பெருமாள் முருகன் – ஹிந்துத்துவர்களுக்கு சில கேள்விகள்

perumal_muruganஆளை விடுங்கடா சாமி என்று பெருமாள் முருகனே களத்திலிருந்து போய்விட்டாலும், எனக்குத் தெரிந்த சில ஹிந்துத்துவர்கள் கடையை மூட மறுக்கிறார்கள். நண்பர் ராஜன் எழுதித் தள்ளிக் கொண்டிருக்கிறார். புத்தகத்தை தடை செய்திருக்கக் கூடாது, பெ. முருகன் விவரித்திருக்கும் சர்ச்சைக்குரிய திருவிழா ஹிந்து மதத்தின் நெகிழ்வைக் காட்டுகிறது என்று ஆரம்பித்த ஜடாயு கூட இப்போது கட்சி மாறிவிட்டது போலத் தெரிகிறது. உண்மையான அறிவுஜீவி, scholar என்று நான் மதிக்கும் அரவிந்தன் நீலகண்டனும் பெ. முருகன் ஆதாரம் தரவேண்டும் என்று நினைக்கிறார்.

எனக்கு சில அடிப்படை சந்தேகங்கள்:

  1. வயது வந்த ஒரு பெண் (adult) – உடல் சுகத்துக்காகவோ, பிள்ளைப்பேறுக்கோ, எதற்காக வேண்டுமானாலும் இருக்கட்டும் – தான் விரும்புபவனோடு படுப்பது தவறா? அப்படிப் படுத்தால் அது அவள் குடும்பத்தை, ஜாதியை, ஊரைக் கேவலப்படுத்துகிறதா?
  2. கேவலப்படுத்தாது என்று நீங்கள் நினைத்தால் இந்த சர்ச்சைக்கு அர்த்தமே இல்லை. கேவலப்படுத்தும் என்றால் அடுத்த கேள்வி. அந்த adult ஆணாக இருந்தால் அது அவன் குடும்பத்தை, ஜாதியை, ஊரைக் கேவலப்படுத்தாதா?
  3. கேவலப்படுத்தாது என்று நீங்கள் நினைத்தால் பெண் பெய்யென்றால் மழை பெய்ய வேண்டும், ஆணுக்கு எந்தக் கட்டுப்பாடும் தேவையில்லை என்று நினைப்பவர் நீங்கள் என்பது தெளிவு. உங்களுக்குப் பெண் என்பவள் சொத்து. அவளைக் கட்டுப்படுத்தும் உரிமை உங்களுக்கு உண்டு என்று நினைக்கிறீர்கள். நம் வீட்டு/ஜாதி/ஊர்ப் பெண் அவள் இஷ்டப்படி வேறொருவனுடன் உறவு கொள்வதா என்று பொங்குவீர்கள், அந்தப் பெண் என்ன நினைக்கிறாள் என்பது பற்றி உங்களுக்குக் கவலை இல்லை.  நம்ம வன்னியப் பொண்ணு திவ்யாவை இளவரசன் மாதிரி ஒரு தலித் மணப்பதா என்று கிளம்பியவர்களுக்கும் உங்களுக்கும் கருத்தளவில் வித்தியாசம் இல்லையே?
  4. அதுவும் கேவலம்தான் என்று நினைத்தால் அடுத்த கேள்வி. ஏறக்குறைய அதே பக்கங்களில் ஊர்த் தேவடியாள்கள் இன்று யார் நம்மிடம் வருவார்கள் என்று அலுத்துக் கொள்கிறார்கள். திருச்செங்கோட்டில் தாசிகள் இருந்தார்கள், திருவிழா தவிர்த்து மற்ற நாட்களில் அவர்களுக்கு தொழில் நன்றாக நடக்கும் என்று பெருமாள் முருகன் எழுதி இருப்பது திருச்செங்கோட்டுக்குக் கேவலம் என்று ஏன் உங்கள் குரல் எழவில்லை? ஒருவருக்குக் கூட – ஒரு கவுண்டருக்குக் கூட, ஒரு திருச்செங்கோட்டுக்காரருக்குக் கூட, ஒரு ஹிந்துத்துவருக்குக் கூட அது ஊரைக் கேவலப்படுத்துகிறது என்று தோன்றாதது ஏன்?
