ஏழு வயது க்ரியாவும் கலீலையோவும்

(கூட்டாஞ்சோறு மீள்பதிவு.)

காரில் நானும் க்ரியாவும் போய்க்கொண்டிருந்தபோது அவளுக்கு கனமான, லேசான பொருள் எல்லாம் புவியீர்ப்பு விசையால் ஒரே மாதிரி இழுக்கப்படும், மேலிருந்து கீழே போட்டால் தரையை அடைய ஒரே நேரம்தான் ஆகும் என்பதை சொல்லிக் கொடுக்கலாமே என்று தோன்றியது.

நான் ஆரம்பித்தேன். க்ரியா நீ சூப்பர் ஸ்ட்ராங் சூப்பர்வுமனாம். பத்து மாடி கட்டடத்தின் மீது ஏறி நிக்கறயாம். உன் ஒரு கைல நாம போற இந்தக் கார் இருக்காம்…
க்ரியா: I am too small, I can’t lift this car!
நான்: நீதான் சூப்பர் ஸ்ட்ராங் சூபர்வுமனாயிற்றே! அதனால் சுலபமாக தூக்கலாம்.
க்ரியா: So I can lift this car?
நான்: ஆமா. இன்னொரு கைல இன்னிக்கு வந்த பேப்பரை சுருட்டி ஒரு பெரிய பால் மாதிரி வச்சிருக்கியாம். ரெண்டையும் ஒரே நேரத்தில கீழே போடறயாம். எது முதல்ல கீழ விழும்?

க்ரியா ரொம்பவே யோசித்தாள். அவளுக்கு பதில் சொல்ல விருப்பமே இல்லை என்று தெளிவாகத் தெரிந்தது. ஐ டோன்ட் நோ என்று சொல்லிப் பார்த்தாள், நான் விடவில்லை. உனக்கு தோன்றுவதைச் சொல் என்று வற்புறுத்தினேன். நிறைய தயக்கத்துக்குப் பிறகு பேப்பர்தான் முதலில் விழும் என்று சொன்னாள்.

நான் அசந்துபோனேன். பேப்பர் முதலில் விழும் என்று யாரும் சொல்லி நான் இது வரை கேட்டதில்லை. அப்படி யோசிக்க முடியும் என்று கூட எனக்குத் தோன்றியதில்லை. இவள் மாத்தி யோசிப்பவள் என்று தெரியும், இருந்தாலும் இது என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது.

நான்: ஏன் பேப்பர் கீழ முதல்ல விழும்னு நினைக்கறே?
க்ரியா: I think that the car will fall first. But if the car will fall first, you won’t ask this question. Since you ask this question, it has to be a trick question. So the right answer has to be paper.

சரி ரொம்ப நாளாச்சு க்ரியா பத்தி ஒரு போஸ்ட் போட்டு, இதைப் போடலாம் என்று சிரித்துக் கொண்டேன். And it got better and better.

நான்: சரி க்ரியா, ட்ரிக் கொஸ்டின் எல்லாம் மறந்துடு. நிஜமா உனக்கு எது முதல்ல கீழே விழும்னு தோணறது?
க்ரியா: கார்.

அப்பாடா என்னதான் மாத்தி யோசிப்பவளா இருந்தாலும் வழிக்கு வந்துவிட்டாள் என்று நினைத்துக் கொண்டேன்.
நான்: ஏன் கார் முதல்ல கீழே விழும்னு சொல்லறே?
க்ரியா: Because the car will be so heavy, that I will drop it before the paper ball!

