நாடோடி மன்னன் திரைப்படத்தின் மூலக்கதையை எழுதிய முஸ்லிம் பெண்

ziddi_junaidha_begumஆபிதினின் ஒரு பழைய பதிவில் சித்தி ஜுனைதா பேகம் என்ற முஸ்லிம் பெண்மணி – நாகூர்ப் பெண்மணி – பற்றி வாசித்தேன். 1936 வாக்கில் காதலா கடமையா என்று ஒரு நாவலை எழுதினார், அதற்கு உ.வே. சாமிநாதய்யர் ஒரு முன்னுரை எழுதி இருக்கிறார், அதுதான் நாடோடி மன்னன் திரைப்படத்தின் மூலக்கதை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. என்னடா எம்ஜிஆருக்கு Prisoner of Zenda போதவில்லையா, இதிலிருந்து வேறு உருவினாரா என்று ஆச்சரியப்பட்டேன். பிறகு நாவலின் மின்வடிவம் கிடைத்தது. ஆபிதின் சொல்வது சரிதான். ஏறக்குறைய இந்த நாவல்தான் திரைப்படமாக வந்தது. ஆனால் நாவலே ஜெண்டாவை ஏறக்குறைய மொழிபெயர்த்ததுதான். இதைத்தான் ஊத்திக்கினும் கடிச்சுக்கலாம் கடிச்சுக்கினும் ஊத்திக்கலாம் என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். 🙂

காதலா கடமையா நாவலின் மின்பிரதியை இணைத்திருக்கிறேன். எழுபது வருஷத்துக்கு முன் ஒரு பெண், அதுவும் முஸ்லிம் பெண், அதுவும் மூன்றாவது வகுப்பைத் தாண்டாதவர் என்ற “தகுதிகள்” எல்லாம் இல்லாவிட்டால் நானே இந்தப் புத்தகத்தை சீந்தமாட்டேன். Curiosity value மட்டுமே இருக்கிறது.

பிற்சேர்க்கை: தமிழ் ஹெரிடேஜ் தளத்தில் காதலா கடமையா நாவலின் பிரதி இருப்பது பின்னால்தான் தெரிந்தது. அங்கே மகிழம் என்ற இன்னொரு நாவலுக்கு சுட்டி இருக்கிறது, ஆனால் நாவலில் பாதிதான் இருக்கிறது.

தொடர்புள்ள சுட்டிகள்:
விக்கி குறிப்பு
பேகத்தின் பேட்டி
நாகூர் ரூமியின் குறிப்பு
கீரனூர் ஜாகிர் ராஜாவின் குறிப்பு
ஜே.எம். சாலியின் குறிப்பு

முதல் தமிழ் நாவல் “பிரதாப முதலியார் சரித்திரம்” இல்லை!

aadhiyur_avadhani_sarithamமுதல் தமிழ் நாவல் எது என்று கேட்டால் நாம் எல்லாரும் “பிரதாப முதலியார் சரித்திரம்” என்றுதான் சொல்வோம். ஆனால் சிட்டி-சிவபாதசுந்தரம்ஆதியூர் அவதானி சரிதம்” என்ற நாவலை முதல் தமிழ் நாவல் என்று குறிப்பிடுகிறார்கள்.

பிரதாப முதலியார் சரித்திரம் 1879-இல் வெளியானது. ஆதியூர் அவதானி சரிதம் 1875-இலேயே வெளியாகிவிட்டதாம். முதல் பதிப்பிற்கு ஒரே ஒரு xerox எடுக்கப்பட்ட பிரதிதான் இருக்கிறதாம் – அதுவும் லண்டனின் பிரிட்டிஷ் ம்யூசியத்தில். அதை சிவபாதசுந்தரம் பார்த்து நகல் எடுத்திருக்கிறார். பிறகு சிட்டியும் அவரும் சேர்ந்து 1994-இல் மறுபதிப்பாக வெளியிட்டிருக்கிறார்கள்.

இது வித்வான் சேஷையங்கார் என்பவர் எழுதியது. இவர் பேராசிரியராக இருந்தாராம்.

சிட்டி-சிவபாதசுந்தரம் இதைப் பற்றி எழுதிய விளக்கம் மற்றும் கதைச் சுருக்கத்தை இங்கே படிக்கலாம். வசதிக்காக சிட்டி எழுதிய கதைச் சுருக்கத்தின் சுருக்கத்தை இங்கே பதித்திருக்கிறேன்.

பாண்டிச்சேரி அருகில் ஆதியூர் என்னும் கிராமத்தில் உத்தமன் என்ற பிராமணக் குடும்பத் தலைவன் இறந்துவிட மனைவி காந்தாரியும் மகன் வினையாளனும் பல கஷ்டங்களை அனுபவித்தாலும் மகன் பச்சையப்பன் பள்ளியில் அடிப்படைக் கல்வியும் பிறகு மருத்துவக் கல்வியும் கற்றுத் தேர்கிறான். படித்து முடித்த பிறகு வினையாளன் அவதானி என்று அழைக்கப்படுகிறான். பிணங்களை அறுக்கும் பணியை செய்வதை உறவினர்கள் எதிர்க்கிறார்கள். அம்மாவும் ஜாதிப்பிரஷ்டம் ஆகிவிடுமோ என்று பயப்படுகிறாள். நடுவில் திருமண ஏற்பாடு. மணமகளின் பெற்றோர்கள் பேராசையுடன் அதிகத் தொகை கேட்கிறார்கள். இதன் விளைவாக அவதானி பெரிதும் கடன்படுகிறான். உறவினர் தொல்லையால் அவதானி அவதிப்படுகிறான். சென்னையில் தேவதத்தை என்ற க்ஷத்திரிய குல கைம்பெண் ஒருத்தியோடு நட்பு, அது காதலாக மாறுகிறது. எல்லாரும் எதிர்ப்பையும் மீறி தேவதத்தை எல்லார் மனதையும் கவர்கிறாள், விதவையை இரண்டாம் தாரமாக மணப்பதுடன் கதை முடிகிறது.

1875-இல் விதவை விவாகம். புரட்சிதான்.

சிட்டி-சிவபாதசுந்தரத்துக்கு முன்னரே இதுதான் முதல் தமிழ் நாவல் என்று ஜெ. பார்த்தசாரதி என்பவர் 1976-இல் இதைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறாராம்.

நூல் உரைநடையாக எழுதப்படவில்லை, பாடல் வடிவில் எழுதப்பட்டிருக்கிறது. இருந்தாலும் இதை நாவல் என்றே சிட்டி-சிவபாதசுந்தரம் சொல்கிறார்கள். அப்படிப் பார்த்தால் சிலப்பதிகாரத்தைக் கூட நாவல் என்றே சொல்லிவிடலாம் என்று ஒரு எண்ணம் எழுகிறது. ஆனால் சிட்டி-சிவபாதசுந்தரமே வாதிடுவது போல verse வடிவத்தில் எழுதப்பட்ட Golden Gate புத்தகத்தை நாவல் என்று அனைவரும் ஏற்கிறோம். இன்னொரு உதாரணம் வேண்டுமென்றால் மனோன்மணீயம் பாடல் வடிவில் இருப்பதால் அது நாடகம் இல்லை என்று யாரும் சொல்வதில்லை. சேஷையங்காரே இது நாவல் என்று சொல்லி இருப்பதால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான் என்று நினைக்கிறேன்.

