அசோகமித்திரனுக்கு மிகைப்படுத்தப்பட்ட அஞ்சலி – ஜெயமோகன்!

எனக்கு யூட்யூப் உரைகளையோ, ஆடியோ பதிவுகளையோ உட்கார்ந்து கேட்கும் பொறுமை கிடையாது. ஆனால் ஜெயமோகனின் அஞ்சலி உரை நெகிழ வைத்தது. அசோகமித்திரன் போன்ற ஒரு மாபெரும் எழுத்தாளர் எத்தனை லௌகீக சிரமங்களை சந்திக்க வேண்டி இருந்தது, கார் டிரைவராக, அலுவலகத்தில் ஏறக்குறைய ஒரு பியூனாக வேலை செய்து, மனைவி அப்பளம் போட்டு விற்று வாழ்க்கையின் தேவைகளை சமாளித்தது என்று கேட்கும்போது இத்தனை தடைகளை மீறி இலக்கியம் படைத்திருக்கிறாரா என்று அசோகமித்திரன் மேல் உள்ள மரியாதை மேலும் மேலும் அதிகரித்தது. அசோகமித்திரன் என்ற எழுத்தாளர் மாபெரும் மேதை என்றால் அசோகமித்திரன் என்ற மனிதர் மாபெரும் லட்சியவாதி என்று தோன்ற வைத்த உரை. இந்த மாபெரும் லட்சியவாதியின் எழுத்தில் அவ்வப்போது தெரியும் நிராசை, cynicism எல்லாவற்றுக்கும் இந்தத் தடைகள்தான் ஊற்றுக்கண்ணோ?

ஆனால் அசோகமித்திரனின் மகன் ராமகிருஷ்ணன் இவை தகவல் பிழைகள் என்று மறுத்திருக்கிறார். அவருக்கு குசும்பு அதிகம். ஜெயமோகன் இப்படி ஒரு சம்பவம் நடந்தது என்று தகவல் கொடுத்தால் அது அவரது தவறான ‘கருத்து’ என்கிறார். என் தந்தை காரோட்டக் கற்றுக் கொள்ள முயன்றார், ஆனால் கற்றுக் கொள்ளவில்லை என்று அசோகமித்திரனின் மகனே சொல்லும்போது அசோகமித்திரன் இந்துமதியின் குழந்தைகளை காரில் வைத்து ஓட்டிக் கொண்டு சென்றதை தானே பார்த்ததாக ஜெயமோகன் சொல்வது நடந்திருக்க வாய்ப்பில்லைதான். கார் சரியாக ஓட்டத் தெரியாதவரை யாரும் ட்ரைவராக வைத்துக் கொள்ளப் போவதில்லை.

தன் எழுத்தில் மிகைப்படுத்துதல் இருக்கவே கூடாது, அடக்கியே வாசிக்க வேண்டும் என்று காலம் பூராவும் முயன்ற ஒரு எழுத்தாளருக்கு செலுத்தும் அஞ்சலி மிகைப்படுத்தப்பட்டிருப்பது நகைமுரணாகத்தான் இருக்கிறது.

ஆனால் ஜெயமோகனுக்கு அசோகமித்திரன் மேல் உள்ள மரியாதையை நான் நேருக்கு நேர் பேச்சில் பல முறை கேட்டிருக்கிறேன். அது போலித்தனமற்ற, உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வரும் உண்மையான உணர்வு என்பதை அவர் பேசுவதை ஒரு முறை கேட்டிருந்தால் கூட, அல்லது அசோகமித்திரனைப் பற்றி அவர் எழுதி இருக்கும் ஒரு கட்டுரையைப் படித்தால் கூட தெள்ளத் தெளிவாக புரியும். ஜெயமோகன் எங்கோ எதையோ கேட்டிருக்கலாம், அதை இன்னும் கொஞ்சம் மிகைப்படுத்திச் சொல்லிவிட்டார் என்பது அவரது உணர்வைப் பொய்யாக்கிவிடாது. அட சுவாரசியத்துப்படுத்துவதற்காக தெரிந்தேதான் சொன்னார் என்றே வைத்துக் கொள்வோமே, அது அவர் சொல்லும் மற்ற 99 விஷயங்களையும் பொய்யாக்கிவிடுமா என்ன?

அவர் சொன்னது தவறு, தகவல் பிழை என்று சுட்டிக் காட்டுங்கள். சரி அவர் மனதறிந்து தன் அஞ்சலி கவனிக்கப்பட வேண்டும், பேசப்பட வேண்டும் என்பதற்காக பொய்யே சொன்னார் என்றே வைத்துக் கொள்வோம். ஆனால் அவர் அசோகமித்திரனை என்ன கொச்சைப்படுத்திவிட்டார், கேவலப்படுத்திவிட்டார்? அசோகமித்திரன் கோடீஸ்வர வாழ்க்கை வாழ்ந்துவிட்டாரா? அவருடைய புத்தகங்கள் லட்சக்கணக்கில் விற்று அவருக்கு எக்கச்சக்கமாக ராயல்டி வந்ததா? அவர் இப்படி எல்லாம் கஷ்டப்பட்டார் என்று ஜெயமோகன் சொல்கிறார்; இல்லை இல்லை அவர் இப்படி கஷ்டப்படவில்லை, வேறு மாதிரி கஷ்டப்பட்டார் என்று விஷயம் தெரிந்தவர்கள் சொல்கிறீர்கள், அவ்வளவுதானே! இந்தத் தகவல் பிழை, அல்லது பொய், அவரது உரை தரும் உணர்வை மாற்றுகிறதா என்ன?

ஆனால் இணையத்தில் வரும் கமெண்டுகளைப் பார்த்தால் இத்தனை காழ்ப்பா என்று தோன்றத்தான் செய்கிறது. அசோகமித்திரன் குடும்பத்தினர் கூட அவரைப் போலவே அடக்கித்தான் வாசிக்கிறார்கள், ஆனால் கிடைத்தது சான்ஸ் என்று நிறைய பேர் – குறிப்பாக விமலாதித்த மாமல்லன் – குதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஜெயமோகனுடன் எனக்கு கடந்த ஓரிரு வருஷங்களில் சில மனஸ்தாபங்கள் ஏற்பட்டிருக்கின்றன. என் மதிப்பிற்குரிய சில நெருங்கிய நண்பர்களுக்கு அவரோடு மனவிலக்கே ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அந்த மனஸ்தாபங்கள் நான் மதிக்கும் மனிதர்களில் ஜெயமோகனும் ஒருவர் என்ற நிலையை எந்த விதத்திலும் மாற்றவில்லை. அவரும் மனிதர்தான், விண்ணிலிருந்து நேராக இறங்கி வந்த தெய்வம் அல்லர், அவருடைய அணுகுமுறையிலும் தவறுகள் ஏற்படக் கூடும் என்பதைத்தான் இந்த மனஸ்தாபங்கள், மிகைப்படுத்தல்கள் எனக்கு காட்டுகின்றன.

ஆனால் ஜெயமோகனின் சாதனைகளில் பத்து சதவிகிதமாவது செய்த பிறகுதான் எனக்கு அவரை குறை கூறும் அருகதை வரும் (அவரைக் குறை கூறும் அருகதை, அவரது கருத்துகளை விமர்சிப்பதற்கான அருகதை அல்ல) என்று நான் உறுதியாக நம்புகிறேன். அப்படி குறை கூறும் அருகதை இன்று இருந்திருந்தாலும் இதை உணர்ச்சிவசப்பட்ட ஒரு தருணத்தில் தான் கேட்ட விஷயத்தை தவறுதலாக கண்டேன் என்று சொல்லிவிட்டார் என்று மேலேதான் போயிருப்பேன். சாதனைகள் என்று நான் இங்கே சொல்வது இலக்கியத்துக்கு ஆக்கபூர்வமான ஒரு இயக்கத்தை உருவாக்கி வழி நடத்தி செல்வதைத்தான், அவரது எழுத்தை அல்ல. அவரது எழுத்தின் தரத்தில் ஒரு சதவிகிதத்தை அடைந்தால் அதுவே எனக்கு பெரிய சாதனை.

என்ன,

நான் அடைந்த நினைவுப்பதிவு மற்றும் என் காட்சிப்பதிவு பிழையாக இருக்கலாமென்றும் ஒப்புகிறேன்

என்று அரைகுறையாக இருக்கலாம், நடந்திருக்கலாம் என்றெல்லாம் சொல்லாமல், ஆம் தவறுதலாக சொல்லிவிட்டேன் என்று அவர் சொல்லி இருக்கலாம் இருக்க வேண்டும்.

அசோகமித்திரனை நான் கொச்சைப்படுத்துகிறேன், விளம்பரம் தேடுகிறேன் என்றெல்லாம் அவரது குடும்பத்தினர் என்னைப் பற்றி எழுதியிருக்கிறார்கள்

என்பது இன்னொரு தகவல் பிழை என்று தோன்றுகிறது. ஃபேஸ்புக்கில், இணையத்தில் அப்படி எதுவும் காணப்படவில்லை. சில முறை ஜெயமோகன் அவரது பதிவுகளுக்கு ஒரு எடிட்டர் மற்றும் fact-checker வேண்டுமென்று தோன்ற வைப்பார், அப்படிப்பட்ட ஒரு தருணம் இது.

நான் இப்படி இது சின்ன விஷயம்தான் என்று எண்ணுவதை என் மதிப்பிற்குரிய, நெருங்கிய நண்பர்கள் சிலர் வன்மையாக மறுக்கிறார்கள், என் மேல் கொஞ்சம் வருத்தப்படுகிறார்கள். என்ன செய்ய, என் சிந்தனை முறை அப்படித்தான்.

பின்குறிப்பு:
மனஸ்தாபங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும், அசோகமித்திரன் பற்றி அவர் சொல்லி இருக்கும் சில கருத்துகளிலிருந்தும் நான் பெரிதும் வேறுபடுகிறேன்.

சென்னையின் பிராமண வட்டம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனங்களால் ஆனது. அவை நம் காலத்தில் வாழ்ந்த மேதையை கைவிட்டன என்பது வரலாறு

என்று எழுதி இருக்கிறார். பிராமணர்கள் அசோகமித்திரன் பிராமணர் என்ற காரணத்தால் அவருக்கு உதவி செய்திருக்க வேண்டுமா என்ன? எஸ்.எஸ். வாசனுக்கு அசோகமித்திரன் பிராமணர் என்ற காரணத்தால் அவர் மீது ஒரு soft corner இருந்திருக்க வேண்டுமா? ஏன் ஏவிஎம் செட்டியார் அவரது புத்தகங்களைப் பதித்திருந்தால் கசக்குமா? அப்படி அவரை பிராமணர் என்பதற்காக சென்னை பிராமண வட்டம் தூக்கிப் பிடிக்க வேண்டும் என்று ஜெயமோகன் கருதினால் திராவிட இயக்கத்து ‘இழிமகன்கள்’ அவரை பிராமணர் என்பதற்காக நிராகரிப்பதில் என்ன தவறு காண்கிறார்? இன்று இணையத்தில் இந்த விஷயத்துக்காக அவரைக் கழுவி கழுவி ஊற்றுவதில் முதல் இடம் விமலாதித்த மாமல்லனுக்குத்தான். வி. மாமல்லனின் அணுகுமுறை எனக்கு இசைவானது அல்ல. ‘ங்கொய்யால எங்கிட்டயா! உங்க எல்லாரையும் தோலுரித்து உங்க உண்மை சொரூபத்தை காட்டுவேண்டா!’ என்பதெல்லாம் ஒவ்வொரு சின்னத் தவறையும் ஊதிப் பெருக்க வைக்கிறது. ஆனால் அவர் தன் மனதுக்கு நேர்மையாக மட்டுமே கருத்துகளைத் தெரிவிக்கிறார் என்பதிலோ, சின்னதோ பெரியதோ, தவறைத்தான் பொதுவாக சுட்டிக் காட்டுவார் என்பதிலோ எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவரும் பரீக்‌ஷா ஞானியும் எந்த பிராமண வட்டத்தின் குற்ற உணர்ச்சியையும் வெளிப்படுத்தவில்லை. சுத்தப் பிதற்றல்.

