பெரிசு – ராஜாஜி பற்றி ஒரு வெள்ளைக்காரி

rajajiமோனிகா ஃபெல்டன் பிரிட்டிஷ் பெண். எம்.பி.யாக இருந்திருக்கிறார் என்று நினைக்கிறேன். 1955-56 வாக்கில் இந்தியா வந்து ராஜாஜியின் வாழ்க்கை வரலாற்றை எழுத முயன்றிருக்கிறார். இரண்டு மூன்று வருஷம் இந்தியாவில் தங்கி, ராஜாஜியை அடிக்கடி சந்தித்திருக்கிறார். அந்த நினைவுகளைத்தான் ‘I Meet Rajaji’ என்ற புத்தகமாக எழுதி இருக்கிறார்.

Intimate Portrait என்று சொல்வார்கள். இந்தப் புத்தகத்தின் charm அதுதான். பெரிசு அவ்வப்போது செய்யும் குசும்பு, விடாமல் செய்த முயற்சிகள், நேருவை விமர்சிக்கும்போதும் அதன் ஊடாகத் தெரியும் அவர்களது பரஸ்பர அன்பு, விமர்சனங்களை எதிர்கொள்ளும் முறை ஆகியவற்றை அருகிலிருந்து பார்த்த ஒருவரின் நினைவுகள்.

ராஜாஜி அப்போது அரசியலிலிருந்து விலகி இருந்த நேரம். தமிழக முதல்வர் பதவியிலிருந்து ஏறக்குறைய வெளியேற்றப்பட்டிருந்தார். வியாசர் விருந்து, ராமாயணம் எல்லாம் அப்போது வெளியாகி இருந்தன. அவருக்கு வாழ்க்கை வரலாறு போன்றவற்றில் பெரிதாக ஆர்வம் இல்லை. ஆனால் மோனிகா ஃபெல்டனோடு நட்பு உருவாகி இருக்கிறது. முதலில் மரியாதைக்காக சந்தித்திருப்பார், மோனிகா கண்ணில் தான் ஒரு ஹீரோ என்பது அந்த நட்பு உருவாக வழிவகுத்திருக்கும் என்று நினைக்கிறேன்.

அந்தக் கட்டத்தில் ராஜாஜி பெரிதாக எதையும் செய்யவில்லை. அதனால் இன்றைக்கு நமக்கு சுவாரசியமாக இருக்கக் கூடிய வம்புகள் எதுவும் இல்லை. காமராஜின் பேர் ஒரே ஒரு இடத்தில் வருகிறது. நேருவை விமர்சித்தாலும் அடக்கித்தான் வாசித்திருக்கிறார். லைசன்ஸ் கோட்டா பர்மிட் ராஜ் என்று கடுமையான வார்த்தைகள் இல்லை. நேருவும் ராஜாஜியின் விமர்சனத்துக்கு பதிலாக தான் ராஜாஜியை பெரிதும் மதிப்பதாகவும், பெரிசு கொஞ்சம் தாட்சணியம் காட்ட வேண்டும் என்று மட்டுமே சொல்லி இருக்கிறார்.

ராஜாஜி அப்போது சென்னையில்தான் வசித்தார். அவருடைய நேரம் எல்லாம் ஸ்வராஜ்யா பத்திரிகையில் கட்டுரைகள் எழுதுவதிலும் அவ்வப்போது கூட்டங்களில் பேசுவதிலும்தான் போய்க் கொண்டிருந்தது. அவருடைய நண்பர்கள் எல்லாரும் கிழவர்கள். மோனிகா உடனிருந்த இரண்டு மூன்று வருஷங்களில் அவருடைய நண்பர்கள் சிலர் இறந்திருக்கிறார்கள். ராஜாஜிக்கும் ஆரோக்கியம் ஒன்றும் பிரமாதமாக இல்லை. வாழ்க்கை வரலாறு என்பதில் ஆர்வம் இல்லாவிட்டாலும் இந்த நிலையில் அவரை தினமும் தேடி வந்து பேசும் ஒரு பெண்ணோடு அவருக்கு நட்பு உருவாகாதா என்ன?

