Jabberwocky

இரண்டு மூன்று நாட்களுக்கு முன் கண்ணில் பட்ட ‘கவிதை’. ஜாபர்வாக்கி, Walrus and the Carpenter, எட்வர்ட் லியரின் limericks, சுகுமார் ரேயின் ஹா ஜா போ லா ரா மற்றும் அபோல் தபோல் போன்றவை சிறு வயதில் படிக்க ஏற்றவை என்பார்கள். எனக்கோ இவற்றில் கிடைக்கும் மகிழ்ச்சி enjoyment இத்தனை வயதான பிறகும் குறையவே இல்லை. மன அளவில் நான் வளரவே இல்லை என்று நினைக்கிறேன்!

‘Twas brillig, and the slithy toves
Did gyre and gimble in the wabe:
All mimsy were the borogoves,
And the mome raths outgrabe.

“Beware the Jabberwock, my son!
The jaws that bite, the claws that catch!
Beware the Jubjub bird, and shun
The frumious Bandersnatch!”

He took his vorpal sword in hand;
Long time the manxome foe he sought—
So rested he by the Tumtum tree
And stood awhile in thought.

And, as in uffish thought he stood,
The Jabberwock, with eyes of flame,
Came whiffling through the tulgey wood,
And burbled as it came!

One, two! One, two! And through and through
The vorpal blade went snicker-snack!
He left it dead, and with its head
He went galumphing back.

“And hast thou slain the Jabberwock?
Come to my arms, my beamish boy!
O frabjous day! Callooh! Callay!”
He chortled in his joy.

’Twas brillig, and the slithy toves
Did gyre and gimble in the wabe:
All mimsy were the borogoves,
And the mome raths outgrabe.

தொகுக்கப்பட்ட பக்கம்: சிறுவர்களுக்காக

நல்ல சிறுகதைகள் – ஒரு பட்டியல்

இது நண்பர் செல்வராஜின் பதிவு.

குறைந்தது நான்கு பரிந்துரை (தொகுப்பு, பரிந்துரை மற்றும் எழுத்தாளர்களால் குறிப்பிடப்பட்டவை) பெற்ற சிறுகதைகளை சிறந்த சிறுகதைகள் நூற்று ஐம்பது என்ற கட்டுரையில் பார்த்தோம். பாலகுமாரனின் சின்னச் சின்ன வட்டங்கள் என்ற கதை 4 பரிந்துரை பெற்று அந்த பட்டியலில் இடம் பிடிக்கிறது. புதுமைப்பித்தனின் மகாமசானம் 5 பரிந்துரை பெற்றுள்ளது. இந்த கதை திலீப்குமார் தொகுத்து ஏப்ரல் 13-இல் வெளியான The Tamil Story என்ற ஆங்கிலத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. இந்த தொகுப்பில் 88 சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. அதில் இடம் பெற்றதன் மூலம் சில கதைகள் 4 பரிந்துரை பெற்ற கதைகளாக முதல் பட்டியலில் இடம் பிடிக்கின்றன. அந்தக் கதைகள்…

  1. சார்வாகன் – சின்னூரில் கொடியேற்றம்
  2. திலகவதி – நாற்காலியும் நான்கு தலைமுறைகளும்
  3. சி.ஆர். ரவீந்திரன் – சிலிர்ப்புகள்
  4. விமலாதித்த மாமல்லன்சிறுமி கொண்டு வந்த மலர்
  5. சோ. தர்மன் – தழும்பு
  6. தமயந்தி – அனல் மின் மனங்கள்
  7. ரசிகன்பலாச்சுளை
  8. பாரதியார் – ரெயிவே ஸ்தானம்
  9. நீல. பத்மநாபன்சண்டையும் சமாதானமும்
  10. சிவசங்கரிபொழுது
  11. சுஜாதாநிஜத்தைத் தேடி

தமிழ் இந்து நாளிதழில் கதாநதி என்ற கட்டுரைத் தொடரை பிரபஞ்சன் எழுதி வருகிறார். அதில் சிறந்த சிறுகதைகளைக் குறிப்பிட்டு எழுதி வருகிறார்.அதன் அடிப்படையில் பட்டியலில் சில மாற்றங்கள் வரலாம்.

இனி மூன்று பரிந்துரை பெற்ற சிறுகதைகளின் பட்டியலைப் பார்க்கலாம்.

