சேதன் பகத்

chetan_bhagatபகத் இன்றைக்கு இந்தியாவில் ஒரு சூப்பர்ஸ்டார். அவருடைய கதைகள் எனக்கு மசாலா படங்களை நினைவுபடுத்துகின்றன. என்ன நடக்கும் என்பது தெரிந்ததுதான், இருந்தாலும் படிக்க முடியும், சில சமயம் ஜாலியாகப் போனாலும் எழுத்தில், நடையில் தெரியும் அமெச்சூர்தனம் எரிச்சல்படுத்துகிறது.

அவருடைய கதைகளில் வர்ணனை, விவரிப்பு எதுவுமிருக்காது. எல்லாம் நேரடியான பேச்சு, எண்ணம்தான். அவருடைய மார்க்கெட் இன்றைய இளைஞர்கள்தான். அவர்கள் நேரடியாக அனுபவிக்கும் மன அழுத்தம் – பரீட்சைகளுக்கு தயார் செய்து கொள்வதாகட்டும், கல்லூரிப் படிப்பாகட்டும், ஆண்-பெண் ஈர்ப்பாகட்டும், படித்துவிட்டு செட்டில் ஆகாமல் உழன்று கொண்டிருப்பதாகட்டும் – இந்தக் கதைகளில் நிறைய வருகிறது. இளைஞர்கள் தட்டையான ஸ்டீரியோடைப்பிங்கையும் மீறி அந்தக் கதைகளில் தங்களையே காண்கிறார்கள் என்று நினைக்கிறேன். அறிவுரைகளை கதையில் மறைமுகமாகப் புகுத்தி அடிக்கிறார்.

ஒப்பீட்டுக்காக பாலகுமாரனை எடுத்துக் கொள்ளலாம். பாலகுமாரன் நேரடியாக அறிவுரையாகப் பொழிந்து தள்ளுகிறார், ஆனால் புத்தகங்கள் நன்றாக விற்கின்றனவாம். அந்த மாதிரி அறிவுரைகளுக்கு இன்று மவுசு இருக்கிறது. இந்த இளைஞர்களின் மார்க்கெட்தான் இவரது வெற்றிக்குக் காரணம் என்று தோன்றுகிறது. சுமாரான வணிக எழுத்து என்றுதான் வகைப்படுத்துவேன். எப்படியோ ஹிட்டாகிவிட்டார்.

ஒரே ஒரு புத்தகம் படிக்க வேண்டுமென்றால் நான் பரிந்துரைப்பது 2 States (2009). இந்த மாதிரி ஒரு நல்ல மசாலா புத்தகத்தைப் படித்து நாளாயிற்று. பஞ்சாபி காதலன், தமிழ் பொண்ணு, அதுவும் மயிலாப்பூர் ஐயர் பொண்ணு, மற்றும் ஸ்டீரியோடைப் பாத்திரங்களை வைத்து கலக்கி இருக்கிறார். நல்ல பொழுதுபோக்கு நாவல். ஆனாலும் தொண்ணூறுகளில் மயிலாப்பூர் ஐயர் குடும்பங்கள் தினமும் வாழை இலையில் சாப்பிடுவது கொஞ்சம் ஓவர். 🙂 பெண்ணும் பையனும் மட்டும் மாடர்ன். ஜாலியாகப் போகிறது. திரைப்படமாகவும் வந்திருக்கிறது.

Five Point Someone (2004) பெரும் வெற்றி பெற்ற புத்தகம். நான் ஐஐடியில் எம்டெக் படித்தவன், அதனால் இதில் நிறைய மிகைப்படுத்தல் இருப்பது தெரிகிறது. அப்படி மூச்சு விடாமல் எல்லாம் நானும் என் நண்பர்களும் படிக்கவில்லை ஆனால் நாங்கள் எல்லாம் நைன் பாயிண்டர்கள்தான். ஐஐடியில் உள்ளே நுழைவதுதான் கஷ்டம், உள்ளே வெற்றி பெற பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை. டைம் பாஸ் புத்தகம் என்பதற்கு மேல் பெரிதாக ஒன்றும் சொல்வதற்கில்லை. எப்படியோ ஹிட் ஆகிவிட்டது, அவ்வளவுதான். சில காட்சிகளை 3 Idiots திரைப்படத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

One Night at the Call Center (2005) புத்தகம் எல்லாம் பயணத்தில் படித்து தூக்கிப் போட்டுவிட வேண்டியவைதான். ஆனால் கடவுள் செல் ஃபோனில் அழைத்துப் பேசும் காட்சி எனக்கு பிடித்திருந்தது.

