இந்தக் கட்டுரையையும் விக்கிமூலத்தில்தான் பார்த்தேன். “ஆ” என்ற எழுத்து மீது என்ன கோபமோ, அது எப்போதும் வெட்டப்பட்டுவிடுகிறது. உறுத்துகிறது…
விக்கிமூலக் குழுவினருக்கு நன்றி! (அங்கும் திருத்திவிட்டேன்.)
மொழிபெயர்ப்பு நன்றாக இல்லை என்பதை சொல்லியாக வேண்டும். இருந்தாலும் வெ.சா.வின் எழுத்துக் கூர்மை தெரிகிறது.
கட்டுரை 1989-இல் எழுதப்பட்டது என்று தெரிகிறது. வ.ரா.வின் பல பரிமாணங்களை வெ.சா. நமக்குப் புரிய வைக்கிறார். ஆனால் பாரதிக்கு சமமான ஆகிருதி என்பது எனக்கு உயர்வு நவிற்சியாகத்தான் தெரிகிறது. அவரைப் போலவே சீரான நடை கொண்டவர்களாக திரு.வி.க., வெ. சாமிநாத சர்மா, கல்கி என்று பலர் இருந்திருக்கிறார்கள்.
வ.ரா.வின் “நடைச்சித்திரம்” புத்தகம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. மஹாகவி பாரதியார் என்ற புத்தகமும் அருமையான ஒன்று. இணையத்தில் கிடைக்கிறது.
வ. ரா. வின் நூற்றாண்டு நினைவில்
வெங்கட் சாமிநாதன்
தமிழ் நாட்டைப் பீடித்திருக்கும் மிக மோசமான துர்ப்பாக்கியம், கடந்த நாற்பது வருடங்களுக்கும் மேலாக தமிழ் நாடு முழுதுமையே ஆக்கிரமித்துக் கொண்டு அதை தம் தரங்கெட்ட செல்வாக்கினால் கெடுத்துக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளும் சினிமாக்காரர்களும்தான். இந்த இரண்டு சக்திகளும் விளைவித்திருக்கும் கலாச்சார, அறிவார்த்த சீரழிவை தமிழ் மக்கள் மிகுந்த ஆரவாரத்தோடும் மகிழ்ச்சியோடும் வரவேற்று வருகிறார்கள். வருடங்கள் கழிகின்றன. சீரழிவும் நாளுக்கு நாள் பெருக, அதற்கேற்ப மக்களின் இன்னும் அதிக உற்சாகத்தோடு அதை வரவேற்று மகிழ்கின்றனர்.
இந்த இரண்டு சக்திகளும் நாட்டைக் கெடுக்கின்றன. தம் சுயநலத்தைப் பேணுவதும் தம் பிம்பத்தைப் பூதாகாரமாக வளர்த்துக் கொள்வதுமே இவர்களது நோக்கம். இந்த நோக்கம் கலப்படமற்றது. இவர்கள் நாட்டைச் சுரண்டுகிறார்களே தவிர சமூகத்திற்கு இவர்கள் ஏதும் கொடுப்பதில்லை. பாமரத்தனமும் இரைச்சலிடும் ஆபாசமும் நிறைந்த இந்த சமயத்தில், தன் அறிவார்த்த தைரியத்திற்கும், எந்த அபத்தத்தையும் எக்காரணம் தொட்டும் சகித்துக் கொள்ளாத புரட்சியாளனுமான, 1889-ல் பிறந்த வ.ரா. என்னும் எழுத்தாளனின் நூறாண்டு நினைவு தினம் யாருடைய கவனத்தையும் ஈர்க்காமல், யாராலும் கொண்டாடப்படாமலும் வந்த சுவடு தெரியாமல் கழிந்துவிடும். இன்றைய தமிழ் சமூகத்தின் குணத்தை நாம் நன்கறிந்திருப்போமானால், வ.ரா. வை தமிழ் சமூகம் நினைவு கொண்டிருந்தால் மட்டுமே நாம் ஆச்சரியப்படவேண்டியிருக்கும்.
