் ஹீரோயின், வா காதலிப்போம் என்கிற மாதிரிதான் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். சித்தார்த் ஜமீந்தார் மாளிகைக்கு சர்வசாதாரணமாக தினமும் இரவு வந்து போகிறார். காவலாள் இல்லை என்றாலும் வீட்டில் வேறு ஒருவருமேவா இருக்க மாட்டார்கள்? குடிப்பழக்கத்தால் ஐந்து வருஷம் ஆள் அட்ரசே இல்லாமல் இருந்த சித்தார்த் பத்து நாள் ராஜபார்ட் போட்டவுடன் குடியை மறந்து தொழிலிலும் தேசபக்தியிலும் மும்முரமாகிவிடுகிறார். என்னவோ கேப் துப்பாக்கி சுடுவது போல முப்பதுகளின் இன்ஸ்பெக்டர் விடாமல் சுட்டுக் கொண்டே இருக்கிறார். அந்தக் காலத் திரைப்படங்களில் சாவதற்கு முன்னால் முழ நீளம் வசனம் பேசுவார்கள். சித்தார்த்-பிரித்விராஜ் சம்வாதம் ஒன்று அப்படி நடக்கிறது. வசனம் அந்தக் காட்சியில் நன்றாக இருந்தாலும் முதுகில் குண்டு பாய்ந்த சித்தார்த் எப்படிய்யா இவ்வளவு தெளிவாக வசனம் பேசுகிறார் என்று யோசனை போகிறது. சங்கரதாஸ் ஸ்வாமிகளைத்தான் சிவதாச ஸ்வாமிகள் ஆக்கி இருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறதுதான், அதற்காக ஒரு காட்சியில் பாத்திரத்தின் பெயரையே சங்கரதாஸ் ஸ்வாமிகள் ஆக்கிவிட்டால் எப்படி? பொதுவாகத் திரைக்கதையில் பல ஓட்டைகள் தெரிகின்றன, அவை நிறைய உறுத்தவும் செய்கின்றன்.

மற்ற நடிகர்களில் வேதிகா ஸ்த்ரீ பார்ட் போட்டுப் பார்க்கும் காட்சியில் நன்றாக நடித்திருந்தார். நாசர் வழக்கம் போல நன்றாக நடித்திருக்கிறார். தம்பி ராமையா மைனாவில் நடித்த பாத்திரத்தை எப்போதுதான் தாண்டப் போகிறாரோ தெரியவில்லை, எல்லாப் படத்திலும் ஒரே பாத்திரத்தைத்தான் நடித்துக் கொண்டிருக்கிறார். சில காட்சிகளிலேயே வந்தாலும் பொன்வண்ணனும் மன்சூர் அலி கானும் நிற்கிறார்கள்.

என்னால் வடிவு பாத்திரம் கே.பி. சுந்தராம்பாளையும் சிவதாச ஸ்வாமிகள் பாத்திரம் சங்கரதாஸ் ஸ்வாமிகளையும் மூலமாக வைத்து படைக்கப்பட்டிருக்கிறது என்பதை மட்டும்தான் கண்டுபிடிக்க முடிந்தது.

ஜெயமோகன் தனக்குப் பிடித்தமான ஆடிப்பிம்பம் கருவை பயன்படுத்தி இருக்கிறார். அதை இன்னும் கொஞ்சம் விரித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். வசனம் ஒன்றும் குறிப்பிடும்படியாக இல்லை. திரைக்கதை சரியாக இருந்தால்தானே வசனம் எல்லாம்? போர்வாளை பென்சில் சீவ பயன்படுத்தி இருக்கிறார் வசந்தபாலன்.

சுருக்கமாகச் சொன்னால் வசந்தபாலன் திரைக்கதையை இன்னும் கொஞ்சம் செதுக்கி இருந்தால் திரைப்படம் நன்றாக வந்திருக்கும். இப்போது ஏதோ முயற்சி செய்திருக்கிறார், அவ்வளவுதான்.