3 Mistakes of My Life (2008) Kai Po Che சரளமாகப் போகும் வணிக நாவல். குஜராத்தின் ஹிந்துத்துவம் அதிகரித்து வந்து காலத்தில், கலவரங்களின் பின்னணியில் மூன்று நண்பர்களைப் பற்றிய நாவல்.

Revolution 2020-தான் (2011) அவர் எழுதியதில் மிக மோசமானது என்று நினைக்கிறேன். காதல் முக்கோணம், ஊழல் அரசியல்வாதிகளோடு சேர்ந்து வெற்றி பெறும் இளைஞன் லட்சியவாதிக்காக விட்டுக் கொடுப்பது என்று போகிறது.

Half Girlfriend (2014) இன்னொரு மசாலா புத்தகம். பணக்கார, நாகரீகப் பெண், அந்தஸ்துள்ள, ஆனால் ஏழை பீஹார் ஆண் இருவருக்கும் காதல்.

One Indian Girl (2016) எல்லாம் இந்துமதி இன்று ஒரு நாவல் எழுதினால் எப்படி இருக்குமோ அந்த மாதிரி இருக்கிறது. இவர் எப்படி பிரபலம் ஆனார் என்றுதான் பாதி நேரம் யோசித்துக் கொண்டிருந்தேன்.

What Young India Wants (2012), Making India Awesome (2015) எல்லாம் வழக்கமான நாடு முன்னேற வேண்டும் புலம்பல்கள்.

ஒரே ஒரு புத்தகம் படிக்க வேண்டுமென்றால் நான் பரிந்துரைப்பது 2 States. மிச்சவற்றையும் படிக்கலாம், ஆனால் பொழுதுபோக்கு வணிக நாவல்கள் மட்டுமே.

தொகுக்கப்பட்ட பக்கம்: இந்தியப் புனைவுகள்

பெர்னார்ட் கார்ன்வெல்லின் ஆர்தர் நாவல்கள்

bernard_cornwellகார்ன்வெல்லின் நாவல்களுக்கு நான் பரம ரசிகன் ஆகிவிட்டேன். வணிக நாவல்கள்தான். Subtlety என்ற பேச்சே கிடையாது. நேரடியாக சொல்லப்படும் சாகசக் கதைகள்தான். ஆனால் ஏதோ ஒன்று – நம்பகத்தன்மையா, சுவாரசியமா, இன்று இல்லாத வேறொரு உலகமா – அவற்றை இலக்கியத்துக்கு அருகே கொண்டு செல்கின்றன. இத்தனைக்கும் இந்தியப் பின்புலம் உள்ள சில கதைகளில் அவரது ஆராய்ச்சியின் குறைபாடுகள் தெரிகின்றன, அவரே சில முன்/பின்னுரைகளில் சரித்திரத்தை என் வசதிக்காக மாற்றிக் கொண்டேன் என்று ஒத்துக் கொள்கிறார். ஆனாலும் அவர் காட்டும் உலகம் – போர் வீரர்களின் உலகம் – இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்று நம்மை நினைக்க வைக்கிறது.

king_arthur_and_the_round_tableஆர்தர் நாவல்களின் பின்புலம் சரித்திரம் இல்லை. தொன்மம். ஆர்தர் என்று ஒரு அரசன் இருந்ததற்கு சரித்திர ஆதாரங்கள் இல்லை. ஆனாலும் ராமனும் கிருஷ்ணனும் தெய்வங்களாக்கப்பட்ட நிஜ மனிதர்கள் என்று நம்புவதற்கு இருக்கும் சாத்தியக் கூறுகளைப் போலத்தான் ஆர்தரும் தொன்மமாகிவிட்ட நிஜ மனிதன் என்றுதான் அனேகர் நினைக்கிறார்கள்.

