ஐசக் அசிமோவின் ‘I, Robot’

Three Laws of Robotics

  1. A robot may not injure a human being or, through inaction, allow a human being to come to harm.
  2. A robot must obey orders given it by human beings except where such orders would conflict with the First Law.
  3. A robot must protect its own existence as long as such protection does not conflict with the First or Second Law.

issac_asimovமனிதர்களால் உருவாக்கப்படும் ரோபோக்கள் மனிதர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவது என்பது ஃப்ராங்கன்ஸ்டைன் காலத்திலிருந்து எந்திரன் சினிமா வரை மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும் ஒரு கரு. தன் கதை உலகத்தில் அந்த அச்சத்தைத் தவிர்க்கவே அசிமோவ் இந்த விதிகளை ஒரு சட்டகமாக வரையறுத்தார். இது என்ன பிரமாதம், சாதாரண காமன் சென்ஸ்தானே என்று தோன்றலாம். ஆனால் இதை வைத்துக் கொண்டு – ஏறக்குறைய கணிதத் தேற்றங்கள் போல இந்த மூன்று விதிகளிலிருந்து ஆரம்பித்து அசிமோவ் ஒரு புது உலகத்தையே படைத்திருக்கிறார்.

அவரது ரோபோக்கள் உலகத்தில் மீண்டும் மீண்டும் இந்த மூன்றே விதிகள் எப்படி ரோபோக்களின் செயல்களை பாதிக்கின்றன என்பதைத்தான் காட்டுகிறார். உதாரணமாக முதல் விதியை எடுத்துக் கொள்ளுங்கள். ரோபோவின் கண்ணெதிரில் ஒரு கொலை நடந்தால் அதை கொலைகாரனுக்கு சின்ன அடி கூட படாமல் எப்படித் தடுப்பது? ரோபோ நீதிபதியாக அமர்ந்திருக்கிறது, ஆயிரம் பேரைக் கொன்ற தீவிரவாதிக்கு எப்படி தண்டனை வழங்கும்? ஒரு மனிதன் ரோபோவை ‘தற்கொலை’ செய்து கொள்ள ஆணையிட்டால், அதை அது கடைப்பிடிக்க வேண்டுமா? அப்படி தன்னைத் தானே அழித்துக் கொண்டால் எதிர்காலத்தில் இன்னொரு மனிதனுக்கு வரும் கஷ்டங்களைத் தவிர்க்க முடியாமல் போகலாம். என்ன செய்வது? பீஷ்மருக்கும் துரோணருக்கும் கர்ணனுக்கும் முன்னால் இருந்த அதே இரண்டு சரியான அல்லது இரண்டு தவறான தேர்வுகளில் எதைத் தேர்ந்தெடுப்பது என்ற கேள்விதான் அசிமோவின் ரோபோ சிறுகதைகளிலும் நாவல்களிலும் மீண்டும் மீண்டும் காட்டப்படுகின்றன.

‘I, Robot’-வில் உள்ள சிறுகதைகள் நாற்பதுகளில் எழுதப்பட்டன. ஐம்பதுகளில் முதல் தொகுப்பு புத்தகமாக வந்தது. அதற்குப் பிறகு பல சிறுகதைகள், நாவல்கள் வந்துவிட்டன.

இந்தத் தொகுப்பில் என்னைக் கவர்ந்த சிறுகதைகள் Reason – சிந்திக்க ஆரம்பித்த ரோபோவால் தன்னை விட அறிவிலும் ஆற்றலிலும் குறைந்த மனிதர்கள் தன்னைப் படைத்தார்கள் என்று நம்பமுடியவில்லை, அது ஒரு எனர்ஜி கன்வெர்டர்தான் தன்னைப் படைத்த கடவுள் என்று நம்புகிறது, ஒரு மதத்தை ஆரம்பிக்கிறது; Liar! – எப்படியோ மனிதர்களின் ஆழ்மன எண்ணங்களை ஒரு ரோபோவால் புரிந்து கொள்ள முடிகிறது. அவர்களை புண்படுத்தக் கூடாது என்பதற்காக அது பொய் சொல்கிறது! Evidence – ரோபோக்கள் பற்றி அச்சம் நிறைந்திருக்கும் காலத்தில் பொறுப்பான பதவிக்கான தேர்தலுக்கு நிற்கும் ஒரு வக்கீல் மனிதன் இல்லை, மனித உருவத்தில் இருக்கும் ரோபோ என்ற சந்தேகம் எழுகிறது. அந்த வக்கீல் பொதுக் கூட்டத்தில் நைநை என்று நச்சரிக்கும் ஒரு மனிதனை கன்னத்தில் ஒரு அறை விடுகிறான். ரோபோக்கள் முதல் விதிப்படி மனிதனை காயப்படுத்த முடியாது என்பதால் அவன் சுலபமாக ஜெயிக்கிறான். ஆனால் அறை வாங்கியது மனிதன்தானா?

கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: SF

பிடித்த கவிதை

காமம் காமம் என்ப; காமம்,
அணங்கும் பிணியும் அன்றே; நினைப்பின்,
முதைச்சுவற்கலித்த முற்றா இளம்புல்
மூதாதை வந்தாங்கு
விருந்தே காமம் பெருந்தோளோயே

முதைச்சுவற்கலித்த முற்றா இளம்புல் – இது கவிதை!

யார் எழுதியது? தெரிந்தால் சொல்லுங்கள்… மிளைப்பெருங்கந்தனார் என்பவர் எழுதியதாம், குறுந்தொகையில் இருக்கிறதாம்.

பாலாவுக்காக கோனார் நோட்ஸ்:
பெரிய தோள்களை உடையவனே, காமம் காமம் என்கிறார்கள்; அது பேய் பிடிப்பதோ அல்லது நோயோ அல்ல. இளம்புல்லை பல் போன வயதான பசு சப்பிப் பார்ப்பதைப் போல அது ஒரு பெரும் விருந்து

தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள்

நோபல் பரிசு வென்ற பாட்ரிக் மோடியானோவின் ‘Suspended Sentences’

modianoமோடியானோ ஃப்ரென்ச் எழுத்தாளர். 2014-இல் நோபல் பரிசை வென்றவர். நானும் ஒரு வருஷமாக அவரது புத்தகம் எதையாவது படிக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறேன், இப்போதுதான் முடிந்திருக்கிறது.