  1. புதுமைப்பித்தன்காலனும் கிழவியும், மனித யந்திரம், சிற்பியின் நரகம், கபாடபுரம்
  2. பாரதியார்ஆறில் ஒரு பங்கு
  3. சுந்தர ராமசாமி – எங்கள் டீச்சர், காகங்கள், சீதை மார்க் சீயக்காய் தூள்
  4. அ. மாதவையா – ஏணியேற்ற நிலையம், கண்ணன் பெருந்தூது
  5. தி. ஜானகிராமன்கோபுர விளக்கு, பரதேசி வந்தான், துணை, கோதாவரி குண்டு
  6. பி.எஸ். ராமையாகார்னிவல், மலரும் மணமும்
  7. பா. செயப்பிரகாசம் – இருளுக்கு அழைப்பவர்கள், தாலியில் பூச்சூடியவர்கள்
  8. ந. பிச்சமூர்த்தி – தாய், ஜம்பரும் வேஷ்டியும், மாயமான்
  9. கு.ப. ராஜகோபாலன் – புனர்ஜென்மம்
  10. கு. அழகிரிசாமிஇருவர் கண்ட ஒரே கனவு
  11. வண்ணதாசன்ஞாபகம், போய்க் கொண்டிருப்பவள், சமவெளி, தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள், வடிகால்
  12. அசோகமித்திரன் – குழந்தைகள், மாறுதல், பார்வை
  13. ஜெயகாந்தன் – குருபீடம், மௌனம் ஒரு பாஷை, நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ, ட்ரெடில், பிணக்கு
  14. சி.சு. செல்லப்பாமூடி இருந்தது
  15. அ. முத்துலிங்கம் – அமெரிக்காக்காரி, அக்கா
  16. நகுலன்அயோத்தி, ஒரு எட்டு வயது பெண் குழந்தையும் நவீன மலையாளக் கவிதையும்
  17. ஆதவன் – லேடி, ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள்
  18. பூமணி – கரு, பெட்டை, பொறுப்பு, வயிறுகள், தொலைவு
  19. ஜெயமோகன் – மாடன் மோட்சம், யானை டாக்டர், ஊமைச்செந்நாய்
  20. எஸ். ராமகிருஷ்ணன் -இந்த நகரிலும் பறவைகள் இருக்கின்றன, புலிக்கட்டம், தாவரங்களின் உரையாடல்
  21. இந்திரா பார்த்தசாரதி- இளமாறன் கொடுத்த பேட்டி, நாசகார கும்பல், பயணம்
  22. ஜி. நாகராஜன் – இளிந்த ஜாதி, தீராக்குறை, டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேஷ்டி அணிந்த மனிதரும்
  23. நாஞ்சில் நாடன் – கிழிசல், விரதம், பாலம்
  24. கந்தர்வன் – தராசு, மங்கலநாதர், காளிப்புள்ள
  25. சுஜாதா – திமலா
  26. கிருஷ்ணன் நம்பி -எக்ஸெண்டிரிக், நீலக்கடல், தங்க ஒரு, காணாமல் போன அந்தோனி
  27. மாலன் – 23
  28. திலீப்குமார் – அக்ரஹாரத்தில் பூனை, மனம் எனும் தோணி பற்றி
  29. சோ. தர்மன் – அ(ஹி)ம்சை
  30. தமயந்தி – மழையும் தொலைவும்
  31. எஸ். பொன்னுதுரை – அணி
  32. ஜெயபாரதி – அந்தத் தெருவின் முடிவில் ஒரு சுடுகாடு
  33. அஜித்ராம் பிரேமிள் – அசரீரி
  34. மௌனிஏன்
  35. பாதசாரி – இலைகள் சிரித்தன
  36. சம்பத் – இடைவெளி இது சிறுகதை அல்ல!
  37. கி.வா. ஜகன்னாதன்கலைஞனின் தியாகம்
  38. வை.மு. கோதைநாயகி அம்மாள் – காலச்சக்கரம்
  39. சுந்தரபாண்டியன் – களவு
  40. எம்.எஸ். கமலாகார்த்திகைச் சீர்
  41. அம்பைகறுப்பு குதிரை சதுக்கம், மிருத்யு, வெளிப்பாடு
  42. சங்கரராம் – கடைசி வேட்டை
  43. கோணங்கி – கறுப்பு ரயில், கோப்பம்மாள்
  44. ஆண்டாள் பிரியதர்ஷினி – கழிவு
  45. கு.ப. சேது அம்மாள் – குலவதி
  46. மு.வ. – குறட்டை ஒலி
  47. தங்கர் பச்சான்குடிமுந்திரி
  48. பிரபஞ்சன்மனசு
  49. கிருஷ்ணமூர்த்தி – மனிதர்கள்
  50. சு. சமுத்திரம் – மானுடத்தின் நாணயங்கள், போதும் உங்க உபசாரம்
  51. வல்லிக்கண்ணன்மதிப்பு மிகுந்த மலர்
  52. விந்தன்மாட்டுத் தொழுவம்
  53. இமையம் – மாடுகள்
  54. மா. அரங்கநாதன் – மீதி

மராத்திய ராணி தாராபாய்

tarabaiதாராபாய் சத்ரபதி சிவாஜியின் மருமகள். சிவாஜியின் இரண்டாவது மகனான ராஜாராமின் மனைவி. தாராபாயின் அத்தை சிவாஜியின் மனைவிகளில் ஒருவர். ஜலதீபம் படித்தவர்களுக்கு பரிச்சயமான பேராகத்தான் இருக்கும்.

