தமிழறிஞர் வரிசை: 15. மு. ராகவையங்கார்

ராகவையங்காரின் புத்தகங்கள் சிலவற்றை படிக்க முயற்சித்தேன், ஆனால் பாதியிலேயே நிறுத்திவிட்டேன். அவர் பண்டிதர் என்பது தெளிவாகத் தெரிகிறது. அவர் எழுதியதும் பண்டிதர்களுக்காகவே, என் போன்ற சாதாரணர்களுக்காக இல்லை.

வேளிர் வரலாறு என்ற புத்தகத்தில் தமிழகத்தின் குறுநில மன்னர்களான வேளிர்கள் துவாரகையிலிருந்து குடிபெயர்ந்த யாதவர்கள் என்ற கருத்தை முன்வைக்கிறார். நச்சினார்க்கினியரின் ஒரு வாக்கியத்திலிருந்து இந்தக் கருத்தைப் பெற்றுக் கொண்டு அதை பெரிதாக விவரிக்கிறார். தொன்மத்துக்கும் சரித்திரத்துக்கும் உள்ள வேறுபாட்டை அவர் புரிந்து கொள்ளவில்லையோ என்று தோன்றியது.

சேரன் செங்குட்டுவன் என்ற புத்தகம் அவரது வீச்சைக் காட்டுகிறது செங்குட்டுவனைப் பற்றி சங்க இலக்கியங்களில், சிலப்பதிகாரத்தில் எல்லாம் வருவதை வைத்து அவனது வரலாற்றை எழுதி இருக்கிறார். ஆனால் கண்ணகி சொர்க்கத்துக்கு போன கதை எல்லாம் வருகிறது. தொன்மத்துக்கும் வரலாற்றுக்கும் உள்ள வேறுபாட்டை அவர் புரிந்து கொள்ளவில்லையோ என்ற சந்தேகம் வலுப்பட்டது.

தமிழரும் ஆந்திரரும் என்ற புத்தகம் தமிழர்-ஆந்திரர் உறவை விவரிக்கிறது. தொல்காப்பியமே வடுக மொழியைக் குறிப்பிடுகிறதாம்.

மு. ராகவையங்காரின் எழுத்துக்கள் 2009-இல் நாட்டுடமை ஆக்கப்பட்டன. அப்போது மறைந்த சேதுராமன் எழுதிய குறிப்பையும் ஓப்பன் ரீடிங் ரூம் ரமேஷ் சக்ரபாணி மூலம் கிடைத்த – அஜயன் பாலா எழுதிய – அறிமுகக் குறிப்பையும், ராகவையங்கார் பற்றி அவரது கொள்ளுப்பேரனான முரளிதரன் எழுதிய விக்கி குறிப்பையும் இணைத்து எழுதப்பட்ட பதிவு இது.

மு. ராகவையங்கார் பிறப்பு: 26-07-1878, மறைவு: 02-02-1960

mu_raghavaiyangarமு. ராகவையங்கார் 1878 ஜூலை மாதம் 26 தேதி ராமநாதபுரத்தில் பிறந்தவர். தந்தையார் சதாவதானம் முத்துஸ்வாமி அய்யங்கார் என்ற தமிழ்ப் புலவர். பிறந்த சில நாட்களில் தந்தையை இழந்தார். வி. கனகசபை பிள்ளையிடம் தமிழை சிறுவயதில் கற்ற ராகவையங்காருக்கு உதவியாக இருந்தவர் அவரது மாமனும் தமிழ்த்தொண்டில் தன்னிகரற்று விளங்கியவருமான ரா. ராகவையங்கார்.

இளமையில் ராகவையங்கார் மதுரையின் மீண்டும் தமிழ்ச்சங்கம் நிறுவிய பாண்டித்துரைத் தேவரின் அவையின் சேர்ந்து அவரிடமும் மற்ற அவைப் புலவர்களிடமும் தமிழ்க் கல்வி பயின்றார். பதினெட்டு வயதில் அவைப்புலவர் பட்டமும் பெற்றார். ராகவையங்கார் பாண்டித்துரை தேவரிடம் தமிழ் பயின்றிருக்கிறார். பாண்டித்துரை தேவரோ ராகவையங்காரின் அப்பா முத்துஸ்வாமி ஐயங்காரிடம் தமிழ் பயின்றிருக்கிறார்! பின்னாளில் தேவரையும் அவரது அப்பாவையும் பற்றி செந்தமிழ் வளர்த்த தேவர்கள் என்று ஒரு புத்தகமே எழுதி இருக்கிறார்.

படிப்பிற்குப் பிறகு சில காலம் தொல்பொருளாராய்ச்சிக் குழுவைச் சேர்ந்த டி. ஏ. கோபிநாதராவுடன் தமிழ் நாட்டின் கோயில்களிலுள்ள கல்வெட்டுகள் பற்றி ஆராய்ந்தார். சென்னைப் பல்கலைக் கழகம் ரெவரெண்ட் ஜே.எஸ். சாண்ட்லர் தலைமையில் “தமிழ்ப் பேரகராதி” தயாரிப்பில் 1913 முதல் தமிழ் உதவி ஆசிரியராக இருந்தார். கிட்டத்தட்ட 26 ஆண்டுகள் தமிழ்ப் பேரகராதி தொகுப்புக் குழுவில் பணியாற்றியுள்ளார். சாண்ட்லர் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இம்மாபெரும் முயற்சி, பின்னர் தலைமையேற்ற எஸ். வையாபுரிப் பிள்ளை காலத்தில் 1936-இல்தான் முடிந்தது. இவரது ஆராய்ச்சித்திறனைப் போற்றும் வகையில் இவருக்கு 1939ல் “ராவ் சாஹேப்” என்ற பட்டத்தையும் முன்னாள் அரசு அளித்துக் கௌரவித்தது.

திருவாங்கூர் பல்கலைக் கழகத்தில், தலைமைத் தமிழ் ஆராய்ச்சியாளராக 1944 முதல் 1951 வரை பணி புரிந்திருக்கிறார். இதற்கிடையே லயோலா கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகவும் இருந்திருக்கிறார். கலைமகள், தமிழ் நேசன் பத்திரிகைகளில் மதிப்பியல் ஆசிரியராகவும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.

12 ஆய்வு நூல்களை – குறிப்பாக வேளிர் வரலாறு, சேரன் செங்குட்டுவன், ஆழ்வார்கள் காலநிலை, தொல்காப்பிய பொருளதிகார ஆராய்ச்சி, சாசனத் தமிழ் கவி சரிதம், சேர வேந்தர் செய்யுள் கோவை – எழுதினார். சங்க காலத்திலும் இடைக்காலத்திலும் பெயர், வினைகள் எவ்வாறாக அமைந்துள்ளன என்பதை இவர் எழுதியுள்ள வினைத்திரிபு விளக்கம் நமக்கு விவரிக்கிறது. தவிரவும், நரி விருத்தம் (அரும்பதவுரையுடன்), திருக்கலம்பகம், விக்கிரம சோழன் உலா, கேசவப் பெருமாள் இரட்டைமணிமாலை, நிகண்டகராதி முதலான பத்துக்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்துள்ளார்.

பாண்டித்துரைத் தேவர் நான்காம் தமிழ்சங்கத்தை துவக்கியபோது அவருக்காக பல இடங்களிலிருந்து ஓலைச்சுவடிகளைச் சேகரித்து தந்தார். தேவர் துவக்கிய செந்தமிழ் என்ற பத்திரிகையின் உதவி ஆசிரியராக சில காலமும், பின்னர் ஆசிரியராக சில காலமும் பணியாற்றியுள்ளார். அதில் முதலில் ஆசிரியராக இருந்தவர் அவரது மாமாவான ரா. ராகவையங்கார். இந்த இரண்டு ராகவையங்கார்களும் அக்காலத்தில் தமிழ்த் தொண்டுக்காக தம்மை அர்ப்பணித்துக்கொண்ட பலரையும் அதில் எழுத வைத்தனர். சி. இலக்குவனார், ரா. இளங்குமரனார், ப.வே. மாணிக்க நாயக்கர், தி.வை. சதாசிவ பண்டாரத்தார், கா.சு.பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார், தி. இலக்குமணப் பிள்ளை, வ.சுப. மாணிக்கம் போன்றோரை தொடர்பு கொண்டு அவர்களிடம் தமிழ் இலக்கியங்கள் குறித்த ஆய்வுக் கட்டுரைகளை வாங்கி பிரசுரித்து வந்தனர். அக்காலத்தில் அழிந்து கொண்டிருந்த தமிழ் மொழிக்கு இச்செயல் புத்துயிர் ஊட்டுவதாக அமைந்தது.

இவர் செந்தமிழ் இதழில் எழுதிய வீரத்தாய்மார் எனும் கட்டுரையை படித்த பாரதியார் உடனடியாக உணர்ச்சி ததும்ப பாராட்டுக் கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். ”உங்களை பாராட்ட வரவில்லை” எனத் துவங்கி இறுதியில் ”வணக்கம் செய்கிறேன் வளர்க”! என முடியும் அவரது கடிதம் ராகவையங்காருக்கு கிடைத்த பாராட்டுகளில் மிகச் சிறந்தது.

1954ல் தன் மனைவியையும், இளைய மகனையும் இழந்தவர், தன் மூத்த மகனுடன் மானாமதுரையில் வாழ ஆரம்பித்தார். 1960 பிப்ரவரி இரண்டாம் தேதி மானாமதுரையிலேயே காலமானார்.

