பா.ராகவனின் ஓரினச்சேர்க்கை பின்புலச் சிறுகதை

pa_raghavanசமீபத்தில் பா.ரா. எழுதிய சிறுகதை ஒன்றைப் பற்றி – இறுதிச் சடங்கு – நண்பர்களுக்குள் காரசாரமான விவாதம் நடந்தது.

வழக்கம் போல பாலாஜிதான் ஆரம்பித்தார். சுட்டி கொடுத்துவிட்டு பா.ரா. என்ன சொல்ல வராருன்னு ஒண்ணும் தெரியாத சின்னப்பிள்ளை மாதிரி எங்கள் எல்லாரையும் கேட்டார். முத்துகிருஷ்ணனின் பதில்:

there is no “reveal” in the story due to the last line. Pun not intended. 🙂 Actually I thought “Ramachandran” unzipped his pants…I was super confused. Then understood “he” un zipped. So I was back to normal confused.

பாலாஜி: ஓரினச் சேர்க்கையாளர்கள் செக்ஸ் வெறியர்கள், துணைவனின் பிணம் அடுத்த அறையில் இருக்கும்போதும் சுய இன்பத்தில் ஈடுபடுபவர்கள் என்கிறார் பா.ரா. இது சுத்த மடத்தனம்.

முகின்: இது அவனுடைய முதல் இரவும் கூட.

பாலாஜி: என்னது? சுய இன்பத்தில் ஈடுபடுவது முதலிரவா?

முகின்: கதையில் உடல் ரீதியான பந்தம் மனதுக்கும் வந்தது என்று வருகிறது, இது அவன் மனதளவில் முதலிரவாக இருக்கக் கூடும்.

ஆர்வி: நீங்கள் இருவரும் ஏன் ஓரினச் சேர்க்கையாளர்களின் செக்ஸ் வெறி துணைவனின் பிணம் அடுத்த அறையில் இருக்கும்போதும் சுய இன்பத்தில் ஈடுபட வைக்கும் என்று பா.ரா. சொல்கிறார் என்ற முடிவுக்கு வருகிறீர்கள்? பிரியமான மனைவி/கணவன்/அம்மா/அப்பா/மகன்/மகள் பிணம் எரிக்கப்படவில்லை, ஆனால் இந்த பாழும் வயிறுக்கு பசிக்குதே என்ற அழுகையை நான் சில முறை நேராகவே கேட்டிருக்கிறேன், அந்த அழுகுரலைப் பற்றி நிறைய முறை எழுதப்பட்டு அது ஒரு தேய்வழக்காகவே (cliche) ஆகிவிட்டது. பா.ரா. அந்த கருவை இன்னும் நீட்டுகிறார், அவ்வளவுதான். ஜெயகாந்தன் கணவன் பிரியமான மனைவி இறந்த சில நாட்களுக்குள்ளேயே மறுமணம் செய்து கொள்வதாக ஒரு சிறுகதை எழுதி இருக்கிறார், கதை பேர் நினைவு வரவில்லை…

முகின்: ஆனால் பசியும் காமமும் வேறுவேறு.

ஆர்வி: வேறு என்றால் வேறுதான்; காமம் வாழ்வின் அடிப்படை உந்துவிசை என்று பார்க்கும்போது ஒன்றேதான். இது வாழ்க்கையின் சாதாரண சம்பவமாகக் கூட இருக்கலாம். நெருக்கமானவர் பிணம் கிடக்கும்போதும் – நல்ல காஃபியின் மணம் எச்சிலை ஊற வைக்கலாம்; கிரிக்கெட்/டென்னிஸ்/ஃபுட்பால் மாட்சில் என்ன நடக்கிறது என்று நாம் நின்று பார்க்கலாம்; ஃபேஸ்புக்கில் ஏதாவது அப்டேட் வந்திருக்கிறதா என்று செக் செய்யலாம். பா.ரா. அப்படிப்பட்ட செயல்களின் முரண்பாட்டை (irony) காட்டவும் இதை எழுதி இருக்கலாம். எதை நினைத்து எழுதினார் என்பது வாசகன் தேர்வு. இது ஓரினச்சேர்க்கையாளர்களின் குணம் என்று அவர் சொல்ல வரவில்லை என்று நான் நிச்சயமாகக் கருதுகிறேன்.