பின்-பின்குறிப்பு: தமிழ் எழுத்தாளர்களில் இருவர் – புதுமைப்பித்தன், அசோகமித்திரன் – மேதைகள் என்று ஜெயமோகன் தன் அஞ்சலியின் ஆரம்பத்தில் சொல்கிறார். மூன்று மேதைகள் – ஜெயமோகனையும் சேர்த்து – என்பது என் அபிப்ராயம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: அசோகமித்திரன் பக்கம், ஜெயமோகன் பக்கம்

செகாவின் ‘Chorus Girl’

எனக்குப் பிடித்த எழுத்தாளர்களின் செகாவ் முதல் வரிசையில் இருப்பவர். சிறு வயதிலேயே அவர் எழுத்து நல்ல இலக்கியம் என்று புரிந்துவிட்டது. ஆனால் இன்று மீண்டும் படித்துப் பார்க்கும்போது இதை இலக்கியம் என்று இன்றைய இளைஞர்கள் நினைப்பார்களா என்று சந்தேகமாக இருக்கிறது.

உதாரணமாக ஆண்டன் செகாவின் Chorus Girl சிறுகதையை எடுத்துக் கொள்ளுங்கள். ஆங்கில மொழிபெயர்ப்பு இங்கே. புதுமைப்பித்தன் தமிழில் மொழிபெயர்த்தது இங்கே.

ஒரு நாடகீயமான தருணம். சங்க காலத்திலிருந்தே தமிழர்களுக்கு பழக்கமான ஒரு தருணம். நாடகக்காரி ஒருத்தி. அவள்’பரத்தை’, ‘தலைவன்’ ‘தலைவி’யைத் தவிக்கவிட்டு இவளிடம் வந்து போய்க் கொண்டிருக்கிறான். இன்னும் சுலபமாகச் சொன்னால் கண்ணகி-கோவலன்-மாதவி. என்ன, இந்த மாதவி பலரிடம் பழகுபவள். ‘பரத்தை’யிடம் ‘தலைவி’ அதாவது மனைவி – புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பில் சொன்னால் குடும்ப ஸ்த்ரீ – என் கணவன் அலுவலகத்தில் பணத்தைத் திருடிவிட்டான், ஜெயிலுக்கு அனுப்பிவிடுவார்கள், பணத்தைத் திருப்பிக் கொடு என்று அழுகிறாள். கணவன் பெரிதாக எதையும் கொடுத்துவிடவில்லை. இருந்தாலும் நாடகக்காரி குடும்ப ஸ்த்ரீ கொடுக்கும் அழுத்தத்தால் வேறு யார் யாரோ கொடுத்த பணத்தை எல்லாம் அவளுக்கு கொடுத்தனுப்புகிறாள். என் உத்தம மனைவியை போயும் போயும் உன்னைப் போன்ற ஒரு பரத்தை காலில் விழும் நிலைக்குக் கொண்டு வந்த நான் எப்பேர்ப்பட்ட கயவன், சீச்சீ தூத்தூ என்று கணவனும் போய்விடுகிறான். இவளுக்கு அழுகையாக வருகிறது. அவ்வளவுதான் கதை.

மூன்றே மூன்று பாத்திரங்கள்தான். கணவன், மனைவி, நாடகக்காரி. மூவரின் மனமும் எப்படி யோசிக்கிறது என்பது நன்றாகப் புரிகிறது. மனைவியை மொத்தமாக கை கழுவிவிடவில்லை என்றாலும் தான் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டதின் ஆங்காரம், கணவனுக்கு ஒரு ஆபத்து என்றதும் அச்சம், கணவனும் அவனுக்கு வேலையும் இல்லாவிட்டால் தான், தன் பிள்ளைகளின் எதிர்காலம் சூனியம்தான் என்ற பொருளாதார நிதர்சனம், அதைத் தவிர்க்க எத்தனை அவமான உணர்ச்சி இருந்தாலும் சமூக அந்தஸ்து இல்லாத இந்த நாடகக்காரியின் காலிலும் விழுவதற்கு தன்னைத் தயார்படுத்திக் கொள்ளுதல் என்று இரண்டு பக்கத்தில் அவளுடைய பெரிய சித்திரத்தைத் தீட்டி இருக்கிறார். கணவன் நாடகக்காரியால் கவரப்பட்டாலும் குடும்பப் பெண்ணான தன் மனைவி தன்னைக் காப்பாற்ற இந்த நாடகக்காரியின் வீட்டுக்கே வந்து அவளிடம் கெஞ்சுவதைப் பார்த்ததும் மனம் ‘திருந்திவிட்டான்’. இந்த சம்பிரதாயமான கதையில் நாடகக்காரியின் நிலை என்ன? இவள் யார், எப்படிப்பட்டவன் என்று தெரிந்தும் அவனாக வந்தான். மனைவி வயிறெரிந்து சபிப்பதைத் தாங்க முடியாமல் யார் யாரோ கொடுத்த பணத்தை எல்லாம் எடுத்துக் கொடுக்கிறாள். ஆனால் அவளுக்கு சமூக அந்தஸ்து இல்லை என்றால் இந்த சிஸ்டம் எப்படிப்பட்டது?

அதிலும் மனைவி புரியாமல் அல்லது புரிந்து கொள்ள விரும்பாமல் எல்லாப் பணத்தையும் உன்னிடம் கொடுத்துவிட்டான் என்று அழும் காட்சிகள் மெல்லிய நகைச்சுவை வேறு கதைக்கு மெருகேற்றுகின்றன.

ஒரு நாடகீய தருணத்தை மிகவும் subtle ஆக வெளிப்படுத்தி இருக்கும் கதை. அதெல்லாம் ஒரு மாஸ்டருக்குக்குத்தான் கை வரும். ஆனால் இந்தக் கதை இன்றைய இளைஞர்களுக்கு அப்பீல் ஆகுமா? நான் என் பெண்ணிடம் படிக்கச் சொல்லலாம், ஆனால் அவள் இப்போதெல்லாம் நான் பரிந்துரைத்தேன் என்றால் அதைப் படிக்க மாட்டேன் என்கிறாள். 🙂 இந்தத் தளத்தை படிப்பவர்களில் இளைஞர்கள் யாராவது இருந்தால், இல்லை உங்களுக்கு யாராவது இளைஞர்களைத் தெரிந்திருந்தால் சொல்லுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: செகாவ் பக்கம்

அசோகமித்ரன் மறைவு

அசோகமித்ரனை நான் சந்தித்ததில்லை. சந்திக்க முயன்றது கூட இல்லை. முன்னே பின்னே தெரியாதவர்கள் வந்து தொந்தரவு கொடுப்பதை மரியாதைக்காக வெளியே சொல்லாமல் சகித்துக் கொள்வார் என்று நினைப்பு. ஆனால் அவரைத்தான் என் மனதுக்கு நெருக்கமான எழுத்தாளராக எப்போதும் உணர்ந்திருக்கிறேன். இன்று பெரும் இழப்பு ஏற்பட்ட மாதிரி உணர்கிறேன்.

அவரை எனக்குப் பிரியமானவராக உணர்ந்த கணம் நன்றாக நினைவிருக்கிறது. என் சிறு வயதில் – அசோகமித்ரனைப் பற்றி எந்தவிதப் பிரக்ஞையும் இல்லாத வயதில் – குமுதத்தில்? (இல்லை வேறு ஏதாவது வாரப் பத்திரிகையா?) ஒற்றன் நாவலின் ஒரு பகுதியைப் படித்தேன். மனிதர் டென்வரில் இருந்து சான் ஃப்ரான்சிஸ்கோ போக பஸ் பிடிக்க வேண்டும். நண்பர் பஸ் ஸ்டாண்டில் இறக்கிவிட்டுப் போய்விட்டார். ஏழு மணிக்கோ என்னவோ பஸ். பஸ்ஸைக் காணோம். சான் ஃப்ரான்சிஸ்கோவுக்கு நேரத்துக்குப் போகவில்லை என்றால் எல்லா திட்டங்களும் பாழாகிவிடும். நண்பர்களுக்கு நிறைய சிரமம் ஏற்படும். இறக்கிவிட்ட நண்பரோ போய்விட்டார். புது இடம், என்ன செய்வது? ஏழு மணிக்கு லாரி மாதிரி ஒரு வண்டி வருகிறது. ட்ரைவர் பஸ்ஸுக்காக காத்திருக்கிறாயா, இதுதான் பஸ் என்கிறார். அவ்வளவுதான் கதை. இதெல்லாம் ஒரு கதையா என்ற கடுப்பு ஏற்பட்டது. என் இருபத்தைந்து வயதில் பீஹார் மாகாணத்தில் தன்பாதிலிருந்து சிந்திரிக்கு செல்ல பஸ்ஸுக்கு காத்திருந்த போது பெரிய ட்ராக்டர் மாதிரி ஒரு வண்டி வந்து இதுதான் பஸ் என்று எனக்குப் புரிந்த அதே கணத்தில்தான் இந்தக் கதை புரிந்தது. என்றோ எப்போதோ படித்த கதை அப்போது சரியாக நினைவு வந்து புரியவும் புரிந்தது எனக்கே அதிசயமாகத்தான் இருக்கிறது. இந்தக் கணத்தைத்தான் கதையாக எழுதி இருக்கிறார் என்று தெரிந்தபோது இத்தனை நுணுக்கமாக, நுட்பமாக ஒருவர் வாழ்க்கையைப் பார்த்திருக்கிறார் என்று ஏற்பட்ட பிரமிப்புதான் எனக்கும் அவருக்கும் உள்ள ‘உறவின்’ தொடக்கப் புள்ளி.

அவருடைய பிரபலம் ஆகாத பல கதைகளுக்கு நான் பரம ரசிகன். திருப்பம் கதையில் கிராமத்தானுக்கு நகரத்தில் கார் ஓட்டும் கலை கைவரும் அந்த ஒரு கணத்தைப் பற்றி எழுதி இருப்பார். என் வாழ்விலும் அப்படி ஒரு கணம் உண்டு. அப்படி சில பல திறமைகள் கைகள் வந்த ஆறேழு கணங்கள் எனக்கு உண்டு. இருவர் என்ற குறுநாவல் எனக்கு மிகவும் பிடித்தமானது. வைத்தீஸ்வரன் கோவில் தாசிக்கும் அவளை வைத்திருந்தவன் மகனுக்கும் உள்ள பந்தம் பற்றிய கதை.

