வினோதத் திருடன் நிக் வெல்வெட்

nick_velvetஎட்வர்ட் டி. ஹோக் மர்மக் கதை எழுத்தாளர். அந்த வட்டாரத்தில் ஓரளவு பிரபலமானவர்.

அவரது சீரிஸ் நாயகன் நிக் வெல்வெட். வெல்வெட் திருடன். ஆனால் அவன் பணம், நகை, விலை உயர்ந்த பொருட்கள் எதையும் திருடமாட்டான். பயனற்ற பொருட்களை, பண மதிப்பில்லாத பொருட்களை மட்டும்தான் திருடுவான். வினோதத் திருட்டுகள். அவை யாருக்காவது அந்த நேரத்தில் தேவைப்படுகிறது, அதற்காக நிறையப் பணம் கொடுத்து இவனைத் திருடித் தர வேலைக்கு அமர்த்துகிறார்கள். உதாரணமாக ஒரு நீச்சல் குளத்திலிருந்து தண்ணீரைத் திருடித் தரும்படி ஒரு வேலையை ஏற்றுக் கொண்டு முடித்துத் தருகிறான். இன்னொரு கதையில் சினிமா ஷூட்டிங்கில் பயன்படுத்தப்படும் ஒரு prop – எலி பொம்மையைத் திருட வேண்டி இருக்கிறது. ஒரு பைசா நாணயம் (அபூர்வ நாணயம் அல்ல), சர்க்கஸ் போஸ்டர் ஒன்று, மிருகக் காட்சி சாலியிலிருந்து ஒரு புலி, ஒரு பூனை, ஒரு பேஸ்பால் டீம், வீட்டிலிருந்து வெளியே போடப்படும் குப்பை, பண மதிப்பே இல்லாத ஒரு கிரீடம் என்று பலவற்றைத் திருடித் தருகிறான். ஒரு கதையில் அவனே ‘திருடப்படுகிறான்’! எல்லாக் கதைகளிலும் இவற்றை ஏன் திருட வேண்டி இருக்கிறது என்று அவனே கண்டுபிடித்துத்தான் பிரச்சினைகளிலிருந்து மீள வேண்டி இருக்கிறது.

edward_d_hochநிக் வெல்வெட் கதைகள் எதையும் நான் நல்ல சாகசக் கதை என்றோ, நல்ல துப்பறியும் கதை என்றோ வகைப்படுத்தமாட்டேன். அவற்றைக் காப்பாற்றுவது அவன் திருடும் பொருட்கள்தான். இவற்றைத் திருடி என்ன பயன் என்று யோசிக்க வைக்கும் அந்த ஒரு நிமிஷம்தான் இந்தக் கதைகளின் கவர்ச்சி. அது உங்களையும் கவரும் என்றால் மட்டும் படியுங்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: சாகசக் கதைகள்

இந்தியாவில் தடை செய்யப்பட்ட புத்தகம் – “Smash and Grab: Annexation of Sikkim”

sunanda_dutta_rayசுனந்தா தத்தா-ரே எழுதிய இந்தப் புத்தகம் (1984) இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்கிறது. சிக்கிம் இந்தியாவோடு இணைக்கப்பட்டது இந்திய இம்பீரியலிசம் என்றும் இணைப்பை விமர்சித்தும் எழுதப்பட்டதால் இந்தத் தடை.

சிக்கிம் இன்று இந்தியாவில் ஒரு மாநிலம். ஆனால் நாற்பது வருஷங்களுக்கு முன்னால் அது ஒரு தனி நாடு. 300-400 வருஷங்களாக இருந்த நாடு. திபெத், சிக்கிம் இரண்டுமே பிரிட்டிஷார் காலம் வரை சீனாவின் மேலாண்மையை ஏற்றிருந்தனவாம். படைபலம் இல்லாத நாடு, அதனால் நேபாளம், பிரிட்டிஷ் இந்தியா எல்லாம் சிக்கிமின் பல பகுதிகளை பறித்துக் கொண்டன. டார்ஜிலிங் 1947-இல் கூட சிக்கிம் பிரிட்டிஷ் இந்தியாவுக்கு ‘வாடகைக்கு’ விட்டிருந்த பகுதியாம்!