பாலாஜி: ஆர்வி, இந்தக் கதையில் உங்களுக்கு ஹோமோஃபோபியா தெரியவில்லையா? ஆண்-பெண் உறவு என்றால் அது உடலுறவிலிருந்து மனரீதியான பந்தத்துக்கு சென்றது என்று எழுதுவாரா? இதையே ஏன் ஒரு கணவன் மனைவி இறந்துகிடக்கும்போது சுயஇன்பம் காண்பதாக எழுதி இருக்கக்கூடாது? ஓரினச்சேர்க்கை பின்புலத்தை எதற்காக கொண்டு வந்திருக்கிறார்? ஓரினச்சேர்க்கை உறவு என்பது உடல் கவர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது என்று சொல்லாமல் சொல்லத்தானே?

ஆர்வி: இதையே நான் வேறு விதமாகக் கேட்கிறேன். இது அப்படியே மாற்றி ஒரு கணவன் சுயஇன்பம் காண்கிறான் என்று எழுதப்பட்டிருந்தால் நீங்கள் ஆண்-பெண் உறவு என்பது உடல் கவர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது, ஆனால் ஓரினச்சேர்க்கை அப்படி அல்ல என்று உணர்ந்திருப்பீர்களா?

அருணகிரி: ஆண்-பெண் என்றால் அந்தக் கணவன் ஒரு pervert என்று நினைத்திருப்போம். ஓரினச்சேர்க்கையும் ஆண்-பெண் உறவும் அடிப்படையில் ஒன்றுதான் என்பது சமூகத்தால் ஏற்கப்படவில்லை. பா.ரா.வின் முந்தைய எழுத்துக்களை வைத்தும் அப்படி சொல்ல முடியாது. அப்படி இல்லாதபோது இந்தச் சிறுகதை ஓரினச்சேர்க்கையாளர்களை தாழ்த்துவதாகத்தான் பொருள் கொள்ள முடியும்.

முகின்: முரண்பாடு (irony) என்று வைத்துக் கொள்ள முடியவில்லை, அந்தக் கோணம் வலுவாக வெளிப்படவில்லை.

அருணகிரி: அமெச்சூர்தனமான எழுத்து வேறு.

ஆர்வி: அருணகிரி, நம் கோணங்களில் உள்ள அடிப்படை வித்தியாசம் – இந்த நிலையில் சுயஇன்பம் என்பதை நான் perversion ஆகக் கருதவில்லை, நீங்கள் கருதுகிறீர்கள். இது அபூர்வமாக இருக்கலாம், ஆனால் மனித இயல்பே. மேலும் இது புனைவுலகம். பா.ரா. முன்னால் என்ன எழுதினார் என்பதைப் பற்றி நமக்கென்ன? அவர் ஓரினச்சேர்க்கையாளர்களை தாழ்த்தி வேறு ஒரு சிறுகதை எழுதி இருக்கலாம். அதற்கும் இதற்கும் என்ன தொடர்பு? ஒவ்வொரு கதையையும் அதன் தனி உலகத்துக்குள்தான் படிக்க வேண்டும்.

அருணகிரி: எதையுமே மனித இயல்பு என்று சொல்லிவிடலாம்.

பாலாஜி: பா.ரா. மறைமுகமாக ஓரினச்சேர்க்கையாளர்களைத் தாக்குகிறார். ஓரினச்சேர்க்கை உடல் ஆசைகளால் மட்டுமே ஏற்படுவது, அதனால்தான் துணைவனின் பிணம் அடுத்த அறையில் இருக்கும்போதும் இவனால் சுயஇன்பத்தில் ஈடுபடமுடிகிறது என்று எழுதுகிறார். இப்படி ஆண்-பெண் உறவைப் பற்றி அவர் எழுதமாட்டார். இது obvious ஆகத்தானே இருக்கிறது, உங்களுக்குப் புரியவில்லையா ஆர்வி?

ஆர்வி: எனக்கு obvious ஆக இல்லை, அவர் எழுத்தில் இல்லாததை நீங்கள் வாசித்திருக்கிறீர்கள் என்றே கருதுகிறேன்.

பாலாஜி: வரிகளுக்குள் படிக்கக் கற்றுக் கொள்ளுங்கள், ஆர்வி!