புகழ் பெற்ற பிரயாணம் கதையின் கடைசி வரியின் தாக்கம் என்றைக்கும் மறக்கப் போவதில்லை. ‘வாத்யாரே, நீ மேதை!’ என்று தோன்றிய கணம்.

எனக்கு இப்போது எழுதவே பிடிக்கவில்லை. என் வருத்தத்தை யாருக்காக ஆவணப்படுத்திக் கொண்டிருக்கிறேன்? வாத்யாரே, நீ மேதை என்பதோடு முடித்துக் கொள்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: அசோகமித்ரன் பக்கம், அஞ்சலிகள்

மன்மோகன் சிங்கின் பொருளாதார சீர்திருத்தங்கள் – முன்னாள் மந்திரி ஜெய்ராம் ரமேஷ் நினைவு கூர்கிறார்

சில சமயம் புத்தகம் மகா போரடித்தாலும் அதன் உள்ளடக்கத்தின் மீது உள்ள ஆர்வத்தால் படித்து முடிக்க நேரிடும். ‘To the Brink and Beyond‘ அப்படிப்பட்ட ஒரு புத்தகம்.

காலம் 1991. ராஜீவ் இறந்து காங்கிரஸ் நரசிம்ம ராவின் தலைமையில் ஆட்சி அமைத்திருக்கிறது. நாட்டின் பொருளாதார நிலை மகாமோசமாக இருக்கிறது. கடனைக் கட்ட வேண்டிய கெடு நெருங்கிவிட்டது, ஆனால் டாலர்களில் கட்ட வேண்டும், டாலர்கள் குறைவாக இருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் ஜெய்ராம் ரமேஷ் ராவுக்கு உதவியாளராக பிரதமரின் அலுவலகத்தில் சேர்கிறார். மன்மோகன் சிங், ராவ் இருவரையும் – அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை, அவர்களது தீர்வுகளை – அருகிலிருந்து பார்க்கிறார். ஆனால் சில மாதங்களிலேயே அவரை திட்டக் குழுவுக்கு (Planning Commission) மாற்றிவிடுகிறார்கள். அந்த ஆறேழு மாத அனுபவங்களைத்தான் இந்தப் புத்தகத்தில் விவரிக்கிறார்.

முதலில் ஒன்றைத் தெளிவாகச் சொல்லிவிடுகிறேன். எனக்கு இந்தப் பொருளாதார உத்திகள் எல்லாம் புரிவதே இல்லை. உதாரணமாக டாலருக்கு நிகராக உள்ள ரூபாயின் மதிப்பைக் குறைத்தால் என்ன பயன் விளைந்துவிடும்? ஒரு வளையலுக்கு ஒரு டாலர் விலை என்று வைத்துக் கொள்வோம். ரூபாயின் மதிப்பை பாதியாகக் குறைக்கிறோம். நமக்கு நூறு டாலர் வேண்டுமென்றால் அதை சம்பாதிக்க முன்னால் நூறு வளையல் விற்றோம், இப்போது இருநூறு பொருள் விற்க வேண்டும். அமெரிக்கர்களுக்கு மலிவாகக் கிடைப்பதால் அதை அதிகமாக வாங்குகிறார்கள். சரி இதற்கு வளையலின் விலையை அரை டாலராகக் குறைத்துவிடலாமே! என்ன வித்தியாசம்?

சரி என் குழப்பங்களை விடுவோம், இந்தப் புத்தகத்துக்கு வருவோம். ஜெய்ராம் ரமேஷ் ராவ் சிங்கை நிதி அமைச்சராக ஆக்கும்போது நடந்த விஷயங்களை விவரிக்கிறார். அன்றைய காங்கிரஸ் இன்னும் சோஷலிசம் பேசும் காங்கிரஸ்தான். நிதி நிலைமை மோசமாக இருப்பது தெரிந்ததும் ராவ் ஒரு நிபுணரைத்தான் நிதி அமைச்சராக்க வேண்டும் என்று நினைக்கிறார். அன்று முக்கியத் தலைவராக இருந்த பிரனாப் முகர்ஜி தான்தான் அடுத்த நிதி அமைச்சர் என்று நினைப்பில் இருக்கிறார், ஆனால் முகர்ஜிக்கு திட்டக் குழுவின் தலைவர் பதவிதான். சிங் அமைச்சரானதும் நிலைமையை சமாளிக்க ஐஎம்எஃபிடம் கடன் வாங்க வேண்டும், பல மானியங்களை ஒழிக்க வேண்டும், ஏற்றுமதிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும், ரூபாயின் மதிப்பைக் குறைக்க வேண்டும், அன்னிய முதலீடு ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று திட்டம் வகுக்கிறார். சோஷலிச நினைவு போகாத காங்கிரஸ் எதிர்க்கிறது. ராவ் அவ்வப்போது கொஞ்சம் ஜகா வாங்கினாலும் சிங்கின் திட்டங்கள் நடந்தே ஆக வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார். அவ்வளவுதான் இந்தப் புத்தகம் காட்டும் காட்சி.

ஆனால் ஜெய்ராம் ரமேஷ் போரடிக்கிறார். தனக்கு எத்தனை முக்கிய மனிதர்களைத் தெரியும், தான் எப்படி பேச்சை எழுதிக் கொடுத்தேன், (ராவ் இவர் எழுதிக் கொடுத்ததை பயன்படுத்துவதே இல்லை), தான் தான் என்று தன்னிலேயே முழுகிக் கிடக்கிறார். இந்த நிகழ்ச்சிகளை விவரிக்கும் வேறு புத்தகமே இல்லாததால்தான் தம் கட்டிப் படித்தேன்.

ஆவணம் மட்டும்தான். ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டும்தான்.

தொகுக்கப்பட்ட பக்கம்: இந்திய அபுனைவுகள்

பிடித்த சிறுகதை – கு. அழகிரிசாமியின் ‘அன்பளிப்பு’

அழகிரிசாமியின் எழுத்து மிக இயல்பானது. அதில் புதுமைப்பித்தனின் கொஞ்சம் ஆர்ப்பாட்டமாகவே வெளிப்படும் மெல்லிய கசப்பையோ, அசோகமித்திரனின் எப்போதும் கதைக்கு வெளியே இருந்துதான் எழுத்தாளன் கதை சொல்ல வேண்டும் என்ற விழைவையோ, லா.ச.ரா.வின் தன்னுள் ஆழ்ந்திருக்கும் நிலையையோ (self-absorption), ஜெயகாந்தனின் உரத்த தொனியையோ, ஜெயமோகனின் ஆக்ரோஷத்தையோ, ஏன் அவருக்கு மிக நெருங்கிய நண்பரும் அவருடைய ஊர்க்காரருமே ஆன கி.ரா.வின் புத்திசாலித்தனத்தையோ (cleverness) காண முடியாது. எனக்குத் தெரிந்து அந்த மாதிரி இயல்பாக எழுதிய இன்னொருவர் தி.ஜா. மட்டுமே.

ஆனால் அப்படி இயல்பாக சென்று கொண்டிருக்கும் சிறுகதையில் திடீரென்று மிக நுட்பமான மனித உறவு ஒன்றைக் காட்டிவிடுவார். அப்படி பல கதைகள் இருந்தாலும் எனக்கு மறக்க முடியாத கதைகள் என்பது தரிசனம், இருவர் கண்ட ஒரே கனவு, ராஜா வந்திருக்கிறார் மற்றும் அன்பளிப்புதான். எல்லாவற்றிலுமே எனக்கு அன்பளிப்புதான் மிகவும் உசத்தியாக இருக்கிறது. கல்கி சொன்னது போல ‘சாரங்கனை அழைத்து வந்து ஏதேனும் ஒரு புத்தகத்தில் அன்பளிப்பு என்று எழுதிக் கொடுக்க நம் உள்ளம் துடிதுடிக்கிறது’.

அழகிரிசாமியின் இந்தச் சிறுகதை ஜெயமோகனின் சிறுகதைத் தேர்வுகளிலும் எஸ்ராவின் சிறுகதைத் தேர்வுகளிலும் இடம் பெறுகிறது.

சுயரூபம் இன்னொரு நல்ல சிறுகதை, ஆனால் முதல் வரிசை சிறுகதை அல்ல. என் கண்ணில் வண்ணநிலவனின் மிருகத்தை விட உயர்ந்த சிறுகதை. பசியை மிகச் சிறப்பாக காட்டி இருப்பார்.

அன்பளிப்பு சிறுகதையை இது வரை படிக்கவில்லை என்றால் கட்டாயம் படித்துவிடுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: அழகிரிசாமி பக்கம்

காஞ்சி சங்கர மடத்தின் உண்மை வரலாறு

chandrasekarendrarஇரண்டு மூன்று தலைமுறையாவது ஐயர் குடும்பங்கள் மறைந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதி அவர்களுக்கும் காஞ்சி சங்கர மடத்துக்கும் ஏறக்குறைய குருபீடம் என்ற இடத்தைத் தந்து வந்திருக்கின்றன். காஞ்சி மட ஆசி என்ற சம்பிரதாய வார்த்தை இல்லாமல் ஐயர் வீட்டு கல்யாணப் பத்திரிகையைப் பார்ப்பது அரிது.

நானும் ஐயர் குடும்பத்தில் பிறந்தவன்தான். அதுவும் காஞ்சிபுரம் அருகில் உள்ள கிராமங்களில் வளர்ந்தவன். சிறு வயதில் வருஷத்துக்கு இரண்டு மூன்று முறையாவது காஞ்சிபுரம், ஏகாம்பரேஸ்வரர் கோவில், கந்தகோட்டம், காமாட்சி அம்மன் கோவில், சங்கர மடம் என்று ஒரு ரவுண்டு வருவோம். சந்திரசேகரர் கலவையில் தங்கி இருந்தபோது அங்கும் போய் வருவோம். பல முறை மடத்தில் சந்திரசேகரர் தரிசனம் தர நேரம் ஆகும். சின்னப் பையன், மடத்தில் அங்கும் இங்கும் சுற்றுவேன். பெரிய கட்டுப்பாடுகள் கிடையாது. மடத்திலேயே கையில் கிடைக்கும் புத்தகத்தை எல்லாம் புரட்டிப் பார்த்துக் கொண்டிருப்பேன்.