நீங்களே இது நாவலா இல்லையா என்று முடிவு செய்து கொள்ளுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாவல்கள், References

தொடர்புடைய சுட்டிகள்: ஹிந்து பத்திரிகையில் ஆதியூர் அவதானி சரிதம் பற்றி பெருமாள் முருகன்

1775இல் எழுதப்பட்ட தமிழ் உரைநடைக் கதை

அடுத்த தீமாக முன்னோடி முயற்சிகளை வைத்துக் கொள்கிறேன்.

venkat_swaminathanபரமார்த்த குரு கதைக்குப் (1740) பிறகு தமிழ் உரைநடையில் கதை என்றால் பிரதாப முதலியார்தான் என்று நினைத்திருந்தேன். வெ.சா.வின் ஒரு கட்டுரையின் மூலம் முத்துக்குட்டி ஐயர் 1775-ஆம் ஆண்டு சிவராத்திரி அன்று ஒரு உள்ளூர் ராஜா தூங்காமல் இருக்க ஒரு கதையை சொல்லி இருப்பதாகத் தெரிந்து கொண்டேன். இரா. முருகன் அந்தக் கட்டுரையை மீள்பதித்திருக்கிறார். அருமையான கட்டுரை. கட்டாயம் படித்துப் பாருங்கள்!

1775-இல் சிவகங்கை அரசர் தன் சமஸ்தானப் புலவர் முத்துக்குட்டி ஐயரை சிவராத்திரி அன்று இரவு விழித்திருக்க ஒரு கதை சொல்லும்படி சொன்னாராம். அது வாய்மொழியாகவும் சுவடிகளாகவும் தலைமுறைகளைக் கடந்திருக்கிறது. சிட்டி-சிவபாதசுந்தரம் தங்கள் ‘தமிழ் நாவல் நூறாண்டு வளர்ச்சி‘ (1977)-இல் இதைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்கள். வெ.சா. இதைப் பதிப்பிக்க விரும்பி இருக்கிறார், கடைசியில் சிட்டியே இதை “கண்டெடுத்த கருவூலம்” (2006) என்ற தொகுப்பில் வெளியிட்டிருக்கிறார்.

பெருமாள் முருகன் இதைப் பற்றி எழுதிய கட்டுரையில் சொல்கிறார்:

இந்த நூலைக் கண்டுபிடித்தவர் ஈழத்தைச் சேர்ந்த சிவபாதசுந்தரம் அவர்கள். கிரௌன் வடிவில் 76 பக்கங்களைக் கொண்டிருந்த இந்நூலை ஈழத்தில் பழைய புத்தகக் கடை ஒன்றில் சிதைந்த நிலையில் அவர் வாங்கினார். தம் உதவியாளரைக் கொண்டு உடனடியாகப் படி எடுத்தும் வைத்தார். மூலக்கதையை மட்டுமே அவ்வாறு எழுதி வைத்தார். அந்நூலில் இருந்த முக்கியத்துவம் வாய்ந்த சாற்றுகவிகள், முன்னுரைகள் ஆகியவற்றைப் படி எடுக்க இயலவில்லை. அவரும் அவருடன் இணை சேர்ந்து நூல் எழுதுபவரான சிட்டி என்னும் பெ.கோ.சுந்தர்ராஜனும் இந்நூலைப் பதிப்பிக்க எண்ணி 1980ஆம் ஆண்டே முன்னுரை எழுதித் தயார் செய்துள்ளனர். ஆனால் நூல் வெளியிடப்படவில்லை. சிவபாதசுந்தரத்தின் இறப்பிற்குப் பிறகு அவருடைய நினைவுக்குக் காணிக்கையாக்கி இந்நூலையும் சிலப்பதிகார ஆராய்ச்சி என்னும் கட்டுரைத் தொகுப்பையும் இணைத்துக் ‘கண்டெடுத்த கருவூலம்’ (வாணி பதிப்பகம், கோவை) என்னும் தலைப்பில் 2004ஆம் ஆண்டு சிட்டி அவர்கள் வெளியிட்டுள்ளார்.

வெ.சா. ‘கண்டெடுத்த கருவூலம்’ 2006இல் வெளி வந்தது என்கிறார், பெ.மு. 2004-இல் என்கிறார். எது சரியோ தெரியவில்லை.

வசதிக்காக வெ.சா.வின் கட்டுரையை மீண்டும் இங்கே பதித்திருக்கிறேன். கடைசியில் சில வரிகளைக் காணவில்லை.