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள்

பைரப்பா நிகழ்ச்சி பற்றி ராஜன்

S.L.Bhyrappaடாக்டர் எஸ்.எல். பைரப்பா பிரபலமான கன்னட மொழி எழுத்தாளரும், சிந்தனையாளரும் தத்துவவாதியும் ஆவார். அவரது படைப்புகள் தமிழ் உட்பட அனைத்து இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு உலகம் முழுக்கக் லட்சக்கணக்கான வாசகர்களைப் பெற்றுள்ளன. சாகித்ய அகடமி உட்பட ஏராளமான இலக்கிய விருதுகளைப் பெற்ற பைரப்பா இந்தியாவின் முக்கியமான இலக்கியவாதிகளில், தத்துவவாதிகளில் ஒருவர் ஆவார்.

எழுத்தாளர் பைரப்பா அவர்கள் சான் ஓசேயில் நடைபெற்ற அக்கா எனப்படும் அமெரிக்க கன்னட மொழி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் இந்திய இலக்கியத்திற்கும் இந்திய தத்துவங்களுக்கும் ஆற்றிய மாபெரும் இலக்கியப் பணிகள் தமிழ் வாசகர்களையும் மொழி பெயர்ப்பு நூல்கள் மூலமாக சென்றடைந்துள்ளன.

வேதங்களே அடிப்படை, அவற்றின் சாரமாக உபநிஷதங்கள், அவற்றின் சாரமாக போதாயணரின் பிரம்ம சூத்திரம், அவற்றுக்கு சங்கரர், ராமானுஜர், மத்வர் போன்ற பல ஆசார்யர்களின் வியாக்கியானங்கள் என்று கட்டமைக்கப்பட்டிருக்கும் தத்துவங்கள் அனைத்திலும் மிகுந்த அறிவும் அவற்றின் சாரங்களை தனது எழுத்துக்கள் மூலமாக இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் கொண்டு சென்றவர் பைரப்பா அவர்கள். ஆனால் அந்தத் தத்துவங்கள் இலக்கியம் மூலமாக ராமாயணமும் மகாபாரதமும் விளக்குவதே மனதில் படிகிறது, தன் வழியும் இலக்கியத்தின் மூலம், கதைகளின் மூலம் தத்துவ சாரத்தை காட்டுவதே என்று உணர்ந்து கதைகள் எழுத ஆரம்பித்திருக்கிறார். அவர் கன்னட மொழியில் எழுதினாலும் கூட அவரது அனைத்து படைப்புகளும் தமிழ் மொழியிலும் மொழி பெயர்க்கப் பட்டு பெரும் வரவேற்பையும் வாசகர்கள் வட்டத்தையும் உருவாக்கியுள்ளன.

தனது உரையின் பொழுது வம்சவிருக்‌ஷாவை (1965) தன் முதல் முக்கிய நாவலாகக் குறிப்பிட்டார். க்ருஹபங்கா, பர்வா, அன்வேஷனே, தப்பலியு நீனடே மகனே போன்ற நாவல்களைக் குறிப்பிட்டார். ஆவரணா குறித்து நீண்ட நேரம் பேசினார். ஹிந்து மதத்தில் எந்தக் கடவுளையும் கும்பிடும் சுதந்திரம் இருக்கிறது, தனக்கு சரி என்று பட்டதை எழுத தயங்கியது கிடையாது என்றும் அதற்காக தனது உயிரையே கொடுக்கத் தயங்க மாட்டேன் என்று உறுதியுடன் குறிப்பிட்டார். (ஸிலிக்கான் ஷெல்ஃப் ஆர்.வி.சுப்ரமணியன் குறிப்பில் இருந்து).அவரது பருவம், ஆவரணா, ஒரு குடும்பம் சிதைகிறது போன்ற நாவல்கள் தமிழ் வாசகர்களிடத்தும் பெரும் வரவேற்பு பெற்றவை. அவரது வம்ச விருக்‌ஷா போன்ற நாவல்கள் திரைப்படங்களாகவும் எடுக்கப் பட்டுள்ளன.

