கட்டபொம்மன் – உண்மையும் தொன்மமும்

sivaji_as_kattabommanஜெயமோகனின் ஒரு பழைய பதிவில் இருந்து:

(ஹெச்.ஆர்.பேட்டின் திருநெல்வேலி கெஜட்டியர் புத்தகத்தில்) நாயக்கராட்சியின் இறுதியில் சந்தா சாகிபின் படைகள் நெல்லையையும் அதன் வழியாக குமரியையும் சூறையாடிய சித்திரம் ஏராளமான தகவல்கள் வழியாகச் சொல்லப்படுகிறது. அதன் பின்னர் கட்டபொம்மு நாயக்கனும் பூலித்தேவனும் நடத்திய கலகங்களின் விரிவான சித்திரம் அளிக்கப்படுகிறது. கட்டப்பொம்மு நாயக்கரின் கலகம் நாம் நன்கறிந்த சிவாஜிகணேசனின் திரைப்படம் காட்டும் சித்திரத்துக்கு பலவகையிலும் வேறுபட்டு இந்நூலில் காட்சியளிக்கிறது. கட்டபொம்மு நாயக்கருக்கு தேசியம் சார்ந்த புரிதலோ ஒரு நாட்டை அமைக்கும் நோக்கமோ இருந்ததாக தெரியவில்லை. பிற பாளையக்காரர்களைப்போல அவரும் மற்ற பாளையப்பட்டுகளில் மக்களை கொள்ளையடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். பிரிட்டிஷார் அவரை கட்டுப்படுத்தி கடுமையான கிஸ்தி போடுகிறார்கள். பொதுவாக பாளையக்காரர்களுக்கு போடப்பட்ட கிஸ்திக்கு எதிராக கடுமையான அதிருப்தி இருந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து லெஃப். ஜாக்ஸனிடம் வாதாடியபின் இறங்கிச் செல்லும் வழியில் கட்டபொம்மு நாயக்கர் அவரை தடுக்க முயன்ற ஆங்கில ஊழியர் கிளேர்க்கை கொன்று தப்பிச் செல்கிறார்.

கட்டபொம்மு நாயக்கருக்கு அவரைச் சுற்றியிருந்த மறவர், வன்னியர் பாளையக்காரர்கள் அனைவருமே எதிராக இருக்கிறார்கள். ஊத்துமலை ஜமீந்தாரும், சிவகிரி ஜமீந்தாரும் தானாபதி சுப்ரமணியப் பிள்ளை தலைமையில் தங்கள் நாடுகளில் கொள்ளையடிக்கும் பாஞ்சாலங்குறிச்சிக்காரர்களுக்கு எதிராக போராட வெள்ளையரை தங்கள் உதவிக்கு அழைக்கிறார்கள். இவர்களின் உதவி கொண்டு கட்டபொம்மு நாயக்கர் ஒடுக்கப்படுகிறார். இதன் விரிவான தகவல்கள் இந்நூலில் அளிக்கப்படுகின்றன.

ஹெச்.ஆர்.பேட்டின் சித்தரிப்பில் நமக்குக் கிடைப்பது நாயக்கர் கால மைய ஆட்சி ஒழிந்து சுதந்திரம் பெற்ற பாளையப்பட்டுகள் எவ்விதமான நியதியுமில்லாமல் பரஸ்பரம் போரிட்டு மக்களைக் கொள்ளையடித்து அட்டூழியம் செய்த ஒரு சித்திரம். பல்வேறு நாட்டார் இலக்கியங்களும் இதை உறுதி செய்கின்றன. இந்த அராஜகநிலையை பயன்படுத்திக்கொண்டு வெள்ளையர் காலூன்றுகின்றனர். அவர்கள் உருவாக்கிய உறுதியான நிர்வாகம் மக்களிடையே பேராதரவு பெற்று அவ்வாதரவு வ.உ. சிதம்பரனார் காலத்து சுதந்திரப்போராட்டம் வரை அப்படியே நீடித்தது. நாம் அறியும் பாஞ்சாலங்குறிச்சி கதை சில சில நாட்டுப்புற வீரகதைப் பாடல்களில் இருந்து மாயாண்டி பாரதி பின்னர் ம.பொ. சிவஞான கிராமணி போன்றோரால் உருவாக்கபபட்டு சுதந்திரப் போராட்டத்தின் ஒரு பகுதியாக முன்வைக்கப்பட்ட சித்திரமாகும்.

கட்டபொம்மன் திரைப்படத்தை பார்க்காதவர் இருக்க முடியாது. இப்போது அதிலிருந்து ஒரு க்விஸ்.

1. வயலுக்கு வந்தாயா நாற்று நட்டாயா என்று வீர வசனம் பேசும் கட்டபொம்மன் ஜாக்சன் துரையிடமிருந்து தப்பி சென்ற பிறகு ஆங்கிலேயர் ஏன் அவன் மீது உடனே படை எடுக்கவில்லை?
2. அப்போது படை எடுக்காமல் சமாதானமாகப் போன ஆங்கிலேயர் ஏன் ஒரு வருஷம் கழித்து மேஜர் பானர்மன் தலைமையில் படை எடுத்தனர்?

கட்டபொம்மன் தப்பி சென்றபிறகு தூத்துக்குடி டேவிட்சன் துரை என்பவர் உதவியால் ஆங்கிலேயருடன் சமாதானமாகப் போகிறான். பழைய வரி தள்ளுபடி செய்யப்படுகிறது. புதிதாக வரி கட்ட கட்டபொம்மன் ஒப்புக்கொள்கிறான். அதனால்தான் ஆங்கிலேயர் அவன் மீது படை எடுக்கவில்லை. (படை எடுக்கும் நிலையில் ஆங்கிலேயர் அப்போது இல்லாமலும் இருந்திருக்கலாம், அதனால்தான் சமாதானம் என்ற பேச்சே வந்திருக்கலாம். அதே போல வரி கட்டும் காலம் வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று கட்டபொம்மனும் நினைத்திருக்கலாம்.)
ஒரு வருஷம் கழித்து கட்டபொம்மனின் மந்திரி தானாபதிப் பிள்ளை யாரோ ஒருவரின் நெல் களஞ்சியத்தை தாக்கி தானியங்களை கவர்கிறார். ஆங்கிலேயர் இது எங்கள் பிரதேசத்தில் நடந்த கொள்ளை இது, அதனால் பிள்ளையை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். கட்டபொம்மன் மறுக்கவே போர் மூள்கிறது.

இந்த இரண்டும் திரைப்படத்தில் இருக்கின்றன, ம.பொ.சி. போன்றவர்களும் அப்படி ஒன்றும் கட்டபொம்மன் கொள்ளை அடித்ததையோ, இல்லை சமரசம் செய்து கொண்டதையோ மறைக்கவில்லை. ஆனால் அவர் முன்னிறுத்துவது கட்டபொம்மன் விடுதலைக்காகப் போராடினான் என்ற பிம்பத்தைத்தான். ஆனால் கட்டபொம்மனுக்கு பக்கத்து எட்டயபுரம் பாளையப்பட்டே அன்னிய நாடாகத்தான் தோற்றமளித்திருக்க வேண்டும், கட்டபொம்மன் வேண்டிய விடுதலை பாஞ்சாலங்குறிச்சியின் எல்லைகளைத் தாண்டி இரண்டு மைல் போயிருந்தால் அதிகம்.

ம.பொ.சி.க்கு அந்த பிம்பம் ஏற்பட மூலகாரணம் கட்டபொம்மனைப் பற்றிய நாட்டுப்பாடல்களாக இருந்திருக்க வேண்டும். அதிகாரத்தை எதிர்த்த நாயகனின் வீர பிம்பம் அழியாத கவர்ச்சி உடையது. காத்தவராயன், மதுரை வீரன், தேசிங்கு ராஜா, கட்டபொம்மன் ஏன் ஜம்புலிங்க நாடார் வரைக்கும் கூட அது நாட்டுப்பாடல்களாக, வாய்மொழி வரலாறாக வெளிப்பட்டிருக்கிறது.

கட்டபொம்மன் வரி தர மறுத்தது, ஜாக்சனை சந்தித்தபோது ஏற்பட்ட சிறுகலகம், டேவிட்சன் உதவியால் ஏற்படும் சமாதானம், தானாபதிப் பிள்ளை கொள்ளை அடித்தது, அதனால் மூண்ட போர் என்று ஒரே நிகழ்ச்சிகளைத்தான் ஹெச்.ஆர். பேட், ம.பொ.சியின் புத்தகம், வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் ஆகிய மூன்றும் காட்டுகின்றன. – ஆனால் ஜெயமோகனுக்குக் கிடைக்கும் சித்திரம் “நாயக்கர் கால மைய ஆட்சி ஒழிந்து சுதந்திரம் பெற்ற பாளையப்பட்டுகள் எவ்விதமான நியதியுமில்லாமல் பரஸ்பரம் போரிட்டு மக்களைக் கொள்ளையடித்து அட்டூழியம் செய்வது”. ம.பொ.சி.க்கு கிடைத்த சித்திரமோ நாயக்கர் கால மைய ஆட்சி ஒழிந்து சுதந்திரம் பெற்ற பாளையப்பட்டுகளில் சில தங்கள் சுதந்திரத்தை தக்க வைத்துக் கொள்ள ஆங்கிலேயரோடு போரிடுவது. இரண்டு பக்கமும் உண்மை உண்டு என்று நினைக்கிறேன். ஆனால் இன்று கட்டபொம்மன் என்ற தொன்மத்தின் கவர்ச்சி, ம.பொ.சி. மற்றும் சிவாஜி கணேசன் ஏற்படுத்தி இருக்கும் பிம்பத்தின் கவர்ச்சி சுலபமாக கட்டுடைக்க முடியாதது!

தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்

தொடர்புடைய சுட்டிகள்: வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்பட விமர்சனம் – ஆர்வியின் விமர்சனம், விகடனில் திரைப்படம் வந்தபோது எழுதப்பட்ட விமர்சனம்

ஜெயமோகனின் திராவிட இயக்கம் பற்றிய பதிவுகள்

jeyamohanஜெயமோகன் “திராவிட இயக்கத்தை ஏன் நிராகரிக்கிறேன்” என்ற தலைப்பில் இரண்டு மிக தெளிவான பதிவுகளை எழுதி இருக்கிறார். அவர் எப்போதோ எழுதிவிட்டார், இருந்தாலும் நீளமான பதிவை படிக்க சோம்பேறித்தனப்பட்டு நான் அப்போது மேலோட்டமாக மட்டுமே பார்த்தேன். அவருடைய கருத்துகளை ஏற்கிறீர்களோ இல்லையோ, கட்டாயமாக படிக்க வேண்டும்.

ஜெயமோகன் சொல்வதை என் போன்ற சோம்பேறிகளுக்காக நான் இங்கே சுருக்கித் தருகிறேன்.

  1. திராவிட இயக்கம் அழிவு சக்தி இல்லை. அது ஒரு historical inevitability.
  2. திராவிட இயக்கம் எண்ணிக்கையில் குறைந்த உயர்ஜாதியினர் கையில் இருந்த அதிகாரத்தை எண்ணிக்கையில் அதிகமான உயர்/இடை ஜாதியினரிடம் மாற்றியது, அதிகாரத்தை பரவலாக்கியது. இது இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் நடந்தது/நடக்கிறது.
  3. இந்த இயக்கம் “முற்போக்கு” கருத்துகளை மக்களிடையே பரப்பியது. ஓரளவாவது அது பாமர மக்களின் இயக்கமாக இருந்தது.

அப்படி என்றால் இதை ஏன் நிராகரிக்க வேண்டும்?

  1. அதன் நோக்கம் அரசியல் அதிகாரமே. நல்ல இயக்கத்துக்கு அரசியல் அதிகாரம் is not an end in itself, but a means to an end.
  2. அது கருத்துகளை சுலபமாக கைவிட்டுவிட்டு கோஷத்தையே முன் வைக்கிறது. மூர்க்கமான நிலைப்பாடுகளை உருவாக்குகிறது. கவனத்தை கவரும் செயல்களே அதன் விருப்பம். கோஷம்தான் நிறைய பேரை அடையும். மூர்க்கமான நிலைப்பாடுதான் ஓட்டு வங்கிகளை உருவாக்கும்.
  3. அதற்கு நல்ல கலை, இலக்கியம் தேவை இல்லை, பரபரப்பு, entertainment-தான் முக்கியம். அதுதான் நிறைய பேரை அடையும், ஓட்டுகளை பெற்றுத் தரும்.
  4. அது காட்டும் எந்த லட்சியமும் உண்மையானது இல்லை. உடனடி பயன் முடிந்ததும் லட்சியங்களை எல்லாம் கைவிட்டு விடவேண்டியதுதான்.
  5. “சுலபமான” ஊடகங்களை மட்டுமே அது கையாளும் – சினிமா, மேடைப் பேச்சு, இப்போது டிவி. எழுத்து, படிப்பு, நல்ல தமிழ் ஆராய்ச்சி எல்லாம் அம்போதான். கலைக்களஞ்சியத்துக்கு ஈடான ஒரு முயற்சி கழக ஆட்சியில் நடைபெறவில்லை.
  6. திராவிட இயக்கம் தமிழுக்கு உருப்படியாக எதுவும் செய்யவில்லை. தமிழ் செம்மொழி என்கிறார்கள், அதனால் நிதி கிடைக்கிறது, ஆனால் நிதியை வைத்து என்ன நடக்கிறது? விழா வைத்து புகழ் மாலை போட்டுக் கொள்கிறார்கள், தமிழுக்கு ஒரு லாபமும் இல்லை. நல்ல ஆராய்ச்சி, தமிழ் படிக்க விரும்புவர்களுக்கு செம்பதிப்புகள், ஏதாவது வந்திருக்கிறதா?

கொசுறாக இதையும் திராவிட இயக்கத்தின் தொடக்க கால வரலாறையும் தருகிறார்.

  1. ஆங்கிலேயர் ஆட்சியின்போது வட்டார மொழிகளைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட ஆரம்பித்தது. தமிழில் இது மூன்று தளங்களில் ஏற்பட்டது – ஏட்டுச் சுவடிகளில் இருந்த தமிழ் நூல்களைப் பதிப்பித்தல், தமிழிசை, சமஸ்கிருத கலப்பற்ற தனித்தமிழ் இயக்கம். உ.வே.சா., சி.வை. தாமோதரம் பிள்ளை போன்றவர்கள் தமிழ் நூல்களை பதிப்பித்தனர். ஆபிரகாம் பண்டிதர், அண்ணாமலை அரசர், தண்டபாணி தேசிகர் போன்ற பலர் தமிழிசைக்கு பெரும் பங்காற்றினர். மறைமலை அடிகள், திரு.வி.க. போன்ற பலர் தனித்தமிழ் இயக்கத்தில் தீவிரமாக இருந்தனர்.
  2. இந்த “தமிழியக்க” முன்னோடிகள் பெரும்பாலும் சைவர்கள்; காங்கிரஸ் அனுதாபிகள்; ஜஸ்டிஸ் கட்சியை ஏற்கவில்லை. ஜஸ்டிஸ் கட்சியில் அந்நாளில் தெலுங்கரே பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்தினர்.
  3. ஜஸ்டிஸ் கட்சி பெரியாரின் தலைமையில் திராவிட கழகமாக பரிணமித்தபோதும் அது தமிழியக்கமாக மாறிவிடவில்லை. பெரியார் கலை, இலக்கியத்தில் அவ்வளவு ஆர்வம் இல்லாதவர். அவரது “தமிழ் காட்டுமிராண்டி பாஷை” கமென்ட் தெரிந்ததே.
  4. தமிழியக்கத்தில் இந்த காலத்தில் பிராமணர் அற்ற உயர்சாதியினர் ஆதிக்கம் செய்தனர். அவர்களில் பலருக்கு பிராமண எதிர்ப்புப் போக்கு இருந்தது. அதனால் திராவிட இயக்கத்திற்கும் இவர்களில் சிலருக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு உருவாகியது. ஆனால் பல முன்னோடிகளுக்கும் பெரியாருக்கும் ஒத்துவரவில்லை.
  5. தமிழியக்கத்துக்கும் திராவிட இயக்கியத்துக்கும் இருந்த முரண்பாடுகளை நீக்கிய பெருமை அண்ணாவுடையது. “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்று பல சமரசங்களை உருவாக்கினார். மெதுமெதுவாக திராவிட இயக்கம் தமிழியக்கத்தின் சாதனைகளை, சாதனையாளர்களை திராவிட இயக்க சாதனைகள், முன்னோடிகள் என்று உரிமை கொண்டாட ஆரம்பித்தது.

ஏறக்குறைய நானும் இப்படித்தான் நினைக்கிறேன். இதை படிப்பவர்கள்?

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயமோகன் பக்கம்

தொடர்புடைய பக்கங்கள்:
திராவிட இயக்கத்தை என் நிராகரிக்கிறேன் – ஜெயமோகனின் பதிவு: பகுதி 1, பகுதி 2

சுஜாதா இலக்கியவாதி இல்லையா?

sujathaயார் சொன்னது? ஜெயமோகன்தான். அவரது சமீபத்திய பதிவு ஒன்றில் சொல்கிறார்:

சுந்தர ராமசாமியும் சரி, ராஜமார்த்தாண்டனும் சரி தீவிர இலக்கியத்தின் சின்னங்கள். சுஜாதா அப்படி அல்ல. அவர் நல்ல கதைகள் சிலவற்றை, சில நல்ல நாடகங்களை எழுதியிருக்கிறார். நவீன உரைநடையில் அவருக்கு பங்களிப்பு உண்டு. ஆனால் அவர் இலக்கியவாதி அல்ல. அப்படிச் சொல்பவன் இலக்கியவாசகனும் அல்ல

மனிதர் நாலு வரி எழுதிவிட்டார். அதைப் படித்ததும் எங்கேயோ எனக்கு இடித்தது, ஆனால் சரியாகவும் இருந்தது. எங்கே, என்ன என்று துல்லியமாக கண்டடைய நாலு நாள் ஆகிவிட்டது. 🙂