Suspended Sentences மூன்று குறுநாவல்களின் – Suspended Sentences (1988), Flowers of Ruin (1991), Afterimage (1993) – தொகுப்பு. மூன்றுக்கும் ஒன்றோடொன்று தொடர்புண்டு. அசோகமித்ரனின்இன்று‘ நாவல் மாதிரி. அவை மூன்றும் சேர்ந்து ஒரு சூழலை – ambience – நமக்குக் காட்டுகின்றன. சொல்லப்படுபவை, காட்டப்படுபவை எல்லாமே கொஞ்சம் பனியில் மறைந்த மாதிரி மங்கலாகத்தான் காட்டப்படுகின்றன. Feels like looking at a blurred photo. அவர் கதை, சம்பவங்கள் ஆகியவற்றை விவரிக்கவில்லை. அவர் கொண்டு வர நினைப்பது ஒரு சூழலை, ambience, atmosphere-ஐ. அதில் அவர் நிச்சயமாக வெற்றி பெறுகிறார். அப்படி கதையே இல்லாத கதைகளிலும் ஒரு சுவை இருக்கத்தான் செய்கிறது. இந்தத் தொகுப்பின் பலம் அந்தச் சுவையை உணரச் செய்வதுதான்.

ஏதாவது ஒன்றே ஒன்று படிக்க வேண்டுமென்றால் நான் பரிந்துரைப்பது Suspended Sentences. இரண்டாம் உலகப் போரின் காலம். பாரிஸ் ஜெர்மனியின் கைக்குள் இருக்கிறது. அப்பா யூதர். அம்மாவும் யூதரா என்று தெளிவாக இல்லை. அப்பா யூதர்தானா என்பதே தெளிவாக இல்லை. அம்மா சர்க்கஸ்காரி, ஊர் ஊராகப் போகிறாள். தன் இரண்டு மகன்களை ஒரு தோழியிடம் விட்டுச் செல்கிறாள். தோழியும் பழைய சர்க்கஸ்காரி, ஒரு விபத்துக்குப் பிறகு சர்க்கஸில் ட்ரபீஸ் ஆடமுடிவதில்லை. அந்த வீட்டில் தோழி, அவளுக்கு ஒரு தோழி, அம்மாக்காரி ஒருத்தி இருக்கிறார்கள். இவர்களை பார்த்துக் கொள்ள இன்னொரு பெண் வருகிறாள். மூத்தவன் (படோசே என்று பேர்) கண்ணோட்டத்தில்தான் கதை விவரிக்கப்படுகிறது. படோசேக்கு சில சமயம் பெரியவர்கள் பேசும் வாக்கியங்கள் – சரியாகப் புரியாவிட்டாலும் கூட – அப்படியே மனதில் நின்றுவிடுகின்றன. இவர்கள் பள்ளிக்குப் போகிறார்கள். புழக்கம் இல்லாத ஒரு மாளிகையைக் கண்டு கொஞ்சம் பயம். வீட்டுக்கு வந்து போகும் சிலர். மெதுமெதுவாக அவர்கள் ஜெர்மானியர்களுக்கு உதவுபவர்கள், சின்ன லெவல் திருடர்கள் என்று காட்டப்படுகிறது. அப்பா கைது செய்யப்படும்போது இவர்களில் ஒருவர் உதவியோடு விடுதலை செய்யப்படுகிறார். படோசே பெரியவனான பிறகும் இவர்கள் அவனுக்கு ஒரு obsession ஆக இருக்கிறார்கள். அவர்களைத் தேடுகிறான். ஆனால் அவர்களை சந்திக்க விரும்புகிறானா என்பது சந்தேகம்தான். ஒரு நாள் இரண்டு சிறுவர்களையும் அம்போ என்றுவிட்டுவிட்டு எல்லாரும் போய்விடுகிறார்கள். கதையே அவ்வளவுதான். குவியம், க்ளைமாக்ஸ், பஞ்ச் லைன் என்று எதுவும் கிடையாது. ஆனாலும் நல்ல படைப்புதான்.

குறை என்றால் இது என் மனதைத் தொடவில்லை. இதில் தெரிவது முழுக்க முழுக்க மோடியானோவின் திறமை. சிறுவனுக்கும் அவனைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது சரியாகப் புரிவதில்லை. அவன் கண்ணோட்டத்திலேயே பார்க்கும் நமக்கும் பாதிதான் புரிகிறது, ஆனால் சிறுவனின் கண்ணோட்டத்திலிருந்து பார்ப்பதால்தான் அப்படி பாதி புரியாமல் இருக்கிறது என்பதும் தெரிகிறது. மோடியானோவிடம் நல்ல craft இருக்கிறது, ஆனால் அது என்னைப் பொறுத்த வரை கலையாக மிளிரவில்லை. அசோகமித்ரனின் பல கதைகள் இதை விட எனக்கு பல மடங்கு உயர்வானவை.

Flowers of Ruin-இல் அதே பையன். அவனது பதின்ம வயது அனுபவங்களும் தற்போதைய அனுபவங்களும் மாற்றி மாற்றி விவரிக்கப்படுகின்றன. 1930களில் மர்மமாக இறந்து போன ஒரு கணவன்-மனைவியைப் பற்றி ஆராய்கிறான். இதிலும் கதை முக்கியமே இல்லை.

Afterimage இன்னும் சுத்தம். கதையின் வாடை கூட கிடையாது. ஒரு புகைப்படக் கலைஞனிடம் நட்பு கொள்ளும் இளைஞன். இதை எல்லாம் விவரிப்பது ரொம்ப கஷ்டம்.

மோடியானோ நல்ல எழுத்தாளர்தான். ஆனால் அவரும் லா.ச.ரா. போன்று ஒரே கதையைத்தான் திரும்பத் திரும்ப எழுதுகிறாரா என்று தெரியவில்லை. ஒப்பிட்டுப் பார்த்தால் இவரை விட நோபல் பரிசுக்குத் தகுதி உள்ளவர்கள் என்று பத்து தமிழ் எழுத்தாளர்களையாவது சொல்லலாம் என்பது கொஞ்சம் உறுத்துகிறது.