bhyrappa_nithyaஇந்தியாவின் முக்கியமான அறிவுப் பொக்கிஷங்களில், இந்தியாவின் மாபெரும் எழுத்தாளர்களில் ஒருவர் என்ற முறையிலும் அவரது படைப்புகள் அனைத்தும் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு எண்ணற்ற தமிழ் வாசகர்களையும் சென்றடைந்திருக்கின்றன என்ற முறையிலும் இந்தியாவின் இலக்கியச் செல்வராகிய பைரப்பா அவர்களை பாரதி தமிழ்ச் சங்கமும் அவரது வாசகர்களும் இணைந்து அந்த மாநாட்டு மேடையில் கவுரவித்தார்கள். அவரது படைப்புகளுக்கு பாரதி தமிழ்ச் சங்கம் தனது பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்து ஒரு நினைவுப் பரிசை வழங்கியது. அவரது வாசகர்களான ஆர் வி சுப்ரமணியன், சுந்தரேஷ் மற்றும் நித்தியவதி சுந்தரேஷ் ஆகியோர் தயார் செய்திருந்த உரைகள் அவரிடம் அளிக்கப் பட்டன. பாரதி தமிழ்ச் சஙகத்தின் உறுப்பினர்கள் பலரும் பைரப்பாவின் தமிழ் வாசகர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியின் அவர் ஆற்றிய உரையின் முழு தமிழ் வடிவத்தை Nithyavathy Sundaresh கன்னடத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்து அளித்தவுடன் இடுகிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பைரப்பா பக்கம்

தொடர்புடைய சுட்டி: பைரப்பாவை சந்தித்தது பற்றி ஆர்வி

தமிழறிஞர் வரிசை – 3. பாண்டித்துரைத் தேவர்

ஓப்பன் ரீடிங் ரூம் ரமேஷ் சக்ரபாணியின் தொடரும் தமிழறிஞர் அறிமுகங்கள். இந்த அறிமுகங்கள் அஜயன் பாலாவால் எழுதப்பட்டவை, ரமேஷ் இவற்றை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

பாண்டித்துரைத் தேவர்

பிறப்பு: 21-03- 1867, இறப்பு: 02-12-1911

panditthurai_thevar

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையிலேயே தமிழ் அழிந்துபட்டு வருவதைக் கண்டு மனம் கலங்கி தன் முயற்சியால் நான்காம் தமிழ் சங்கத்தை உருவாக்கிய பெருமைக்குரியவர். தமிழ்த்தொண்டுக்கு அறிவு மட்டுமல்ல பொருளும் தேவை என்பதை உணர்ந்து அதற்காக வாரி வழங்கிய அருட்கொடையாளர், பாலவநத்தம் ஜமீன் வள்ளல் பாண்டித்துரைத் தேவர்.

மதுரையை அடுத்த பாலவநத்தம் எனும் ஊரில் பிறந்த பாண்டித்துரைத் தேவர் அவர்களின் தந்தை பொன்னுசாமித் தேவர், தாய் பர்வதவர்த்தினி. இருவருக்கும் மூன்றாவது மகனாக பிறந்தவர் பாண்டித்துரைத் தேவர். சிறு வயதில் தமிழறிஞர் மு. ராகவையங்காரின் தகப்பனாரான சதாவதானம் முத்துசாமி ஐயங்காரிடம் கமபராமாயணத்தை முழுவதுமாக கற்றவர், பின் மதுரை வித்துவான் ராமசாமி பிள்ளையவர்களிடம் பழந்தமிழ் நூல்களையும், ஸ்ரீ பழனி குமார தம்பிரான் அவர்களிடம் சைவ சித்தாந்த நூல்களையும் கற்றார்.

