உபேந்திர கிஷோர் தாஸ் எழுதிய மோலோ ஜோன்ஹோ (Mala Janha) (1928) ஒரு சாதாரண செண்டிமெண்டல் மெலோட்ராமா. கதையின் நாயகி சத்யபாமா நாத் என்பவனை விரும்பியும் எப்போதும் அவனை நாத் அண்ணா என்றே குறிப்பிடுவது மட்டுமே கொஞ்சம் நுட்பமான இடம். நாவலின் தமிழாக்கத்தை (மொழிபெயர்ப்பு: பானுபந்த்) இன்டெர்நெட் ஆர்க்கைவ் தளத்தில் படிக்கலாம்.
இந்த நாவலைப் பற்றி நான் குறிப்பிட ஒரே காரணம்தான். இந்த நாவலின் முன்னுரை ஒரிய மொழி இலக்கியத்தைப் பற்றி ஒரு குறுக்குவெட்டுப் பார்வையைத் தருகிறது. மோலோ ஜோன்ஹோவைத் தவிர்த்து நான் படித்த ஒரே ஒரிய மொழிப் புத்தகம் ஃபகீர் மோஹன் சேனாபதி எழுதிய சா மனா ஆட் குண்ட (Six Acres and a Third) மட்டும்தான். எனக்கு இந்த அறிமுகம் பயனுள்ளதாக இருந்தது. அறிமுகப் பகுதியை மட்டும் அப்படியே தட்டச்சிட்டிருக்கிறேன். எழுதிய ஜானகி வல்லப் மஹந்திக்கும், புத்தகத்தைப் பதித்த நேஷனல் புக் ட்ரஸ்டுக்கும் நன்றி!
சின்ன எச்சரிக்கை: அறிமுகப் பகுதி ஆங்கிலத்தில் எழுதி தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்க வேண்டும். வார்த்தைகளை நேரடியாக மொழிபெயர்த்திருக்கிறார், நன்றாக வரவில்லை.
இந்த அறிமுகம் எழுபதுகளில் – 1972க்குப் பிறகு – எழுதப்பட்டது என்று புரிந்தாலும் எந்த வருஷத்தில் எழுதப்பட்டது என்று நிச்சயமாகத் தெரியவில்லை.
நவீன ஒரிய இலக்கியம் – ஒரு அறிமுகம்
இந்தியாவின் பிற மாநில மொழிகளைப் போலவே ஒரிய மொழியிலும் நாவல் ஒரு புதுவிதப் படைப்பாக பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசி 30 வருஷங்களில் உருப்பெற்றது. ஆங்கில நாவல்களைத் தழுவியவையாக இருந்தன, இந்தப் புதிய கற்பனைகள். உமேஷ்சந்திர சர்க்காரால் எழுதப்பட்டு 1888-இல் பிரசுரமான பத்மமாலி, ஒரிய மொழியின் முதல் நாவலாகக் கருதப்படுகிறது. இதற்குப் பத்து வருஷங்களுக்கு முன் ராம்சங்கர் ராயால் எழுதப்பட்ட ஸௌதாமினி என்ற சரித்திர நவீனம் கொஞ்ச நாள் வரை ஒரு தற்காலிகமான மாதாந்திர சஞ்சிகையில் தொடர்கதையாக வந்துகொண்டிருந்தது. ஆனால் அது புத்தகமாக வெளியாகவே இல்லை – ஒரு வேளை முற்றுப் பெறாதாதனால் இருக்கலாம். அதனால் ஒரிய மொழியின் முதல் நாவலாசிரியாரகும் பெருமை உமேஷ்சந்திரரையே சாருகிறது.