பத்து பனிரண்டு வயது வாக்கில் ஒரு முறை அப்படிப் புரட்டிப் பார்த்த புத்தகம் சங்கர மடத்தின் வரலாறு பற்றி. ஆதிசங்கரர் இந்தியா முழுவதும் சுற்றி நான்கு மூலைகளிலும் நான்கு மடங்களை நிறுவி கடைசியாக காஞ்சி மடத்தை நிறுவி அங்கேயே சமாதி ஆகிவிட்டார் என்று ஐதீகம். அந்த ஐதீகத்தைச் சொல்லும் புத்தகத்திலேயே முதல் காஞ்சி மடாதிபதி சுரேஸ்வரர் என்று இருந்தது. ஆனால் சுரேஸ்வரர்தான் சிருங்கேரி மடத்தின் முதல் மடாதிபதி என்பதெல்லாம் ஆதி சங்கரர் பற்றிய தொன்மக் கதைகளில் அதே புத்தகத்தில் விளக்கப்பட்டிருந்தது. என்னடா இது என்று மேலும் மேலும் படித்தால் வெளிப்படையாகச் சொல்லப்படாவிட்டாலும் சிருங்கேரி மடத்தின் கிளை மடமான கும்பகோணம் மடம்தான் பிற்காலத்தில் காஞ்சி மடமாக உருவாகி இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிந்தது. அதுவும் இந்தப் புத்தகம் மடத்திலேயே கிடைத்ததால் எனக்கு முழு நம்பிக்கை ஏற்பட்டிருந்தது. (புத்தகத்தின் பேர் நினைவில்லை. ஆனால் பழைய தஞ்சாவூர் பாணி? சித்திரங்கள் நிறைய இருந்தது நன்றாக நினைவிருக்கிறது)

இது என்ன பொய் மீது கட்டப்பட்ட மடமாக இருக்கிறதே என்று என் அப்பாவிடம் வீடு திரும்பும்போது கேட்டு நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டேன். கவனமாகப் பார்த்தால் (நான் படித்த வரையில்) ஒரு இடத்தில் கூட சந்திரசேகரர் காஞ்சி மடத்தின் முதல் மடாதிபதி, வரலாறு என்றெல்லாம் பேசவே மாட்டார். ஆனால் இது போன்ற கதைகளையும் மறுத்து ஒரு வார்த்தை பேசியதாக எனக்குத் தெரியவில்லை.

அருணன் எழுதி இருக்கும் இந்தப் புத்தகம் இந்த முரண்பாட்டைத்தான் வெளிப்படையாகப் பேசுகிறது. அதைத் தவிரவும் வழக்கமான பல விமர்சனங்கள் உண்டு. எனக்குத் தெரிந்த வரை இன்று(ம்) காஞ்சி மடத்துக்கு எஞ்சி இருக்கும் மதிப்பு சந்திரசேகரரால் உருவானது. அவருக்கு முன் மடம் செயலாக இருந்ததாகவே தெரியவில்லை.

புத்தகம் (எனக்கு) புதிய விஷயங்கள் எதையும் சொல்லவில்லை. ஆனால் இது போன்ற கேள்விகள் கேட்கப்பட வேண்டியவை, ஆவணப்படுத்த வேண்டியவை என்று கருதுகிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் அபுனைவுகள்

தொடர்புடைய சுட்டிகள்:
சங்கர மடம் பற்றி பல கட்டுரைகள்
சந்திரசேகரருக்கு ஜெயேந்திரர் மேல்!
சங்கர மடத்தின் வரலாறு பற்றி

பின்குறிப்பு: சிறு வயது காஞ்சிபுரம் பயணங்களில் இந்த வழக்கமான கோவில்களுக்குப் போகிற வழியில் ஒரு சித்திரகுப்தன் ஆலயம் இருக்கும், பக்கத்திலேயே உலகளந்த பெருமாள் கோவிலின் பிரம்மாண்டம் உண்டு, கைலாசநாதர் கோவில், வைகுண்டப் பெருமாள் கோவில் எல்லாம் பற்றி கேள்விப்பட்டிருந்தேன், ஆனால் அங்கெல்லாம் போக அப்பா அம்மாவுக்கு நேரம் இருக்காது. செக்கு மாடு மாதிரி இதே மூன்று கோவில், விட்டால் மடம் என்றுதான் போய் வருவோம். போன வருஷம்தான் கைலாசநாதர், வைகுண்டப் பெருமாள் கோவில் எல்லாம் பார்க்கும் அதிருஷ்டம் கிடைத்தது.

தமிழ் எழுத்தாளர்களின் ஓவியஙகளை வைத்து நாட்காட்டி

ஆதிமூலம் என்ற ஓவியரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம். அவர் எழுத்தாளர்களை ஓவியமாக வரைந்தவற்றை வைத்து பனுவல் நிறுவனம் ஒரு நாட்காட்டியை வெளியிட்டிருக்கிறது. கட்டாயம் வாங்குங்கள்!

கேள்விப்பட்டபோது மிகவும் சந்தோஷமாக இருந்தது. நான் இறப்பதற்குள் புதுமைப்பித்தன் படமோ அல்லது அசோகமித்ரன் படமோ உள்ள டீஷர்ட்டை அணிந்து இளைஞர்களும் இளைஞிகளும் ஊர் சுற்றுவதைப் பார்த்தால் என் ஜன்மம் சாபல்யம் அடையும்!

வீடியோவாகப் பார்க்க –

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

ட்ரம்ப் வென்றது எப்படி? – காதரின் ஈடின் எழுதிய ‘$2.00 A Day’

kathryn_edinஅமெரிக்கா பணக்கார நாடு என்றுதான் உலகம் முழுவதும் இருந்து இங்கே குடியேறிவிட ஆசைப்படுகிறோம். ஆனால் அமெரிக்காவில் ஏழ்மை என்பது அதிசயம் அல்ல.

காதரின் ஈடின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக்ப் பேராசிரியர். அவரது கணக்குப்படி பதினைந்து லட்சம் குடும்பங்கள் அமெரிக்காவில் படு பயங்கர ஏழ்மையில் வாடுகின்றன. (அமெரிக்காவில் குத்துமதிப்பாக பத்து கோடி குடும்பங்கள் இருக்கின்றன, முப்பத்து கோடி மக்கள் தொகை). ஒரு நாளைக்கு இரண்டு டாலர் வருமானம் இருந்தால் அதிகம். பலருக்கு ஆனால் இருக்க வீடு உண்டு. நகரங்களில் குடியிருப்பவர்களை வெளியேற்றுவது சிரமம். Rent Control உங்களுக்கு ஓரளவு பாதுகாப்பு தரும். ஆனால் தங்க இடம் இல்லாவிட்டால் பெரும் கஷ்டம். சாப்பாட்டுக்கு Food Stamps-ஐ அரசு தருகிறது. (இதை வைத்து உணவுப் பொருட்களை மட்டும் பெற்றுக் கொள்ளலாம்.) ஆனால் காசு இல்லாமல் வாழ்ந்துவிட முடியுமா? வீட்டுக்கு மின்சாரத்துக்கு, அலைபேசிக்கு, பஸ்ஸுக்கு பணம் இல்லாமல் வேலை தேட முடியுமா? அதிலும் இந்தக் குடும்பங்களில் அனேகருக்கு குழந்தைகள் உண்டு. அவர்களுக்கு ஷூ வாங்க வேண்டாமா?

ஈடின் இவர்களைப் பற்றி ஆய்வு செய்திருக்கிறார். இவர்களுக்கு வேலை செய்ய விருப்பம் இருந்தும் வாய்ப்புகள் இல்லை என்கிறார். அதுவும் டெக்னாலஜி வளர வளர ஆரம்ப நிலை வேலைகள் கிடைப்பது கஷ்டமாகிக் கொண்டே போகிறது. ஒரு காலத்தில் கிடைத்த தொழிற்சாலை வேலைகள் இப்போது கிடைப்பதில்லை. இவர்கள் எப்படித்தான் வாழ்க்கையை நடத்துகிறார்கள்?

Food Stamps-ஐ விற்பது சட்ட விரோதம், ஆனால் விற்கிறார்கள். ரத்தத்தை விற்கிறார்கள். உடலை விற்கிறார்கள். தெருவில் குப்பைகளைப் பொறுக்குகிறார்கள். ஒரு பெண் தினமும் காலை உணவுக்காக மக்டோனல்ட்ஸில் காஃபி சாப்பிடுகிறாள், அதில் ஆறு ஸ்பூன் சர்க்கரை போட்டுக் கொள்வாள். பண்டமாற்று செய்துகொள்கிறார்கள். ஒவ்வொரு நாளும் போராட்டம்தான்.

அரசு ஒரு காலத்தில் கொஞ்சம் பணம் கொடுத்தது. இப்போது பணம் கொடுப்பதில் பல கட்டுப்பாடுகள், அனேகருக்கு பணம் கிடைப்பதில்லை. அதுவும் ரிபப்ளிகன் அரசு அமைந்தால் இது மேலும் சிரமம். வேலை தேடிக் கொள்ள வேண்டும் என்று அழுத்தம் தருகிறது. ஆனால் கொஞ்சமாவது காசு இல்லாமல் – பஸ்ஸுக்கும் அலைபேசிக்கும் காசு இல்லாமல் – இந்த நாட்களில் வேலை கிடைப்பது மகா கஷ்டம்.

ஈடின் இந்தப் புத்தகத்தை anecdotes-களால் நிரப்பி இருக்கிறார். ஒவ்வொரு சம்பவமும் நம்மை உச்சுக் கொட்ட வைக்கிறது. ஆனால் இது எத்தனை பெரிய பிரச்சினை என்று தெரியவில்லை. சான் ஃப்ரான்சிஸ்கோவில் நான் அலுவலகத்துக்கு நடக்கும் ஒரு மைல் தூரத்தில் பத்து வீடற்ற, நடைபாதைவாசிகளைப் பார்க்கலாம். மழை கொட்டும் நாட்களில் மனம் வருந்தத்தான் செய்யும், ஆனால் இது எத்தனை பெரிய பிரச்சினை, சான் ஃப்ரான்சிஸ்கோவில் இப்படி எத்தனை நடைபாதைவாசிகள் இருக்கிறார்கள், நூறு பேரா, ஆயிரம் பேரா, பத்தாயிரம் பேரா என்று தெரிவதில்லை. அவர் கொடுக்கும் data பதினைந்து லட்சம் குடும்பம் என்பதுதான். அது அமெரிக்க ஜனத்தொகையில் ஒரு சதவிகிதம், ஒன்றரை சதவிகிதம் இருக்கலாம். அது உண்மையாக இருந்தால் அமெரிக்க சூழலில் இது பெரிய பிரச்சினைதான்.

நான் வாழும் கலிஃபோர்னியா பகுதியில் ட்ரம்ப் வெல்ல வாய்ப்பே இல்லை என்றுதான் எல்லாரும் நினைத்தோம். ஆனால் எங்களுக்கு இப்படிப்பட்ட அமெரிக்கா பழக்கமே இல்லை. இந்த ஏழைகள்தான் ஹில்லரி க்ளிண்டன் வேண்டவே வேண்டாம், நல்ல மாற்றமோ இல்லையோ ட்ரம்ப் மாற்றத்தைக் கொண்டு வருவார் என்று நினைத்து அவருக்கு ஓட்டுப் போட்டிருக்க வேண்டும்…

படிக்கலாம். அமெரிக்காவின் இருண்ட பக்கங்களைப் பற்றி கொஞ்சம் புரிகிறது. ஆனால் படித்தே ஆக வேண்டிய புத்தகம் இல்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: அபுனைவுகள்

அசோகமித்ரன் பேட்டி

விகடன் தடம் இதழில் வந்திருக்கிறது. மிகவும் நல்ல பேட்டி. நிறைவாழ்வுக்குப் பிறகு எந்த விதமான எதிர்பார்ப்புகளும் இல்லாத பெருசு. விகடனுக்கு நன்றி!

asokamithran86 வயது அசோகமித்திரன்! எங்களை எதிர்பார்த்து பால்கனியில் நின்றிருந்தார். பார்த்துச் சிரித்து, கைகளை வாஞ்சையோடு அசைத்து, மேலே வரச் சொன்னார். கதவை முறையாகச் சாத்தி, மின்விசிறியை அளவாக வைத்து, மிக மிக மெல்லிய குரலில் நலம் விசாரிக்கிறார். ஜன்னலுக்கு வெளியே சில நொடிகள் வெறித்துப் பார்த்தவர், “பக்கத்துக் கட்டடத்தில ரெண்டு பறவைகள் இருந்துச்சு. ஒண்ணு எங்கோ காணாமப் போயிடுத்து. சில நாட்களாவே அதைத் தேடி விடாம சத்தம் போட்டுட்டிருந்த இன்னொரு பறவையையும் இன்னிக்குக் காலையில இருந்து காணல. இந்த அமைதி என்னவோ பண்ணுது” என்றார். அந்த அமைதியை உணர்ந்தோம். பின், மௌனம் கலைத்தோம். தன் நினைவு அடுக்குகளிலிருந்து தேடித் தேடிக் கோத்து சொற்களாக்கி வெகு நிதானமாகப் பேசுகிறார் அசோகமித்திரன்.