ஒரு சமயம் வள்ளல் சொற்பொழிவாற்ற மதுரைக்கு வந்தபோது கமபராமாயணம் மற்றும் திருக்குறள் நூல்களை வாங்கி வரச் சொல்ல, உதவியாளர்கள் எங்கு தேடியும் அந்நூல்கள் அவர்களுக்குக் கிட்டவில்லை. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைக்கா இந்த நிலை என மனம் வெதும்பிய பாண்டித்துரைத் தேவர் அக்கணமே தமிழ் வளர்க்க முடிவெடுத்தார். 14-9-1901-ஆம் நாளில் பகல் 1.30 மணிக்கு மேல் மதுரை  சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் வைத்து நான்காம் தமிழ்ச் சங்கம் ஒன்றை நிறுவினார். அதே நாளில் செந்தமிழ் கலாசாலை, சேதுபதி புத்தகசாலை, நூலாராய்ச்சி சாலை போன்றவற்றை அடுத்தடுத்த கட்ட்டிடங்களில் நிறுவினார். பல தமிழறிஞர்கள் நிர்வாக பொறுப்புகளில் ஈடுபடுத்தப்ப்ட்டனர். தமிழ் பயிற்றுவித்து மாணாக்கர்களுக்கு பாராட்டும் பத்திரமும் பரிசும் வழங்க முடிவெடுத்து செயல்திட்டம் உடனடி அமுலுக்கு வந்தது. சோழவந்தான் அரசன் சண்முகனார், பரிதிமாற் கலைஞர் உள்ளிட்ட பல தமிழறிஞர்கள் தமிழகமெங்குமிருந்தும் இந்த நான்காம் தமிழ்ச் சங்க பள்ளிக்கூடத்துக்கு வந்து சொற்பொழிவாற்றினர். இதற்காகவே செந்தமிழ் எனும் இதழை துவக்கி அதில் பலரையும் எழுத வைத்தார்.

அது போல தமிழறிஞர்கள் நலிவுற்றபோது பாண்டித்துரைத் தேவரின் உதவிக் கரங்கள் சடுதியில் நீண்டு அவர்களை தாங்கிக் கொண்டது. உ.வே.சாமிநாதய்யரின் அருந்தொண்டை அறிந்து அவரை அழைத்து மணிமேகலை பிரசுரிக்க தேவையான பொருளுதவிகளை செய்தார். அதே போல சிங்காரவேலு முதலியார் அவர்கள் தொகுத்த அபிதான சிந்தாமணி எனும் நூல் உருவாக காரணமாகவும் இருந்தவர் இவரே.

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளை கப்பல் வாங்குவதற்காக தனியொருவராக ஒன்றரை லட்சம் தந்தவர். (விக்கிபீடியா ஒரு லட்சம் என்கிறது.)

ஒரு முறை அரைகுறையாக தமிழ் கற்ற ஆங்கிலப் புலவர் ஸ்காட் என்பவர் திருக்குறளில் எதுகை மோனை பொருந்தவில்லை என “அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு”  எனும்  முதல் குறளை “அகர முதல எழுத்தெல்லாம் ஆதி சிகர முதற்றே உலகு”  எனத் திருத்தி சுகாத்தியர் திருக்குறள் என அச்சிட இதனை அறிந்த தமிழறிஞர் அரசன் சண்முகனாருக்கு உள்ளம் கொந்தளித்தது. இதை பாண்டித்துரைத்தேவரிடம் சொல்ல அவரை சமாதானம் செய்த பாண்டித்துரை தேவரவர்கள் ஸ்காட் வெளியிட்ட அந்த அனைத்து நூல்களையும் மொத்தமாக காசு கொடுத்து வாங்கி குழியிலிட்டு எரித்தார்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழறிஞர் பக்கம்

விளம்பரங்களின் வரலாறு – ஒரு நிமிஷ வீடியோ

முதல் டிவி விளம்பரத்தின் விலை என்ன தெரியுமா? – ஒன்பது டாலர்கள்! இது போல பல சுவாரசியமான தகவல்கள் அடங்கிய சின்ன வீடியோ இங்கே. பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்

தமிழறிஞர் வரிசை – 2. ந.மு. வேங்கடசாமி நாட்டார்

நாட்டார் எழுதிய ‘வேளிர் வரலாற்றின் ஆராய்ச்சி‘ என்ற புத்தகத்தை மட்டுமே படித்திருக்கிறேன். மு. ராகவையங்கார் எழுதிய ‘வேளிர் வரலாறு‘ என்ற புத்தகத்தில் அவர் தமிழகத்தின் வேளிர் மன்னர்கள் துவாரகையிலிருந்து குடியேறிய யாதவ வம்சாவளியினர் என்று வாதிடுகிறார். இந்தப் புத்தகம் அதை மறுக்கிறது. நடை பழைய பண்டித நடை. அதைத் தாண்டிப் படித்தால் நல்ல எதிர்வாதம் என்று தெரிகிறது.