மராத்திய அரசை சிவாஜியின் இறப்புக்குப் பிறகு உயிரோடு வைத்திருந்ததில் தாராபாயின் பங்கு முக்கியமானது. பிரஜ் கிஷோர் எழுதி இருக்கும் இந்தப் புத்தகம் – Tarabai and Her Times – தாராபாயின் காலத்தில் மராத்திய அரசு எப்படி உயிர் பிழைத்தது, எப்படி மீண்டும் வலுக் கொண்டது, எப்படி பேரரசாக மாறியது என்பதை விவரிக்கிறது. இது பிரஜ் கிஷோரின் முனைவர் பட்டத்துக்காக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியாம். அதை ஒரு புத்தகமாக எழுதி இருக்கிறார்.

பிரஜ் கிஷோரின் தனிப்பட்ட எண்ணங்கள் இதில் ஊடுறுவவதை அவரால் முழுமையாகத் தவிர்க்க முடியவில்லை. அவரது மராத்திய சார்பு, மராத்திய அரசிலும் ஷாஹூ அரசராவதே சரியானது போன்றவை தெரிகின்றன. இருந்தாலும் நடுநிலையோடு எழுத முயற்சித்திருக்கிறார்.

ஔரங்கசீப் தென்னிந்தியாவை மொகலாயப் பேரரசின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும் என்று கடுமையாக முயன்றார். அதற்குத் தடையாக இருப்பது பீஜப்பூர் அரசோ கோல்கொண்டா அரசோ அல்ல, மராத்தியர்களே என்பதை அவர் உணர்ந்திருந்தார். சிவாஜி இறப்புக்குப் பிறகு இதை விட நல்ல வாய்ப்பு கிடைக்காது என்று ஔரங்கசீப் முழுமூச்சாக மராத்தியர்களைத் தாக்கினார். சிவாஜிக்குப் பிறகு அரசனான சாம்பாஜியை (சம்புஜி என்று எழுத வேண்டுமோ என்னவோ தெரியவில்லை) போரில் வென்று சாம்பாஜியை சிறைப்பிடித்தார். முஸ்லிமாக மாறி மொகலாயப் பேரரசின் மேலாண்மையை ஏற்கும் குறுநில மன்னனாகலாம் என்று ஆசை காட்டியபோது சாம்பாஜி மறுக்க, சாம்பாஜி மிகக் குரூரமான முறையில் கொல்லப்பட்டார். ஆனால் சாம்பாஜியின் மகனான ஷாஹூ, மற்றும் மனைவி யேசுபாய் ஆகியோரை வீட்டுக் காவலில் வைத்து மரியாதையோடு நடத்தி இருக்கிறார். யேசுபாய் சாம்பாஜி சிறைப்பிடிக்கப்பட்டதும் தான் சாம்பாஜியைப் பிரிய விரும்பவில்லை என்று தானே போய் தன் குழந்தையோடு சரணடைந்திருக்கிறார்.

இந்த சூழ்நிலையில சாம்பாஜியின் தம்பி ராஜாராம் (இவரை சாம்பாஜி சிறையில் வைத்திருந்தார். சிறையில்தான் தாராபாயோடு திருமணம் எல்லாம்) பொறுப்பேற்றார். ஆனால் மொகலாயர்களை எதிர்க்க முடியாமல் செஞ்சிக் கோட்டைக்கு சென்றார். அங்கும் மொகலாயர்கள் துரத்த அங்கிருந்து தப்பி தஞ்சாவூருக்குச் சென்றார். சிறிய அளவில் மொகலாயர்களை எதிர்க்க ஆரம்பிக்கும்போது இறந்துவிட்டார்.

இப்போதுதான் தாராபாயின் உச்சக்கட்டம். கிட்டத்தட்ட 15 வருஷங்களில் தாராபாய் ஏறக்குறைய அழிந்து போன மராத்திய அரசை மீண்டும் உயிர் கொள்ள வைத்திருக்கிறார். இடைவிடாத தாக்குதல்கள், கோட்டைகளைப் பிடித்தல் என்று விடாமல் முயன்று கொண்டே இருந்திருக்கிறார்.

அன்றைய மராத்தியர்களுக்கு சிவாஜி ஏறக்குறைய தெய்வம். சிவாஜியின் மகன், மருமகள் என்றுதான் எல்லாருக்கும் மதிப்பு. இளைஞனாக வளர்ந்துவிட்ட ஷாஹூ விடுதலை செய்யப்பட, இப்போது தாராபாயை ஆதரிப்பதா, இல்லை ஷாஹூவையா என்று குழப்பம், பூசல்கள், ஏன் போரே கூட நடக்கிறது.

பாலாஜி விஸ்வநாத் (முதல் பேஷ்வா)வின் திறமையால் கனோஜி ஆங்கரே உட்பட்ட தாராபாயின் ஆதரவாளர்கள் சிலர் கட்சி மாறுகிறார்கள். ஷாஹூவின் அரவணைத்து செல்லும் குணம் அவர் கட்சிக்கு பலத்தை சேர்க்கிறது. மெதுமெதுவாக ஷாஹூ மராத்திய அரசராக ஏற்கப்படுகிறார். ராஜாராமின் இன்னொரு மகன் (இவர் பெயரும் சாம்பாஜிதான்) கோலாப்பூரில் இருந்து தெற்குப் பகுதிகளை ஆட்சி செய்கிறார்.