சேதுராமனின் குறிப்புக்கு பயன்பட்ட கட்டுரைகள்:

  1. இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்த் திறனாய்வாளர்கள்” என்ற புத்தகத்தில் எம்.எஸ். அறிவுடைநம்பி எழுதிய கட்டுரை – புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் பதிப்பித்தது – காவ்யா வெளியீடு
  2. வி. சுந்தரம் ஐ.ஏ.எஸ்.எழுதிய ஒரு வலைத்தளக் கட்டுரை (சுட்டி கிடைத்தால் கொடுங்கள்!)

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழறிஞர்கள்

தொடர்புடைய பதிவுகள்:
கூட்டாஞ்சோறு தளத்தில் சேதுராமனின் ஒரிஜினல் பதிவு
ராகவையங்கார் பற்றிய விக்கி குறிப்பு

2017 பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகள்

இந்த வருஷம் வெகு சில புனைவெழுத்தாளர்கள்/கவிஞர்களுக்கே – நரேந்திர கோலி (ஹிந்தி), அக்கிதம் அச்சுதன் நம்பூதிரி (மலையாளம்), எலி அஹமத் (அஸ்ஸாமிய மொழி), பிர்கா பஹதூர் லிம்பு முரிங்லா (சிக்கிமில் பேசப்படும் லிம்பூ மொழி) பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அசோகமித்ரன், கி.ரா. இவர்களெல்லாம் எப்போதுதான் அங்கீகாரம் பெறப் போகிறார்களோ!

இலக்கியத்துக்காக சோ ராமசாமிக்கு பத்மபூஷன் விருது தரப்பட்டிருக்கிறது. சோ என் கண்ணில் நாடக இலக்கியம் படைத்தவர்தான், பத்மபூஷன் விருதுக்கு தகுதியானவர்தான். ஆனால் இலக்கியத்துக்காக என்று கொடுத்திருப்பது அவரது எழுத்துக்களின் இலக்கியத் தரத்தை மிக அதிகமாக மதிப்பிடுவது. பத்திரிகையாளர் என்று ஒரு category இல்லை போலிருக்கிறது.  கடைசி பதினைந்து சொச்சம் வருஷங்களில் அவரது நடுநிலை தவறிவிட்டாலும், அவரது பல கருத்துக்கள் – குறிப்பாக பெண்கள் பற்றிய கருத்துக்கள் எனக்கு இசைவானவை இல்லை என்றாலும் இது சரியான விருதுதான். அவருடைய நடுநிலை பிசகியதால்தான் இந்த விருது கிடைத்திருக்கிறது என்பதுதான் நகைமுரண்.

தமிழகத்திலிருந்து மிஷல் டானினோவுக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்திருக்கிறது. எனக்குத் தெரிந்து டானினோ ஒரே ஒரு புத்தகத்தைத்தான் பண்டைய இந்தியா பற்றி சில அபுனைவுகளை எழுதி இருக்கிறார். Lost River: On the Trail of Saraswati (2010) என்ற புத்தகத்தைப் பற்றி அரவிந்தன் நீலகண்டன் எழுதிய குறிப்பை இங்கே படிக்கலாம். நண்பர் ரெங்கசுப்ரமணி எழுதிய அறிமுகம் இங்கே. அவரது எழுத்துக்கு ஒரு உதாரணமாக ஜெயமோகன் தளத்தில் இந்தக் கட்டுரையைப் (பகுதி 1, பகுதி 2) படிக்கலாம்.

ஹிந்தியின் பிரபல எழுத்தாளர் நரேந்திர கோலிக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்திருக்கிறது. மொழிபெயர்ப்புகள் எதுவும் (எனக்குத் தெரிந்து) இல்லை என்றாலும், ஹிந்தியை எழுத்துக் கூட்டி படிக்கவே தடுமாறும் நானே இவர் பேரை கேட்டிருக்கிறேன்.

அக்கிதம் அச்சுதன் நம்பூதிரி மலையாளக் கவிஞராம். சாஹித்ய அகாடமி விருது பெற்றவர்.

பிர்கா பஹதூர் லிம்பு முரிங்லா சிக்கிமில் பேசப்படும் மொழியான லிம்பூ எழுத்தாளர்.

எலி அஹமத் அஸ்ஸாமிய மொழி எழுத்தாளர், கவிஞர்.

ஜி. வெங்கடசுப்பையா கன்னடத்தில் அகராதியைத் தொகுத்திருக்கிறார். மேலும் பல இலக்கிய விமர்சன நூல்களை எழுதி இருக்கிறார்.

விஷ்ணு பாண்டியா குஜராத்தி பத்திரிகையாளர், எழுத்தாளர். பல அபுனைவுகளை எழுதி இருக்கிறார்.

தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள்

புத்தகங்களைப் பற்றி ஒபாமா

Official portrait of President Barack Obama in the Oval Office, Dec. 6, 2012. (Official White House Photo by Pete Souza) This official White House photograph is being made available only for publication by news organizations and/or for personal use printing by the subject(s) of the photograph. The photograph may not be manipulated in any way and may not be used in commercial or political materials, advertisements, emails, products, promotions that in any way suggests approval or endorsement of the President, the First Family, or the White House.
Official portrait of President Barack Obama in the Oval Office, Dec. 6, 2012. (Official White House Photo by Pete Souza)
This official White House photograph is being made available only for publication by news organizations and/or for personal use printing by the subject(s) of the photograph. The photograph may not be manipulated in any way and may not be used in commercial or political materials, advertisements, emails, products, promotions that in any way suggests approval or endorsement of the President, the First Family, or the White House.
புத்தகங்களைப் பற்றி அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா (இந்தப் பதிவு வரும்போது அவர் முன்னாள் ஜனாதிபதியாக மாறி இருப்பார்) கொடுத்த ஒரு பேட்டி கண்ணில் பட்டது. இப்படி புத்தகங்களைப் பற்றி பேசக் கூடிய தலைவர்கள் எல்லாம் இந்தியாவில் காணாமல் போய்விட்டார்களே என்ற வருத்தம் ஏற்பட்டது. மோடி பெரிதாகப் படிப்பதாகத் தெரியவில்லை. ஓ.பி. பன்னீர்செல்வம் புத்தகம் பக்கம் போவாரா என்று தெரியவில்லை. பிற மாகாண முதல்வர்கள் யாராவது வாசிப்பார்களா?

ஒபாமாவே (Dreams of My Father, Audacity of Hope) சில புத்தகங்களையும் எழுதி இருக்கிறார்.

ஒபாமா குறிப்பிட்ட புத்தகங்கள்

  1. Naked and the Dead (Normal Mailer, 1948)
  2. One Hundred Years of Solitude (Marquez, 1967)
  3. Golden Notebook (Doris Lessing, 1962)
  4. Woman Warrior (Maxine Hong Kingston, 1976)
  5. A Moveable Feast (Hemingway, 1964)
  6. Underground Railroad (Colson Whitehead, 2016)
  7. Three Body Problem (Liu Ciuxin, 2007)
  8. Gone Girl (Gilian Flynn, 2012)
  9. Fates and Furies (Lauren Groff, 2015)
  10. Song of Solomon (Tony Morrison, 1977)
  11. A Bend in the River (V.S. Naipaul, 1979)
  12. Gilead (Marilynne Robinson, 2004)

இவற்றைத் தவிர, ஷேக்ஸ்பியர் தான் மீண்டும் மீண்டும் படிக்கும் ஆசிரியர் என்றும் கெட்டிஸ்பர்க் உரையை அவ்வப்போது படிப்பது உண்டு என்றும், லிங்கன், காந்தி, மார்ட்டின் லூதர் கிங், மண்டேலா ஆகியோரின் எழுத்துகள் தன் சோர்வை ஓரளவு நீக்கும் என்றும், சர்ச்சில், தியோடோர் ரூசவெல்ட், ஜுனோ டியஸ், ஜும்பா லாஹிரி, ஃபிலிப் ராத், சால் பெல்லோ ஆகியோரின் எழுத்தை விரும்பிப் படிப்பதாகவும் சொல்லி இருக்கிறார்.

பேட்டியைப் படித்ததும் மனதில் ஒரு சின்ன அங்கலாய்ப்புதான் முதலில் எழுந்தது. காந்தி, நேரு, ராஜாஜி, ஈஎம்எஸ் தலைமுறைக்குப் பிறகு இப்படி தன் வாசிப்பைப் பற்றி பேசிய இந்தியத் தலைவர் யாரையும் எனக்குத் தெரியவில்லை. நரசிம்ம ராவும், வாஜ்பேயியும், மன்மோகன் சிங்கும் வாசிக்கும் பழக்கம் இருந்திருக்கலாம், ஆனால் அதைப் பற்றி எங்கும் பேசியதாகத் தெரியவில்லை. வாஜ்பேயி ஒரு வேளை ஹிந்தியில் தன் வாசிப்பைப் பற்றி பேசி/எழுதி இருக்கலாம். ஒரு வேளை அண்ணாதுரையும் நிறைய எழுதி இருக்கலாம், எனக்கு தெரியாமல் இருக்க வாய்ப்புண்டு. கருணாநிதி நிறைய படித்தாலும் அவர் தன்னைப் பற்றி எப்படி பெருமை அடித்துக் கொள்வது என்ற நோக்கத்துடன் படிப்பார் என்று தோன்றுகிறது.

ஒரு நல்ல தலைவனுக்கு படிக்கும் பழக்கம் mandatory requirement அல்லதான். ஆனால் அந்தப் பழக்கம் இருக்க வேண்டும், வாசிப்பைப் பற்றி தெளிவாக பேசவும் வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். நம் தலைவர்களை நினைத்து பெருமூச்சுதான் விடமுடிகிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்

க.நா. சுப்ரமண்யத்தின் “பொய்த்தேவு”

மீள்பதிப்பு (முதல் பதிவு, செப்டம்பர் 14, 2008 அன்று). க.நா.சு.வின் குறுநாவல்கள் பற்றி எழுதியதும் இதை மீண்டும் பதிக்கலாமே என்று தோன்றியது.