  1. சுந்தர ராமசாமியும் சரி, ராஜமார்த்தாண்டனும் சரி தீவிர இலக்கியத்தின் சின்னங்கள். சுஜாதா அப்படி அல்ல. – சரிதான். சுஜாதா என்னதான் இலக்கியம் படைத்திருந்தாலும், இலக்கியத்தின் பெரிய ரசிகராக இருந்தாலும் அவர் தீவிர இலக்கியத்தின் சின்னம் அல்லர். கமலஹாசன் கலைப்படங்களின் சாயல் உள்ள சில படங்களில் நடித்திருக்கிறார், ஆனால் கமல் கலைப்படங்களின் சின்னம் அல்லர். அது போலத்தான்.
  2. அவர் நல்ல கதைகள் சிலவற்றை, சில நல்ல நாடகங்களை எழுதியிருக்கிறார்– சரிதான். அவருடைய மொத்த அவுட்புட்டில் நல்ல சிறுகதைகள், நாவல்களை விட வணிக எழுத்துக்களின் சதவிகிதம் மிக அதிகம்.
  3. நவீன உரைநடையில் அவருக்கு பங்களிப்பு உண்டு. – இது அவரை குறைத்து மதிப்பிடுவது. “முக்கிய பங்களிப்பு” என்றாவது எழுதி இருக்க வேண்டும். சுஜாதாவின் உரைநடையின் பாதிப்பு இல்லாத தமிழ் எழுத்தாளன் இல்லை என்று ஜெயமோகனே எங்கோ குறிப்பிட்டிருக்கிறார்.
  4. ஆனால் அவர் இலக்கியவாதி அல்ல. அப்படிச் சொல்பவன் இலக்கிய வாசகனும் அல்ல. – இடிப்பது இந்த வரிதான். ஜெயமோகன் சொல்வதைப் புரிந்து கொள்ள முடிகிறது, ஆனால் அவருடைய கருத்து எனக்கு இசைவானது அல்ல. சுஜாதா இலக்கியவாதியே என்று சுமார் நாலு வருஷங்களுக்கு முன்பு இங்கே ஒரு பெரிய பதிவே – சுஜாதாவின் மூன்று முகங்களும் தமிழ் இலக்கிய வரலாற்றில் அவரது இடமும் – எழுதி இருக்கிறேன். அதை எழுதத் தூண்டுதலாக இருந்ததும் இப்படி ஜெயமோகன் கொளுத்திப் போட்ட சில வரிகள்தான் –

    இலக்கியவாதி என்பதைக் காட்டிலும் வணிக எழுத்தாளர்தான். உங்கள் தேவை சுவாரசியம் என்பதல்லாமல் ஆன்ம பரிசோதனையோ, அறிவார்ந்த தேடலோ, உணர்வுகளின் அனுபவமோ என்றால் உங்களுக்கு சுஜாதா பெரிதாகப் படமாட்டார். சுஜாதாவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பதின்பருவத்தில் அவரை வாசித்து அதன் பின் அந்த வாசகத் தரத்திலேயே நின்றுவிட்டவர்கள்

ஜெயமோகன் முன்வைக்கக் கூடிய ஒவ்வொரு tangible வாதத்துக்கும் என்னால் எதிர்வாதம் புரிய முடியும். இலக்கியவாதி என்பதை எப்படி நிர்ணயிப்பது? எத்தனை கதைகள் இலக்கியம் என்பதை வைத்தா? வேறுவேறு களங்களை நம் முன் கொண்டு வரவேண்டுமா? வணிகப் பத்திரிகைகளில் எழுதி இருக்கக் கூடாதா? கிருஷ்ணன் நம்பிக்கு பத்து சிறுகதைகள் இலக்கியம் என்று தேறினால் அதிகம். லா.ச.ரா. ஒரே கதையைத்தான் திரும்பத் திரும்ப எழுதினார். அசோகமித்திரன் கூட குமுதத்தில் எழுதி இருக்கிறார். வளர்த்துவானேன்? சுஜாதாவின் குறை என்று சொல்லப்படும் எதுவும் இலக்கியவாதி என்று ஜெயமோகனே அங்கீகரிக்கும் இன்னொரு இலக்கியவாதியிடம் இருக்கத்தான் செய்கிறது.

jeyamohanஜெயமோகனின் இலக்கிய விமர்சனங்கள் பொதுவாக எனக்கு இசைவுடையவை. சில விஷயங்களில் மட்டுமே மாறுபடுகிறேன். சுஜாதாவின் இலக்கிய இடம் அதில் ஒன்று. சுஜாதா தமிழின் முதன்மையான இலக்கியவாதி என்றோ, புதுமைப்பித்தனுக்கு சமமான மேதை என்றோ, ஜெயகாந்தனுக்கு இணையான சாதனையாளர் என்றோ நான் கருதவில்லை. என் பெரிய பதிவில் எழுதியதை paraphrase செய்கிறேன் – சுஜாதாவின் தாக்கம், முன்னோடி முயற்சிகள் (அறிவியல் புனைவுகள், அறிவியல் அறிமுகம், தரமான சாகசக் கதைகள்) எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டாலும் நான் சுஜாதாவை தமிழ் இலக்கியவாதிகளின் இரண்டாம் வரிசையில்தான் வைப்பேன். ஆனால் முதல் வரிசையில் மிஞ்சி மிஞ்சிப் போனால் பத்து இருபது பேர் இருந்தால் அதிகம். ஜெயமோகனுக்கு இரண்டாம் வரிசை என்று ஒன்று இருக்கிறதா என்பது சந்தேகம்தான்.

ஜெயமோகனின் தீர்ப்பு subjective ஆனது. அதனால்தான் சுஜாதா இலக்கியம் படைத்திருந்தாலும் அவர் இலக்கியவாதி என்று கருதத் தேவையான அளவில், சதவிகிதத்தில் – முக்கியமாக தரத்தில் – இலக்கியம் படைக்கவில்லை என்று தீர்ப்பளிக்கிறார். இதில் விவாதிக்க ஒன்றுமில்லை, தர நிர்ணய அளவுகள் மாறுபடுகின்றன அவ்வளவுதான்.

பின்குறிப்பு: பாலகுமாரன் இலக்கியம் படைத்திருந்தாலும் அவர் இலக்கியவாதி என்று கருதத் தேவையான அளவில், சதவிகிதத்தில் – முக்கியமாக தரத்தில் – இலக்கியம் படைக்கவில்லை என்பது என்னுடைய உறுதியான கருத்து. நான் சுஜாதா பற்றி உணர்வது போலவே சில வாசகர்கள் பாலகுமாரனைப் பற்றி நினைக்கலாம். 🙂 பாலகுமாரனின் எழுத்தால் ஒரு காலத்தில் கவரப்பட்டு அதைத் தாண்ட முடியாதவர்கள் என்றுதான் நான் அவர்களைப் பற்றி நினைப்பேன். ஜெயமோகன் சுஜாதாவின் எழுத்தால் ஒரு காலத்தில் கவரப்பட்டு அதைத் தாண்ட முடியாதவன் என்று என்னைப் பற்றி நினைக்கலாம். 🙂

எனக்கு சுஜாதாவின் எழுத்தின் மீது நிறைய நாஸ்டால்ஜியா உண்டு என்பதைப் பதிவு செய்கிறேன். (சுஜாதா என்ன, இரும்புக்கை மாயாவி காமிக்ஸ், வாண்டு மாமா மீது கூட உண்டு.)

தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம்

ஜெயகாந்தன் – மகராஜன் அருணாசலம் கடிதம்

ஜெயமோகன் சீரிசுக்கு நடுவே ஒரு digression. ஜெயகாந்தன் அஞ்சலி பதிவுக்கு வாசக நண்பர்களில் ஒருவரான மகராஜன் அருணாசலம் எழுதிய பின்னூட்டம் எனக்குப் பிடித்தமான ஒன்று. அதை இங்கே பதித்திருக்கிறேன்.


jeyakanthanஉண்மையில் ஜெயகாந்தன் மறைந்துவிட்டார் என்றவுடன் தோன்றியது சிங்கம் போய்விட்டது என்ற எண்ணம்தான். அவரின் சிறுகதைகளில் என்னை மிகவும் கவர்ந்தது ‘அந்தரங்கம் புனிதமானது’ தான். இன்று கூட நம்மால் ஏற்க இயலாத ஒரு கதைக்கரு. ஆனால் அது ஓர் கனவு. ஒட்டுமொத்த மானுடத்துக்கான கனவு. டேய், இதுதாண்டா நீ போய்ச் சேர வேண்டிய இடம், சேர முடியுமா என்ற அறைகூவல். தலைமுறைகள் தாண்டியாவது சென்று சேர வேண்டும் என்ற அவா.

அவர் தன் படைப்புகளை விட தன் ஆளுமையாலேயே என்னை மிகவும் கவர்ந்திருக்கிறார் என்றே இப்போது உணர்கிறேன். நான் படிக்க ஆரம்பித்த 90களுக்குப முன்பே அவர் எழுதுவதை நிறுத்தியிருந்தார். மேலும் அவரது படைப்புகள் மிக நேரடியாக, உரத்த குரலில் பேசுபவை. அது அவற்றின் தேவையும் கூட. ஆனால் அவரின் மேடைப் பேச்சுக்கள், அவரின் காணொளிகள் என்னில் ஏற்படுத்திய தாக்கங்கள் அலாதி. நம் கம்யூனிஸ்டுகளில் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்த வகையில் அவர் என்னை ஈர்த்தார். கம்யூனிச சித்தாந்தத்தில் ஆர்வம் வந்தபோது, அப்போதையில் முழுமையாக மூழ்காமல் தடுத்ததில் அவர் பங்கு அதிகம். “சோவியத் யூனியனில் எது இல்லை என நான் உணர்ந்தேன்!! இங்கு நம்மிடம் படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறதே அந்த ஜனநாயகம் அது அங்கு இல்லை. அதை முறையாகப் பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அது வெடித்து விடும். இப்படித்தான் இங்கே வெடிக்கிறது. ஆனால் நாம் ஒரு போதும் ஜனநாயகத்தால் சோர்வுற மாட்டோம். இந்த ஜனநாயகம் அனைத்து மானிடரையும் வெல்லும். இந்த ஜனநாயகம் அனைத்து சர்வாதிகாரத்தையும் தூள் தூளாக்கி விடும்” என்று முழங்கிய அவர் குரல் எனக்கு என்றும் நம்பிக்கையூட்டும் ஒன்று. ஒவ்வொரு முறை நம் ஜனநாயகத்தால் சோர்வடையும் போதும் இச்சொற்கள் என் காதில் ஒலிக்காமல் போனதில்லை. மேலும் நல்ல சர்வாதிகாரி என்ற கருத்துருவிலும் சிக்கிக் கொள்ள விடுவதில்லை.