‘தமிழ் நாவல் நூறாண்டு வளர்ச்சி’ என்ற நூல் 1977இல் வெளிவந்தது, தமிழின் முதல் நாவல் என்று கருதப்படும் மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம் வெளியான ஆண்டு 1876 என்ற கணிப்பில், தமிழ் நாவல் இலக்கியம் பிறந்து நூறாண்டுகள் ஆகிவிட்டன. அது மிக முக்கியமான நூல். சிட்டியும் சிவபாதசுந்தரமும் இணைந்து எழுதியது. அது பல முக்கியமான, அன்று வரை தெரிந்திராத பல நீண்ட உரைநடை நூல்களைப் பற்றிய தகவல்களையும் வெளிக்கொணர்ந்தது. அவற்றில் மிக முக்கியமானது, மிகவும் சுவாரஸ்யமானது, முத்துக் குட்டி ஐயர் என்னும் சிவகங்கை மன்னரின் ஆஸ்தான புலவர் வாய்மொழியாகச் சொன்ன கதை. இது நடந்தது 1775ஆம் ஆண்டு ஒரு சிவராத்திரி இரவு. சிவகங்கை மகாராஜா, இரவிகுல முத்துவடுகநாத பெரிய உடையாத்தேவர் (1750þ1780) தம் சமஸ்தானப் புலவர் முத்துக்குட்டி ஐயரை அழைத்து, சிவராத்திரி அன்று தாமும் சமஸ்தானாதிபதிகளும் இரவு முழுதும் விழித்திருக்க ஒரு கதை சொல்ல வேண்டும் என்றுபணித்தார். அக்கதை அதற்கு முன் யாரும் சொல்லப்படாததாக இருக்க வேண்டும், தெய்வ பக்தி உணர்வும், சிவராத்திரி முக்கியத்துவம் உணர்த்துவதாகவும், 56 தேசங்களும், அவற்றின் இடங்களும் தாவரங்களும் விலங்குகளும் இடம்பெறுவதாக அக்கதை இருக்க வேண்டும் என்பதும் சிவகங்கை மன்னரின் நிபந்தனைகள்.
மகாராஜா கதை கேட்க விரும்பியதோ, அதற்கு தம் ஆஸ்தானப் புலவரைப் பணித்ததோ, நிபந்தனைகளோ நம்மை ஆச்சரியப்படுத்தும் விஷயங்கள் அல்ல. எல்லாம் மரபுப்படிதான் நடந்துள்ளன. ஆனால் முத்துக்குட்டி ஐயர் மன்னரின் நிபந்தனைகளையும் நிறைவேற்றினார், அத்தோடு கேட்ட கதையையும் தம் வழியில்தான் சொன்னார். அந்த வழியும் அக்கதையின் சொல்முறையும் கதை பெற்ற வடிவமும் தமிழ் மரபில் முன்னும் இருந்ததில்லை. பின்னும் இருக்கவில்லை. மரபு சார்ந்து புதுமை செய்யும் சமாச்சாரமாகத்தான் அது இருந்தது. இத்தகைய ஒரு புதுமை நோக்கு, சிவகங்கை சமஸ்தானத்தின் இன்று நாட்டரசன்கோட்டை என்று அறியப்படும் அந்நாளைய தென்பளசை என்னும் கிராமத்து முத்துக்குட்டி ஐயருக்கு 1775 அந்த சிவராத்திரி இரவில் எப்படித் தோன்றியது?
விவரமாகச் சொல்லவேண்டும். சிவகங்கை, ராமநாதபுரம் எல்லாம் என்றென்றைக்கும், முத்துக் குட்டி ஐயரின் காலத்திலிருந்து இன்று வரை கூட வறட்சிக்கும், மழை பொய்ப்பதற்கும், வறுமைக்கும் பெயர் போனது. பஞ்சம் பிழைக்க, பின் நூற்றாண்டுகளில் இப்பகுதி மக்கள், இலங்கை,மலேசியா, ஃபிஜி, கயானா, தென் ஆப்பிரிக்கா நாடுகளின் கரும்பு, தேயிலைத் தோட்டங்களில் கூலி வேலை செய்யக் கடல் கடந்து சென்றது நமக்குத் தெரியும். முத்துக்குட்டி ஐயரின் காலத்தில் ஏற்பட்ட வறட்சியையும் மக்கள் தவிப்பையுமே தம் கதைப் பொருளாக்கினார் புலவர். அவ்வறட்சியை நேராகக் கதை சொல்லும் சமாச்சாரம் ஆக்கவில்லை புலவர்.
அவரது கதையில் தாவரங்கள், மேகங்கள், புல் பூண்டு, விலங்குகள், நட்சத்திரங்கள், கிரகங்கள் மனித உடலின் பாகங்கள் எல்லாமே மனித கதாபாத்திரங்களாகின்றன. வருட மழை பொழிதல், மேகவண்ண சேர்வைக்காரன் (மேகங்கள்) செலுத்தும் வருஷக் கட்டளையாகிறது. மன்னனிடம் சென்று மக்கள் தம் கஷ்டங்களை முறையிடுகிறார்கள். ஒப்பந்தப்படி கட்டளை செலுத்தத் தவறிய மேகவண்ண சேர்வைக்காரனைச் சிறையிலடைக்க மன்னர் உத்தரவிடுகிறார். மேகவண்ணச் சேர்வைக்காரன் கட்டளை தவறியதற்கு காரணங்கள் தயாராக இருக்கின்றன. அவனது மேல்காரியகர்த்தாக்களான ஆதித்தமய்யன் (சூர்யன்), சோமசுந்தரமய்யன் (சந்திரன்) இருவருக்கும் அவர்களது கஷ்டங்கள்: ஆதித்தமய்யனுக்கு கரியமாணிக்கம் (சனி) என்றொரு புத்திரன் அவன் யாரை வந்து பற்றினாலும் படாதபாடெல்லாம் படுத்திப் பின்னர் சந்தோஷப்படுத்துவார். சோமசுந்தரனுக்கு அடுத்த வீட்டுக்காரன் மங்களேஸ்வய்யர் (செவ்வாய்) குரூர புத்திக்காரன்… இப்படி போகிறது கதை
இனி சொல்முறையைக் கவனிக்க வேண்டும்: மாதிரிக்கு சில வரிகள்;
“இப்படியிருக்கிறபடியினாலே ஆதித்தமய்யன் முதல் ஒன்பது வீட்டுக்கார கிரஹஸ்தாளும் ஒன்றுக்கொண்று விகாரத்தால் வக்கரித்துக்கொண்டிருக்கையில் இவர்களை மிஞ்சி நாம் அங்கே போகக்கூடாதென்று மேல மேற்குடி மேகணன் சேர்வைக்காரன் புறம் சற்றே பின்னுக்கு வாங்கியிருக்கிறார்கள். இவர்கள் ஒருவருக்கொருவர் விரோதமில்லாமல் அவரவர் எதாஸ்தானங்களில் வந்து சுபிட்சமானதன் பேரில், அனுபவித்துக் கொள்வோம் என்று மேகணன் சேர்வைக்காரன் இந்தத் தவணைக்கு வராமலிருகிறானென்று அவ்விடத்துக் காரியம் சீக்கிரத்திலே சமரஸத்துக்கு வரும், அதற்குப் பிறகு வருவானென்று வேதியங்குடியார் சொன்னார்கள்.”
கிரகங்கள் சரியில்லாததன் காரணத்தால், இந்த தோஷங்கள் நீங்கியபின் பார்த்துக்கொள்ளலாமென்று இருந்த காரணத்தால் இந்த வருடம் மழை பெய்யவில்லை என்று அரண்மணை ஜோஸ்யர்கள் சொன்னார்கள் என்பது பொருள்.
இது பற்றி சிட்டியின் “தமிழ் நாவல் நூறாண்டு வரலாறும் வளர்ச்சியும்” புத்தகத்தில் இது கண்டெடுக்கப்பட வரலாறும் செய்திகளும் சொல்லப்பட்டிருக்கின்றன.
‘வசன சம்பிரதாயக் கதை’ என்ற பெயரில் இப்போது அறியப்படும் இக்கதை, 1775 ஆண்டு சிவராத்திரி இரவு வாய்மொழியாக முத்துக்குட்டி அய்யரால் மன்னர் பின் அவதானிகள் முன்னிலையில் சொல்லப்பட்டது. இதற்கு முன் வசன வடிவில் எழுதப்பட்டது, 1740ஆம் ஆண்டு வீரமாமுனிவரின்அவிவேக பரமார்த்த குருவும் சீடர்களும்” ஆனால் அது அச்சில் வெளியிடப்பட்டது 80 வருடங்கள் கழித்து 1820இல்.
முத்துக்குட்டி ஐயரின் காலத்தில் வீரமாமுனிவரின் நூல் ஐயருக்குக் கிடைத்திருக்குமா என்பது தெரியாது. ஆனாலும், வீரமா முனிவரின் நேரிய எளிய கதை சொல்லும் முறையும், முத்துக் குட்டி அய்யரின் உருவக வடிவிலான கதை சொல்லலும் முற்றிலும் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை. மேலும், வீரமாமுனிவரின் இத்தாலிய ரோமன் கதோலிக்க கிறிஸ்துவம் அவர் காலத்திய குருகுல கல்வி முறையைக் கேலி செய்யஅவிவேக பரமார்த்த குரு கதையை சிருஷ்டித்தது.
முத்துக்குட்டி ஐயர் சம்பிரதாயத்தில் மூழ்கியிருப்பவர். உலகப் பார்வை மட்டுமல்ல, அவரவர் கையாண்ட தமிழ் வசனமும் வேறுபட்டது. எது என்னவாக இருந்தாலும், முத்துக்குட்டி ஐயருக்கு மட்டுமல்ல, வெகு காலத்திற்குப் பரமார்த்த குரு கதை தமிழருக்குத் தெரியாமலேயே இருந்தது என்றுதான் சொல்லவேண்டும். பிறகு ஒரு வசன கதை உருவாக்கம் கிடைக்க 1879இல் வேதநாயகம் பிள்ளை பிரதாப முதலியார் சரித்திரம் வெளிவரும்வரை காத்திருக்க வேண்டியிருந்தது. அதுவும் நகைச்சுவையில் தோய்த்து எடுக்கப்பட்ட கதைதான். ரொம்ப காலத்திற்குத் தமிழனைச் சிரிக்க வைத்தால்தான் அவன் கதை கேட்கச் சம்மதிப்பான் போலத் தோன்றுகிறது. முத்துக்குட்டி ஐயர், தான் கதை பண்ணும்போது இந்த மசாலாவைச் சேர்க்க மறக்கவில்லை.