Suspended Sentences தொகுப்பை படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். ஆனால் இது தீவிர இலக்கிய வாசகர்களுக்கு மட்டும்தான். விறுவிறுப்பு, கதை என்று ஒன்று இருக்க வேண்டியது இதெல்லாம் உங்களுக்கு அவசியம் என்றால் நீங்கள் ஏமாற்றம் அடைய வாய்ப்பிருக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: உலக எழுத்து

தொடர்புடைய சுட்டிகள்:
மோடியானோ பற்றிய விக்கி குறிப்பு
மோடியானோவின் நோபல் உரை
மோடியானோவின் பின்புலம் பற்றிய ஒரு நல்ல பேட்டி/கட்டுரை

இடைவெளி

சிலிகன் ஷெல்ஃபில் ஒரு பதிவை எழுதி ஒரு வாரமாவது இருக்கும். நேரக்குறைவு, வேலைப்பளு, தேங்கிக் கிடக்கும் வீட்டு வேலைகள், ஏற்கனவே எழுதி வைத்திருந்தவை எல்லாவற்றையும் பதித்துவிட்டேன் என்று காரணங்களை சொல்ல முடியும்தான். ஆனால் உண்மையான காரணம் சோம்பேறித்தனம்தான். யாரோ சொன்னது போல சோம்பேறிக்குத்தான் எப்போதும் நேரம் குறைவாக இருக்கிறது.

மீண்டும் ஆரம்பிக்க வேண்டும்தான். ஆனால் பெரிதாக ஸ்டாக் இல்லை, அதனால் வாரம் இரண்டு பதிவு (வியாழன் ஒன்று, ஞாயிறு ஒன்று) என்று ஆரம்பிக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்

ராபர்டோ சாவியானோவின் ‘Gomorrah’

கொமொரா நான் பரிந்துரைக்கும் புத்தகம் அல்ல.

angelina_jolie_white_suitஇருந்தாலும் ஒரு கட்டுரை ஏறக்குறைய இலக்கியம். இந்த மாஃபியாதான் ஏறக்குறைய இத்தாலிய ஃபாஷன் தொழிலைக் கட்டுப்படுத்துகிறது. அர்மானி, வெர்சாசி எல்லாருக்கும் நேபிள்ஸ் ஏரியாவில்தான் துணிகள் தைக்கப்படுகின்றனவாம். போலி அர்மானி துணிகளும் இங்கேதான். அப்படி தைப்பவர்களிலும் பாலோ என்ற ஒரு தையல்காரன் புகழ் பெற்றிருக்கிறான். ஒரு நாள் அவன் டிவி பார்த்துக் கொண்டிருக்கும்போது ஏஞ்சலினா ஜோலி ஒரு வெள்ளை சூட்டில் ஏதோ ஒரு நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொள்வது காட்டப்படுகிறது. சூட்டைத் தைத்தவன் பாலோ. அவனுக்கு அளவுகள் கொடுக்கப்பட்டு ஒரே மாதிரி மூன்று சூட்டைத் தைத்திருக்கிறான். ஏஞ்சலினா ஜோலிக்குத்த்தான் தைக்கிறான் என்று அவனுக்குத் தெரியாது. பாலோவின் புகழ் எல்லாம் உள்ளூரில்தான். தான் தைத்த சூட்டை அணிந்துகொண்டு ஏஞ்சலினா ஜோலி வலம் வருவதைக் காணும்போது அவனுக்கு மூச்சே நின்றுவிடுகிறது. அதற்குப் பிறகு அவன் தையல் தொழிலையே கைவிட்டுவிடுகிறான்!

அந்தக் கட்டுரை இணையத்தில் கிடைக்குமா என்று நானும் நாலு நாளாக தேடிப் பார்க்கிறேன், கிடைக்கமாட்டேன் என்கிறது…

கொமொராவின் பேசுபொருள் இத்தாலிய மாஃபியா. குறிப்பாக நேபிள்ஸ் பகுதியில் ஆக்கிரமித்திருக்கும் மாஃபியா. புத்தகத்தில் படித்த சில காட்சிகள் எப்போதும் நினைவிருக்கும். ஹெராயின் போதை மருந்தை மற்ற filler-களோடு கலந்து அதை அதி தீவிர போதை மருந்து பயனாளர்களை வைத்து பரிசோதிப்பார்களாம். எப்படி? கடும் வறுமையில் இருக்கும் பயனாளர்கள் நிறைந்திருக்கும் பகுதிக்குப் போய் அங்கே யாராவது வருவார்களா என்று பார்ப்பார்களாம். எப்படியாவது ஹெராயின் கிடைத்தால் போதும் என்று நிச்சயமாக யாராவது வருவார்கள். அப்படி வந்த ஒருவனுக்கு ஊசியைப் போட்டு, அவன் நுரை தள்ளி சாகிறான். செத்துவிட்டான் என்று இவர்கள் கிளம்புகிறார்கள். செத்தவனின் தோழி அவன் முகத்தின் மேல் உட்கார்ந்து சிறுநீர் கழிக்கிறாள், அவன் பிழைத்துக் கொள்கிறான்! மாண்ட்ரகோரா என்ற ஊரில் மாஃபியா தலைவன் ஏறக்குறைய ஆட்சி செய்கிறான். அங்கே போதை மருந்துகள் விற்கப்படக் கூடாது என்று ஆணை! அந்த ஊரில் யாருக்கும் ஆணுறை அணிய வேண்டியதில்லை. அப்படி தப்பித் தவறி யாருக்காவது எய்ட்ஸ் என்று சந்தேகம் இருந்தால் அவள்/அவன் கொல்லப்படுவான்! அதனால் இந்த மாதிரி நோய் எல்லாம் பரவ வாய்ப்பே இல்லை!

மாஃபியாவுக்கும் பிற பன்னாட்டுத் தொழில்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. பணத்தைப் புரட்டுதல், கையிலிருக்கும் பணத்தை முதலீடு செய்தல், சட்டத்துக்கு உட்பட்டு முதலீடு செய்தல், அடுத்த லெவலில் இருப்பவர்கள் தனியாக தொழில் செய்யாமல் பார்த்துக் கொள்ளுதல், பிற நாட்டு மாஃபியாக்கள் தங்கள் ஏரியாவில் வளரவிடாமல் பார்த்துக் கொள்ளுதல் என்று ஏறக்குறைய அதே கவலைகள். என்ன, வன்முறை, குற்றங்கள் மூலம் கிடைக்கும் வருமானம். இத்தாலியில் ஈட்டும் பணத்தை வைத்து ஸ்காட்லாண்டில் நியாயமான தொழில் செய்து முக்கியத் தொழிலதிபராக எல்லாம் ஆகி இருக்கிறார்கள். எதிர்த்துப் போராட முன் வந்தது ஒரே ஒரு பாதிரி. சுட்டுக் கொல்லப்படுகிறார்.