அந்தக் காலத்தில் ராஜாஜி அணு ஆயுதங்களை உலகம் கைவிட வேண்டும் என்று தீவிரமாக முயன்று கொண்டிருந்தார். மோனிகாவும் இதில் தீவிரமாக இருந்தார். ஆனால் ராஜாஜி அரசியல் அதிகாரம் இல்லாத ஒரு வயதான கிழவனால் எதையும் பெரிதாக கிழித்துவிட முடியாது என்பதை மோனிகாவை விட நன்றாகவே உணர்ந்திருந்தார். World Peace Council மாதிரி சில அமைப்புகளுக்கு தந்தி அனுப்புவது, நியூ யார்க் டைம்ஸ் மாதிரி பத்திரிகைகளுக்குக் கடிதம் எழுதுவது, குருஷ்சேவுக்கு கடிதம் எழுதுவது இது மாதிரி முயற்சிகளை செய்து கொண்டிருந்தார். குருஷ்சேவ் இவருடைய கடிதங்களுக்கு தொடர்ச்சியாக பதில் எழுதி இருக்கிறார். காந்தி மாதிரியே சின்னச் சின்ன வெற்றிகளுக்கு முயன்றிருக்கிறார். ஹைட்ரஜன் குண்டு வெடிப்பு சோதனைகளை குருஷ்சேவ் ஒரு வருஷம் நிறுத்தி வைத்திருந்திருக்கிறார்.

ராஜாஜிக்கு அப்போது ஓரளவு fan following இருந்திருக்கிறது. ஆனால் தமிழகத்தில் அது ராஜாஜியின் பழைய நண்பர்கள், வயதானவர்கள், பிராமணர்களோடு குறுகிவிட்டதோ என்று தோன்றுகிறது. இத்தனைக்கும் கல்லூரி நிகழ்ச்சிகளில் எல்லாம் பேசி இருக்கிறார். மாறாக ஹைதராபாத், கல்கத்தாவில் அவரைப் பார்க்க, அவர் சொல்வதைக் கேட்க இளைஞர்கள், ஏழைகள் கூடி இருக்கிறார்கள்.

ராஜாஜி நேருவுக்கு சமமான ஆகிருதி உள்ள தலைவர் இல்லாதது நேருவை பலவீனப்படுத்துகிறது என்று நினைத்திருக்கிறார். ஒரு இடத்தில் சொல்கிறார் – காந்தி இருந்திருந்தால் பின்னணியில் அவரது தாக்கம் இருந்து கொண்டே இருக்கும். படேல் போய்விட்டார்; ஆசாத் அவ்வளவு பயன்படமாட்டார். (useless என்று சொன்னதாக நினைவு). நானோ ஓய்வு பெற்றுவிட்டேன். யாராலும் நேருவை எதிர்த்து ஒரு வார்த்தை சொல்ல முடியவில்லை என்று வருத்தப்படுகிறார்.

1959-இல் ஸ்வதந்திரா கட்சி அறிவிப்புடன் புத்தகம் முடிகிறது.

புத்தகம் எல்லாருக்குமானது இல்லை. மோனிகா ராஜாஜி ஒதுங்கி இருந்த நாட்களைத்தான் விவரிக்கிறார். அதனால் சுவாரசியம் குறைவு. ஆனால் அவரது ஆளுமை வெளிப்படுகிறது. என் புத்தக அலமாரிக்காக நான் வாங்குவேன்.

நாரண. துரைக்கண்ணனும் ராஜாஜியின் வாழ்க்கை வரலாற்றை எழுதி இருக்கிறார். குறிப்பாக சொல்ல ஒன்றுமில்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: இந்திய அபுனைவுகள்

தொடர்புடைய சுட்டி: மோனிகா ஃபெல்டன் பற்றிய விக்கி குறிப்பு

அசோகமித்ரன் எழுதிய ‘யுத்தங்களுக்கிடையில்’

asokamithranஅசோகமித்ரன் என் உள்ளம் கவர்ந்த எழுத்தாளர்தான். ஆனால் அவரது எல்லா கதைகளும் எனக்கு புரிந்துவிடுவதில்லை. இது அப்படி புரியாத கதைகளில் ஒன்று “யுத்தங்களுக்கிடையில்“. What is the point of this novel? எனக்குப் பிடிபடவே இல்லை.சாதாரணமாகப் புரியாவிட்டால் ஜெயமோகனக் கோனாரைத்தான் கோனார் நோட்ஸ் கொடுங்கள் என்று கேட்பேன். ஆனால் அவர் இப்போது என் மேல் கொஞ்சம் கடுப்பில் இருக்கிறார். 🙂 உங்கள் யாருக்காவது புரிந்தால் சொல்லுங்கள்!

புத்தகத்தைப் படிக்கும்போது என் ஒன்றுவிட்ட தாத்தா குடும்பம்தான் நினைவுக்கு வந்து கொண்டே இருந்தது. பிராமணக் குடும்பம். நிறைய பிள்ளைகள். வேலை தேடி டெல்லி போனவர்கள் இரண்டு மூன்று பேர். எத்தனையோ பிரச்சினைகள் இருந்தாலும் ஒன்றாக நின்ற குடும்பம்.