  5. சரி என்னவோ தோன்றவில்லை, இப்போது நான் எடுத்துக் கொடுத்த பிறகு தோன்றிவிட்டது என்றே வைத்துக் கொள்வோம். ஆதாரம், தரவு வேண்டும் என்று நிறைய ஹிந்துத்துவர்கள் எழுதி இருந்தார்கள். சரி. ஊரில் தாசிகள் இருந்ததற்கும் ஆதாரம் கேட்டால் பெ. முருகன் எங்கே போவார்?
  6. நாளை பெருமாள் முருகனுக்கு பதில் ஒரு சிவன் கணபதி பதினேழாம் நூற்றாண்டில் ராசிபுரத்தின் சமூக வரலாற்றை புனைவாக எழுதுகிறேன் என்று கிளம்பி அங்கே ஓரினச்சேர்க்கை நடைபெற்றது என்று எழுதுகிறார் என்று வைத்துக் கொள்வோம். எனக்குத் தெரிந்து ஓரினச்சேர்க்கை (ஆண்-ஆணாக இருந்தாலும் சரி, பெண்-பெண்ணாக இருந்தாலும் சரி) பற்றி தமிழில் எந்தக் குறிப்பும் கிடையாது. சங்கத் தமிழில், இடைக்காலத் தமிழில், அம்மானைகளில், சிந்துகளில், நாட்டுப் பாடல்களில், தமிழ் நீதி நூல்களில், கல்வெட்டுகளில், தமிழ்நாட்டு கோவில் சிற்பங்களில் எங்கும் கிடையாது. தமிழ்நாட்டிலேயே இல்லாத ஓரினச்சேர்க்கை ராசிபுரத்தில் இருந்ததாக எழுதி ராசிபுரத்தை கேவலப்படுத்திவிட்டாய், ராசிபுரத்தில் பதினேழாம் நூற்றாண்டில் நடந்ததற்கு ஆதாரம் காட்டு என்றால் என்ன செய்ய?
    எத்தனையோ ஜாதி, ஊர்ப் பழக்க வழக்கங்கள் ஆவணப்படுத்தப்படுவதில்லை. எல்லா ஜாதியினருக்கும், எல்லா ஊருக்கும் ஒரு அ.கா. பெருமாள் கிடைத்துவிடுவதில்லை. அதுவும் பாலியல் உறவுகள் பற்றி சிலவற்றைத்தான் வெளிப்படையாக எழுதலாம் என்று ஒரு எழுதப்படாத விதி ஒன்று எப்போதுமே நம் சமுதாயத்தில் இருந்து வருகிறது. அதற்காக பதிவு செய்யப்படாத எந்த விஷயமும் நடக்கவில்லை என்று நினைத்துக் கொள்ள முடியுமா?
  7. தரவு தரவு என்றால் என்னதான் தரவு எதிர்பார்க்கிறீர்கள்? இது என்ன நடக்க முடியாத நிகழ்ச்சியா? வாய்மொழி வரலாறு, “சாமி கொடுத்த பிள்ளை” என்பதற்கு என்ன ரகசிய அர்த்தம் என்பதைப் பெரியவர்கள் சொன்னார்கள் என்கிறார். யார் அந்தப் பெரியவர்கள், சொல்லு சொல்லு என்றால் – கல்லூரிப் பேராசிரியர், ஹிந்துத்துவர்கள் எண்ணத்தில் (பொய் சொல்லியே) உலகமெல்லாம் பேரும் புகழும் பெற்றவர், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள் ஆதரவு பெற்றவர் – அவரே துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடுகிறார். சட்டத்தை நிலைநிறுத்த வேண்டிய அரசாங்கப் பிரதிநிதிகள் (கலெக்டரா தாசில்தாரா?) கூப்பிட்டு கட்டைப் பஞ்சாயத்து செய்கிறார்கள். நிலைமை இப்படி இருக்கும்போது தகவல் கொடுத்த பல்லுப் போன கிழங்கள் யார் யாரென்று பெ. முருகன் அடையாளம் காட்டிவிட்டால் அந்தக் கிழங்களின் கதி என்ன? சரி அடையாளம் காட்டுகிறார் என்றே வைத்துக் கொள்வோம், அந்தப் பெரிசுகள் பயத்தில், ஜாதியினர், ஊர்க்காரர்கள் கொடுக்கும் அழுத்தத்தில் நான் அப்படி சொல்லவே இல்லை என்று மறுத்துவிட்டால் பெ. முருகன் கதி என்ன? பெ. முருகன் முன்னெச்சரிக்கையாக ஆடியோ வீடியோ எடுத்து வைத்துக் கொண்டிருந்தால் பிழைத்தார்! வெறுமனே நோட்புக்கில் கிறுக்கி வைத்துக் கொண்டிருந்தால்? தன் ஞாபக சக்தியை மட்டுமே நம்பி இருந்தால்?