‘உடம்புக்கு முடியாமப் போனதுக்கப்புறம் ஞாபகங்கள் எல்லாம் குறைஞ்சு போயிடுத்து. இருபது முப்பது வருஷ நினைவுகள் இப்போ என்னிட்டயே இல்லை. பல விஷயங்களை நினைவுபடுத்தவும் கஷ்டமா இருக்கு. இப்போ முதுகுத் தண்டும் பிரச்னை கொடுத்துட்டது. அப்பப்போ எந்திரிக்க முடியலை. உப்பு சத்து உடம்புல ரொம்ப குறைஞ்சு போச்சு. எதுவுமே நினைவுல சரியா நிக்கறதில்லை.’

‘மறந்துபோனவற்றில் இருந்து எதையேனும் நினைவுபடுத்த முயல்கிறீர்களா?’

‘இல்லை. ஸ்ட்ரெய்ன் பண்ண முடியலை. அப்படி முக்கியத்துவமான நினைவுகளும் என் கடந்த கால வாழ்க்கையில இல்லையே!’

‘இரவில் கனவுகள் வருகின்றனவா?’

‘ஒன்பதரை மணிக்குப் படுத்துடுவேன். மாத்திரை சாப்பிடுறதுனால, தூக்கம் வந்திரும். ஆனா, காலை வரைக்கும் தூங்க முடியாது. ரெண்டரை மணிக்கு விழிப்பு வந்துடுறது. அதுக்கப்புறமான இடைப்பட்ட நேரத்தில கனவுகள் வருது. மனசுக்குக் கஷ்டம் தர்ற, அவதி தர்ற கனவுகளாக வருது.”

‘எப்படியான கனவுகள்?’

‘அந்தக் காட்சிகளை வெளக்கிச் சொல்ல முடியலை. ஆனா, அந்த மொத்தக் கனவையும் ஒரு உணர்வா சொல்லணும்னா, ரொம்பக் கஷ்டப்படுத்துகிற கனவுகள். திறந்திருக்கிற கதவைச் சாத்தணும்னு தோணும். ஆனா, எழுந்திருக்க முடியாது. அந்த மாதிரி கனவுகள் அதிகமா வரும். அந்த ஜோடிப் பறவைகளைப் பத்தி சொன்னேன்ல, நான் இந்த ரூம்ல ஃபேன் பயன்படுத்தறது இல்ல. எங்கே ஜன்னல் திறந்திருந்து, பறவைங்க உள்ளே வந்து ஃபேன்ல அடிபட்ருமோனு ஒரு பயம். இதெல்லாம் சேர்ந்து, மனசை சங்கடப்படுத்தும்படியான கனவுகள் நிறைய வருது.’

‘இது வரை எழுதிய உங்களது படைப்புகள் குறித்து நிறைவாக உணர்கிறீர்களா?’

‘இல்லை. பலர் என் படைப்பை வாசிக்கறது சந்தோஷம்தான். ஆனா, அதுக்காக எதையோ பெருசா சாதிச்சிட்டதா நான் நினைக்கலை. அப்படி பெருசா ஒண்ணும் சொல்றதுக்கில்லை.’

“உங்களுடைய எழுத்துகளை ‘அதிகம் அதிர்ந்து பேசாதவை’ என்று சுந்தர ராமசாமி ஒருமுறை சொல்லி இருக்கிறார். அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”

‘வேண்டாமே! அதிர்வு எதுக்கு? யாருடைய எழுத்தும் இப்படித்தான் இருக்கணும்னு கிடையாதே. ஒவ்வொரு காலகட்டத்திலும் இலக்கியத்துக்கான பொதுக்குணமா ஒன்றைக் குறிப்பிடுவாங்க. அது காலத்துக்கும் மாறிக்கிட்டே இருக்கும். அதேசமயம், அதிகமா இல்லேன்னாலும் அதிர்ந்து பேசுற விஷயங்கள் என்னோட எழுத்திலயும் இருக்கத்தான் செய்யுது.

‘உங்களுடைய புனைவுகளில் நீங்கள் இருக்கிறீர்களா?’

‘நானே கதாநாயகனாகவா?’

‘ஆமாம். அல்லது ஒரு பாத்திரமாகவேனும்…’

‘என் வாழ்க்கை சார்ந்து, என் குடும்பம் சார்ந்து, நிறைய விஷயங்களைப் பயன்படுத்தியிருக்கேன். என் சகோதர, சகோதரிகளோட வாழ்க்கைச் சூழ்நிலைகளைப் புனைவா எழுதி இருக்கேன். ஆனா, ஒரு கதையில இடம் பெறக் கூடிய தகுதியுள்ள கதாபுருஷனா என்னை நான் நினைச்சுப் பார்த்ததே இல்லை. ஒரு கதாநாயகனா ஆகறதுக்கான ஆற்றல் என்கிட்ட இல்லை. கதை சொல்றவனா இருந்துட்டா, போதும்னு நினைக்கிறேன்.’

‘உங்கள் கதைகளிலும், மேடைப் பேச்சுகளிலும் ஒரு மெல்லிய நகைச்சுவை உணர்வு இருக்கும். அதை எப்படிக் கைக்கொண்டீர்கள்?’

“எனக்குத் தெரியலை. அந்தந்த இடங்களில் உண்மையைச் சொல்றேன் (சிரிக்கிறார்). ஒரு பெரிய அரங்கம்; நிறையக் கூட்டம். ஏராளமான கலைஞர்கள். அந்தக் கூட்டத்துக்கு இளையபாரதி இரண்டு புத்தக வெளியீடுனு சொல்லி என்னைக் கூப்பிட்டிருந்தார். ஆனா, உண்மையில அது வேறொரு கூட்டம். நிறையப் பேர் வந்திருந்தாங்க. புத்தக வெளியீட்டுக்கா இவ்வளவு கூட்டம்னு நினைச்சு ஆச்சர்யப்பட்டேன். கலைஞர் வந்திருந்தார். கூட இருந்தவங்க எல்லாரும் எழுந்து போய் கலைஞரோட கையைப் பிடிச்சு, வணக்கம் சொல்லி, கால்ல விழுந்து என்னென்னமோ பண்ணினாங்க. எனக்கு அப்படிச் செய்ய முடியலை. அதெல்லாம் கூட எனக்குப் பிரச்னையா இல்ல. அந்த ஹால்ல ஏர்கண்டிஷன் ஓடுது. பக்கத்துலயே ஒரு ஃபேனும் ஓடுது. குளிர் நடுக்குது. தாங்க முடியலை. எனக்குப் பொன்னாடை போர்த்தினாங்க. ‘அப்பாடா! சரியான நேரத்துல போர்த்தினீங்க. இந்த இடத்துல இந்தப் பொன்னாடை ரொம்பத் தேவையா இருக்கு’னு சொன்னேன். பல சமயங்களில் உண்மைதான் பெரிய நகைச்சுவையா இருக்கு.”

‘கவிதைகள் ஏன் உங்களுக்குப் பிடிப்பது இல்லை?’

“அப்படியெல்லாம் இல்லை. நான் வாசிச்ச பல கவிதைகளில் அலட்சியமா எழுதப்பட்ட மாதிரியான ஒரு தொனி, தோற்றம் இருக்கு. எல்லாரையும் அப்படி எழுதுறாங்கன்னு சொல்லலை. சில பேருக்கு சில விஷயங்கள் பிடிக்கும்; சில பேருக்குப் பிடிக்காது. ‘உனக்கு ஏன் அது பிடிக்கலை?’னு கேட்கக் கூடாது இல்லையா? எனக்கு என்னவோ ஆரம்பத்துல இருந்தே கவிதைகள் மேல ஈடுபாடு இல்லை”

பாரதியை உங்களுக்குப் பிடிக்கும் என்று சொன்னீர்களே…?’

‘பாரதியோட சில வரிகள் எனக்குப் பிடிக்கும். நல்ல உழைப்பு, அசாத்தியமான சிந்தனை எல்லாம் அவர்கிட்ட இருந்தது. கண்ணம்மா பாடல்கள், கண்ணன் பாடல்கள் எல்லாம் ரொம்பப் பிடிக்கும். அவர் பாடல்கள்ல ஒரு ஒழுங்கு இருந்தது. அதையெல்லாம் இப்போ இருக்கற கவிதைகள்ல எதிர்பார்க்க முடியாது. ஞானக்கூத்தன் எனக்கு ரொம்ப நல்ல நண்பர். ஆரம்பத்துல அவரோட கவிதைகள்ல வர்ற ஐடியாக்களுக்காக, (அரசாங்கக் கட்டடத்தில் முதல் தூக்கம் போட்ட நாள்) போஷிச்சிருக்கேன். அப்புறம், அன்று வேறு கிழமை நல்லா இருந்தது. அதுக்கு மேல எனக்கு அவர் கவிதைகள் மேல ஒண்ணும் தோணலை.’

‘இசை கேட்பது உண்டா?’

‘ஒரு காலத்துல நானே பஜன் பாடல்கள் எல்லாம் பாடிட்டிருந்தேன். இப்போ விட்டுப் போயிடுத்து. இசையில நாட்டம் உண்டு. ஆனா, இசை கேட்பதற்கு அதுக்கான சூழலும் வசதியும் வேணுமே. கிராமபோன் வந்தப்போ அது எங்ககிட்ட இருந்தது. சில ரெக்கார்ட்ஸும் கூட இருந்தது. இப்ப ரேடியோ வெச்சிருக்கேன். அதோ இருக்கு பாருங்க’ – (மேசையில் இருக்கும் ஒரு சிறிய ரேடியோவைக் காட்டுகிறார்.)

‘இப்போவும் கையால்தான் எழுதுகிறீர்களா?’

‘நான்கைந்து வருஷமா கம்ப்யூட்டர்ல எழுதறேன். யூனிகோட்ல எழுதறதுக்குச் சொல்லிக் குடுத்திருக்காங்க. கொஞ்சம் நேரம் எடுக்கும். ஆனா, திருத்தவும் எடிட் பண்ணவும் இது ரொம்ப வசதியா இருக்கு.’

‘இப்போதும் எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். தொடர்ந்து உங்களை எழுதத் தூண்டுகிற விஷயம் எது?’