அவரை அவரின் அனைத்து முரண்களோடும் நம்மால் ஏற்றுக் கொள்ள இயன்றதற்கு, இன்றும் கொண்டாடுவதற்கு அவரின் நெஞ்சத் திறமும், நிமிர்வும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நேர்மையும், திமிர்ந்த ஞானச் செருக்குமே காரணங்கள். அவரின் அனைத்து கருத்து மாறுபாடுகளையும் அவர் பாசாங்கில்லாது முன்வைத்தார். இதுதான் நான் என்று நிமிர்ந்து நின்றார்.

அவரின் உடல் மொழி, அந்த கம்பீரமான குரல், சிரிப்பினூடே பேசுவது, அவர் கொள்ளும் சீற்றம், அவர் தலையசைவு, அவர் கூந்தல் என அனைத்துமே ஓர் சிங்கத்தை நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கும். இவை அவரை சிங்கம் என்று அழைக்கத் தூண்டியதா அல்லது சிங்கம் என்றழைக்கப்பட்டதால் அவர் இவற்றைக் கொண்டாரா! உண்மையில் ஜெயமோகன் சொல்வது போல ஓர் எழுத்தாளரின் மறைவு என்பது ஓர் துவக்கமே. அவரின் படைப்புகள் மீள்வாசிப்பு செய்யப் படும். அவர் இன்னும் நுட்பமாக அணுகப்படக் கூடும். அவர் படைப்புகளூடு நம்மோடு உரையாடவும் முடியும். எனினும் அவர் தன் சிந்தனைகளை கட்டுரைகளாகவாவது எழுதி வைக்காமல் போனது ஒருவிதத்தில் இழப்பே. தன் ஆன்மாவை எழுதியவன் என்றுமே அழிவதில்லை, வெகு சிறிதேயென்றாலும்.


டேவிட் ராஜேஷ் தன் பின்னூட்டத்தில் “ஜெயகாந்தனது பார்வை வீச்சு தமிழில் அரிது. மரங்களை பாடுபொருளாய் கொண்ட தமிழ் எழுத்தளர்களுள் காடுதனை பாடுபொருளாய்க் கொண்டவரவர்” என்று சொல்லி இருப்பதும் ரொம்பச் சரி!

வாசக நண்பர், சஹிருதயர் ரெங்கசுப்ரமணியின் பதிவு இங்கே

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயகாந்தன் பக்கம்

சீன, ஜப்பானிய முன்னோடி நாவல்கள்

ஜெயமோகன் “இரண்டாயிரத்துக்குப் பின் நாவல்” என்ற தலைப்பில் சமீபத்தில் ஒரு உரை ஆற்றி இருக்கிறார். அதில் சீன, ஜப்பானிய நாடுகளின் நாவல் முன்னோடி நாவல் முயற்சிகளைப் பற்றி குறிப்பிட்டிருந்தார். அவற்றை இணையத்தில் தேடி அவற்றுக்கான சுட்டிகளை இணத்திருக்கிறேன்.

tale_of_genjiபதினோராம் நூற்றாண்டில் எழுதப்பட்ட Tale of Genji பற்றி இப்படி சொல்கிறார்.

ஜப்பானியப் பெருநாவல் மரபு முன்னரே உலகமெங்கும் அறியப்பட்டது. அதில் ஜெஞ்சியின் கதை தமிழிலும் கா. அப்பாத்துரையால் சுருக்கமாக மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. 11-ஆம் நூற்றாண்டு நாவலான இதை உலகின் முதல் நாவல் என்பதுண்டு.

ஜெஞ்சியை இணையத்தில் படிக்கலாம்.

அவர் முற்கால சீனப் பெருநாவல்கள் பற்றி சொல்வது:

சீனப் பெருநாவல் மரபு என்று 14-ஆம் நூற்றாண்டில் மிங் வம்ச அரசர்களின் காலத்தில் தொடங்கி பதினெட்டாம் நூற்றாண்டில் குயிங் மன்னர்களின் காலம் வரை நீடித்தது. அவற்றில் நான்கு பெருநாவல்கள் உச்சங்கள். மானுடம் உருவாக்கிய மாபெரும் நாவல்கள் அவை. மானுடம் உரைநடையில் அடைந்த மாபெரும் கலைவெற்றிகளும் அவையே என்னும் விமர்சகர்கள் உள்ளனர்.

  • நீர்வேலி (Water Margin) – பதினான்காம் நூற்றாண்டு – இணையத்தில் படிக்க
  • மூன்று அரசுகளின் கதை (Romance of Three Kingdoms) – பதினான்காம் நூற்றாண்டு – இணையத்தில் படிக்க
  • மேற்கு நோக்கிய பயணம் (Journey to the West) – பதினாறாம் நூற்றாண்டு – இணையத்தில் படிக்க
  • செந்நிற அறையின் கனவு (Dream of the Red Chamber) – பதினெட்டாம் நூற்றாண்டு – இணையத்தில் படிக்க

தொகுக்கப்பட்ட பக்கம்: References

இந்திய நாடகங்கள்

திட்டமிடாமலே நாடகங்கள், ஜெயகாந்தன் என்று இரண்டு தீம்களாக சமீபத்தியப் பதிவுகள் அமைந்துவிட்டன. (ஜெயகாந்தன் பதிவுகள் முடியவில்லை, இன்னும் ஓரிரண்டு பதிவுகள் வரும்.) அடுத்த தீமாக சில பழைய+சமீபத்திய ஜெயமோகன் பதிவுகளை வைத்து எழுதத் திட்டம். (சில பழைய பதிவுகள் “என்னது? இந்திரா காந்தி செத்துட்டாரா!” அளவுக்கு அறதப்பழசு.)

jeyamohanநாடகங்கள் பற்றி என் பதிவுகளைப் (பரிந்துரைகள், நானும் நாடகங்களும், மேற்குலக நாடகங்கள், தமிழ் நாடகங்கள்) படித்துவிட்டு ஜெயமோகனும் நாடகங்களைப் பற்றி ஒரு கோடி காட்டி இருக்கிறார். அந்தப் பதிவைப் படிக்கும்போது என் வாசிப்பு எத்தனை மேலோட்டமானது என்று புரிகிறது.

குறிப்பாக மலையாள நாடக உலகைப் பற்றி அவர் எழுதி இருந்தது எனக்கு கண்திறப்பு. வங்காள, மராத்தி, கன்னட, ஏன் ஹிந்தி நாடக உலகைப் பற்றிக் கூட ஓரளவு தெரிந்திருந்தது. சில பழைய சமஸ்கிருத நாடகங்களைக் கூடப் படித்திருக்கிறேன். ஆனால் மலையாளம் என்றால் சுத்தம். அவர் சொல்லி இருக்கும் நாடகங்களைத் தேட வேண்டும்.

என் போன்ற சோம்பேறிகளுக்காக அவர் குறிப்பிட்ட நாடகங்களின் பட்டியல் கீழே:

  • இந்திரா பார்த்தசாரதி – மழை, போர்வை போர்த்திய உடல்கள், ஔரங்கசீப், ராமானுஜர்
  • அம்பை: பயங்கள்
  • எஸ்.எம்.ஏ. ராம்: ஆபுத்திரன் கதை (இது என்னைக் கவரவில்லை)
  • பிரபஞ்சன்: முட்டை
  • ந. முத்துசாமி: நாற்காலிக்காரர் (இதை நடிக்க வேண்டும் என்றே கருதுகிறேன்)
  • எஸ். ராமகிருஷ்ணன்: அரவான்
  • தாகூர்: விசர்ஜனம், சித்ராங்கதா – ஆங்கில மொழிபெயர்ப்பு இங்கே
  • குவெம்பு: பெரகெலெ கொரல் (நான் குவெம்புவின் “சூத்ர தபஸ்வி” மட்டுமே படித்திருக்கிறேன். அதுவும் இப்போது சரியாக நினைவில்லை)
  • ஹெச்.எஸ். சிவப்பிரகாஷ்: மாதவி
  • சி.என். ஸ்ரீகண்டன் நாயர்: காஞ்சனசீதா, லங்காலட்சுமி
  • Chicago: (சிறந்த திரைப்படம்)
  • Guess Who Is Coming to Dinnerஸ்பென்சர் ட்ரேசி, சிட்னி பாய்டியர், காதரின் ஹெப்பர்ன் நடித்த சிறந்த திரைப்படம் பெர்னி மாக் நடித்து இந்தத் திரைப்படத்தின் உல்டா ஒன்றும் – Guess Who – வந்திருக்கிறது. (கறுப்பினப் பெண், வெள்ளை நிற காதலனாக ஆஷ்டன் குட்சர், அப்பாவாக பெர்னி மாக்)

தொகுக்கப்பட்ட பக்கம்: நாடகங்கள்

ரிலீசே ஆகாத ஜெயகாந்தன் திரைப்படம்

தற்செயலாக அவார்டா கொடுக்கறாங்க தளத்தில் இந்தப் பதிவு கண்ணில் பட்டது. தோழி சாரதா சொன்னவற்றை இங்கே மீள்பதித்திருக்கிறேன்.

jeyakanthanஜெயகாந்தனின்எத்தனை கோணம் எத்தனை பார்வை’ வண்ணத் திரைப்படம், அழகான ஒரு படைப்பு. மிக மிக யதார்த்தமான ஒரு படம். எந்த ஒரு கட்டத்திலும் செயற்கைக் கோணம் தட்டாது. நான் பல ஆண்டுகளுக்கு முன் பார்த்ததாலும், ஒரே ஒரு முறை மட்டுமே பார்த்திருந்ததாலும் கதையமைப்பு கோர்வையாக நினைவில் இல்லை. ஆனால் மிக நல்ல படம் என்பது மட்டும் மனதில் மிக அழுத்தமாகப் பதிந்துள்ளது.