சுப்பிரமணிய பாரதியை ஒரு கவிஞராக மட்டுமே அவரது நெருங்கிய நண்பர்கள் அறிந்திருந்த காலத்தில், வ.ரா. பாரதியை வியந்து போற்றியவர். பாரதி இந்த நூற்றாண்டின் ஆரம்ப பத்துக்களில் புதுச்சேரியில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பிடியிலிருந்து தப்பி வாழ்ந்து கொண்டிருந்தபோது, பாரதிக்கு உதவியாயிருந்த இளைஞர் அப்போதைய வ.ரா. பாரதியையின் வாழ்க்கையை எழுதிய முதல் புத்தகமே வ.ரா.வினதுதான். அது வெற்று வரலாறோ விமர்சனமோ அல்ல. பாரதி என்ற ஆதர்சத்தின் மதுவுண்ட பரவசம் அது. பாரதியின் தேச பக்திப் பாடல்களுக்காகவே கவி என்ற இடத்தை அவருக்குக் கொஞ்சம் யோசனையோடு பாரதியை சிலர் அங்கீகரித்த காலம் அது. அந்தச் சூழலில் வ.ரா. பாரதி என்னும் கவிஞருக்காகப் போராடியதும் விவாதித்ததும் தேவையான ஒன்றாகத்தான் இருந்தது. எனவே அது உணர்ச்சிவசப்பட்டது. சண்டைத் தொனி மேலோங்கியது. வ.ரா. பேசக் கிடைத்த மேடைகளில் எல்லாம், இருபதாம் நூற்றாண்டின் மகா கவி பாரதி என ஸ்தாபிப்பதில் தீவிரமாக இருந்தார். இன்று அந்த விவாதங்களைப் பற்றி நினைத்துப் பார்க்கும்போது, இந்த விஷயத்திற்கு இவ்வளவு போரும் புழுதி கிளப்பலும் தேவையாயிருந்ததா என்று ஆச்சரியப்படத் தோன்றும். தேவையாகத்தான் இருந்தது அந்தச் சூழலில்.
வ.ரா. பிறந்தது ஒரு பிராமணக் குடும்பத்தில். அதிலும் மற்ற பிராமணர்களை விட தாம் தான் உயர்ந்தவர் என்று தீவிரமாக நம்பும் வைஷ்ணவ குலத்தில் பிறந்தார் அவர். ஆனால் அவர் ஆஸ்திகரும் அல்ல. நாஸ்திகரும் அல்ல. அது பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாத மனப்போக்கு உள்ளவர். சாதி, மத வித்தியாசங்கள் பற்றிய பேச்சு எழுந்தாலே முள்ளம்பன்றி சிலிர்த்தெழுவது போல சீற்றம் கொள்பவர்.