ஷாஹூவுக்கு மகன் இல்லை. அவரது கடைசி காலத்தில் தாராபாய் ஒரு பையனைக் கொண்டுவந்து இவன் ராஜாராமின் பேரன் என்று சொல்லி அவனை ராஜாவாக்குகிறார். ஆனால் பேஷ்வாக்கள் அப்போது மிகவும் பலமாக இருந்தார்கள், தாராபாயால் மீண்டும் அதிகாரத்துக்கு வரமுடியவில்லை.

தாராபாயின் பலவீனங்களைப் பற்றி பிரஜ் கிஷோர் நிறையவே பேசுகிறார். அவரது அதிகார ஆசைதான் அவரை ஷாஹுவை எதிர்க்க வைத்தது, அது தவறு என்கிறார். அரசியலில் உரிமையாவது கிரிமையாவது? சிவாஜிக்கு என்ன உரிமை இருந்தது? தாராபாய் ஆணாக இருந்திருந்தால் ஷாஹுவால் வென்றிருக்க முடியாது என்று நினைக்கிறேன்.

புத்தகத்தில் எனக்கு takeaway என்பது அன்றைய சாதாரண மக்களின் நிலைதான். மொகலாயப் படைகளும் மராத்தியப் படைகளும் நிஜாமின் படைகளும் மாறி மாறி போரிட்டுக் கொண்டிருந்தால் கிராமத்து விவசாயிகளும் சிறு வணிகர்களும் பிழைப்பது எப்படி? கொள்ளை அடிப்பது வாழ்க்கை முறையாகவே இருந்திருக்கிறது.

இதெல்லாம் வரலாற்றில் விருப்பமுள்ளவர்களுக்கு மட்டும்தான்.

தொகுக்கப்பட்ட பக்கம்: வரலாறு

ரோம் பேரரசின் சிசரோ – அரசியல்வாதி, பேச்சாளர், வக்கீல்

சீசர்கள் மன்னர்களாக ஆகும் வரை ரோம் பேரரசில் மீண்டும் மீண்டும் நல்ல தலைவர்கள் தோன்றிக் கொண்டிருந்தார்கள். அந்த நீண்ட பாரம்பரியத்தில் சிசரோவும் ஒருவர். சிசரோவை நாயகனாக வைத்து ராபர்ட் ஹாரிஸ் ஒரு trilogy-ஐ எழுதி இருக்கிறார் – Imperium (2006), Conspirata aka Lustrum (2009), Dictator (2015). விறுவிறுப்பான மசாலா நாவல்கள். ஆனால் சாண்டில்யன் போல ஒரு வரியை எடுத்துக் கொண்டு எழுதப்பட்ட fantasy-கள் அல்ல. அனேகமாக எல்லா நிகழ்ச்சிகளுமே நடந்தவைதான்.

என்னைக் கவர்ந்தவை அன்றைய ரோமின் அரசியல் சித்தரிப்புகள்தான். அன்றைய ரோமில் பிரபுக்கள் குடும்பத்தில் பிறக்காதவர்கள் சுலபமாக அதிகாரத்தை அடையமுடியாது. பிரபுக்களுக்குமே அதிகாரத்தை அடைய சில வழிகள்தான் இருந்தன – தானே முன்னின்று படை திரட்டி அதைக் கொண்டு பிற நாடுகளை வெல்வது அல்லது ரோமைப் பாதுகாப்பது, பேச்சுத் திறமை, பணம். பிரபுக்களுக்கு இருந்த லட்சியவாதம் எல்லாம் குறைந்துகொண்டே போய் இன்று அதிகாரத்துக்காக எதையும் செய்யத் துணிபவர்கள் பெருகிவிட்டனர். அரசியல் சட்டம் அதிகாரக் குவிப்பைத் தவிர்க்க என்னென்னவோ விதிகளை வகுத்திருந்தாலும் அவற்றை வளைப்பது எப்படி என்பது எல்லாருக்கும் புரிய ஆரம்பித்திருந்தது. சுதந்திரம் கிடைத்த பிறகு அறுபதுகளின் இந்தியா மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