சோழர் வரலாறு சங்ககால சோழர்களைப் பற்றி இலக்கிய மேற்கோள்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது. நக்கீரர் நல்ல தொகுப்பு. நாட்டார் சிறந்த அறிஞர், ஆனால் அவரது புத்தகங்களைப் படிப்பது கொஞ்சம் கஷ்டம்தான்.

ஓப்பன் ரீடிங் ரூம் ரமேஷ் சக்ரபாணியின் தமிழறிஞர் அறிமுகங்களைத் தொடர்கிறேன்..

ந.மு. வேங்கடசாமி நாட்டார்

பிறப்பு:12-4-1884, இறப்பு:28-03-1944

na_mu_venkatasami_naattarஇலக்கிய உலகில் இவருக்கிணையானவர் உளரோ என ஐயுறும் அளவுக்குத் தன் பணிகளால் தமிழை மிளிரச் செய்தவர். மகாகவி பாரதிக்கு சிலப்பதிகாரத்தில் ஒருமுறை ஐயம் ஏற்பட்டபோது தெளிவு கொள்ள அவர் தேர்ந்தெடுத்த நபர் இவரே. நீதி நூல்கள் முதற்கொண்டு சங்கபாடல்கள் வரை பல செய்யுள்களுக்கு உரை எழுதியுள்ளார். பண்டிதர். நாவலர் எனப் பட்டங்கள் பெற்றவர் நடுக்காவேரி முத்துசாமி வேங்கடசாமி நாட்டார்.

தஞ்சாவூரில் திருவையாறை அடுத்த நடுக்காவேரியில் பிறந்தவர். தந்தை வீ. முத்துசாமி நாட்டார். தாயார் தைலம்மாள். சிறு வயதிலேயே புலமைப் பித்து அதிகம் இவரை பீடித்துக் காணப்பட்டது. ஒரு முறை இவரது தந்தையாரை பார்க்க வந்த ஒரு அறிஞர் செய்யுள் ஒன்றை பிரிக்க முடியாமல் ஐயப்பட்டு நின்றபோது சிறுவனாக இருந்த நாட்டார் உடனடியாக அதனை உடைத்து அவ்வறிஞருக்கு பொருளை உணர்த்தினார்.

குடும்பச் சூழல் காரணமாகவும் வேளாணமை தொழில் காரண்மாகவும் நான்காம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடிந்த நாட்டார் தன் ஆவல் மிகுதியால் நன்னூல் இலக்கண நூலையும் சிற்றிலக்கியங்களையும் கற்றுத் தேறினார். பகல் முழுக்க வயலில் விவசாயமும் இரவு முழுக்க அறிவு விவசாயமுமாக இவரது நாட்கள் கழிந்தன. இந்நிலையில் அப்போது மதுரையில் நான்காம் தமிழ்சங்கத்தை துவக்கிய வள்ளல் பாண்டித்துரைத் தேவர் அவர்கள் தமிழ் கல்வியில் பண்டிதர் தேர்ச்சி பெற மூன்று விதமாக படிப்புகளை வகுத்திருந்தார். அவை முறையே பிரவேச பண்டிதம், பாலபண்டிதம், பண்டிதம் என்பவை. ஒவ்வொன்றூம் இரண்டாடாண்டுகள் படிக்க வேண்டியது. இப்படிப்பில் சேர்ந்து பண்டிதராக விரும்பிய நாட்டார் ஆறு ஆண்டு படிப்பை மூன்றே ஆண்டுகளில் படித்து முடித்து வள்ளல் பாண்டித்துரை அவர்களையே வியப்பில் ஆழ்த்தினார். நாட்டாரின் புலமையை உணர்ந்த பாண்டித்துரைத் தேவர் அவருக்கு தங்கத் தோடு அணிவித்து பெருமைப்படுத்தினார்.

நாட்டார் துவக்கத்தில் திருச்சி எஸ்.பி.ஜி கல்லூரியிலும், பிற்பாடு கோவை மைக்கேல் உயர்நிலைப் பள்ளியிலும் பணிபுரிந்தார். பிற்பாடு அண்ணாமலைப் பல்கலைகழக்த்தில் விரிவுரையாளராக பணியில் சேர்ந்தார்.

