வெ.சா. எழுதிய ஒரு கட்டுரையை இங்கே அவருக்கு அஞ்சலியாகப் பதித்திருக்கிறேன்.
எழுதும் முனைப்போ ஆர்வமோ இல்லாத இந்த எழுத்து மேதை மௌனியைப் பற்றி என்ன சொல்ல? அவர் ஒன்றும் எழுதிக் குவிப்பவர் இல்லை. அவர் முதலில் எழுத ஆரம்பித்ததே, இதில் ஏதாவது உருப்படியாக செய்யமுடியுமா என்று பார்க்கத்தான். பின்னர் அவ்வப்போது எழுதியது நண்பர்களும் மற்ற எழுத்தாளர்களும் தொடர்ந்த வற்புறுத்தலின் காரணமாகத்தான்.
மௌனியைத் தமிழகத்துக்குத் திரும்ப நினைவூட்டிய மறைந்தே போன அவர் இடத்தைத் திரும்ப புனர்ஜீவித்த க.நா. சுப்ரமண்யம் 1959-இல் மௌனியின் கதைகளைச் சேகரித்து அவர் கதைகளின் தொகுப்பு ஒன்றை புத்தகமாக வெளியிட முயன்றபோது, அது எத்தகைய சாகச வேட்டையாக முன் நிற்கும் என்பதை நினைத்துப் பார்த்திருக்கமாட்டார். கடைசியில் ஒரு பதினைந்து கதைகளை அவர் தேடிப் பிடித்து வெளியிடுவதில் வெற்றி பெற்றார். மௌனி என்ற பெயரில் ஒரு மனிதர் எழுத்தாளர் உண்மையில் இந்த உலகில் இருக்கிறார் என்று நிரூபிக்க, மௌனியை ஆல்வாயில் நடந்த எழுத்தாளர் மகாநாட்டிற்கு அழைத்துவந்து முன் நிறுத்தினார். பின் வந்த வருடங்களில் மௌனியின் கதைகளைப் புகழ்ந்து பாராட்டும் விமர்சனங்கள் குவியத் தொடங்கின. அதே அளவிலும் எண்ணிக்கையிலும் அவரது எழுத்தைக் குறிந்த கண்டனங்களும்தான்.
தமிழின் சிறுகதை முன்னோடிகள் இரண்டு முனைகளில் போராடியதாகத் தோன்றுகிறது. ஒன்று மொழி சம்பந்தப்பட்ட போராட்டம். இரண்டு, சிறுகதை என்ற இலக்கிய வடிவத்தைக் கையாளுவதில். அவர்களில் புதுமைப்பித்தன் மாத்திரமே எவ்வித சிரமமுமின்றி வெற்றிகண்ட ஒரு மேதையாக இருந்தார். என்னமோ அவர் பாட்டிலைத் திறக்கவேண்டியது உடனே அடைத்துக் கிடந்த பூதம் அவர் கட்டளையை நிறைவேற்றுவது போலத்தான் மொழியும் வடிவமும் அவருக்கு பணிந்தன. மற்றவர்கள் எல்லாம் சிரமப்பட வேண்டியிருந்தது.
மௌனியின் விஷயத்தில் அந்த போராட்டம் இன்னம் சிரமம் வாய்ந்ததாக இருந்தது. ஏனெனில் அவர் எழுத நினைத்தது அவருக்கே உரிய கருப்பொருளாக இருந்தது. புதுமைப்பித்தனே இது பற்றி எழுதியிருக்கிறார்.
கற்பனையின் எல்லைக்கோட்டில் நின்று கொண்டு வார்த்தைகளில் அடைபட மறுக்கும் கருத்துக்களையும் மடக்கிக்கொண்டு வரக்கூடியவர் அவர்(மௌனி) ஒருவரே
கற்பனை வளமும் மொழித்திறனும் மிக எளிதாகக் கைவரப் பெற்ற ஒரு மாமேதை, தன்னுடைய சிந்தனைகளையும் கற்பனையையும் வெளியிடுவதற்கு மொழியுடன் நிரந்தரப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தன் உடன் நிகழ்கால முன்னோடிக்கு அளிக்கும் இந்த பாராட்டு மிகப் பெரிய பாராட்டுதான்.