ஆர்தர் நாவல்களின் இன்னொரு சுவாரசியம் இவை அந்தத் தொன்மத்தை மறுவாசிப்பு செய்வதுதான். உதாரணமாக தொன்மங்களில் வரும் லான்சிலாட் மாவீரன், உன்னத மனிதன். இதில் வரும் லான்சிலாட் ‘சூதர்களிடம்’ பணம் கொடுத்து தன் வீர சாகசங்களைப் பற்றி கதைகளைப் பரப்புகிறான், போர் என்று வந்தால் ஓடிவிடுகிறான்!

மிகச் சுருக்கமாக ஆர்தர் தொன்மம் – ஆர்தர் தான் இளவரசன் என்று தெரியாமல் வளர்க்கப்படுகிறான். உண்மையான இளவரசன் மட்டுமே எடுக்கக் கூடிய, வேறு யாராலும் உருவ முடியாத, பாறையில் செருகி இருக்கும் வாளை உருவி இங்கிலாந்தின் அரசனாகிறான். கினிவரை மணக்கிறான். அவனுக்கு ‘ராஜகுருவாக’ மந்திரவாதி மெர்லின். லட்சிய வீரர்களை தனது Round Table-இல் அணிவகுக்க வைக்கிறான். அவர்கள் கொடியவர்களை எதிர்க்கிறார்கள். ஏசுவின் ரத்தம் சேகரிக்கப்பட்ட கோப்பையான Holy Grail-ஐத் தேடி அலைகிறார்கள். ஆனால் லான்சிலாட்-கினிவருக்கு தொடர்பு ஏற்படுகிறது. உறவினனான மார்ட்ரெட் ஆர்தரை எதிர்த்துப் போரிடுகிறான். ஆர்தர் இறக்கவில்லை என்றும் அவலான் என்ற தீவில் உறங்குவதாகவும் இங்கிலாந்துக்கு அபாயம் ஏற்பட்டால் மீண்டு வந்து போரிடுவான் என்றும் சொல்லப்படுகிறது.

இந்தக் கதைகளிலோ ஆர்தர் கிறிஸ்துவனே அல்ல. Holy Grail ஆங்கிலேயர்களின் தொல்மதத்தின் கடவுள் ஒருவர் கொடுத்தப் புனிதப் பொருள், ஏசுவுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்தத் தொல்மதத்துக்கும் கிறிஸ்துவ மதத்துக்கும் தகராறு. கிறிஸ்துவர்கள் அந்தத் தொல்மதத்தை அழிக்க வேண்டும், எல்லாரையும் கிறிஸ்துவர்களாக்க வேண்டும் என்று இடைவிடாமல் போராடிக் கொண்டே இருக்கிறார்கள். தொல்மதத்தினர் நீ யாரை வேண்டுமானாலும் கும்பிடு, எல்லா மதங்களுக்கும் இடம் உண்டு என்று நினைக்கிறார்கள். மெர்லின், அவனது சிஷ்யை நிம்யூ இருவரும் புனிதப் பொருள்களை எல்லாம் ஒன்று சேர்த்து சடங்குகளை செய்தால் தொல்மதக் கடவுள்கள் மீண்டு வந்து இங்கிலாந்தை சொர்க்கபுரி ஆக்குவார்கள் என்று நம்புகிறார்கள்.

இந்தக் கதைகளில் வரும் ஆர்தர் ‘பிரிட்டிஷ்காரன்’. இன்றைய தென் இங்கிலாந்து பகுதிகளில் ஒரு அரசை நிர்வாகிக்கிறான். அவனுடைய எதிரி சாக்சன்கள். கிழக்கு இங்கிலாந்து பகுதிகளில் வாழ்பவர்கள். பிரிட்டிஷ் அரசுகளை ஒன்றிணைத்து சாக்சன்களை எதிர்க்க முயற்சிக்கிறான்.