  8. புனைவுக்காக பெ. முருகன் அங்கும் இங்கும் மாற்றி இருக்கலாம். 1940களில் நடந்ததாக எழுதி இருக்கிறார், அது 1920களில் நடந்திருக்கலாம். திருச்செங்கோட்டில் நடக்காமல் பக்கத்து ஊரில் நடந்திருக்கலாம். இப்படி எல்லாம் நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்று வாதிடுபவர்கள் இன்றும் திருச்செங்கோட்டிலிருந்து 200 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கூவாகம் திருவிழாவில் என்ன நடக்கிறது என்று நினைத்துப் பார்த்தீர்களா? கூவாகம் பற்றியும் கல்வெட்டு கிடையாது, இலக்கியம் கிடையாது, ஒரு பத்து இருபது வருஷமாகத்தான் வெளியேவே தெரிகிறது. இந்த இன்டர்நெட் யுகத்தில், இன்றும் உயிரோடு இருக்கும் பழக்கத்துக்கே இவ்வளவுதான் ஆவணம் என்றால் ஒரு நூறு வருஷத்த்துக்கு முன்னால் நடந்த, இன்று மறைந்துபோன ஒரு பழக்கத்துக்கு என்ன ஆதாரம் எதிர்பார்க்க முடியும்?
  9. சரி பெ. முருகன் வாய்மொழி வரலாறு, சொன்ன பெரிசுகள் இவ்விவர்கள் என்று பட்டியலே தருகிறார் என்றே வைத்துக் கொள்வோம். அந்தத் தரவுகள் திருப்திகரமாக இருக்கிறதா இல்லையா என்பதை யார் தீர்மானிப்பது? இதே ஃபாசிச கும்பல்தானே? தரவு கொடுத்திருந்தால் இந்தக் கும்பல் அடங்கியிருக்கும் என்று அரவிந்தன் நீலகண்டன் போன்ற அறிவு ஜீவிகள் உண்மையிலேயே நம்புகிறார்களா இல்லை தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்களா?
  10. சரி இப்படி நடக்கவில்லை, இது முழுப்பொய், பெ. முருகன் திட்டமிட்டு பணம் வாங்கிக் கொண்டு திருச்செங்கோட்டைக் கேவலப்படுத்துகிறார் என்று ஒரு சிலர் சொல்கிறார்கள். என்ன ஆதாரம்? ஆதாரம் கேட்பவர்களுக்கு ஆதாரத்தை முன்வைக்கும் தார்மீகக் கடமை இல்லையா? ஃபோர்ட்? அறக்கட்டளை மூன்று நான்கு லட்சம் தந்தது என்றால் போதுமா? (கல்லூரிப் பேராசிரியர்களின் மாதச்சம்பளம் ஒரு லட்சத்துக்கு மேல் என்கிறார் நண்பர் ராஜன். அரை லட்சம் என்றே வைத்துக் கொண்டாலும் பெ.மு.வின் ஆறேழு மாதச் சம்பளம்தான் இது.) பூமணி கூடத்தான் அதே அறக்கட்டளையில் நிதிக்கொடை பெற்று அஞ்ஞாடி எழுதி இருக்கிறார், அதற்கு சாஹித்ய அகாடமி விருதும் கிடைத்திருக்கிறது. பூமணியைப் பற்றியும் குற்றச்சாட்டா? இப்படி இந்த நிறுவனத்திலிருந்து நிதிக்கொடை பெறுவதே ஹிந்துத்துவர்கள் கண்ணில் தேசத்துரோகம் என்றால் எப்படி ஒரு தேசத்துரோகத்தை தூண்டும் நிறுவனத்தை நாட்டில் செயல்பட விட்டிருக்கிறீர்கள்? பெ.மு. பற்றி போடும் கூச்சலை விட நூறு மடங்கு அதிகமாக அல்லவா அந்த நிறுவனத்த்தை எதிர்த்துப் போராட வேண்டும்?