‘பாசிபிளிட்டீஸ்! ஒரு விஷயம் இப்படி நடப்பதற்குப் பதிலா, இப்படி நடந்தா என்ன ஆகும்னு ஒரு பாசிபிளிட்டியை யோசிப்பேன். குறிப்புகள் எழுதி வைக்கறதும் உண்டு. வாழ்க்கையில பாசிபிளிட்டீஸ்தான் ரொம்ப சுவாரஸ்யமான விஷயம்னு நினைக்கிறேன். வெவ்வேறு மனிதர்கள், அவர்களின் வெவ்வேறு சுபாவங்கள், அவர்கள் வாழும் வெவ்வேறு சூழல்கள்… அதையெல்லாம் மாற்றிப் போட்டு இவருக்கு இந்த சூழ்நிலையில இப்படி நடந்தா என்னாகும்னு யோசிக்கறதுலதான் கதை உருவாகுது. பாசிபிளிட்டீஸ் இருக்கிற வரை கதைகள் இருக்கும். எழுதிக்கிட்டே இருக்கலாம்.’

‘சிறுகதை வடிவம் காலாவதி ஆகிவிட்டதா? இனி, புதிய வடிவத்துக்குத்தான் போக வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்வீர்களா?’

‘இல்லை. ஏற்றுக் கொள்ள முடியாது. அதுக்கு எப்பவும் ஒரு இடம் இருக்கும். ஆனா, ரொம்பப் பெரிய இடம் இருக்கும்னு சொல்ல முடியாது. முன்பு, சிறுகதைகளுக்காகவே பத்திரிகைகள் நடத்தப்பட்டன. பி.எஸ்.ராமையா, அவரோட மணிக்கொடியில சிறுகதைக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார். ஒரு இதழில் நான்கைந்து கதைகள் வரும். ஆனால், இப்போ ஆனந்த விகடன்லயே வாரம் ஒரு கதைதான் வெளியிடுறாங்க. அப்போ, வருஷத்துக்கு அதுல 52 கதைகளைத்தானே எழுத முடியும்? இலக்கியத்தின் எந்த வடிவத்தையும், கவிதை வடிவத்தையும் கூட, காலாவதியாகி விட்டதுனு சொல்ல முடியாது.’

‘தமிழ்ச் சிறுகதை, நாவல் உலகில், அந்த வடிவங்களைக் கௌரவம் செய்தவர்கள் என்று யாரைச் சொல்வீர்கள்?’

கு.ப.ரா.வைச் சொல்லலாம். ரொம்பக் குறைவாத்தான் எழுதினார். ஆனால், ரொம்ப மகத்தான சிறுகதைகளை எல்லாம் எழுதியிருக்கார். அப்புறம் புதுமைப்பித்தன். அவர் எழுதின சிறுகதை ஒண்ணைப் படிச்சுட்டுதான் நான் எழுதவே வந்தேன். அதை அவர்தான் எழுதினார்னும் அப்போ எனக்குத் தெரியாது. தலைப்பு நினைவில் இல்லை. சாமியாரான ஒருத்தன் அவன் ஏன் உண்மையில் சாமியாரா இல்லை என்பதை நுட்பமாகப் புலப்படுத்தும் கதை. அப்போ வந்த, கலைமகள்கு.ப.ரா., க.நா.சு., பிச்சமூர்த்தி எல்லாம் தொடர்ந்து எழுதினாங்க. கி.வா.ஜ. அதன் ஆசிரியராக இருந்தார். புதுமைப்பித்தன் எழுதின காஞ்சனை கதையை யார் யாரோ வெளியிட்டிருக்காங்க. ஆனா, கலைமகள் வெளியிட்ட காஞ்சனை அவ்வளவு சுத்தமா இருக்கும். அதுக்குக் காரணம், கி.வா. ஜகந்நாதன்தான்.’

‘கு.ப.ரா., புதுமைப்பித்தன் சொன்னீர்கள். அதற்குப் பிறகான காலகட்டத்தில், உங்களுக்குப் பின்னால் வந்தவர்களில் குறிப்பிடத் தகுந்தவர்களாக யாரைச் சொல்வீர்கள்?’

சா. கந்தசாமி ஒரு விசேஷமான எழுத்தாளர். அவர் எந்தப் பின்புலமும் இல்லாமல் இலக்கியத்துக்குள் வந்தவர். நானாவது கல்லூரிக்கெல்லாம் போயிருக்கேன். உலக இலக்கியத்துல பரிச்சயம் உண்டு. ஜி. நாகராஜன் மாதிரியான எழுத்தாள நண்பர்களும் எனக்கு உண்டு. ஆனா, சா. கந்தசாமிக்கு அப்படியெல்லாம் கிடையாது. சுயமாகவே எழுதினார். திறமையான வேற சிலரும் இருக்காங்க…’ (மௌனமாகிறார்).

‘இன்றைக்கு எழுதுகிறவர்களில்?’

‘இன்றைக்கு எல்லாருமே நல்லா எழுதுகிறாங்க. General Proficiency அதிகமாகிடுச்சி. எந்தப் பத்திரிகையையும் எடுத்துப் பாருங்க, ரொம்ப நல்லா எழுதுறாங்க. வெகுஜனப் பத்திரிகைகள்ல கூட நிறைய நல்ல கதைகள் வெளியாகுது. எல்லா கதைகளும் தீவிரமான புனைவுகளைப் போல நம்மை வேற ஒரு உலகத்துக்கு, அனுபவத்துக்கு அழைச்சுட்டுப் போகிறதான்னு நீங்க கேட்கலாம். ஆனா, படிக்கிற அரை மணி நேரத்துக்கு நல்ல பொழுதுபோக்கா இருக்கிறதே! எனக்குப் பிடிச்சிருக்கு. இன்னிக்கு பத்திரிகைகள்ல வர்ற ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற பகுதிகள் கூட சென்சிபிளாவும் ரொம்ப புத்திசாலித்தனமாவும் இருக்கு.’

‘பெண் படைப்பாளிகளில் குறிப்பிடத் தகுந்தவர்கள்?’

ஆர். சூடாமணி. இப்போ கூட அவங்களுக்கு நூற்றாண்டு விழா எடுத்தாங்க. ரொம்ப நல்ல குணம் அவங்களுக்கு. குமுதினினு ஒரு எழுத்தாளர் இருந்தாங்க. அவங்களுக்குக் காது கேட்காது. அவ்வளவு இடர்ப்பாடுகளுக்கு மத்தியிலயும் எழுதினாங்க. தாகூரின் பல படைப்புகளை மொழிபெயர்த்திருக்காங்க. முன்பைவிட இப்போ நிறைய பேர் எழுதறாங்க. சல்மா, தமயந்தியெல்லாம் நல்லா எழுதுறாங்க. விமர்சனமும் இருக்கு. ஆனா, இப்போ யாரையும் விமர்சிக்கிற மனநிலையில நான் இல்லை.’

போரும் அமைதியும், கரமசோவ் பிரதர்ஸ் போன்ற அளவில் பெரிய அதே சமயம் க்ளாசிக் தன்மையுடைய தமிழ் நாவல்கள் பற்றி?’

‘மகா நாவல்கள்னு சிறப்பிக்கப்படுற எல்லா படைப்புகளையும் இப்போ மறுபரிசீலனை செய்யணும். அது அவசியம்னு நினைக்கிறேன். என் வரையில் இந்த மகா நாவல்களோட சிகரம்னு கருதப்படுற போரும் அமைதியும் எனக்கு ஏமாற்றத்தைத்தான் தந்தது. இந்த மகா நாவல்கள்லாம் அந்தக் காலகட்டத்தோட பிரசுரத் தேவையால உருவாக்கப் பட்டவையோனு சந்தேகப்படுறதுண்டு. போரும் அமைதியும் மூலநூல் ஆசிரியராலேயே பலமுறை திருத்தப்பட்டது. அது மட்டுமில்லாம உள்ளே ரெண்டு பின்னுரைகளை வேறு கொடுத்திருக்காங்க. எந்தப் படைப்பிலக்கியமும் என்னைப் பொறுத்தவரை முன்னுரை, பின்னுரை இல்லாம, அதன் அளவிலேயே அது சிறந்து விளங்கணும்னு சொல்வேன்.

‘தமிழிலும் மகா நாவல்கள் எழுதப்பட்டிருக்கு. சுந்தர ராமசாமியின், குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’, ஜெயமோகனின் பின் தொடரும் நிழலின் குரல்’ அவர் இப்போ எழுதிட்டு வர்ற மகாபாரதத் தொடர் நாவல்கள், பூமணியின் அஞ்ஞாடி இதெல்லாம் என் நினைவுக்கு வருது. இன்னும் பல இருக்கலாம். புனைகதைங்கிறது மகிழ்ச்சிக்காகப் படிக்கப்படுறது. படிக்கிறதுக்கே அதிக உழைப்பு தேவைப்படுறபோது, எழுத்தாளனோட இலக்கு பற்றி சந்தேகம் வருது. ஜோ டி குரூஸின் ரெண்டு படைப்புகளும் (ஆழிசூழ் உலகு, கொற்கை) மகா நாவல்கள்தான். பல நாட்கள் உழைத்துத்தான் அதைப் படிக்க முடிஞ்சது. இன்றைய மனநிலையில ஒரு வாசகனை வியர்வை சிந்த வைக்காம ஓர் உயரிய நிலையில உற்சாகம் (இது சோகத்துக்கும் பொருந்தும்) தருகிற படைப்புகளா எழுதப்படணும்னு விரும்புவேன். இதையே எல்லாரும் ஏத்துக்கணும்னு நான் வற்புறுத்த மாட்டேன். வாசிப்புங்கிறது முழுச் சுதந்திரத்தோட நாம செய்ய வேண்டிய ஒரு விஷயம்.’

‘சிறுகதை, குறுநாவல், நாவல் இவற்றுக்கு உங்களது இலக்கணம் என்ன?’

‘கறாரா இதை வரையறுக்க முடியாது. இதில நமக்கு சமரசப் பார்வை தேவை. சிலர் தங்களோட ஒரு சிறுகதைக்கு பல ஆயிரம் சொற்களை எடுத்துக்கிறாங்க. சிலர் சில நூறு சொற்களை எடுத்துக்கிறாங்க. பல சம்பவங்கள், பல கதாபாத்திரங்கள்னு ஓரளவுக்கு மேல் விரிஞ்சிட்டுப் போகிற கதைகளை சிறுகதையிலிருந்து குறுநாவல், நாவல்னு பிரிக்கலாம்.

தமிழ் உரைநடையில படைப்பிலக்கியம் உருவானதே ரொம்பத் தாமதமாத்தானே. முதல் தலைமுறைக் கதாசிரியர்களுக்கு அவங்களோட வாசகர்கள் யார்னே தெரிஞ்சிருக்க வாய்ப்பு இல்ல. அவங்க எழுதின நூல்களை அவங்களோட வாரிசுகள் பள்ளிப் பாடப் புத்தகமா மாத்துறதை விரும்பினாங்க. கேட்க ஆச்சர்யமா இருக்கலாம். பிரதாப முதலியார் சரித்திரம், கமலாம்பாள் சரித்திரம் ரெண்டாவது மூணாவது பதிப்பிலேயே பாட நூல்களா திருத்தப்பட்டுருச்சு.’

‘ஒரு படைப்பு அந்தப் படைப்பாளியின் உரிமையின்றித் திருத்தப்படலாமா?’