சாருஹாசன், வடிவுக்கரசி, ஸ்ரீபிரியா, சுரேஷ், நளினி, தியாகராஜன், வி. கோபாலகிருஷ்ணன், தேங்காய் சீனிவாசன், ஒரு விரல் கிருஷ்ணாராவ் என நிறைய பழைய முகங்களே நடித்திருந்தபோதிலும், உருவாக்கத்தில் புதுமையிருந்தது. தி.க. தலைவர் வீரமணி போல கறுப்புச் சட்டையில் வரும் பத்திரிகை ஆசிரியர் வி. கோபாலகிருஷ்ணன் மட்டும் படம் முழுக்க செந்தமிழில் பேசுவது மிக நன்றாக இருக்கும். மனைவியை விட்டுப் பிரிந்து, இசைக்காக தன்னை அர்ப்பணித்து தன் தோழர்களுடன் தனியாக வாழும் சாருஹாசன்தான் படத்தின் முதுகெலும்பு. மது அருந்துவதை ஒரு தவறாக எண்ணாமல் அன்றாட சடங்காக கருதும் கூட்டம் அது.
தியாகராஜனுக்கும், ஸ்ரீபிரியாவுக்கும் நடக்கும் சுயமரியாதை திருமணம் எல்லாம் ரொம்ப இயற்கையாக, தெரு முனையில் பந்தல் போட்டு நடத்தப்படுவது போன்ற பல காட்சிகள் மனதுக்கு இதமாக அமைந்தவை. பாடல்களும் ஜெயகாந்தன் எழுதியதாக நினைவு. எத்தனை கோணம் எத்தனை பார்வை என்ற பாடல் படமாக்கப்பட்ட விதமும் அருமை. ஆனால் அப்பாடலின் நடுவே, துறைமுகத்தில் பெரிய பெரிய இரும்பு பிளேட்கள் இறக்கப்படுவதை ஏன் காண்பித்தனர் என்பது தெரியவில்லை. இது போக தேங்காயும், கிருஷ்ணாராவும் பாடும் என்ன வித்தியாசம் என்ற பாடலும், சாருஹாசன் பாடும் ‘அலை பாயுதே கண்ணா’ பாடலும் உண்டு.

அலை பாயுதே பாடலை இங்கே கேட்கலாம். விதைத்த விதை என்ற பாடலை இங்கே கேட்கலாம்யூட்யூப் சுட்டி என்றாலும் பாட்டை கேட்கத்தான் முடியும், திரைப்படத்தின் க்ளிப்பிங் இல்லை.

etthani_konam_etthani_parvaiஅதிர்ஷ்டவசமாக இப்படம் பார்க்க நேர்ந்தது ஒரு கதை. எங்கள் குடும்ப நண்பரொருவர் சிங்கப்பூரிலிருந்து வந்திருந்தபோது அவரைப் பார்க்க நானும் என் கணவர் பிரகாஷும் சென்ற இடத்தில், ‘ஏதாவது திரைப்பட வீடியோ கேஸட் இருந்தால் கொடுங்கள் (அப்போது சி.டி. வரவில்லை) பார்த்துவிட்டு தருகிறோம்’ என்று கேட்டபோது, மூன்று பட கேஸட்டுகளைக் கொடுத்தார். அவற்றில் இந்த ‘எத்தனை கோணம் எத்தனை பார்வை’ படமும் ஒன்று. கேள்விப்படாத படமாக இருக்கிறதே என்று நினைத்து வீட்டுக்கு எடுத்துச் சென்று படத்தைப் பார்த்தபோது படம் அருமையாக இருந்தது.

ஆனால் இரண்டு ஆண்டுகள் கழித்து, டிசம்பர் 31 தினத்தந்தி செய்தித்தாளில், அந்த ஆண்டு வெளியான படங்களைப்பற்றிய விவரமான கட்டுரை வெளியாகியிருந்தது. (வருடா வருடம் தினத்தந்தியில் வருடக்கடைசியில் இப்படி ஒரு கட்டுரை போடுவார்கள்). அதில் ‘சென்ஸார் ஆகியும் இன்னும் வெளி வராத திரைப்படங்கள்’ என்ற தலைப்பில் மூன்று படங்களின் பெயர்கள் இருந்தன. அவற்றில் ஒன்றாக ‘எத்தனை கோணம் எத்தனை பார்வை’ பெயரும் இருந்தது.

My GOD… இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நாம் பார்த்துவிட்ட படம் இன்னும் தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆகவே இல்லையா? என்ன கொடுமை? இவ்வளவு நல்ல படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் தயாராக இல்லையா? தயாரிப்பாளரே வெளியிடத் தயக்கமா? இப்படியிருந்தால் நல்ல் படங்கள் எப்படி நம் பார்வைக்கு வரும்? இன்று வரை அப்படம் வெளியானதா இல்லையா என்பது தெரியவில்லை. வெளியாகியிருந்தால் எப்படி ஓடியது? தெரிந்தவர்கள் சொல்லுங்கள். (ஆர்வியின் குறிப்பு – ஒரு ஸ்டில் கூட கிடைக்கவில்லை ஸ்டில்லுக்கு சுட்டி கொடுத்த அரவிந்த் ஸ்வாமிநாதனுக்கு நன்றி!)

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயகாந்தன் பக்கம், திரைப்படங்கள்

அஞ்சலி – ஹீரோ ஜெயகாந்தன்

jeyakanthanஎழுத்தாளனுக்கு அஞ்சலி என்றால் அது அவன்(ள்) எழுத்தைப் பற்றி எழுதுவது மட்டுமே என்று நான் உறுதியாக நம்புபவன். ஆனால் ஜெயகாந்தன் இறந்ததைக் கேட்டதும் முதலில் தோன்றிய எண்ணம் “அடடா! சிங்கம் போயிட்டாரே!” என்பதுதான். அடுத்த கணம்தான் அது ஹென்றியைப் படைத்த சிங்கம் மறைந்தது என்று மாறியது. உண்மையில் அவரது புத்தகங்களில் மனம் ஓடியதை விட – ஹென்றியை, சித்தப்பாவை, கங்காவை, பிரபுவை, மஞ்சுவை, வெங்கு மாமாவை, அம்மாவை, ஆர்கேவியை, ஆதியை, சிங்கராயரை, ரங்காவை, கல்யாணியை, ராஜாராமனை நினைவு கூர்ந்ததை விட – எப்பேர்ப்பட்ட மனிதன் போய்விட்டான் என்ற எண்ணம்தான் மனதில் நிறைந்திருந்தது. அதை நானே புரிந்து கொள்ளவும் இரண்டு மூன்று நாளானது.

புத்தகம், புத்தகம் என்றே உயிரை விடும் நான் கூட, எழுத்தாளன் ஒரு பொருட்டே இல்லை, எழுத்தே பிரதானம் என்று உறுதியாகக் கருதும் நான் கூட ஏன் இப்படி ஜெயகாந்தன் என்ற மனிதனைப் பற்றி இத்தனை யோசிக்கிறேன் என்று கண்டுபிடிக்க முயன்றேன். விஷயம் சிம்பிள் – அவரது வீச்சு அவர் எழுத்தையும் தாண்டியது, அவ்வளவுதான். கருத்து நேர்மை (integrity), தைரியம், திமிர், துடுக்குத்தனம், பெருமிதம், பிடிவாதம், சகமனிதர்களிடம் நேசம் எல்லாம் கலந்த ஒரு ஆளுமை. அவர் எழுத்திலும் அந்த ஆளுமைதான் வெளிப்பட்டது. எழுத்தாளர்களில் அவரைப் போன்ற, அவரையும் மிஞ்சிய, எந்த வித சமரசமும் செய்து கொள்ளாத லட்சியவாதிகள் இருந்திருக்கிறார்கள்/இருக்கிறார்கள் (சி.சு. செல்லப்பா, அசோகமித்ரன்), அவரை விட பிரபலமானவர்கள் இருந்திருக்கிறார்கள் (ஜெயகாந்தனின் லாண்டிரி லிஸ்ட் எந்தப் பத்திரிகையிலும் வராது), “நீ என்ன நினைத்தால் எனக்கென்ன, மயிரே போச்சு” என்று வெளிப்படையாகச் சொன்னார்களோ இல்லையோ, அப்படியே வாழ்க்கை முழுவதும் மற்றவர்களைப் பற்றி கவலைப்படாமல் தன் கருத்தை முன்வைப்பவர்கள் இருந்திருக்கிறார்கள் (க.நா.சு.), சிறு குழுக்களை தன் வீட்டையே “மடமாக்கி” வழிநடத்தியவர்கள் இருந்திருக்கிறார்கள் (சுரா), சில பல வாசகர்கள் ஆசான்களாகக் கொண்டாடும் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் (ஜெயமோகன், பாலகுமாரன்), ஆனால் இவர் ஒருவரைத் தவிர எந்த இலக்கியவாதியும் பொது வாசகனுக்கு ஹீரோவாக இருந்ததாக எனக்குத் தெரியவில்லை. தலைவா!