ஆனாலும் இந்தப் புத்தகத்தை நான் பரிந்துரைக்க மாட்டேன். உள்ளூர் கிரிமினல்களைப் பற்றி நிறைய விவரிக்கிறார். ஹாஜி மஸ்தான், வரதராஜ முதலியார், தாவூத் இப்ரஹிம் என்றால் கூட கொஞ்சம் ஆர்வம் இருக்கும். இத்தாலிய மாஃபியா அடித்துக் கொள்வதைப் பற்றி எல்லாம் வந்தால் வேகவேகமாக பக்கத்தைப் புரட்டிவிட்டேன். அதுதான் நிறைய இருக்கிறது…

தொகுக்கப்பட்ட பக்கம்: அபுனைவுகள்

தங்கர் பச்சான்

Thangar Bachan
ஒளிப்பதிவாளர், இயக்குனர் ஆகிய முகங்களைத் தவிர தங்கர் பச்சானுக்கு இன்னொரு முகமும் உண்டு. எழுத்தாளர். அவரது ‘ஒன்பது ரூபாய் நோட்டு‘ நாவலையும் ‘குடிமுந்திரி‘, ‘வெள்ளை மாடு‘ சிறுகதைத் தொகுப்புகளையும் இது வரை படித்திருக்கிறேன். குடிமுந்திரி சிறுகதை என்றாவது நான் தமிழின் சிறந்த சிறுகதைகள் என்று தொகுத்தால் அதில் இடம் பெறும். ஒரே ஒரு படைப்பைப் படிக்க வேண்டுமென்றால் நான் இதைத்தான் பரிந்துரைப்பேன்.

அப்படி என்ன கதை? விவசாயக் குடும்பம். படிக்கும் பையனுக்கு ஷூ வாங்க வேண்டும். அவ்வளவுதான் கதை. இந்தச் சின்ன சட்டகத்தை வைத்து விவசாயத்தின் வீழ்ச்சி, அரசு வேலைக்குப் போகும் இடைநிலை ஜாதிகள், நகரமயமாகிக் கொண்டிருக்கும் தமிழ்நாடு என்ற சமுதாய மாற்றங்களை கோடி காட்டிவிடுகிறார். அவர் சொல்லாத இடங்களால்தான் கதை சிறக்கிறது.

‘வெள்ளை மாடு’ தொகுப்பிலும் தலைப்புக் கதையைக் குறிப்பிடலாம். பிரேம்சந்த் எழுதிய அற்புதமான “தோ பைலோன் கி கஹானி” கதையை கொஞ்சம் நினைவுபடுத்துகிறது. இதுவும் சிம்பிளான கருதான். வீட்டில் ஆசை ஆசையாக வளர்த்த வெள்ளை மாட்டை விற்க வேண்டி இருக்கிறது. பிறகு ஒரு நாள் அதை பார்க்கிறார்கள். அவ்வளவுதான்.

ஒன்பது ரூபாய் நோட்டு நல்ல நாவல். ஆனால் படித்தே ஆக வேண்டிய நாவல் இல்லை. ஒரு கணத்தில் தன் மகன்களிடம் சண்டை போட்டுக்கொண்டு ஊரை விட்டும் போகும் மாதவர் தான் சேர்த்த சொத்து அத்தனையும் தன் பிள்ளைகள் கட்டி காக்காததை பார்த்துவிட்டு சாகிறார். மிக சரளமான நடை. கடலூர் பக்கத்தில் இருக்கும் ஒரு கிராமம் நம் கண் முன் கொண்டு வருகிறார்.

தங்கருக்கு தமிழ் இலக்கியப் படைப்பாளிகள் வரிசையில் ஒரு இடம் உண்டு.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

நானும் புத்தகங்களும் – 14 வயது வரை

எனக்கு படிக்கும் ஆர்வத்தை ஊட்டியது என் அம்மா. விழுந்து விழுந்து படிக்கும் டைப். உயர்நிலைப் பள்ளி ஆசிரியை. நாங்கள் 3 குழந்தைகள். முப்பதுகளில் பிறந்த என் அப்பா வீட்டு வேலைகளில் பங்கெடுத்துக்கொள்ள மாட்டார். (என் மனைவி: நீங்க என்ன உத்தமரா?) இதில் எங்கிருந்துதான் படிக்க நேரம் கிடைக்குமோ தெரியாது, ஆனால் வீட்டில் புத்தகங்கள் இரையும்.

என் அப்பாவும் படிப்பார்தான், ஆனால் என் அம்மா அளவுக்கு இல்லை. அவர் தலைமை ஆசிரியர், ஆட்சி செய்ய ஒரு பள்ளி இருந்தது. சாதாரணமாக நாங்கள் வசித்த கிராமங்களில் அவர்தான் மெத்தப் படித்தவர். அதனால் ஏதாவது ஊர் விவகாரங்கள், பெரிய மனிதர்கள் கூட்டம் என்று பொழுது போய்விடும். நெல்லுக்கு இறைத்த நீர் ஆங்கே புல்லுக்கும் பொசிவதைப் போல அப்பாவின் நண்பர்கள் கூட்டம் அம்மாவிடமும் கலந்து பேசும். ஆனால் புத்தகங்கள்தான் அம்மாவுக்கு escape valve.

எனக்கு ஏழு வயதிருக்கும்போது அம்மா என்னை கிராம நூலகத்துக்கு (லாடாகரணை எண்டத்தூர்) அழைத்துப்போய் உறுப்பினன் ஆக்கினாள். நான் படித்துக் கொண்டிருந்த ஆரம்பப் பள்ளிக்கு அடுத்த கட்டடம்தான் நூலகம். 11:25க்கு இண்டர்வல் விடுவார்கள். 11:30க்கு நூலகத்தை மூடுவார்கள். அந்த ஐந்து நிமிஷத்தைக் கூட விரயமாக்காமல் நான் நூலகத்துக்கு ஓடிவிடுவேன். எட்டு வயதுக்குள் அங்கிருந்த சிறுவர் புத்தகங்களை எல்லாம் முடித்துவிட்டேன். பிறகு புரிகிறதோ இல்லையோ பெரியவர்கள் புத்தகங்களையும் படிக்க ஆரம்பித்தேன். அப்போதெல்லாம் பொட்டலம் கட்டி வரும் காகிதங்களைக் கூட விடாமல் படிக்கும் அளவுக்கு ஒரு வெறி. தேள்கடிக்கு நூறு மருந்து மாதிரி புத்தகங்களைக் கூடப் படித்திருக்கிறேன்.

