விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல் எல்லாம் படித்து மெய்மறந்து போவதற்கு முன்னாலேயே ஜெயமோகனோடு இணையத்தில் ஓரளவு பேசி இருக்கிறேன். வணிக நாவல்களின் முக்கியத்துவம் பற்றி அப்போது அவர் பேசியதும் எழுதியதும் என்னை ‘அட!’ என்று திரும்பிப் பார்க்க வைத்தது. வணிக நாவல்கள் முக்கியமானவை என்று நினைக்கும் இலக்கியத் தேடல் உள்ள ஒரே ஆள் நான்தான் என்று அப்போது நினைத்துக் கொண்டிருந்தேன். என்னை விட சிறந்த ஒரு வாசகரும் அதே மாதிரி நினைக்கிறார் என்பது ஆச்சரியமாகவும் அதே நேரத்தில் மகிழ்ச்சியாகவும் இருந்தது.
பிறகு ஜெயமோகனின் seminal நாவல் பட்டியல் கண்ணில் பட்டது. அவர் குறிப்பிட்டிருக்கும் ஒவ்வொரு நாவலைப் பற்றியும் – குறிப்பாக வணிக நாவல்களைப் பற்றி – சிலிகன் ஷெல்ஃபில் எழுத வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை. என்னைத் தவிர வெறு யாரும் அவற்றை சீந்தமாட்டார்கள் என்று ஒரு நினைப்பு இருந்தது. இப்போது பல நண்பர்கள் – கேசவமணி, ரெங்கசுப்ரமணி, ஏன் சுசீலா மேடம் கூட அவற்றைப் படிக்கிறார்கள் என்பது சந்தோஷமாக இருக்கிறது. ரொம்ப நாளாயிற்று அந்தப் பட்டியல் பக்கம் போய். அவ்வப்போதாவது எழுத வேண்டும், இன்று மிஸ்டர் வேதாந்தம் பற்றி.
தேவனை முழுவதும் வணிக எழுத்தாளர் என்று லைட்டாக எடுத்துக் கொள்ளவும் முடியவில்லை. பெரும் இலக்கியவாதியும் இல்லை. அவர் எழுதி நான் படித்தவற்றில் ஜஸ்டிஸ் ஜகன்னாதன், துப்பறியும் சாம்பு, ஸ்ரீமான் சுதர்சனம் மூன்றும் எனக்கு இலக்கியம். மிச்ச எல்லாம் – ராஜத்தின் மனோரதம், கோமதியின் காதலன் இத்யாதி – அந்தக் காலத்துக்கு ஸ்டாண்டர்ட் விகடன் தொடர்கதை, அவ்வளவுதான். ஒரு இரண்டுங்கெட்டான் எழுத்தாளராக இருக்கிறார்.
மிஸ்டர் வேதாந்தம் முழுக்க முழுக்க வணிக நாவல். நான் தமிழில் பிரபலமாக இருந்த பெண் எழுத்தாளர்கள் – லக்ஷ்மி, சிவசங்கரி, இந்துமதி, வாசந்தி, அனுராதா ரமணன், ஏன் இன்றைக்கு ரமணி சந்திரன் எல்லாரும் ஒரே கருவைத்தான் – பத்தினிக்கு இன்னல் வரும் பழையபடி தீரும் – எழுதுகிறார்கள் என்று கிண்டலடிப்பேன். இதில் தேவன் அதே ஃபார்முலாவைத்தான் பயன்படுத்தி இருக்கிறார். பத்தினிக்கு பதில் கட்டுக்குடுமி பிராமண வாலிபனுக்கு இன்னல் வருகிறது பழையபடி தீர்கிறது, அவ்வளவுதான் வித்தியாசம்.
ஆனால் தேவன் லக்ஷ்மி, சிவசங்கரி போன்றவர்களை விட மிகத் திறமையான எழுத்தாளர். அதனால் கதை எப்படிப் போகும், என்னவெல்லாம் ஆகும் என்று யூகிக்க முடிந்தபோதும் படிக்கத் தோன்றியது. சில இடங்களில் – அன்றைய பத்திரிகை அலுவலக சித்தரிப்பு, நாயகனை ஏமாற்றும் திமிரான உறவினர்களின் சித்தரிப்பு, அழகான பெண்ணைப் பார்த்ததும் வேதாந்தம் லேசாகத் தடுமாறுவது போன்ற இடங்கள் உண்மையாகத் தெரிகின்றன. ஏன் அவர் பக்திப் பரவசத்தோடு சிக்கல் சிங்காரவேலன் கோவில், பார்த்தசாரதி கோவில் என்று விவரிப்பது கூட உண்மையாகத்தான் இருக்கிறது. சுவாரசியம் குறையாமல் எழுதி இருக்கிறார்.
