இந்துமதியைப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமே இல்லை – தரையில் இறங்கும் விமானங்கள் தவிர. எப்படியோ தெரியாத்தனமாக ஒரு நாவல் இலக்கியமாக இருக்கிறது. அவரது மிச்சக் கதைகள் எல்லாம் தண்டம்தான். ஆனால் பல முறை முயற்சி செய்தும் ஒரு முறை கூட இலக்கியம் படைக்காத சிவசங்கரி, இல்லை முயற்சியே செய்யாமல் எப்படியோ ஒரே ஒரு முறை இலக்கியம் படைத்திருக்கும் இந்துமதி இருவரில் யார் ஒசத்தி என்று தீர்மானிப்பது கொஞ்சம் கஷ்டம்தான்.
தமிழில் பிரபலமாக இருந்த பெண் எழுத்தாளர்களுக்கு ஒரே தீம்தான் – “பத்தினிக்கு இன்னல் வரும் பழையபடி தீரும்”. இதையே வைத்துக் கொண்டுதான் காலம் காலமாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அதில் அவர்கள் கொண்டு வரும் மாபெரும் மாற்றம் எல்லாம் பத்தினிக்கு இன்னல் வரும் ஆனால் தீராது, இல்லாவிட்டால் கல்யாணம் ஆகாத இளம்பெண்ணுக்கு வரும் இன்னல் தீரும்/தீராது, ஏழைப் பத்தினிக்கு இன்னல் வரும், மேல்தட்டுப் பெண்ணுக்கு இன்னல் வரும் இந்த மாதிரிதான். இந்துமதி மேல்தட்டுப் பெண்களுக்கு இன்னல் வரும் என்ற template-ஐ வைத்து எழுதித் தள்ளி இருக்கிறார். நாயகிக்கு வெள்ளை நிறம் மிகவும் அவசியம். அவரது target audience எழுபதுகளின் பெண்கள். எண்பது தொண்ணூறுகளிலும் அதே target audience-ஐ குறி வைத்து எழுதிக் கொண்டிருந்தது ஏற்கனவே தண்டமாக இருக்கும் அவரது படைப்புகளை உலக மகா தண்டமாக்குகிறது. இவர் எப்படிப் பிரபலமானார் என்று எனக்குப் புரியவே இல்லை.
எப்படி த.இ. விமானங்கள் மட்டும் இந்த template-இலிருந்து மாறி இத்தனை உச்சத்தை அடைந்தது என்று பல முறை வியந்திருக்கிறேன்.
வெள்ளை நிற நாயகிகளும் உயரமான நாயகன்களும் – அனேகமாக ரிம்லெஸ் கண்ணாடி அணிந்தவர்கள் – எப்போதும் வருவார்கள். ஓரளவு விவரம் தெரிந்தபின் இந்த obsession கொஞ்சம் வினோதமாக இருந்தது.
த.இ. விமானங்களை கொஞ்சமாவது நினைவுபடுத்தும் நாவல் மலர்களிலே ஒரு மல்லிகை. நாயகி வித்யா இலக்கிய ரசனை இல்லாத ரமணியை மணக்கிறாள், ரசனை உள்ள சங்கரிடம் நட்பு.
அவரது பிற புத்தகங்களில் தொட்டுவிடும் தூரம் என்ற புத்தகத்தை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அதில் சினிமா, இலக்கியத்தில் ஆர்வம் உள்ள நாயகன், நாயகி. அவர்கள் விவாதிக்கும் எழுத்தாளர்கள் புதுமைப்பித்தன், ஜி. நாகராஜன், ஜெயமோகன், விமலாதித்த மாமல்லன்…
அன்பே ஆருயிரே என்ற நாவலையும் குறிப்பிட வேண்டும். எத்தனைதான் முயன்றாலும் இந்த மாதிரி கற்பனை “வளம்” எனக்கு வரப் போவதில்லை. வழக்கமான முக்கோணக் காதல். இரண்டு ஆண்களும் உயிர் நண்பர்கள். ஒரு உணர்ச்சிகரமான கணத்தில் காதலன் தான் விவாகரத்தான ஒரு பெண்ணைத்தான் மணப்பேன் என்று சபதம் செய்கிறான். தியாகச்சுடர் நண்பன் காதலியை மணந்து, அவளைக் கொடுமைப்படுத்தி, அவள் விவாகரத்து வாங்கி, காதலனை மணந்து, சுபம்! இதெல்லாம் எப்டியம்மா யோசிக்கறீங்க?