பத்மமாலி ஒரு சரித்திர நாவல். நீலகிரி என்ற ஒரியா பழங்குடி ஒன்றில் 1835-இல் நடந்த ஒரு உண்மையான நிகழ்ச்சியைஅ அடிப்படையாய்க் கொண்டு எழுதப்பட்ட கதை இது. சரித்திரப் பிரசித்தி பெற்ற ஒரு நிகழ்ச்சியையோ, சரித்திரப் புகழ் கொண்ட எந்த தனி நபரைப் பற்றியோ இந்தக் கதை எழுதப்படவில்லை. அடுத்தடுத்த இரு நாடுகளில் கிளம்பிய கலகம், போர், பெண் கடத்தல் முதலிய மயிர்க்கூச்செறிய வைக்கும் நிகழ்ச்சிகளை இந்தக் கதை விவரிக்கிறது. இந்த நூல் அக்காலத்து ஒரியா மக்களின் வாழ்க்கையை உண்மையாய்ச் சித்தரிக்கிறது என்பதில் ஐயமில்லை. ஒரிஸ்ஸாவில் ஆங்கில அரசு நிலைபெற்ற 30 வருஷங்களுக்குள் அங்கே வழங்கிய சமூக வாழ்க்கையை விவரிக்கிறது இந்தக் கதை. அக்காலத்தில் அந்நாட்டில் நிலவிய அக்கிரமங்களும், திருட்டும், நீதிமுறையற்ற சூழ்நிலையும், கலகமும், பூசலும் தெளிவாய் விவரிக்கப்படுகின்றன. ஒரிய நாவல் இலக்கியத்தில் ஆரம்பகாலத்தில் இது எழுதப்பட்டது என்றாலும் இதன் நடை சரளமாகவும், பாராட்டுக்குரியதாகவும் இருக்கிறது. இன்றும் இது விரும்பிப் படிக்கப்படுகிறது.
அடுத்து ராம்சங்கர் என்பவர் நாவலாசிரியராக விளங்கினார். விலாசினி என்ற அவருடைய கதை (1892-93) மராட்டியரால் ஆளப்பட்ட ஒரிஸ்ஸாவில் நிகழ்ந்த அநீதி, அக்கிரமங்கள், பஞ்சம் முதலியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு காதல் கதை.
இப்படி சரித்திரத்தையும் கற்பனையையும் இணைத்து எழுதும் பாணி பழக்கத்திலிருக்கும்பொழுது இலக்கிய யுகபுருஷர் ஃபகீர் மோஹன் தோன்றினார். அவரால் எழுதப்பட்ட சா மனா ஆட் குண்ட (முதல் பிரசுரம் 1898), லச்மா (1903), மாமூ (1913), பிராயச்சித்த (1915) ஆகிய ஒவ்வொரு நாவலும் ஒரிய இலக்கியத்தில் குறிப்பிடத்தக்கனவாய் கருதப்படுகின்றன. சரித்திர நாவலான லச்மாவைத் தவிர்த்து பிற மூன்று நாவல்களிலும் அவர் பேராசை, அகங்காரம் முதலிய மனித குணங்களின் உண்மையான உருவத்தையும் ஆழத்தையும் சித்தரித்துள்ளார் என்பதுடன் சமூகத்திலுள்ள சாதாரண ஆண்-பெண்களின் வாழ்க்கை யதார்த்தங்களையும் தெளிவாய் எடுத்துக் காட்டியுள்ளார். ஃபகீர் மோஹனின் எழுத்து நடையும் வருணனைகளும் எளிமையாகவும் கவர்ச்சிகரமாகவும் இருக்கின்றன. நகைச்சுவையைத் திறமையுடன் கையாண்டு அதற்கேற்றவாறு பாத்திரங்களை உருவாக்கி நடமாட வைத்து ஒரிய இலக்கியத்தில் ஒரு புதிய எழுத்துப் பாணியைப் புகுத்தி வளர்த்த நிகரற்ற எழுத்தாளராய் அவர் மதிக்கப்படுகிறார்.