நாற்பதுக்களில், தீவிர நாஸ்திக பிரச்சாரமும், பிராமண எதிர்ப்பு சாதி ஒழிப்புப் பிரசாரமும் செய்து வந்த ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பாராட்டி ஒரு சிறு புத்தகமும் வ.ரா. எழுதினார். அது பிராமணர்களிடையே மட்டுமல்லாது, உயர்ஜாதி ஹிந்துக்கள் பெரும்பான்மையினரது கசப்பையும் எதிர்ப்பையும் அது சந்திக்க வேண்டி வந்தது. தமிழ்நாட்டுப் பெரியார்கள் என்ற தனது புத்தகத்தில் ஈ.வே.ரா.வையும் தமிழ் நாட்டுப் பெரியார்களின் வரிசையில் சேர்த்துப் பாராட்டி எழுதினார். இப்புத்தகம் எழுதப்பட்டது 1945-46-ல். அப்போது ஈ.வே.ரா.வின் திராவிட இயக்கம் காங்கிரஸை எதிர்த்தது, பிரிட்டீஷ் அரசாங்கத்தை ஆதரித்தது. பின் வருடங்களில் திராவிட இயக்கத்திற்குக் கிடைத்த பலத்த வரவேற்பு அப்போது இருக்கவில்லை. திராவிட இயக்கத்திற்கு அப்போது தமிழ் நாட்டில் தீவிர எதிர்ப்பு இருந்தது. வ.ரா.வுக்கும் ஈ.வே.ரா.வுக்கும் இடையே காணக் கூடும் ஒரு பொது நோக்கு சாதியை எதிர்த்த சமூக சீர்திருத்தமும் பழமைவாத எதிர்ப்பும்தான். இவற்றை மட்டும் பார்த்த வ.ரா.வுக்கு ஈ.வே.ரா.வின் வசைகளும். அவரது வாதங்களின் தரமற்ற குணமும், பிராமணர்களை மாத்திரம் குறி வைத்த, பார்வை குறுகிய ஜாதி எதிர்ப்பு, நாஸ்திகம் போன்ற எதையும் பார்க்கத் தவறினார். நடைமுறையில் ஈ.வே.ரா.வின் ஜாதி எதிர்ப்பும் நாஸ்திகப் பிரசாரமும் பிராமண எதிர்ப்பு என்ற அளவிலேயே இருந்தது. அவரது நோக்கமே அந்த அளவில் குறுகியதுதான். வ.ரா.வுக்கு அறுபதாண்டு நிறைந்ததை ஒட்டி, அவர் தம் வாழ்நாளில் தமிழ் இலக்கியத்திற்கும், சிந்தனைக்கும் ஆற்றிய சேவையைப் பாராட்டி நடத்தப்பட்ட விழாவைப் பற்றி, ஈ.வே.ரா.வின் பிரசார தின இதழான விடுதலை அதைக் கிண்டல் செய்து தாக்கி நீண்ட தலையங்கமே எழுதியது ஈ.வே.ரா.வின், அவரது திராவிட இயக்கத்தின் சாரமான குணாம்சத்தைத்தான் வெளிப்படுத்தியது.
வ.ரா. நாவல்கள் எழுதினார். வாழ்க்கையின் எல்லா தரப்பு, தரத்து மக்களை பற்றியும், வீட்டு வேலைக்காரிகள் முதல், அமைச்சர்கள் வரை அத்தனை பேரைப் பற்றியும் நடைச்சித்திரங்கள் என ஒரு புது வகை வடிவத்தைக் கையாண்டார். அவற்றில் சமூகத்தைப் பற்றியும் மக்களைப் பற்றியும் தன் பார்வையை, விமர்சனத்தையும் தன் சிந்தனைகளையும் வெளிப்படுத்தினார். அவரை ஒரு சிருஷ்டி எழுத்தாளர் என்பதை விட சிந்தனையாளர் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். அவர் ஒரு கோபக்கார மனிதராக இருந்தார். அவரது கோபம் சமூகத்தின் மீதும், அவரைச் சுற்றியிருந்த மனிதர்கள் மீதும், அவர்கள் கொண்டிருந்த பழமையாகிப் போன வாழ்க்கை மதிப்பீடுகள் எல்லாம் மீதுமாக இருந்தது. அவர் காலத்திய மனிதர்கள் தம் மூதாதையர்களிடமிருந்து பெற்ற எதையும் கேள்வியற்று, அவற்றைப் பற்றி சிந்திக்காது அப்படியே ஏற்றுக் கொள்ளும் மனோபாவத்தைக் கண்டு கோபம் கொண்டார். அப்படி அவர்கள் ஏற்றுக்கொண்ட பழம் மதிப்புகளும், நடைமுறைகளும் எவ்வளவு கொடுமையானவை, நியாயமற்றவை என்பது பற்றி அவர்கள் சிந்திக்காதது கண்டு கோபம் கொண்டார். அவர் நாவலோ, நடைச்சித்திரமோ எதை எழுத ஆரம்பித்தாலும், அவர் கோபம்தான் பொங்கி எழுந்து அதை அவர் கருத்துக்களுக்கான மேடையாக்கிவிடும்