ஆர்தர் முந்தைய அரசன் ஊதர் பெண்ட்ராகனுக்கு முறையான வழியில் பிறக்காத மகன். கதையில் ஆரம்பத்தில் அவன் நேர்வழி வாரிசு மார்ட்ரெடுக்கு பாதுகாவலனாக பொறுப்பேற்கிறான். ஆர்தருக்கு அரசாளும் ஆசையே இல்லை. மாவீரனாக இருந்தாலும் அவன் கனவு எல்லாம் அரசு பொறுப்புகளை உதறிவிட்டு தானுண்டு தன் நிலமுண்டு, அதில் விவசாயம் செய்து வாழ்வோம் என்பதுதான். ஆனால் அவன் காலம் எல்லாம் சாக்சன்கள், பிரிட்டிஷ் எதிர்களை சமாளிப்பதிலேயேதான் செல்கிறது. அரசு என்பது மக்களுக்காக என்று நினைக்கும் அபூர்வப் பிறவியாக இருக்கிறான், வலிமையானவனுக்குத்தான் நீதி என்றூ இருக்கக் கூடாது என்பதை முடிந்தவரை அமுல்படுத்துகிறான்.

கதை டெர்வல் என்ற வீரனின் கண்ணோட்டத்தில் சொல்லப்படுகிறது. புனித டெர்வல் என்று கிறிஸ்துவ மதத்தில் ஒரு புனிதர் உண்டு, அவர்தான் இவர்.

கதையின் பெரிய பலம் கதாபாத்திரங்களின் சித்தரிப்பு. டெர்வல், டெர்வலின் காதலி, ஆர்தரின் நம்பிக்கையான வீரர்கள், கினிவர், மெர்லின் என்று பலரும் மிகச் சிறப்பான பாத்திரங்கள். பொன்னியின் செல்வனின் பாத்திரங்களோடு ஒப்பிடக் கூடிய தரத்தில் இருக்கின்றன.

shield_wallஇரண்டாவதாக போர்களின் சித்தரிப்பு. கேடயச் சுவர் (shield wall) உத்தி விவரிக்கப்படுவதை குறிப்பாகச் சொல்ல வேண்டும். பல போர்களைச் சொல்லலாம் என்றாலும் முதல் நாவலான Winter King (1995)-இன் இறுதியில் வரும் லுக் பள்ளத்த்தாக்குப் போரைக் குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.

மூன்றாவதாக அன்றைய வாழ்க்கையின் சித்தரிப்பு. உதாரணமாக என்னதான் போர் என்றாலும் அறுவடைக்காலத்தில் போரிட முடியாது, வீரர்கள் எல்லாம் வயலுக்குப் போய்விடுவார்கள்.

ஹிந்துத்துவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டும். எப்படி அன்றைய கிறிஸ்துவ மதம் மற்ற மதங்களை அழித்தது என்பது விவரிக்கப்படும் பகுதிகள் அவர்கள் கட்டாயமாக ரசிப்பார்கள்.

மூன்று புத்தகங்கள் வந்திருக்கின்றன. Winter King (1995), Enemy of God (1996), Excalibur (1998)

மறுவாசிப்பு என்றால் பெரிய கேள்விகள் எழுப்பப்பட வேண்டும் என்பதெல்லாம் இல்லாமல் சுவாரசியம், நம்பகத்தன்மை, வாழ்க்கை முறையைக் காட்டுவது என்பதோடு நிறுத்திக் கொள்கிறார். அதுவே பிரமாதமாகத்தான் இருக்கிறது. படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பெர்னார்ட் கார்ன்வெல் பக்கம்

ஆகஸ்ட் 15, 1947 – கே.எம். முன்ஷியின் கட்டுரை

k_m_munshiமுதல் சுதந்திர தினத்தன்று கே.எம். முன்ஷி எழுதிய நல்ல கட்டுரை. காந்தியின் காலம் முடிந்துவிட்டது, இது நேருவின் காலம் என்கிறார். நேருவையும் படேலையும் பற்றி அவர் சொல்வது:

The partnership of Panditjl and Sardar is a novel phenomenon in world politics Two men of the highest calibre and yet of the most contrary temperament and outlook—one elegant, handsome, courteous, fond of social graces, fascinated with distant values; the other: old, stocky, mysteriously silent, his feet firmly planted on earth—both are gathered in an unbreakable bond of mutual understanding by Gandhian influence. This seems to be the greatest piece of good luck for Independent India.

கட்டுரையை விட அங்கங்கே வரும் வரிகள் மிக சுவாரசியமானவை. முன்ஷியை காங்கிரசை விட்டு விலகும்படி காந்தியே சொல்லி இருக்கிறார். (ஆனால் மூன்று நாலு வருஷம் கழித்து காந்தியே மீண்டும் காங்கிரசில் சேரும்படியும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.) அரசியல் நிர்ணய சபைதான் 1947-இல் இருந்திருக்கிறது, அதன் தலைவர் ராஜேந்திர பிரசாத். ஏதாவது பிரச்சினை வந்தால் பிரசாதிடம் விட்டுவிடுங்கள், அவர் பார்த்துக் கொள்வார் என்று உறுப்பினர்கள் நினைத்தார்களாம். அதை அவர் விவரிப்பது –

The Assembly is always in “Leave It to PSmith” sort of mood—to use the phrase of P. G. Wodehouse.

1947-இல் உட்ஹவுஸ் இந்தியாவில் பிரபலமாக இருந்திருக்கிறார்! இப்படிப்பட்ட மேற்கோள் ஹிந்து வாசகர்களுக்கு சுலபமாகப் புரிந்திருக்கும்!

கட்டுரைக்கு கீழே சில விளம்பரங்கள் இருக்கின்றன – பென் ஹர் திரைப்படம், ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி திரைப்படம், நாம் இருவர் திரைப்படம், ரேவதி ரோடரி டூப்ளிகேடர் (அது என்ன ரோடரி டூப்ளிகேடர்?), பெல்ஜியன் சிக்கரி! இதில் நாம் இருவர் திரைப்படத்தின் பேர் ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது (We Two!)

கே.எம். முன்ஷி குஜராத்தியர். சுதந்திரப் போராட்ட வீரர். ஐம்பதுகளில் மத்திய அமைச்சராக, கவர்னராக இருந்தவர். பிறகு ராஜாஜியோடு இணைந்து சுதந்திரா கட்சியை நிறுவியர்களில் ஒருவர். பிறகு ஜனசங் கட்சியில் இணைந்தார். கிருஷ்ணாவதாரா என்று மஹாபாரதப் பின்னணியில் ஒரு பெரிய சீரிசை எழுதி இருக்கிறார். (மகாபாரதப் பித்து உள்ள என்னாலேயே தாங்க முடியவில்லை.) பாரதீய வித்யாபவனை நிறுவியவர்.

தொகுக்கப்பட்ட பக்கம்: வரலாறு

கணேஷ்-வசந்த்: ப்ரியா

sujathaசின்ன வயதில் குமுதத்தில் ப்ரியாவைத் தொடர்கதையாக படித்த நினைவிருக்கிறது. எத்தனை வில்லன் வந்தாலும் அடித்து நொறுக்கும் எம்ஜிஆர், ஜெய்ஷங்கர் மாதிரி ஹீரோக்களைத்தான் அப்போதெல்லாம் தெரியும். கணேஷ் வில்லன்களை திருப்பி அடித்தாலும் நாலு வில்லன் இருந்தால் அல்லது பலமான வில்லன் இருந்தால் தோற்பார். அப்போது அது ஒரு பெரிய கண்திறப்பாக இருந்தது. சின்னச் சின்ன உத்திகள் – துணை ஹீரோ பரத்திடம் ‘தொலைபேசி எண்ணை மனனம் செய்து கொள்ளப் பார்’ என்று தூய தமிழில் பேசுவது, விமானத்தின் ஒலியை அடையாளம் காண்பது என்பதெல்லாம் அட! போட வைத்தன. அதுதான் முதன்முதலாக முழுமையாகப் படித்த சாகசக் கதையாக இருக்கும் என்று நினைக்கிறேன். எம்ஜிஆருக்கும் ஜெய்ஷங்கருக்கும் மேம்பட்ட சாகசக் கதைகள் உண்டு என்று புரிந்து கொண்டதுதான் அன்று முக்கியமான takeaway.

இந்த நாவலில் கணேஷின் சாகசங்கள் என்று ஒன்றும் பெரிதாகக் கிடையாது. வாசகர்களைப் போலவே அவரும் திருப்பங்களில் திடுக்கிடுவார், அவருக்கும் என்ன நடக்கிறது என்று முக்கால்வாசி நேரம் புரியாது, இரண்டு மூன்று இடங்களை விட்டுவிட்டால் ஏறக்குறைய சராசரி மனிதர்தான். கதையின் முக்கியத் துப்பறியும் நிபுணர் ஸ்காட்லாண்ட் யார்டின் ரோவன்தான்.