ரொம்ப நாட்களாக க.நா.சு. எழுதிய இந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என்று ஆசை. யார் யாரோ படிக்க வேண்டிய புத்தகம் என்று சொல்லி இருக்கிறார்கள். முதல் பதிப்பு 1946இல் வெளிவந்தது. ஜெயமோகனின் டாப் டென் லிஸ்டில் இதற்கு ஆறாம் இடம். என்னுடைய டாப் டென் லிஸ்டில் இடம் பெறாது. ஆனால் நான் படித்த சிறந்த புத்தகங்களில் ஒன்று.

எனக்கு ஒரு முட்டாள்தனமான பழக்கம். சில புஸ்தகங்கள் எனது ரசனைக்கு ஒத்து வரும் என்று தெரியும். ஆனால் அதை படிக்க சரியான நேரம் வர வேண்டும் என்று காத்திருப்பேன். என்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி படிக்க வேண்டும் என்றும் வேலை டென்ஷன் இருந்தால் படிக்க முடியாது என்றெல்லாம் நினைத்து நல்ல முகூர்த்தம் வரக் காத்திருப்பேன். முகூர்த்தம் வர வருஷங்கள் ஆகலாம். உதாரணமாக விஷ்ணுபுரம் வாங்கி 4 வருஷம் கழித்துத்தான் படித்தேன். பொய்த்தேவு எப்போது வாங்கினேன் என்று கூட தெரியாது, இரண்டு காப்பிகள் இருந்தன. (ஆனால் காலச்சுவடு அருமையாக பதிப்பித்திருக்கிறது) கொஞ்ச நாட்கள் முன்னால்தான் முதல் முப்பது நாற்பது பக்கம் படித்தேன். உடனே தெரிந்துவிட்டது, இது ஒரு அருமையான புத்தகம் என்றும், படிக்க சுலபமான புத்தகம் என்றும். (விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல் இரண்டும் சுலபமான புத்தகங்கள் அல்ல) சுலபமான புத்தகம் என்றால் மிக விரைவாக படிக்க முடியும். கதை ஒரு நேர் கோட்டில் செல்லும். முன்னால் என்ன சொல்லப்பட்டது என்று திருப்பி திருப்பி பார்க்க வேண்டியதில்லை. ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகள் சுலபமாக படிக்க முடியும். One Hundred Years of Solitude படிக்க நேரமாகும். ஆனால் ஏனோ பிடிக்கும் என்று தெரிந்தும், சுலபம் என்று தெரிந்தும் இந்த புத்தகத்தை ஒரு ஓரமாக வைத்துவிட்டேன். அப்புறம் ஒரு நாள் திருப்பி எடுத்து ஒரே மூச்சில் படித்து முடித்தேன்.

பொய்த்தேவு என்றால் என்ன என்று கூட முன்னால் தெரியாது. தேவு என்றால் தெய்வம் என்று பொருள் இதை படித்துத்தான் தெரிந்து கொண்டேன்.

படித்து முடித்ததும் மனதில் விவரிக்க முடியாத ஒரு நிறைவு.

இதற்கு கதைச்சுருக்கம் எல்லாம் எழுத முடியாது. ஆனால் இந்த கதையை பல தளங்களில் பார்க்கலாம். ஏழை மேட்டுத்தெரு சோமு சோமசுந்தர முதலியாராக மாறி சோமுப் பண்டாரமாக முடிகிறார். அவரது ஆசைகள், பார்த்ததற்கெல்லாம் ஆசைப்படும் குணம், அவரது தெய்வங்கள், அவரது ஆதர்ச மனிதர்கள் என்று பார்க்கலாம். என்னை பாதித்தது வேறு ஒரு தளம். வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் நாம் தேடும் விஷயங்கள் வேறு. இந்த தேடலுக்கு உண்மையிலேயே ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? காமம் எல்லா உயிர்களுக்கும் உள்ள அடிப்படை தேடல் என்று வைத்துக்கொள்ளலாம், அதற்கு பொருள் தேடுவது அர்த்தம் இல்லாத செயல். பணம்? புகழ்? குடும்பம்? இவை எல்லாம் நமக்கு ஏன் முக்கியம் என்று நாம் யோசிப்பதே இல்லை. குறைந்தபட்சம் நான் யோசித்தது இல்லை. அப்படி ஒரு நிமிஷமாவது யோசிக்க வைத்ததுதான் இந்த நாவலின் வெற்றி.

எங்கோ அமெரிக்காவில் உட்கார்ந்து இருந்தாலும், எனது வேர்கள் இந்தியாவில்தான் இருக்கின்றன. எனது அப்பா, அம்மா, அத்தை(கள்), பெரியப்பா, பெரியம்மா, அத்தான்கள், அத்தங்காள்கள், காலேஜ் நண்பர்கள் இவற்றை சுற்றிதான் என் எண்ணங்கள் சுழல்கின்றன. முதலியாரின் வேர்கள் மேட்டுத்தெருவில் இருப்பது போல. அவரது கைவிலங்குகள் ராயர் குடும்பத்தில் இருப்பது போல.

கடைசி அவதாரமான சோமுப் பண்டாரமாக மாறுவதைப் பற்றி இன்னும் விவரித்திருக்கலாம்.

ஆனால் இந்தப் புத்தகம் எல்லாருக்கும் பிடிக்கும் என்று சொல்வதற்கில்லை. ஒரு கோணத்தில் பார்த்தால் இதில் ஒன்றுமே இல்லை. பெரிய சிக்கல்கள் இல்லை, பிரமாதமான கதைப் பின்னல் இல்லை. இதில் என்ன இருக்கிறது என்று கேட்டால் விவரிப்பது கஷ்டம். ஒன்று உங்களுக்கு இதில் ஒரு தரிசனம் கிடைக்கும் இல்லாவிட்டால் போரடிக்கும். இரண்டுக்கும் நடுவில் ஒரு ஸ்டேஜ் இல்லை.

ஜெயமோகனின் குறிப்பு

பொய்த்தேவு —— க. நா. சுப்பிரமணியம்.
தமிழின் முதல் நாவல் என்று ஐயமின்றி கூறலாம். நாவல் என்ற விசேஷ வடிவத்தைப் பற்றிய பிரக்ஞையுடன் எழுதப்பட்ட முதல் படைப்பு. சோமு முதலி என்ற கதாபாத்திரத்தின் முழுவாழ்க்கையை முன்வைத்து வாழ்வின் சாரமான பொருளென்ன என்று தேடும் படைப்பு ஒரு காலை வேதாந்தத்திலும் மறுகாலை இருத்தலியத்திலும் ஊன்றி நிற்கும் காத்திரமான ஆக்கம் சோமுவை சிறுவயது முதல் தொடரும் அந்த மணியோசை நாவலில் கவித்துவத்தின் அபாரசத்தியங்களைப் பற்றி தமிழுக்கு கற்பித்தது.

எஸ்.ரா.வும் இதை நூறு சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்றாகக் குறிப்பிடுகிறார்.

கட்டாயமாக படிக்க வேண்டிய புத்தகம். படிக்க சொல்லி சொன்ன எந்தரோ மகானுபாவலுகளுக்கு நன்றி. 

அழியாச்சுடர்கள் தளத்தில் சாம்பிளுக்கு ஒரு அத்தியாயத்தைப் படிக்கலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: க.நா.சு. பக்கம்

க.நா.சு.வின் சில குறுநாவல்கள்

ka.naa.su.க.நா.சு.வின் நான்கு குறுநாவல்கள் ஒரு புத்தகமாகக் கிடைத்தது. இந்த நாலில் எனக்குப் பிடித்தது நளினி. வாழ்ந்தவர் கெட்டால் குறுநாவலின் ஒரு காட்சிக்காகவே படிக்கலாம். ஆட்கொல்லி குறுநாவலின் denouement எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பெரிய மனிதன் குறுநாவல் தண்டம். நான்கையும் இணைத்திருக்கிறேன், காப்பிரைட் பிரச்சினைகள் வந்தால் எடுத்துவிடுவேன்.

இந்த நாலும் காட்டும் உலகம் இன்றில்லை – நண்பன் வீட்டில் மாதக் கணக்கில் போய் தங்க முடிகிறது. அக்ரஹாரத்தில் பத்து வயதுப் பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடும் பிரச்சினை. ஆனால் அந்த உலகம் எனக்கு ரொம்ப அன்னியமாகவும் இல்லை.

இந்தக் குறுநாவல்களப் பற்றிய சிறு குறிப்புகள் கீழே.

நளினி: எனக்குத்தான் சொல்லத் தெரியவில்லை. சாதாரணக் கதை. அந்தக் காலத்து அக்ரஹாரத்தில் சிறு பெண் நளினி. பக்கத்து வீட்டுக்கு வரும் பட்டிணத்து இளைஞனைக் கண்டு கொஞ்சம் ஈர்ப்பு. அவனோ பாங்கில் பணத்தைத் திருடுகிறான், ஆனால் சாமர்த்தியமாக தப்பித்துக் கொள்கிறான். தொழில் ஆரம்பிக்கிறான். பிறகு இந்தப் பெண்தான் வேண்டுமென்று இவளை மணக்கிறான். நீங்கள் திருடினீர்களா என்று கேட்கிறாள். அவன் பதில் சொல்லவில்லை, உங்களோடு வாழ விரும்பவில்லை என்று அவள் விட்டுப் போய்விடுகிறாள். இதே கதையை ஒரு சிவசங்கரியோ ரா.கி. ரங்கராஜனோ எழுதி இருந்தால் குப்பையாகத்தான் இருந்திருக்கும். இவரிடத்தில் என்ன மாயம் இருக்கிறதோ ரொம்பப் பிடித்திருக்கிறது. உண்மையான சித்திரங்களா, நளினியின் மனோதிடமா, எது இந்தக் குறுநாவலை உயர்த்துகிறது? பொய்த்தேவு நாவலையும் இப்படித்தான் உணர்ந்தேன்.