சிந்தனையாளராக, அவர் தமிழ் மண்ணில் தனித்துத் தன் பாதையில் செல்பவராக இருந்தார். அவருடைய புரட்சிகரமான, வழக்கத்துக்கு மாறான கருத்துக்களை மற்றவர்கள் எப்படி எதிர்கொண்டார்கள் என்பது மற்றி அவர் கவலைப்பட்டவரில்லை. அவர் கருத்துக்களைச் சொல்ல அவர் கையாண்ட தமிழ் நடை, சின்னச் சின்ன அலங்காரமற்ற, எதையும் நேராக மனத்தில் உடனே பதிய வைக்கும் எளிய ஆனால் சக்தி வாய்ந்த நடை. சீண்டி விடப்பட்ட முள்ளம்பன்றி தன் உடல் சிலுப்பி முட்களை விரித்துத் தாக்கத் தயாராவது போலத்தான், வ.ரா.வின் சொற்கள் அம்புகளாகப் பாயும். அவர் எழுத்துக்களைப் பற்றிச் சொன்ன இந்த குணச்சித்திரம் வ.ரா. என்ற மனிதரைப் பற்றிச் சொன்னதாக எடுத்துக் கொண்டாலும் அதில் தவறு ஏதும் இராது. அவர் தன் எழுத்துக்களில் தன்னைத் தான் தன் சீற்றத்தைத் தான் கொட்டி அமைதி அடைந்தார். அவர் வெகு எளிதாக, அநாயாசமாக, வார்த்தைகளைத் தேட வேண்டாது, கருத்துக்களைச் சொல்வதில் சிரமமில்லாது, தயக்கம், யோசனை என்ற தடங்கல்கள் ஏதும் இன்றி ஒரு அடித்தல் திருத்தல் இல்லாது எழுதிவிடுவார். அவர் எழுத்தின் எளிமைத் தோற்றம் ஏமாற்றும். அவர் நிறைய எழுதிய இந்த நூற்றாண்டின் இருபது முப்பதுகளில், தமிழில் இவ்வளவு சாதாரண அன்றாட புழக்கத்தின் வார்த்தைகளைக் கொண்டு இவ்வளவு சக்தி வாய்ந்த வெடித்துச் சிதறும் எழுத்து சாத்தியமா என்று நினைத்துப் பார்க்கவில்லை யாரும். தன் எளிய வார்த்தைகளுக்கு அத்தகைய சக்தியை அளித்ததும் சிருஷ்டி சார்ந்த செயல்தான். இன்னும் சில விஷயங்களிலும் அவரது சிருஷ்டிகர ஆளுமை வெளிப்பட்டது. முப்பது நாற்பதுகள் நவீன தமிழ் இலக்கியத்தின், கலைகளின் மறுமலர்ச்சி காலம் என்றே சொல்ல வேண்டும். அந்த காலகட்டத்தில் மலர்ந்த எழுத்தாளர் பெரும்பாலோருக்கு (எல்லோருக்கும் என்று கூட சொல்லத் தோன்றுகிறது) அவர் தந்தை ஸ்தானம் பெற்றவராக இருந்தார். அந்த மறுமலர்ச்சி கால கட்டத்தில் தோன்றிய சிருஷ்டி எழுத்தாளர் கூட்டம் முழுதுக்குமே அவர் வழிகாட்டியாக, ஆதர்ச புருஷராக, தரவாளராக, அவர்களில் சிலரை அவரே கண்டெடுத்தவராக இருந்தார். இப்படி எழுத்துத் திறன்களை அவர் கண்டு வெளிக்கொணரும் ஒவ்வொரு சமயமும் அவர் காட்டும் உற்சாகமும் சொரியும் புகழுரைகளும் தன்னையறியாது வெளிவருவனவாக, இயல்பான ஒன்றாக இருந்த போதிலும் அதில் ஒரு நாடக பாவம் மேலோங்கியிருக்கும். நேரிலும் சரி, கடித பரிமாற்றத்திலும் சரி. இவ்வாறு நல்ல எழுத்துத் திறன் கொண்ட ஒருவரை வ.ரா. அறிய நேர்ந்து, அவரது எழுத்துத் திறன் மலர தடங்கலாக வேறு ஏதும் வேலையில் ஈடுபட்டவராக இருப்பின், அவரை அந்த வேலையை விட்டு சென்னைக்கு வந்து எழுத்திலேயே முழு நேரமும் ஈடுபடும்படி சொல்வார், வலியுறுத்துவார்.