“இப்பல்லாம் பலர் இணையத்தில அவங்க நினைக்கிறதையெல்லாம் எழுதிடுறாங்க. எடிட்டிங்கிற விஷயத்தை இந்தத் தலைமுறை கத்துக்கணும். ஒரு கதையில பத்திரிகையாசிரியர் செய்ற சிறுசிறு திருத்தங்களை நாம அனுமதிக்கணும். எழுத்தாளர்கள் தங்களோட எழுத்துச் சுதந்திரத்தைப் பாதிக்கிற விஷயமா இதைப் பாக்கக் கூடாது. எந்தப் படைப்பானாலும், அது ஒரு நல்ல எடிட்டர் பார்வைக்கு உட்படுவது நல்லது. செய்தி, கருத்து, கிண்டல், கவிதை, படைப்பிலக்கியம்னு மிகச் சிறப்பா வெளியிடுறதுல புகழ் பெற்றது நியூ யார்க்கர் வாரப் பத்திரிகை. அந்தப் பத்திரிகையைத் தோற்றுவித்த ஹரால்ட் ராஸ் ஒரு முறை சொன்னார். ‘யார் வேண்டுமானாலும் எழுத்தாளராகிடலாம். ஆனா, மிகக் கூர்மையான அறிவு உடையவங்கதான் பத்திரிகை ஆசிரியராக முடியும்.'”

‘இதுவரை உங்களுக்குக் கிடைத்ததில் சிறந்த அங்கீகாரம் என்று எதைக் கருதுகிறீர்கள்?’

சாந்தோம் அவார்டுனு ஒண்ணு கிடைச்சது. இதுல பணம், காசெல்லாம் ஒண்ணும் கிடையாது. என் படைப்புகளை மதிப்பீடு செஞ்சு ஒரு கேடயம் குடுத்தாங்க. அதை முக்கியமான அங்கீகாரமா நான் நினைக்கிறேன். அந்த அமைப்புக்கு டைரக்டரா சுந்தர்ராஜன்னு ஒருத்தர் இருந்தார். அவர் ஜெனீவா போயிட்டார். அவர் போனதுக்கு அப்புறமா அந்த விருது வழங்கப்படுறதில்லை. நகுலன், சி.மணி, க.நா.சு.-வுக்கெல்லாம் இந்த விருது கொடுத்தாங்க. இதுல சுவாரஸ்யம் என்னன்னா, ஒரு திரைப்படத்துக்கும்கூட இந்த விருது கொடுத்தாங்க… ரஜினிகாந்த் நடிச்ச படம், அதுலகூட ஒரு பாட்டு வருமே, ‘சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்டா’னு (நினைவுபடுத்திக் கொள்கிறார்) ராஜா சின்ன ரோஜா! அந்தப் படத்துக்கும் பரிசு கொடுத்தாங்க. (சிரிக்கிறார்).”

‘நீங்கள் தீவிரமாக எழுதிக்கொண்டிருந்த காலத்தில், உங்களுக்குப் போட்டியாக யாரையாவது நினைத்தது உண்டா?’

“போட்டினு யாரையும் நெனைச்சது கிடையாது. நண்பர்கள் நிறைய கிடைச்சாங்க. வா.மு. சேதுராமன் அப்படிக் கிடைச்சவர்தான். அவரோட சகோதரர் இன்கம்டாக்ஸ் ஆபீஸ்ல வேலை பார்த்துட்டிருந்தார். அவருக்கு என் படைப்புகள்லாம் ரொம்பப் பிடிச்சிருந்தது. அவர்தான் ஆரம்பத்தில் என் புத்தகங்களை அச்சிடத் தேவையான உதவிகளைச் செய்தார். அவரோட உதவியால்தான் வாழ்விலே ஒரு முறை நூல் வெளியாச்சு. அதுக்குக் கொஞ்சம் வரவேற்பு கிடைச்சது. புத்தகம் வித்துடுச்சு. அதை வெச்சு இன்னும் சில நாட்கள் புத்தகம் வந்தது. அப்புறம், ஆங்கிலத்துல நிறைய வர ஆரம்பிச்சுது. ஆங்கிலத்துல எழுதும்போது, ரெமுனரேஷனும் ஜாஸ்தி. அப்போ நான் ஜெமினியில பார்த்த வேலையை விட்டிருந்த நேரம். கொஞ்சம் மனசு வேதனையோடதான் விட்டேன். அப்போ ஆங்கிலத்துல எழுதறது கொஞ்சம் கை கொடுத்தது.

எனக்கும் ஜி. நாகராஜனுக்குமான நட்புக்கு நியூ யார்க்கர் பத்திரிகையும் ஒரு காரணம். ஒரு சமயம், ‘நியூயார்க்கர்ல எனக்கு ஒரு கதை வந்துட்டா போதும்’னார். ‘அமெரிக்கப் பத்திரிகையான நியூ யார்க்கர்ல உங்க கதை வரணும்கிறீங்க, நீங்க இடதுசாரியாச்சே!’ன்னேன். ‘இடதுசாரியா இருந்தா என்ன, பத்திரிகையை நல்லா நடத்துறாங்க’ன்னார். ‘நான் வருஷத்துக்கு ஒரு கதை அனுப்பறேன்’னு சொன்னேன். ‘நானும் அனுப்பறேன்’னு அவர் சொன்னார். இப்படி எங்க நட்பு வளர்ந்தது. அவர் எனக்காக கணையாழியில எல்லாம் எழுதியிருக்கார். இந்த மாதிரி நட்புதான் உண்டே தவிர, போட்டினு யாரையும் நினைச்சது இல்லே.”

‘நீங்கள் ஏன் தொடர்ச்சியாக ஆங்கிலத்தில் எழுதவில்லை?’

‘இல்லையே, ஆங்கிலத்துல நிறைய எழுதியிருக்கேனே! இது வரை பத்துப் புத்தகம் வந்திருக்கு. தொகுக்கப்படாம நூத்துக்கும் மேலான கட்டுரைங்க இருக்கு. எக்ஸ்பிரஸ்ல, ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவை ரைட்டர்ஸ் நோட்னு ஒண்ணு போடுவாங்க. அதுல நிறைய எழுதியிருக்கேன். ஹிந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஸ்டேட்ஸ்மேன், நேஷனல் ஹெரால்டு, இல்லஸ்ட்ரேட்டட் வீக்லினு நிறைய எழுதியிருக்கேன்.’

‘நவீனத்துவம், பின்நவீனத்துவம் போன்ற இஸங்கள் சார்ந்த விஷயங்களில் நீங்கள் பெரிதும் பங்கெடுத்துக்கொள்ளவில்லையே?’

‘இரண்டாம் உலக யுத்தம் முடிஞ்ச பிறகு, ஐரோப்பிய நாடுகள் சிதைஞ்சு போயிருந்துச்சு. கலைகளுக்குப் புத்துயிர் கொடுக்குற முயற்சியில சில இலக்கியக் கொள்கைகளை உருவாக்குனாங்க. எனக்குத் தெரிஞ்சு அறுபது, எழுபதுகள்ல ஆலன் ரோப் கிரியேங்கிற எழுத்தாளர் திரும்பத் திரும்ப உதாரணமாகச் சொல்லப்பட்டார். அவருடைய நாவல்களையெல்லாம் சினிமாவாக் கூட எடுத்தாங்க.

என் வரையில பின்நவீனத்துவ நூல்களைப் பத்தி முக்கியமான அறிமுகங்கள் இல்லை. நிறைய பாலியல் சலுகைகள் எடுத்துக்கிட்டு எழுதப்பட்ட படைப்புகள் பின்நவீனத்தோட சேர்க்கப்படுது. நவீனத்துவம், பின் நவீனத்துவம்னு கால வரிசைப்படி எடுத்துக்கிட்டா, பல நவீனப் படைப்புகளைக் காட்டிலும் உயர்ந்த படைப்புகள் பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே எழுதப்பட்டிருக்கு. இதுக்கு மேல விரிவா ஆய்வாளர்கள்தான் பேசணும்.’

‘சாகித்ய அகாடமி, ஞானபீட விருதுகள் குறித்து?’

“நான் குறை சொல்லப்போறதில்லை. வருஷாவருஷம் சாகித்ய அகாடமியில மொழிக்கு ஒரு ஆள் வீதம், 24 பேருக்கு விருது கொடுத்துடுறாங்க. ஆனா, இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டுக்கு இந்த எண்ணிக்கை போதாது. ஞானபீட விருது வடநாட்டுக்காரங்க கொடுக்கிறது. விருதுனு யோசிச்ச உடனே அவங்க கண்ணுக்கு அங்க உள்ள வயசான முகங்கள்தான் முதல்ல நினைவுக்கு வரும். அதையெல்லாம் தாண்டி எப்பவாவது தென்னிந்தியப் பக்கம் வர்றது உண்டு. அதனால, யாரையும் குறை சொல்லிப் பிரயோசனமில்லை. கிடைச்சா சரி, கிடைக்கலைன்னாலும் அதுக்காக வருத்தப்படக் கூடாது. நான் வருத்தப்பட்டதில்லை.

உரைநடைக்காரர்களுக்காவது எப்படியோ அங்கீகாரம் கிடைச்சிடுது. இந்த கவிஞர்கள் பாடுதான் கொஞ்சம் கஷ்டம். அவங்களுக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்கிறதில்லை. ஒருவகையில் விருதுகள் என்கிறதே லாட்டரி மாதிரிதான். லிஸ்ட்ல தகுதியான பத்துப் பேரு இருப்பாங்க. ஆனா, பத்துப் பேருக்கும் கொடுக்க முடியாதே. யாராவது சொல்லலாம், ‘நீ வாங்கிட்டே, அதனால குறை சொல்லாம இருக்கலாம்’னு. நான் அந்த விருதை வாங்காதப்பவும் குறை சொல்லலை. வந்தப்பவும் அதைப் பெருசா நினைக்கலை.’

‘ஒரு சமூகத்துக்குக் கற்பனை எவ்வளவு அவசியம்?’

‘எந்தச் சமூகத்துக்கும் ரொம்பவே அவசியம். கற்பனை இருந்தாதான், நாம எதைப் பத்தியும் திட்டமிட முடியும். சராசரி ஆட்களுக்கோ, எழுத்தாளர்களுக்கோ மட்டுமில்ல, ஒரு பொறுப்புள்ள அரசாங்கத்துக்கும் கூட கற்பனை தேவைப்படுது. தண்ணீர்ப் பற்றாக்குறையில, வாரத்துக்கு ரெண்டு முறைதான் மக்களுக்குத் தண்ணீர் கொடுக்க முடியுது. அதை எப்படிச் சமாளிக்கலாம்னு ஓர் அதிகாரி யோசிச்சார்னா, அதைத் திட்டமிடுறதுக்குக் கற்பனை தேவை. கற்பனை என்பது ஏதோ கதை சொல்றவங்களுக்கு மட்டுமான சமாசாரம் கிடையாது.’

‘சமீபத்தில் தாங்கள் எழுதிய ஆகாகான் மாளிகை நாடகம் காந்தியின் மீது ஒரு விமர்சனப் பார்வையை முன்வைக்கிறதே?’