வாழ்ந்தவர் கெட்டால்: ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்சனின் பாணியை நினைவுபடுத்தியது. கதையை மறக்க முடியாமல் செய்வது ஒரே ஒரு காட்சிதான். கதைசொல்லியின் நண்பன் வாழ்ந்து கெட்ட ஒரு குடும்பத்து நபர்களை – குறிப்பாக சதாசிவ மம்மேலியாரைத் தவிர்த்துக் கொண்டே இருக்கிறான். கடைசியில் சந்திக்கும்போது நீயெல்லாம் ஏன் உயிரோடு இருக்கிறாய் என்று ஆவேசத்துடன் கத்துகிறான். மம்மேலியார் சரி என்று புன்முறுவல் மாறாமல் அடுத்த கணத்தில் ரயிலில் விழுந்து இறக்கிறார். பிரமாதமாக எழுதப்பட்ட காட்சி.

ஆட்கொல்லி: நாவல் சுமார்தான். ஆனால் நம்பகத்தன்மை நிறைந்த கதாபாத்திரங்கள். நாயகனின் மாமா பேருக்கு பள்ளி ஆசிரியர், ஆனால் வட்டிக்கு கடன் கொடுத்து ஊரார் சொத்தை எல்லாம் கைப்பற்றிக் கொள்கிறார். ஒரே ஒரு பிள்ளை பிறக்கிறது. பிள்ளைக்கு பெரிய இடத்தில் கல்யாணம் நடக்கிறது, ஆனால் மாமா தரப்பில் இருந்து ஒருவரும் வரவில்லை. அந்த denouement இந்தக் காலத்தில் புரியுமா என்று தெரியவில்லை. எனக்குப் பிடித்திருந்தது. நீளத்தைக் குறைத்திருந்தால் நல்ல சிறுகதையாக இருந்திருக்கும்.

பெரிய மனிதன் குறுநாவல் ரொம்ப தண்டம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: க.நா.சு. பக்கம்

இணைப்பு: நான்கு குறுநாவல்கள் (நளினி, வாழ்ந்தவர் கெட்டால், ஆட்கொல்லி, பெரிய மனிதன்)

மற்றுமொரு மஹாபாரதச் சிறுகதை

தமிழ் ஹிந்துவில் என் இன்னொரு மஹாபாரதப் பின்புலச் சிறுகதை வெளியாகி இருக்கிறது. இன்று பொங்கல்,  இங்கும் பதித்து வைக்கிறேன். எம்.ஏ. சுசீலாவும் முகினும் சுமாராக இருக்கிறது என்று சொன்னது சின்ன மகிழ்ச்சி. கதை என்ற அளவில் எனக்கு முழு திருப்தி இல்லை, too loud என்று நினைக்கிறேன்.

சோம்பேறிகளுக்காக கீழே. படத்திற்காக தமிழ் ஹிந்துவுக்கும் அமர்சித்ரகதாவுக்கும் நன்றி!


புருஷ லட்சணம்

அம்புப் படுக்கையிலிருந்து பீஷ்மர் சற்றே தலையை உயர்த்திப் பார்த்தார். கௌரவர் கூடாரங்களில் துரியோதனனின் அரவக் கொடியும் துரோணரின் வில்-கமண்டலக் கொடியும் மட்டும் இன்னும் பறந்து கொண்டிருந்தன, மற்ற எல்லாக் கொடிகளும் இறக்கப்பட்டிருந்தன. கர்ணன் கௌரவப் படைகளுக்கு தலைமை வகிக்கப் போவதில்லையா என்று பீஷ்மர் வியப்புற்றார். பிறகு துரோணரை நினைத்து அவர் மனதில் கொஞ்சம் பரிதாபம் எழுந்தது.

amba-shikandi-ackநள்ளிரவு கடந்திருந்தது. பீஷ்மரின் அருகில் நட்டு வைக்கப்பட்டிருந்த தீப்பந்தம் இறந்து கொண்டிருந்தது. சிள்வண்டுகளின் ரீங்காரம் மட்டுமே இன்னும் கேட்டுக் கொண்டிருந்தது. பீஷ்மர் தனது வலது கையை உயர்த்தி, தன் ஆள்காட்டி விரலால் யாரையோ முன்னால் வரும்படி அழைத்தார். ஈ எறும்பு கூட நகரவில்லை. மீண்டும் தன் ஆள்காட்டி விரலை வேகமாக ஆட்டி அழைத்தார். சலனமே இல்லை. ‘அருகே வா, சிகண்டி!’ என்று மிருதுவான குரலில் சொன்னார்.

சத்தமே இல்லாமல் சிகண்டி அவரது முன்னால் வந்து நின்றான். அன்றைய போர் முடிந்து பல நாழிகைகள் கடந்திருந்தாலும் அவன் வில்லும் வாளும் கவசமும் அம்புறாத்தூணியும் அணிந்து முழு போருடையிலேயே இருந்தான். அவன் கன்னங்களில் கண்ணீரின் கறை இருந்தது. சினமும் ஆங்காரமும் அவன் முகத்திலே கொதித்தன. கோபத்தினால் எழும் அழுகையை அவன் கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக் கொள்வது நன்றாகவே தெரிந்தது.

பீஷ்மரின் முகமோ முழுதாக மலர்ந்திருந்தது. பீஷ்ம விரதத்தின் சுமை, சேனாதிபதி என்ற பொறுப்பின் வலி, போரின் தினசரி கவலைகள் எல்லாவற்றையும் துறந்த முகம். சிகண்டி அத்தனை மலர்ந்த முகத்தை கிருஷ்ணன் ஒருவனிடம்தான் இது வரை கண்டிருக்கிறான். பீஷ்மர் புன்னகைத்து சிகண்டி இது வரை பார்த்ததே இல்லை, அவன் பார்த்ததெல்லாம் தீர்க்கமான பார்வையுடன் போரிடும், ஆணையிடும் பீஷ்மரைத்தான். இன்றோ பார்ப்பவரின் மனதையும் மலரச் செய்யும் மகிழ்ச்சியை அவர் முகத்தில் அவன் கண்டான். அவனையும் மீறி அவன் ஆங்காரம் குறைய ஆரம்பித்தது.

பீஷ்மர் சிகண்டியை உற்றுப் பார்த்தார். அவன் கண்களைப் பார்க்கப் பார்க்க அவரது முகம் மேலும் மேலும் மலர்ந்தது. பிறகு அவரது பார்வை சிகண்டியின் முகம், கைகள், இடுப்பு என்று தாண்டித் தாண்டி கடைசியாக கவசத்தையும் மீறி விம்மித் தெரிந்த அவனது முலைகளில் நிலைத்தது.

சிகண்டிக்கு ஆவேசம் பிறந்தது. ‘ஆம் பீஷ்மரே, நான் ஆணல்ல, பெண்தான்!’ என்று இரைந்தபடியே தன் கவசத்தையும் மேலாடையையும் கழற்றி வீசினான். தன் கச்சைக் கிழித்தான். ‘நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள் பீஷ்மரே, எனக்கு முலைகள் இருக்கின்றன, நான் பெண்ணேதான், நீங்கள் என்னுடன் போரிட மறுத்தது நியாயம்தான்!’ என்று கத்தியபடியே அவர் முன் நெஞ்சை நிமிர்த்தி நின்றான். பீஷ்மரின் முகத்தின் மலர்ச்சி எல்லாம் ஒரே நொடியில் மறைந்து வலி தெரிந்தது. அவர் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டார். சிகண்டி அந்தப் பக்கமும் விரைந்து வந்து அதே மாதிரி நின்றான்.

‘போதும் சிகண்டி, வயது வந்த மகளை அரை நிர்வாணமாகப் பார்க்கும் துர்பாக்கியத்துக்கு என்னை ஆளாக்காதே’ என்று பீஷ்மர் முனகினார். மீண்டும் வேறு பக்கம் திரும்பிக் கொண்டார்.

சிகண்டி விரக்தி ததும்பும் குரலில் ‘மகள்!’ என்றபடியே தன் கவசத்தையே மேலாடையாக அணிந்து கொண்டான். ‘எத்தனை பயிற்சி பெற்றாலும், பரசுராம சிஷ்யர் பீஷ்மரையே எதிர்த்து நின்றாலும், ஒரு அக்ரோணி சேனைக்குத் தலைவனாக இருந்தாலும், பாண்டவர்களின் பிரதம சேனாதிபதியாக என்னை நியமிக்க வேண்டும் என்று பீமனே சொன்னாலும் என் அடையாளம் பெண் என்பது மட்டும்தான் இல்லையா பீஷ்மரே? நான் உங்களைப் போல மாவீரனாக இல்லாமல் இருக்கலாம், மஹாரதியாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் என்னை, என் வீரத்தை, என் தைரியத்தை, என் போர்த்திறமையை அங்கீகரிக்கவே மாட்டீர்களா!” என்றபடி அவரை நோக்கினான். அவனது குரல் ஏறக்குறைய கெஞ்சுவதாகவே ஒலித்தது. அப்படி கெஞ்சும்போது அவன் குரல் அச்சு அசல் பெண் குரலாகவே இருந்தது.

பீஷ்மர் நிதானத்துக்கு வந்து கொண்டிருந்தார். அவரால் இப்போது சிகண்டியை நேராகப் பார்க்க முடிந்தது. புன்னகைத்தார்.