தத்தா-ரே வங்காளி. ஸ்டேட்ஸ்மன் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தவர். பணக்கார, அந்தஸ்துள்ள குடும்பப் பின்னணி. சிக்கிமின் அன்றைய ராஜாவுக்கு தனிப்பட்ட முறையில் நண்பர் என்று தெரிகிறது.

சிக்கிம் தனிப்பட்ட நாடு, ஆனால் இந்தியா அதை நடத்திய விதம் ஆங்கிலேய அரசு ஒரு இந்திய சமஸ்தானத்தை நடத்திய விதம் மாதிரிதான் இருந்தது, இந்தியாவின் ‘பிரதிநிதிகள்’ – தூதர்கள் அல்ல, அதற்கும் மேலே – ராஜாவிற்கு உரிய மரியாதையைக் கொடுக்கவில்லை, ராஜாவின் அமெரிக்க மனைவி சந்தேகத்துடன் பார்க்கப்பட்டாள், சீன-இந்தியா தகராறில் சின்ன நாடான சிக்கிம் விழுங்கப்பட்டுவிட்டது, சிக்கிமோடு இருந்த உடன்படிக்கைகள் எல்லாம் மீறப்பட்டன என்கிறார் தத்தா-ரே.

சிக்கிமுக்கு எங்களால் எந்த ஆபத்துமில்லை என்று சீனா திரும்பத் திரும்ப சொல்லி இருக்கிறது. சிக்கிம் எல்லா விதத்திலும் இந்தியாவின் பக்கம்தான் நின்றிருக்கிறது. சிக்கிம் வழியாக இந்தியப் படைகள் சென்று சீனாவோடு போரிட்டிருக்கின்றன. சிக்கிம் தனி நாடாகத் தொடர்ந்திருந்தால் இந்தியாவுக்கு எந்தப் பாதிப்புமில்லை என்கிறார் தத்தா-ரே.

சர்வதேச சட்டம் என்று பார்த்தால் அவர் சொல்வது சரியாகத்தான் இருக்கிறது. ஆனால் சிக்கிம் இந்தியாவின் சமஸ்தானமாகத்தான் பிரிட்டிஷ் காலத்திலிருந்தே இருந்து வருகிறது என்பதுதான் practical reality. காகிதத்தில் அதன் நிலை புதுக்கோட்டை சமஸ்தானத்தை விட உயர்ந்த நிலையில் இருந்திருக்கலாம், ஆனால் உண்மையில் அவை இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. படேல் அந்தக் காகிதத்துக்கு மதிப்பு கொடுக்காமல் இந்த ‘சமஸ்தானத்தை’ அன்றே இந்தியாவோடு இணைத்திருந்தால் அதில் எந்தத் தவறும் இருந்திருக்காது.

மேலும் இந்தியாவின் பாதுகாப்பு குறித்த அச்சம்தான் சிக்கிம் இந்தியாவோடு இணைக்கப்பட்டதன் முக்கியக் காரணமாக இருந்தாலும் சிக்கிமின் மக்களும் அதைத்தான் விரும்பி இருக்கிறார்கள் – குறைந்தபட்சம் அதில் அவர்களுக்கு எந்தக் குறையுமில்லை.

தத்தா-ரேயின் biases தெளிவாகத் தெரிகின்றன. அவர் ஒரு டிபிகல் அன்றைய பணக்கார, படித்த, ஆனால் கம்யூனிச சார்புடைய வங்காளி. புத்தகத்தில் அவர் சீனாவைப் பற்றி ஒரு வார்த்தை குறை சொல்வதில்லை!

புத்தகம் அலுப்பு தட்டும் வகையில்தான் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் சிக்கிம் இணைப்பு போன்ற நிகழ்ச்சிகள் பற்றி எதுவும் ஆவணப்படுத்தப்படுவதில்லை, அதனால்தான் இந்தப் புத்தகம் முக்கியமானது.