இதில் இரண்டு உலகப் போர்களுக்கும் இடைப்பட்ட காலம். கஷ்டப்படும் பிராமணக் குடும்பம். எப்படியோ ஒருவன் ஹைதராபாத் நிஜாம் சமஸ்தானத்தில் வேலை வாங்கிக் கொள்கிறான். தம்பிகளை அழைத்து வருகிறான். ஒரு அண்ணன் குடும்பம் இன்னும் கஷ்டத்தில் ஆனால் ஒருவன் தலையெடுத்து பம்பாய் போய் வேலை பார்க்கிறான். அவன் குடும்பம் முன்னேறுகிறது. இப்படி சில பல சரடுகள். ஆனால் அனைவரையும் குடும்பம் என்ற பந்தம் ஒன்றிணைக்கிறது.

எனக்கு எங்க தாத்தா சின்ன வயசில கிராமத்தை விட்டு வெளியேறினதாலதான் வேலை கிடைச்சுது என்பது மாதிரி ஒரு காலகட்டத்தை – மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருந்த ஒரு பிராமணக் குடும்பத்தை – காட்டுகிறது என்பதற்கு மேல் இந்தப் புத்தகத்தில் எதுவும் கிடைக்கவில்லை. இதை வேறு யாராவது எழுதி இருந்தால் நிஜமான சித்தரிப்பு என்று பாராட்டி இருப்பேனோ என்னவோ. அசோகமித்ரன் லெவலுக்கு நிஜமான சித்தரிப்பு என்பதெல்லாம் பத்தவில்லை.

அதிலும் முதல் முப்பது பக்கத்தில் யாருக்கு யார் தம்பி, அண்ணன், மாமா என்று புரிந்து கொள்வதற்குள் தாவு தீர்ந்துவிட்டது. படிக்கறவனை சும்மா குழப்பிவிடுவோம் என்று குசும்புடன் எழுதிய மாதிரி இருக்கிறது.

எனக்குப் பிடித்த பாத்திரம் சிறு வயதில் கிழவனை மணந்து, குழந்தை இல்லாத, ஆனால் சொத்து சுகம் உள்ள விதவை சீதாதான். அழுத்தமான பாத்திரம். இந்தத் திருமணத்தில் அதிருப்தி அடைந்து வீட்டை விட்டு ஓடிவிட்ட முதல் தாரத்தின் பையன் திரும்பி வரமாட்டானா என்று அவள் ஏங்குவது ஒரு nice touch.

தோழி அருணாவுக்கு இதில் நிஜமான சித்தரிப்பு என்பதற்கு மேலாகவும் என்னவோ கிடைத்திருக்கிறது. அவரது வார்த்தைகளில் –

அவர் வரைந்து காட்டுவது ஒரு மெல்லிய கோட்டுச் சித்திரம். அதன் உள்ளே இருக்கும் அடர்த்தியான வாழ்க்கை நம் கற்பனைக்கே விடப்படுகிறது. சொல்வதை விட சொல்லாமல் விடுவதே நிறைய.

இன்னும் நன்றாகப் புரிந்து கொண்டவர்கள் விளக்கி எழுதினால் ரொம்ப சந்தோஷப்படுவேன்…

காலச்சுவடு இதழில் அம்ஷன்குமார் பிழைப்பு என்பதே ஒரு யுத்தம்தான், அந்த யுத்தத்தைத்தான் இந்தப் புத்தகம் விவரிக்கிறது என்கிறார். அதைத்தான் நானும் நிஜமான சித்தரிப்பு என்று சொல்லி இருந்தேன். அருணா சொன்ன மாதிரி அசோகமித்ரன் நாவல்களில் சொல்லப்படுபவற்றை விட சொல்லாமல் விடப்படுவது எப்போதும் அதிகம். இதில் எனக்கு சொல்லப்படாதவை என்று எதுவும் கிடைக்கவில்லை…

தொகுக்கப்பட்ட பக்கம்: அசோகமித்ரன் பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:

அருணாவின் விமர்சனம்

காலச்சுவடில் அம்ஷன்குமார் விமர்சனம்

நண்பர் ரெங்கசுப்ரமணியின் விமர்சனம்

 

விக்ரமாதித்யன் கவிதை

இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னால் ஜெயமோகன் தளத்தில் பார்த்த கவிதை. விக்ரமாதித்தன் எழுதியது.