அப்புறம் பைசாவில் டவர் (Leaning Tower of Pisa) ஏன் சாய்ந்து நிற்கிறது, அப்படி சாய்ந்து நின்றால் அது கீழே விழுந்துவிடாதா, பைசாவில் பிட்சா கிடைக்குமா என்று நிறைய கேள்விகளை விவாதித்துக் கொண்டே போவதற்குள் கிளாஸ் வந்துவிட்டது. கலீலியோவுக்கு வரவே முடியவில்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: க்ரியா

இந்த நூற்றாண்டுக்கான பரிந்துரைகள்

Wisdom of the Crowds இலக்கியத்தில் சிறந்தவற்றை நிலைநிறுத்தி பாதுகாத்துவிடுகிறது. ஷேக்ஸ்பியரை இன்னும் படிக்கிறோம், நடிக்கிறோம். அவரது சம காலத்திய நாடக ஆசிரியர்களான க்ரிஸ்டோஃபர் மார்லோ, பென் ஜான்சன் போன்றவர்களை அனேகமாக மறந்துவிட்டோம். புதுமைப்பித்தனும் மௌனியும் கு.ப.ரா.வும் அழகிரிசாமியும் தி.ஜா.வும் இன்னும் நமது பிரக்ஞையில் இருக்கிறார்கள். விந்தனும் மு.வ.வும் ஏறக்குறைய மறைந்தேவிட்டார்கள்.

ஆனால் Wisdom of the Crowds சமீபத்திய இலக்கியத்தைப் பொறுத்த வரை வேலைக்காகாது. கடந்த பத்து இருபது வருஷங்களில் வெளியானவற்றில் என்ன படிப்பது என்று கண்டுபிடிப்பது எப்போதுமே கொஞ்சம் கஷ்டம்தான். விருதுகளும் பரிந்துரைகளும் இலக்கிய விமர்சகர்களும் அங்கேதான் ஒரு வாசகனுக்கு தேவைப்படுகிறார்கள்.

சமீபத்தில் ஜெயமோகன், எஸ்ரா இருவரும் பரிந்துரைத்த படைப்புகளின் பட்டியல்கள் கண்ணில் பட்டன. வசதிக்காக கீழே மீள்பதித்திருக்கிறேன். இவற்றில் நான் படித்தவை தமிழ்மகனின் ‘வெட்டுப்புலி‘ மற்றும் கிறிஸ்டோஃபர் ஆண்டனியின் ‘துறைவன்’ நாவலின் திருத்தப்படாத வடிவம் ஆகியவைதான். வெட்டுப்புலி கால வெள்ளத்தில் நிற்கும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை என்பதைப் பதிவு செய்கிறேன்.

ஜெயமோகன் பரிந்துரைத்தவை:

