போன பதிவில் க.நா.சு.வின் விமர்சன அணுகுமுறையைப் பற்றி கொஞ்சம் எழுதி இருந்தேன். என்னை விட ஜெயமோகன் பிரமாதமாக அவரது அணுகுமுறையை பற்றி க.நா.சு.வின் தட்டச்சுப் பொறி என்ற கட்டுரையில் எழுதி இருக்கிறார். அவரது வார்த்தைகளில்:
அவரது துல்லியமான இலக்கிய ரசனை நாம் அறிந்ததுதான். திட்டவட்டமாக இலக்கிய ஆக்கங்களை ஒப்பிட்டுத் தரப்படுத்தி மதிப்பிட அவரால் முடியும். அவ்வாறு அடையப் பெற்ற தன் முடிவுகளை எந்தவித ஐயமும் மழுப்பலும் இல்லாமல் அவர் முன்வைப்பார். ஆனால் க.நா.சு தன்னுடைய ரசனையை அல்லது முடிவை முன்வைத்து வாதிடுவதில்லை. ‘என் வாசிப்பிலே இப்டி தோண்றது. நீங்க வாசிச்சுப் பாருங்கோ’ என்ற அளவுக்கு மேல் அவரது இலக்கிய விவாதம் நீள்வதில்லை. அங்கும் அதைத்தான் அவர் சொன்னார்.
அவருக்கு இலக்கிய ரசனையை விவாதம் மூலம் வளர்க்கமுடியும் என்பதில் நம்பிக்கை இல்லை. இலக்கிய ரசனை என்பது அந்தரங்கமான ஓர் அனுபவம் என அவர் நம்பினார். ஒவ்வொருவருக்கும் அது ஒவ்வொரு தளத்தில் நிகழ்கிறது. வாசகனின் வாழ்வனுபவங்கள், அவன் அகம் உருவாகி வந்த விதம், அவனுடைய உணர்ச்சி நிலை ஆகியவற்றுடன் பிணைந்தது அது. ஆகவே வாசக அனுபவத்தைப் பரிமாறிக் கொள்ள முடியாது. இலக்கிய ரசனையை வளர்க்க இலக்கியங்களை வாசிப்பது மட்டுமே ஒரே வழி. அதற்கு நல்ல இலக்கியங்களை சுட்டிக் காட்டினால் மட்டுமே போதுமானது.
க.நா.சு தமிழின் தலைசிறந்த விமர்சகர் என்று சொல்லப்படுகிறார். ஆனால் அவர் இலக்கிய விமர்சனம் என்று சொல்ல அதிகமாக ஏதும் எழுதியதில்லை. அவருக்கு இலக்கியக் கோட்பாடுகளில் நம்பிக்கை இல்லை. இலக்கியத்தை வகைப்படுத்துவதிலும் ஆர்வமில்லை. ஆக அவரால் செய்யக் கூடுவது இலக்கிய அறிமுகம், இலக்கிய வரலாற்றுக் குறிப்புகள், இலக்கியப் பரிந்துரைகள் ஆகிய மூன்றுமே. மூன்றையும் ஒட்டுமொத்தமாக இலக்கிய இதழியல் எனலாம். அவர் சலிக்காமல் செய்து வந்ததும் அதுவே.