ciceroசிசரோ பிரபு மாதிரி ஒரு குடும்பத்தில் பிறந்தவர். பணக்காரர் இல்லை. பணத் தேவைகளுக்காக டெரன்ஷியாவை மணக்கிறார். வக்கீலாக புகழ் பெற ஆரம்பித்திருக்கிறார். நாவல் இங்கேதான் தொடங்குகிறது. கன்னாபின்னாவென்று திருடி இருக்கும் சிசிலியின் கவர்னர் வெர்ரஸ் மீது கேஸ் போட்டு ஜெயிக்கிறார். அந்த வெற்றியை மூலதனமாக வைத்து செனட்டர் ஆகிறார். அன்றைய ரோமின் முடிசூடா மன்னர்களான பாம்பி, க்ராஸ்ஸஸ், முன்னால் வந்து கொண்டிருக்கும் ஜூலியஸ் சீசர் ஆகிய மூவருக்கும் நடுவில் ஒரு பக்கம் சேர வேண்டிய நிலை. பாம்பி பக்கம் சேர்ந்து ரோமின் கான்சல் (கிட்டத்தட்ட ஜனாதிபதி) ஆகிறார். அப்போது ஒரு சதியைக் கண்டுபிடித்து சதிகாரர்களை சட்டத்தை கொஞ்சம் வளைத்து தூக்கிலிடுகிறார். ஆனால் அதன் விளைவாக க்ளோடியஸ் என்பவன் இவரை எதிர்க்க, நாட்டை விட்டே ஓட வேண்டிய நிலை. சீசருக்கும் பாம்பிக்கும் நடுவே போர் மூள்கிறது. சிசரோ பாம்பி பக்கம், ஆனால் பாம்பி தோற்கிறார். சீசர் சிசரோவை அரசியலில் இருந்து ஓய்வு பெற வைக்கிறார். சீசர் அரசராக விரும்புவதும் அதற்காக ஆதரவு இருப்பதும் தெரிகிறது. மன்னராட்சியை வெறுக்கும் சிசரோவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் சீசர் கொல்லப்பட்டதும் ப்ரூட்டஸ் கட்சியில் சேர்கிறார். மார்க் ஆண்டனி வெல்லும்போது கொல்லப்படுகிறார்.

robert_harrisஇதெல்லாம் சரித்திரம். இவற்றை மிக அருமையாக நாவல்களாகக் கொண்டு வந்திருக்கிறார் ஹாரிஸ். சிசரோ அவரது நாயகன், அதனால் சிசரோவின் சந்தர்ப்பவாதத்தை கொஞ்சம் குறைத்துக் காட்டுகிறார் என்று நினைக்கிறேன். வேறு வழி இல்லாமல் சில முடிவுகளை எடுக்கிறார் என்று காட்டுவது முழு உண்மையாக இருந்திருக்க முடியாது.

கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். இன்றைய, நேற்றைய இந்திய அரசியல் சூழ்நிலையை நிச்சயம் நினைவுபடுத்தும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: புனைவுகள்

தொடர்புடைய பக்கம்: சிசரோ பற்றிய விக்கி குறிப்பு

தக்காளியின் அரசியல்

இன்று உலகெங்கும் தக்காளி மிக அதிகமாக பயன்படுத்தப்படும் ஒரு காய்கறி. நன்றாகப் பழுத்த தக்காளியின் லேசான இனிப்பும் லேசான புளிப்பும் எல்லாவற்றுக்கும் மேலாக அதன் juicyness-ஐயும் விரும்பாதவர் யார்? காய்ந்த மிளகாயை நன்றாக அரைத்து அதனுடன் தக்காளியை வதக்கி தாளித்து சட்னி செய்தால் – அட அட அதன் சுவையை விவரிக்க நாஞ்சிலால் கூட முடியுமோ என்னவோ தெரியவில்லை. இது சாப்பாட்டு ப்ளாக் இல்லை என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

barry_estabrookTomatoland பாரி எஸ்டப்ரூக் எழுதிய அபுனைவு. புத்தகம் அவர் நெடுஞ்சாலையில் காரை ஓட்டிச் செல்வதிலிருந்து ஆரம்பிக்கிறது. அவருக்கு முன்னால் ஒரு லாரி, அது நிறைய தக்காளி. திடீரென்று சில தக்காளிகள் லாரியிலிருந்து விழுகின்றன. 70 மைல் வேகத்தில் ஒரு தக்காளி வந்து உங்கள் காரின் முன்பக்கக் கண்ணாடியில் அடித்தால் என்னாகும்? கண்ணாடி முழுவதும் சிவந்த தக்காளிச்சாறு, முன்னால் பார்க்க முடியாமல் விபத்து என்று நினைப்பீர்கள். அதுதான் இல்லை. தக்காளி கான்க்ரீட் சாலையில் அந்த வேகத்தில் விழுந்தாலும் உடைவதில்லை. ஏறக்குறைய ஒரு சிவப்புக் கல் வந்து அடிப்பது போலத்தான் இருக்கிறது.

எஸ்டப்ரூக் வியந்து போகிறார். வீட்டுக்கு வந்து நாலு தக்காளியைத் தரையில் போடுகிறார். வீசி எறிகிறார். தக்காளி உடைவதே இல்லை. (இதைப் படித்துவிட்டு நானும் தக்காளியை கல் தரையில் போட்டுப் பார்த்தேன். உடையவில்லைதான், ஆனால் மெதுவாகத்தான் போட்டேன், எஸ்டப்ரூக் சொன்னதைக் கேட்டு வேகமாக வீசி எறிந்து அது தப்பித் தவறி உடைந்து போனால் வீட்டம்மாவிடம் யார் பேச்சு வாங்குவது?)