  1. அத்துமீறல்: வி.அமலன் ஸ்டேன்லி, நல்ல நிலம் பதிப்பகம் – அமலன் ஸ்டேன்லி முக்கியமான கவிதைகளை எழுதியவர். அடிப்படையில் அறிவியலாளர். ஆய்வகச் சுண்டெலி ஒன்றின் வாழ்க்கையின் சித்திரமாக முதல் வாசிப்பில் அமையும் இந்த நுணுக்கமான நாவல், இருத்தலியம் ஓங்கி நின்றிருந்த காலகட்டத்தின் குறியீட்டு நாவல்களின் அழகிய கவித்துவத்தைச் சென்றடைகிறது.
  2. ஆதிரை: சயந்தன், தமிழினி பதிப்பகம் – தமிழ்ப் பண்பாட்டில் போர் இல்லாமலாகி இருநூறாண்டுக் காலமாகிறது. ஆகவேதான் நம் மொழியில் இத்தனை போர்க் கூச்சல்கள். ரத்தமும் கண்ணீரும் தெறித்த ஒரு போர்க் காலகட்டத்தின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஆதிரை, போர் என்றால் என்ன என்று காட்டுகிறது. தமிழில் போர் குறித்து எழுதப்பட்ட நாவல்களில் இதுவே முதன்மையானது.
  3. துறைவன்: கிறிஸ்டோபர் ஆண்டனி, முக்கூடல் வெளியீடு – கடலோர மக்களின் வாழ்க்கையைச் சொல்லும் நாவல். நாமறியாத ஒரு நிலப் பகுதியை, உணர்வுக் களத்தை நுணுக்கமான தகவல்களுடன் சொல்கிறது.
  4. குறத்தியாறு: கௌதம் சன்னா, உயிர்மை பதிப்பகம் – நாட்டார் பண்பாட்டிலிருந்து பெற்ற குறியீடுகளையும் நவீனப் புனைவு முறைமைகளையும் கலந்து எழுதப்பட்ட இந்நாவல், சமகால வரலாற்றின் ஒரு மாற்று வடிவம்.
  5. காலகண்டம்: எஸ் செந்தில்குமார், உயிர்மை பதிப்பகம் – நூற்றைம்பதாண்டு காலப்பரப்பில் கண்ணீரும் கையாலாகாத சோர்வும் கொந்தளிப்புமாக ஓடிச் செல்லும் ஆசாரிமார் சமூகத்தின் வாழ்க்கையின் சித்திரம் இந்நாவல்.
  6. ஆங்காரம்: ஏக்நாத், டிஸ்கவரி புக் பேலஸ் – தென்னகக் கிராமம் ஒன்றின் சித்தரிப்பு வழியாக ஓர் இளைஞனின் தேடலையும் தன்னைக் கண்டறியும் தருணத்தையும் சித்தரிக்கும் குறிப்பிடத்தக்க படைப்பு.
  7. ஆயிரம் சந்தோஷ இலைகள்: ஷங்கர் ராமசுப்ரமணியன், பரிதி பதிப்பகம் – படிமங்கள், உருவகங்கள் ஆகியவற்றை மெல்லக் கைவிட்டுவிட்டு, நுண்சித்தரிப்புகளாகவோ சிறிய தற்கூற்றுகளாகவோ தன் அழகியலை உருவாக்கிக் கொண்டிருக்கும் இன்றைய கவிதையின் முகம் வெளிப்படும் முக்கியமான முழுத் தொகுப்பு.
  8. மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது: குமரகுருபரன், உயிர்மை பதிப்பகம் – கவிதைக்கு எப்போதுமிருக்கும் கட்டின்மையும் பித்தும் வெளிப்படும் வரிகள் கொண்ட நவீனப் படைப்பு.
  9. ஒரு கூர்வாளின் நிழலில்: தமிழினி, காலச்சுவடு பதிப்பகம் – மறைந்த விடுதலைப் புலிப் பெண் போராளி ஒருவரின் வாழ்க்கை விவரிப்பு. இதன் நேர்மையின் அனல் காரணமாகவே பெரிதும் விவாதிக்கப்பட்டது. முக்கியமான வரலாற்றுப் பதிவு.
  10. சாமிநாதம் (உ.வே.சா.முன்னுரைகள்) : ப.சரவணன், காலச்சுவடு பதிப்பகம் – இளைய தலைமுறை தமிழறிஞர்களில் முதன்மையானவரான ப.சரவணன் தொகுத்தளித்திருக்கும் இந்நூல், அவரது முந்தைய ஆய்வுத் தொகுப்புகளைப் போலவே வரலாற்றை அறிவதற்கான ஒரு முதன்மை வழிகாட்டி.