    இந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடக்கும் அறக்கட்டளையில் எல்லா விதிகளுக்கும் உட்பட்டு நிதிக்கொடையை பெ.மு. பெற்று அது வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அது தவறு என்று உங்களுக்குக்குத் தோன்றினால் அறக்கட்டளை பற்றிய சட்ட திட்டங்களை மாற்றுங்கள். பெ.மு. செய்த தவறு என்ன?
    தரவாக சொல்லப்படுவது தொண்ணூறு வயதுப் பெரியவர் ஒருவர் (ஒரே ஒருவர்தான்) இப்படி எதையும் கேள்விப்படவில்லையாம். அந்தப் பெரியவரும் community leader-ஆம். எந்தக் community முன்னின்று எதிர்க்கிறதோ, அந்தக் community-யின் பெருசு ஒருவர் சொன்னால் போதும், இது பொய் என்று நிரூபணம் ஆகிவிடுகிறது!
  11. அப்படி நடந்தது உண்மைதானா என்று தெரிந்து கொள்ள உண்மையிலேயே ஆர்வம் உள்ளவர்கள் பெ. முருகனிடமே கேட்டிருக்கலாம். அவரும் இது என் கற்பனை என்றோ இல்லை இது கேள்விப்பட்டது, இந்த இந்தப் பெருசுகள் எல்லாம் சொன்னார்கள் என்றோ, இல்லை இது கேள்விப்பட்டது, ஆனால் சொன்னவர்கள் பேரை வெளியிட முடியாது என்றோ இல்லை இந்தக் கல்வெட்டில் படித்தேன் என்றோ சொல்லி இருப்பார் என்று நம்புகிறேன். மிரட்டியதால், இந்த விளையாட்டுக்கு நான் வரலை என்று விலகிக் கொண்டிருக்கிறார். நஷ்டம் தமிழுக்குத்தான். சார்லி ஹெப்டோ மாதிரி எல்லோரும் ரிஸ்க் எடுக்க முடியாது.
  12. என் முப்பாட்டன் தன் முப்பாட்டன் சொன்னது என்று என்னிடம் சொல்வதை வரலாற்றுத் தரவு என்று ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் சமூக வரலாற்றுப் புனைவு என்பதற்கு அது போதும். என் உறவினர் ஒருவர் சொன்னது – 1967 தேர்தலில் ராஜாஜி மயிலாப்பூரில் ஒரு தேர்தல் கூட்டத்தில் “என் பூணூலை பிடிச்சிண்டு சொல்றேன், நீங்கள்ளாம் தி.மு.க.வுக்கு ஓட்டுப் போடுங்கோ” என்று அங்கே நிரம்பி இருந்த பிராமணர்களைக் கேட்டுக் கொண்டாராம். நாட்டுக்கே தலைவரான ராஜாஜி ஒரு ஜாதியின் தலைவராகத் தன்னை குறுக்கிக் கொண்ட நிகழ்ச்சி என்றே நான் அதைக் காண்கிறேன். அதை நான் என் பேத்திக்குச் சொல்லலாம். இன்னும் நூறு வருஷம் கழித்து ராஜாஜியைப் பற்றி ஒரு புனைவில் அந்த நிகழ்ச்சி சித்தரிக்கப்படலாம். ஆதாரம் கேட்டால் என் பேத்தி என்ன செய்வாள்?
  13. ஒரு புறம் தஸ்லிமா நஸ் ரீனுக்கும் சல்மான் ருஷ்டிக்கும், சார்லி ஹெப்டோவுக்கும் ஆதரவு. இன்னொரு பக்கம் பெ. முருகனுக்கு எதிர்ப்பு. இரண்டிற்கும் உள்ள முரண்பாட்டை எப்போது ஹிந்துத்துவர்கள் உணரப் போகிறார்கள்?