பின்னாட்களில் புகழ் பெற்ற, தமிழ் இலக்கியத்தில் தம் பெயர் ஸ்தாபித்த எத்தனையோ எழுத்தாளர்கள், தம்மிடம் மறைந்திருந்த எழுத்துத் திறனைக் கண்டுபிடித்ததும், அவர்களுக்கு அதை எடுத்துச் சொல்லி அவர்களை நம்பிக்கை கொள்ள வைத்து உற்சாகப்படுத்தியதும் வ.ரா.தான் என்று தம் நினைவுகளைச் சொல்லியிருக்கிறார்கள். தாம் முன்னிருந்த வேலையை விட்டு வரமுடியாத, எழுத்தை நம்பி மேற்கொள்ள இயலாது இருந்த சூழ்நிலையில் வ.ரா.வின் அயராத தூண்டுதலும், கொடுத்த உற்சாகமும்தான் அவர்கள் எழுத்துத் துறைக்கு வர காரணமாக இருந்ததென்று சொல்லியிருக்கிறார்கள்.
உப்பு சத்தியாக்கிரஹத்தில் ஈடுபட்டதன் காரணமாக அவர் கொஞ்ச காலம் அரசியல் கைதியாக அலிப்பூர் சிறை வாசம் அனுபவித்தார். சிறைவாசம் கழிந்து வெளியே வந்ததும், இன்றைய தமிழ் இலக்கியத்தின் நவீனத்வத்திற்கு காரணமாக இருந்த, உருவாக்கிய மணிக்கொடி பத்திரிகையின் ஆசிரியராகச் சேர்ந்தார். மணிக்கொடி பத்திரிகை தமிழ் மக்களிடையே தேசீய சுதந்திர உணர்வைப் பேணுவதற்கு என்று ஒரு அரசியல் மேடையாகத்தான் அது திட்டமிடப்பட்டது, தொடங்கப்பட்டது. ஆனால் வ.ரா. அதன் ஆசிரியப் பொறுப்பை ஏற்றதும், தேசிய உணர்வும் சுதந்திரப் பிரக்ஞையும், வெடித்துச் சிதறி அதன் தீக்கங்குகளை, சமூகம், இலக்கியம், கலை என எல்லாத் தளங்களிலும் வீசி பொறி பற்றச் செய்தது. இது வரை காணாத திசைகளில் எல்லாம், அப்பொறி பற்றியது. அவ்வாறு பொறி தெரித்து விழுந்தது சிருஷ்டி இலக்கியத்திலும்.