அக்காலத்திய மற்ற எழுத்தாளர்களைப் போல மௌனியின் போராட்டம் மொழியை ஒரு ஆற்றல் பெற்ற சாதனமாகக் கையாளுவதில் மட்டுமில்லை. மற்றவர்களிடமிருந்து வேறுபட்டதும், தனக்கே உரியதுமான தன் உள்ளுலகை வெளியிடுவதற்கு ஏற்ற வெளியீட்டு மொழியைக் காண்பதற்கும் அவர் சிரமப்படவேண்டியிருந்தது.
அவரது ஆரம்பத் தயக்கத்தையும் பின்னர் அவருக்கு இருந்த அசிரத்தையையும் மீறி, பின்னர் அவர் ஒரு கதை எழுத உட்கார்ந்து விட்டாரானால், அவர் தான் சொல்ல விரும்பியதைச் சொல்லும் வகையில் மொழியை ஆக்கிக் கொள்வதில் அவர் திறன் காட்டத்தான் செய்தார். அவருடைய முதல் சிறுகதையான ஏன்? அவருடைய இலக்கியக் கலையை ஆராய முதல் அடியை எடுத்துக் கொடுக்கிறது. மாதவன் என்னும் பதினான்கு வயது மாணவன் பள்ளி விட்டு வீட்டுக்குப் போகும்போது தன் வகுப்புத் தோழி சுசீலாவிடம், “சுசீலா, நானும் வீட்டிற்குத்தானே போகிறேன், இருவரும் சேர்ந்து போகலாமே?” என்று சொல்கிறான். ஆனால் சுசீலா திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்து, புருவங்கள் உயர்த்தி வியப்புடன் கண்கள் பெரிதாகிப் பார்த்தது “ஏன்?” என்று கேட்பது போல் இருந்தது. இந்த “ஏன்?” அந்த பையனைப் பிசாசாகப் பற்றிக் கொள்கிறது. அதன் பின் அவர்கள் இருவர் மனதையும் ஆட்டிப் படைக்கிறது. அவர்கள் தனித்தனி அன்றாட வாழ்வில் அந்த ஏன் அவர்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் முன் நின்று ஏன் என்று கேட்கத் தவறுவதில்லை. அவர்கள் பிரமை பிடித்தது போல் ஆகிறார்கள். இந்த ஏன் அவர்களுக்குள்ளிருந்து மாத்திரம் எழும் கேள்வியாக இல்லை. அவ்விதமாயின் அது உணர்வு நிலையாக இருக்கும். மன நோயாக ஆகியிருக்கும். ஆனால் இந்த ஏன் அவர்களை வெளிஉலகத்திலிருந்தும் எதிர்ப்பட்டு முறைத்து நிற்கும் ஒன்றாக ஆகியிருக்கிறது. அப்போது அது ஒரு தத்துவார்த்த பிரச்சினையாக விரிகிறது. ஏன் இப்படி? எதற்காக? ஏன் எதுவும் அப்படி? என்ற கேள்விகளே எழுந்த வண்ணம் இருக்கின்றன, பதில் வருவதில்லை. மௌனி கதையை அத்தோடு முடிக்கிறார். இரு நிலைகளின் இடையே வாசகனை நிற்க வைத்துவிட்டுப் போய்விடுகிறார் மௌனி.
உலகைப் பற்றிய இந்தப் பார்வையைத்தான் மற்ற கதைகளிலும் நாம் சந்திக்கிறோம். கொஞ்ச தூரம் என்ற கதையில், “மேலே கிளையில் உட்கார்ந்திருந்த ஒரு காகம் இவனைச் சந்தேகமாய்த் தலை சாய்த்துப் பார்த்தது. வாய்க்காலில் துணி துவைக்கும் பாறாங்கல்லில் ஒரு சிறு குருவி உட்கார்ந்திருந்தது. அதுவும் திடீரென்று பறந்து அச்செடியில் “ஏன்? எங்கே?” என்று கத்திக்கொண்டு மறைந்து விட்டது.”