பின்குறிப்பு: இதை தமிழ் ஹிந்துவில் பிரசுரிப்பீர்களா என்று ஜடாயுவிடம் கேட்டேன். (எனக்கு கொஞ்சம் இங்கிதம் குறைவு). எதிர்பார்த்தபடியே அவர் மறுத்துவிட்டார். 🙂

தொடர்புடைய சுட்டிகள்:
இலக்கிய ஃபாசிசம் வெல்கிறது
மீண்டும் பெருமாள் முருகன்

ஹெச்.ஜி. ரசூல் – ஏழு வருஷத்துக்கு முந்தைய பெருமாள் முருகன்

h_g_rasoolஎழுத்தாளர் ஹெச்.ஜி. ரசூலின் இந்தக் குறிப்பை ஃபேஸ்புக்கில் பார்த்தேன்.

ஏழு வருஷத்துக்கு முன் சிலிகன் ஷெல்ஃப் இல்லை, ரசூலின் எந்தப் படைப்பையும் நான் இன்னும் படிக்காததால் இந்த அடக்குமுறை செய்தி “பெருமாள் முருகன் மாதிரி ஒரு சிறந்த எழுத்தாளரை இப்படி ஒழிக்கறாங்களே” மாதிரி உணர்வுகளை என்னுள் எழுப்பவில்லை, பெ. முருகனைப் பற்றி நீட்டி முழக்கி எழுதும்போது ரசூலின் பேரையும் குறிப்பிட்டிருக்கிறேன் என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் அந்த உண்மைகள் எல்லாம் ஒரு லெவலில் சப்பைக்கட்டுகளே. காலம் தாழ்ந்தாவது இந்த ஜமாத்தை எதிர்த்து என் வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்கிறேன்.

ரசூலின் குரல் கீழே.

பெருமாள் முருகனுக்காக பொங்கியவர்களின் மேலான கவனத்துக்கு…..
++++++++++++++++++++++++++++++++++++++++++++

2007ல் வெளிவந்த இஸ்லாத்தில் குடி பண்பாடு பற்றிய ஒரு ஆய்வுக் கட்டுரைக்காக ஜமாத் என்னை ஊர்விலக்கம் செய்தது. சமூக புறக்கணிப்பு, காஃபிர் பத்வா மதவிலக்கம் என இரட்டை வன்முறை ஆயுதத்தை என் மீது கர்ணகடூரமாக வீசியது.

என் குடும்பத்தினர் பட்ட வலியை என்னால் தாங்க முடியவில்லை. எங்கேயாவது ஒரு படைப்பாளியின் மீது மூர்க்கத்தனமான தாக்குதல் இவ்வாறு நடந்திருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

தமிழ்நாடு வக்ப் வாரிய தலைவராக படைப்பாளியான கவிக்கோ அப்துல் ரகுமான் இருந்தபோது கூட சட்டத்துக்கு உட்பட்டு இந்த பிரச்சினையை அவர் ஒரு முடிவுக்கு கொண்டு வராததை இன்னமும் மிகுந்த வலி நிறைந்த ஒன்றாகவே கருதுகிறேன்.

நான்காண்டு கால சட்டப் போராட்டத்தின் விளைவாக ஜமாத்தின் ஊர்விலக்கத்துக்கு எதிராக நான் தொடர்ந்த வழக்கில் உரிமையியல் நீதிமன்றத்திலும், சார்நிலை நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் எனக்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஆனால் இன்னமும் ஜமாத்தினர் எனக்கும் எனது குடும்பத்திற்குமான அடிப்படை உரிமைகளை தராமல் மறுத்து வருகின்றனர்.

எழுதிய ஒரு படைப்புக்காக ஏழு வருடங்களாக படைப்பாளியும் அவனது குடும்பமும் நசுக்கப்பட்டு துயரப்பட வேண்டுமா என்ன?

இந்த விசயத்தில் ஊடகங்கள் சாதித்த மவுனத்துக்கான காரணம் என்னவென்று இன்னமும் விளங்கவில்லை.

— எழுத்தாளர் ஹெச்.ஜி. ரசூல்

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள

மீண்டும் பெருமாள் முருகன்

perumal_muruganமாதொருபாகன் புத்தகத்தை நான் படிக்கவில்லை. அதில் எவ்வளவு தூரம் வரலாறு, எவ்வளவு தூரம் உண்மை என்று பெருமாள் முருகன் விளக்கி இருக்கிறாரா என்றெல்லாம் நான் அறியேன். அவர் விளக்கம் கொடுத்திருந்தாலும் கொடுக்கவில்லை என்றாலும் என் புரிதலில் மாற்றம் இருக்காது என்பதால் இதை எழுதுகிறேன்.

பெ. முருகன் திருச்செங்கோடு பற்றி எழுதியதற்கு தரவுகள் வேண்டும் என்று பலர் – குறிப்பாக ஹிந்துத்துவர்கள் – கேட்டிருப்பது அங்கும் இங்கும் கண்ணில் பட்டது. எனக்கு சத்தியமாகப் புரியவில்லை.