இவருடைய வழியைப் பாராட்டி பின்பற்றிய சமகால ஆசிரியர்கள் பல இருந்தனர். ஆனால், அவருடைய மறைவிற்குப் பிறகு ஒரிய இலக்கியத்தில் ஒரு விதத் தளர்ச்சி உண்டாகிவிட்டது. இந்தத் தளர்ச்சியை அகற்றி, ஒரிய இலக்கியத்தை மக்களுக்கு உகந்ததாக்கப் பெரிதும் முயன்றார், முகுர் பத்திரிகையின் ஆசிரியர் பிரஜசுந்தர் தாஸ் என்பவர். அவர் மூலமாக முகுர் உபன்யாஸ் கிரந்தமாலா வெளிவர ஆரம்பித்தது. சஹகார் பத்திரிகையின் ஆசிரியருடைய முயற்சியால் ஆனந்த லஹரி உபன்யாஸ் மாலா என்ற தொகுப்பும் நாவல்கள் மட்டுமே அடங்கிய பாரதி என்ற மாத சஞ்சிகையும் பிரசுரிக்கப்பட்டன. இவ்விரு ஸ்தாபனங்களின் பிரசுர ஏற்பாடுகளால் பல ஒரிய எழுத்தாளர்களின் கதைகள அச்சாகி வெளிவருதல் சாத்தியமாகிற்று.
ஃபகீர் மோஹனுக்குப் பிறகு வந்த நாவலாசிரியர்களுள் சிந்தாமணி மஹந்தி, குந்தல குமாரி ஸாபத் என்ற இருவர் பெருமை பெற்றுள்ளனர். சிந்தாமணி சமூகக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட நாவல்கள எழுதினார். இவைகளில் கதையே முக்கியமாயிருக்கிறது. பாத்திரங்களின் மன இயல்புகளையும் மாறுபாடுகளையும் பற்றிய ஆராய்ச்சி இந்த நாவல்களில் அரிது என்றே சொல்ல வேண்டும். ஐந்து நாவல்களை எழுதியுள்ள குந்தல குமாரி பெண்களின் இயல்புகளைச் சித்தரிப்பதில் தனித் திறமையுள்ளவராக விளங்குகிறார். தன் பாத்திரங்களை முரண்பாடுள்ளவர்களாகவும், முற்போக்கானவர்களாகவும், கூடவே மரபைப் போற்றுகிறவர்களாகவும் சித்தரித்துள்ளார்.
இச்சமயம் சரித்திரக் கதைகளை ஆதாரமாகக் கொண்ட பல நாவல்கள் உருவாயின. இப்படிப்பட்ட நூல்களை வெளியிட்டவர்களின் பட்டியலில் சிந்தாமணி ஆசார்ய, தாரிணி சரண் ரத், ராமச்சந்திர ஆசார்ய, ஸ்ரீதர் மஹாபாத்ர முதலியவர்கள் அடங்குவர். முரண்பாடுகளற்ற, ஜனரஞ்சகமான நாவல்களும் சில வெளிவந்தன. நந்தகிஷோர் பல் எழுதிய கனகலதாவும் (1925), வைஷ்ணவ சரண்தாஸின் மோனே மோனேயும் (1926) உபேந்திர கிஷோர் தாசின் மோலோ ஜோன்ஹோவும் (உயிரற்ற நிலா 1928) பிரசித்தமானவை. ஒரிய இலக்கியத்தில் மனோதத்துவத்தை ஆராயும் முதல் படைப்பாக மோனே மோனே கருதப்படுகிறது. தொடர்ந்து, இரண்டாம் உலகப்போர் ஆரம்பிக்கும் முன்பிருந்து சுதந்திரப் போருக்கு அப்புறம் உள்ள இடைக்காலத்தில் கானுசரண் மஹந்தி, கோபிநாத் மஹந்தி, காலிந்திசரண் பாணிகிரஹி, கோதாவரிஷ் மஹாபாத்ர, ராஜ்கிஷோர் பட்நாயக், நித்யானந்த மஹாபாத்ர, கமலாகாந்த் தாஸ், சக்ரதர் மஹாபாத்ர முதலிய பல நாவலாசிரியர்கள் தங்கள் எழுத்தால் ஒரிய இலக்கியத் தரத்தை உயர்த்தியதுடன், தங்களுக்கும் புகழையும் பெருமையையும் தேடிக் கொண்டனர்.