—————-
கதையை முத்துக் குட்டி ஐயரிடம் வாய் மொழியாகக் கேட்டவர் அதைச் சுவடிகளில் எழுதி வைத்தனர். சமஸ்தான ஊழியத்தில் இவர்களும் இருப்பார்கள்தானே. பின்னர் அது காணாமல் போயிற்றாம். ஆனால் நாகுபாரதி என்பவர் இவர் இசைப் புலவர் குஞ்சர பாரதியின் சகோதரர் முத்துக்குட்டி ஐயர் சொன்னபடியே மனப்பாடமாக நினைவில் வைத்திருந்தவர். அவரிடமிருந்து அக்கதை முழுதும் கேட்டுப் பிரதி செய்து, தமது நண்பர் ராமசாமி தீட்சிதரின் உதவியுடன் வசன சம்பிரதாயக் கதை என்ற தலைப்பில் 1895ஆம் ஆண்டு திருவையாற்றில் வெளியிட்டார் என்று தகவல் தருகிறார் சிட்டி. ஆக, வாய்மொழியாகச் சொல்லப்பட்ட கதை ஒன்று அச்சில் பதிவாக, 120 வருடங்கள் ஆயிருக்கின்றன. அதன் பின்னரும் அது பற்றி யாரும் பேசியதில்லை. அறிந்ததில்லை. கடைசியில் அது பற்றி நாம் அறிய சிட்டியும் சிவபாத சுந்தரமும் அதை வரலாற்றின் ஆழ்குழியிலிருந்து தேடி வெளிக்கொணர இன்னம் ஒரு 85 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன.
‘தமிழ் நாவல்: நூற்றாண்டு வரலாறும் வளர்ச்சியும்’ புத்தகத்தில் இந்த விவரங்களோடு கதையிலிருந்து இரண்டு பாராக்களும் மாதிரிக்குக் கொடுக்கப்பட்டிருந்தன. அதைப் பார்த்ததும் எனக்கு அந்த நூல் முழுதையும் வெளியிடவேண்டும் என்று தோன்றிற்று. அப்போது என் பொறுப்பில் ‘யாத்ரா’ என்ற பத்திரிகை இருந்தது. நான் சிட்டிக்கு எழுதினேன். வசன சம்பிரதாயக் கதைப் புத்தகத்தின் பிரதியை அவர் அனுப்பிவைக்கக் கூடுமானால், அது முழுதையும் யாத்ரா பத்திரிகையில் வெளியிடலாம், இனியும் அது யாரும் அறியாத, படித்திராத, மாயப் பொருளாக இருக்க வேண்டியதில்லை என்று கேட்டிருந்தேன். அப்போது சிட்டிக்கு அது புத்தகமாக வெளிவரும் சாத்தியக்கூறுகள் இருப்பதாகச் சொன்னார். இது நடந்தது 1980களில். அது துரதிருஷ்டவசமாக நடக்கவில்லை. பெரும்பாலான சாத்தியக் கூறுகள் தமிழ் சமூகத்தில் எழுத்தாளன்முன் கைக்கெட்டும் தூரத்துக்கு சற்று அப்பால் தொங்கும் காரட்தான். இதில் நான் செய்யக்கூடியது ஏதும் இல்லை.
கடைசியாக ‘கண்டெடுத்த கருவூலம்‘ என்ற தலைப்பில் வசன சம்பிரதாயக் கதையும் அது போன்று 1898இல் ஞானபோதினி என்ற இதழில் பி. ஏ. பிரணதார்த்திஹரசிவ ஐயர், பி.ஏ. எல்.டி. அவர்கள் எழுதிய சிலப்பதிகார ஆராய்ச்சி என்னும் இதுவரை வெளித்தெரியாத சிலப்பதிகார ஆராய்ச்சி நூலையும் சேர்த்துப் பிரசுரிக்க முடிந்திருக்கிறது சிட்டியினால். ஆக, பிரதி கிடைத்த பிறகும் வசன சம்பிரதாயக் கதையை அச்சிட ஒரு தமிழ் பிரசுரம் தேடிக் கண்டுபிடிக்க 25 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன. சிலப்பதிகார ஆராய்ச்சிக்கோ 106 ஆண்டுகள் தவமாக அது நீண்டுள்ளது. வாழ்க தமிழ்! வளர்க தமிழரின் ஞானத் தேட்டை!
இதில் இன்னுமொரு சுவாரஸ்யமான விஷயம், உ.வே. சாமிநாதய்யரது சிலப்பதிகாரப் பதிப்பு அச்சான வருடம் 1872, அதன் பின் நமக்குத் தெரிய வந்த முதல் ஆராய்ச்சி நூல் பிரணதார்த்திஹரசிவ ஐயரது தான். அது பற்றி நமது முனைவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகளில் இதன் தலைப்பு குறிப்பிடப்பட்டிருக்கிறதே தவிர யாரும் இதைப் படித்தவரில்லை. அது படிக்கக் கிடைத்திருப்பது இப்போது 106 ஆண்டுகளுக்குப் பிறகு,சிட்டியின் முயற்சியின் பேரில், அவரது 94ஆவது வயதில். இதுதான் அவரது ள்ஜ்ஹய் ள்ர்ய்ஞ். இன்று அவர் இல்லை. சில நாட்கள் முன்பு அவர் மறைந்துவிட்டார்.
இது வெளியானதும், சிட்டி எனக்கு ஒரு பிரதி அனுப்பி வைத்து, எழுதுகிறார். “இந்த முயற்சியின் ஆரம்பத்திலிருந்தே வசன சம்பிரதாயக் கதையில் ஆர்வம் காட்டிய வெங்கட் சாமிநாதனுக்கு, அன்புடன் சிட்டி” என்று எழுதி அனுப்பியுள்ளார். 26 வருடங்களுக்கு முன் அவரிடம்இது பற்றித் தொடர்பு கொண்டதை நினைவில் வைத்திருந்து, தனது 95ஆவது வயதில் கைப்பட எழுதுகிறார் சிட்டி.
இப்போது வசன சம்பிரதாயக் கதை முழுதும் என் கையில். முன்னர் இரண்டு பாராக்களே கிடைத்த இடத்தில் இப்போது புத்தகம் முழுதும்.
கதையைச் சுருக்கமாக சொல்லலாம். வறட்சி பற்றிய செய்தி கிடைத்ததும், அதற்கான பரிகாரங்கள் செய்ய வேண்டியது என்ன என்று விசாரித்து அப்பரிகாரங்கள் செய்து, சமஸ்தானத்தில் மழை பெய்கிறது. பயிர்கள் செழித்து, மக்களும், ஆடு மாடுகளும் வயிறார உண்டு மகிழ்ச்சி அடைகின்றன. இப்படிக் கதை கேட்கக் கூடாது. முத்துக் குட்டி ஐயரின் வாய் மொழியாக அவர் பாஷையில் கேட்கவேண்டும். பஞ்சம் பற்றியும் மக்கள் தவிப்பும், வறட்சியும், பின்னர் மழை பொழிவது, மக்கள் மகிழ்ச்சியும். கடைசியாக இவ்வளவு சுபிட்சத்தையும் கடாட்சித்த மன்னரின் புகழ் பாடப்படுகிறது. இது சுமார் ஒன்றரைப் பக்கத்துக்கு நீள்கிறது. மாதிரிக்குச் சில வரிகள்:
“அடியேங்களை இந்தப்படி வரிசைகுடிகளாக வைத்து ஆதரிக்கிற இராஜவர்க்கங்கள் மகாவிஷ்ணு பிம் பமென்கிறது சுபாவமே. அதுவல்லாமல் ஒருநிதானத்திலே எங்கள் துரையவர்கள் ஸ்ரீமது ராஜமானிய ராஜ ஸ்ரீ சிவகங்கை கர்த்தாக்கள் தங்களுக்கு அதிகமென்று சொல்லலாம். அதெப்படியென்றால் தாங்கள் ஆதி பரமேஸ்வரனை நோக்கித் தபசு பண்ணுகிறபோது போன கண்ணுக்குப் பொற்கண் வெகுமதி வாங்கினீர்கள். அடியேங்கள் துரையவர்கள் அந்தப் பரமேஸ்வரனுக்கு கண்ணுக்குக் கண்ணாயிருக்கிற சூரிய வங்கிஷத்திலே பிறந்தவர்களானதினாலே எங்கள் துரையவர்கள் அதிகம். ….
இந்த மாதிரியாக, சிவகங்கை சமஸ்தானாதிபதி இரவிகுல முத்துவடுகநாத பெரிய உடையாத்தேவர், பிரமனுக்கும், விஷ்ணுவுக்கும் சிவனுக்கும், இன்னம் உள்ள தேவர்கள் தேவதைகளுக்கெல்லாம் பெரியவர், ஒப்பீட்டில் இந்த கடவுளர்கள் எல்லாம் முத்துவடுகநாத பெரிய உடையாத்தேவருக்கு சிறியவர்கள்தாம் என்பதை ஒன்றரைப் பக்கத்துக்குக் காரணங்களை அடுக்கிச் செல்கிறார் முத்துக்குட்டி ஐயர்.
கடைசியில், “இத்தனை பேரும் எங்களுக்குச் சகாயமானபடியினாலே அடியேங்களும் சுகமாயிருக்கிறோம். சுவாமியவர்கள் பரிநாமத்திலே இருக்கிற சேதிக்கும் அடியேங்கள் செய்யும் பணிவிடை ஊழியத்திற்கும் இது புத்தியென்று திருமுகம் பாலிட்டருள கட்டளையிட்டருள வேண்டியது. ஆகையாலே விண்ணப்பம்.”
மற்றவை எப்படியோ, இந்த கடைசி தோத்திரமாலை நம் இரண்டாயிர வருட மரபு சார்ந்ததே. சங்கப் பாடல்களில் கணிசமானஎண்ணிக்கையில் இப்படி புலவர் பெருமக்கள் பரிசு வேண்டி மன்னரைப் புகழ்ந்து பாடுதற்கு ஒரு எல்லை இருந்ததில்லை. அது முத்துக்குட்டி ஐயரிடமும் காணப்படுகிறது, ஒரு மரபு சிறப்பாகப் பேணப்பட்டு வருவதையே சாட்சியப்படுத்துகிறது. இந்த மரபு சிறிது சிதைவுறாமல், இன்று வரை, அதாவது 2006