என்ன மாதிரி தரவு எதிர்பார்க்கிறார்கள் என்றுதான் புரியவில்லை. கல்வெட்டில் திருவிழா அன்று எந்தப் பெண்ணும் யாருடனும் படுக்கலாம் என்று இருக்க வேண்டுமா? இல்லை என்றால் ஏதாவது புத்தகத்தில் பதித்திருக்க வேண்டுமா? வாய்மொழியாக ஆயிரம் விஷயம் கேட்கிறோம், அது கதைக்களத்தில் இடம் பெறுவது அத்தனை ஆச்சரியமா? ஊரில் பெரிசுகள் மலக்காட்டுப் பக்கம் ஒதுங்கும்போது ஆயிரம் பேசிக் கொள்வார்கள், அதைக் கேட்டு பெ. முருகன் எழுதி இருக்கலாம். அட மொத்தமும் அவர் கற்பனையாகவே இருக்கலாம். அதனால் என்ன?

சரி அவர் பணம் வாங்கிக் கொண்டு வேண்டுமென்றே திருச்செங்கோட்டையும் கவுண்டர்களையும் கோவில் திருவிழாவையும் “கேவலப்படுத்தவே” இப்படி எல்லாம் எழுதினார் என்றே வைத்துக் கொள்வோம். பிடித்திருப்பவனோடு உறவு கொள்வது பெண்ணுக்குக் கேவலமா? இதே திருச்செங்கோட்டில் தாசி வீட்டில் கவுண்டன் விழுந்து கிடந்தான் என்று எழுதினால் அதற்கும் ஆதாரம் கேட்பீர்களா? அப்போது கேவலம் இல்லையா? நம் வீட்டுப் பெண்கள், நம்ம ஜாதிப் பெண்கள், நம்ம ஊர்ப் பெண்கள் புனைவில் கூட “கற்பு” நிலை தவறிவிடக் கூடாது அவர்கள் பெய்யென்றால் மழை பெய்ய வேண்டும், இதெல்லாம் மாறவே மாறாதா?

முன்னூறு நானூறு பக்கம் புத்தகத்தில் மூன்று நான்கு பக்கத்துக்கு மட்டும் தரவு கொடுத்தாக வேண்டும், மிச்ச இருநூத்தி சொச்சம் பக்கத்துக்குத் தரவு வேண்டாமா? சரி தரவு தந்தார் என்றே வைத்துக் கொள்வோம், அது திருப்திகரமாக இருக்கிறதா இல்லையா என்பதை யார் தீர்மானிப்பது? இதே ஃபாசிச கும்பல்தானே? தரவு கொடுத்திருந்தால் இந்தக் கும்பல் அடங்கியிருக்கும் என்று அரவிந்தன் நீலகண்டன் போன்ற அறிவு ஜீவிகள் உண்மையிலேயே நம்புகிறார்களா இல்லை தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்களா?

இலக்கியத்துக்கு, புனைவுக்கு என்ன தரவு? எப்படித் தர? இப்படி நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்கிறார்களா? கண்ணெதிரில் கூவாகத்தில் வருஷாவருஷம் பாலியல் உறவுகள் கட்டுப்பாடு இல்லாமல் நடக்கின்றன என்று கேள்வி. அப்படி நடப்பதற்கு என்ன ஆதாரம் தர முடியும்? என்ன கல்வெட்டில் பதித்திருக்கிறார்களா இல்லை சங்க காலப் பாடல் இருக்கிறதா? எத்தனை வருஷமாக கூவாகத்தில் இப்படி நடக்கிறது என்று கூட சொல்வது கஷ்டம்.

என் சிறு வயதில் நான் கேள்விப்பட்ட ஒரு சமாசாரம் – ஆசாரமான மாமிகள் எல்லாம் வீட்டில் ஆவக்காய் ஊறுகாய் போடும்போது அம்மணமாக நின்று கொண்டுதான் போடுவார்களாம், அப்போதுதான் அதில் மணம் குணம் காரம் எல்லாம் சரியாக வருமாம். அதாவது போடும்போதே மானம் போய்விட்டால் பிறகு ஊறுகாய் சரியில்லை என்று மானம் போகாதாம். (என் சின்ன வயதில் கிளுகிளு விஷயம் என்று யாரோ சொன்னது, அதைக் கேட்ட பிறகு கொஞ்ச நாள் ஆவக்காய் ஊறுகாயா? உவ்வே என்று அந்தப் பக்கமே போகாமல் இருந்ததுதான் மிச்சம்.)  சிவசங்கரி பாலங்கள் என்ற நாவலில் இதைப் பயன்படுத்தி இருக்கிறார். அவரிடமும் என்னிடமும் ஆதாரம் கேட்டால் எங்கே போவது? யார் சொன்னது என்று கூட நினைவில்லை. வாய்மொழி வரலாற்றுக்கெல்லாமா ஆதாரம் கேட்பீர்கள்?