சிகண்டி தன் பார்வையை அவரது முகத்திலிருந்து திருப்பி தொலைவில் எங்கோ நோக்கினான். “என் தாயை சிறுமைப்படுத்தினீர்கள். அவள் பிச்சியாகவே அலைந்தாள். இந்தப் போரில் என்னை சிறுமைப்படுத்துகிறீர்கள். நான் உங்களை வெல்வேன், கொல்வேன் என்று நினைத்து இந்தப் போரில் ஈடுபடவில்லை. உங்கள் கையால் இறப்பேன் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் என்னைப் பெண் என்றும் கோழை என்றும் வீரமற்றவன் என்றும் நபும்சகன் என்றும் இழிவாக எண்ணி என்னை எதிர்த்து வில்லை உயர்த்தவே மறுத்தீர்கள். இன்று என்னால்தான் நீங்கள் விழுந்திருக்கிறீர்கள், ஆனால் என்னுடைய ஒரு அம்பு கூட உங்கள் மீது படவில்லை. ஒரு வீரனுக்கு இதை விட கேவலம் என்ன வேண்டும்? இந்தப் போரில் நான் உயிர் பிழைத்தாலும் நானும் பித்தனாகத்தான் அலையப் போகிறேன். அம்பையின் ரத்தம் நான், எங்கள் காயங்கள் ஆறுவதே இல்லை. நாங்கள் பெற்ற சாபம் அது. நீங்கள் அதைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டே இருக்கலாம்”. அவனது குரல் மெலிந்திருந்தது.

பீஷ்மர் ‘மகளே!’ என்று கனிவோடு சிகண்டியை அழைத்தார். அடிபட்ட முகத்தோடு சிகண்டி அவரை நோக்கினான். ‘இல்லை இல்லை வாய் தவறி வந்துவிட்டது. மகனே!’ என்று அவசர அவசரமாக திருத்திக் கொண்டார்.

‘மனதில் இருப்பதுதான் வார்த்தைகளில் வரும் பீஷ்மரே!’

‘இல்லை மகனே! அம்பைக்கு மகள் பிறந்திருக்கிறான் என்று அறிந்த நாளிலிருந்து உன்னை ஒரு பெண்ணாக நினைத்து வந்திருக்கிறேன். அது என்னையும் மீறி வார்த்தையாக வந்துவிட்டது. ஆனால் நீ ஆணோ பெண்ணோ அது எனக்கு ஒரு பொருட்டே அல்ல. நீ கோழை என்று யார் சொன்னது? உன் வீரத்தை அங்கீகரிக்க யார் மறுத்தது?”

சிகண்டி மொத்தமாகக் குழம்பிப் போய் பீஷ்மரைப் பார்த்தான்.

‘வீரமும் போர்த்திறமையும் தைரியமும் பிறப்பால் நிர்ணயிக்கப்படுவதில்லை சிகண்டி! இது ஸ்மிருதிகளுக்கும் முந்தைய சுருதிச் சொல்! கர்ணனை சூதன் என்றும் கண்ணனை யாதவன் என்றும் ஒரு கூட்டம் சொல்லத்தான் செய்கிறது. ஆனால் அவர்கள் தன்னை க்ஷத்ரியர்களாக உணர்கிறார்கள், அதனால் அவர்கள் க்ஷத்ரியர்கள்! நீ பெண்ணாகப் பிறந்திருக்கலாம். ஆனால் ஆணாக உன்னை உணர்ந்தால் நீ ஆண்!”

சிகண்டியின் முகம் மகிழ்ச்சியில் விரிந்தது. பீஷ்மர் தொடர்ந்தார்.

‘இந்தக் காலகட்டத்தின் முதன்மையான போராளி நான். எனக்கு இணையான சில போராளிகள் இருக்கலாம், ஆனால் என்னை வெல்லக் கூடியவன், கொல்லக் கூடியவன் எவனுமில்லை. நான் அஞ்சக் கூடிய போராளி எவனுமில்லை என்னும்போது நான் கோழையா, வீரனா என்ற ஆராய்ச்சி அர்த்தமற்றது. என்னைப் போய் வீரன், தைரியசாலி என்று சொல்வது உபசாரப் பேச்சு மட்டுமே. ஆனால் தன்னை விடத் திறமை வாய்ந்தவன் என்று தெரிந்தும், நான் வில்லை எடுத்தால் உன் இறப்பு நிச்சயம் என்று அறிந்திருந்தும், அஞ்ச வேண்டிய நீ, என்னைத் தவிர்க்க வேண்டிய நீ, பத்து நாட்களும் என்னைத் தேடித் தேடி வந்து என்னுடன் போரிட முயன்ற நீ, நீயல்லவோ வீரன்? உன் தைரியம் அல்லவோ மெச்சப்பட வேண்டியது? ஸ்மிருதிகளின்படி பார்த்தாலும், தைரியமே புருஷ லட்சணம் என்று எல்லா ஸ்மிருதிகளும் சொல்கின்றனவே, அப்படிப் பார்த்தால் நீயே ஆண் மகன்!’

சிகண்டியின் கண்களில் ஈரம் தெரிந்தது. ஏதோ சொல்ல வந்தவனை பீஷ்மர் கைகாட்டித் தடுத்தார்.

“ஸ்மிருதிகளின்படியே பார்த்தால் நானே நபும்சகன்! என்று என் ஆன்மாவின் குரலைக் கொன்று உன் அன்னையை மறுத்தேனோ அன்றே என் ஆண்மை போயிற்று. சபையில் பெண்ணின் ஆடை களையப்படும்போது கையாலாகாமல் அமர்ந்திருக்கும் ஒவ்வொருவனும் நபும்சகனே! நீ நபும்சகன் என்று நான் உன்னுடன் போரிட மறுப்பதா? மகனே, நான் நபும்சகன் என்று நீ என்னுடன் போரிட மறுத்திருந்தால் அது நியாயம்!’

சிகண்டி பேச முயன்றான், ஆனால் குரல் எழும்பவில்லை. மிகவும் சிரமப்பட்டு கீச்சுக் குரலில் “ஆனால்… ஆனால்… ஆனால்… என்னுடன் போரிட…” என்று ஆரம்பித்தவனை பீஷ்மர் இடைமறித்தார்.

‘உனக்கு எதிராக என் வில்லா? உன்னுடன் முதல் முறையாக பேசும் வாய்ப்பு கிடைத்தவுடன் மூச்சுக்கு முன்னூறு முறை மகனே, மகளே என்று அழைக்கிறேனே, இன்னுமா புரியவில்லை? அம்பையின் குருதி நீ! என் மானசீக புத்திரன் நீயே!’ என்றார். ஆரம்பத்தில் ஓங்கி ஒலித்த அவரது குரலில் சத்தம் மெதுமெதுவாகக் குறைந்து தழுதழுத்தது.

“அப்படி என்றால் நீங்கள் பாண்டவர்கள் பக்கம் போரிட்டிருக்கலாமே!”

“அம்பையின் ரத்தத்தில் ஏற்படும் காயங்கள் ஆறுவதே இல்லை என்று நீ சொன்னாய். உண்மை, அம்பையோடு ரத்த உறவு உள்ள துரியோதனன் இன்னும் கூட திரௌபதியை மன்னிக்கவில்லை. அதே போலத்தான் சந்தனுவின் ரத்தம் வறட்டு கௌரவத்துக்காக, கொடுத்த வாக்குக்காக தன் ஆன்மாவைக் கொல்லத் தயங்குவதே இல்லை மகனே! என் தந்தை என் ஏழு சகோதரர்கள் கொல்லப்படும்போது பார்த்துக் கொண்டேதானே இருந்தார்! அவர் மகன் நான், கொடுத்த வாக்கை மீறுவதை விட காலமெல்லாம் சித்திரவதைப்படுவதைத்தானே எப்போதுமே தேர்ந்தெடுத்திருக்கிறேன்? மேலும் நான் பாண்டவர் பக்கம் வந்துவிட்டால் உன் வஞ்சினம் எப்படி நிறைவேறும்? அது மட்டுமல்ல, கௌரவர்களை – உன் அன்னையோடு ரத்த உறவு உள்ள கௌரவர்களை – எதிர்த்து வில்லெடுக்க விரும்பவில்லை சிகண்டி!”

சிகண்டியின் கண்களில் தாரைதாரையாக கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. ஆனாலும் பீஷ்மர் சொல்வதை அவன் முழுமையாக நம்பவில்லை என்பதை அவன் முகம் காட்டியது.

பீஷ்மர் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு மிருதுவான குரலில் சொன்னார் – ‘உன் அன்னையை சந்திக்கும் வரை நான் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசியதே இல்லை. மனதில் தோன்றும் எண்ணங்களை அப்போதெல்லாம் வெளிப்படையாகச் சொல்லிவிடுவேன். பீஷ்மப் பிரதிக்ஞை மற்றவர்களை பொறுத்துக் கொள்ள வைத்தது. உன் அன்னையை சந்தித்த பிறகோ என் உணர்வுகளை எப்போதுமே மறைத்துத்தான் வந்திருக்கிறேன். இன்றுதான் மீண்டும் என் உள்ளத்தைத் திறந்திருக்கிறேன். ஆனாலும் நீ என்னை நம்பவில்லை என்று தெரிகிறது”.

சிகண்டி மௌனமாகவே இருந்தான். பீஷ்மர் வானத்தை வெறித்தார். சில நிமிஷங்களுக்குப் பிறகு சிகண்டி கேட்டான் – ‘அப்படி என்னை நீங்கள் உங்கள் மகன் என்றும் வீரன் என்றும் மதித்திருந்தால் இந்த அம்புகள் அர்ஜுனனுடையவை, சிகண்டியின் அம்புகள் அல்ல என்று சொல்லி மகிழ்ந்தது எப்படி பீஷ்மரே!’