எஸ்ரா பரிந்துரைத்தவை

  1. யந்தனின் ‘ஆறாவடு’ (தமிழினி பதிப்பகம்)ஈழத் தமிழர்களின் துயர்மிகு வாழ்வினைச் சித்தரிக்கும் சிறந்த நாவல்.
  2. முருகவேளின் ‘மிளிர்கல்’ (பொன்னுலகம் பதிப்பகம்) கண்ணகியைத் தேடும் பயணத்தின் ஊடாக ரத்தினக்கல் தேடும் வணிக சூதின் கதையைச் சொல்லும் புதிய நாவல்.
  3. நக்கீரனின் ‘காடோடி’ (அடையாளம் பதிப்பகம்) சூழலியல் அக்கறையுடன் எழுதப்பட்ட புது வகை நாவல்.
  4. லட்சுமி சரவணக்குமாரின் ‘உப்பு நாய்கள்’ (உயிர்எழுத்து பதிப்பகம்) விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையை நுட்பமாகப் பதிவு செய்த நாவல்.
  5. கீரனூர் ஜாகிர் ராஜாவின் ‘மீன்காரத் தெரு’ (மருதா பதிப்பகம்) இஸ்லாமியர்களின் வாழ்வியல் நெருக்கடிகளைப் பேசும் நாவல்.
  6. சுகுமாரனின் ‘வெலிங்டன்’ (காலச்சுவடு பதிப்பகம்) ஊட்டியின் வரலாற்றுடன் பால்ய நினைவுகளை ஒன்று கலந்து விவரிக்கும் சிறந்த நாவல்.
  7. இரா. முருகனின் ‘அரசூர் வம்சம்’ (கிழக்கு பதிப்பகம்) தலைமுறைகளின் கதையைக் கூறும் மாய யதார்த்தவாத நாவல்.
  8. தமிழ்மகனின் ‘வெட்டுப்புலி’ (உயிர்மை பதிப்பகம்) திராவிட இயக்க அரசியலை மையமாகக் கொண்ட நாவல்.
  9. யூமா. வாசுகியின் ‘ரத்த உறவு’ (தமிழினி பதிப்பகம்) குடியால் அழிந்த குடும்பத்தின் கதையைச் சொல்லும் நாவல்.
  10. பிரான்சிஸ் கிருபாவின் ‘கன்னி’ (தமிழினி பதிப்பகம்) காதலின் துயரைக் கவித்துவமாகப் பதிவு செய்த நாவல்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்

ஷோபா சக்திக்கு இயல் விருது

shobha_sakthiகண்டிவீரன் சிறுகதைத் தொகுப்புக்கு இயல் விருது என்றதும் இந்தப் பழைய பதிவைத் தேடிப் பிடித்தேன். தலைப்பு சிறுகதையை மீண்டும் படித்தேன். Enjoyable story. கட்டாயம் படியுங்கள்!

அசோகமித்ரனுக்கும் அபுனைவுக்கான விருது கொடுக்கிறார்கள். தேர்வாளர்களுக்கு வாழ்த்துக்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள், ஷோபா சக்தி பக்கம், அசோகமித்ரன் பக்கம்

ஜடாயுவின் பரிந்துரைகள்

ஜெயமோகனின் முக்கியத் தமிழ் நாவல்கள் பட்டியல் ஒரு seminal work. ஆனால் அதில் இரண்டு குறைகள் உண்டு. ஒன்று அது 2000த்துக்கு பிறகு மறுபரிசீலனை செய்யப்படவில்லை. இரண்டாவது அது ரொம்பவே நீளமானது. புதிதாக ஆரம்பிக்கும் வாசகனை பயமுறுத்தக் கூடிய சாத்தியம் உண்டு.

ஜடாயு இந்த இரண்டாவது குறையை மனதில் கொண்டு மிகச் சுருக்கமான ஒரு பட்டியலைத் தந்திருக்கிறார். அவரது வார்த்தைகளில் –

கட்டாயம் வாசித்தாக வேண்டிய 10 தமிழ் நாவல்கள் (முக்கியத்துவம், இலக்கியத்தரம், பிரதிநிதித்துவம் மூன்றையும் கருத்தில் கொண்டு)

  1. சிவகாமியின் சபதம்கல்கி
  2. பொய்த்தேவுக.நா.சு.
  3. மோகமுள்தி.ஜானகிராமன்
  4. ஒரு புளியமரத்தின் கதைசுந்தர ராமசாமி
  5. பதினெட்டாவது அட்சக்கோடுஅசோகமித்திரன்
  6. வாசவேஸ்வரம்கிருத்திகா
  7. என் பெயர் ராமசேஷன் – ஆதவன்
  8. கோபல்ல கிராமம்கி. ராஜநாராயணன்
  9. விஷ்ணுபுரம்ஜெயமோகன்
  10. தூர்வைசோ.தருமன்

ஜடாயுவின் டாப் டென்னோடு எனக்கு முழு இசைவு இல்லை என்பதையும் பதிவு செய்கிறேன். சிவகாமியின் சபதம் எல்லாம் டாப் டென் நாவல் லிஸ்டில் வரக் கூடாது. தூர்வையை நான் படித்ததில்லை, இருந்தாலும் சோ. தர்மன் டாப் டென் லிஸ்டில் வருவார் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. மற்றவை எல்லாம் என் டாப் டென்னில் வருமோ என்னவோ டாப் இருபது முப்பதிலாவது வரும்.