தொகுக்கப்பட்ட பக்கம்: இந்திய அபுனைவுகள்

பிடித்த சிறுகதை – சுந்தர ராமசாமியின் ‘பிரசாதம்’

எத்தனை முறை படித்தாலும் புன்னகைக்காமல் இருக்க முடிவதில்லை. சுரா சிறுகதை வடிவத்தின் மாஸ்டர்களில் ஒருவர். படித்துக் கொள்ளுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: சுரா பக்கம், எழுத்துக்கள்

தமிழறிஞர் வரிசை: 14. பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார்

பண்டிதமணி சிறந்த தமிழறிஞர். சைவப் பாரம்பரியத்தில் வந்தவர். தூய தமிழில் பேசி எழுத வேண்டும் என்று விடாமல் முயன்றவர். ஆனால் சமஸ்கிருதத்திலும் தேர்ச்சி பெற்றவர். மிருச்சகடிகம், சுக்ரநீதி போன்ற நூல்களை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். மஹோமஹோபாத்யாயர் என்று உ.வே.சா.வைத்தான் பொதுவாகக் குறிப்பிடுவார்கள். இவருக்கும் அரசு அந்தப் பட்டத்தை அளித்திருந்தது. அபிராமணர்கள் சமஸ்கிருதத்தில் தேர்ச்சி பெறுவது அபூர்வம். அதிலும் தூய தமிழுக்காக முயலும் பலரிடம் அது பிற மொழி வெறுப்பாகவே மாறிவிடுவதைப் பார்க்கிறோம். இவர் இப்படித் தேர்ச்சி பெற்றதற்கும், பிராமணர்களுக்கே அனேகமாக வழங்கப்பட்ட மஹோமஹோபாத்யாயர் பட்டத்தைப் பெற்றதற்கும் ஒரு ஜே!

பண்டிதமணி பற்றி சோமலே எழுதிய ஒரு புத்தகமும் கிடைத்தது. இவர் போன்றவர்களின் தாக்கத்தை இன்று உணர்வது கொஞ்சம் கஷ்டம், ஆனாலும் இந்தப் புத்தகம் கொஞ்சம் உதவுகிறது.

ஓப்பன் ரீடிங் ரூம் ரமேஷ் சக்ரபாணி மூலம் கிடைத்த சிறு அறிமுகம் – அஜயன் பாலா எழுதியது.

pandithamani_mukadiresen_chettiarபண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார்: பிறப்பு 16-10-1881, இறப்பு 24-10-1953

ஏழு மாத கல்வி கூட பள்ளியில் பயிலாமல் பன்னிரண்டு வருடங்கள் பல்கலைகழகத்தில் பேராசிரியராக இருந்தவர். மேலைசிவபுரி சன்மார்க்க சபையின் தோற்றுவாய். எண்ணற்ற மாணவர்களை தமிழ் கடலுக்குள் தள்ளி அவர்கள் முத்தெடுக்க காரணமாக இருந்தவர். அன்னைத் தமிழின் திருப்பாதங்களுக்கு எண்ணற்ற நூல்களை எழுதி காணிக்கையாக்கியவர். எத்தகைய சூழலிலும் மனம் தளராமல் எதிர்ப்புகளை துடுப்புகளாக்கி தமிழுக்காக வாழ்ந்த மாணிக்கக் குன்று. பண்டிதமணி என அனைவராலும் போற்றபட்டவர். முத்துகருப்ப கதிரேசன் செட்டியார்.