பீஷ்மர் கடகடவென்று சிரித்தார். ‘பாணர்கள் இப்படித்தான் பாடுகிறார்களா?’ என்று கேட்டார்.

‘நானே என் காதால் கேட்டேன்’ என்று சிகண்டி முணுமுணுத்தான்.

‘ஆம் மகனே, அவை நான் சொன்ன வார்த்தைகள்தான். நீ என் மகனாக இல்லாவிட்டாலும் உன் போன்ற வீரனின் அம்புகளால் காயம்படுவது என் பாக்கியம்! நீயோ என் மகன்! உன் அம்புகள் என்னைத் துளைத்திருந்தால் அவை என் மகனின் திறமையை காட்டியிருக்குமே! உன் தாய் அம்பை எய்த அம்பு நீ, நீ எய்த அம்பு ஒன்று கூட என் உடலில் படவில்லையே என்று வருத்தப்பட்டேன். நம் பாணர்கள் திறமைசாலிகள்!’ என்று அவர் மீண்டும் சிரித்தார்.

சிகண்டியின் உடலிலும் முகத்திலும் எப்போதும் இருக்கும் இறுக்கம் குறைந்தது. அவன் அழகு இன்னும் மிளிர்ந்தது. ஆனால் வார்த்தை வராமல் பீஷ்மரையே பார்த்துக் கொண்டிருந்தான். பீஷ்மரும் அவன் முகத்தையே பருகிக் கொண்டிருந்தார்.

சிற்து நேரம் கழித்து ‘அது சரி சிகண்டி, வில்லைக் கீழே போட்டு நான் உன்னெதிரே நிற்கிறேன், என் மார்பைத் துளைக்க நீ மஹாரதியாக இருக்க வேண்டியதில்லை, அது எப்படி உன் எல்லா அம்புகளும் தவறின?’ என்று பீஷ்மர் கேட்டார்.

சிகண்டியின் முகம் விகசித்தது. அவன் தலையை குனிந்துகொண்டான். ஆனால் அவன் கன்னம் பிரகாசிப்பதை அவனாலும் தடுக்க முடியவில்லை. அவன் தோள்கள் லேசாக குலுங்கின. பீஷ்மர் அவனையே நோக்கினார். பிறகு அவரும் சிரிக்க ஆரம்பித்தார். சிகண்டி வாயைப் பொத்திக் கொண்டு மேலும் சிரித்தான்.

சிகண்டி பீஷ்மரின் அருகில் சென்று அவரது வலது கையை தனது கைகளுக்குள் வைத்துக் கொண்டான். பீஷ்மர் அவன் கையை இழுத்தார். இன்னும் நெருங்கி வந்தவனின் கன்னத்தைத் தடவினார். தன் இரு கைகளாலும் அவன் முகத்தைப் பிடித்து அவன் கன்னத்திலும் நெற்றியிலும் மீண்டும் மீண்டும் முத்தினார்.

‘அம்பையை அப்படியே உரித்து வைத்திருக்கிறாய். நெற்றியில் சுட்டியும் கண்ணில் அஞ்சனமும் இருந்தால் அவளேதான்! இந்த ஜன்மத்தில் தவறினால் என்ன, இன்னும் பல ஆயிரம் ஜன்மம் எடுப்போம். புல்லாக, பூண்டாக, புழுவாக, மீனாக, அரவாக, சிட்டாக, யவனராக, சூதராக, அரசனாக, ஆண்டியாக பல கோடி ஜன்மம் எடுத்து நானும் அவளும் கூடியும் ஊடியும் உன்னை மகவாகப் பெற்று மகிழ்வோம்!’ என்று பீஷ்மர் தழுதழுத்தார்.

‘மகனா, மகளா, தெளிவாகச் சொல்லிவிடுங்கள்’ என்று சிகண்டி நகைத்தான்.

‘அம்பையின் குறும்பும் அப்படியே வந்திருக்கிறது!’ என்று பீஷ்மரும் நகைத்தார். ‘அம்பைக்கு ஒரு குழந்தைதான், ஆனால் எனக்கு மகனும் கிடைத்துவிட்டான், மகளும் கிடைத்துவிட்டாள்’ என்று மகிழ்ந்துகொண்டார்.

கிழக்கு வெளுக்க ஆரம்பிப்பதற்கு சில நிமிஷங்களுக்கு முன்தான் சிகண்டி விடை பெற்றுக் கொண்டான். அவன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த பீஷ்மர் திடீரென்று ‘சிகண்டி!’ என்று அவனை இரைந்து அழைத்தார்.

சிகண்டி திரும்பினான். அவரை நோக்கி சில அடிகள் எடுத்து வைத்த பிறகுதான் பீஷ்மர் தன் தலையை தன் அம்புத் தலையணையிலிருந்து தூக்கி வைத்திருப்பதை கவனித்தான். அதைக் கண்டதும் அவனது மார்புக் கூடி விம்மி விரிந்தது. ஓடி வந்தவன் அர்ஜுனன் அவர் தலைப்புறம் வைத்த அம்புகளை பிடுங்கி எறிந்தான். தன் அம்புறாத்தூணியிலிருந்து மூன்று அம்புகளை எடுத்து பீஷ்மரின் தலைக்கு முட்டுக் கொடுத்தான். பீஷ்மர் மனநிறைவோடு மீண்டும் தன் தலையை சாய்த்துக் கொண்டார்.


எனக்கு மஹாபாரதத்தைப் பற்றி பல குருட்டு யோசனைகள் உண்டு. சிகண்டி வீரன் – பாண்டவர் பக்கம் ஒரு அக்ரோணி சேனைக்குத் தலைவன். பாண்டவர்களின் பிரதம சேனாதிபதியாக நியமிக்கப்பட வேண்டும் என்று பீமனால் அடையாளம் காட்டப்பட்டவன். ஆனால் எதிரில் நிற்கும் பீஷ்மரின் உடலில் அவனுடைய ஒரு அம்பு கூட தைக்கவில்லை என்று பீஷ்மர் சந்தோஷப்படுகிறார். அது எப்படி அத்தனை குறி தவறும்? அந்த குருட்டு யோசனைதான் இந்தக் கதைக்கு கரு…

தொகுக்கப்பட்ட பக்கம்: எழுத்துக்கள்

ராஜ் சந்திரா பரிந்துரைகள்

நண்பர் ராஜ் சந்திரா 2016-இன் தான் படித்தவற்றில் பரிந்துரைப்பவையை ஒரு பின்னூட்டமாகப் போட்டிருந்தார். அதுதான் இன்றையப் பதிவு.

தமிழில் நல்ல எழுத்து எதுவும் போன வருஷம் அவர் கண்ணில் படவில்லை என்று வருத்தப்பட்டுக் கொள்கிறார். நம்ம கேஸ்தான். என் 2016-க்கான பரிந்துரைகளிலிருந்து ராபர்ட் ஹாரிசின் சிசரோ trilogy மற்றும் பெர்னார்ட் கார்ன்வெல்லைப் படிக்கலாம் என்று நினைத்திருக்கிறாராம்.

ராஜின் பட்டியல்:

  1. Mario Vargas Llosa (The Storyteller),
  2. Cormac Mccarthy (Cities of Plain and The Road),
  3. Umberto Eco’s Numero Zero
  4. Four books about Gandhi(by Dennis Allen, David Hardiman and Thomas Weber and William Shirer)
  5. Ian Rankin’s John Rebus series (3 books)
  6. Michael Connelly’s Harry Bosch series(3 books)
  7. Bill Bryson’s One Summer
  8. Lawrence Wright’s The Looming Tower
  9. Nikos Kazantkazis’ Zorba the Greek
  10. Leonard Gordon’s Brothers against the Raj
  11. Louis Menand’s The metaphysical club
  12. Nayanjot Lahri’s Finding forgotten cities

இவற்றில் மைக்கேல் கானலியின் ஹாரி போஷ் புத்தகங்கள் எல்லாவற்றையும் நான் படித்திருக்கிறேன். கானலி எனக்குப் பிடித்த் த்ரில்லர் எழுத்தாளர்களில் ஒருவர், போஷ் என்னைக் கவர்ந்த கதாபாத்திரங்களில் ஒருவர். Brothers against the Raj பல வருஷங்களுக்கு முன் படித்தது. சுபாஷ் போஸ், அவரது அண்ணன் சரத் போஸ் ஆகியோரைப் பற்றிய சிறந்த புத்தகம். நானும் பரிந்துரைப்பேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்

 

ஃபிலிப் கே. டிக் எழுதிய மைனாரிடி ரிபோர்ட்

philip_k_dickமைனாரிடி ரிபோர்ட்டை நான் முதலில் திரைப்படமாகத்தான் பார்த்தேன். நல்ல திரைப்படம். விஷுவலாக மிக நன்றாக இருக்கும். ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கி டாம் க்ருய்ஸ், காலில் ஃபாரல் நடித்தது.

minority_reportபல வருஷங்களுக்குப் பிறகுதான் இந்த திரைப்படத்தின் மூலக்கதை ஃபிலிப் கே. டிக் எழுதிய ஒரு குறுநாவல் என்று தெரிந்தது. டிக் நான் விரும்பிப் படிக்கும் SF எழுத்தாளர்களில் ஒருவர். இந்தப் புத்தகத்தைத் தேடிப் பிடித்துப் படித்தேன்.