நாட்டார் அவர்கள் தொடர்ந்து பல இலக்கிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வாழ்நாள் முழுவதையும் அதற்காக அர்ப்பணித்துக்கொண்டார். மு.இராகவையங்கார் எழுதிய வேளிர் வரலாறு எனும் நூலைப் படித்து அதிலுள்ள தவறுகளை கண்டு மனம் குமைந்து அதற்கு மாற்றாக இன்னொரு வேளிர் வரலாற்றை (1915) எழுதி நூலாக கொண்டுவந்தார். அது மட்டுமல்லாமல் கள்ளர் சரித்திரம் (1923), மற்றும் சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் கற்பும் மாண்பும் (1924), நக்கீரர் (1921), கபிலர் (1923) போன்ற ஆய்வு நூல்களையும் பின் நீதிநெறி நூல்களான ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, நன்னெறி, வெற்றி வேற்கை, இன்னாநாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது போன்றவற்றுக்கு தனித்தனியாக விளக்க உரைகள் எழுதினார்.

மேலும் இவற்றோடு நிற்காத இவரது தமிழ்க் காதல் அகநானூறு, மணிமேகலை,சிலப்பதிகாரம், தண்டியலங்காரம், யாப்பருங்கலக் காரிகை போன்ற நூல்களுக்கும் உரை எழுதி தமிழுக்கு அள்ப்பரிய தொண்டினை செய்துள்ளார். தனியொருவராக இத்தனை நூல்களுக்கு உரை எழுதுதல் என்பது அத்தனை எளிதான காரியமன்று. அளப்பரிய காதலும் அதி தீவிர மொழி பற்றுமில்லாது தமிழுக்கு இத்தகைய அணிகலன்கள் கிடைத்திருக்க வாய்ப்பில்லை.

இந்நூல்களை அச்சிட்ட சைவ சித்தாந்த நூற்பதிப்புகழகம் அட்டையின்மேல் மு.வேங்கடசாமி நாட்டார் உரை எழுதியது என அனைத்து நூல்களிலும் கொட்டை எழுத்தில் அச்சிட்டு விற்பனை செய்திருப்பது ஒன்றே மக்களிடம் அவரது நூல்களுக்கு இருந்த வரவேற்புக்கு சான்று.

இவரது தமிழ்ப்பணிக்கு பரிசாக சென்னை மாகாண தமிழ்ச்சங்கம் இவருக்கு நாவலரெனும் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழறிஞர்கள்

தொடர்புடைய சுட்டி: தமிழ் விக்கிபீடியா குறிப்பு

வெண்முரசு விழாவுக்கு வாழ்த்துக்கள்

venmurasu_release_function

நண்பர் செந்தில்குமார் தேவன் வெண்முரசுவுக்குநீ ஒரு வாழ்த்து அனுப்பலாமே என்று கேட்கும்வரை எனக்காகத் தோன்றவே இல்லை. என்னையும் என் மகாபாரதப் பித்தையும் ஜெயமோகனுக்கு ஓரளவு தெரியும், இந்த வரிசையை மிகவும் ரசித்துப் படித்திருப்பேன், படிப்பேன், இது தொடர வேண்டும் என்று முழு மனதுடன் விரும்புவேன், ஒவ்வொரு நாளும் அடுத்த பகுதியைப் படிக்க ஆவலோடு காத்திருப்பேன் என்பதை எல்லாம் அவர் நன்றாகவே அறிவார். இதில் வெளி உலகத்துக்காக ஒரு வாழ்த்தைப் பதிவு செய்ய வேண்டுமா, ஊரறிந்த பார்ப்பானுக்கு பூணூல் எதற்கு என்று கொஞ்சம் யோசித்தேன். வாழ்த்து அவர் பூரித்துப் போய்விடுவார் என்பதற்காக அல்ல, என் மன நிறைவை வெளிப்படுத்த என்று புரிந்த அடுத்த கணம் எழுத ஆரம்பித்துவிட்டேன்.