Police procedural என்று ஒரு sub-genre உண்டு. காவல்துறை ஒரு குற்றத்தை எப்படி அணுகும், எப்படி தீர்வு காணும் என்பதை விவரிக்கும் genre. இதை முழு police procedural என்று சொல்ல முடியாவிட்டாலும் அரை police procedural என்றாவது சொல்லலாம். வில்லன்களோடு சண்டை போடுவது வேறு, துப்பறிவது வேறு என்று புரிய வைத்த நாவல்.

திடுக்கிடும் திருப்பங்கள் அவ்வப்போது வந்தாலும், நம்ப முடியாத முடிச்சுகளை அங்கங்கே போட்டாலும் கதை வாழ்க்கைக்கு கொஞ்சமாவது அருகே இருக்கிறது. சுஜாதாவின் டச்கள் அங்கங்கே தெரிகின்றன. இன்று படிக்கும்போது பெரிதாகத் தெரியாவிட்டாலும் அன்றைய நிலைக்கு கொஞ்சமாவது கிளுகிளுப்பாக இருந்திருக்கும். அன்றைய குமுதம் லெவல், ஜெயராஜ் படங்கள் என்று நன்றாகத் தெரிகிறது.

ப்ரியா தமிழ் கூறும் நல்லுலகில் உலக மகா ஹிட். அதனால் கதைச் சுருக்கத்தை மிகச் சுருக்கமாகச் சொல்லிவிடலாம். தமிழ் நடிகை ப்ரியாவைக் கட்டுப்படுத்தும் கணவன் ஜனார்த்தனன்; காதலன் பரத். அவள் லண்டனின் படப்பிடிப்புக்கு செல்லும்போது பாதுகாப்புக்கு கூடச் செல்லும் கணேஷ். இவர்களை எல்லாம் மீறி ப்ரியா லண்டனில் கடத்தப்படுகிறாள். அவளை மீட்கும் இங்கிலாந்து போலீஸ், உதவி செய்யும் கணேஷ்.

பின்னால் இதை ரஜினிகாந்துக்காக மாற்றி திரைப்படமாகவும் வந்தது. பாடல்கள் மட்டும்தான் இன்னும் நிற்கின்றன. ஆனால் திரைப்படம் வெளிவந்தபோது எங்கள் நண்பர் குழுவுக்கு நீச்சலுடை ஸ்ரீதேவி முக்கியமான அம்சம்.

ஜெயமோகன் இதை தன் வணிக நாவல் பட்டியலில் சேர்க்கிறார். என் கண்ணில் அவ்வளவு நல்ல வணிக நாவல் அல்ல. கொஞ்சம் போர்தான். ஆனால் அந்த காலகட்டத்துக்கு இதன் ஓரளவாது உண்மையான சித்தரிப்புகள் பெரிய மாற்றமாக இருந்திருக்கும். சங்கர்லால் நாவல்களோடு ஒப்பிட்டால் மலைக்கும் மடுவுக்கும் நடுவே உள்ள வித்தியாசம் தெரியும்.

கணேஷ்-வசந்த் ரசிகர்கள், தமிழின் வணிக நாவல்கள் எப்படி பரிணமித்திருக்கின்றன என்று புரிந்து கொள்ள விரும்புவர்களுக்கு மட்டும்தான்.

தொகுக்கப்பட்ட பக்கம்: கணேஷ்-வசந்த் நாவல்கள்

தொடர்புடைய சுட்டி: ப்ரியா திரைப்படம் பற்றி சுஜாதா நினைவு கூர்கிறார்

முதல் அணுகுண்டு

hiroshima

சரியாக 71 ஆண்டுகளுக்கு முன்னால் – ஆகஸ்ட் 6, 1945 அன்று – ஹிரோஷிமாவில் அணுகுண்டு வெடித்தது. மனிதனே இதை விட பெரிய அழிவை விளைத்ததில்லை. அந்த அழிவைப் பற்றி ஒரு வருஷம் கழித்து – 1946இல் – நியூ யார்க்கர் பத்திரிகையில் வெளிவந்த ஒரு கட்டுரை. படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: வரலாறு