மிச்ச நாவல்களும் தண்டம்தான், ஆனால் நாளை மறந்து போய் ஒரு நப்பாசையில் படித்துவிடக் கூடாது என்பதற்காக அடுத்த பாரா.
அவளுக்கும் அமுதென்று பேர் என்ற குறுநாவலில் பதின்ம வயதுப் பையன் காதல் நிராகரிக்கப்படுவதால் கொலையே செய்கிறான். ஏன் எப்படி என்று குறுநாவலில் பதினாறு வயதுப் பெண்ணுக்கு சக்தியை மீறி கல்யாணம் செய்தால், பத்து நாளில் மாப்பிள்ளை வீட்டார் அவளைக் கொன்றுவிடுகிறார்கள். என் வீட்டு ரோஜா உன் வீட்டு ஜன்னலில் தன் தோழியிடம் அவள் காதலனை மயக்குவேன் என்று பந்தயம் கட்டும் தோழி. என்று புதிதாய் பிறப்போம் என்ற நாவலில் விவாகரத்தான கணவன் மனைவி நடுவில் மாட்டிக் கொள்ளும் சிறுவன். கனகாம்பரம் குறுநாவலில் உடலுறவைத் தவிர்க்க வேண்டிய பெண்ணை ஏமாற்றி ஒருவன் தலையில் கட்ட அவன் அவளை சேர்த்துக் கொள்கிறான். காதல் போயின் நாவலில் அழகுத் திமிரில் இருக்கும் பெண்ணுக்கு அம்மை போட்டு திருந்துகிறாள். கீதமடி நீ எனக்கு என்ற நாவலில் அழகான குடும்பம் இருந்தும் இன்னொரு பெண்ணால் ஈர்க்கப்படும் கணவன். கண் சிமிட்டும் மின்மினிகள் என்ற நாவலில் அழகான, பணக்காரக் குடும்பத்தில் கல்யாணம் ஆக வேண்டும் என்று ஏங்கும் இளம் பெண். மணல் வீடுகள் வாடகைத்தாய்க்கும் கணவனுக்கும் நடுவில் காதல் என்ற கரு. நினைவே இல்லையா நித்யா மில்ஸ் அண்ட் பூன் காதல் கதை. அந்தத் தரத்துக்கு நல்ல கதை. ஓடும் மேகங்களே என்ற நாவலில் காதலனோடு மனைவியை இணைத்து வைக்கும் கணவன். பறப்பதற்கு முன் கொஞ்சம் என்ற நாவலில் மறுமணம் செய்து கொள்ளும் தாய். தூண்டில் மீன்கள் என்ற நாவலில் மனைவியை ஏமாற்றி இன்னொருத்தியையும் மணம் செய்து கொள்ளும் ஒருவன்; அடுத்த பெண்ணைத் தேடும்போது இந்த இரு பெண்களும் அவனைப் பிரிந்து குடும்பமாக வாழ்கிறார்கள். துள்ளுவதோ இளமை என்ற நாவலில் பிறந்த வீட்டில் அன்பு கிடைக்காத பெண் புகுந்த வீட்டின் பழக்கங்களை ஏற்க சிரமப்படுகிறாள். வீணையில் உறங்கும் ராகங்கள் குறுநாவலில் வீட்டை விட்டு ஓடிப்போகும் பெண் ஏமாற்றப்பட்டு திரும்பி வரும்போது அப்பாவும் தங்கையும் அவளை சுலபமாக ஏற்றுக் கொள்கிறார்கள். விரல்களை மீட்டும் வீணை குறுநாவலில் விவாகரத்தான மனைவிக்கு மறுமணம் ஆன பிறகு முதல் கணவன் தன் குழந்தைக்குப் போராடுகிறான். விரலோடு வீணை குறுநாவலில் ஏழைப் பெண், பணக்காரக் கதாநாயகன், அத்தை பெண்ணோடு கல்யாணம். அசோகவனம், நெஞ்சின் நெருப்பு, நிறங்கள், நிழல்கள் சுடுவதில்லை, ஒரு நிமிடம் தா, பூ மலரும், திசை தேடும், விஷம் மாதிரி குறுநாவல்களெல்லாம் ஒரு வரி கதைச்சுருக்கம் எழுதும் அளவுக்குக் கூட வொர்த் கிடையாது, மகா தண்டம்.
த.இ. விமானங்களைத் தவிர்த்த இந்துமதியை முழுமையாக நிராகரிக்கிறேன்.
தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் வணிக எழுத்து, தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள்
Like this:
Like ஏற்றப்படுகின்றது...