தொகுக்கப்பட்ட பக்கம்: References

மொழிபெயர்ப்பாளர்கள்

கௌரி, மதுரம் தளம் என்று மொழிபெயர்ப்புகளைப் பற்றி இரண்டு பதிவு வந்துவிட்டது. மொழிபெயர்ப்பாளர்களோடு இந்த தீமை முடித்துக் கொள்கிறேன்.

kaa_sri_sriசிறு வயதில் ஒரு காலகட்டத்தில் தமிழில் எதுவும் எனக்குப் படிக்கும்படி இல்லை. வாண்டு மாமாவைக் கடந்திருந்தேன். கையில் கிடைத்த அத்தனை சாண்டில்யன் புத்தகங்களையும் முடித்திருந்தேன். வாரப்பத்திரிகைகளின் தொடர்கதைகள் போரடித்தன. அப்போது அத்தி பூத்த மாதிரி ஒரு பேரிலக்கியம் கையில் கிடைத்தது – யயாதி. காண்டேகரின் பெயர் அளவுக்கே அதை மொழிபெயர்த்த கா.ஸ்ரீ.ஸ்ரீ.யின் பெயரும் மனதில் பதிந்தது. கா.ஸ்ரீ.ஸ்ரீ. மொழிபெயர்ப்புகளை எங்கள் கிராம நூலகத்தில் தேட ஆரம்பித்தேன்.