இங்கும் கதை முழுதும் பரந்து கவிந்திருப்பது ஒரு வெறுமை உணர்வு. வாழ்வின் அர்த்தமற்ற குணம். அது முதலில் நிறைவேறாத காதலில் தொடங்கி பின் அத்தோடு நிற்பதில்லை.
மௌனியின் கதைகளிலும், கதை சொல்பவனும், கதையின் முக்கிய பாத்திரமும் காஃப்கா கதைகளின் K போல ஒரு பெயரற்ற ‘அவன்’தான். அவன் எங்கிருந்தோ தன் இருப்பிடம் திரும்பி வருவான். தன் கடந்த காலத்திய நினைவில் தோய்ந்து விடுவான். இன்னொரு படிநிலையில் மௌனியின் பாத்திரங்கள் தனி மனிதர்கள் மாத்திரமல்ல. உணர்வு நிலைகளின் பிரதிபலிப்புகள். பிரக்ஞை வெளிகள். தோற்ற உலகின் பின்னிருக்கும் உலகின் பளிச்சிட்டு மறையும் மின்னல் காட்சிகள்.
அவருடைய கதைகளில் சம்பவங்கள் என்று எதுவும் நிகழ்வதில்லை. அவர் ஒரு நிலையின் மின்னல் வெட்டிப் பளிச்சிடும் கணத்தை எடுத்துக் கொண்டு அதன் சாரமான உணர்வு நிலையை வெளிக்கொணர்கிறார். பின் அதை தத்துவார்த்த நிலைக்கு எடுத்துச் செல்கிறார். ஆரம்ப ஏன்? என்ற கேள்வியின் நீரில் விரல் விட்டுப் பார்க்கும் சோதனையாய் தொடங்கிய மௌனியின் பயணம் பின் கதைகளில் மிகச் சிக்கலான ஒன்றாக வளர்ந்து விடுகிறது. அழியாச்சுடர் கதையில் ஒரு இளைஞன் கோவிலில் சன்னதியின் முன் கூடியிருந்தவர்களில் ஒரு பெண்ணைப் பார்த்த பரவசத்தில் ‘நான் உனக்காக எது செய்யவும் காத்திருக்கிறேன், எதுவும் செய்ய முடியும்’ என்று ரகசியமாகச் சொல்லிக் கொண்டது “உள்ளிருந்த விக்கிரஹம், எதிர்த் தூணில் ஒன்றியிருந்த யாளி எல்லாம் கேட்டு நின்றது” போலத் தோன்றியது மட்டுமல்லாமல் “சந்தனப் பொட்டுடன் விபூதி பூசி இருந்த விக்கிரஹமும் புருவஞ்சுளித்து சினம் கொண்டதாகத்” தோன்றுகிறது. அது மட்டுமில்லை. “தூணில் ஒன்றி நின்ற யாளியும் மிக மருண்டு கோபித்து முகம் சுளித்தது” கோவிலினுள் அந்நிகழ்வையும் அச்சூழலையும் விவரிக்கும் மௌனி ஒரு மயிர்க் கூச்செரியும் அச்சம் தோன்றும் மாய உலக உணர்வை எழுப்புகிறார். கர்ப்பக்கிரஹத்தினுள் இட்டுச் செல்லும் நுழைவாயிலுக்கும் கர்ப்பக்கிரஹத்திற்கும் இடையே உள்ள இருள் வெளியில் எண்ணெய் விளக்குகளின் விட்டு விட்டு பிரகாசிக்கும் மஞ்சள் ஒளி பரவியிருக்க நிகழ்கிறது இந்த நாடகம். இந்த வெளிதான் பிரக்ஞை நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மாறும் வெளி போலும். இடத்திலும் காலத்திலும் நிகழும் மாற்றம்.
அவருடைய தனித்துவமான பெரும்பாலான கதைகளில் இந்த நிலை மாற்றம், ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கான பயணம் அந்தி நேரத்தில் தான் நிகழ்கிறது. சுற்றியிருக்கும் இருள் வெளியை ஒரு மாய உணர்வூட்டும் மஞ்சள் ஒளி, அப்போது மனிதர்கள் நிழல் உருவங்களாக, நகரும் நிழல்களாகத் தோற்றம் தருவார்கள். விக்டர் டர்னர் தன் The Ritual Process: Structure and Anti-Structure (1969) புத்தகத்தில் liminality என்றும் communitas என்றும் சொல்லும் நிலையை மௌனி கதைகளின் இச்சூழல்கள் நினைவூட்டுகின்றன.