அண்ணாதுரைக்கான இரங்கல் கூட்டத்தில் அவர் பேசியது ஓரளவு பிரபலமானது. ஈ.வெ. ராமசாமி முன்னால் தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் அவர் பேசியது அவ்வளவாகத் தெரியாது. சிவாஜி மேடையில் இருக்கும்போது சிவாஜியின் நடிப்பை விமர்சிக்கிறார். சுந்தர ராமசாமி எங்கோ எழுதி இருக்கிறார் – அரசியல் கூட்டத்தில் காமராஜ் முன்னிலையில் கால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்தாராம். ஒரு எழுத்தாளன் இத்தனை தில்லாக இருந்தாண்டா என்று சுரா மெய்சிலிர்த்திருக்கிறார். கஞ்சாவை எம்ஜிஆர் தடை செய்தால், என் வீட்டில் கஞ்சா இருக்கிறது என்று பேட்டி கொடுக்கிறார். வீட்டில் அவரது “சபைக்கு” வருபவர்களில் ரிக்ஷா இழுப்பவனுக்கும் அரசு உயர் அதிகாரிக்கும் ஒரே மரியாதைதானாம். அவரது உடலில் முதுகெலும்பு இல்லை, முதுகெலும்பில் உடல் இருந்திருக்கிறது. ரஜினியும் விஜய்யும் அஜித்தும் இதை விட என்ன ஹீரோயிசம் காட்டிவிட முடியும்? பதின்ம வயதில் “தல!” என்று கொண்டாடி இருப்பேனோ என்னவோ! அவரை வெறுமனே ஹீரோ என்றால் பத்தவில்லை, அவர் ஒரு மாஸ் ஹீரோ!

எழுத்திலும் அப்படித்தான். நேரடியான பேச்சுதான். கோடி காட்டுவது, சொல்லாமல் சொல்வது என்ற நகாசு வேலைகள் எதுவும் கிடையாது. முதல் நிலை (primary) கதாபாத்திரங்கள் உண்மையானவர்கள்; அனேகமாக உயர்ந்த மனிதர்கள். (noble souls). கருணையும் மனித நேசமும் உள்ளவர்கள். செயற்கைத்தனம் தீண்டாதவர்கள். அவர்களின் உணர்ச்சிகள் உண்மையானவை. அவர்கள் காலகட்டங்களின் விழுமியங்களை, பிரச்சினைகளை நேர்மையாக அணுகுபவர்கள். மாற்றங்கள் தேவை என்றால் அதை நேரடியாகவே நமக்கு சொல்லுவார்கள். சமயத்தில் ஜெயகாந்தனே நம்முடன் நேரடியாகப் பேசுவார். அந்தப் பாத்திரங்கள் மூலம் நமக்குக் கிடைக்கும் தரிசனங்கள் (insights) பல சமயங்களில் அபாரமானவை. இந்தக் காலத்தை விடுங்கள், கங்காவும் பிரபுவும் ஹென்றியும் வெங்கு மாமாவும் ராஜாராமனும் எத்தனை பேர் மனதில் கேள்விகளை எழுப்பி இருப்பார்கள்? ஆசாரங்களின், சம்பிரதாயங்களின் மேல் கட்டப்பட்ட விழுமியங்கள் எத்தனை பலவீனமானவை என்று அவரை விட வேறு யாருமே இத்தனை forceful ஆகக் காட்டிவிடவில்லை. எழுத்தின் அந்த சக்தி அவரது ஆளுமையிலிருந்தே – அவர் ஒரு ஹீரோவாக இருப்பதிலிருந்தே – வெளிப்பட்டது என்றே நான் கருதுகிறேன்.

வயதான காலத்தில் சமரசம் செய்து கொண்டிருக்கிறார். கருணாநிதி கௌரவித்தத்தை சிறு வயதில் ஏற்றிருப்பாரா என்பது சந்தேகம்தான். ஆனாலும் அது அவரது வீச்சை குறைக்கவே இல்லை. இதைக் குறிப்பிடவில்லை என்றால் அது அண்ணாவின் இரங்கல் கூட்டத்தில் பேசிய ஜெயகாந்தனை அவமானப்படுத்துவது என்பதால்தான் இதையும் குறிப்பிடுகிறேன்.

சுருக்கமாகச் சொன்னால் அவரது ஆளுமை அவரது படைப்புகளையும் தாண்டியது. கம்பீரத்தின், சுய கௌரவத்தின் உருவமாகவே வாழ்ந்து மறைந்திருக்கிறார். ஒரு இயற்கை சக்தியாக (natural force) ஆகவே இருந்தார். பெருக்கெடுத்தோடும் நதி எப்படி கசடுகளை அடித்துச் செல்கிறதோ அதே போலத்தான் அவரது எழுத்தில் அவர் வெளிப்பட்டார். சிங்கம்!


இந்த அஞ்சலியில் நான் ஜெயகாந்தனை உணர்ந்த விதத்தை மட்டுமே எழுத வேண்டும் என்றுதான் நினைத்தேன், ஆனால் புத்தகங்களைப் பற்றி எழுதுவதை என்னால் முழுமையாகத் தவிர்க்க முடியவில்லை. 🙂

ஜெயகாந்தன் படைப்புகளில் காலத்தைத் தாண்டி நிற்கக் கூடியவையாக இந்த நொடியில் தோன்றுபவை – “ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்”, குருபீடம், ரிஷிமூலம், “யாருக்காக அழுதான்”, மற்றும் நான் என்ன சேயட்டும் சொல்லுங்கோ. இன்று எனக்கு முக்கியமாகப் படும் அவரது சில படைப்புகள் காலப்போக்கில் நிற்குமா என்பது எனக்கு சந்தேகம்தான். இன்னும் நூறு வருஷம் கழித்து சில நேரங்களில் சில மனிதர்களைப் படிப்பவர்களுக்கு ஏதோ ஒரு நாள் எவனோடோ படுத்தாளாம், அவள் வாழ்க்கையே மாறிவிட்டதாம், வாட் நான்சென்ஸ்? என்றுதான் படிப்பவர்களுக்கு தோன்றும். யுகசந்தி சிறுகதையின் காலம் இப்போதே கடந்துவிட்டது.

சிறந்த வாசகரான ஜெயமோகன் தன் மைல்கல் பட்டியல்களில் தேர்ந்தெடுத்த நாவல்கள்: ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், சில நேரங்களில் சில மனிதர்கள். சிறுகதைகள்: யாருக்காக அழுதான்?, குருபீடம், எங்கோ யாரோ யாருக்காகவோ, நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ, நான் ஜன்னலருகே உட்கார்ந்திருக்கிறேன், முன்நிலவும் பின்பனியும், அக்கினிப் பிரவேசம் மற்றும் இறந்த காலங்கள். எஸ்ரா ஜெயமோகனின் நாவல் தேர்வுகளைத் தவிர பாரிசுக்குப் போ நாவலையும் தேர்ந்தெடுத்திருக்கிறார். அவரது சிறுகதைத் தேர்வுகள்: குருபீடம் , முன்நிலவும் பின்பனியும் மற்றும் அக்னிப் பிரவேசம்.

அவரது பல சிறுகதைகள் சிறுகதைகள் தளம், தொகுப்புகள் தளம், அழியாச்சுடர்கள் தளம், ஆர்க்கைவ்ஸ் தளம், ப்ராஜெக்ட் மதுரை (பகுதி 1, பகுதி 2, பகுதி 3) ஆகியவற்றில் கிடைக்கின்றன.

அவரைப் பற்றிய என் புரிதலும் சில முறை மாறியிருக்கிறது. இருபது வயதுக்கு முன்னால் நான் தமிழில் படித்த இலக்கியத்தரம் உள்ள படைப்புகள் குறைவு. நான் கவிதை பக்கம் இப்போதே போவதில்லை, அந்தக் காலத்தில் – அதுவும் கோனார் நோட்ஸ் வைத்துப் படிக்க வேண்டிய சங்கக் கவிதை என்றால் – ஓடிவிடுவேன். தமிழில் கல்கி, சுஜாதா தவிர வேறு யாரையும் அப்போது விரும்பிப் படித்ததில்லை. சாயாவனம் போன்ற தமிழ் நாவல்களை விதிவிலக்கு என்றே நினைத்திருந்தேன். ஆனால் அப்போதும் ஜெயகாந்தன் என்று ஒரு சிங்கம் இருக்கிறார் என்று தெரிந்திருந்தது. சில நேரங்களில் சில மனிதர்கள், ஜயஜய சங்கர, கங்கை எங்கே போகிறாள் மாதிரி சில அருமையான படைப்புகளையாவது படித்திருந்தேன். அக்னிப் பிரவேசத்தைத் தவிரவும் சில பல கதைகள் – சீசர், ஹீரோவுக்கு ஒரு ஹீரோயின், ஆளுகை, புதுச்செருப்பு கடிக்கும், முன்நிலவும் பின்பனியும், குருபீடம், நந்தவனத்தில் ஓர் ஆண்டி, யுகசந்தி – நினைவில் நின்றன. அப்போதெல்லாம் புத்தகங்கள் படிக்க ஒரே வழி எங்கள் கிராமங்களில் இருந்த நூலகங்கள்தான், அங்கே இவரது புத்தகங்கள்தான் வெளியே போய்க்கொண்டே இருக்கும் என்பதை கவனித்திருக்கிறேன்.