ஜடாயுவிடம் என் ஆட்சேபங்களைத் தெரிவித்தேன். அவர் சொன்ன பதிலையும் இங்கே பதிவு செய்கிறேன்.

எனது பட்டியலின் ஆரம்பத்திலேயே சொல்லி விட்டேன் – முக்கியத்துவம், இலக்கியத்தரம், பிரதிநிதித்துவம் மூன்றையும் கருத்தில் கொண்டு என்று.

சிவகாமியின் சபதம்: தமிழின் “சரித்திர நாவல்” என்பதற்காக. அது கல்கி நாவல் என்றான பிறகு, பொன்னியின் செல்வனை விட, இது கச்சிதமான நாவல் என்பதால் சி.சபதம்.

தூர்வை – தலித் இலக்கியம் (அப்படி ஒன்று தனியாக இல்லை என்பீர்கள், அது சரிதான், தலித் வாழ்க்கையைக் கூறூம் ஒரு படைப்பு என்று வைத்துக் கொள்ளுங்கள்) என்பதற்காக, பூமணியின் நாவல்களை விட தர்மனின் இந்த நாவல் தலித்வாழ்க்கையை அதன் முழுமையுடன் பதிவு செய்கிறது என்று நான் கருதியதால்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்

ஏப்ரஹாம் லிங்கன் உரை – Fourscore and Seven Years Ago

நேற்று எதையோ புரட்டிக் கொண்டிருந்தபோது லிங்கனின் புகழ் பெற்ற கெட்டிஸ்பர்க் உரை கண்ணில் பட்டது. லிங்கன் கெட்டிஸ்பர்க் போரில் இறந்த வீரர்களை நினைவு கூரும் உரை. பத்து வரிதான் இருக்கும் – ஆனால் எத்தனை செறிவான உரை! என் கண்ணோட்டத்தில் இது உன்னதமான இலக்கியம். “The world will little note nor long remember what we say here” என்கிறார். என் கருத்தில் காலகாலத்துக்கும் உலகம் மறக்காது; மறக்கவும் கூடாத உரை.

19th November 1863:  Abraham Lincoln, the 16th President of the United States of America, making his famous 'Gettysburg Address' speech at the dedication of the Gettysburg National Cemetery during the American Civil War. Original Artwork: Painting by Fletcher C Ransom  (Photo by Library Of Congress/Getty Images)
19th November 1863: Abraham Lincoln, the 16th President of the United States of America, making his famous ‘Gettysburg Address’ speech at the dedication of the Gettysburg National Cemetery during the American Civil War. Original Artwork: Painting by Fletcher C Ransom (Photo by Library Of Congress/Getty Images)
Fourscore and seven years ago our fathers brought forth on this continent a new nation, conceived in liberty, and dedicated to the proposition that all men are created equal.

Now we are engaged in a great civil war, testing whether that nation, or any nation so conceived and so dedicated, can long endure. We are met on a great battle-field of that war. We have come to dedicate a portion of that field as a final resting place for those who here gave their lives that the nation might live. It is altogether fitting and proper that we should do this.

But in a larger sense, we cannot dedicate – we cannot consecrate – we cannot hallow this ground. The brave men, living and dead, who struggled here, have consecrated it far above our poor power to add or detract. The world will little note nor long remember what we say here, but it can never forget what they did here. It is for us, the living, rather, to be dedicated here to the unfinished work which they have fought here, have thus far so nobly advanced. It is rather for us to be here dedicated to the great task remaining before us – that from the honored dead we take increased devotion; that we here highly resolve that these dead shall not have died in vain; that this nation, under God, shall have a new birth of freedom; and that government of the people, by the people, for the people, shall not perish from the earth.