இசைவு வரப்போவதில்லை என்று இங்கே நிறுத்திக் கொண்டோம். இந்தக் கதையைப் படித்தவர்கள் என்ன நினைக்கிறீர்கள்? பாலாஜியைப் போல மறைமுகத் தாக்குதல் என்றா? இல்லை என்னைப் போல அடிப்படை மனித விழைவைப் பற்றி என்றா? யாருடைய கோணம் பொதுவாக அப்பீல் ஆகிறது என்று பார்க்க ஆவல்…

பிற்சேர்க்கை: நவம்பர் 22 வரை 18 பேர் தாழ்த்துகிறார்கள், 14 பேர் அப்படி இல்லை, 12 பேர் என்ன சொல்ல வருகிறார் என்று தெரியவில்லை என்கிறார்கள். இரண்டு கோணமும் ஏறக்குறைய சமமாக பாப்புலராக இருக்கிறது. ஆனால்:

பா.ரா. இரண்டுமில்லை, இது அவன் தன் துணைவனுக்காக நடத்தும் இறுதிச் சடங்கு என்கிறார். எழுத்தாளன் முக்கியமே இல்லை, வாசகன் அவன்(ள்) இஷ்டத்துக்குப் படித்துக் கொள்கிறான்(ள்) என்ற என் எண்ணத்தை மேலும் உறுதிப்படுத்துகிறார்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் சிறுகதைகள்

24 thoughts on “பா.ராகவனின் ஓரினச்சேர்க்கை பின்புலச் சிறுகதை

  1. ஆர்வி,
    தன்பால் ஈர்ப்பாளர் என்றால் homosexuals, ஓரினச்சேர்க்கையாளர் என்றால் men (women) having sex with men (women) என்று பொருள். ஆகவே, உங்கள் வலைப்பதிவில் ஓரினச்சேர்க்கை என்றுள்ளதைத் தன்பாலீர்ப்பு என்று மாற்றவும்.

    சிறுகதையின் ஆரம்பத்தில் இரு பெயரில்லா ஆண் கதாபாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்படுகிறன. அவர்கள் தன்பால் ஈர்ப்பாளர்கள். ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள். தெளிவாக யோசிக்கிறார்கள். கல்யாணம் செய்துகொள்ள முடிவெடுக்கிறார்கள். பெற்றோரிடம் திருமணம் பற்றி சொல்ல (அல்லது அப்போதுதான் ‘வெளிவர’ (coming out) ) முடிவெடுக்கிறார்கள். நண்பர்களிடம் சொல்ல முடிவெடுக்கிறார்கள். அவர்களிடம் முன்னரே வெளிவந்திருக்கவேண்டும், ஏனென்றால் அவர்கள் இருவரும் எதிர்பால் ஈர்ப்புள்ளவர்களாய் இல்லாததற்கு நண்பர்கள் எந்த ஆச்சரியமும் அடையவில்லை. இருவரில் ஒருவனின் பெற்றோரிடம் வரவேற்பு இல்லை. ஆனால் இருவரும் எந்த சோர்வுமில்லாமல் திருமணத் திட்டத்தைத் தொடர்கிறார்கள். திருமணத்திற்கு முந்நாள் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். தாங்கள் எப்போதும் பெண்மீது ஈர்ப்படையப் போவதில்லை என்று தெளிவாகச் சொல்கிறார்கள். அதேசமயம் “இது ஒடம்புலேருந்து மனசுக்குப் போன ஒறவுடா. கொஞ்சம் பேஜார்தான்.” என்று இருவரில் ஒருவன் சொல்கிறான். அன்றிரவே ஒருவன் விபத்தில் இறந்துபோகிறான். மற்றொருவன் வெகுநேரம் அழுதபின், பாத்ரூமுக்குள் சென்று தன்னின்பம் காண்கிறான்.

    வாசகருக்கு எழும் தன்பால் ஈர்ப்புத் தொடர்பான கேள்விகள் ராமச்சந்திரன் கதாபாத்திரம் மூலமாக கேட்கப்படுகிறது. அவற்றைத் தன்பால் ஈர்ப்புள்ளவரே பதிலளிப்பதுபோல் வருகிறது. திருமணம் செய்துகொள்ளலாம் என்று சொல்லும் குழப்பமில்லாத கதாபாத்திரம்தான், முதிராஇளமையோடு, இவ்வீர்ப்பு உடம்பிலிருந்து மனத்துக்கு போகும் என்று சொல்கிறது. தன்னைப்பற்றியும், தன்னுடைய ஈர்ப்பைப் பற்றி புரிந்துகொண்டிருப்பவன், திருமணத்தைப் பற்றி ஒருமனதாக தெளிவோடு முடிவெடுப்பவன், இதுபோல் (உடலிலிருந்து மனம்) கருதவோ சொல்லவோ மாட்டான். அல்லது அதற்கான சாத்தியங்கள் இக்கதையில் தென்படவில்லை. ஆனாலும், ஒருவன் இறந்தபிறகு மற்றொருவன் தன்னின்பம் அடைவதாகச் சொல்வது, அவனுக்காக இவன் சேர்த்துவைத்திருந்ததை இழப்பதாகக் கொள்வதற்கு இடம் அளிக்கிறது.. தாலியை அறுப்பதை இதற்கு இணையாகக் கொள்ளலாம். ஆனால் கதாபாத்திரங்கள் சரியாக விவரிக்கப்படாமையால் இப்படி பொருள்கொள்வதற்கு சிறிதளவே இடம் இருக்கிறது. சிறுகதையில் இறுதி ஆச்சரியம் ஒன்று வைப்பதற்காகச் செயற்கையாக எழுதப்பட்டதாகவே கருதுவதற்கு இடம் அதிகம்; நான் அப்படித்தான் கருதுகிறேன்.

    ஆண்-பெண் இடையேயான காதல் சமூகத்தால் கட்டமைக்கப்பட்டதே. இயற்கையாக எழும் காமத்தை நாம் பண்பாட்டுக்காக காதல் என்று உன்னதப்படுத்தியுள்ளோம். வீரம் என்பது போரின் உன்னதப்படுத்தல் போல. அதேபோன்றுதான் ஆண்-ஆண் காதலும் ஆண்-ஆண் காமத்தை உன்னதப்படுத்தல். ஆகவே, உடலிலிருந்து மனம்தான் தன்பால்ஈர்ப்பு என்று சொல்லலாம். அது ஒருவகையில் சரியே. ஆனால் அதற்கு நிகராக ஆண்-பெண் ஈர்ப்பும் உடலிலிருந்து மனத்துக்கான ஈர்ப்பே என்று கதையில் வெளிப்பட்டிருந்தால் அது ஒரு வாசகனை நோக்கி கேள்விகளை எழுப்பியிருக்கும். ராமச்சந்திரன் மூலமாக இக்கோணத்தைக் விரிவுபடுத்தியிருக்கலாம். அது இக்கதையில் நடக்கவில்லை.

    தன்பால் ஈர்ப்பு, இருபால் ஈர்ப்பு போன்றவைப் பற்றி வாசகரிடையே தெளிவு மிகவும் குறைவு. ஆகவே, தகுந்த விரிவு இல்லாமல் மறைப்பிரதியாகச் சொல்கிறேன் என்று கதை எழுதுவது, குழப்பமாகவே முடியும். அல்லது எழுத்தாளருக்கு இவற்றைப் பற்றிய புரிதல் குறைவாக இருந்து, அவர் வாசகர் கற்பனைக்கு விட்டிருக்கலாம். ஆனால், ஏற்கனவே சொன்னதுபோல கதாபாத்திரங்களின் ஆழமின்மை இறுதிமுடிவிற்கு அப்பால் ஒரு வாசகன் சிந்திப்பதற்கு இடம் அளிக்கவில்லை.

    – விஜய்.

    Like

  2. விஜய், ஓரினச்சேர்க்கை என்பதும் என் கண்ணில் சரியாகத்தான் இருக்கிறது.

    கேசவமணி, என் போன்ற மரமண்டைகளுக்காக இந்த கதை vs சிறுகதை என்பதை விளக்க முடியுமா?

    Like

  3. தன்பால்ஈர்ப்பு இயற்கையாக உள்ள தன்னுடைய பால்நபர்களின் மீதுள்ள (உடலும் மனமும் சார்ந்த) ஈர்ப்பு. ஓரினச்சேர்க்கை என்பது ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் (பெரும்பாலும் வேறு வழி இல்லாமல்) உடலுறவு வைத்துக்கொள்வதைக் குறிக்கும். இவை இரண்டும் கலைச்சொல்லாக்கங்கள். இக்கதையில் இருவரும் தன்பால்ஈர்ப்புள்ளவர்கள்.

    Like

    1. விஜய், // ஓரினச்சேர்க்கை என்பது ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் (பெரும்பாலும் வேறு வழி இல்லாமல்) உடலுறவு வைத்துக்கொள்வதைக் குறிக்கும். // எனக்குத் தெரிந்து ஓரினச்சேர்க்கை என்ற வார்த்தைக்கு இப்படி எல்லாம் nuances இல்லை.

      Like

  4. கதையை வாசித்தபோதே எனக்கெழுந்த கேள்விகளை இங்கு விவாதத்தின் வழியே கண்டதில் மகிழ்ச்சி… பின் நவீனத்துவ கதைகளில் முடிவை வாசகர்கள் கையில் கொடுப்பது இயல்புதான் என்றாலும் கூட, இந்த கதையில் சற்று வெளிப்படையாகவே ஆசிரியர் முடிவை வெளிப்படுத்திவிட்டார்.. மனைவி இறந்து கிடக்கும்போது கணவன் சுய இன்பம் செய்வதாக காட்டியிருந்தால் அது தனிப்பட்ட மனிதனின் முறையற்ற செயலாக தெரிந்திருக்கலாம்… ஆனால், சமபால் உறவில் அப்படி ஒரு முடிவை வைக்கும்போது, அது ஒட்டுமொத்த சமபால் ஈர்ப்பு சமூகத்தின் மீதும்தான் தவறான பார்வையை உருவாக்கும்…
    ஏற்கனவே சமபால் ஈர்ப்பை வெறும் உடல் சார்ந்த தேடலாக மட்டும் பார்க்கின்ற இந்த சமூகத்தில், இத்தகைய படைப்புகள் இன்னும் அதிக அளவிலான ஹோமோபோபிக் மனநிலையைத்தான் மேம்படுத்தும்…
    கதைதானே, கற்பனைதானே? என்கிற எல்லைக்குள் இப்படிப்பட்ட விஷயங்களை அடைத்துவிட முடியாது… எழுத்தாளனின் ஒவ்வொரு படைப்பிலும் சமூக அக்கறையையும் கணக்கில்கொள்ள வேண்டும்…
    இதைப்போன்ற ஒரு எதிர்வினை ஏற்ப்படுத்தும் முடிவை சாதிய, மத சிறுபான்மையின மக்களை மையப்படுத்தி எழுதும் கதையில் வைத்துவிட முடியாதல்லவா?… அதைப்போன்றுதான் பாலீர்ப்பு சிறுபான்மையினர் தொடர்பான கதையிலும் எதிர்பார்க்கிறோம்..
    ஏற்கனவே விழிப்புணர்வு அற்றுக்கிடக்கும் எங்கள் சமூகத்தில், இத்தகைய படைப்புகள் பின்னடைவை ஏற்ப்படுத்தும் என்கிற கவலையும் எனக்கு எழுகிறது… படைப்பாளிகள் எங்கள் உணர்வுகளை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்!

    Like

  5. “சௌகரியமாக சுவரோரம் சாய்ந்து தரையில் அமர்ந்துகொண்டு பேண்ட்டின் ஜிப்பை அவிழ்த்தான்” – யோசித்துப் பார்த்தபோது, நடித்துப் பார்த்தபோது சௌகரியமாக சுவரோரம் சாய்ந்து தரையில் அமர்ந்துகொண்டு பேண்ட்டின் ஜிப்பை கழற்ற முடியாது என்று தோன்றுகிறது. I think while we write about our movements especially our body movements, we need to enact it to ascertain whether it is sowkariyam or not. But many of the writers who are not as serious abt their writing or because who are not writers write in this way only.

    Like

    1. செல்வகுமார், // யோசித்துப் பார்த்தபோது, நடித்துப் பார்த்தபோது சௌகரியமாக சுவரோரம் சாய்ந்து தரையில் அமர்ந்துகொண்டு பேண்ட்டின் ஜிப்பை கழற்ற முடியாது என்று தோன்றுகிறது. // 🙂

      Like

  6. அவன் ஜிப்பை கழட்டி என்ன செய்ய போகின்றான் என்பதை ஆசிரியர் சொல்லவேயில்லையெ!!. கதையின் தலைப்புக்கு ஏற்றவாறு ஏதாவது இறுதிசடங்க்கோ என்னவோ. //ஒன்ன நீ எப்படி ஒய்ஃப் பொசிஷன்ல ஃபிக்ஸ் பண்ணிகிட்ட?அவந்தான் மேல் பார்ட்னர்னு டிசைட் பண்ணது அவனா நீயா? // கத்தி கித்தி இருக்குமொ? எனக்கு கொஞ்சம் விபரீத புத்தி

    Like

  7. கதையின் முடிவை வாசகனின் ஊகத்திற்கு விட்டுவிட்ட ஆசிரியரின் மேதமை அது. அவன் சிறுநீர் கழித்தான் என எடுத்துக்கொண்டால்கூட அதுவும் ஒரு நல்ல முடிவுதான்.