இன்று அமெரிக்காவில் – குறிப்பாக ஃப்ளோரிடாவில் விளையும் தக்காளிகள் அப்படி மாற்றப்பட்டிருக்கின்றன. மரபணுவிலேயே மாற்றம், கடினத்தோல் உடைய தக்காளியுடன் ஒட்டு என்று பல விதமாக இது நடந்திருக்கிறது. ஃப்ளோரிடாவின் தக்காளி வியாபாரிகள் சங்கம் அங்கிருந்து விற்பனைக்குப் போகும் ஒவ்வொரு தக்காளியும் இந்த அளவு கடினத்தோல், இந்த மாதிரி ஷேப் உள்ளவையாக இருக்க வேண்டும் என்று பல குணங்களை strict ஆக கடைப்பிடிக்கிறது.

ஆஹா ஓஹோ அமெரிக்கான்னா அமெரிக்காதான், என்ன மாதிரி தரக்கட்டுப்பாடு என்பவர்கள் அடுத்த பாராக்களை கட்டாயமாகப் படிக்க வேண்டும்.

தக்காளிக்கான விவசாயக் கூலிகள் அனேகமாக மெக்சிகோக்காரர்கள். அவர்கள் பல இடங்களில் கொத்தடிமைகளாகத்தான் நடத்தப்படுகிறார்கள். பரதேசி படத்தில் வரும் கொத்தடிமைகளுக்கும் இந்தக் கூலிகளுக்கும் வித்தியாசமே இல்லை. வன்முறை கொஞ்சம் குறைவாக இருக்கிறது, அவ்வளவுதான். தப்பிக்க முடியாது. வரும் பணம் இருக்கும் இடத்துக்கும் சாப்பாட்டுக்குமே சரியாகப் போய்விடும். தக்காளி விவசாயம் இன்று அனேகமாக பெரிய கம்பெனிகள் கையில். அவர்கள் மேஸ்திரிகளை வைத்து விவசாயம் செய்கிறார்கள். இருக்கும் இடம், சாப்பாடு இரண்டையும் தருவது மேஸ்திரிதான். கொடுமையான விஷம் உள்ள பூச்சி மருந்தை கையால் தெளிப்பது என்பதெல்லாம் சர்வசாதாரணம். இப்படி விஷத்தோடு நேரடி தொடர்பு இருப்பதால் குறையுள்ள குழந்தைகள் பிறந்து அது பெரிய கேசாகி இருக்கிறது.

எஸ்டப்ரூக் சொல்லும் இரண்டாவது விஷயம் – சுவை. இந்தத் தக்காளிகளில் சுவையே இருப்பதில்லை. நான் பெரிதாக இதையெல்லாம் கவனிப்பவன் இல்லை. ஆனால் கடைசியாக எப்போது ரசத்தில் அட தக்காளி இத்தனை சுவையாக இருக்கிறதே என்று சாப்பிட்டு பல மாதங்களாகிறது. தக்காளி அரைக்கப்பட்டால்தான் கொஞ்சமாவது ருசி தெரிகிறது. சுவையை விதி விதித்து கட்டுப்படுத்த முடியாது, ஷேப், தோல் பற்றி கவலைப்படாமல் தக்காளி விவசாயம் செய்யும் சிறு விவசாயிகளிடம்தான் சுவையான தக்காளி கிடைக்கிறது என்கிறார்.

மூன்றாவதாக அவர் சொல்வது தக்காளியின் பல வகைகள் காணாமல் போய்க் கொண்டிருப்பது. இப்படி ஒரேயடியாக சீரான தக்காளி என்று போனால காட்டுத் தக்காளியின் பல வகைகள் காணாமல் போய்விடுகின்றன. ஒட்டு விவசாயம் நடப்பது எதிர்காலத்தில் கஷ்டம். பல கல்லூரிகள் இன்று இந்தக் காட்டுத் தக்காளியின் விதைகளை சேகரித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் அதற்கெல்லாம் பணம் வருவது பெரிய கம்பெனிகள் மூலம்தான், நாளை ஒரு தென்னமெரிக்க விவசாயி அவன் வீட்டு பக்கத்திலுள்ள மலையில் விளைந்து கொண்டிருந்த தக்காளி விதையை இந்தப் பெரிய கம்பெனிகள் தயவு வைத்தால்தான் பெறக் கூடிய நிலை உண்டாகலாம்.

இது தக்காளியின் அரசியல் மட்டுமல்ல, அமெரிக்காவின் விவசாயக் கூலிகளின் அரசியல்; விவசாயம் பெரிய கம்பெனிகள் கையில் போய்க் கொண்டிருப்பதின் அரசியல். படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: அபுனைவுகள்

வாத்யாரே, நீ மேதை! – அசோகமித்ரன்

asokamithranபொதுவாகவே அசோகமித்ரனின் சிறுகதைகள் அற்புதமானவை. அவற்றுக்குள்ளும் அதிஅற்புதமானது இந்தச் சிறுகதை.

தமிழ் இலக்கியத்தோடு பரிச்சயம் உள்ளவர்கள் எவரும் இந்தச் சிறுகதையை இது வரை படிக்காமல் இருந்திருக்க முடியாது. அப்படித் தப்பித் தவறி படிக்காதவர்கள் யாராவது இருந்தால் அவர்கள் அதிர்ஷ்டசாலிகள். இந்தக் கதையை முதன்முதலாக படிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது, தவறவிடாதீர்கள்!