tha_naa_kumarasamiஇத்தனை வருஷங்கள் கழித்து அன்றைய மொழிபெயர்ப்பாளர்களை நன்றியுடன் நினைவு கூர்கிறேன். மராத்திக்கு கா.ஸ்ரீ.ஸ்ரீ. என்றால் த.நா. குமாரசாமியோ சேனாபதியோ இல்லை இருவருமோ மொழிபெயர்த்த நூல்கள் மூலம்தான் எனக்கு வங்க இலக்கியம் அறிமுகமானது. பத்து பதினோரு வயது வாக்கில் பங்கிம் சந்திரரின் ஆனந்தமடம் எனக்கு மிகவும் பிடித்திருந்ததை – அதுவும் பவானந்தன், சாந்தானந்தன் மாதிரி பேர்களே exotic ஆக இருந்தது இன்னும் மறக்கவில்லை. சரஸ்வதி ராம்நாத் மூலம்தான் ப்ரேம்சந்தை முதன்முதலாகப் படித்தேன் என்று நினைவு.saraswati_ramnath உலக இலக்கியங்கள் சிலவற்றை – டிக்கன்ஸ், ஸ்டீவன்சன், ஜார்ஜ் எலியட், மார்க் ட்வெய்ன், செகாவ், கார்க்கி எல்லாரையும் மொழிபெயர்ப்புகள் மூலம்தான் முதன்முதலாகப் படித்தேன். அந்த வயதில் உலக இலக்கிய மொழிபெயர்ப்புகள் அபூர்வமாகவே என்னைக் கவர்ந்தன. என்றாலும் இன்று மொழிபெயர்த்தவர்கள் யாரென்று சுத்தமாக நினைவில்லை என்பதை கொஞ்சம் இழிவுணர்ச்சியோடு ஒப்புக் கொள்ள வேண்டி இருக்கிறது.

pe_naa_appusamiமொழிபெயர்ப்புக்கான குறுகிய காலத் தேவையும் உண்டு. Topical நிகழ்ச்சிகளை, புத்தகங்களை குறிப்பாக பிற அறிவுத்துறைகளுக்கான அறிமுகங்களை மொழிபெயர்த்தால் அவற்றுக்கான நீண்ட காலத் தேவை இல்லாமல் போகலாம். பெ.நா. அப்புசாமி மொழிபெயர்த்தாரா இல்லை அவரே எழுதினாரா என்று தெரியவில்லை, அவர்தான் பாடப்புத்தகங்களுக்கு அப்பாற்பட்ட அறிவியலை அறிமுகம் செய்தார். இன்றையத் தலைமுறையினருக்கு அவர் பேர் கூடத் தெரிய வாய்ப்பில்லை. குறுகிய காலத்தேவை எவ்வளவு விரைவாக மறக்கப்படும் என்பதற்கு அவர் எடுத்துக்காட்டாக இருக்கிறார். என்றாலும் ஒரு நூறு கிராமத்து சிறுவர்களுக்காவது அவர் அறிவியலில் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்க மாட்டாரா? என்றென்றும் என் நன்றிக்குரியவர்.

பாரதி கூட நிறைய மொழிபெயர்த்திருக்கிறாராம். அனேகமாக செய்திகளாக இருக்க வேண்டும். வெ. சாமிநாத சர்மாவும் humanities துறைகளில் நிறைய மொழிபெயர்த்திருக்கிறார் என்று தெரிகிறது.

அப்போதெல்லாம் ஆங்கிலத்தில் படிக்கும் வாய்ப்புகள் எனக்கு மிகக் குறைவு. சிறு வயதில் ஹிந்து பத்திரிகையில் கிரிக்கெட் மற்றும் செஸ் நிகழ்ச்சிகளைத் தவிர வேறு எதையும் நான் விரும்பிப் படித்ததாக நினைவில்லை. ஆங்கிலப் புத்தகங்களைப் படிக்க முடியுமா என்று ஒரு பயமும் இருந்தது. ஆனால் காலம் செல்லச் செல்ல ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புகள் சுலபமாகக் கிடைத்தன, சரளமாகப் படிக்கவும் முடிந்தது. தமிழ் மொழிபெயர்ப்புகளின் தேவை இல்லாமலே போயிற்று. இன்று சரளமாக பீட்டர் விடும் இளைஞர்களுக்கு தமிழ் மொழிபெயர்ப்புகளும், மொழிபெயர்ப்புகளின் குறுகிய காலத் தேவையும் இல்லையோ என்று கொஞ்சம் சந்தேகமாக இருக்கிறது. ஆனால் பிற இந்திய மொழிகளிலிருந்து தமிழில் மொழிபெயர்த்துப் படிப்பதுதான் சுகம். கன்னடமும் காஷ்மீரமும் மராத்தியும் மணிபுரியும் ஆங்கிலத்தை விட தமிழுக்கு நெருக்கமானவை. மூலத்தின் உணர்ச்சிகளை தமிழில் கொண்டு வருவதுதான் சுலபம்.

kulacchal_mu_yusufபாவண்ணன் (கன்னடத்திலிருந்து தமிழ், குறிப்பாக பைரப்பாவின் பர்வா), குளச்சல் மு. யூசுஃப் (மலையாளத்திலிருந்து தமிழ்), கௌரி கிருபானந்தன் (தெலுகிலிருந்து தமிழ், தமிழிலிருந்து தெலுகு). உலக மொழிகளில் நம்ம m_a_susilaசுசீலா மேடம் ரஷியனிலிருந்து தமிழ் (டோஸ்டோவ்ஸ்கியின் Idiot, Crime and Punishment). இவர்கள் நாலு பேரும் எனக்குத் தெரிந்து இந்தத் துறையில் பிரமாதப்படுத்துகிறார்கள். இன்றைய கா.ஸ்ரீ.ஸ்ரீ.யும் குமாரசாமியும் சரஸ்வதி ராம்நாத்தும் இவர்கள்தான் என்று நினைக்கிறேன். வேறு யாராவது? தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்!

தமிழுக்கு பிற மொழி ஆக்கங்களைக் கொண்டு வருவது ஒரு பக்கம் என்றால் தமிழிலிருந்து பிற மொழிகளுக்கு கொண்டு போவது இன்னொரு பக்கம். பொதுவாக நான் தமிழின் ஆங்கில மொழிபெயர்ப்புகளைத் தவிர்த்துவிடுவேன். எனக்கு ஆங்கிலத்தை விட தமிழ்தான் இன்னும் வசதி, விருப்பம். ஆனால் என்றாவாது ஏ.கே. ராமானுஜனின் மொழிபெயர்ப்புகளைப் படிக்க வேண்டும். அவர் ஒரு சஹிருதயராக இருப்பார் என்று தோன்றுகிறது.

தமிழிலிருந்து ஆங்கில மொழிபெயர்ப்புகளைத் தவிர்ப்பதால் எனக்கு இவற்றின் தரம் பற்றி அதிகம் தெரியாது. உண்மையைச் சொல்லப் போனால் சில பேர்கள் மட்டுமே தெரியும். ஜி.யூ. போப் மாதிரி வெள்ளைக்காரர்கள் நிறைய செய்திருக்கிறார்கள். கமில் சுவெலபில் தொ.மு.சி. ரகுநாதனின் “பஞ்சும் பசியும்” நாவலை செக்கோஸ்லோவகியன் மொழியில் மொழிபெயர்த்தது ஐம்பதாயிரம் பிரதிகள் விற்றதாம். ரகுநாதனின் மொத்தத் தமிழ் output-உம் ஐம்பதாயிரம் பிரதிகள் விற்றிருக்குமா என்று தெரியவில்லை. லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ரோம் என்ற பேரையும் கேள்விப்பட்டிருக்கிறேன். மதுரம் தளம் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. வேறு?