திரைப்படம் வந்து பல வருஷங்களாகிவிட்டதால் கதை சுருக்கமாக: எதிர்காலத்தில் மூன்று idiot savants-களுக்கு நடக்கப் போகும் நிகழ்ச்சிகள் என்ன என்று தெரிகிறது. அதை வைத்து குற்றம் நடப்பதற்கு முன்பே – உதாரணமாக கணவன் தன் மனைவியைக் கொலை செய்ய வேண்டும் என்று நினைத்தால் – அடுத்த வெள்ளி இந்தக் கொலை நடக்கப் போகிறது என்பதை கணித்து, அந்தக் கணவனை முன்கூட்டியே கைது செய்துவிடுவார்கள். இப்படிப்பட்ட ஒரு அமைப்பை கதாநாயகன் ஆண்டர்டன் நிறுவி இருக்கிறான். பல வருஷங்களாக இந்த அமைப்பு வெற்றிகரமாக நடந்து வருகிறது. குற்றங்கள் வெகுவாகக் குறைந்துவிட்டன. கொலை என்பது இல்லவே இல்லை. இப்போது அந்த அமைப்பு ஆண்டர்டனே ஒரு கொலை – அதுவும் முன்னே பின்னே தெரியாத ஒருவனை கொலை செய்யப் போவதாக தகவல் வருகிறது. ஆண்டர்டன் என்ன செய்கிறான் என்பதுதான் கதை.

கதையின் கரு நன்றாகத்தான் இருக்கிறது. கதையும் மோசமில்லை. ஆனால் திரைப்படம் கதையை விட பல மடங்கு பெட்டர். சில கதைகளை விஷுவலாகப் பார்க்கும் அனுபவமே வேறு, இந்தக் கதையும் அவற்றில் ஒன்று. திரைக்கதையும் கதையை விட சிறப்பாகவே இருக்கிறது என்றுதான் தோன்றியது. Adjustment Bureau திரைப்படத்திலும் இப்படித்தான் திரைக்கதை கதையை விட பெட்டர் என்று தோன்றியது.

கதையைப் படிக்கலாம். ஆனால் திரைப்படத்தைத் தவற விடாதீர்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: SF

பெர்னார்ட் கார்ன்வெல் எழுதிய ‘Agincourt’

battle_of_agincourtஅசின்குர் (Agincourt) போர் ஐரோப்பிய வரலாற்றில் முக்கியமான ஒன்று. 1415-இல் இங்கிலாந்துக்கும் ஃப்ரான்சுக்கும் நடந்தது. நம்மூரில் பல்லவர்கள்-சாளுக்கியர்கள், பல்லவர்கள்-பாண்டியர்கள், விஜயநகர அரசர்கள்-பாமினி அரசர்கள் இடைவிடாது போரிட்டுக் கொண்டே இருந்த மாதிரி இங்கிலாந்தும் ஃப்ரான்சும் நூறு வருஷங்களுக்கு மேலாக போரிட்டன. அந்த நீண்ட வரலாற்றில் இங்கிலாந்தின் அதிசயத் தக்க வெற்றிகளில் இது ஒன்று.

என்ன அதிசயம்? இங்கிலாந்துப் படை ஃப்ரான்சில் இருக்கிறது. ஐயாயிரம், ஆறாயிரம் வீரர்கள் இருந்திருக்கலாம் என்கிறார்கள். ஃப்ரெஞ்சு வீரர்கள் முப்பதாயிரம் பேராம். போரின் முடிவில் ஆங்கிலேயர்கள் பக்கம் நூற்று சொச்சம் பேர்தான் இழப்பாம். ஃப்ரான்சுக்கு குறைந்தது ஏழாயிரம் பேர் இறந்து போனார்களாம்! தன்னைப் போல ஐந்தாறு மடங்கு பெரிய படையை வென்றது பெரிய ஆச்சரியம் இல்லையா? அதனால்தான் இந்தப் போர் இன்னமும் நினைவு கூரப்படுகிறது.

bernard_cornwellஎன்னுடைய ஃபேவரிட் சரித்திர மசாலா எழுத்தாளரான பெர்னார்ட் கார்ன்வெல் இந்தப் பின்புலத்தை வைத்து எழுதி இருக்கும் நாவல் இது.

வழக்கம் போல ஒரு போர் வீரன். நிக்கோலஸ் ஹூக். வில்லாளி. இவனுக்கு அதிகாரியாக இருக்கும் ஒரு பாதிரி ஒரு பெண்ணை கற்பழிக்க முயற்சிக்கும்போது ஹூக்கின் மண்டைக்குள் ‘தடு’ என்று ஒரு குரல் கேட்கிறது. கடவுளே பேசுவது போல இருக்கிறது. பாதிரியை அடிக்கிறான். ஹூக்கைக் கட்டி வைத்துவிட்டு கற்பழிப்பு நடந்தேறுகிறது. பிறகு ஹூக்குக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இன்னொரு உயர் அதிகாரியின் உதவியால் இங்கிலாந்திலிருந்து தப்பி ஃப்ரான்ஸுக்கு ஓடுகிறான். அங்கே ஸ்வாசோ (Soissons) நகரில் ஒரு ஆங்கிலேய வில் வீரர்களின் கூலிப்படையில் வில்லாளியாக சேர்கிறான்.

ஃப்ரான்சின் உள்நாட்டுப் போரில் ஸ்வாசோ நகரம் தாக்கப்படுகிறது. மக்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். ஆங்கிலேய வில்லாளிகளின் விரல்கள் வெட்டப்படுகின்றன. ஏறக்குறைய எல்லாருமே கொல்லப்படுகிறார்கள். ஹூக் நாயகன், அதனால் தப்பித்துவிடுகிறான். மெலிசாண்டே என்ற ஒரு பெண்ணையும் – நாயகி – காப்பாற்றுகிறான்.

ஸ்வாசோ நகரப் படுகொலையை நேரில் பார்த்தவன் என்பதால் ஹுக்கின் சாட்சியம் ஆங்கிலேய அரசுக்கு முக்கியமாக இருக்கிறது. பல அதிகாரிகள் அவனது சாட்சியத்தை எழுதிக் கொள்கிறார்கள். அரசன் ஐந்தாம் ஹென்றியே அவனிடம் வந்து பேசுகிறான். அவன் பாதிரியை அடித்த குற்றம் மன்னிக்கப்படுகிறது. ஹூக் ஒரு பிரபுவின் படையில் சேர்கிறான். பெரும்படை ஃபிரான்சுக்கு கிளம்புகிறது.

ஆனால் முதல் போரே படு சிரமம். ஹார்ஃப்ளர் என்ற கோட்டையைக் நீண்ட முற்றுகைக்குப் பிறகுதான் கைப்பற்ற முடிகிறது. அதற்குள் பாதிப் படைக்கு பயங்கர பேதி. இந்தப் போரில் கோட்டையைப் பிடிக்க ஒரு சுரங்கம் தோண்டுகிறார்கள். அதற்குள் நடக்கும் சண்டை சிறப்பான சித்தரிப்பு.

மழைக்காலம் ஆரம்பிக்கப் போகிறது, ஆனால் இந்தக் கோட்டைக்கான போரே இழுத்துவிட்டதால் நாடு திரும்புவதைத் தவிர வேறு வழியில்லை. ஹென்றி ஃப்ரெஞ்சு அரசை வெறுப்பேற்றுவதற்காக கடலோரமாகவே சும்மா வேறு ஒரு நகரத்துக்கு – Calais – தன் படையை நடத்திச் செல்கிறான். உன் நாட்டில் நான் படை நடத்துவேன், உன்னால் என்னை என்ன செய்ய முடியும் எனறு பந்தா காட்டுவதற்காக.

நடுவில் ஒரு ஆற்றைக் கடக்க வேண்டும். பாலங்கள் கிடையாது. இறங்கித்தான் கடக்க வேண்டும். ஃப்ரெஞ்சுப் படை அவர்களைத் தடுத்து நிற்கிறது. வேறு வழியில்லாமல் கொஞ்சம் உள்ளே போய் கடக்க வேண்டி இருக்கிறது. கொண்டு வந்த உணவு தீர்ந்துவிடுகிறது.

இப்போது பெரும்படை அவர்களை எதிர்த்து நிற்கிறது. ஆனால் மழை பெய்திருக்கிறது. சேறு சகதியில் ஃப்ரெஞ்சு குதிரைகளும் வீரர்களும் சுலபமாக நடந்து வந்து ஆங்கிலேயர்களை தாக்க முடியவில்லை. ஆங்கில வில்லாளிகளின் அம்பு மழையில் வீரர்கள் செத்து விழுகிறார்கள்.

கார்ன்வெல்லின் அத்தனை பலங்களும் இந்தக் கதையில் இருக்கின்றன. அவரது போர்களில் ரத்தம் தெறிக்கிறது. மலமும் சிறுநீரும் பங்கு வகிக்கின்றன. (போரின் நடுவில் பேதியால் அவதிப்படும் வீரர்கள் என்ன செய்வார்கள்?) உணவுக்காக அல்லல்படுகிறார்கள். நாயகி தவிர்த்த மற்ற பெண்கள் போகப் பொருட்கள்தான். பாதிரிகள் பொன், பெண் என்று அலைகிறார்கள். இவை அனைத்தும் கதையின் நம்பகத்தன்மையை அதிகரிக்கின்றன.

இலக்கிய தரிசனம் என்று தேடுபவர்கள் இதையெல்லாம் தவிர்த்துவிடலாம். ஆனால் எனக்கு இது இலக்கியத்துக்கு மிக அருகிலாவது இருக்கிறது. படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: கார்ன்வெல் பக்கம்

ஞானக்கூத்தன் கவிதைகள்

Gnanakkootthanஞானக்கூத்தன் மறைந்தபோது அவருக்கு அஞ்சலியாக இந்தப் பதிவை எழுத ஆரம்பித்தேன். கவிதை கொஞ்ச தூரம் என்பதால் பாதியிலேயே நின்றுவிட்டது. இந்த வருஷமாவது தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கும் சில பல புத்தகங்கள், கவிதை போன்ற வடிவங்களைப் படிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். ஞானக்கூத்தன் விஷ்ணுபுரம் விருது வேறு வென்றவர். இந்தப் பதிவையும் முழுமை செய்தால் போல இருக்கும் என்றுதான் ஞானக்கூத்தன் கவிதைகளப் படித்துப் பார்த்தேன்.