ஒரு க்ஷணம் (நொடி என்றால் பத்தவில்லை), நக்மா, moment-ஐக் காட்டுவதில் அசோகமித்ரன் எப்போதுமே மன்னன். இந்தக் கதையிலும் அப்படித்தான். டகர்பாயிட் காதர் புலியாக மாறும் அந்த ஒரு நொடிதான் கதை. அந்த நொடியைப் பற்றி பல யுகங்கள் பேசிக் கொண்டே இருக்கலாம்.

சிறுகதைகளின் எழுதப்படாத விதிகள் எத்தனை இதில் மீறப்படுகின்றன என்று பல முறை யோசித்திருக்கிறேன். இந்தச் சிறுகதையில் கதை எங்கே இருக்கிறது? ஒருவன் நன்றாக புலி வேஷம் போட்டான் என்பதெல்லாம் இந்த மனிதர் கையில் எப்படி இத்தனை உன்னதமான சிறுகதையானது? கதையின் உச்சக்கட்டம் கதையின் நடுவிலே வருகிறது, ஓ.ஹென்றி ட்விஸ்ட் மாதிரி கடைசி வரியில் அல்ல. கதைக்கு ஆரம்பம், முடிவு எல்லாம் இருக்கிறது. ஆனால் அவை எதுவும் கதைக்குத் தேவை இல்லை. சம்பிரதாயமான ஆரம்பம் தேவையா, வச்சுக்கோ என்று இளக்காரத்துடன் போகிற போக்கில் நாலு பாரா எழுதிய மாதிரி இருக்கிறது!

வாத்யாரே, நீ மேதை!

தொகுக்கப்பட்ட பக்கம்: அசோகமித்ரன் பக்கம்

Big Bang Theory

big_bang_theoryஇந்தப் பதிவை குனால் நய்யாரின் ‘My Accent is Real‘ பற்றித்தான் எழுத ஆரம்பித்தேன். ஆனால் புத்தகம் போரடிக்கிறது. குனாலின் வாழ்க்கை அவ்வளவு சுவாரசியமானதல்ல. டெல்லியில் பணக்காரக் குடும்பத்தில் பிறந்து அமெரிக்காவில் காலேஜ், அங்கே நடிப்பில் ஆர்வம், Big Bang Theory மூலம் பெரிய ப்ரேக் கிடைத்திருக்கிறது. ஒரு முன்னாள் மிஸ் இந்தியாவோடு திருமணம். அவ்வளவுதான்.

ஆனால் Big Bang Theory பற்றி எழுத வேண்டும் என்று தோன்றியது. ஷெல்டன் போன்ற ஒரு கதாபாத்திரம் இந்த மாதிரி காமெடி தொடர்களுக்கு பெரிய வரப்ரசாதம். கொஞ்சம் மறை கழன்றிருக்கும் பாத்திரம் பெரிய விஷயம் இல்லை. Consistent ஆக, யூகிக்கக் கூடிய முறையில் மறை கழன்றிருக்கும் பாத்திரமாக இருப்பது முக்கியம். Seinfeld-இன் க்ரேமர் இதற்கு முன்னால் இப்படி இருந்த ஒரு பாத்திரம் என்று நினைக்கிறேன்.

Big Bang Theory-இன் இன்னொரு கவர்ச்சி அதன் அறிவியல் பின்புலம். உயர்நிலைப் பள்ளியில் நல்ல மாணவனுக்கு புரியக்கூடிய அளவுதான் பேசுகிறார்கள், ஆனால் ஒரு mainstream சிட்காமில் அது பெரிய விஷயம். மேலும் எந்த சிட்காமில் ஸ்டீஃபன் ஹாக்கிங் தலையைக் காட்டுகிறார்?

அப்புறம் நல்ல நடிப்பு – பென்னி, லென்னர்ட், ராஜ் எல்லாருமே நன்றாக நடிக்கிறார்கள். ராஜ் பெண்களுடன் பேச முடியாமல் இருந்தது ஒரு நல்ல டச். என்னைப் பொறுத்த வரை ஹோவர்ட்தான் கொஞ்சம் பலவீனமான பாத்திரம். ஏமி நன்றாக வந்திருக்கும் பாத்திரம். ஆனால் பெர்னி just makes up the numbers.

எழுத ஆரம்பித்த பிறகு பெரிதாக எழுத விருப்பமில்லை. மேலும் இது அமெரிக்க டிவி சிட்காம். இது இந்தியாவில் ரசிக்கப்படுமா என்றே தெரியவில்லை. யாராவது பார்க்கிறீர்களா?

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள்

பெர்னார்ட் கார்ன்வெல்லின் Grail நாவல்கள்

bernard_cornwellகார்ன்வெல் நல்ல மசாலா எழுத்தாளர். விறுவிறுப்பான சரித்திரக் கதைகளை எழுதுபவர். இந்த நான்கு நாவல்களில் (Harlequin அல்லது Archer’s Tale, Vagabond, Heretic, 1356) அவர் 1300களின் நடுப்பகுதியில் தொடங்கிய 100 Years War-ஐ பின்புலமாக வைத்து எழுதி இருக்கிறார்.