நல்ல மொழிபெயர்ப்பாளர்கள் யாரென்று தெரிந்தால் நண்பர்களுக்கு புத்தகங்கள் வாங்கிக் கொடுக்கலாம். உங்களிடமிருந்து ஏதாவது பரிந்துரைகள்?

தொகுக்கப்பட்ட பக்கம்: மொழிபெயர்ப்புகள்

மொழிபெயர்ப்புக்கு ஒரு தளம் – மதுரம்

சில நண்பர்கள், தெரிந்தவர்கள் சேர்ந்து மதுரம் என்ற ஒரு தளத்தைத் தொடங்கி இருக்கிறார்கள். தமிழ்ப் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கிறார்கள். என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

உருப்படியாக ஒரு காரியம் செய்வது ரொம்பக் கஷ்டம். அப்படி செய்பவர்கள் பொதுவாக எதையும் எதிர்பார்ப்பதில்லை. ஆனால் நல்ல முயற்சிகளை மனம் விட்டு உண்மையாகப் பாராட்டுவது அந்த முயற்சிகளின் ஆயுளை கொஞ்சமேனும் நீட்டிக்கிறது. கூடமாட சின்ன ஒத்தாசைகள் (நீங்களும் மொழிபெயர்க்கலாம், அறிமுகங்களை எழுதலாம்) செய்வது ஆயுளை இன்னும் கொஞ்சம் அதிகமாகவே நீட்டிக்கிறது. முடிந்தால் நீங்களும் உதவி செய்யலாமே!

தொகுக்கப்பட்ட பக்கம்: தொகுக்கப்பட்ட பக்கம்: மொழிபெயர்ப்புகள்

கௌரி கிருபானந்தனின் மொழிபெயர்ப்பு நூல்

Gowri_Kribanandanஜெயமோகனிடமிருந்து அடுத்த தீமுக்கு செல்ல நேரம் வந்துவிட்டது. இந்த வாரம் “அறிவிப்புகள்” – plugs for friends என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

கௌரி தமிழ் படைப்புகளை தெலுகுக்கும் தெலுகுப் படைப்புகளை தமிழுக்கும் ஓய்வில்லாமல் மாற்றி மாற்றி மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் தெலுங்கு பெண் எழுத்தாளர் ஒல்காவின் சிறுகதைத் தொகுப்பின் மொழிபெயர்ப்பு வெளியாகி உள்ளது. பாரதி புத்தகாலயம் வெளியிட்டு இருக்கிறார்கள்.

கௌரியின் வார்த்தைகளில்:

இவருடைய படைப்புகள் பெண்ணியம் மட்டுமே கொண்டவை அல்ல. பெண்களுடைய பிரச்சனைகளை, இரண்டாம் நிலையில் அவர்கள் நடத்தப்படும் முறையை, பெண்கள் தம்முடைய எண்ணங்களை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை தம் எழுத்துக்கள் மூலமாகத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இதுவரையில் ஒல்காவுடைய படைப்புகள் தமிழில்

  • மீட்சி
  • சுஜாதா
  • தொடுவானம் தொட்டுவிடும் தூரம்

என்ற தலைப்புகளில் வெளியாகி உள்ளன. கௌரி வெளிப்படையாகச் சொல்லவில்லை, ஆனால் அவற்றையும் கௌரியேதான் மொழிபெயர்த்திருக்கிறார் என்று யூகிக்கிறேன்.

பல மொழிகள் உள்ள நம் நாட்டில் கௌரியின் சேவை மிகவும் முக்கியமானது. அவருக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: கௌரி பக்கம்

பாரதி மகாகவியா இல்லையா?

bharathiஎனக்கு ஒரு இருபது இருபத்திரண்டு வயது இருக்கும்போது எனது நெருங்கிய மலையாளி நண்பன் ஸ்ரீகுமார் பாரதி பாரதி என்று தமிழர்கள் கொண்டாடுகிறீர்களே, எனக்கு ஒரு கவிதையை மொழிபெயர்த்து சொல்லேன் என்று கேட்டான். எனக்கு சட்டென்று நினைவு வந்த எல்லா கவிதைகளும் மொழிபெயர்த்தால் கவித்துவம் இழப்பதை ஒரு க்ஷணத்தில் உணர்ந்தேன். கூலி மிகக் கேட்பான், சூதர் மனைகளிலே, வெள்ளை நிறத்திலொரு பூனை என்று முயற்சி செய்து பார்த்து சரிப்படாது என்று அவனிடம் சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டேன். மொழியைத் தாண்ட முடியாதது நல்ல கவிதையா, நல்ல இலக்கியமா என்று முதன்முதலாக யோசனை வந்தது அப்போதுதான். பாரதி மகாகவியா இல்லையா என்ற சந்தேகம் வந்ததும் அந்த நொடியில்தான்.

ஆனால் பாரதி மகாகவியா இல்லையா என்று பேசும் மனநிலையும் அறிவு நிலையும் எனக்கில்லை. பாரதியின் கவிதைகளை என்னால் அறிவுபூர்வமாக அலச முடிவதில்லை. எனக்கு பாரதி பிடித்தமான கவிஞர், அவ்வளவுதான் சொல்ல முடியும்.

ஜெயமோகன் ரொம்ப நாளைக்கு முன்னால் (“என்னது? இந்திரா காந்தி செத்துட்டாரா!” அளவுக்கு முன்னால்) பாரதி மஹாகவிதானா என்று ஒரு விவாதத்தைத் தொடங்கினார். எனக்கு கவிதையே ததிங்கிணத்தோம்; இரண்டாவதாக உணர்வு பூர்வமான தாக்கம் உள்ள பாரதி பற்றி விவாதம். பற்றாக்குறைக்கு முன்னால்jeyamohan சொன்ன மாதிரி எனக்கே ஒரு சந்தேகமும் உண்டு. வாயை மூடிக் கொண்டிருந்துவிட்டேன்.

சரி நமக்குத்தான் கவிதை ததிங்கிணத்தோம், கவிதையை ரசிக்கும் எத்தனையோ பேர் இருக்கிறார்களே, அவர்களெல்லாம் இதற்கு என்ன பதில் சொல்கிறார்கள் என்று அப்போது இணையத்தில் அங்கும் இங்கும் மேய்ந்தபோது விட்டேனா பார் உன்னை, பாரதியை குறைத்து மதிப்பிட நீ யார், உன் அலெக்சா ரேட்டிங்கை உயர்த்தத்தான் இந்த வேலை செய்கிறாய், பாரதி மகாகவி என்று விளக்க வேண்டிய துரதிருஷ்டம் தமிழனுக்கு மட்டும்தான் என்று சில எதிர்வினைகள் கண்ணில் பட்டன. என்னைப் போலவே உணர்வுபூர்வமான அணுகுமுறை உள்ளவர்களோ என்று நினைத்தேன்.