வம்ச விருக்‌ஷா பிராமணர்களைத் “தவறாகப்” பிறந்தவர்கள் என்று அடையாளப்படுத்துகிறது, தலைமுறைகள் செட்டியார்களை ஆண்மை இல்லாதவர்கள் என்று அடையாளப்படுத்துகிறது என்று கிளம்புவீர்களா? அடப் போங்கய்யா!

அப்படி நடந்தது உண்மைதானா என்று தெரிந்து கொள்ள உண்மையிலேயே ஆர்வம் உள்ளவர்கள் அவரிடமே கேட்டிருக்கலாம். அவரும் இது என் கற்பனை என்றோ இல்லை இது கேள்விப்பட்டது, இந்த இந்தப் பெருசுகள் எல்லாம் சொன்னார்கள் என்றோ, இல்லை இது கேள்விப்பட்டது, ஆனால் சொன்னவர்கள் பேரை வெளியிட முடியாது என்றோ இல்லை இந்தக் கல்வெட்டில் படித்தேன் என்றோ சொல்லி இருப்பார் என்று நம்புகிறேன். மிரட்டினால், இந்த விளையாட்டுக்கு நான் வரலை என்று விலகிக் கொண்டிருக்கிறார். நஷ்டம் தமிழுக்குத்தான்.

அறிவுஜீவி ஹிந்துத்துவர்களிடமிருந்து (அ.நீ., அருணகிரி…) போன்றவர்கள் எல்லா விஷயங்களையும் தங்கள் அரசியல் அஜெண்டா மூலம் பார்க்காமல் இருந்தால் என்று பெருமூச்சுதான் விட முடிகிறது. நல்ல வேளை ஜடாயு ஆயிரம் ஆனால்களை போட்டுக் கொண்டாலும் புத்தகத்தைத் தடை செய்யக் கோருவது தவறு என்று சொல்லி இருக்கிறார். நண்பர் ராஜன் ஊரில் இல்லை, அதனால் அவரின் கருத்துக்கள் தெரியவில்லை. ஒரு பக்கம் தஸ்லிமா நஸ் ரீனைப் பற்றி புலம்பிக் கொண்டே இன்னொரு பக்கம் பெ.முருகனுக்கு எதிராகப் பேச மாட்டார் என்று நம்பிக்கை இருக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: பெருமாள் முருகன் பக்கம்

தொடர்புடைய சுட்டி: இலக்கிய ஃபாசிசம் வெல்கிறது

இலக்கிய ஃபாசிசம் வெல்கிறது

perumal_muruganபெருமாள் முருகன் வெறுத்துப் போய் நான் எழுதறதையே விட்டுடறேன் ஆளை விடுங்கடா சாமி என்று அறிவித்திருக்கிறார். சார்லி ஹெப்டோ மாதிரி எல்லோரும் ரிஸ்க் எடுக்க முடியாது இல்லையா?

யார் மனதும் புண்படவே கூடாது என்றால் “வாலைக் குழைத்து வரும் நாய்தான் அதுதான் மனிதர்க்குத் தோழனடி பாப்பா” என்று பாப்பாவுக்குக் கூட சொல்லித் தர முடியாது. அது என்ன தோழன்? தோழிகள் என்னானார்கள் என்று இரண்டு பெண்ணியவாதிகள் கிளம்புவார்கள். புத்தகம் பிடிக்கவில்லையா வாங்காதீர்கள். இல்லை காசு கொடுத்து வாங்கி கொளுத்துங்கள். அதை விட்டுவிட்டு அவர் மீது இப்படி அழுத்தம் கொடுப்பது அற்பத்தனம்.

என் குரல் எங்கும் கேட்கப்போவதில்லை என்று நான் அறிவேன். இதனால் பெ. முருகனுக்கு பைசா பிரயோஜனமில்லை என்றும் நான் உணர்கிறேன். ஆனால் இந்த சமயத்தில் நான் குரல் எழுப்பவில்லை என்றால் மாய்ந்து மாய்ந்து புத்தகங்களைப் பற்றி இத்தனை பதிவு எழுதுவதில் அர்த்தமே இல்லை.