பூங்குன்றம் சங்க இல்க்கியத்தில் புகழ்பெற்ற நானிலம். யாவரும் கேளீர் என உலகையே தன்னுணர்வில் கரைத்த கணியன் பூங்குன்றனார் அவதரித்த திருத்தலம். இப்போது மகிபாலன்பட்டி என அழைக்கப்படும் செட்டிநாடுக்குட்பட்ட பகுதி. இந்த மகிபாலன் பட்டி எனும் பண்டைய பூங்குன்றம் எனும் ஊரில் பிறந்த பெருமைக்குரியவர் கதிரேசனார். தந்தை முத்துகருப்பன். தாயார் சிகப்பி. தன் மூன்றாம் வயதில் இளம்பிள்ளை வாதத்தால் தாக்கப் பெற்ற காரணத்தால் பண்டிதமணி இளம் வயதில் பெரும் அவதியுற்றார். பள்ளிக் கல்வியில் ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன் ஆகியவை கற்றுத் தேர்ந்தாலும் நெடுநாள் நீடிக்கவில்லை. குடும்பச் சூழல் காரணமாக கல்வி கைதவறிப் போனது. பதினோரு வயதில் இலங்கை சென்றார். வாழ்க்கை அங்கும் வீதி நாயாக விரட்டியது. தந்தை இறந்ததும் மீண்டும் மகிபாலன்பட்டி திரும்பினார். தமிழ் ஆர்வம் துளிர்தத்து. சோழவந்தான் அரசஞ்சண்முகனாரிடம் தமிழை முறையாகப் படித்தார். உடலுக்குள் தமிழுணர்வு ஆறாக பெருக்கெடுத்தது. பதினான்கு வயதில் பண்டிதமணியின் தந்தை காலமானார். அதே ஆண்டில் அவரது இடது காலும், இடது கையும் வலுக்குறைந்தன. உடல் நலம் குறையக் குறைய அதற்கு மாற்றாக அறிவு பலத்தை பெருக்கும் ஆவல் அவரை உந்தி தள்ளியது. தருவை நாராயண சாஸ்திரியிடம் வடமொழி கற்றார்.

தொடர்ந்து அதன் மூலம் பெற்ற அறிவை தமிழ் கூறும் நல்லுலகம் பயனுறச் செய்வதில் முனைப்பு காட்டினார். இதனால் மிருச்சகடிகம் (மண்ணியல் சிறுதேர்), உதயண சரிதம், சுக்ரநீதி, சுலோசனை போன்ற நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் தமிழுக்குத் தொண்டு செய்தார்.

இது மட்டுமல்லாமல் தமிழில் உரைநடைக்கோவை எனும் தலைப்பில் பல கட்டுரைகள் அடங்கிய இரு தொகுதிகளையும், நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு, கதிர்மணி விளக்கம், பண்டிதமணி பாடல்கள், பண்டிதமணி கடிதங்கள் போன்ற நயமிக்க நேரடி தமிழ் நூல்களையும், மற்றும் திருவாசகம், திருவெம்பாவை போன்றவற்றிற்கு விளக்க உரைகளையும் எழுதியுள்ளார்.

தனக்கு இன்பமளித்த தமிழை பலருக்கும் உண்டாக்கும் வகையில் மதுரையின் நான்காம் தமிழ்சங்கம் போல மேலைச்சிவபுரியில் சன்மார்க்க சபை எனும் ஒன்றை உருவாக்கினார். தமிழ் பிரவேச, பண்டித, பாலபண்டித வகுப்புகளை உருவாக்கி எண்ணற்ற மாணவர்களுக்கு தமிழ் எனும் இன்ப அருவியை அறிமுகப்படுத்தினார்.

பண்டிதமணியாரின் தமிழ் அறிவை கேள்வியுற்ற அண்ணாமலை அரசர் முறையாக துவக்கக் கல்வி கூட பெற்றிராத அவரை அண்ணாமலை பல்கலைகழகத்தில் ஆசிரியராக வரும்படி அழைத்து பணியமர்த்தினார். பின் பண்டிதமணி தன் அறிவால் படிப்படியாக உயர்ந்து பல்கலைகழகத்தின் தமிழ்த்துறைக்கே தலைவராக உயர்ந்தார்.

“பண்டிதமணி”, “முதுபெரும் புலவர்”, “சைவ சித்தாந்த வித்தகர்”, “மகாமகோபாத்தியாய” ஆகிய மிக உயரிய பட்டங்களைத் தம் வாழ்நாள் பணிகளுக்காகப் பெற்றார். ஏழ்மை சூழல், முறையான கல்வியில்லை, கைகால் ஊனம் என பல குறைகள் அவரை வீழ்த்த காத்திருந்த போதும் அவர் மூச்சாக நம்பியிருந்த அவரது தமிழும் தளராத தன்னம்பிக்கையுமே அவர் அடைந்த உயரங்கௌக்கெல்லாம் மூலகாரணம்.