தொகுக்கப்பட்ட பக்கம்: உரைகள்

தொடர்புடைய சுட்டி: கெட்டிஸ்பர்க் உரை பற்றிய விக்கி குறிப்பு

ராஜாஜி vs காமராஜ்

ஒரு மாறுதலுக்காக இன்றைய பதிவு புத்தகங்கள் பற்றி இல்லை.

rajajiமோனிகா ஃபெல்டனின் புத்தத்தைப் படிக்கும்போது ஏன் இத்தனை திறமை, தகுதி எல்லாம் இருந்தும் ராஜாஜியின் சாதனை என்று எதையும் குறிப்பாக சொல்ல முடியவில்லை என்று யோசித்துக் கொண்டிருந்தேன். இன்றைய தமிழகத்தின் சிற்பி என்று காமராஜைத்தான் கை காட்டுகிறோம். பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்து கணிசமான தமிழர்களின் பொருளாதாரத்தை உயர்த்தியவர் என்று எம்ஜிஆரைத்தான் அடுத்தபடியாக கை காட்ட முடிகிறது.

kamarajகூர்மையான அறிவுடையவர், காந்திக்கு அடுத்த நிலையில் இருந்த தலைவர்களில் ஒருவர். ஆனால் சுதந்திர இந்தியாவிற்கு அவரது பங்களிப்பு என்பது லைசன்ஸ்-கோட்டா-பெர்மிட்-ராஜின் மோசமான விளைவுகளைக் கணித்து நேருவுக்கு எதிராக குரல் எழுப்பியவர் என்பது மட்டுமே. அவரல்லவா தமிழகத்தைக் கட்டி எழுப்பி இருக்க வேண்டும்?

அவருக்கு கிடைத்த நேரம் மிகக் குறைவு என்பது உண்மைதான். 4 வருஷம் முதல்வராக இருந்தாலும் இரண்டு வருஷத்துக்கு மேல் ஒரு முறையும் நீடிக்க முடிந்ததில்லை. ஆனால் அது மட்டுமே காரணம் இல்லை என்று எனக்குத் தோன்றுகிறது.

எனக்குத் தெரியும் காரணம் அவர் மக்களின் தலைவரல்ல என்பதுதான். காந்தியும் நேருவும் சுபாஷும் மக்கள் தலைவர்கள். படேல் கட்சியின் தலைவர். ஆசாத் தேசியவாத முஸ்லிம்களின் பிரதிநிதி. காமராஜ் போன்ற பலரும் பிராந்தியத் தலைவர்கள். ராஜாஜி யாரையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. மக்களின் மன ஓட்டம் என்ன, பொதுவான எண்ணத்திலிருந்து தான் வேறுபடும்போது மக்களின் எண்ணங்களை மாற்ற வேண்டும் என்பது அவருக்கு ஒரு பெரிய விஷயமாகத் தெரியவில்லை என்று நினைக்கிறேன். அப்படி விடாமல் மாற்ற முயற்சித்ததுதான் காந்தியை என்றும் உதாரணமாக நிற்கும் தலைவராக்குகிறது.

Infamous ‘குலக்கல்வி’ திட்டத்தை எடுத்துக் கொள்வோம். அனைவருக்கும் கல்வி என்ற குறிக்கோள் அரசியல் சட்டத்திலேயே எழுதப்பட்டுவிட்டது. தேவையான அளவு பள்ளிகளை நடத்த பணம் இல்லை. என்ன செய்வது? இருக்கும் பணத்தில் பள்ளிகளை இன்னும் திறமையாக நடத்த பகுதி நேரப் பள்ளிகள் என்று ஒரு திட்டத்தைக் கொண்டு வருகிறார். இது ஒரு bean-counting accountant-இன் தீர்வு. மேலோட்டமாகப் பார்த்தால் பள்ளிகளின் efficiency, capacity-ஐ கிட்டத்தட்ட இரட்டிப்பாக்கிறது. ஆனால் பிரச்சினை இருக்கும் பள்ளிகளின் capacity மட்டும்தானா? அன்று பள்ளிகளில் இடம் இல்லை என்று மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனரா? எனக்கு நிச்சயமாகத் தெரியாது, ஆனால் அப்படி இருக்காது என்றுதான் தோன்றுகிறது. என் அப்பா அறுபதுகளிலிருந்து கிராமங்களில் பள்ளித் தலைமை ஆசிரியராக இருந்தவர். ராஜாஜி காலத்தில் முடியுமோ என்னவோ, என் அப்பா தலைமை ஆசிரியராக இருந்த காலத்தில் பள்ளியில் இடம் இல்லை என்று யாரையும் திருப்பி அனுப்ப முடியாது.

காமராஜ் அதே பிரச்சினையை எப்படி அணுகுகிறார்? முதலில் சிறுவர்கள் பள்ளிக்கு வந்தால் வேலை செய்ய முடியாது, வேலை செய்யாவிட்டால் சோறு கிடையாது என்ற நிலையை மாற்றுகிறார். கிராமங்களில் அது எத்தனை பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்பது அந்த வயதில் எனக்கு புரியவில்லை, ஆனால் நேரில் பார்த்திருக்கிறேன். மதிய உணவுக்காக மட்டுமே பள்ளிக்கு வந்து, மற்ற நேரங்களில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த, கால்பந்து விளையாட்டில் சூரனான, மாட்டைப் பிடிக்கப் ரோடைத் தாண்டும்போது பஸ்ஸில் அடிபட்டு இறந்து போன நல்ல நண்பனான தனுசை (தனுஷ் அல்ல) நினைவு கூர்கிறேன். சனி ஞாயிறுகளில் மதிய உணவு இல்லாமல் அவன் சோர்ந்து கிடப்பதைப் பார்த்திருக்கிறேன்.

இரண்டாவதாக கிராமம் கிராமமாக பள்ளிகளைத் திறக்கிறார். பள்ளிகள் அதிகரிக்க அதிகரிக்க பள்ளி ஆசிரியர்களுக்கான தேவை அதிகமாக இருந்தது. ஒரு தலைமுறையே பள்ளி ஆசிரியராக வேலைக்கு சேர்ந்து தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொண்டதை நானே பார்த்திருக்கிறேன்.

காமராஜ் ஆட்சியில் மட்டும் பள்ளிகளை உருவாக்க, பிள்ளைகளுக்கு மதிய உணவு வழங்க ஆசிரியர்களுக்கு சம்பளம் தர பணம் எங்கிருந்து வருகிறது? முதலில் அவர் பட்ஜெட்டை மட்டும் பார்க்கவில்லை. எதிர்காலத்தைப் பார்க்கிறார். இதுதான் முக்கியம் என்று உறுதியாக இருக்கிறார். கிராமம் கிராமமாகச் சென்று ஊர்ப் பணக்காரர்களிடம் உதவி பெற்று பள்ளிகளை நிறுவுகிறார். நெ.து. சுந்தரவடிவேலு கிட்டத்தட்ட பிச்சையே எடுத்தார் என்று ஜெயமோகன் சொல்வதுண்டு.

ராஜாஜிக்கு இருந்த படிப்பு, அறிவு, நெட்வொர்க் எதுவும் காமராஜிடம் இல்லை. ஆனால் அவரால்தான் தமிழகத்தை மாற்ற முடிந்திருக்கிறது. ஏன்? ரொம்ப சிம்பிள். காமராஜ் தலைவர். ராஜாஜி நிர்வாகி.


பின்குறிப்பு 1: ‘குலக்கல்வி திட்டம்’ என்று இன்று பரவலாக அறியப்படும் திட்டத்துக்கும் குலத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது குலக்கல்வி திட்டமே அல்ல. பகுதி நேரப் பள்ளித் திட்டம். ஆனால் அது அபிராமணர்களால் சந்தேகத்துடன் பார்க்கப்பட்டது. அந்த சந்தேகங்களைத் தீர்த்து வைக்க ராஜாஜி எந்த முயற்சியும் செய்ததாகத் தெரியவில்லை. மாறாக மிச்ச நேரத்தில் அப்பாவுக்கு தொழிலில் உதவியாக இருக்கலாம் என்று சொன்னது சந்தேகத்தை அதிகப்படுத்தத்தான் செய்யும்.

பின்குறிப்பு 2: 42-இல் காங்கிரஸிலிருந்து விலகி நின்றது ராஜாஜியை தமிழகத்தில் மிகவும் பலவீனப்படுத்திவிட்டது, அவர் டெல்லிக்கு மட்டுமே தமிழகத்தின் தலைவராகத் தெரிந்தார், தமிழகத்தில் காங்கிரஸ் காமராஜ் பின்னால்தான் நின்றது. இன்று சோனியா காந்தி டெல்லியிலிருந்து கொண்டு இளங்கோவனை காங்கிரஸ் தலைவராக நியமனம் செய்வதைப் போலத்தான் ராஜாஜி 52-இல் நேருவின் மூலம் முதல்வராக வந்தார். ஏன், 37-இல் கூட சத்தியமூர்த்திதான் முதல்வராக வர வேண்டும் என்று காங்கிரஸ் தொண்டர்கள் விரும்பினார்கள், காந்திதான் இவரைத் திணித்தார் என்று சாண்டில்யன் சொல்லி இருக்கிறார்.

பின்குறிப்பு 3: காங்கிரசில் செல்வாக்காக இருந்த காலத்தில் கூட ராஜாஜி காங்கிரஸ் தலைவரானதில்லை. அவரைத் தலைவராக்க வேண்டும் என்று காந்தி கூட முயன்றதில்லை. அவருடைய support base எப்போதுமே கொஞ்சம் பலவீனமானதுதான்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய சுட்டிகள்:
ராஜாஜி – ஒரு மதிப்பீடு: விடுதலைக்கு முன், விடுதலைக்குப் பின்
காமராஜ் – ஒரு மதிப்பீடு
மோனிகா ஃபெல்டனின் புத்தகம் – I Meet Rajaji

தமிழில் அறிவியல் கட்டுரை – ஜடாயுவுக்கு ஒரு ஜே!

தமிழில் செறிவுள்ள அறிவியல் கட்டுரைகள் வருவது அபூர்வம். கிராம நூலகங்களை நம்பி வளர்ந்த எனக்குத் தெரிந்து அந்தக் காலத்தில் ‘கல்வி’ கோபாலகிருஷ்ணன், பெ.நா. அப்புசாமி, ஏ.என். சிவராமன் மூவரைத் தவிர வேறு யாரும் எழுதியதில்லை. ‘கல்வி’ கோபாலகிருஷ்ணன் குழந்தைகளைக் கவர வேண்டுமென்று ரொம்பவே simplify செய்துவிடுவார். ஏ.என். சிவராமன் எழுதியத் அமெரிக்க விண்வெளி (நாசா) பயணங்களைப் பற்றி – அதில் அறிவியல் மிகவும் கம்மி, விண்வெளி வீரர்களைப் பற்றித்தான் எழுதி இருந்தார். பெ.நா. அப்புசாமி அப்போதெல்லாம் முழுதாகப் புரிந்ததில்லை, ஆனால் ஆர்வத்தை உருவாக்கியவர் அவர்தான்.

என் பதின்ம வயதுகளில் சுஜாதா புகுந்து விளையாடினார். ஆனால் வெகு விரைவிலேயே காலாவதி ஆகிவிட்டார்.

இப்போதெல்லாம் நல்ல அறிவியல் கட்டுரைகள் வேண்டுமென்றால் சொல்வனம் இணைய இதழைப் படிக்கலாம். அதன் ஆசிரியர் குழுவுக்கு ஒரு ஜே! நண்பர்கள் ராஜ் சந்திரா உட்பட பலரும் செறிவாக எழுதி வருகிறார்கள். அதுவும் தற்போதைய இதழில் ஜடாயு எழுதி இருக்கும் கட்டுரை குறிப்பிட வேண்டியது. மூரின் விதியைப் பற்றி மிகச் சிறப்பான விளக்கம். கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்

தொடர்புடைய சுட்டி: ஜடாயுவின் கட்டுரை