பின்னர் இது மணிக்கொடி காலம் என்றே அறியப்பட்டது. 1910-20 இருபதுகளில் பாண்டிச்சேரியில் இருந்த காலத்தில் பாரதியின் கவிதா மண்டலத்தில் தான் கண்ட பாரதிதாசன் என்னும் அப்போது மலர்ந்து வந்த கவிஞனை தன் வழக்கமான சுபாவத்திற்கேற்ப, சென்னைக்கு வரத் தூண்டி அவரை மணிக்கொடி எழுத்தாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்து, மணிக்கொடியில் அவர் கவிதைகளையும் வெளியிட்டார். பின் வருடங்களில் பாரதிதாசன், திராவிட கழகப் பிரசாரகராக மாறி பிராமணரையும் காங்கிரஸ் கட்சியையும் எதிர்த்து பிரசார கவிதைகள் எழுதினார் என்பது தனிக்கதை. இருப்பினும் வ.ரா. தன் பார்வையிலும் நம்பிக்கைகளிலும் உறுதியாகவே இருந்தார். தளர்ந்தவரில்லை. தன் கருத்துக்களுக்குத் தானே பொறுப்பேற்றார். அவர் எவரிடமிருந்தாவது ஆதர்சம் பெற்றார் எனில் அவர் பாரதியைத்தான் சொல்வார். அவரது பார்வையும் கருத்துக்களும் அவரதே.
தமிழ் நாட்டில் வெவ்வேறு துறைகளில் சிறப்பாகத் தம் பங்களிப்பைத் தந்தவர்கள் என்று பொது வாழ்க்கையில் கண்ட பத்துப் பேரைப் பற்றிய வ.ரா.வின் மதிப்பீடுகள் கொண்ட ஒரு புத்தகம் தமிழ் நாட்டுப் பெரியார்கள். இது வெளிவந்தது நாற்பதுகளில். இது என்ன அவ்வளவு சிறப்பாகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயமா என்று தோன்றலாம். விஷயம் என்னவென்றால், வ.ரா. வின் பெரியார்கள் என்ற மதிப்பீட்டில் ஒருவர் ஈ.வே. ராமசாமி நாயக்கர். திராவிட கழத்தைத் தோற்றுவித்த அக்கழகத்தின் தலைவர். தமிழ் நாடு முழுதும் தேசீய உணர்வு பெருகிப் பொங்கி எழுந்த கால கட்டத்தில், வேண்டாத ஒரு உறுத்தலாக இருந்தவர். என்.எஸ். கிருஷ்ணன் என்ற சினிமா நகைச்சுவை நடிகர். கிச்சு கிச்சு மூட்டி சிரிக்க வைத்த பஃபூன் என்ற சித்திரம்தான் அக்காலத்தில் என்.எஸ். கிருஷ்ணன் பற்றி எழுந்திருக்கும். கே.பி. சுந்தராம்பாள் இன்னொருவர். நாடகங்களில் பாட ஆரம்பித்து சினிமாவிலும் பாடிக்கொண்டிருந்த நடிகை. எவரிடமும் சிட்சைஷயின்றி தானே சங்கீதம் கற்றவர். உச்ச ஸ்தாயியில் ஆயிரம் பேர் கேட்க பிசிறில்லாமல் பாட வல்லவர். சுதந்திரத்திற்கு முந்திய அக்கால காங்கிரஸ் கட்சியின் பிரசார மேடைகளில் தேசீய பாடல்களைப் பாடுபவர். இன்று கூட, கே.பி.சுந்தராம்பாள், என். எஸ். கிருஷ்ணன் போன்றாரை தமிழ் நாட்டுப் பெரியார்கள் என்று சொல்வதா என்று கேட்பவர்கள் கட்டாயம் இருப்பார்கள். ஆனால் 45 ஆண்டுகளுக்கு முன் வ.ரா. அவர்களைத் தமிழ் நாட்டுப் பெரியார்களாக கணித்து அது பற்றி எழுதவும் செய்தார். அதுதான் வ.ரா.