பெ. முருகன் எழுதுவதை நிறுத்தினால் அவருக்கு ஏற்படும் நஷ்டத்தை விட தமிழுக்கு ஏற்படும் நஷ்டம் அதிகம். நிழல் முற்றம் தமிழ் நாவல்களில் ஒரு கிளாசிக். கூளமாதாரி முக்கியமான இலக்கிய முயற்சி. தோழி அருணா கங்கணம் புத்தகத்தைப் பற்றி இங்கே எழுதி இருக்கிறார். அடுத்த சாஹித்ய அகாடமி விருது அவருக்குக் கிடைக்கும் என்று எண்ணி இருந்தேன்.

கல்லூரி காலத்தில் எனக்கு நிறைய கவுண்டர் ஜாதி நண்பர்கள் ஏற்பட்டனர். ஒருவன் திருச்செங்கோட்டில்தான் வாழ்கிறான். (அவனைப் பிடிப்பது கொஞ்சம் கஷ்டம்.) என்னால் முடிந்தது அவர்களிடம் பேசப் போகிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பெருமாள் முருகன் பக்கம்

ஞானக்கூத்தன் கவிதை

gnaanakkootthanஎங்கள் குடும்பத்தில் ஒரு மரணம். காயம் ரொம்ப ஆழமாக இருப்பதால் பெரிதாக விவரிப்பதற்கில்லை. அப்போது ஞானக்கூத்தனின் இந்த வரிகள் கண்ணில் பட்டன. கவிஞரின் “நீண்ட நாட்களாய்ப் பழகிய பேனா” தொலைந்துவிட்டது. பேனாவுக்கு என்னாயிற்றோ ஏதாயிற்றோ என்று துடிக்கிறார். கடைசியில் கவிதையை இப்படி முடிக்கிறார்.

புதிய பேனா எழுத எழுத
இழந்த பேனா இருப்பதை உணர்ந்தேன்
ஆமாம் எல்லாம் ஒன்றுதான்
இழந்த பேனாவும் இருக்கும் பேனாவும்

எல்லாம் ஒன்றல்ல. ஆனால் வேறு பேனாக்களில் இழந்த பேனாவை உணர முடியும் என்று திடீரென்று புரிந்தது. கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது. வாழ்வின் கஷ்டமான தருணங்களில் வார்த்தைகள் உதவாது என்பதுதான் சட்டம். அபூர்வமான விதிவிலக்கு.

முழுக் கவிதையும் கீழே.

இழந்த பேனாவும் இருக்கும் பேனாவும்

சந்தேகத்துடனே தொட்டுப் பார்த்தேன்
பையிலிருந்த பேனாவைக் காணோம்
வழியில் எங்கோ விழுந்து விட்டது
நீண்ட நாட்களாய்ப் பழகிய பேனா
எங்கே விழுந்ததோ யாரெடுத்தாரோ
ஒருகணம் நினைத்தேன் வழியில் அதன் மேல்
வண்டி ஒன்று ஏறிவிட்டதாய்.
எண்ணிப் பார்த்ததும் உடம்பு நடுங்கிற்று
வண்டி எதுவும் ஏறியிராது.

பள்ளிக்கூடத்துப் பிள்ளையின் கையில்
கிடைத்திருக்கலாமென்று எண்ணிக் கொண்டேன்.
முள்ளைக் கழற்றிக் கழுத்தைத் திருகிப்
பல்லால் கடித்துத் தரையில் எழுதி
அந்தப் பையன் பார்ப்பதாய் எண்ணினேன்
அதற்கும் நடுங்கி எண்ணத்தை மாற்றினேன்

எவனோ ஒருவன் கிழவன் கையில்
அந்தப் பேனா கிடைத்ததாய் எண்ணினேன்
குடும்பத்தை விட்டுத் தொலைவில் வாழும்
அந்தக் கிழவன் மகளுக்குக் கடிதம்
எழுத முயன்று அவனுக்கெழுத
வராமல் போகவே என்னைத் திட்டியதாய்
எண்ணிக் கொண்டேன் எனக்குள் சிரித்தேன்.

மாலை வரைக்கும் நிம்மதியற்றுப்
புதிய பேனா ஒன்று வாங்கினேன்
சோதனைக்காகக் கடையில் கிறுக்கினேன்.
வீட்டுக்கு வந்ததும் முதலாம் வேலையாய்
எழுதிப் பார்க்கக் காகிதம் வைத்தேன்
என்ன எழுத? ஏதோ எழுதினேன்

புதிய பேனா எழுத எழுத
இழந்த பேனா இருப்பதை உணர்ந்தேன்

ஆமாம் எல்லாம் ஒன்றுதான்
இழந்த பேனாவும் இருக்கும் பேனாவும்

தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள்