ஜெயமோகன், பத்மஸ்ரீ, விருதுகளின் அவசியம்

jeyamohanஜெயமோகன் பத்மஸ்ரீ விருதை நிராகரித்ததுதான் இன்றைக்கு ஹாட் நியூஸ்.

என் கண்ணில் அது பிழைதான். ஆனால் ஜெயமோகன் கண்களுக்கு அது எப்படி தெரிகிறது என்பதுதான் முக்கியம். அது அவரது தனிப்பட்ட முடிவு, இதில் மூக்கை நுழைக்க யாருக்கும் உரிமையில்லை.

ஆனால் என் கண்ணில் ஏன் அது பிழையாகத் தெரிகிறது என்று ஒரு நிமிஷம் யோசித்தேன். தெரிந்தவருக்கு, நண்பருக்கு எல்லாவற்றையும் விட தகுதியானவருக்கு விருது கிடைப்பதில் உள்ள சந்தோஷம் போய்விட்டதே, இந்த விருதின் மேல் அவரே விழையும்போதும் நடக்கவில்லையே, நியாயமாகக் கிடைக்க வேண்டிய கௌரவத்தை என்னவோ சாக்கு சொல்லி புறம் தள்ளிவிட்டாரே, என்பதெல்லாம் இருந்தாலும் முக்கியமான காரணம் நான் அவரை ஒரு வாசகனாகப் பார்ப்பதுதான். அவர் என் கண்ணில் முதலாவதாக, இரண்டாவதாக, மூன்றாவதாக ஒரு எழுத்தாளர். நண்பர், தெரிந்தவர் எல்லாம் அதற்கப்புறம்தான்.

அது தெளிவான பிறகு சாஹித்ய அகடமி பற்றி அவரோடு உள்ள கருத்து வேறுபாட்டின் தொடர்ச்சிதான் இதுதான் என்பதும் தெளிவாகத் தெரிந்தது. தமிழ் எழுத்தாளர்களில் மேதை என்று சொல்லக் கூடிய மூவரில் ஒருவர். மற்ற இரண்டு பேரையும் (புதுமைப்பித்தன், அசோகமித்ரன்) அண்டை மாநிலத்து இலக்கிய வாசகர்களுக்கு கூடத் தெரியாது. மொழிபெயர்க்கப்பட்டால்தான் தெரிய வரும், அப்படி மொழிபெயர்க்கப்படுவதற்கு இந்த விருதுகள் பல சமயம் கிரியா ஊக்கியாக (catalyst) செயல்படுகின்றன. யாரும் முனைந்து தற்காலத் தமிழ் இலக்கியத்தை பிற இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பதாக எனக்குத் தெரியவில்லை. தீவிர தமிழ் இலக்கிய வாசகர்கள் எல்லாருக்கும் காண்டேகர் பெயர் தெரிந்திருப்பது எப்படி? நல்ல தமிழ் இலக்கியம் பிற இந்திய வாசகர்களை அடைய வேண்டும், அதற்கு உதவக் கூடிய ஒரு விருதை (என் கண்ணில்) சொத்தைக் காரணங்களுக்காக நிராகரிப்பது எனக்கு தவறவிடப்பட்ட வாய்ப்பாகத்தான் தெரிகிறது.

அவருடைய கண்ணோட்டம் வேறாக இருக்கிறது. மனக் குழப்பங்கள் நீங்க வேண்டும், இதை விடவும் பெரிய விருதுகள் எதிர்காலத்தில் அவரைத் தேடி வர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயமோகன் பக்கம், விருதுகள்

கிழவனின் நினைவாக – லாரி பேக்கர்

laurie_bakerலாரி பேக்கரைப் பற்றி நான் கேள்விப்பட்டது என் நண்பன் ஸ்ரீகுமார் மூலம்தான். நானும் பொறியியல் படித்தவன்தான். ஆனால் பேக்கர் வீடுகளைப் பற்றி கேள்விப்பட்டபோது ‘அட இது நம்ம வாத்தியார்களுக்குத் தெரியவே இல்லையே’ என்று தோன்றியது. அப்போது ஃபுகுவோகா (One Straw Revolution), Appropriate Technology போன்ற கருத்தாக்கங்கள் எல்லாம் உற்சாகம் தந்தன.

சமீபத்தில் பேக்கர் எழுதிய ஒரு புத்தகம் – Manual of Cost Cuts for Strong Acceptable Housing – கண்ணில் பட்டது. பேரைப் படித்ததுமே படிக்கும் உற்சாகம் போய்விடும். ஆனால் சுவாரசியமான புத்தகம். தலைப்பு மட்டும்தான் போரடிக்கிறது.

அன்றிருந்ததை விட இன்று வீடு கட்டும் பொறியியலோடு தூரம் அதிகம். இருந்தாலும் அவர் சொல்வது இன்னமும் மிகவும் sensible ஆக இருக்கிறது. சென்னையில் வெள்ளத்திற்குப் பிறகு இன்று வீடு கட்டித் தருகிறேன் என்று கிளம்புபவர்கள் இதையெல்லாம் பார்த்தால் நல்லது.

பேக்கர் எழுதிய ஒரு கட்டுரையும் கண்ணில் பட்டது.

சுதந்திரப் போராட்டம், கிராம முன்னேற்றம், ஹிந்து மதத்தின் மீது ஆழ்ந்த ஈடுபாடு, அதே நேரத்தில் அதன் குறைகளைக் கண்டு பயப்படாமல் அவற்றை நிவர்த்திக்க முயற்சி, காதி, சபர்மதி ஆசிரமம், முறைத்துக் கொண்ட மகன் இப்படி ஆயிரம் விஷயங்கள் இருந்தும் நடுவில் லாரி பேக்கர், குமரப்பா மாதிரி ஆட்களை உருவாக்கி இருக்கும் அந்தக் கிழவனை மாதிரி இன்னொருவர் வர நூற்றாண்டுகளாகும்.

அப்படியே அர்விந்த் குப்தாவைப் பற்றியும் ஒரு வார்த்தை. முப்பது வருஷங்களுக்கும் மேலாக மலிவு விலையில் புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார். பலவும் pirated-தான். ஆனால் அவர் மூலம்தான் டோட்டோசான், One Straw Revolution என்று பல புத்தகங்களைப் படித்தேன். இணையம் இல்லாத காலத்தில் இவையெல்லாம் இந்தியாவில் சுலபமாகக் கிடைத்துவிடாது. சிறுவர்களுக்காக பல அறிவியல் சோதனைகள், புத்தகங்களை இன்று இவரது தளத்தில் காணலாம். கட்டாயம் தளத்தைப் போய்ப் பாருங்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: இந்திய அபுனைவுகள்

பத்மபூஷண் விருது பெற்ற தெலுகு எழுத்தாளர்

yarlagadda_lakshmiprasadநேற்றுதான் இவரைப் பற்றி கௌரி ஏதாவது சொன்னால் உண்டு என்று எழுதி இருந்தேன். உடனே டாணென்று ஒரு அறிமுகத்தை அனுப்பி இருக்கிறார். ஓவர் டு கௌரி!

நவம்பர் 24, 1953ல் பிறந்த டாக்டர் யார்லகட்ட லக்ஷ்மிபிரசாத், ஆந்திர பல்கலைக்கழகத்தில் ஹிந்தி பிரிவில் பேராசிரியராக பணி புரிந்தவர். ஹிந்தியில் எம்.ஏ. பட்டமும், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பி.ஹெச்.டி.யும் பெற்றவர். பல தெலுங்கு காப்பியங்களை ஹிந்தியில் மொழிபெயர்த்திருக்கிறார். தெலுங்கில் முப்பத்திரண்டு படைப்புகளை படைத்திருக்கிறார். ராஜ்யசபாவின் அங்கத்தினராக (1996- 2002) பணி புரிந்திருக்கிறார். கலாச்சார இலக்கிய பிரதிநிதியாக பல வெளிநாடுகளுக்கு சென்று இருக்கிறார்.

பிஷம் சானி எழுதிய “தமஸ்” என்ற ஹிந்தி நாவலின் தெலுகு மொழிபெயர்ப்பிற்காக சாகித்ய அகாடமி விருது 1992ல் கிடைத்துள்ளது. பின்னர், 2009ல் அவர் எழுதிய “திரௌபதி” நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது. (இது போலவே அய்யப்ப பணிக்கரின் மலையாள படைப்பின் தமிழ் மொழிபெயர்ப்பிற்காக 2003லும், இலையுதிர்காலம் நாவலுக்காக 2007லும் சாகித்ய அகாடமி விருதுகளை பெற்று இருப்பவர் திரு நீல. பத்மநாபன்.)

வி. ஸ. காண்டேகரின்யயாதி‘ என்ற நூல்தான் ‘திரௌபதி’ நாவலுக்கு உந்துதல் என்று திரு லக்ஷ்மிபிரசாத் கூறியுள்ளார். நாவல் வெளியானதும் பாத்திரப் படைப்பு திரௌபதிக்கு களங்கம் விளைவிக்கிறது என்று பெரும் சர்ச்சைக்குள்ளானது. சாஹித்ய அகாடமி விருது கிடைத்ததும் சர்ச்சை மீண்டும் உயிர் பெற்றது. இப்புத்தகத்திற்கு மாற்றாக ‘சௌஷீல்ய திரௌபதி‘ (நற்குணவதி திரௌபதி) என்ற பெயரில் திரு. கஸ்தூரி முரளிகிருஷ்ணா என்பவர் எழுதி இருக்கிறார்.

திரு லக்ஷ்மிபிரசாத் பத்மஸ்ரீ விருதை 2003ல் பெற்றிருக்கிறார். 2016ல் பத்மபூஷண் விருது இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: கௌரி பதிவுகள்

2016 பத்மபூஷண், பத்மஸ்ரீ விருதுகள்

முழு பட்டியல் இங்கே.

வழக்கம் போல இலக்கியத்துக்கான விருதுகளைப் பெற்றவர்கள் பற்றி சிறு குறிப்புகள் கீழே. சிலிகன் ஷெல்ஃபில் வேறென்ன எழுதப் போகிறேன்?

பொதுவாக இந்த முறை இலக்கியத்துக்கு விருதுகள் கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். பைரப்பாவைத் தவிர ஹல்தர் நாக் என்ற ஒரிய கவிஞருக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்திருக்கிறது. பிரஹலாத் சந்திர டாசா, காமேஸ்வரம் பிரம்மா (அஸ்ஸாமி), ரவீந்திர நகர் எல்லாம் எழுத்தாளர்களா, கல்வியாளர்களா, பத்திரிகையாளர்களா என்று கூடத் தெரியவில்லை.

யார்லகடா லக்ஷ்மிபிரசாத், ராமானுஜ தாத்தாசார்யா, புஷ்பேஷ் பந்த் மூவரும் புத்தகம் எழுதி இருந்தாலும் எழுத்தாளர்கள் இல்லை.

யார்லகடா லக்ஷ்மிபிரசாத் (தெலுகு) பத்மபூஷண் விருது பெற்றிருக்கிறார். அவர் எழுதி இருக்கும் புத்தகங்களைப் பார்த்தால் இது கல்விக்கு கொடுக்கப்பட்ட விருதோ என்று சந்தேகமாக இருக்கிறது. (மன கவர்னர் நாராயண திவாரி!) கௌரி கிருபானந்தனுக்கு ஏதாவது தெரிந்தால்தான் உண்டு.

ராமானுஜ தாத்தாசார்யா சமஸ்கிருத ஸ்காலர் என்று தெரிகிறது. உரைகள் இல்லை இல்லை பாஷ்யங்கள் எழுதி இருக்கிறார்.

புஷ்பேஷ் பந்த் பேராசிரியர். இந்திய உணவைப் பற்றி நிறைய எழுதி இருக்கிறார்!

தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள்

பைரப்பாவுக்கு பத்மஸ்ரீ

S.L.Bhyrappaகாலம் தாழ்ந்து தரப்பட்ட விருது – இவருக்கெல்லாம் குறைந்த பட்சம் பத்ம பூஷணாவாது தரப்பட வேண்டும். ரஜினிகாந்த்துக்கு பத்மவிபூஷண், இவருக்கு பத்மஸ்ரீ என்பதெல்லாம் அநியாயம்.

ஆனாலும் சந்தோஷமாக இருக்கிறது. பத்மஸ்ரீ விருது கௌரவம் பெற்றிருக்கிறது. வேறென்ன சொல்ல?

தொகுக்கப்பட்ட பக்கம்: பைரப்பா பக்கம்

வானதி திருநாவுக்கரசு – அஞ்சலி

சின்ன வயதில் எனக்குத் தெரிந்திருந்த ஒரே பதிப்பகம் வானதி பதிப்பகம்தான். ஒரு டிபிகல் பிராமண மத்தியதரக் குடும்பத்தில் கிளாசிக் என்று கருதப்படும் ராஜாஜியின் ராமாயணம்+மகாபாரதம், கல்கியின் நாவல்கள், சாண்டில்யன் நாவல்கள், காஞ்சி சங்கராச்சாரியாரின் தெய்வத்தின் குரல் போன்ற புத்தகங்களை வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள். சர்ச்சைகள், புரட்சிகள் இல்லாத புத்தகங்கள். ஜி. நாகராஜன் மாதிரி ஒரு எழுத்தாளரின் சிறுகதை இந்தப் பதிப்பகத்திலிருந்து வெளிவர சான்சே இல்லை. 🙂 அது திருநாவுக்கரசின் தரப்படுத்துதலே.

அதனால் ஒன்றும் குறைவில்லை. அதற்கு ஒரு பெரிய தேவை இருந்த காலம் அது. அன்றைய புத்தகங்களை ஒப்பிடும்போது தரமான பதிப்புகள்தான். (வாசகர் வட்டம், க்ரியா இரண்டுதான் இதை விட சிறப்பாக பதிப்புகளை வெளியிட்டன.) இன்றும் அது போன்ற ஒரு பதிப்பகத்துக்கு தேவை இருக்கத்தான் செய்கிறது. அவருக்கு என் அஞ்சலி.

வழக்கம் போல அவர் எழுதிய புத்தகம் ஒன்றுக்கு முன்னால் எழுதிய அறிமுகத்தை மீள்பதித்திருக்கிறேன்.

வானதி திருநாவுக்கரசு தன் வாழ்க்கை வரலாற்றை எழுதலாம் என்று ஆரம்பித்திருக்கிறார். ஐம்பது பக்கம் கூட எழுதமுடியவில்லை போலிருக்கிறது. சரி என்று தான் பழகிய, சந்தித்த பெரிய மனிதர்களைப் பற்றி எல்லாம் memoirs ஆக மாற்றிவிட்டார். புத்தகமும் சுவாரசியமாக இருக்கிறது.

நிறைய புத்தகங்களைப் போட்டிருக்கிறார். சில சமயம் எழுத்தாளரின் அனுமதியைக் கூட கேட்காமல் போட்டிருக்கிறார். கிருபானந்த வாரியார் அதற்காக இவரிடம் முறைத்துக் கொண்டிருக்கிறார். லாப நோக்கம் உண்டு, ஆனால் “நல்ல” புத்தகங்களைப் பதிக்க வேண்டும் என்று ஒரு உந்துதல் இருந்திருக்கிறது. காஞ்சி சங்கராச்சாரியார், குன்றக்குடி அடிகளார், வாரியார், ராஜாஜி, பத்மா சுப்பிரமணியம், மு.மு. இஸ்மாயில் என்று தேடிப் பிடித்து போட்டிருக்கிறார். ராஜாஜியின் மகாபாரதமும் ராமாயணமும் விற்றிருக்கின்றன, மிச்ச எல்லாம் இரண்டாவது பதிப்பு கூட வந்ததா என்று தெரியவில்லை.

செட்டியார் ஜாதித் தொடர்புகள் இவருக்கு ஓரளவு உதவி செய்திருக்கின்றன. சின்ன அண்ணாமலை, ஏவிஎம் செட்டியார், எம்.ஏ.எம். ராமசாமி, ராஜா சர் முத்தையா செட்டியார் என்று பலருடனும் நல்ல தொடர்பு இருந்திருக்கிறது.

கோவி. மணிசேகரன், ஜெகசிற்பியன் என்று நான் பயந்து நடுங்கும் சில எழுத்தாளர்களோடு நல்ல தொடர்பு இருந்திருக்கிறது. எழுத்தாளர்களை பொதுவாக மரியாதையாக நடத்துபவர் என்று தெரிகிறது.

சுவாரசியமான memoirs. படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

150 சிறந்த சிறுகதைகள் – செல்வராஜின் தொகுப்பு

நண்பர் செல்வராஜ் பல தொகுப்புகள், பரிந்துரைகளைத் தேடி இந்தக் கட்டுரையை எழுதி இருக்கிறார். Wisdom of the Crowds தேர்வுகள் என்று வைத்துக் கொள்ளுங்களேன்! ஓவர் டு செல்வராஜ்!

சிறந்த சிறுகதைகள் நூற்று ஐம்பது

என் செல்வராஜ்

சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை என்ற தலைப்பில் ஏற்கனவே 5 கட்டுரைகள் நான் எழுதி திண்ணையில் வெளிவந்துள்ளது. அவற்றில் பல சிறுகதை தொகுப்புக்களை அறிமுகப்படுத்தி இருந்தேன். பல எழுத்தாளர்களின் பரிந்துரைகளையும் குறிப்பிட்டு இருந்தேன். சிற்றிதழ்கள் பலவற்றின் தொகுப்புக்களையும் குறிப்பிட்டு இருந்தேன்.அந்த கட்டுரைகளுக்கு பிறகு எனக்கு கிடைத்த சில தொகுப்புக்களையும் சேர்த்து சிறந்த சிறுகதைகளைப் பட்டியலிட்டு இருக்கிறேன். சிறந்த சிறுகதையாக இங்கு நான் குறிப்பிடும் கதைகள் அவை இடம் பெற்ற தொகுப்புக்கள், எழுத்தாளர்களின் கட்டுரைகளில் பரிந்துரை பெற்ற கதைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. குறைந்தது நான்கு பரிந்துரைகள் பெற்ற கதைகள் 150 சிறுகதைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. ஈழத் தமிழ் எழுத்தாளர்களின் தொகுப்பு மற்றும் பரிந்துரைகளும் சேர்க்கப்பட்டு பட்டியல் தயார் செய்து இருக்கிறேன். தொகுப்பு மற்றும் பரிந்துரைகளை ஒன்றாக பரிந்துரை என்றே எடுத்துக்கொண்டு இந்த ஆய்வை செய்து இருக்கிறேன். இந்த ஆய்வு 5550 கதைகளின் பட்டியலில் இருந்து தேர்வு செய்யப்பட்டது. ஒரே எண்ணிக்கையில் பரிந்துரை பெற்ற கதைகள் அகர வரிசையில் பட்டியல் இடப்பட்டிருக்கின்றன. இனி ஆய்வின் முடிவை காணலாம்.

1. தனுமைவண்ணதாசன் – 16 பரிந்துரைகள்
2. விடியுமா?கு.ப. ராஜகோபாலன் – 16 பரிந்துரைகள்
3. கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்புதுமைப்பித்தன் – 15 பரிந்துரைகள்
4. அம்மா ஒரு கொலை செய்தாள்அம்பை – 14 பரிந்துரைகள்
5. அழியாச்சுடர்மௌனி – 14
6. எஸ்தர்வண்ணநிலவன் – 14
7. புலிக்கலைஞன்அசோகமித்ரன் – 14
8. மருமகள் வாக்குகிருஷ்ணன் நம்பி – 14
9. நகரம்சுஜாதா – 14
10. சிலிர்ப்புதி. ஜானகிராமன் – 13
11. நட்சத்திரக் குழந்தைகள்பி.எஸ். ராமையா – 12
12. ராஜா வந்திருக்கிறார்கு. அழகிரிசாமி – 12
13. அக்னிப்பிரவேசம்ஜெயகாந்தன் – 11
14. குளத்தங்கரை அரசமரம்வ.வே.சு. ஐயர் – 11
15. நாயனம்ஆ. மாதவன் – 10
16. சாபவிமோசனம்புதுமைப்பித்தன் – 10
17. வெயிலோடு போய்ச. தமிழ்ச்செல்வன் – 10
18. அப்பாவின் வேஷ்டிபிரபஞ்சன் – 9
19. கன்னிமைகி. ராஜநாராயணன் – 9
20. கோயில் காளையும் உழவு மாடும்சுந்தர ராமசாமி – 9
21. சாசனம்கந்தர்வன் – 9
22. தக்கையின் மீது நான்கு கண்கள்சா. கந்தசாமி – 9
23. தோணிவ.அ. ராசரத்தினம் – 9
24. பல்லக்கு தூக்கிகள்சுந்தர ராமசாமி – 9
25. புற்றில் உறையும் பாம்புகள்ராஜேந்திர சோழன் – 9
26. மூங்கில் குருத்துதிலீப்குமார் – 9
27. ரத்னாபாயின் ஆங்கிலம்சுந்தர ராமசாமி – 9
28. விகாசம்சுந்தர ராமசாமி – 9
29. ஆற்றாமைகு.ப. ராஜகோபாலன் – 8
30. இருளப்ப சாமியும் 21 கிடாய்களும்வேல. ராமமூர்த்தி – 8
31. ஒரு இந்நாட்டு மன்னர்நாஞ்சில் நாடன் – 8
32. கடிதம்திலீப்குமார் – 8
33. கதவுகி. ராஜநாராயணன் – 8
34. பாயசம்தி. ஜானகிராமன் – 8
35. பிரசாதம்சுந்தர ராமசாமி – 8
36. மதினிமார்களின் கதைகோணங்கி – 8
37. ஒரு ஜெருசலேம் – பா. செயப்பிரகாசம் – 7
38. ஒரு பழைய கிழவர் ஒரு புதிய உலகம்ஆதவன் – 7
39. செல்லம்மாள்புதுமைப்பித்தன் – 7
40. திசைகளின் நடுவேஜெயமோகன் – 7
41. நாற்காலிகி. ராஜநாராயணன் – 7
42. நிலைவண்ணதாசன் – 7
43. பத்மவியூகம்ஜெயமோகன் – 7
44. பாற்கடல்லா.ச. ராமாமிர்தம் – 7
45. பிரபஞ்சகானம்மௌனி – 7
46. பிரயாணம்அசோகமித்ரன் – 7
47. மீன்பிரபஞ்சன் – 7
48. வீட்டின் மூலையில் ஒரு சமையலறைஅம்பை – 7
49. வெள்ளிப் பாதரசம் – இலங்கையர்கோன் – 7
50. அம்பலக்காரர் வீடு – பா. செயப்பிரகாசம் – 6
51. அன்பளிப்புகு. அழகிரிசாமி – 6
52. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும்சுப்ரபாரதிமணியன் – 6
53. ஒரு கப் காப்பிஇந்திரா பார்த்தசாரதி – 6
54. கனகாம்பரம்கு.ப. ராஜகோபாலன் -6
55. கயிற்றரவுபுதுமைப்பித்தன் – 6
56. காஞ்சனைபுதுமைப்பித்தன் – 6
57. காற்றுகு. அழகிரிசாமி – 6
58. கேதாரியின் தாயார்கல்கி – 6
59. சரஸாவின் பொம்மைசி.சு. செல்லப்பா – 6
60. சாமியார் ஜூவுக்கு போகிறார்சம்பத் – 6
61. சுயரூபம்கு. அழகிரிசாமி – 6
62. திரைகு.ப. ராஜகோபாலன் – 6
63. தேர்எஸ். பொன்னுதுரை – 6
64. நசுக்கம் – சோ. தர்மன் – 6
65. பற்றி எரிந்த தென்னை மரம்தஞ்சை பிரகாஷ் – 6
66. பாற்கஞ்சிசி. வைத்திலிங்கம் – 6
67. பிரும்மம்பிரபஞ்சன் – 6
68. பைத்தியக்காரப் பிள்ளைஎம்.வி. வெங்கட்ராம் – 6
69. அரசனின் வருகைஉமா வரதராஜன் – 5
70. ஆண்களின் படித்துறைஜே.பி. சாணக்யா – 5
71. இழப்புந. முத்துசாமி – 5
72. ஒரு ராத்தல் இறைச்சிநகுலன் – 5
73. ஒரு நாள் கழிந்ததுபுதுமைப்பித்தன் – 5
74. ஒரு பிடி சோறு – கனக செந்திநாதன் – 5
75. கடிகாரம்நீல. பத்மநாபன் – 5
76. கரையும் உருவங்கள்வண்ணநிலவன் – 5
77. கனவுக்கதைசார்வாகன் – 5
78. கற்பு – வரதர் – 5
79. காலமும் ஐந்து குழந்தைகளும்அசோகமித்ரன் – 5
80. ஜன்னல்சுந்தர ராமசாமி – 5
81. சாவித்திரிக.நா. சுப்ரமணியம் – 5
82. சாவில் பிறந்த சிருஷ்டிமௌனி – 5
83. ஞானப்பால்ந. பிச்சமூர்த்தி – 5
84. திரிவேணிகு. அழகிரிசாமி – 5
85. தேடல்வாஸந்தி – 5
86. நீர்மைந. முத்துசாமி – 5
87. நூருன்னிசாகு.ப. ராஜகோபாலன் – 5
88. பள்ளம்சுந்தர ராமசாமி – 5
89. பூனைகள் இல்லாத வீடுசந்திரா – 5
90. மரப்பாச்சிஉமாமகேஸ்வரி – 5
91. மேபல்தஞ்சை பிரகாஷ் – 5
92. யுகசந்திஜெயகாந்தன் – 5
93. விஜயதசமி – ந. பிச்சமூர்த்தி – 5
94. ஜன்னல்சுஜாதா – 5
95. அண்ணாச்சிபாமா – 4
96. அந்நியர்கள்ஆர். சூடாமணி – 4
97. அப்பாவின் பள்ளிக்கூடம் – ந. முத்துசாமி – 4
98. அரும்பு – மேலாண்மை பொன்னுச்சாமி – 4
99. ஆண்மை – ஜி. நாகராஜன் – 4
100. ஆனைத்தீ – தொ.மு.சி. ரகுநாதன் – 4
101. இருட்டில் நின்ற… – சுப்ரமண்ய ராஜு – 4
102. உயிர்கள்சா. கந்தசாமி – 4
103. எதிர்பார்ப்புகள் – ராஜேந்திர சோழன் – 4
104. ஏழு முனிக்கும் இளைய முனி – சி.எம். முத்து – 4
105. கரிசலின் இருள்கள் – பா. செயப்பிரகாசம் – 4
106. காணி நிலம் வேண்டும் – கோபிகிருஷ்ணன் – 4
107. காசுமரம் – அகிலன் – 4
108. காடன் கண்டதுபிரமிள் – 4
109. காட்டில் ஒரு மான்அம்பை – 4
110. கோணல் வடிவங்கள் – ராஜேந்திர சோழன் – 4
111. கோமதிகி. ராஜநாராயணன் – 4
112. சட்டைகிருஷ்ணன் நம்பி – 4
113. சித்திமா. அரங்கநாதன் – 4
114. சிறகுகள் முறியும்அம்பை – 4
115. சிறிது வெளிச்சம்கு.ப. ராஜகோபாலன் – 4
116. செவ்வாழைஅண்ணாதுரை – 4
117. சேதாரம் – தனுஷ்கோடி ராமசாமி – 4
118. தண்ணீர் தாகம்ஆனந்தன் – 4
119. தத்துப்பிள்ளைஎம்.வி. வெங்கட்ராம் – 4
120. துறவு – சம்பந்தர் – 4
121. தொலைவுஇந்திரா பார்த்தசாரதி – 4
122. நதிஜெயமோகன் – 4
123. நான் இருக்கிறேன் ஜெயகாந்தன் – 4
124. நிலவிலே பேசுவோம்என்.கே. ரகுநாதன் – 4
125. நீர் விளையாட்டுபெருமாள் முருகன் – 4
126. பலாப்பழம்வண்ணநிலவன் – 4
127. பறிமுதல்ஆ. மாதவன் – 4
128. பதினெட்டாம் பெருக்கு – ந. பிச்சமூர்த்தி – 4
129. புனர்அம்பை – 4
130. புயல்கோபிகிருஷ்ணன் – 4
131. புவனாவும் வியாழக்கிரகமும்ஆர். சூடாமணி – 4
132. பொன்னகரம்புதுமைப்பித்தன் – 4
133. மரி என்கிற ஆட்டுக்குட்டிபிரபஞ்சன் – 4
134. மறைந்து திரியும் கிழவன்சுரேஷ்குமார் இந்திரஜித் – 4
135. மிருகம்வண்ணநிலவன் – 4
136. மீன்கள் – தெளிவத்தை ஜோசஃப் – 4
137. முள்பாவண்ணன் – 4
138. முள்முடிதி. ஜானகிராமன் – 4
139. ரீதிபூமணி – 4
140. வண்டிச்சவாரிஅ.செ. முருகானந்தம் – 4
141. வாழ்வும் வசந்தமும்சுந்தர ராமசாமி – 4
142. விதை நெல் – ந. பிச்சமூர்த்தி – 4
143. விரித்த கூந்தல்சுரேஷ்குமார் இந்திரஜித் – 4
144. வெறுப்பைத் தந்த வினாடிவத்ஸலா – 4
145. வேட்டையூமா வாசுகி – 4
146. வேனல் தெருஎஸ். ராமகிருஷ்ணன் – 4
147. வைராக்கியம்சிவசங்கரி – 4
148. ஜனனிலா.ச. ராமாமிர்தம் – 4
149. ஜின்னின் மணம்நீல. பத்மநாபன் – 4
150. ஹிரண்யவதம்சா. கந்தசாமி – 4

இந்த ஆய்வுக்கு உதவிய தொகுப்புகள், மற்றும் நூல்கள் பட்டியல்

1. 100 சிறந்த சிறுகதைகள்எஸ். ராமகிருஷ்ணன் – டிஸ்கவரி புக் பேலஸ்
2. இருபதாம் நூற்றாண்டு சிறுகதைகள் நூறு – வீ. அரசு – அடையாளம்
3. நவீன தமிழ் இலக்கிய அறிமுகம்ஜெயமோகன் – கிழக்கு பதிப்பகம்
4. தமிழ் சிறுகதை களஞ்சியம் தொகுதி 1அ. சிதம்பரநாத செட்டியார் – சாகித்ய அக்காடமி
5. தமிழ் சிறுகதைகள் தொகுதி 2 – அகிலன் – சாகித்ய அக்காடமி
6. நவீன தமிழ் சிறுகதைகள்சா. கந்தசாமி – சாகித்ய அக்காடமி
7. பெண் மைய சிறுகதைகள் – ரா. பிரேமா – சாகித்ய அக்காடமி
8. எனக்கு பிடித்த கதைகள்பாவண்ணன் – திண்ணை இணைய இதழ்
9. குளத்தங்கரை அரசமரம் முதல் கோணங்கி வரைகீரனூர் ஜாகிர் ராஜா
10. ஐம்பதாண்டு தமிழ் சிறுகதைகள் 1, 2சா. கந்தசாமி – கவிதா
11. புதிய தமிழ் சிறுகதைகள்அசோகமித்ரன் – நேஷனல் புக் ட்ரஸ்ட்
12. சமீபத்திய தமிழ் சிறுகதைகள்வல்லிக்கண்ணன், ஆ. சிவசுப்ரமணியம் – நேஷனல் புக் ட்ரஸ்ட்
13. நெல்லை சிறுகதைகள் – சு. சண்முகசுந்தரம் – காவ்யா
14. கொங்கு சிறுகதைகள்பெருமாள் முருகன் – காவ்யா
15. தஞ்சை சிறுகதைகள்சோலை சுந்தரப் பெருமாள் – காவ்யா
16. சென்னை சிறுகதைகள் – காவ்யா சண்முகசுந்தரம் – காவ்யா
17. தில்லி சிறுகதைகள் – சீனுவாசன் – காவ்யா
18. பெங்களூர் சிறுகதைகள் – காவ்யா சண்முகசுந்தரம் – காவ்யா
19. மும்பை சிறுகதைகள் – அன்பாதவன், மதியழகன் சுப்பையா – ராஜம் வெளியீடு
20. கதைக்கோவை 1 முதல் கதைக்கோவை 4 வரை – அல்லையன்ஸ்
21. ஒரு நந்தவனத் தென்றல் – இ.எஸ். தெய்வசிகாமணி – விஜயா பதிப்பகம்
22. தலை வாழை – இ.எஸ். தெய்வசிகாமணி – அன்னம் பதிப்பகம்
23. ஆகாயப் பந்தல் – எஸ். சங்கரநாராயணன் – உதயகண்ணன் வெளியீடு
24. பரிவாரம் – எஸ். சங்கரநாராயணன் – உதய்கண்ணன் வெளியீடு
25. இந்த நூற்றாண்டு சிறுகதைகள் – 1 முதல் 3 வரைவிட்டல்ராவ் – கலைஞன் பதிப்பகம்
26. இந்த நூற்றாண்டு சிறுகதைகள் – 4 முதல் 6 வரைவிட்டல்ராவ், அழகியசிங்கர் – கலைஞன் பதிப்பகம்
27. கதை அரங்கம் – மணிக்கதைகள் 1 முதல் 6 தொகுப்புகள் – மீனாட்சி புத்தக நிலையம்
28. நெஞ்சில் நிற்பவை 1, 2சிவசங்கரி – வானதி பதிப்பகம்
29. கரிசல் கதைகள்கி. ராஜநாராயணன் – அன்னம் பதிப்பகம்
30. கரிசல் கருதுகள் – உதயசங்கர், லட்சுமணப்பெருமாள் – அகரம் பதிப்பகம்
31. மீதமிருக்கும் சொற்கள் – அ. வெண்ணிலா – அகநி பதிப்பகம்
32. தமிழ் சிறுகதைக் களஞ்சியம்தமிழ்மகன் – விகடன்
33. கதாவிலாசம்எஸ். ராமகிருஷ்ணன் – விகடன்
34. கணையாழியின் கடைசி பக்கங்கள்சுஜாதா – உயிர்மை
35. காலத்தை வென்ற கதைகள்குங்குமம் தோழி வலைத்தளம்
36. பெண்ணியக் கதைகள் – ரா. பிரேமா – காவ்யா
37. தலித் சிறுகதைகள் – வீழி.பா .இதயவேந்தன் – காவ்யா
38. தலித் சிறுகதை தொகுப்பு – ப. சிவகாமி – சாகித்ய அக்காடமி
39. சிறுகதை மஞ்சரி – மீ.ப. சோமு
40. சில கதைகளும் நாவல்களும்வெங்கட் சாமிநாதன்
41. க.நா. சுப்ரமணியம் கட்டுரைகள் – தொகுப்பு காவ்யா சண்முகசுந்தரம் – காவ்யா
42. 20 ஆம் நூற்றாண்டு புதுவை கதைகள் 1, 2பிரபஞ்சன், பாரதி வசந்தன் – கவிதா
43. மதுரை சிறுகதைகள் – ஆ. பூமிச்செல்வம் – அன்னம் பதிப்பகம்
44. யானைச்சவாரி – எஸ். சங்கரநாராயணன் – இருவாட்சி வெளியீடு
45. கோணல்கள்சா. கந்தசாமி – கவிதா
46. தஞ்சை கதைக் களஞ்சியம்சோலை சுந்தரப் பெருமாள் – சிவசக்தி பதிப்பகம்
47. சிறந்த தமிழ் சிறுகதைகள்விட்டல்ராவ் – கலைஞன் பதிப்பகம்
48. 20 ஆம் நூற்றாண்டின் தமிழ் சிறுகதையாசிரியர்கள் 1, 2சா. கந்தசாமி – கவிதா
49. அன்று தொகுதி 1, 2மாலன் – ஓரியண்ட் லாங்க்மென்
50. அன்புடன்மாலன் – இந்தியா டுடே
51. ஒரு தலைமுறையின் 11 சிறுகதைகள்மாலன், அக்ரீஷ் – வாசகன் இதழ்
52. வானவில் கூட்டம் – உதயகண்ணன் – இருவாட்சி பதிப்பகம்
53. வேர்மூலம் – பொதியவெற்பன் – ருத்ரா பதிப்பகம்
54. கணையாழி கதைகள்அசோகமித்ரன் – பூரம் பதிப்பகம்
55. மழை சார்ந்த வீடு – உத்தம சோழன் – சத்யா பதிப்பகம்
56. சலாம் இசுலாம் – களந்தை பீர் முகம்மது – உதயகண்ணன் வெளியீடு
57. மலர்ச்சரங்கள், உயிர்ப்பு, சுடர்மணிகள் – சேதுராமன் – பாவை பப்ளிகேஷன்ஸ்
58. ஜுகல்பந்தி – எஸ். சங்கரநாராயணன் – வடக்கு வாசல் வெளியீடு
59. அமிர்தம் – எஸ். சங்கரநாராயணன், சு. வேணுகோபால் – நிவேதிதா புத்தக பூங்கா
60. காஃபிர்களின் கதைகள்கீரனூர் ஜாகிர் ராஜா – எதிர் வெளியீடு
61. அழியாத கோலங்கள்கீரனூர் ஜாகிர் ராஜா – ஆழி பதிப்பகம்
62. 21 ஆம் நூற்றாண்டு சிறுகதைகள்கீரனூர் ஜாகிர் ராஜா – ஆழி பதிப்பகம்
63. இருள் விலகும் கதைகள் – விஜய மகேந்திரன் – தோழமை வெளியீடு
64. மெல்ல விலகும் பனித்திரை – லிவிங் ஸ்மைல் வித்யா – பாரதி புத்தகாலயம்
65. பாதரஸ ஓநாய்களின் தனிமை – ஆ. பூமிச்செல்வம் – அன்னம் பதிப்பகம்
66. ஈழத்து சிறுகதைகள் – சிற்பி – பாரி நிலையம்
67. ஈழத்து முற்போக்கு சிறுகதைகள் – நீர்வை பொன்னையன் – பாலசிங்கம் பதிப்பகம்
68. முற்போக்கு கால கட்டத்து சிறுகதைகள் – செங்கை ஆழியான் – பூபாலசிங்கம் பதிப்ப்கம்
69. ஈழத்து முன்னோடி சிறுகதைகள் – செங்கை ஆழியான் – பூபாலசிங்கம் பதிப்பகம்
70. ஈழத்து சிறுகதைகள் சிறப்பு மலர் – தமிழர் தகவல் பத்திரிக்கை
71. மலேசிய தமிழ் உலக சிறுகதைகள் – மாத்தளை சோமு
72. வேரும் வாழ்வும் – 1, 2, 3 – சை. பீர்முகம்மது – மித்ர வெளியீடு
73. அயலகத் தமிழ் இலக்கியம் – <a href="http://
“>சா. கந்தசாமி – சாகித்ய அக்காடமி
74. கண்களுக்கு அப்பால் இதயத்திற்கு அருகில் – மாலன் – சாகித்ய அக்காடமி
75. ஈழத்து இலக்கிய மலர் -தீபம் இதழ் – 1969
76. ஈழத் தமிழ் சிறுகதை மணிகள் – செம்பியன் செல்வன்
77. பனியும் பனையும்இந்திரா பார்த்தசாரதி, எஸ் பொ
78. தமிழ்நேசன் பவுன் பரிசு பெற்ற கதைகள் – கணையாழி டிசம்பர் 2015
79. கலைகின்ற கருமேகங்கள் – பாரதிதாசன் நூற்றாண்டு போட்டி பரிசு கதைகள் மலேசியா, 1993
80. வெள்ளிப் பாதரசம் – தொகுப்பு செ. யோகநாதன் -1993
81. முகங்கள் – வி. ஜீவகுமாரன் (புலம் பெயர் வாழ்வு பற்றிய உலக தமிழ் எழுத்தாளர்களின் கதைகள்) – 2011
82. கதையியல் – க. பூரணசந்திரன் – அடையாளம்
83. சிகரம் கண்ட அமரர் சிறுகதைகள் – ஜெகாதா – செண்பகா பதிப்பகம்
84. இருபதாம் நூற்றாண்டில் சில தமிழ் சிறுகதைகள் – சந்திரகாந்தன் – செண்பகா பதிப்பகம்
85. காலச்சுவடு கதைகள் – மனுஷ்யபுத்திரன் – காலச்சுவடு
86. புதியவர்களின் கதைகள்ஜெயமோகன் – நற்றிணை
87. மீண்டும் புதியவர்களின் கதைகள்ஜெயமோகன் – இணய தளம்
88. சிறப்பு சிறுகதைகள் – விகடன் – 2007
89. தலித் பற்றிய கொங்கு சிறுகதைகள்பெருமாள் முருகன் – புதுமலர் பதிப்பகம்
90. விருட்சம் கதைகள் – அழகியசிங்கர் – விருட்சம் வெளியீடு 1992
91. தீபம் கதைகள் – நா. பார்த்தசாரதி
92. புதிய சலனங்கள் – அரவிந்தன் – காலச்சுவடு
93. கண்ணதாசன் இதழ் கதைகள்
94. உயிர் எழுத்து கதைகள் – க. மோகனரங்கன் – உயிர் எழுத்து பதிப்பகம்
95. நடை இதழ் தொகுப்பு -கி.அ. சச்சிதானந்தம் – சந்தியா பதிப்பகம்
96. சிகரம் இதழ் தொகுப்பு – கமலாலயன்
97. மணிக்கொடி இதழ் தொகுப்புசிட்டி, அசோகமித்ரன், ப. முத்துக்குமாரசுவாமி – கலைஞன் பதிப்பகம்
98. சரஸ்வதி களஞ்சியம் – விஜயபாஸ்கரன் – பரஞ்சோதி பதிப்பகம்
99. தீபம் இதழ் தொகுப்பு – வே. சபாநாயகம் – கலைஞன் பதிப்பகம்
100. கலைமகள் இதழ் தொகுப்பு – கீழாம்பூர் – கலைஞன் பதிப்பகம்
101. கணையாழி களஞ்சியம் 1 – வே. சபாநாயகம் – பரஞ்சோதி பதிப்பகம்
102. கணையாழி களஞ்சியம் 2இந்திரா பார்த்தசாரதி – பரஞ்சோதி பதிப்பகம்
103. கணையாழி களஞ்சியம் 3, 4 – என்.எஸ். ஜகந்நாதன் – கலைஞன் பதிப்பகம்
104. கசடதபற இதழ் தொகுப்பு சா. கந்தசாமி – கலைஞன் பதிப்பகம்
105. முல்லை இலக்கிய களஞ்சியம் – மு. பழநியப்பன் – முல்லை பதிப்பகம்
106. கனவு இதழ் தொகுப்புசுப்ரபாரதிமணியன் – காவ்யா
107. முன்றில் இதழ் தொகுப்பு – காவ்யா சண்முகசுந்தரம் – காவ்யா
108. அமுதசுரபி இதழ் தொகுப்பு (தமிழ் சுரபி) – விக்கிரமன் -இலக்கிய பீடம்
109. அன்னம் விடுதூது கதைகள் – கதிர் – அன்னம் பதிப்பகம்
110. சுபமங்களா இதழ் தொகுப்பு – இளையபாரதி – கலைஞன் பதிப்பகம்
112. இலக்கிய வட்டம் இதழ் தொகுப்பு – கி.அ. சச்சிதானந்தம் – சந்தியா
113. ஞானரதம் இதழ் தொகுப்பு – வே. சபாநாயகம் – எனி இந்தியன் பதிப்பகம்
114. சொல்லில் அடங்காத வாழ்க்கை – தேவிபாரதி – காலச்சுவடு
115. தொப்புள் கொடி – திலகவதி – அம்ருதா பதிப்பகம்
116. சேரநாட்டு சிறுகதைகள் – திருவனந்தபுரம் தமிழ் சங்கம்
117. மனஓசை கதைகள் – சூரியதீபன் – தோழமை வெளியீடு
118. புதிய தமிழ் இலக்கிய வரலாறு – க. சண்முகசுந்தரம் – சாகித்ய அக்காடமி
119. தமிழ் சிறுகதை பிறக்கிறதுசி.சு. செல்லப்பா – காலச்சுவடு
120. குருஷேத்திரம் தொகுப்பு – நகுலன்
121. தென்னிந்திய சிறுகதைகள் – கே.வி. ஷைலஜா – வம்சி புக்ஸ்
122. வல்லமை சிறுகதைகள் – தாரிணி பதிப்பகம்
123. சிறகிசைத்த காலம் – வே. நெடுஞ்செழியன், பவா செல்லதுரை – வம்சி புக்ஸ்
124. பார்வைகள்அசோகமித்ரன் – நற்றிணை பதிப்பகம்
125. சிக்கி முக்கி சிறுகதைகள் – தாரா கணேசன் – புதுமைப்பித்தன் நூலகம்
126. காக்கைகள் துரத்தி கொத்தும் தலைக்குரியவன் – மாதவராஜ் – வம்சி புக்ஸ்
127. ஆர்வி, கேசவமணி, நிலாரசிகன், அ.மு. செய்யது, அருண் தமிழ் ஸ்டுடியோ, இமயம், சென்ஷி – இவர்களின் இணய தள பதிவுகள்.
128. சிறுகதை இலக்கிய வளர்ச்சியில் வடக்கு வாசல் – அ. இராஜசேகர் – ஸ்ரீபாரதி புத்தகாலயம்
129. உலகத் தமிழ் இலக்கிய வரலாறு – (1851-2000 வரை) – ராம. குருநாதன் கட்டுரை
130. தொடரும் வெளிச்சம் – குமரி பதிப்பகம் – 1995
131. வானதி சிறப்பு சிறுகதைகள் 1 – மகரம் – வானதி பதிப்பகம்
132. Selected Tamil Short stories by Rajendira Awasthi
133. A Place to live – Edited by Dilip Kumar – Tamil Stories- Penguin books

இந்த பட்டியல் சிறந்த சிறுகதைகள் எவை என்பதைக் காட்டுகிறது. சில எழுத்தாளர்களின் பல சிறுகதைகள் இதில் இடம் பிடித்துள்ளன. இன்னும் பல சிறுகதைகள் 3 பரிந்துரைகள் பெற்று இருக்கின்றன. பல சிறுகதைகள் 2 பரிந்துரைகள் பெற்றுள்ளன. அவற்றை “நல்ல கதைகள்” என்ற தலைப்பில் அடுத்த கட்டுரையில் பட்டியலிடுகிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள், செல்வராஜ் பக்கம்

பிடித்த சிறுகதை – பூமணியின் ‘ரீதி’

Poomaniஎன்று ‘வெக்கை‘ நாவலைப் படித்தேனோ அன்றிலிருந்தே பூமணி என் மனதில் சம்பிரமமாக உட்கார்ந்துவிட்டார். கிராமத்தின், ஜாதி பின்புலத்தை, நுண்விவரங்களோடு கதையோடு பிணைத்துவிடுவதில் அவர் கில்லாடி. அந்த கில்லாடித்தனம் வெளிப்படும் இன்னொரு பிரமாதமான சிறுகதை ரீதி. ‘புளிச்ச தண்ணி’ கூட கிடையாது என்று விரட்டிவிடும் அம்மா, படிக்கப் போன இடத்தில் சோறு இல்லாமல் திரும்பி வரும் அண்ணன், அணிலைத் தின்று ஒரு வேளையை ஓட்டும் சிறுவர்கள் என்று ஒரு பிரமாதமான ஓவியத்தையே தீட்டிவிடுகிறார்.

புரியாத விஷயம் ஒன்றுண்டு – அது என்ன தலைப்பு, ‘ரீதி’ என்று? தலைப்புக்கும் கதைக்கும் என்ன தொடர்பு?

எஸ்ராவின் நூறு சிறந்த சிறுகதைகள் பட்டியலில் ரீதி இடம் பெறுகிறது.

கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பூமணி பக்கம்

‘காயத்ரி’ திரைப்படம்/நாவல் பற்றி சாரதா

காயத்ரி திரைப்படத்தைப் பற்றிய பதிவிலிருந்து தாவித்தாவி சாரதாவின் இந்த சுவாரசியமான பின்னூட்டத்தைப் பார்த்தேன். இப்போது ஒரு பதிவாகவே போட்டுவிட்டேன். ஓவர் டு சாரதா!

gayatri_film‘காயத்ரி’ நாவல், அப்போது பிரபலமாக இருந்த தினமணிகதிர் என்ற வார இதழில்தான் வெளியானது. வெளியானபோது நான் படிக்கவில்லை, அப்போது பிறந்திருந்திருப்பேனா என்பதும் தெரியாது. ஆனால் அந்நாளில் வெளியான நாவல்களை நான் படிக்க உதவியாக இருந்தது, சென்னை மயிலாப்பூரில் இயங்கிய ஒரு லெண்டிங் லைப்ரரி (காசு கொடுத்துப்படிக்க வேண்டும்… ஒரு புத்தகத்தை இத்தனை நாளைக்குள் திருப்பித் தரவேண்டும்… அதற்குள் படித்துவிட்டுக் கொடுக்காவிட்டால் மறுகட்டணம் என்ற ஏகப்பட்ட நிபந்தனைகள் உண்டு). அந்நிபந்தனைகளுக்குட்பட்டு அங்கே வாங்கிப்படிப்பதில் ஒரு மகிழ்ச்சி. மகிழ்ச்சிக்கு முக்கிய காரணம், நாவல்கள் அனைத்தும் பதிப்பகங்களில் வெளியான புத்தகங்கள் அல்ல. குமுதம், விகடன், கதிர், கல்கி போன்ற வார இதழ்களில் கிழித்து பைண்ட் செய்யப்பட்டவை. கதை யோட்டத்துடன் அமைந்த கண்ணைக்கவரும் அழகான படங்களுடன், அடிஷனல் போனஸாக அப்பக்கங்களில் வெளியாகியிருக்கும் துணுக்குகள், ஜோக்குகள் இவைகளுடன். கிழித்து பைண்ட் செய்யப்பட்ட நாவல்களில் இரட்டிப்பு சந்தோஷம் என்னவென்றால்… ஒன்று, வார இதழ்களில் படிக்கும் போது கிடைக்கும் ஆனந்தம். இன்னொன்று, கதையை எங்காவது ரொம்ப சுவாரஸ்யமான இடத்தில் நிறுத்தி “தொடரும்” என்று போட்டுவிடுவார்களோ என்ற பயமின்றி படிக்கலாம்.

இவ்வகையில், பைண்ட் செய்யப்பட’காயத்ரி’ நாவலைப் படித்துவிட்டு, அதே ஆவலுடன் ‘காயத்ரி’ திரைப்படம் பார்க்கச்சென்றபோது படம் ‘சப்’பென்று இருந்தது. கதையில் கணேஷ்-வசந்த் இருவரும் காயத்ரியைக் காப்பாற்றி அழைத்து வருவதாக இருந்த முடிவை மாற்றி, படத்தில் காயத்ரி இறந்துபோய் விடுவதுபோல முடித்திருப்பார்கள். ஆக, படம் முழுக்க பட்ட கஷ்ட்டம் எல்லாம் வீண் என்பதுபோல தெரியும்.

காயத்ரி திரைப்படத்தில் கணேஷ் ரோலில் மக்கள் கலைஞர் ஜெய்சங்கரும், வசந்த் ரோலில் வெண்ணிற ஆடை மூர்த்தியும் நடித்திருந்தனர். சுஜாதாவின் எல்லாக் கதைகளிலும் கணேஷ் ரோல் கொஞ்சம் சீரியஸானது என்பதும் வசந்த் ரோல் கொஞ்சம் கோமாளித்தனமானது என்பதும் நமக்குத்தெரிந்தது தானே. ஆனால் காயத்ரி நாவலில் முழுவீச்சில் வந்த கணேஷ் ரோலை (வசந்த் ரோலையும்தான்) வெட்டிக்குறைத்து, ஒரு கெஸ்ட் ரோலுக்கும் கொஞ்சம் அதிகமாக சுருக்கி விட்டனர்.

படத்தில் முதலில் அந்த “அக்கா” ரோலுக்கு பிரமீளாவைத்தான் புக் செய்திருந்தார்களாம். இடையில் எப்படி ராஜசுலோச்சனா மாற்றப்பட்டார் என்பது தெரியவில்லை. நல்லதுதான். பிரமீளாவிடம் ராஜசுலோச்சனா வின் அடாவடித்தனத்தை பார்த்திருக்க முடியாது.

படம் பார்த்த நமக்கே இவ்வளவு ஏமாற்றம் எனும்போது, கதையைக் கருவுற்ற சுஜாதாவின் ஏமாற்றம் எப்படியிருக்கும் என்று உணரலாம். ‘காயத்ரி’ ரிலீஸானபோது ‘ப்ரியா’ தயாரிப்பில் இருந்தது. காயத்ரியைப்பார்த்து அதிர்ந்த எழுத்தாளர் சுஜாதா, குமுதம் பேட்டியில், “பஞ்சு (அருணாச்சலம்)கதையைக் கேட்டாரே என்பதற்காகக் கொடுத்தேன். பஞ்சு பஞ்சாக்கிவிட்டார். ப்ரியா என்ன கதியாகப்போகிறாளோ” என்று சொல்லியிருந்தார். அவர் பயந்ததுபோலவே நடந்தது. ஆனால் எஸ்.பி.தமிழரசிக்கு ‘கல்லாப்பெட்டி’ நிறைந்தது (உபயம் ரஜினி + இளையராஜா + சிங்கப்பூர்).

(காயத்ரி நாவலின் கடைசி வரி இன்னும் நினைவிருக்கிறது…..

காயத்ரியை ஏற்றிக்கொண்டு வந்த கார், ஒரு ஃபைவ் ஸ்டார் ஓட்டலைநோக்கி விரைந்தது. காயத்ரி “ஏன் ஓட்டலுக்குப் போறீங்க?. உங்க வீட்டிலேயே தங்கிக்கிறேனே. உங்க மேல எனக்கு நம்பிக்கையிருக்கு”. அதற்கு வசந்த், “உங்களுக்கு நம்பிக்கையிருக்கு. ஆனா எங்க மேல எங்களுக்கு நம்பிக்கையில்லே”. கார், ஓட்டல் காம்பவுண்டுக்குள் நுழைந்தது).

தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம், திரைப்படங்கள், விருந்தினர் பதிவுகள்

சுஜாதாவின் முன்னுரை

subrabharathimanianசுப்ரபாரதிமணியன் என் மனதுக்குப் பிடித்தமான எழுத்தாளர்களில் ஒருவர். அவருடைய சிறுகதைகள் வாழைப்பழம் போல அவசரமாக விழுங்கிவிட ஏற்றவை அல்ல. மாதுளம்பழம் போல மெதுவாக உரித்து கொஞ்சம் கொஞ்சமாக ரசித்து சாப்பிட வேண்டும். மனதில் மெதுவாக அசை போடலாம். மங்கலான இரவில் மொட்டை மாடியில் பழைய தமிழ் சினிமா பாட்டுகளைக் கேட்கிற சுகம் அவரது எழுத்தில் உண்டு.

sujathaஅவரது புத்தகங்களில் எனக்கு மிகவும் பிடித்தது “அப்பா” என்ற சிறுகதைத் தொகுப்பு. மனிதருக்கு மரத்தடியில் தூங்குவது, லக்ஷ்மி வெடி வெடிப்பது எல்லாம் அருமையான கதையாக உருவாகிறது.

அவர் செகந்தராபாதில் வாழ்ந்த காலங்களில் வருஷாவருஷம் கஷ்டப்பட்டு ஒரு தமிழ் புத்தகக் கண்காட்சி நடத்துவார். அங்கே நான் சுஜாதா புத்தகங்களைத்தான் தேடிப் போனேன். ஆனால் என்னென்னவோ வாங்கினேன். அப்புறம் கண்காட்சி நடத்துகிறாரே, இவர் புத்தகம் ஒன்றாவது வாங்க வேண்டுமோ என்று கொஞ்சம் சலித்துக் கொண்டேதான் இந்தப் புத்தகத்தை வாங்கினேன். அதுவும் சுஜாதா முன்னுரை எழுதி இருக்கிறாரே, மோசமாக இருக்காது என்று ஒரு கணிப்பு. ஆனால் முதல் ஒன்றிரண்டு கதைகளைப் படித்த பிறகு இந்த அழுவாச்சி கதைகளை எல்லாம் எவன் படிப்பான் என்று பரணில் தூக்கிப் போட்டுவிட்டேன். ஓரளவு வயதான பிறகு, முதிர்ச்சி வந்த பிறகுதான் இதெல்லாம் எவ்வளவு உன்னதமான எழுத்து என்று புரிந்தது. சுஜாதாவின் முன்னுரை புரியவும் செய்தது, எங்கெல்லாம் சுஜாதாவின் கருத்திலிருந்து என் கருத்துகள் வேறுபடுகின்றன என்பதும் தெரிந்தது. வாசகனாக எனக்கு ஓரளவு தேர்ச்சி வந்துவிட்டது என்று நினைத்துக் கொண்டேன்.

சமீபத்தில் அவர் அந்த முன்னுரையின் ஒரு பகுதியை ஃபேஸ்புக்கில் பதிந்திருந்தார். வசதிக்காக கீழே கொடுத்திருக்கிறேன்.


சுஜாதாவின் வெள்ளி விழா முன்னுரை: (ஒரு பகுதி)
சுப்ரபாரதிமணியனின் “அப்பா” : சிறுகதைத் தொகுப்பிற்கு ( 1987) சுஜாதா எழுதியது

சுதந்திரத்திற்குப் பின் பிறந்தவர்கள் தமிழில் இன்று எழுதும் சிறுகதைகளில் லேசான சோகம், லேசான அவநம்பிக்கை, சிறுகதை வடிவத்தைப் பற்றிய அக்கறையின்மை இவை மூன்றும் இருப்பதைப் பார்க்கிறேன். தமிழில் இலக்கியத் தரமான சிறுகதைகள் இன்று சிறுபத்திரிகைகளில்தான் எழுதப்படுகின்றன என்று சொல்பவர்கள் உண்டு. சில வயசான எழுத்தாளர்கள் நான் எழுதினதுக்கு பிற்பாடு நல்ல கதைகள் நின்றுவிட்டன, தமிழ்ச் சிறுகதை உலகம் எப்படித்தான் பிழைக்கப் போகிறதோ என்று கவலைப்பட்டுக் கொண்டு பல்செட்டை கழற்றி வைக்கிறார்கள். சில ஜாம்பவான்களும் சாம்ராட்டுகளும் நான் எழுதுவதுதான் இலக்கியம் மற்றதெல்லாம் ஊதுவத்தி வியாபாரம் என்கிறார்கள்.

இந்த வகை அதீத அபிப்பிராயங்கள் எல்லாம் எந்த இலக்கிய சூழ்நிலையிலும் ஒரு காசு பெறாது. இவைகளுக்குக் காரணங்கள் ஒரு புறம் பொறாமை, மற்றொரு புறம் இயலாமை. இவைகளையெல்லாம் நீக்கி விட்டு ஆரோக்கியமாக இன்றைய தமிழ்ச் சிறுகதை உலகைப் பார்த்தால் நம்பிக்கை பிறக்கக்கூடிய தரமான பல கதைகள் இன்றைய காலகட்டத்தில் எழுதப்படுகின்றன. இளைஞர்கள் தத்தம் புதிய புதிய கவலைகளையும் புதிய மன ஓட்டங்களையும் செதுக்கி வைத்தாற்போல வார்த்தைகளில் அவ்வப்போது எழுதிக்கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலும் சிறு பத்திரிகைகளில்தான் எழுதுகிறார்கள். சிலர் பெரிய பத்திரிகைகளிலும் அனுமதி பெறுகிறார்கள். பலர் சொந்தமாகவே கைக்காசை செலவழித்து அழகான புத்தக வடிவில் வெளிவருகிறார்கள். இந்த வகையில் தமிழில் வருஷத்துக்கு நாம் முன் சொன்ன கிழச்சிங்கங்களின் கவலையை மதிக்காது பத்துப் பன்னிரண்டு நல்ல கதைகள் தேறுகின்றன.

இவ்வாறு நல்ல கதைகள் எழுதும் இவர்கள் பெரும்பாலோர் கவிதையிலிருந்து சிறுகதைக்கு வந்திருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பலர் இன்னமும் கவிதையும் எழுதுகிறார்கள் (சிலர் அதே பெயரில் சிலர் புனை பெயரில்) சிலர் சித்திரங்கள் வரைகிறார்கள். சிலர் வண்ண ஓவியங்கள். இப்படி இவர்கள் தத்தம் உள்ளங்களை வெளிப்படுத்த அவ்வப்போது கிடைக்கும் சந்தர்ப்பங்களையும் சாதனங்களையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த வகையில் சுப்ரபாரதிமணியனும் கவிதைகளும் கதைகளும் எழுதுகிறார். இந்த இரட்டை வேடத்தில் சிரமங்களும் சௌகரியங்களும் இருக்கின்றன. கவிதை மனமும் ஒரு கவிஞனின் உன்னிப்பான பார்வையும் சிறுகதைக்கு மிகவும் உதவும். அதே சமயம் சிறுகதை வடிவமும் கவிதை வடிவமும் வேறு வேறு. அதனால் சிறுகதையல்லாததையெல்லாம் சிறுகதை என்று ஆள்மாறாட்டம் செய்யக்கூடிய அபாயங்கள் கவிஞர்கள் எழுதும் சிறுகதைகளுக்கு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

நான் மேலே சொன்ன இரண்டு வகைக்கும் சுப்ரபாரதிமணியனின் இந்த தொகுப்பிலிருந்து உதாரணங்கள் காட்டி விளக்குமுன் சிறுகதை பற்றிய செய்திகள்:

சிறுகதைக்கு மேற்கத்திய இலக்கியத்தில் முக்கியத்துவம் குறைந்து கொண்டு வருவதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். முதல் காரணம் எல்லாக் கதைகளும் எழுதப்பட்டு விட்டன. இனிமேல் புதுசாக சாத்தியக் கூறுகளை ஆராயவேண்டுமெனில் விஞ்ஞான கதைகளில்தான் முடியும் என்று ஒரு சித்தாந்தம் உண்டு.

தலையணை நாவல்கள் லட்சக்கணக்கில் விற்க சிறுகதைத் தொகுதிகள் மேலைநாட்டில் விற்காததற்கு காரணம் என்னவென்று அவர்கள் கண்டுபிடிக்கவேயில்லை. இருப்பினும் சிறுகதை இலக்கியம் மறுகிக் கொண்டிருப்பது நிஜமே. தமிழில் அந்த நிலைமை இன்னும் வரவில்லை. தமிழ் வார மாதப் பத்திரிகைகளில் பெரும் அளவு சிறுகதைகளைப் பதிப்பித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். (அவைகளின் தரம் பற்றி நாம் இப்போது பேசவில்லை.) எண்ணிக்கையில் தமிழில் இப்போது சிறுகதைகள் நிறையவே எழுதப்படுகின்றன. ஆனால் நாவல்கள், கவிதைத் தொகுப்புக்கள் வெளிவரும் அளவுக்கு சிறுகதைத் தொகுப்புக்கள் வெளிவருவதில்லை. இதற்கு காரணம் பதிப்பாளர்கள் சிறுகதைத் தொகுப்புக்கள் அதிகம் விலை போவதில்லை என்கிறார்கள். இரண்டு பாகம் மூன்று பாகம் என்று ஆயிரக்கணக்கில் பக்கங்கள் கொண்ட உறையூர் ஒற்றர்களைக் கொண்ட சரித்திர நாவல்களை எழுபத்தைந்து ரூபாய் கொடுத்து வாங்கத் தயாராக இருப்பவர்கள் சிறுகதைத் தொகுப்புக்களுக்கு ஆதரவு தராதது தமிழ் நாட்டின் எத்தனையோ சோகங்களில் ஒன்று.

இதனால் மனசிழந்த நல்ல சிறுகதை எழுத்தாளர்கள் கவிதைக்குத் தாவி விட்டார்களோ என்று எனக்கு சந்தேகம் வருகிறது. நம்பிக்கை இழக்காமல் சுப்ரபாரதிமணியன் போன்றவர்கள் விடாப்பிடியாக சிறுகதை எழுதிக்கொண்டிருப்பதை உற்சாகப்படுத்த வேண்டும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: சுப்ரபாரதிமணியன் பக்கம், சுஜாதா பக்கம்