இளம்பிள்ளை வாதத்தால் இருந்தது, அந்த
ஒண்டமிழ்ப் புலவர்க்கு ஒருகால் ஊனம்; இல்லை-
ஒண்டமிழ்ப் புலமையில் ஒருகாலும் ஊனம்!
வடமொழியும் வண்ணத் தமிழும் வீற்றிருந்தன விரல் நுனியில்
நற்கருத்தும் நகைச்சுவையும் குமிழியிட்டிருந்தன குரல் நுனியில்!
-பண்டிதமணி பற்றி கவிஞர் வாலி

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழறிஞர்கள்

ஜான் க்ரிஷமின் ‘Rogue Lawyer’

john_grishamரொம்ப நாளாச்சு இந்த மாதிரி ஒரு மசாலா நாவலைப் படித்து.

க்ரிஷம் பல வருஷங்களாகவே போரடிக்கிறார், கிறுக்குத்தனமாக அவர் புத்தகங்களைப் படித்து நேரத்தை வீணடிக்கிறேன் என்று ஒரு பதிவில் எழுதி இருந்தேன். இந்த மாதிரி நாவல்களைத்தான் அவரிடம் எதிர்பார்க்கிறேன்!

கதையின் நாயகன் – வேறன்ன, ஒரு வக்கீல். எல்லாரும் கைவிட்டாலும் அமெரிக்க நீதிமன்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவனுக்கு ஆதரவாக வாதாட நீதிபதியே ஒரு வக்கீலை நியமிப்பார். மும்பையின் குண்டு வைத்த கசபுக்கும் வாதாட ஒரு வக்கீல் முன்வந்தால் எப்படிப் பார்க்கப்படுவானோ அப்படித்தான் இவன். அந்த மாதிரி கேஸ்களில் ஸ்பெஷலிஸ்ட். ஒரு கேஸில் கற்பழித்து கொலை செய்துவிட்டான் என்று ஒரு இளைஞனைப் பிடித்து வைத்திருக்கிறார்கள். கேஸ் முழுக்க முழுக்க ஜோடனை. இன்னொரு கேசில் இவனுடைய கட்சிக்காரன் மாஃபியா ரௌடி. தூக்குத்தண்டனை கொடுத்தாயிற்று. இவன் அப்பீல் மேல் அப்பீல் செய்து கொண்டிருக்கிறான். இன்னொரு கேசில் ஆர்வக்கோளாறு போலீஸ் கிழவன் ஒருவன் வீட்டில் புகுந்து தாக்குகிறது. இன்னொரு கேசில் குத்துச்சண்டை வீரன் கடுப்பில் ரெஃப்ரியை அடிக்க, ரெஃப்ரி இறந்துவிடுகிறார்.

ஒவ்வொரு கேசிலும் – குறிப்பாக ஆர்வக் கோளாறு போலீஸ் கேசில் குறுக்கு விசாரணை கலக்கலாக இருக்கிறது. பெரிதாக விவரிக்க விரும்பவில்லை, படித்துக் கொள்ளுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: த்ரில்லர்கள்

கௌரி கிருபானந்தனுக்கு சாஹித்ய அகடமி விருது

Gowri_Kribanandanமன நிறைவான செய்தி ஒன்று – தெலுகிலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து தெலுகுக்கும் மூச்சு விடாமல் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கும் கௌரி கிருபானந்தனுக்கு சாஹித்ய அகடமி மொழிபெயர்ப்புக்கான விருதை அறிவித்திருக்கிறது.

ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. Deserving candidate கௌரவிக்கப்படுவது, எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் பணி செய்பவர் கௌரவிக்கப்படுவது பெரிய திருப்திதான், இல்லையா? விருது கமிட்டி உறுப்பினர்களான மீனாட்சி, புவியரசு, திலகவதி ஆகியோருக்கு ஒரு ஜே!

இந்த விருது ஓல்கா எழுதிய விமுக்தா சிறுகதைத் தொகுப்பை மொழிபெயர்த்தற்காக தரப்பட்டிருக்கிறது. விமுக்தா சிறுகதையை இங்கே படிக்கலாம்.

கௌரிக்கு மேலும் மேலும் விருதுகளும் கௌரவங்களும் தேடி வர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: கௌரி பக்கம், விருதுகள்