    Like

  8. இந்தக் கதையை வாசித்தேன்.

    கதையின் தலைப்பு : இறுதிச் சடங்கு

    கதையின் இறுதியில், நண்பனோடு முறைப்படி இணையக் காத்திருந்தவன் (அதாவது முதலிரவு கொண்டாடக் காத்திருந்தவன்) அது நிறைவேறாதபோது சடங்காக அதனை நிகழ்த்துகிறான்.

    ஆக, இவன் மேல் பார்ட்னர்; இறந்து போனவன் ஃபீமேல் பார்ட்னர்.

    கதையில் வரும் ஒரு சில வரிகளில் முக்கிய முடிச்சு ஒளிந்திருக்கிறது ..

    //எதிர்காலத்தில் எப்போதாவதேனும் யாராவது ஒரு பெண்ணைப் பிடித்துப் போனால்?//

    //கல்யாணத்துக்கப்பறம் ஒருவேள அவன் செத்துட்டா? ஐமீன்.. இல்ல, நீ செத்துட்டா?//

    // இது ஒடம்புலேருந்து மனசுக்குப் போன ஒறவுடா. கொஞ்சம் பேஜார்தான். யோசிச்சிட்டு சொல்றேன், ஓகேவா?//

    கதையில் அவன் செத்து விட்டான். செத்தவன் ஃபீமேல் பார்ட்னர். ஆக, இனிமேல் இவனுக்கு பெண்ணைப் பிடிக்கலாம். இனிமேல் இம்மாதிரி இன்னொரு ஆணுடன் பழகாமலும் போகலாம். ஆக இதுநாள் வரை பார்ட்னர் ஆக இருந்த நண்பனுக்காக, அவனது நினைவுக்காக இவன் நிகழ்த்தும் அந்தச் செயல் தான் “இறுதிச் சடங்கு”

    – இது என் புரிதல் ஆர்.வி..

    Like

  9. டியர் விஜய், அப்படியிருக்கச் சாத்தியமில்லை எனில் ரெங்கசுப்ரமணியின் ஊகம் மிகச்சரியாக இருக்கும்போலத் தோன்றுகிறது.

    Like

  10. ரமணன், பா.ரா.வும் அப்படி இறுதிச்சடங்காகத்தான் இதை சொல்ல வருகிறார் என்று அவரே விளக்கிவிட்டார்.

    Like

  11. சரி,இறுதி சடங்காக அவன் சுய இன்பம் செய்துகொள்கிறான் என்றே வைத்துக்கொண்டாலும், சமபால் உறவு வெறும் செக்ஸ் சம்மந்தப்பட்டதுதான் என்ற முடிவுக்கு வந்ததாகத்தானே அர்த்தம்?… இது ஒருவகையிலான நெக்ரோபீலியா மனநிலையை அல்லவா காட்டுகிறது!

    Like

    1. கேசவமணி, உங்கள் விமர்சனத்தை ஏற்கனவே படித்திருந்தேன். இன்னொரு முறையும் இப்போது படித்தேன். சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள். ஆனால் எப்படி விவாதிப்பது என்று தெரியவில்லையே!

      Like

  12. ஆண் ஓரினச்சேர்க்கை குறித்து எழுதியமைக்கும், அதனை திருமணம் வரை கொண்டு சென்றமைக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும்.. எழுத்தாளருக்கு. 1980 களின் திரைப்படங்களில் ஒருவருக்கு ஒருத்தி என்ற கட்டுப்பாடுகளை மீறி.. கள்ளக்காதல் கதைகள் திரைப்படங்களாகின. மோகமுள், அந்தரங்கம் ஊமையானது பல திரைப்படங்களில் நாயகியை கதாசிரியர்கள் கொன்றுவிடுவார்கள். இதன் மூலமாக பாருங்கள்.. ஒழுக்கம் தவறி நடக்கிறவர்கள் கதி இதுதான் என்று சமூகத்திற்கு விடுகின்ற எச்சரிக்கையாக அது இருந்தது. ஆனால் பின்நாட்களில் தங்களை முற்போக்கு வாதிகளாக காட்டிக்கொண்டார்கள்..

    Like

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.