மரபான நாட்டுப்புற கலைகளையும் அவற்றின் சடங்குகளுக்குள்ள சக்தியையும், உள்ளர்த்த அர்த்தங்களையும் பற்றியெல்லாம் மௌனி தெரிந்திருப்பார் என்றோ ஆழமாக ஆராய்ந்தறிந்திருப்பார் என்றோ சொல்லமுடியாது. தன்னையறியாமலே, கூட்டு அடிமனப் பிரக்ஞையிலிருந்து பெற்றதைக் கொண்டு அவர் இலக்கிய சிந்தனை இவற்றை வெளிப்படுத்துகிறதோ என்று தோன்றுகிறது. பிரக்ஞை வெளியில் என்ற கதையில் அவர் சொல்கிறார்:
ஒளி படராத பிரக்ஞை வெளியில் சேகரன் தடுமாறிக் கொண்டிருந்தான். தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் உள்ள எல்லைக்கோடு, பிளவு கொண்டு ஒரு சிறு வெளி விரிவு தெரிவது போலும் அந்நடுவெளியில் நின்று உலக விவகாரங்களைக் கவனித்தான். உலகம் உண்மையெனத் தோன்றுவதற்கு -வஸ்துக்கள் வாஸ்தவம் எனப் படுவதற்கு – மாயைப் பூசு கொள்ளுமிடம் அதுதான் போலும். தூக்கத்தில் மறையவும் விழிப்பில் மறக்கவும்…
இம்மாதிரியான பல பகுதிகளை மௌனியின் கதைகளில் சந்திக்க நேரும். அவை வேறு வேறு சந்தர்ப்பங்களில் வேறு வடிவங்களில், தனி மனிதனையும் பிரபஞ்சத்தையும், ஒரு தத்துவார்த்த பிரகடனமாக அல்ல, குணரூப வாக்கியமாக அல்ல, உணர்ந்த வாழ்ந்த அனுபவங்களாக சொல்லப்படுகின்றன. அவற்றில் ஒரு வாசகன் தத்துவார்த்த உள்ளீடுகளை, பிரபஞ்சம் முழுதும் ஒன்றிணைந்துள்ள முழுமையை, அத்வைத ஒருமையை வாசிக்கக் கூடும். ஆனால் இக்கதைகள் ஏதும் தத்துவார்த்த சிந்தனை விளக்கமாக எழுதப்படவில்லை. உண்மையான மனித வாழ்க்கை நிலைகளை, மனதின் உருக்கமான மன நிலைகளைச் சொல்லும் முகமாகத்தான் இவை எழுதப்பட்டுள்ளன. இதுதான் அவருடைய எழுத்தின் உள்ளார்ந்த மையம். அவருடைய சிறந்த கதைகள் சொல்ல முயற்சிப்பது.
மௌனியின் உலகம் தனித்துவமானது, தமிழ் இலக்கியத்துக்கு அவர் பங்களிப்பு போல. எஸ். மணியாக அவர் உயர்கணிதத்தின் தத்துவ விசாரம் பயின்ற மாணவர். கர்நாடக சங்கீத ரசிகர். எப்போதாவது தனது மகிழ்ச்சிக்கு வயலின் வாசிப்பவர். இலக்கியத்தையும் விட, சங்கீதத்திலும் தத்துவங்களிலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர் அவர். எஃப்.ஹெச். ப்ராட்லியின் Appearance and Reality அவர் திரும்பத் திரும்ப விரும்பிப் படிக்கும் புத்தகம். இலக்கியத்தில் ஃப்ரான்ஸ் காஃப்கா, ஜோர்ஜ் லூயி போர்ஹே, ராபர்ட் ம்யூசீல் போன்றோரின் படைப்புகள் அவர் மிகவும் ரசித்தவை.