பிற நாட்டின் நாவல்களை ஆதாரமாகக் கொண்டு அந்தக் கதைகளை உத்கல் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு மாற்றி அமைப்பதில் கோதவரிஷ் மிச்ர, கோதாவரிஷ் மஹாபாத்ர என்று இரு எழுத்தாளர்களும் முன்னோடிகளாய் அமைந்தனர். காலிந்திசரணின் மாடிரோ மோனிஷோ (மண் பொம்மைகள்) ஒரிய இலக்கியத்தில் மட்டுமன்றி நம் நாட்டு பிற மொழி இலக்கியங்களிலும் பிரசித்தி பெற்றுள்ளது. யதார்த்தமும் லட்சியமும் சமமாய் இழைந்திருக்கும் இந்த நாவல் ஒரு உன்னதமான படைப்பாகக் கருதப்படுகிறது. தியாகம், அடக்கம், பொறுமை, தாராளம், அகிம்சை முதலிய குணங்களின் இருப்பிடமாகச் சித்தரிக்கப்பட்டுள்ள விவசாயி பாஜூவின் வாழ்க்கைச் சித்திரம் மிகவும் மேன்மையானது. தீயவருடைய சதியில் அகப்பட்டுக் கொள்ளும் ஒரு ஏழை விவசாயி தனது வாழ்க்கையில் அடிக்கும் புயலை – சங்கடங்களை தன் தியாக மனப்பான்மையால் பொறுத்துச் சமாளித்து முன்னேறுவதை விவரிக்கிறது இந்நாவல்.
ராஜ்கிஷோர் பட்நாயக்கின் நாவல்களில் மனோதத்துவ ஆராய்ச்சியை விட அன்பும், தன் உணர்ச்சிகளிலேயே மூழ்கியிருக்கும் அனுபவமும் அதிகமாய்ப் புலப்படுகின்றன. இதய மர்மங்களின் சோதனை இவருடைய படைப்புகளின் முக்கிய அம்சம். நித்யானந்த மஹாபாத்ரவின் நூல்களிலும் மனோதத்துவ ஆராய்ச்சியும், உணர்ச்சி வேகத்தால் ஏற்படும் பலாபலன்களின் வர்ணனையும், கற்பனையும் ஒன்றாய் சேர்ந்து இழைகின்றன. சமகால அரசியல் உணர்வு, அகிம்சாபூர்வமான இனப்பெருமை, அதன் விழைவுகள் இவற்றைப் பிரதிபலிக்கும் நாவல்களை எழுதியவர்களில் ஹரேகிருஷ்ண மஹதாபும், ராம் பிரசாத் சிங்கும் முக்கியமானவர்கள்.
தற்கால ஒரிய நாவலாசிரியர்களுள் கானுசரணை விட அதிக நூல்களை வெளியிட்டவர்களோ, மக்களின் ஆதரவை அதிகம் பெற்றவர்களோ வேறு எவரும் இல்லை. கடந்த ஐம்பது வருஷங்களில் ஐம்பதிற்கும் மேற்பட்ட நாவல்களைப் பிரசுரித்துள்ளார். அவருடைய கா என்ற நாவலுக்கு சாஹித்ய அகாடமியின் விருது கிட்டியுள்ளது. அவருடைய படைப்புகள் காதல் கதைகள்; வெகு திறமையுடம் பெண் மனதையும், அதனுடன் நடக்கும் போராட்டத்தையும் சித்தரித்துள்ளார். அவருடைய எழுத்து நடை எளிமையும், மென்மையும் உணர்ச்சி உள்ளதாயுமிருக்கிறது. வர்ணனைப் பாணியிலும் பலவிதப் புதுமைகளைப் புகுத்தியுள்ளார்.