100 Years War நூறு வருஷங்களுக்கும் மேலாக, ஐந்தாறு தலைமுறைகளாக இங்கிலாந்துக்கும் ஃப்ரான்ஸுக்கும் நடந்த போர். இங்கிலாந்தின் மன்னர் பரம்பரை தாய் வழியாக ஃப்ரான்சுக்கு உரிமை கொண்டாடியது. அதனால் ஏற்பட்ட போர். முதல் பாதியில் இங்கிலாந்து பெருவெற்றி பெற்றாலும், கடைசியில் ஃப்ரான்ஸ் வென்று இங்கிலாந்து மன்னர்களை இங்கிலாந்திலேயே முடக்கியது.

longbow_crossbowஇந்தப் போர்களில் longbow என்று அழைக்கப்பட்ட (ராமன் கையிலிருக்கும் வில்தான் longbow), ஆளுயுர வில்தான் இங்கிலாந்துக்கு முதலில் வெற்றிகளைத் தேடித் தந்தது. ஃப்ரென்சுக்காரர்கள் அப்போது பெரும்பாலும் குதிரை மீதிருந்து போர் புரியும் வீரர்களைத்தான் (knights) தங்கள் பிரதான பலமாக வைத்திருந்தார்கள். ஆங்கிலேய longbow வில்லாளிகள் எதிரிகளின் குதிரைகள் மீது அம்புகளை எய்து அவர்களை சுலபமாக வெற்றி கொள்ள முடிந்தது. ஃப்ரென்சுக்காரர்களும் விற்களைப் பயன்படுத்தினாலும் அவர்கள் பயன்படுத்தியது crossbow. அவை இன்னும் தூரம் செல்லக் கூடிய அம்புகளை எய்தாலும் அவற்றைப் பயன்படுத்துவது கஷ்டம். crossbow வில்லாளிகள் ஒரு அம்பு விடுவதற்குள் longbow-காரர்கள் நான்கு அம்புகளை எய்ய முடிந்ததாம்.

கதையின் நாயகன் தாமஸ். வில்லாளி. இங்கிலாந்தின் patron saint ஆன புனித ஜார்ஜ் கையிலிருந்த ஈட்டியைக் கைப்பற்ற தாமசின் அப்பா கொல்லப்படுகிறார். அப்போது வில்லாளியாக மாறி, அந்த ஈட்டி, holy grail (ஏசுவை சிலுவையில் அறைந்தபோது கொட்டிய அவரது ரத்தம் இந்த சட்டியில் பிடிக்கப்பட்டது என்று ஐதீகம்) போன்றவற்றை தேடிக் கொண்டிருக்கும் எதிரிகளோடு பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறான். அவனுடைய சாகசங்கள், போர்கள் ஆகியவை இந்த நாவல்கள் மூலம் விவரிக்கப்படுகின்றன. பல சரித்திர நிகழ்ச்சிகள் (Crecy போர், Poitiers போர்) மிக சுவாரசியமான முறையில் காட்டப்படுகின்றன.

புத்தகத்தில் என்னைக் கவர்ந்தவை அன்றைய நகர அமைப்புகள். ஒவ்வொரு நகரமும் தன் பாதுகாப்புக்காக ஒரு கோட்டையை எழுப்பிக் கொள்ள வேண்டி இருக்கிறது. நிலம்தான் அந்தஸ்து, பணத்தை அளிக்கிறது. ஆனால் சுயமாக சம்பாதித்து (வியாபாரம்தான் ஒரே வழி) பணக்காரன் ஆனாலும் அந்தஸ்து வராது. இரண்டாதாக படை அமைப்பு. பத்து பேர் கொண்ட படை இருந்தால் அனேகமாக பிரபு. கோட்டையைக் கைப்பற்ற ஆறு பேரால் கூட முடியும். நூறு வில்லாளி இருந்தால் அது பெரிய படை. அவர்களால் ஒரு நகரத்தைப் பிடிக்க முடியும். ஐயாயிரம் பேர் இருந்தால் அது மாபெரும் படை. இது உண்மையாகத்தானே இருக்க முடியும்? தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் தலையாலங்கானத்துக்கு எத்தனை பேர் அடங்கிய படையை கூட்டிச் சென்றிருப்பான்? சில நூறுகள்? ஆயிரம் பேர்?

இவை வணிக நாவல்கள்தான். இவை காட்டும் சரித்திரமும், வரலாற்று நிகழ்ச்சிகளும் நமக்கெல்லாம் அன்னியமானவைதான். ஆனாலும் பாத்திரங்கள் சுவாரசியமானவர்கள். போர்கள், அமைப்புகளின் சித்திரம் உண்மையாகத்தான் இருக்க வேண்டும். அதனால் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பெர்னார்ட் கார்ன்வெல் பக்கம்