மகாபாரதமே உலகின் ஆகச் சிறந்த காவியம் என்று நான் உறுதியாகக் கருதுகிறேன். உண்மை மனிதர்களால், ஆனால் அசாதாரண மனிதர்களால் நிறைந்தது, அந்த மனிதர்கள் முன் எப்போது இருக்கும் இரண்டு வழிகள், அவர்கள் தேர்வுகள் அந்தப் பாத்திரங்களை என் மனதுக்கு நெருக்கமானவர்களாக மாற்றி பல வருஷங்கள் ஆகிவிட்டன. எனக்கு மூன்று வயது இருக்கும்போது இறந்து போன என் பாட்டியின் மடியில் அமர்ந்து பீமனைப் பற்றி கதை கேட்டதே இன்னும் மறக்கவில்லை. பீமனும் கர்ணனும் சகுனியும் துரோணரும் பூரிஸ்ரவசும் பகதத்தனும் கடோத்கஜனும் எனக்கு அண்டை வீட்டு மனிதர்கள் மாதிரிதான், அடிக்கடி அந்தப் பக்கம் போய் வருவேன்.

மகாபாரதத்திற்கு சிறந்த மறுவாசிப்புகள் இருக்கின்றனதான். ஆனால் அவற்றுள் பல பாரதத்தின் ஒரு சிறு கிளைக்கதையை எடுத்துக் கொண்டு விரிக்கின்றன. (காண்டேகரின் யயாதி, எம்.வி. வெங்கட்ராமின் நித்யகன்னி). பாரதத்தின் மொத்தக் கதையையும் பேச முற்படுபவையும் தங்களை ஒரு கோணத்தில் குறுக்கிக் கொள்கின்றன. (பர்வாவின் யதார்த்தச் சித்தரிப்பு, ரெண்டாமூழமில் பீமனின் கோணம், யுகாந்தரில் ஐராவதி கார்வேயின் சில பல கேள்விகள்). பாரதத்தின் அகண்ட வீச்சு பெரும் எழுத்தாளர்களைக் கூட பயமுறுத்தி இருக்க வேண்டும், அவர்களின் மொத்த வாழ்நாளும் ஒரே தளத்தில் கழிந்துவிடுமோ என்ற பயம் காவியங்கள் படைக்கும் திறம் படைத்தவர்களைக் கூட மகாபாரதத்தின் முழுமையான மறுவாசிப்பு முயற்சிகளை மேற்கொள்ளாமல் இருக்கச் செய்திருக்க வேண்டும்.

மேலும் ஜீனியஸ் எழுத்தாளர்களுக்குக் கூட ஒரு காவியத்தை மறு ஆக்கம் செய்வது என்பது சுலபமல்ல. புதுமைப்பித்தனோ, அசோகமித்ரனோ இதை முன்னெடுக்க முடியாது. அவர்களால் இதன் ஒரு (சிறு) பகுதியை இலக்கியம் ஆக்க முடியலாம். புதுமைப்பித்தன் செய்தும் இருக்கிறார். (சாப விமோசனம்) ஆனால் முழு பாரதத்தின் மறுவாசிப்பு என்பதற்கு வேறு மாதிரியான mindset வேண்டும். விஷ்ணுபுரமும் கொற்றவையும் எழுதும் திறம் வேண்டும்!

jeyamohanஜெயமோகன் தன் வாழ்வின் சரியான நேரத்தில் சரியான தளத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார். விஷ்ணுபுரத்தையே இது வரை வந்த தமிழ் நாவல்களில் சிறந்ததாகக் கருதுகிறேன். இந்த முயற்சி அதையும் விஞ்சும் அறிகுறிகள் தெரிகின்றன. (குறிப்பாக நீலம் பகுதி). ஜெயமோகனுக்கு இறைவன் நீண்ட ஆயுளும் தளராத உற்சாகமும் சோர்வடையாத மனமும் அருளி இந்த முயற்சி பாரதத்துக்கும் ஜெய்மோகனுக்கும் பெருவெற்றியாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