முதன்முதல் படித்த புத்தகத்தின் பேர் மறந்துவிட்டது. நிறைய படங்கள் இருந்தன. இருபது முப்பது பக்கம் இருந்தால் அதிகம். படங்கள் நினைவிருக்கின்றன, ஆனால் கதை எல்லாம் மறந்துவிட்டது. ஒரு பன்றிக் குடும்பத்துத் தாய் ஓநாயை சமாளிப்பாள் என்று ஏதோ வரும்.

நினைவில் இன்னும் இருக்கும் சிறுவர் புத்தகம் வாண்டு மாமா எழுதிய காட்டுச் சிறுவன் கந்தன்தான். காட்டில் ஒரு குகையில் வளரும் கந்தன் ராஜா பீடத்தில் உட்கார்ந்திருக்கும் தன் சித்தப்பாவுக்கோ யாருக்கோ பல முறை தண்ணி காட்டுவான். அவனுக்கு பல மிருகங்களும் உதவி செய்யும். அவன் குகையில் ஒரு பெரிய புதையலே இருக்கும்.

எனக்கு பிடித்த முதல் ஆசிரியரும் வாண்டு மாமாதான். கோகுலம் என்று ஒரு பத்திரிகை அப்போதுதான் வர ஆரம்பித்தது. அதை விடாமல் வாங்கி படிப்பேன். அதில் அவர் பல கதைகளை எழுதி இருந்தார். பலே பாலு என்ற காமிக் தொடர் பிடிக்கும். மந்திரக் கம்பளம் என்று ஒரு கதை நினைவிருக்கிறது. அப்புறம் கல்வி கோபாலகிருஷ்ணன் என்பவர் சில அறிவியல் விளக்கக் கதைகளை எழுதியது நினைவிருக்கிறது. ஒரு சின்னப் பையன் – ஒரு விஞ்ஞானியின் மகன் – ஏதோ மாத்திரையை சாப்பிட்டு எறும்பு சைசுக்கு சுருங்கிவிடுவான். அப்புறம் பூவண்ணன் எழுதிய காவேரியின் அன்பு, ஆலம்விழுது கதைகள் நினைவிருக்கிறது.

பெரியவர் புத்தகங்களில் நினைவிருப்பது “பாமினிப் பாவை”, “அறிவுக் கனலே அருட் புனலே”, “கயல்விழி“, பல சாண்டில்யன் புத்தகங்கள். முதலாவது விஜயநகரம் பற்றி கௌசிகன் (வாண்டு மாமாவேதான்) எழுதிய சரித்திர நாவல். இரண்டாவது விவேகானந்தர், ராமகிருஷ்ணர் பற்றி ரா. கணபதி எழுதியது. கயல்விழி அகிலன் எழுதிய மோசமான புத்தகங்களில் ஒன்று. (எல்லாமே மோசமான புத்தகங்கள்தான் என்பது என் துணிபு) சாண்டில்யன் புத்தகங்களை எப்படி அம்மாவும் அப்பாவும் படிக்கவிட்டார்கள் என்று தெரியவில்லை. அந்த வயதில் ஒன்றும் புரியப் போவதில்லை என்ற தைரியமாக இருந்திருக்கலாம். புரியத்தான் இல்லை. ஆனால் யவனராணி, கடல்புறா, மலைவாசல், மன்னன் மகள், கன்னி மாடம், ஜீவபூமி, ஹரிதாஸ் ஜாலா கதாநாயகனாக வரும் ஒரு கதை (பேர் நினைவு வந்துவிட்டது, நாகதீபம்), மஞ்சள் ஆறு போன்றவற்றை படித்தேன். எனக்கு சரித்திரம் அறிமுகமானது சாண்டில்யன் மூலமாகத்தான். குப்தர்கள், ஹூணர்கள் பற்றி மலைவாசல் மூலமும், ராஜஸ்தானம் பற்றி பல புத்தகங்கள் மூலமும், சோழர்கள் பற்றி கடல்புறா மூலமும் தெரிந்து கொண்டவை சில சமயம் சரித்திரப் பரீட்சைகளில் உதவி செய்தன.

பனிரண்டு வயதுக்குள் படித்த தரமான புத்தகங்கள் என்றால் இரண்டுதான். ஒன்று சாயாவனம். அப்போதும் புரிந்தது. ஒரு காரியத்தை திறமையாக செய்கிறார்கள் என்று தெரிந்தது. கடைசி பக்கத்தில் சொல்லப்பட்ட இழ்ப்பும் புரிந்தது. இன்னொன்று சில நேரங்களில் சில மனிதர்கள். ஆனால் வேறு ஜெயகாந்தன் புத்தகங்கள் எதுவும் பிடிபடவில்லை. அசோகமித்திரன் (கதையே இல்லையே என்று தோன்றியது), லா.ச.ரா. (கொஞ்சமும் புரியவில்லை) ஆகியோரை முயற்சி செய்து விட்டுவிட்டேன்.

வாரப் பத்திரிகைகளில் ரா.கி. ரங்கராஜன், மணியன் போன்றவர்கள் எழுதுவதை படித்திருக்கிறேன். ரா.கி. ரங்கராஜனின் ஒளிவதற்கு இடமில்லை மிகவும் பிடித்திருந்த ஞாபகம் இருக்கிறது. தொடர்கதையாக வந்த கையில்லாத பொம்மை, உள்ளேன் அம்மா எல்லாம் நினைவிருக்கிறது. மணியன் போரடிப்பார், ஆனால் என் குடும்பப் பெரியவர்கள் நன்றாக எழுதுகிறார் என்று சொல்வார்கள், அதனால் குறை என்னிடம்தான் என்று நினைத்துக் கொண்டு கொஞ்சம் படித்துப் பார்த்தேன். மேலும் முன்பு சொன்ன மாதிரி மளிகை சாமான் கட்டி வரும் காகிதத்தைக் கூட படிக்கும் வெறி இருந்த காலம். ஆனால் ஒரு கதை கூட பிடிக்கவில்லை. பயணக் கட்டுரைகளை (இதயம் பேசுகிறது) படிக்கும்போது இந்தாள் பெரிய சாப்பாட்டு ராமனாக இருப்பாரோ என்று நினைத்தேன்.