ஓரளவு விவரம் தெரிந்த பிறகு எழுத்தாளன் குரல் அவரது படைப்புகளில் உரத்து ஒலிப்பது சில சமயம் எனக்கு – அதுவும் சின்ன வயதில் – கொஞ்சம் ஒவ்வாமையை உருவாக்கியது. குருபீடத்தில் சீடனிடம் குரு என்ன கற்றார் என்பதை அவர் வெளிப்படையாக சொல்ல வேண்டிய அவசியம் என்ன, நந்தவனத்தில் ஓர் ஆண்டி கதையில் ஊரான் பிணத்தை எரிக்கும்போது பாடுகிறான், சொந்த மகன் இறந்தபோது முடியவில்லை என்பதை கோடி காட்டி நிறுத்தி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமே, படிப்பவனுக்கு இதெல்லாம் கூடப் புரியாதா என்று சில சமயம் கடுப்பு வந்தது. புதுமைப்பித்தனை வேறு அப்போதுதான் படிக்க ஆரம்பித்திருந்தேன். என் கண்ணில் அப்போதும் இப்போதும் புதுமைப்பித்தன் மேதை, ஜெயகாந்தன் சாதனையாளர் மட்டுமே. மனித எந்திரமும், பொன்னகரமும், கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும், சாபவிமோசனமும், செல்லம்மாளும், பால்வண்ணம் பிள்ளையும், சுப்பையாப் பிள்ளையின் காதல்களும், புதிய கூண்டும், கல்யாணியும், ஆண்மையும், பிரம்மராக்ஷசும், சிற்பியின் நரகமும், துன்பக்கேணியும் வெகு விரைவில் ஜெயகாந்தனை பின்தள்ளிவிட்டன. இன்னும் நுட்பமாக கதை சொல்ல வேண்டும் என்று எதிர்பார்த்த காலம் அது. சாதனையாளர்களுக்கு விதிகள் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளாத வயது.

ஜெயகாந்தனின் இலக்கிய சாதனைகளைப் பற்றி என் கருத்துக்களை இன்னும் விளக்கப் போவதில்லை, பதிவு ரொம்ப நீளமாகப் போய்க்கொண்டிருக்கிறது. விருப்பம் உள்ளவர்கள் இந்த சுட்டியில்ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்“, “சில நேரங்களில் சில மனிதர்கள்“, “கங்கை எங்கே போகிறாள்“, “ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்“, “ஜயஜய சங்கர“, “ஈஸ்வர அல்லா தேரோ நாம்” ஆகிய நாவல்களைப் பற்றிய பதிவுகளைப் படிக்கலாம். இன்னும் படிக்காதது “பாரிசுக்குப் போ”, மற்றும் “விழுதுகள்“. யாரிடமாவது மின்பிரதி இருந்தால் கொடுங்கள்!

அவருடைய சினிமா பங்களிப்பு முக்கியமானது, ஆனால் சின்ன அளவிலேயே தாக்கத்தை ஏற்படுத்தியது. அதைப் பற்றி படிக்க விரும்புபவர்கள் “ஒரு இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்” பதிவைப் படிக்கலாம். சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் திரைப்பட விமர்சனங்களைப் பார்க்கலாம்.

படிப்பவர்கள் என்ன நினைக்கிறீர்கள்? அவருடைய நாவல்கள், சிறுகதைகளில் உங்களுக்குப் பிடித்தமானவை எவை? யாராவது உங்கள் எண்ணங்களை இங்கே பதிக்க விரும்பினால் மிக்க சந்தோஷத்தோடு வரவேற்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயகாந்தன் பக்கம், அஞ்சலிகள்

தொடர்புடைய சுட்டி:

ஈ.வெ.ரா.வுக்கு எதிர்க்கருத்து தெரிவித்த நிகழ்ச்சியைப் பற்றி ஜெயகாந்தனே சொல்வது, அ.இரா. வெங்கடாசலபதியின் கட்டுரை

ஜெயகாந்தனுக்காக ஒரு பாடல்

சில நேரங்கள் சில மனிதர்கள் திரைப்படத்துக்காக அவரே எழுதிய பாடல் – அவரை நன்றாகவே பிரதிபலிக்கிறது.

பாடல் வரிகள்:

கண்டதைச் சொல்லுகிறேன்
உங்கள் கதையைச் சொல்லுகிறேன்
கண்டதைச் சொல்லுகிறேன்
உங்கள் கதையைச் சொல்லுகிறேன்

இதைக் காணவும் கண்டு நாணவும்
உமக்கு காரணம் உண்டென்றால்
அவமானம் எனக்குண்டோ

கண்டதைச் சொல்லுகிறேன்
உங்கள் கதையைச் சொல்லுகிறேன்

நல்லதைச் சொல்லுகிறேன்
இங்கு நடந்ததைச் சொல்லுகிறேன்
நல்லதைச் சொல்லுகிறேன்
இங்கு நடந்ததைச் சொல்லுகிறேன்
இதற்கெனை கொல்வதும் கொன்று
கோயிலில் வைப்பதும் கொள்கை உமக்கென்றால்
உம்முடன் கூடி இருப்பதுண்டோ?
கூடி இருப்பதுண்டோ?

கண்டதைச் சொல்லுகிறேன்…

வாழ்ந்திடச் சொல்லுகிறேன்
நீங்கள் வாழ்ந்ததைச் சொல்லுகிறேன்
வாழ்ந்திடச் சொல்லுகிறேன்
நீங்கள் வாழ்ந்ததைச் சொல்லுகிறேன்
இங்கு தாழ்வதும் தாழ்ந்து
வீழ்வதும் உமக்கு தலையெழுத்தென்றால்
உம்மை தாங்கிட நாதியுண்டோ?
தாங்கிட நாதியுண்டோ?

கண்டதைச் சொல்லுகிறேன்…

கும்பிடச் சொல்லுகிறேன்
உங்களை கும்பிட்டுச் சொல்லுகிறேன்
கும்பிடச் சொல்லுகிறேன்
உங்களை கும்பிட்டுச் சொல்லுகிறேன்
என்னை நம்பவும் நம்பி
அன்பினில் தோயவும் நம்பிக்கை இல்லையென்றால்
எனக்கொரு தம்பிடி நஷ்டம் உண்டோ?
ஒரு தம்பிடி நஷ்டம் உண்டோ?

கண்டதைச் சொல்லுகிறேன்
உங்கள் கதையைச் சொல்லுகிறேன்
இதை காணவும் கண்டு நாணவும்
உமக்கு காரணம் உண்டென்றால்
அவமானம் எனக்குண்டோ…ஓ..ஓ?

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயகாந்தன் பக்கம்

அஞ்சலி – ஜெயகாந்தனின் “ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்”

ஜெயகாந்தன் மறைந்தார் என்று கேட்டதும் மனதில் முதலில் தோன்றிய எண்ணம் “ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்” எழுதிய சிங்கம் மறைந்துவிட்டார் என்பதுதான். இப்போதிருக்கும் “அடடா! போயிட்டாரே!” மனநிலையில் ஜெயகாந்தனின் நூல்கள், தாக்கம் பற்றி எல்லாம் எழுதுவதற்கில்லை. இப்போதைக்கு ஒ.ம.ஒ.வீ.ஒ. உலகம் பதிவை அவர் நினைவாக மீண்டும் பதிக்கிறேன்.


இந்த புத்தகம் எனக்கு பொய்த்தேவுவை நினைவுபடுத்துகிறது. ஏனென்று விளக்க முடியவில்லை, ஆனால் படித்ததும் நிறைவாக இருந்தது.

ஜெயகாந்தனின் புத்தகங்களில் இது பெரிதும் கொண்டாடப்படுவது. சில நேரங்களில் சில மனிதர்களை விட பாராட்டப்படுவது. நான் சமீபத்தில்தான் படித்தேன். சிறு வயதில் படித்திருந்தால் கதை, கதைப் பின்னல் (plot) என்று ஒன்றும் இல்லாததுதான் தெரிந்திருக்கும். ஒண்ணுமே நடக்கலியே என்றுதான் சொல்லி இருப்பேன். இப்போது ஹென்றி என்ற கதாபாத்திரம் தெரிகிறது, பாசம், பந்தம் எல்லாம் இருந்தும், இறந்து போன தன அப்பாவின் உறவினர்களை தேடிக்கொண்டு அவன் வந்தபோதும் அவன் ஒரு துறவி என்பது தெரிகிறது. துறவியை மதிப்பது என்பது நம் ரத்தத்திலேயே ஊறிவிட்டதோ?