‘காந்தி மட்டுமில்லை, உலகத்துல எவ்வளவு பெரிய மனுஷங்களா இருந்தாலும், அவங்களோட வரலாற்றை, தத்துவத்தை, பங்களிப்பை மறுபரிசீலனை செய்யணும்னுதான் சொல்வேன். காந்தி, நேரு போன்றவங்களே சில தவறுகளைச் செஞ்சிருக்காங்க. ஒரு காலத்தில மகா மனிதர்களா தோற்றமளிச்சவங்களே, இன்னிக்குப் பல தவறுகள் செஞ்சவங்களா விமர்சிக்கப்படுறதைத்தான் நாம அன்றாடம் பாக்குறோமே!

பல கோடி மக்களோட நலனை தனது முதன்மையான அக்கறையாக நெனைச்ச காந்தி, அவரோட குடும்பத்துக்கிட்ட அந்த அக்கறையைக் காட்டலை. ஆகாகான் மாளிகையில நிமோனியா நோயில் படுத்திருக்கிறாங்க கஸ்தூரிபா. அப்போதான் பென்சிலின் கண்டுபிடிக்கப்பட்டிருந்துச்சு. அதை கஸ்தூரிபாவுக்குக் கொடுக்கலாம்னு தேவதாஸ் காந்தி ஏற்பாடு செய்றார். ஆனா, காந்தி மறுத்துடுறாரு. காந்தியின் மூத்த மகன் ஹரிலால் விரும்பிய இங்கிலாந்துக் கல்வியை காந்தி தடுத்துடுறார். விளைவு, தந்தைக்கும் மகனுக்கும் கடைசி வரைக்கும் பகை. இதுல வினோதம் என்னன்னா, காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட அதே வருஷத்துல ஹரிலாலும் இறந்துபோயிட்டார்.’

‘எழுதுவதில் எந்த விஷயம் மிகவும் சவாலானது என்று நினைக்கிறீர்கள்? அந்த மாதிரி சவால் என்று ஏதாவது இருக்கிறதா?’

“சில பேர் சொல்றாங்க, ‘இது சவால், அது சவால்’னு. எழுதறதுல சவால்னு என்ன இருக்கு? வாழ்க்கையை நடத்துறதுதான் சவால். வாழ்க்கையில எதிர்ப்படும் சின்னச் சின்ன விஷயங்கள்தான் சவால். திடீர்னு ஆயிரம் ரூபா, ஐந்நூறு ரூபா நோட்டு செல்லாதுங்கறாங்க, ஆதார் கார்டு அது இதுனு என்னென்னமோ வேணும்றாங்க. இதெல்லாம்தான் சவாலா இருக்கு.’

‘ஏதாவது சோஷியல் மீடியாவைப் பயன்படுத்துகிறீர்களா?’

‘ஃபேஸ்புக் பார்க்கறதுண்டு. நான் இப்போ இருக்கறது ஒரு மகன் வீட்டில். இன்னொரு மகன் வேளச்சேரியில இருக்கார். மற்றொரு மகன் பாம்பேயில இருக்கார். உறவுக்காரங்களோட தகவல் பரிமாறிக்க, பிறந்த நாட்கள்ல வாழ்த்து சொல்ல ரொம்ப உதவியா இருக்கு. ஆனாலும், எனக்கு ஃபேஸ்புக்ல பெரிய ஈடுபாடு வரல.’

‘அன்றாடச் செய்திகளை அப்டேட் செய்துகொள்கிறீர்களா? தொலைக்காட்சி பார்ப்பதுண்டா?’

‘சாயங்காலத்தில டி.வி. செய்திகள தவறாமப் பார்த்திடுவேன். ரேடியோ செய்திகளை மிஸ் பண்ணிடாமக் கேட்பேன். பத்து நிமிஷத்தில அன்றைய நாளோட மொத்த நடப்புகளையும் சுருக்கிச் சொல்லிடுறாங்கல்ல. அப்புறம், கிரிக்கெட்டும் விரும்பிப் பார்க்கிறதுண்டு.’

‘விவசாயம் நசிந்து மக்கள் சென்னைக்கு வந்து குவிகிறார்கள். நீங்கள் பார்த்த அந்த நாள் சென்னைக்கும் இப்போதைய சென்னைக்கும் வித்தியாசம் எப்படி இருக்கிறது?’

‘அடையாளமே தெரியாத அளவுக்கு மாறியிருக்கு. இதைத் தவிர்க்க முடியாது. இந்த மாற்றத்தை மறுக்க முடியாது. நீங்க சொல்றீங்க, விவசாயம் இல்லாமப் போயிட்டுதுன்னு. விவசாயம்லாம் இருக்கு. அப்போ விவசாயம் செய்யறதுக்கு 100 பேர் தேவைன்னா, இன்னிக்கி நாலைஞ்சு பேரைவெச்சு செஞ்சுடலாம். விவசாய முறை மாறிடுச்சு.’

‘ஆனா, விவசாயிகளோட நிலை மாறவே இல்லையே. சமீபத்துலகூட பலர் தற்கொலை பண்ணிக்கிட்டாங்களே..?’

‘அது ரொம்ப ரொம்ப வருத்தப்படக்கூடிய விஷயம்தான். கொஞ்சமா சொந்த நிலம், சிலருக்கு அதுவும் கிடையாது. பாசனத்துக்கு தண்ணிப் பிரச்னை, வங்கிக் கடன்னு சமாளிக்கிறது கஷ்டம்தான். ரொம்ப வருத்தமாத்தான் இருக்கு.’

‘உங்களை வாழ்க்கை முழுக்க உறுத்திக்கொண்டே இருக்கும் கேள்வி ஏதேனும் இருக்கா?’

‘அப்படிப்பட்ட ஒரு பெரிய சிந்தனையாளன் இல்லப்பா நான். சில சூழ்நிலைகளை, சில நபர்களை மாத்திப் போட்டுக் கதை எழுதறதைத் தவிர, பெருசா ஒண்ணும் நான் சிந்திச்சிடலை. நம்ம வரைக்கும் நாம சரியா இருக்கணும். ஒவ்வொருத்தருக்குமே அவங்கவங்களுக்கான சமூகப் பொறுப்பு, தனி மனிதப் பொறுப்பு இருக்கு. பிறர் மனம் வருந்தற மாதிரி எதுவும் செஞ்சுடக் கூடாது அது ஒண்ணுதான் எனக்குத் தோணிக்கிட்டே இருக்கிற விஷயம். எண்பத்தஞ்சு வயசுல என்ன பெரிய உறுத்தல் இருக்கப் போகுது எனக்கு?’

‘படைப்பு அரசியல் என்று எதையாவது உங்கள் எழுத்தில் வைத்திருக்கிறீர்களா?’

‘அரசியலா? அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை. அது தேவையும் இல்லைனு நினைக்கிறேன்.’

‘உங்கள் படைப்புகள் மூலமாக என்ன செய்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறீர்கள்?’

‘பெருசா எதுவும் பண்ணலை. பெருமையா எதுவும் சொல்ல முடியாது. வாழ்க்கையில நல்லா உக்காந்து எழுதி பொழுதுபோக்கியிருக்கேன். (சிரிக்கிறார்) நான் எழுதினதை சில பேர் படிச்சிருக்காங்க. அவ்வளவுதான்.’

‘சமீபத்தில் என்ன சினிமா பார்த்தீர்கள்?’

‘சமீபத்தில் இல்லை. கடைசியாக நானும் என் மகனுமாக ஜுராசிக் பார்க் பார்த்தோம். அப்போ சத்யம் தியேட்டர் வேற மாதிரி இருந்தது. இப்போ எல்லாம் மாறிப் போச்சு. எனக்கு இந்த கபாலி படத்தை முழுசா பார்த்துடணும்னு ஒரு ஆசை. அதுல ரஜினிகாந்த் கையில ஒரு புஸ்தகம் (My Father Balaiah) வெச்சிருப்பார். நான் அந்தப் புத்தகம் பத்தி எழுதியிருக்கேன். ரொம்ப நல்ல புத்தகம் அது.’

‘முதுமையை எப்படி உணர்கிறீர்கள்?’

‘நடக்க முடியலை. தூங்க முடியலை. தொடர்ந்து உட்கார முடியலை. இதுதானே முதுமை?’

‘முதுமைப் பருவத்துக்கு என்று ஏதாவது ஒரு சௌகரியம், அல்லது நல்ல விஷயம் இருக்கா?’

‘அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை.’

‘கடவுளைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?’

‘எனக்கு சில சாமியார்களோட நல்ல பழக்கம் உண்டு. இந்த யோகம் – ஹடயோகம், ராஜயோகம்னு எதை எடுத்துக்கிட்டாலும், அதற்குண்டான கடவுளை நம்பிப் போகலாம் என்கிற நிலை இருக்கு. ஆனா, ரொம்ப தெய்வீகமா, பக்தியா நான் செய்யறது கிடையாது. அதுக்கும் கூட கொஞ்சம் வசதி வேண்டியிருக்கு.’

‘அப்படி என்றால் உங்களுக்கு பக்தியில் ஈடுபாடு இல்லை என்று எடுத்துக்கொள்ளலமா?’

‘ஈடுபாடு இல்லைன்னாலும்… (யோசிக்கிறார்) சில மந்திரங்களுக்கு நம்ம மனதை நிதானப்படுத்தறதுக்கான சாத்தியம் இருக்கு. மந்திரங்கள் மேல எனக்கு ஈடுபாடு உண்டு. அது மனதை சாந்தப்படுத்துது’

‘வாழ்வில் பணம் எவ்வளவு முக்கியத்துவமானது என்று நினைக்கிறீர்கள்?’

‘இப்போ என் தேவைகளை என் மகன்கள் கவனிச்சிக்குறாங்க. அப்போ, பணம் இல்லாததனால, என்னோட பெரிய பையனை 12-வதுக்கு அப்புறம் நந்தனம் ஆர்ட்ஸ் காலேஜ்லதான் சேர்க்க முடிஞ்சுது. அதுக்குக் கூட அக்னிபுத்திரன்னு ஒரு கவிஞர்தான் உதவினார். பணம் முக்கியமானதுதான். வந்தா நல்லது, வரலைன்னா என்ன செய்ய முடியும்?’

‘உங்களை மிகவும் பாதித்த ஒரே ஒரு புத்தகம் என்றால் எதைச் சொல்ல விரும்புவீர்கள்?’

இரு நகரங்களின் கதை (Tale of two cities). நான் எட்டாவது படிக்கிறப்போ பள்ளியில் துணைப் பாட நூலாக இருந்துச்சு. அதுதான் வாசிக்கிற பழக்கத்தைத் தூண்டுச்சு. என்னை எழுதவும் தூண்டுச்சு.’

‘புதுசா எழுத வருபவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி?’

‘எழுதணும்னு வர்றவங்க, சொல்ல நெனைக்கிறதை அழுத்தம் திருத்தமா தெளிவா எழுதணும். அதுதான் என்னுடைய ஆசை. மத்தபடி, அவங்கவங்களோட கற்பனை, ஆற்றல் அதுக்குள்ளல்லாம் நான் போக விரும்பலை. முடிஞ்ச வரைக்கும் நம்ம மொழிக்கு நாம மரியாதை செய்யணும்.’

தொகுக்கப்பட்ட பக்கம்: அசோகமித்ரன் பக்கம்