தமிழ்வாணனின் சங்கர்லால் புத்தகங்கள் என்னை அந்த வயதில் மிகவும் கவர்ந்தன. மீண்டும் ஒரு முறை படிக்க வேண்டும்.

அப்போதும் இப்போதும் இரும்புக்கை மாயாவி, லாரன்ஸ்-டேவிட், ஜானி நீரோ காமிக்ஸ் மீது தனி ஆர்வம் உண்டு.

அறிவியல் புத்தகங்கள் என்றால் பெ.நா. அப்புசாமி ஒருவர்தான். மேலை விஞ்ஞானிகள் பற்றி அவர் எழுதிய ஒரு புத்தகம் நன்றாக நினைவிருக்கிறது. நாசா பற்றி ஏ.என். சிவராமன் எழுதிய ஒரு புத்தகம் (விலை பத்து ரூபாய் – நாங்கள் அபூர்வமாகப் பணம் கொடுத்து வாங்கிய புத்தகம்) ஒன்றை விழுந்து விழுந்து படித்திருக்கிறேன். அமெரிக்க ஜனாதிபதிகள் பற்றி ஒரு புத்தகத்தையும் விரும்பிப் படித்திருக்கிறேன்.

நான் மயங்கி விழுந்த முதல் புத்தகம் பொன்னியின் செல்வன்தான். இன்னும் மயக்கம் தீரவில்லை. யாரோ பைண்ட் செய்து வைத்த புத்தகத்தை பல முறை திருப்பி திருப்பி படித்திருக்கிறேன். பல நண்பர்களுடன் மணிக்கணக்கில் ஆதித்த கரிகாலனை கொன்றது யார் என்று தீராத விவாதங்கள். இதை படமாக எடுத்தால் யார் யார் நடிக்கலாம் என்றும் மேலும் விவாதங்கள். (எழுபதுகளின் இறுதியில் எங்கள் சாய்ஸ்: சிவகுமார் வந்தியத்தேவனாக. சிவாஜி பெரிய பழுவேட்டரையராக. ரஜினிகாந்த் ஆதித்த கரிகாலனாக. முத்துராமன் கந்தமாறனாக. மேஜர் சுந்தர சோழனாக. விஜயகுமார் பார்த்திபேந்திரனாக. ஸ்ரீதேவி குந்தவையாக. சுஜாதா அல்லது கே.ஆர். விஜயா மந்தாகினியாக. மனோகர் சின்ன பழுவேட்டரையராக. நம்பியார் ரவிதாசனாக. சரத்பாபு சேந்தன் அமுதனாக. தேங்காய் ஆழ்வார்க்கடியானாக. லட்சுமி வானதியாக. அருள்மொழி, நந்தினி ரோல்களுக்கு யாருமே எங்களுக்கு கிடைக்கவில்லை. அதனால் படம் எடுக்க முடியாமல் போய்விட்டது.)

அப்போதுதான் சுஜாதா எங்களுக்கு சூப்பர்ஸ்டார் ஆனார். ஒரு கால கட்டத்தில் அவரை பித்து பிடித்தது போல் படித்தோம். அவருக்கு அடுத்த நிலையில் இருந்தது புஷ்பா தங்கதுரை (ரொம்ப கிளுகிளுப்பா இருந்ததுங்க). குறிப்பாக சிங் துப்பறியும் கதைகள் (லீனா மீனா ரீனா). அப்புறம் ராஜேந்திரகுமார். ரா. குமாரின் எல்லா கதைகளிலும் பைக் ஓட்டுபவனின் முதுகில் ஏதாவது அழுந்தும். அதற்காகவே படிப்போம். மாலைமதி மாத நாவல்கள் வர ஆரம்பித்திருந்தன. இவர்கள், மஹரிஷி (மறுபடியும் காஞ்சனா) எல்லாவற்றையும் படித்தோம். மாருதி, மணியன் செல்வன், மதன், கோபுலு எல்லாரையும் விட ஜெயராஜின் படங்கள் மீதுதான் தனி ஈர்ப்பு இருந்தது. காரணத்தை சொல்லவும் வேண்டுமா? தினமணி கதிரில் சுஜாதாவின் காயத்ரி தொடர்கதைக்காக புடவை இல்லாமல் ரவிக்கையோடு அக்காக்காரி உட்கார்ந்திருக்கும் படத்தைப் பார்த்து மனம் கிளர்ந்தது நன்றாக நினைவிருக்கிறது.

பக்கத்து எதிர் வீட்டுப் பெண்களோடு கடலை போடுவதற்காக விதியே என்று சிவசங்கரி தொடர்கதைகளையும் படித்தேன். ரொம்பக் கடுப்படித்தவர் அவர்தான்.

ஒரு காலத்தில் பிடிக்கிறதோ இல்லையோ எல்லா வாரப் பத்திரிகைகளையும் படிப்பேன். பிடித்து படித்த ஒரே பத்திரிகை துக்ளக்.

14 வயதில் ஆங்கிலத்துக்கு பால் மாறிவிட்டேன். அது பற்றி எப்போதாவது எழுத வேண்டும்.

சீரியஸாக தமிழ் புத்தகங்களை படிக்க ஆரம்பித்தது வேலைக்கு போன பிறகுதான். அது பற்றியும் பிறகு.

தொகுக்கப்பட்ட பக்கம்: சுய அறிமுகம்

Million Dollar Baby திரைப்படத்தின் மூலக்கதை

million_dollar_babyமில்லியன் டாலர் பேபி (2004) நான் பார்த்த சிறந்த திரைப்படங்களில் ஒன்று. க்ளிண்ட் ஈஸ்ட்வுட் இயக்கிய திரைப்படங்கள் பொதுவாக சோடை போவதில்லைதான், ஆனால் அவற்றுக்குள்ளும் இது அபாரமான திரைப்படம். மார்கன் ஃப்ரீமன், ஹில்லரி ஸ்வாங்க் ஆகியோரோடு சேர்ந்து ஈஸ்ட்வுட்டும் பிரமாதமாக நடித்திருந்தார். சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கார் விருதுகளை வென்றது.