இவருடைய தம்பி கோபிநாத், ஒரிய நாவல் இலக்கிய உலகில் விசேஷமாய்க் கருதப்படுபவர். முக்கியமாய் பழங்குடிகளின் ஜீவனைச் சித்தரிப்பதில் கை தேர்ந்தவர். அவருடைய அம்ருத் சந்தான் என்ற படைப்பு சாஹித்ய அகாடமியின் பரிசு பெற்று அவருக்கும் ஒரிய நாவல் இலக்கியத்துக்கும் பெருமை தேடித் தந்துள்ளது. கதை முக்கியமில்லை அவருடைய நாவல்களில். ஆனால் நுணுக்கமான மனோதத்துவ ஆராய்ச்சியிலும், ஒவ்வொரு சம்பவத்தையும் அலசிப் பார்ப்பதிலும், சூழ்நிலையை உயிர்க்களையுடன் சித்தரிப்பதிலும் அவருடைய நாவல்கள் ஈடிணையற்றூ விளங்குவன. பர்ஜா, தாதிபூடா, அம்ருத் சந்தான் முதலிய நாவல்களில் வனங்களின் இயற்கை அழகையும் பழங்குடி மக்களின் எளிமையான, அழகான, சிலிர்ப்பளிக்கும் வாழ்க்கையையும் ஆசிரியர் திறமையுடன் விவரித்திருக்கிறார். அவருடைய எழுத்து நடையும், வர்ணனைகளும் வித்தியாசமாகவும் விசேஷமாகவும் இருக்கின்றன. எளிமை, புதுமை, கவிநயம், வேகம் ஆகிய் யாவும் மிளிருகின்ற வசன நசை அவருடையது. அவருடய மாடி மடால் நாவலுக்கு பாரதீய ஞானபீடத்தின் சன்மானமும் கிட்டியுள்ளது.
இரண்டு உலகப் போர்களுக்கு இடைக்காலத்தில் எழுதப்பட்ட நாவல்களில் பெரும்பாலும் சமூகரீதியான மாறுதல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. மிக சமீபத்திய நாவல்களில் லட்சிய நோக்கை விட யதார்த்த நோக்கு அதிகம் இடம் பெறுகிறது. ஃப்கீர் மோஹனின் காலத்தில் பழமையான நாக்ரீகத்தையும், பண்பையும் எதிர்க்கும் குரல் எழும்பியது என்றாலும், அது ஜாதி, பரம்பரை பேதங்களை ஒழிக்க எந்த விதத் தெளிவான வழியையும் காட்டவில்லை. ஆனால் சமகால நாவல்களில் எல்லாப் பாத்திரங்களும் நிலை பெற்றுள்ள சமூக அமைப்பின் எதிரிகளாக இருக்கிறார்கள். நிறைவேறாத காதலின் கொடிய விளைவுகளையும், தவறிழைக்கும் குற்றவாளியையும் அனுதாபத்துடனும், தர்க்க ரீதியாகவும் அறிமுகப்படுத்துவதில் ஆவலுடையவர்களாக இருக்கின்றனர் தற்கால நாவலாசிரியர்கள். மேலும், ஜாதி, சமூக நியமங்கள் மற்றும் பொருளாதார ரீதியான சீர்குலைவுகளின் சித்திரத்தையும், அமைப்புகளுக்கெதிரான விமரிசனத்தையும் இந்நாவல்களில் காணலாம். அறிவாற்றலும், பரந்த நோக்கும் கொண்ட வாழ்க்கையின் உயர்வை வற்புறுத்தும் நாவல்களையும் வெளியிட்டனா பல எழுத்தாளர்கள்.
தற்கால நாவலாசிரியர்களுள் ஞானேந்திர வர்மா, சுரேந்திர மஹந்தி, வசந்தகுமாரி பட்நாயக், விபூதி பட்நாயக், சாந்தனுகுமார் ஆசார்ய முதலியவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.
தொடர்புடைய சுட்டிகள்: இந்திய இலக்கியம்
Rise of the Oriya Novel
ஒரிய இலக்கியம் – விக்கி குறிப்பு
நான் படித்த ஒரே ஒரிய மொழி நாவல்