இத்தனை காலம் கழித்து ஒன்றை உணர்ந்தேன். பாரதியின் கவிதைகளைத்தான் என்னால் அறிவுபூர்வமாக அலச முடியாது, அவர் மீது வைக்கப்படும் விமர்சனங்களின் அடிப்படையை – விமர்சனங்களை அல்ல, விமர்சனத்தின் தியரியை – அலசுவதில் ஒரு பிரச்சினையுமில்லை.

மகாகவி என்றால் என்ன நீங்கள் என்ன பொருள் கொள்கிறீர்கள்? பாரதி பெரும்பாலான தமிழர் கண்களில் உலக மகாகவி ஆக இருப்பதும் பாரதிதாசன் பாண்டிச்சேரிக் கவி கூட ஆகாததும் ஏன்? “பாரதி மகாகவியா இல்லையா?” என்று விவாதம் ஆரம்பித்தால் இதுதானே ஆரம்பப் புள்ளி? பாரதி மகாகவி என்பது axiomatic என்ற லெவலில் வாதிடுவது வெறும் hero worship. அது என்னவோ தமிழர்கள் தங்கள் நாயகர்களை icon-களாக மாற்றி அவர்களுக்குப் பின்னால் ஒரு ஒளிவட்டத்தை அழுத்தமாக அமைத்துவிடுகிறார்கள். அட அரசியல் காரணங்களுக்காக ஈ.வெ.ரா., அண்ணாதுரை, எம்ஜிஆர் பின்னால் இப்படி ஒரு ஒளிவட்டத்தைப் பொறுத்தினால் புரிந்து கொள்ள முடிகிறது. பாரதி, சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமலஹாசன், இளையராஜாவுக்கெல்லாம் ஏன்?

ஜெயமோகன் மஹாகவி என்பதற்கு ஒரு வரையறையைத் தருகிறார். அந்த வரையறையை வைத்து ஒரு தர வரிசையை உருவாக்குகிறார். அந்தத் தர வரிசைப்படி கம்பனுக்கு முதல் இடம், அவன்தான் மகாகவி, பாரதி இல்லை என்கிறார். அந்த வரையறையை ஏற்கமுடியாது, வேறு வரைமுறைதான் சரி; இல்லாவிட்டால் அந்த வரையறைப்படி பார்த்தாலும் பாரதி மகாகவிதான் என்று வாதாடுவது எதிர்வினை. நீ யாரடா பாரதியை மகாகவி இல்லை என்று சொல்ல என்பது எதிர்வினை இல்லை. அவரது கருத்தை மறுக்கலாம். அணுகுமுறையை எப்படி மறுக்க முடியும்?

ஜெயமோகனின் கருத்துகளோடு நீங்கள் வேறுபடலாம். கருத்து வேறுபாடு சர்வசாதாரணமான விஷயம். ஆனால் ஒரு மகாகவியிடம் நான் இன்னின்ன எதிர்பார்க்கிறேன், அவற்றை பாரதி எனக்குத் தரவில்லை (அல்லது தருகிறார்) என்ற அணுகுமுறையில் என்ன குறை காண்பது? என் எதிர்பார்ப்புகள் வேறு (அல்லது அதே எதிர்பார்ப்புகள்தான்), ஆனால் நீங்கள் சொல்லும் எல்லாவற்றையும் பாரதி எனக்குத் தருகிறார் என்று வாதிடுங்கள். அறிவுபூர்வமாக வாதிட முடியாத என் போன்றவர்களும் அடுத்த லெவலுக்குப் போக உதவியாக இருக்கும். நீ யாரடா பாரதியைப் பற்றிப் பேச, சினிமாவுக்கு வசனம் எழுதும் புல்லனே என்பதெல்லாம் ஒரு வாதமா?

என்னையே எடுத்துக் கொள்ளுங்கள். ஜெயமோகனின் கருத்தை மறுக்கவோ அல்லது ஏற்கவோ என்னால் முடியாது. ஏனென்றால் பாரதி என்று வந்தால் அங்கே என் தர்க்க அறிவு வேலை செய்வதில்லை. ஆனால் அவரது அணுகுமுறையை தர்க்கரீதியாக ஏற்றுத்தான் ஆக வேண்டும். என்ன, என் வரையறை வேறு. மகாகவி என்றால் எனக்கு என் மனதைத் தொடும் கவிதைகளை எழுதியவர், அவ்வளவுதான். இது மிகவும் subjective ஆன அணுகுமுறை. என் மனதைத் தொடும் கவிதை உங்கள் மனதைத் தொடாமல் போகலாம். “வானமகள் நாணுகிறாள், வேறு உடை பூணுகிறாள்” என்பது உங்கள் மனதை இன்னும் ஆழமாகத் தொடலாம். இந்த வரையறையை வைத்து அறிவுபூர்வமாகப் பேசுவதும் விவாதிப்பதும் கஷ்டம். எனக்கு மஹாகவி (அல்லது இல்லை), உனக்கு எப்படி இருந்தால் எனக்கென்ன என்று போக வேண்டியதுதான்.

புள்ளியியல் அணுகுமுறையை வைத்து நிறைய பேர் மனதைத் தொட்டிருக்கிறது, அதனால் பாரதி மகாகவி என்று சொல்பவர்கள் உண்டு. ஆனால் பாப்புலாரிட்டி என்பது மட்டுமே அளவுகோலானால் ரமணி சந்திரனுக்கு ஞானபீட விருது கொடுக்க வேண்டி இருக்கும். எனக்கு மகாகவி, நிறைய பேர் என்னைப் போலவே உணர்கிறார்கள் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். அது முக்கியமான அணுகுமுறையே; ஆனால் அது ஒரு ஆரம்ப கட்ட அணுகுமுறையாக மட்டுமே இருக்க முடியும்.

உயர்ந்த கவிதை என்றால் மொழி என்ற எல்லையைத் தாண்ட வேண்டும் என்று வரையறுத்தால் பாரதி ஃபெயில்தான். ஆனால் யார் பாஸ்? ஜெயமோகன் கம்பன் பாஸ் என்கிறார். நான் கம்பனை எல்லாம் விரிவாகப் படித்தவன் இல்லை. வாரணம் பொருத மார்பும் என்று சில சமயம் மேற்கோள் காட்டுவதற்கே ததிங்கினத்தோம். ஆனால் எனக்கு நினைவு வரும் நாலு வெண்பாக்களை மொழிபெயர்த்தால் – he looked, she looked என்றால் – அதில் எந்தக் கவித்துவமும் எனக்குத் தெரியவில்லை. பாரதிக்காவது அவரது வசன கவிதையை கவித்துவம் கெடாமல் மொழிபெயர்க்க முடியும்.

எனக்கு கவிதையின் கற்பூர வாசனை தெரியாது என்பதை இன்னொரு முறை அழுத்திச் சொல்கிறேன். என் வரையறை எனக்கு, ஜெயமோகனின் வரையறை அவருக்கு. என் வரையறைப்படி எனக்கு பாரதி மஹாகவி; அவர் வரையறைப்படி அவருக்கு அப்படி இல்லை. இதில் என்ன பிரச்சினை?

தொகுக்கப்பட்ட பக்கம்: பாரதி பக்கம்