எனக்கும் கவிதைக்கும் கொஞ்ச ரொம்ப தூரம். இதையும் கவிதையாக நான் பெரிதாக ரசிக்கவில்லை. ஆனால் பாதி படித்ததும் ஒரு உன்னதமான சிறுகதை நினைவு வந்தது. ஒரு வேளை அந்தச் சிறுகதைக்கான தீப்பொறி (spark) இந்தக் கவிதைதானோ என்று தோன்றியது. பிரபலமான சிறுகதைதான், படிப்பவர்களுக்கும் ஏதாவது கனெக்‌ஷன் தெரிகிறதா என்று தெரிந்து கொள்ள ஆசை. உங்களுக்கும் ஏதாவது நினைவு வந்தால் மறுமொழி எழுதுங்கள்!

தட்சிணாமூர்த்தியான

மாமிசம் தின்னாமல்
சுருட்டுப் பிடிக்காமல்
பட்டையடிக்காமல்
படையல் கேட்காமல்
உக்ரம் கொண்டு
சன்னதம் வந்தாடும்
துடியான கருப்பசாமி
இடையில் நெடுங்காலம்
கொடைவராதது பொறாமல்
பதினெட்டாம்படி விட்டிறங்கி
ஊர்ஊராகச் சுற்றியலைந்து
மனிதரும் வாழ்க்கையும்
உலகமும் கண்டுதேறி
அமைதி கவிய
திரும்பி வந்தமரும்
கடந்தகாலக் கைத்தநினைவுகள் வருத்தவும்
எதிர்கால நிச்சயமின்மை உறுத்தவும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள்

ஆஸ்கார் விருது பெற்ற Revenant-இன் மூலக்கதை

revenantபுத்தகத்தைப் படித்துவிட்டுத்தான் திரைப்படத்தைப் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன், அதனால் இன்னும் திரைப்படத்தைப் பார்க்கவில்லை. ஆனால் திரைப்படமாக்க நல்ல கதை. காடும் மலையும் ஆறும் மாபெரும் கரடிகளும் செவ்விந்தியர்களும் குதிரைகளும் துப்பாக்கிகளும் படிப்பதை விட பார்க்க அருமையான பின்புலத்தை ஏற்படுத்தும்.

Revenant என்றால் பழி வாங்குதல் என்று அர்த்தமாம். கதையில் பிரமாதமாகச் சொல்ல ஒன்றுமில்லை. ஆனால் ஹ்யூ தனியாக விடப்படும் இடம் காவிய சாத்தியங்கள் உடையது.

கதைச் சுருக்கம் வேண்டும் என்பவர்களுக்காக: அமெரிக்க (வெள்ளையர்கள்) குழு ஒன்று வேட்டையாடி விலைமதிப்புள்ள தோல்களை (furs) கொண்டு வரச் செல்கிறது. செவ்விந்தியர்களால் பிரச்சினை. அனுபவம் உள்ள மூத்த வேட்டைக்காரன் ஹ்யூ க்ளாஸ் ஒரு பெரும் கரடியால் (grizzly) தாக்கப்பட்டு குற்றுயிரும் கொலையுயிருமாக சாகக் கிடக்கிறான். ஹ்யூ இறந்த பிறகு அவனை அடக்கம் செய்துவிட்டு வா என்று இரண்டு பேரை அவனுடன் விட்டுவிட்டு குழு தன் பயணத்தைத் தொடர்கிறது. வாய்ப்பு கிடைத்ததும் ஹ்யூவின் துப்பாக்கி, கத்தி எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு அவனை அம்போ என்று விட்டுவிடுகிறார்கள். பழி வாங்க உயிர் வாழ வேண்டும். உயிர் வாழ ஹ்யூவின் போராட்டம்தான் கதை.

michael_punkeஹ்யூ க்ளாஸ் நிஜ மனிதன். அந்தக் காலத்தில் அவனை உண்மையாகவே கரடி தாக்கியது. அவனை அம்போ என்று விட்டுவிட்டு இருவர் போனதும் நடந்த சம்பவம்தான். ஹ்யூ உயிர் பிழைத்து பழி வாங்க முயன்றதும் நடந்ததுதான். இரண்டு ‘வில்லன்களில்’ ஜிம் ப்ரிட்ஜர் பதின்ம வயதினன். பிற்காலத்தில் அவனும் ஒரு திறமையான explorer ஆனான். மைக்கேல் புன்கே (இவரது பெயரை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று தெரியவில்லை) இந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து 2002-இல் இதை புனைகதையாக எழுதி இருக்கிறார்.