அவருடனான என் பழக்கம் அறுபதுகளின் தொடக்க வருடங்களில் ஏற்பட்டது. நாங்கள் கடிதங்கள் பரிமாறிக்கொண்டோம். Encounter என்ற மாதப்பத்திரிகையில் போர்ஹேயின் இரண்டு கதைகளை முதலில் நான் படிக்க நேர்ந்த போது (அவற்றில் ஒன்று Circular Ruins, மற்றது இப்போது என் நினைவில் இல்லை) அந்த கதைப் பக்கங்களைக் கிழித்து அவருக்கு அனுப்பி வைத்தேன். அவை அவருக்கு மிகவும் பிடித்துப் போயின. அதிலிருந்து போர்ஹேயும் அவர் விரும்பிப் படிக்கும் ஆசிரியர்கள் பட்டியலில் சேர்ந்தார். அறுபதுகளில் அவருடனான என் ஆரம்ப சந்திப்புக்களில் அவருடைய அப்போதைய சமீபத்திய கண்டுபிடிப்பான ராபர்ட் ம்யுசீலின் Man without Qualities பற்றி மிகப் பரவசத்தோடு பேசினார்.
சங்கீதத்தைப் பொறுத்த வரை ஒரு சங்கீதக் கச்சேரி முழுதும் உட்கார்ந்து கேட்க அவருக்குப் பொறுமை இருப்பதில்லை என்பார். ராக சஞ்சாரத்தில் அவ்வப்போது மின்னலடிக்கும் மேதைத் தெறிப்புகள் ஒருவரது கற்பனையின் வீச்சைச் சொல்லும் அத்தெறிப்புகள்தான் அவருக்கு வேண்டும். இலக்கியத்திலும் அவர் விரும்பி ரசிப்பது இம்மாதிரிதான். அவ்வப்போது பளிச்சிடும் மின்னல் வீச்சுக்கள், அவைதான் கற்பனையின் மின்னல் கீற்று போல வீசி மறையும், அவைதான் தோற்றக் காட்சி உலகத்திலிருந்து அவற்றின் பின்னிருக்கும் உண்மைக்கு வாசகனை இட்டுச் செல்லும். ராமகிருஷ்ண பரமஹம்சர் முன்னறிவிப்பில்லாது அவ்வப்போது ஆழ்ந்து விடும் தன்னை மறந்த தியான நிலை போல. உருவகமாகச் சொல்வதென்றால் எழுத்து என்பது அவருக்கு ஒரு பயணம் கட்டமைக்கப்பட்ட நிலையிலிருந்து கட்டவிழ்க்கப்பட்ட நிலைக்கு, டர்னர் liminality என்று சொல்கிறாரே அந்த நிலைக்கு. மௌனி சொல்வார், “புதுமைப்பித்தனிடம்தான் ஏதோ இருப்பது போல் தோன்றுகிறது.”
தமிழ் இலக்கியத்தில் தனித்து நிற்கிறார். காஃப்காவும் போர்ஹேயும் அவரவர் இலக்கிய சமூகத்தில் தனித்து இருப்பது போல. இன்று இந்த நூற்றாண்டு நிறைவு பெறும் கட்டத்தில் தமிழில் நிறைய எழுத்தாளர்கள் சிலர் தம் எழுத்துக்களில் புதுமைப்பித்தனின் பாதிப்பை, இன்னும் சிலர் ஜானகிராமனின் பாதிப்பைக் காணமுடியும். மௌனி, நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளுடன் அவர்களது சகாவாக அவர் காட்சியளித்தாலும், அவர் தனித்து நிற்பவர் – இவ்வளவு நீண்ட காலமாக எழுதியது அரைகுறை மனத்தோடும் தயக்கத்தோடும், மிகக் குறைவாக எழுதியபோதிலும்.
Katha Classics வெளியிட்ட Short Stories: Mowni, A Writers’ Writer என்ற புத்தகத்திற்காக எழுதப்பட்ட கட்டுரையிலிருந்து மௌனியைப் பற்றி மாத்திரம் உள்ள பகுதி
தொகுக்கப்பட்ட பக்கம்: மௌனி பக்கம், வெ.சா. பக்கம்
Like this:
Like ஏற்றப்படுகின்றது...