F.X. Toole என்பவர் அதே தலைப்பில் எழுதிய சிறுகதைதான் இந்தத் திரைப்படத்தின் மூலக்கதை. Rope Burns என்ற சிறுகதைத் தொகுப்பில் உள்ள ஒரு சிறுகதை. (திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு அதே தொகுப்பை மில்லியன் டாலர் பேபி என்ற பேரில் மீண்டும் வெளியிட்டிருக்கிறார்கள்.) திரைப்படம் அளவுக்கு வருமா என்ற சந்தேகத்தில் படிப்பதை ரொம்ப நாளாகத் தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் ஆரம்பித்த பிறகு கீழே வைக்க முடியவில்லை.

f_x_tooleடூல் என்பது குத்துச்சண்டை பயிற்சியாளர் ஜெர்ரி பாய்டின் புனைபெயராம். பாய்ட் கொஞ்சம் வயதான காலத்தில் குத்துச்சண்டை போட்டிருக்கிறார். அதற்குப் பிறகு பயிற்சியாளர். குத்துச்சண்டை உலகை – எனக்குத் தெரியாத உலகம், அவ்வளவு ஆர்வம் இல்லாத உலகம் – கண் முன்னால் கொண்டு வருகிறார். அதன் நாயகர்களோடு – வீரர்களோடு – நிறுத்திவிடாமல் பயிற்சியாளர்கள், துணையாக நிற்பவர்கள், அதை வியாபாரமாகச் செய்பவர்கள், ஆர்வம் இருந்தும் திறமை கொஞ்சம் கூட இல்லாதவர்கள், சின்னச் சின்ன வேலைகளைச் செய்பவர்கள் என்று பிரமாதமாகச் சித்தரிக்கிறார். எந்த உலகமாக இருந்தால் என்ன, மனிதர்கள் எப்போதுமே சுவாரசியமானவர்கள்தான். அவரது கதைகள் மனிதர்களைப் பற்றியது – அவர்கள் குத்துச்சண்டை போடுகிறார்கள், பயில்கிறார்கள், பயிற்றுவிக்கிறார்கள், மருந்து போட்டுவிடுகிறார்கள், மசாஜ் செய்து விடுகிறார்கள், ஏமாற்றுகிறார்கள், ஏமாறுகிறார்கள், பகல் கனவு காண்கிறார்கள்…

அவரது கதைகளில் மீண்டும் மீண்டும் வரும் ஒரு படிமம் – ஐரிஷ் வம்சாவளி, சர்ச்சுக்குப் போகாத, ஆனால் தன் மத நம்பிக்கையை முற்றிலும் இழந்துவிடாத, பண்பாட்டுப் பின்புலம் உள்ள ஓரளவு வயதான துணையாக நிற்பவன். அதுவும் அனேகமாக cut-man – சண்டையின்போது தோல் பிளந்து ரத்தம் கொட்டுவதை நிறுத்துவதில் ஸ்பெஷலிஸ்ட்கள். அவர்கள் கண்ணோட்டத்தில்தான் கதை அனேகமாகச் சொல்லப்படுகிறது. அப்படி இல்லாவிட்டால் அவர் பயிற்சியாளாராக இருப்பார்.

சிறுகதைத் தொகுப்பில் ஆறு சிறுகதைகள் இருக்கின்றன. மில்லியன் டாலர் பேபிதான் எனக்கு மிகவும் பிடித்த சிறுகதை. குத்துச்சண்டை பயில விரும்பும் அந்தப் பெண், அவள் குடும்பம், பயிற்சியாளன் எல்லார் சித்திரமும் மிகவும் உண்மையானது. மனதைத் தொடுவது. நீ என் ரத்தம் என்று சொல்லும் பயிற்சியாளனோடு சேர்ந்து நானும் அப்படித்தான் உணர்ந்தேன். (நான் ரத்தத்தைக் கண்டால் பயந்து ஓடுபவன்). பெரிதாக விவரிக்க விரும்பவில்லை, ஒரே ஒரு சிறுகதை படிக்க வேண்டுமென்றால் இதை மட்டும் படியுங்கள்.

Fightin’ in Philly-யும் வெற்றி பெறும் சிறுகதைதான். கஷ்டப்பட்டு பயிற்சி எடுத்து சண்டை. தோற்றுக் கொண்டிருக்கும் எதிரி இவனை இடுப்புக்குக் கீழே அடிக்கிறான். பணம் வாங்கி இருக்கும் நடுவர் கண்டு கொள்வதில்லை. இவன் திருப்பி இடுப்புக்குக் கீழே அடித்தால் இவனுக்கு வார்னிங் கிடைக்கிறது, பாயிண்ட் போகிறது. உண்மையில் வென்றது நாயகன்தான் என்றாலும் எதிரிக்கு வெற்றி என்று அறிவிக்கப்படுகிறது. அடுத்து என்ன?

Rope Burns இந்த அளவுக்கு இல்லை என்றாலும் குறிப்பிடப்பட வேண்டிய சிறுகதை. கொஞ்சம் நீளமான சிறுகதை. லாஸ் ஏஞ்சலசில் ராட்னி கிங் என்ற கறுப்பரை போலீஸ் அடித்துத் துவைத்தது, ஆனால் யாருக்கும் தண்டனை இல்லை என்று தீர்ப்பு. தீர்ப்பு வந்தபோது லாஸ் ஏஞ்சலசில் பெரிய கலவரம் நடந்தது. அந்தப் பின்புலத்தை வைத்து எழுதப்பட்ட சிறுகதை.

Monkey Look, Black Jew, Frozen Water ஆகிய மூன்றும் கொஞ்சம் சுமார்தான். ஆனால் எல்லா சிறுகதைகளும் சேர்ந்து காட்டும் உலகம் உண்மையானது.

மில்லியன் டாலர் பேபி சிறுகதை பிரமாதம் என்றாலும் திரைப்படம் அதை விடவும் பிரமாதம். நல்ல நடிகர்கள், இயக்கம் எல்லாம் சேரும்போது ஒரு நல்ல கதை இன்னும் உயர்வு பெறும் என்பதற்கு எடுத்துக்காட்டு இந்தத் திரைப்படம்.

படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: உலக இலக்கியம்

தொடர்புடைய சுட்டிகள்:
டூலின் தளம்
எனக்குப் பிடித்த குத்துச்சண்டை சிறுகதை – ஜாக் லண்டனின் ‘A Piece of Steak

தமிழறிஞர் வரிசை: 13. ரா.பி. சேதுப்பிள்ளை

சேதுப்பிள்ளையின் பங்களிப்பு அவரது தமிழ் நடைதான் என்று கருதுகிறேன். பிள்ளையின் தமிழ் கேட்கவும் படிக்கவும் சுகமாக இருக்கும். ஆனால் செயற்கையாகவும் இருக்கிறது. இன்று காலாவதி ஆகிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அதே நேரத்தில் திரு.வி.க., சாமிநாத சர்மா ஆகியோர் இதே போல அழகான, சுகமான தமிழில்தான் எழுதி இருக்கிறார்கள், என் கண்ணோட்டத்தில் அவற்றில் செயற்கைத்தனம் குறைவாக இருக்கிறது என்பதையும் சொல்லிவிடுகிறேன்.

சேதுப்பிள்ளையின் தமிழ் அன்றைய திராவிட இயக்கத்தினரின் – குறிப்பாக அண்ணாதுரை, கருணாநிதியின் அலங்காரத் தமிழை ஒத்திருந்தது. அண்ணாவின் தாக்கம் சேதுப்பிள்ளையிடம் இருந்ததா இல்லை பிள்ளையின் தாக்கத்தால் அண்ணா அப்படி எழுதினாரா என்று தெரியவில்லை. என்ன, அண்ணாதுரையின் தமிழில் இந்த செயற்கைத்தனம் இன்னும் அதிகம். கருணாநிதியோ, அடே அப்பா, செயற்கைத்தனம்தான் வியாபித்திருக்கிறது.

சேதுப்பிள்ளையின் ஏதோ ஒரு கட்டுரை எங்களுக்கு பள்ளியில் தமிழ்ப் பாடமாக இருந்தது. கடற்கரையில் நின்று பாரதியார் சேதுப்பிள்ளை பாணியில் தமிழ் பேசுவார். எங்கள் வாத்தியார் ‘என்னா இவரு பாரதியார் தனியா கடற்கரையில் நின்னுக்கிட்டு தனக்குத் தானே பேசிக்கிட்டார்னு எழுதறார்? பாக்கறவன்லாம் பாரதியார் பைத்தியம்னு நினைச்சுக்க மாட்டான்?” என்று ஜோக்கடித்தார்.

பிள்ளையின் சிலப்பதிகாரக் கதை, சிலப்பதிகார விளக்கம் போன்றவை முன்னோடி எழுத்துக்கள் என்று கருதுகிறேன். இன்றும் சிலப்பதிகாரத்துக்கு நல்ல அறிமுகமாக இருக்கும்.

ஓவர் டு அஜயன் பாலா!

ஓப்பன் ரீடிங் ரூம் ரமேஷ் சக்ரபாணி மூலம் கிடைத்த சிறு அறிமுகம் – அஜயன் பாலா எழுதியது.

raa_pi_sethuppillaiரா.பி. சேதுப்பிள்ளை: பிறப்பு: 02-03-1896, மறைவு: 25-04-1961

சொல்லின் செல்வர் என அழைக்கப்பட்டவர். தமிழ் பொழியும் பெரும் கொண்டல் என திரு.வி.க.வின் பாராட்டை பெற்றவர். உரைநடைத் தமிழுக்கு வளம் சேர்த்த தமிழர். தமிழர் தொன்மம், தமிழ்ப் பண்பாடு ஆகிய துறைகளில் தமிழிலும் ஆங்கிலத்திலுமாக இருபதுக்கும் மேற்பட்ட நூல்ளை எழுதியவர் .

ராஜவல்லிபுரம் பிறவிபெருமாள் சேதுபிள்ளை நெல்லையை அடுத்த ராஜவல்லிபுரத்தில் பிறந்தவர். தந்தை பிறவிப்பெருமாள் பிள்ளை, தாயார் சொர்ணத்தம்மை. இருவருக்கும் பத்தாவது மகனாக பிறந்தவர். ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதரின் அருளால் பிறந்ததாக அவர்கள் நினைத்த காரணத்தால் சேது என பெயரிட்டனர். ஐந்தாம் வயதில் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்ப்ட்டார். பின் பாளையங்கோட்டை பள்ளியில் சேர்க்கப்ப்ட்டார். ஏழாம் வகுப்பு படிக்கும் காலத்தில் ஒரு போட்டியில் இவருக்கு முதல் பரிசாக கிடைத்த நூல் திருக்குறள். அதிலிருந்து திருக்குறளின் தமிழின்பத்தில் தன்னை தொலைக்க ஆரம்பித்தார். பின் சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும் தொடர்ந்து சட்டக்கல்லூரியிலும் படித்து வழக்கறிஞராக தகுதி அடைந்தார்.

தொழில்தான் சட்டமே தவிர இவர் எண்ணமெல்லாம் தமிழாக மட்டுமே மணந்துகொண்டிருந்தது. கம்பனைப் படித்தார். ராமாயணச் சொற்பொழிவுகள் நடத்தினார். பிள்ளையவர்களின் சொற்பொழிவு தமிழ் எனும் பெருமழையில் நனைவது போல.

அதனால் அண்ணாமலை பல்கலைகழகம் இவரை தமிழ்ப் பணிக்கு அழைத்தது. தொடர்ந்து சென்னை பல்கலைகழகத்திலும் விரிவுரையாளராக பணியாற்றினார். இலக்கியம் ஆய்வு வரலாறு என பல துறைகளில் நூல்களை எழுதினார். திராவிடப் பொது நூல்கள், ஊரும் பேரும், தமிழின்பம் போன்றவை குறிப்பிடத் தக்கன. இவற்றுள் தமிழின்பம் நூலுக்கு சாஹித்ய அகாடமி விருதும் ஐயாயிரம் ரூபாய் பரிசும் கிடைத்தது. இவரது கடற்கரையினிலே எனும் நூல் திருவள்ளுவர் முதல் பாரதி வரை பலரும் கடலைப் பார்த்துப் பேசுவது போல முழுவதும் கற்பனையிலே எழுதப்பட்டது.

இவரது பணிகளைப் பாராட்டி தருமபுர ஆதீனம் இவருக்கு சொல்லின் செல்வர் எனும் பட்டம் வழங்கி கவுரவித்தது. சென்னை பல்கலைகழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழறிஞர்கள்