இந்தக் கதை உண்மைச் சம்பவங்களின் மீது புனையப்பட்டது என்பது இதை எனக்கு மேலும் attractive ஆக்குகிறது. ஆனால் திரைப்படமாகப் பாருங்கள் என்றுதான் பரிந்துரைப்பேன். இத்தனைக்கும் நான் இன்னும் திரைப்படத்தைப் பார்க்கவில்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: சாகச நாவல்கள்

தொடர்புடைய சுட்டி:
Revenant பற்றிய ஐஎம்டிபி குறிப்பு
ஹ்யூ க்ளாஸ் பற்றிய விக்கி குறிப்பு

ஜாக் லண்டன் பிறந்த வீடு

இரண்டு நாள் முன்னால் மதியம் வாக் போனபோது கண்ணில் பட்டது.

jack_london_plaque

சான் ஃப்ரான்ஸிஸ்கோ அருகில் உள்ள ஓக்லண்டில் Jack London Square என்று ஒன்று இருக்கிறது. ஒரு நாள் போய்ப் பார்க்க வேண்டும்…

jack_london_square
பார்க்கவே சந்தோஷமாக இருந்தது. நம்மூரில் புதுமைப்பித்தனை விடுங்கள், அவரை விட பல மடங்கு பிரபலமான கல்கிக்கே இப்படி ஏதாவது ஒரு plaque இருக்கிறதோ என்னவோ!

தொகுக்கப்பட்ட பக்கம்: உலக எழுத்தாளர்கள்

திலீப்குமார் எழுதிய ‘ரமாவும் உமாவும்’

dilip_kumar கொஞ்சமே எழுதி இருந்தாலும் திலீப்குமார் தமிழின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவர். பல வருஷங்களுக்குப் பிறகு அவரது தொகுப்பு வெளியாகி இருக்கிறது. தமிழ்நாட்டு நூலகங்களில் கிடைக்கிறதோ என்னவோ சான் ஃப்ரான்சிஸ்கோ நூலகத்தில் கிடைத்தது!

நான்கு சிறுகதைகள். எந்தச் சிறுகதையும் நான் தமிழ்ச் சிறுகதை anthology என்று ஒன்று தொகுத்தால் அதில் இடம் பெறாதுதான். ஆனால் நல்ல சிறுகதைகள், தொகுப்பைப் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

ரமாவும் உமாவும் சிறுகதையில் இரண்டு நாற்பது வயது குஜராத்திப் பெண்கள் ஒரு குஜராத் பெண்கள் சுற்றுலாவில் சந்திக்கிறார்கள். இருவருக்கும் ஒரு அறை கொடுக்கப்பட்டிருக்கிறது, அங்கே உறவு கொள்கிறார்கள். அவர்களின் வாழ்க்கையின் வெறுமை – here we go around the prickly pear at 4’o clock in the morning வெறுமையை வெளிக் கொணர்கிறார்.

ஒரு எலிய கதை கச்சிதமாக எழுதப்பட்ட கதை. பொறியில் மாட்டிய எலிக்கும் கடவுளுக்கும் சம்பாஷணை. நன்றாக முடித்திருந்தார்.

ஆசையும் தோசையும் அவரது புகழ் பெற்ற கடிதம் சிறுகதையின் prequel. இங்கே மிட்டு மாமா தன் நண்பர் கன்ஷ்யாம் முன்னால் அவமானப்படுத்தப்படுகிறார்.

எனக்குப் பிடித்தது ‘ஒரு குமாஸ்தாவின் கதை‘ கோவையில் ஒர் முஸ்லிம் கீழ்மத்திய வர்க்கக் குடும்பம். சாதாரணக் குடும்பம். அவர்கள் வாழ்க்கையில் ஒரு நாள். குடும்பத் தலைவன் கலவரத்தில் கொல்லப்படுவதோடு முடிகிறது. மிகக் கச்சிதமாக எழுதப்பட்ட கதை.

எனக்கு குறையாகத் தெரிந்தது – playing to the gallery என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். திலீப்குமார் இந்தக் கதைகளில் அதை நிறையவே நடத்துகிறார். அதுவும் ரமாவும் உமாவும் சிறுகதையில் கதைசொல்லி தன் பாத்திரங்களோடு பேசுவதெல்லாம் புன்னகைக்க வைத்தாலும், அதெல்லாம் வெறும் playing to the gallery-தான். ஒரு எலிய கதையில் தன்னைத்தானே கிண்டல் செய்து கொள்வார் – ‘ஜெயமோகன் நான் வருஷத்துக்கு அரைக்கதைதான் எழுதறேன்பார்.’ அந்த நேரத்தில் அது புன்னகைக்க வைத்தாலும் கதைக்கும் இதற்கும் என்ன தொடர்பு? கதையை பலவீனப்படுத்துகிறது…

படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: திலீப்குமார் பக்கம்