எனக்கு கவிதைகளை ரசிக்கும் அறிவு மிகக் குறைவு. ஆனானப்பட்ட ஜெயமோகனே இரண்டு மூன்று முறை முயற்சி செய்து கைவிட்ட கேஸ். மேலும் ஒரு கவிதையில் நான் நிறைய எதிர்பார்க்கிறேன். கவிதைக்கு மொழி சிறையாக இருக்கக் கூடாது; சொல்வது பொதுவாக சுருக்கமாக இருக்க வேண்டும், நாலு வரி அதி உத்தமம், நூறு வரி வரை படிக்கலாம். அந்த நாலு வரிகளில் சொல்லும் விஷயம் மனதில் ஆயிரம் ஆயிரம் எண்ணங்களை உருவாக்க வேண்டும். அப்படிப்பட்ட கவிதைகளை நான் அபூர்வமாகவே பார்க்கிறேன். இந்தக் காலத்து கவிதைகள் – அதுவும் புதுக் கவிதைகள் மிக அபூர்வமாகத்தான் என் மனதைத் தொடுகின்றன.

வெறும் வார்த்தை விளையாட்டு எனக்குக் கவிதை அல்ல. பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் பல்லவம் அனுங்க என்று கம்பனே பாடினாலும் அது வெறும் சந்தத்தில் வித்தை காண்பிப்பதுதான். கறங்கு கால் புகா; கதிரவன் ஒளி புகா என்பதெல்லாம் வெறும் சொல் நயம்தான். To put it uncharitably, அலங்கார வார்த்தைகள் மட்டுமே. சங்கக் கவிதைகள்தான் என் எதிர்பார்ப்புகளை ஓரளவு பூர்த்தி செய்கின்றன, ஆனால் அவற்றின் மொழி சிரமமாக இருக்கிறது, பல சமயங்களில் மொழிபெயர்ப்பு தேவைப்படுகிறது. சுளுவாகக் கிடைப்பவை கோனார் நோட்ஸ்கள்தான், மொழிபெயர்ப்புகள் அல்ல. கோனார் நோட்ஸ்கள் கவித்துவம் ஏதாவது இருந்தால் அவற்றை தவறாமல் கொன்றுவிடுகின்றன.

ஞானக்கூத்தன் எனக்கு அறிமுகமானது அவரது புகழ் பெற்ற ‘தலைவரார்களேங்! (காலவழுவமைதி)‘ (1969) கவிதை மூலம்தான். கவிதையைப் பொறுத்த வரையில் ஞானசூன்யமான எனக்கே அது பிரமாதமான கவிதைதான். இத்தனைக்கும் அது என் வரையறைகளுக்குப் பொருந்தவில்லை. அதை மொழிபெயர்ப்பது சிரமம். 1990-க்கு பிறகு பிறந்த தமிழர்களே அதைப் பெரிதாக ரசிப்பார்களா என்பது சந்தேகம்தான். ஒரு சிரிப்புக்கு மேல் பெரிதாக சிந்தனைகளை இந்தக் கவிதை உருவாக்கவில்லைதான். காற்றில் அலையும் சிறகு போல படிமம் கிடிமம் இல்லை. ஆனால் ஒரு காலகட்டத்தை இத்தனை ரத்தினச் சுருக்கமாக – பத்து வரி இருக்குமா? – புகைப்படம் பிடிப்பது போல காட்டுவது கவிதையில்தான் முடியும். நான் என்றாவது எனக்குப் பிடித்த கவிதைகள் என்று தொகுத்தால் நிச்சயம் இடம் பெறும் கவிதை.

ஞானக்கூத்தன் என்னைத் தொட்டது வாழ்வின் மோசமான ஒரு தருணத்தில். அவரது ‘நீண்ட நாட்களாகப் பழகிய பேனா‘ ஒரே நேரத்தில் ஆறுதலையும் உற்சாகத்தையும் தந்த ஒரு கவிதை.

அவரது கவிதைகள் எல்லாம் இந்தத் தளத்தில் படிக்கக் கிடைக்கின்றன. முயன்று பார்ப்போம் என்று படித்துப் பார்த்தேன்.

முதலில் ஒரு அற்ப விஷயம். வார்த்தைகளை கன்னாபின்னாவென்று உடைக்கிறார். போன வாக்கியத்தை ‘வார் த்தைக ளை கன் னாபின்னாவென்று உடைக் கிறார்’ என்று எழுதிவிடுவார். இதில் என்ன கிடைக்கிறது, கவித்துவம் எப்படி அதிகரிக்கிறது என்பதெல்லாம் எனக்கு எட்டவில்லை. சும்மா பந்தா மாதிரித்தான் தெரிகிறது. அற்ப விஷயம்தான், ஆனால் எனக்கு அவ்வப்போது எரிச்சலாக இருந்தது.

பவழமல்லி நல்ல சங்கக் கவிதைகளின் தரத்தில் அமைந்தது. பார்த்தல் ஓரிரு மாற்று குறைவுதான், இருந்தாலும் எனக்குப் பிடித்திருந்தது. என்ன மாதிரி முதல் பார்வையில் வெறும் கிண்டல் மாதிரி தெரியலாம். ஆனால் எனக்கு அது நல்ல கவிதை. சரிவு சிறந்த ஹைக்கூ இல்லாவிட்டால் வெட்டி பந்தா. உங்கள் கண்ணோட்டத்தைப் பொறுத்தது.

என் சிவனே கவிதையில் வரும் இந்த வரிகள்

நீரை நோக்கிக் குனிந்தால் என்
பிரதிபலிப்பின் சுமை பொறாமல்
அலைகள் விரையும் மறுகரைக்கு.

எனக்கு லா.ச.ரா.வின் ஒரு வரியை – ‘கண்ணாடியில் பிம்பம் விழும் த்வனி‘ நினைவுபடுத்தியது.

சினிமாச் சோழர், தோழர் மோசிகீரனார், மஹ்ஹான் காந்தி மஹ்ஹான், யெதிரெதிர் உலகங்கள், தமிழ், அதனால் என்ன? போன்ற கவிதைகளில் தெரிவது நக்கல் மட்டுமே. என்னைப் பொறுத்த வரையில் அந்த நக்கல் இலக்கியமாக மாறி இருப்பது தலைவரார்களேங்! கவிதையில் மட்டும்தான்.

ஓரளவு நல்ல கவிதைகள் என்று எனக்குப் பட்டவை ‘பரிசில் வாழ்க்கை‘, ‘போராட்டம்‘, ‘விட்டுப் போன நரி‘, ‘நாய்‘, ‘தணல்‘, அம்மாவின் பொய்கள், அன்று வேறு கிழமை, விடுமுறை தரும் பூதம். குறிப்பாக விடுமுறை தரும் பூதம் வேலைக்குப் போகும் அனைவரும் தன்னைப் பொருத்திப் பார்த்துக் கொள்ளக் கூடிய universal appeal உள்ள ஒரு கவிதை. ஆனால் ‘பரிசில் வாழ்க்கை’ ‘காலவழுவமைதி’ கவிதையின் கொஞ்சம் பலவீனமான மறுபதிப்பு என்று தோன்றியது.

நான் பரிந்துரைக்கும் கவிதைகள்:

என் கவிதை ரசனையில் யாருக்காவது நம்பிக்கை இருந்தால்தான் ஆச்சரியம். அதனால் ஜெயமோகன் பரிந்துரைக்கும் ஞானக்கூத்தன் கவிதைகளின் பட்டியல் கீழே:

இவற்றில் திண்ணை இருளில் எனக்குப் புரியாத கவிதை. மேசை நடராசர், எலும்புக்கூடு, குப்பைத் துணை ஆகியவை மோசமில்லை, ஆனால் என் மனதைத் தொடவில்லை.

ஞானக்கூத்தன் நல்ல கவிஞர், சராசரிக்கு மிக மேலே இருக்கும் கவிஞர் என்று எனக்கே தெரிகிறது. ஆனால் இத்தனை கவிதை படித்த பிறகு எனக்கு நாலுதான் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய கவிதையாக இருக்கிறது. இப்படி நாலு கவிதைக்கா விஷ்ணுபுரம் விருது எல்லாம் என்று ஒரு நிமிஷம் தோன்றத்தான் செய்தது. இதுதான் கவிதையின் இயல்பு, ஆயிரம் கவிதை படித்தால் ஒன்றிரண்டுதான் தேறும் என்று எனக்கு ரொம்ப நாளாகவே ஒரு சந்தேகம். அத்தனை பொறுமை எனக்கில்லை. இது என் குறைதான், என்னால் குப்பை உரைநடையைப் படித்துவிட்டு கடாசிவிட முடிகிறது, ஆனால் கவிதை என்றால் பொறுமை இருப்பதில்லை.

கவிதையிலிருந்து விலகி இருப்பதுதான் என் குணத்துக்கு சரி வரும். ஆனாலும் பிடிவாதமாக தம் கட்டி சங்கப் பாடல்களைப் படித்து பார்க்கப் போகிறேன்…

தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள்

தொடர்புடைய சுட்டிகள்:
ஞானக்கூத்தனின் தளம்
ஞானக்கூத்தனின் விஷ்ணுபுரம் ஏற்புரை
பாவண்ணனின் சிறந்த அலசல்
ஞானக்கூத்தன் பேட்டி
எனக்குப் பிடித்த ஒரு ஞானக்கூத்தன் கட்டுரை – ‘பெண்கள்பால் வைத்த நேயம்’