ஆனால் ஒன்று – பாற்கடலைக் குடிக்க வந்த பூனை என்று கம்பன் தன்னைப் பற்றீ சொல்லிக் கொண்டானாம். பாரதமும் பாற்கடல்தான், ஜெயமோகனாலும் கரைத்து குடித்துவிட முடியாது. உதாரணத்துக்கு ஜெயமோகன மகாபாரதத்தில் ஒரு சின்ன “முரண்பாடு”; துருபதனின் வீழ்ச்சியை கண்டதும் எழும் துரோணரின் புன்னகை அர்ஜுனனின் மனதில் இருக்கும் பீடத்திலிருந்து துரோணரை இறக்கிவிடுகிறது. ஆனால் கர்ணன் அவரது குருகுலத்தில் அவமதிக்கப்படும்போதோ, அல்லது ஏகலைவனின் கட்டை விரல் வெட்டப்படும்போதோ அர்ஜுனனுக்கு அவரிடமோ, பீமனிடமோ, எவரிடமும் மனவிலக்கம் ஏற்படுவதில்லை!

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயமோகன் பக்கம், வெண்முரசு பக்கம்

ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டைத் தாழ்ப்பாள் – அப்டீன்னா?

வெண்பாவிற் புகழேந்தி என்று புகழ் பெற்றவரும், நளவெண்பாவை எழுதியவருமான புகழேந்திப் புலவருக்கும் ஒட்டக்கூத்தருக்கும் நடுவே பலத்த போட்டி இருந்தது என்று கர்ணபரம்பரைக் கதைகள் உண்டு. அந்தப் போட்டியிலிருந்து முளைத்ததாம் இந்த “பழமொழி”.

சுந்தரராமன் தன் தளத்தில் அசோகமித்ரன் கட்டுரை ஒன்றை digitize செய்து பதித்திருக்கிறார். அதிலிருந்து:

சீதனமாக சோழ அரசியுடன் அனுப்பப்பட்ட புகழேந்தியை சொல்வார் பேச்சு கேட்டு சோழ மன்னன் சிறையில் அடைத்திருக்கிறான். இதை அறிந்த அரசி கோபத்துடன் தன் அறைக்குள் தாளிட்டுக் கொள்கிறாள்.
அவள் கோபத்தைத் தணிக்க அரசன் ஒட்டக்கூத்தரை அனுப்புகிறான். அவர் பாடிய செய்யுள் அரசிக்கு இன்னும் கோபமூட்டிவிடுகிறது. “என் இடை பற்றியும் அழகு பற்றியும் பாட இவன் யார்? ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டைத் தாழ்ப்பாள்!”

asokamithranஅசோகமித்ரன் இந்தக் கதையை வினோத ரசமஞ்சரி என்ற புத்தகத்தில் படித்ததாகக் குறிப்பிடுகிறார். அவ்வையார், கம்பன், ஒட்டக்கூத்தர், புகழேந்தி, காளமேகம், பொய்யாமொழிப் புலவர், ஏகம்பவாணன் பற்றிய பல கர்ணபரம்பரைக் கதைகள் அடங்கிய தமிழ் இலக்கிய வரலாற்றுச் சுரங்கம் என்று இந்தப் புத்தகத்தைப் புகழ்கிறார். போதாக்குறைக்கு பரமார்த்த குரு கதை வேறு இருக்கிறதாம். 1891-இல் நிச்சயமாக ஒரு பதிப்பு வெளியாகி இருக்கிறதாம். அதற்கு முன்பும் பதிப்புகள் வந்திருக்கலாம் என்று அசோகமித்ரன் யூகிக்கிறார். (வீராசாமி செட்டியார் (1855) தாம் எழுதிய உரைநடைக் கட்டுரைகளைத் தொகுத்து ‘வினோத ரசமஞ்சரி’ என்று வெளியிட்டார் என்று இந்தப் பதிவில் படித்தேன்.) சமீப காலத்தில் விஜயா பதிப்பகத்தினர் வெளியிட்டிருக்கிறார்கள் என்றும் நினைவு கூர்கிறார்.

அசோகமித்ரன் குறிப்பிடும் பிற இரு புத்தகங்களும் (வாதூலன் எழுதிய “கர்நாடக சங்கீதத்தை ரசியுங்கள்“, சுந்தரராமன் எழுதிய “ராகசிந்தாமணி“) கூட சுவாரசியமானவையாகத் தெரிகின்றன.

என்றாவது தேடிப் பிடித்து இதையெல்லாம் வாங்க வேண்டும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: கர்ணபரம்பரைக் கதைகள்