இந்த நூற்றாண்டின் முதல் இரண்டு பத்துக்களில் பாரதி பெரிய இலக்கிய சக்தியாகத் திகழ்ந்தார் என்றால், அடுத்த இரண்டு பத்துக்களில் பாரதிக்கு வாரிசாகக் கருதப்படவேண்டியவர் வ.ரா. கலாச்சாரத்தின் எல்லாத் துறைகளிலும் அவர் ஒரு தூண்டும் சக்தியாக இருந்தார். தமிழ் நாடு அவருக்கு மிகவும் கடன்பட்டுள்ளது. ஆனால் இன்றைய தமிழ் நாட்டின் பாச கலாச்சாரச் சீரழிவில், வ.ரா.வின் முக்கியத்துவமோ, தமிழ்நாடு அவருக்கு எவ்வளவு கடன்பட்டிருக்கிறது என்பதோ அது அறிந்திருக்கவில்லை. இரைச்சலிடும் சுவர் வாசகங்களும், சினிமா சுவரொட்டிகளுமாகக் காட்சியளிக்கும் தமிழ் நாட்டிற்கு அரசியல்வாதிகளும் சினிமா நட்சத்திரங்களும்தான் தெய்வங்கள்.
வ.ரா. 1951-ல், தனது 62வது வயதில் இறந்து விட்டார். அவர் கண்டெடுத்த வளர்த்த எழுத்தாளர்களில் இருவர்தான் இப்போது நம்மிடையே உள்ளார்கள். சிட்டி என்று அறியப்படும், பெ.கொ.சுந்தரராஜனும், சி.சு. செல்லப்பாவும். தமது எழுபதாவது வயதை எட்டியுள்ள இவர்கள் இருவரும்தான் வ.ரா.வின் இந்த நூற்றாண்டு தினத்தில் அவரை நினைவு கொள்பவர்கள், அவரோடு பழகியவர்கள். இவர்களுக்குப் பின் வ.ரா.வின் பெயரை யாரும் கேட்கப் போவதில்லை.
ஈ.வே.ரா வின் வழிவந்தவர்கள், அவர்கள் சொல்லிக் கொள்ளும் கொள்கைகளுக்கு உண்மையாகவிருப்பின், வ.ரா.வை தமிழ் நாடு மறக்காது நினைவுபடுத்துவர்களில் முன்னிற்பவர்களாக இருந்திருக்க வேண்டும். வ.ரா வின் எழுத்துக்களை வரும் ஒவ்வொரு தலைமுறைக்கும் எடுத்துச் செல்பவர்களாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில் திராவிடக் கழகத்தினரும் அல்லது அதிலிருந்து பிரிந்துள்ள மற்ற கழகத்தினரும் ஜாதி வேற்றுமைகளையும் பிராமணப் பழமை வாதத்தையும் எதிர்த்த அளவு வ.ரா.வும் எதிர்த்துக் கண்டனம் செய்தவர்தான். திராவிட கழகத்திலிருந்து பிரிந்த கழகங்களில் ஒன்றல்லது மற்றது 1967 லிருந்து தமிழக ஆட்சிப் பொறுப்பில் இருந்து வந்துள்ளது.
ஆனால் உண்மை என்னவென்றால் கழகங்கள் எதிர்த்த ஜாதீயம் பிராமணர்களை மாத்திரம் குறி வைத்ததுதான். உயர்ஜாதி ஹிந்து வகுப்பினரின் ஜாதீயம் பற்றி யாருக்கும் நினைப்பில்லை அது தொடப்படாமலேயே இன்று வரை சீரும் சிறப்புமாக வளர்ந்துள்ளது. இன்று வ.ரா.வின் ஜாதீய எதிர்ப்பையும் ஆஸ்திக எதிர்ப்பையும் நினைவு கொள்வது சங்கடமான காரியம். ஏனெனில், வ.ரா. ஒரு பிராமணராகிப் போனது; அவர் ஒரு கலைஞனின் அறிஞனின் மொழியில் பேசியது.
ஆங்கிலம்: A Rebel against Orthodoxy: Patriot, New Delhi 15.10.1989.
தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்
4 thoughts on “வ.ரா. பற்றி வெங்கட் சாமிநாதன்”