‘விமர்சகன் ஒரு முன்னுதாரண வாசகன்’ என்ற கூற்றுக்கு மிகச் சிறந்த உதாரணம் அவர். அவர் விமர்சகர் அல்ல என்பவர்கள் கூட அவரது காலகட்டத்தின் மிகச் சிறந்த தமிழ் வாசகர் அவரே என்று எண்ணினார்கள். அவரது கருத்துக்களை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டினார்கள். அவருடன் தொடர்ந்து விவாதித்தார்கள். இலக்கிய ஆக்கங்கள் தேடுவது இத்தகைய மிகச் சிறந்த வாசகர்களையே. எந்த இடத்திலும் நல்ல வாசகர்களை இலக்கியப் படைப்பு கண்டடைகிறது. ஆகவேதான் இலக்கியம் என்ற தொடர்ச்சி நீடிக்க முடிகிறது. எந்த ஒரு நல்ல வாசகனும் உள்ளூர க.நா.சு.வுடன் தன்னை அடையாளம் காண்பான். அவர் சொல்லும் முடிவுகளை அவன் தன் முடிவுகளுடன் ஒப்பிடுவான். அவரை நெருங்கி வருவான். டெல்லியில் நிகழ்ந்தது அதுவே. இலக்கியம் நுண்ணுணர்வு மிக்க மனங்களை நோக்கிப் பேசுகிறது, அந்த மனங்களில் அன்று மிக நுண்மையானது க.நா.சுவின் மனம். ஆகவேதான் அவர் வாசகத் தரப்பின் தலைமைக் குரலாக ஒலித்தார். இலக்கிய விமர்சகராகப் பங்களிப்பாற்றினார். ஒரு வேளை அவர் ஒரு வரிகூட எழுதாமலிருந்தாலும் கூட அவர் இலக்கிய விமர்சகராகவே கருதப்படுவார்.
நான் சிறந்த வாசகன் என்றே நானே சொல்ல மாட்டேன். எனக்குப் பரந்த வாசிப்பு உண்டு, ஆனால் ஆழ்ந்த வாசிப்பு உண்டா என்பது எனக்கே சந்தேகம்தான். ஒரு படைப்பு என்னுள் ஒட்டுமொத்தமாக ஏற்படுத்தும் விளைவுகளை நான் மீண்டும் மீண்டும் ஒற்றைப் புள்ளியில் சுருக்கி விடுகிறேன். விஷ்ணுபுரம் என்றால் புரண்டு படுக்கும் அந்த பிரமாண்டமான கரிய சிலை என்னுள் ஏற்படுத்தும் பிரமிப்புதான். அஜிதனின் தத்துவ விவாதங்களும், சங்கர்ஷணனின் காவியமும் அந்த சிலையால் வெகு தூரம் பின்னால் தள்ளப்பட்டுவிடுகின்றன. To Kill A Mockingbird என்றால் அப்பா-மகள் உறவுதான். அன்றைய கறுப்பர்களின் நிலையோ, நிற வெறி சூழ்நிலையோ, பூ ராட்லியின் சித்திரமோ ரொம்பப் பின்னால்தான் இருக்கின்றன. அப்படி ஒற்றைக் குவியமாக சுருக்குவதை நிறுத்தினால்தான் வாசிப்பின் ஆழம் கூடும், அப்படி ஆழம் கூடினால்தான் க.நா.சு.வின் லெவலை நான் என்றாவது நெருங்க முடியும் என்று தோன்றுகிறது.
அவரிடமிருந்து நான் வேறுபடுவது ஒரு விஷயத்தில் மட்டும்தான் – எனக்கு இலக்கிய ரசனை விவாதத்தின் மூலம் மேம்படும் என்ற நம்பிக்கை உண்டு. கலைந்து கிடக்கும் எண்ணங்களை பேசுவதின் மூலம் சில சமயம் தொகுத்துக் கொள்ள முடிந்திருக்கிறது.
முழுக் கட்டுரையையும் படித்துப் பாருங்கள். முடிந்தால் க.நா.சு.வின். பட்டியல்களைப் பற்றிப் பேசும் இந்தக் கட்டுரையையும் படித்துப் பாருங்கள்.
நீங்கள் எப்படி? உங்களுக்கு இலக்கியக் கோட்பாடுகளில் நம்பிக்கை உண்டா?
தொகுக்கப்பட்ட பக்கம்: இலக்கிய விமர்சனம், க.நா.சு. பக்கம், ஜெயமோகன் பக்கம்
One thought on “க.நா.சு. – நண்பேண்டா!”