என்ன கதை? ஹென்றியின் அப்பா பச்சைத் தமிழர். அவர் அவரது கிராமத்திலிருந்து ஓடி விடுகிறார். அவருடைய தத்துப் பிள்ளை வெள்ளைக்கார ரத்தம் ஓடும் ஹென்றி. அப்பா இறந்தபிறகு அவரது பூர்வீக கிராமத்துக்கு ஹென்றி தன் “வேர்களைத்” தேடி வருகிறான். அங்கே அவனுக்கு தேவராஜுடன் நட்பு ஏற்படுகிறது. தன் “சித்தப்பாவை” சந்திக்கிறான். பாகப்பிரிவினை நடக்கிறது. வீட்டை புதுப்பிக்கிறான். விலகி இருக்கும் தேவராஜின் மனைவி மீண்டும் ஒன்று சேர்கிறாள். சம்பந்தமே இல்லாமல் கொஞ்சம் பைத்தியமான ஒரு பெண் கதையில் வந்து போகிறாள். மணியக்காரர் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போன அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொள்கிறார். என்னவெல்லாமோ நடக்கிறது. நடப்பது எதுவும் முக்கியமில்லை.

அந்த பாகப்பிரிவினை சீன் உன்னதமானது. ஹென்றியின் அப்பாவின் சொத்துகளை அவனது சித்தப்பாதான் அனுபவித்துக் கொண்டிருக்கிறார். இப்போது வாரிசுதாரர் வந்தாயிற்று. ஊர் பெரிய மனிதர்கள் எல்லாம் இத்தனை நாள் எல்லாவற்றையும் கட்டி காப்பற்றிய சித்தப்பாவுக்கு இருக்கும் உரிமைகளைப் பற்றி யோசிக்கிறார்கள். சித்தப்பாவுக்கு அது ஒரு பொருட்டே இல்லை. ஹென்றிக்கோ தன்னை சொத்துக்கு உரியவன் என்று ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் முக்கியம், சொத்து இல்லை.

யோசித்துப் பார்த்தால் ஜெயகாந்தனின் லட்சியவாதம், மனிதர்கள் உயர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இதில் வெளிப்படுகிறது. புத்தகம் விவரிக்கும் மனிதர்களைப் பார்க்கும்போது ஒரு மன எழுச்சி ஏற்படுகிறது. இப்படியும் வாழ முடியும், வாழ்க்கை என்பது வெறும் பிரச்சினைகளால் ஆனதில்லை, தேடிச் சோறு நிதம் தின்று பல சின்னச் சிறுகதைகள் பேசி வாழ்வதில்லை, உயர்ந்த எண்ணங்களுக்கு அதில் இடம் இருக்கிறது என்ற விழிப்புணர்வு ஏற்படுகிறது. அதுதான் இந்தப் புத்தகத்தின் பலம்.

1973-இல் பதிக்கப்பட்ட புத்தகம்.

ஜெயமோகன் சிறந்த தமிழ் நாவல்கள் லிஸ்டில் இந்த நாவலை சேர்க்கிறார். மரபின் சாராம்சமான உள்வலிமையை தனக்குள் வாங்கிக் கொண்ட முற்போக்குப் படைப்புகளை உருவாக்கிய படைப்பாளிகளில் ஜெயகாந்தன் முக்கியமானவர் என்றும் அப்படி அவர் எழுதிய படைப்புகளில் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் முதன்மையான படைப்பு என்றும் அவர் சொல்கிறார். மேலும் அவரது வார்த்தைகளில்

மதமற்ற துறவு என்ற ஓர் இலட்சிய நிலை நோக்கி ஹென்றி எனும் வெள்ளையக் கதாபாத்திரத்தை ஏவுகிறார் ஜெயகாந்தன்….
தன் படைப்பியக்கம் மூலம் ஜெயகாந்தன் எப்போதுமே தேடிவந்த இலட்சியப் புரட்சியாளனின் சித்திரம் முழுமைபெறும் நாவல் இது. அனைத்திலும் குழந்தைத்தனமான குதூகலத்துடன் முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு ஈடுபடும் ஹென்றி அவை எதிலும் ஈடுபடாமல் விலகியிருக்கும் ஆழம் ஒன்றையும் கொண்டிருப்பதை சகஜமாக கூறிச்செல்கிறது இப்படைப்பு. கர்மத்துக்கும் மோட்சத்துக்கும் பூரண ஒத்திசைவு கூடிய ஓர் புள்ளியில் அமர்ந்திருக்கிறான் ஹென்றி.

எஸ்.ரா.வும் நூறு சிறந்த தமிழ் நாவல்கள் லிஸ்டில் இதை சேர்க்கிறார்.

பிற்சேர்க்கை: ஜெயகாந்தன் இந்த நாவல் பற்றி திண்ணை தளத்தில் அளித்த பேட்டியில் சொன்னது:

முதலில் நான் எழுத ஆரம்பித்த போது, ஒரு நல்லவன் எப்படி மூடர்களிடம் சிக்கி அவதியுறுகிறான் என்று எழுதத் தோன்றியது. ஆனால் எழுதத் தொடங்கியவுடன், அதை விடவும் அவன் நல்லவனாக இருப்பதால் எல்லாவற்றையும் எப்படி எல்லாவற்றையும் நல்லவனாகவே பார்க்கிறான் என்பதையும் எழுத எண்ணினேன். Negative aspect சிறிதும் இல்லாமல் எழுத மனதில் தீர்மானித்துக் கொண்டேன். அவன் ஒரு யுனிவர்சல் மேன். கிராமத்திலே வாழ்கிறான். பரந்து பட்ட உலகத்தன்மை எப்படி ஒவ்வொரு கிராமத்திலும் குடி கொண்டிருக்கிறது என்பதை அவன் வழியாகச் சொல்வதுதான் என் நோக்கம். அது ஒரு முடிந்த நாவல் அல்ல. அதன் முடிவு எப்படி இருக்கும் என்று தெரியாமலே அதை எழுதத் தொடங்கினேன். எனக்கு மனதில் மேன்மையான ரொம்ப மேன்மையான உணர்ச்சியும், அந்த உணர்ச்சியினால் நான்தான் ஹென்றி என்று உணர்வு கொண்டேன். என் நண்பர்களிடம் இதைச் சொல்லி, எப்படி எழுதுவது என்று முடிவாகவில்லை என்றேன். நண்பர் குப்புசாமி நான் சொன்ன விதமாகவே எழுதலாமே என்றார். அப்பொழுது நாங்கள் ஒரு லாரியில் பிரயாணம் செய்து கொண்டிருந்தோம். மொத்தம் அந்த லாரியில் ஏழு பேர் இருந்தார்கள் என்ற வரியோடு அந்த நாவல் தொடங்கியது. முடிவற்ற நாவலாக எழுதிக்கொண்டே போவதுதான் என் விருப்பம். ஆனால் பத்திரிகைக்காரர்களுக்கு இதை முடிக்க வேண்டும் என்று தோன்றிவிட்டது. இது இன்னும் எத்தனை வாரம் வரும் என்று கேட்டார்கள். அடுத்த வாரமே முடித்துவிட்டேன். அது முடித்த பிறகு நான் நிறைய எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிற விஷயங்கள் கூட மனதின் அடியாழத்துக்குப் போய் விட்டன. நீங்கள் கேட்டது: இந்த நாவல் எழுதும்போது என் மனநிலை பற்றி – மனிதர்களையும், கிராமத்தையும், இயற்கையையும் நேசிக்கிற ஒரு பறவை மாதிரி நான் அந்த காலத்தில் இருந்தேன் இந்தக் கதை என் உடம்பையே லேசாக்கி, பறவை போல இருந்தது என் மனநிலை. ஆனால் பறந்து கொண்டே இருக்க முடியாதல்லவா ? காலூன்றி ஒரு இடத்தில் நிற்கத்தான் வேண்டியிருக்கிறது. ஆனால் இன்னும் கூட அதை மறுபடியும் தொடங்கணும். எழுத வேண்டும் என்று ஆர்வம் உண்டு. ஒரு காரியம் நிறைவேறுவதற்கு ஆர்வம் மட்டும் போதாது. வேறு சில புறச் சூழ்நிலைகளும் தேவையல்லவா ? அது வரலாம் வராமலும் போகலாம்.

படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயகாந்தன் பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:

  • ஜெயகாந்தனைப் பற்றி ஜெயமோகன் – பகுதி 1, பகுதி 2
  • ஜெயகாந்தனின் திண்ணை பேட்டி
  • பொய்த்தேவு
  • ஜெயகாந்தனின் ஜயஜய சங்கர – பகுதி 1 , பகுதி 2, ஈஸ்வர அல்லா தேரோ நாம்
  • சில நேரங்களில் சில மனிதர்கள் நாவல் பற்றி ஆர்வி, திரைப்படம் பற்றி பக்ஸ், ஆர்வி, சாரதா
  • ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் நாவல் பற்றி ஆர்வி, திரைப்படம் – சாரதா விமர்சனம்
  • ஜெயகாந்தனின் “தர்க்கத்துக்கு அப்பால்” சிறுகதையும் என் புலம்பலும்
  • ஜெயகாந்தனின் “நந்தவனத்தில் ஓர் ஆண்டி” சிறுகதை, சி.சு. செல்லப்பாவின் “வாழ்க்கை” சிறுகதை, பிதாமகன் திரைப்படம் ஆகியவற்றில் ஒரே அடிப்படைக் கருத்து