சுருக்கமாகக் கதை – பணக்காரச் சூழலில் வளரும் வேதாந்தம் அப்பா இறக்கும்போதுதான் நிறைய கடன் இருப்பதை உணர்கிறான். உறவினர்கள் ஏமாற்றி இருப்பதையும் பிடுங்கிக் கொள்கிறார்கள். தான் விரும்பும், தன்னை விரும்பும் அத்தை மகளை மணக்கும் முன் செட்டில் ஆக வேண்டும். ட்யூஷன் சொல்லிக் கொடுக்கும் வாத்தியார், எழுத்தாளன், உதவி ஆசிரியன் என்று பல வேலைகளில் அலைகிறான். அவனுக்கு பல விதங்களில் உதவி செய்யும் ஆபத்பாந்தவர் சுவாமி, அவரது தம்பி சிங்கம். சில பல சிக்கல்களுக்குப் பிறகு நல்ல வேலை கிடைக்கிறது, காதல் மணத்தில் முடிகிறது, சுபம்!
நாயகனுக்கு உதவி செய்வதே தன் வாழ்வின் ஒரே லட்சியம் என்று சுவாமி இருக்கிறார். ஏன் என்றே தெரியவில்லை. வேதாந்தம் மருந்துக்கு கூட ஒரு அபிராமணரை சந்திப்பதில்லை. எப்படி? வேதாந்தத்தை ஏமாற்றினால் சாமி வந்து கண்ணைக் குத்திவிடுகிறது – சரி முதுகைக் குத்திவிடுகிறது, அவனை ஏமாற்றும் உறவினருக்கு முதுகில் கட்டி வருகிறது, சொத்தெல்லாம் போய்விடுகிறது. வாழ்க்கையில் வெற்றி பெற வேதாந்தமாக இருப்பது தவிர வேறு எந்தத் தகுதியும் வேண்டாம் போலிருக்கிறது!
இது எல்லாருக்குமான நாவல் இல்லை. ஆனால் வணிக எழுத்து எப்படிப் பரிணமித்தது என்று தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் கட்டாயமாகப் படிக்க வேண்டும். ஜெயமோகன் இதற்குப் பதிலாக ஜஸ்டிஸ் ஜகன்னாதனை (வணிக நாவலாகவாவது) தேர்ந்தெடுத்திருக்கலாம்.
வேதாந்தம் போலவே இன்னொரு நாவல் லக்ஷ்மி கடாட்சம். முழுக்க முழுக்க வாரப் பத்திரிகை தொடர்கதை. வேதாந்தத்துக்கு பதிலாக துரைசாமிக்கும் காந்தாமணிக்கும் இன்னல்கள் வந்து தீர்கின்றன.
இன்னொரு நாவலான மிஸ் ஜானகி பற்றி தனியாக எழுதுவதற்கில்லை. இவை எல்லாம் அந்தக் காலத்தின் தேவையை பூர்த்தி செய்யும் வணிக நாவல்கள், அவ்வளவுதான். பிராமண மத்தியதர வர்க்கத்துக்காக எழுதப்பட்டவை. இன்று தேவன் பக்தர்கள், ஆவணப்படுத்துபவர்கள் தவிர வேறு யாரும் சீந்தமாட்டார்கள். எனக்கு முக்கியமாகத் தெரிவது தேவனின் craft. பல சரடுகளை ஒன்றிணைக்கும் விதம். சின்னச் சின்ன பாத்திரங்களில் (நாயகனின் அப்பா ஹரன், நாயகனின் நண்பன் மணியின் மனைவி தங்கம் என்று சொல்லிக் கொண்டே போகலாம்) தெரியும் genuineness. மெலிதான நகைச்சுவை. ஆனால் வணிக நாவல்கள் எழுத விரும்புபவர்கள் இதை எல்லாம் படித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு சிறுகதையும் கிடைத்தது – மாலதி. தவிர்க்கலாம்.
தேவனுக்கு இன்னும் ஓரளவு ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அல்லயன்ஸ் அவரது புத்தகங்கள வெளியிட்டது. கிழக்கும்.
தேவன் ரசிகர்கள் பசுபதியின் தளத்தை கட்டாயமாகப் பார்க்க வேண்டும். கனடாவில் வசிக்கும் இவர் தேவனின் பரம ரசிகர். இன்னொரு பரம ரசிகரான திவாகர் அவரைப் பற்றி எழுதிய பதிவுகள் இங்கே புத்தகமாகவே தொகுக்கப்பட்டிருக்கின்றன.
வேதாந்தம் பற்றி ரெங்கசுப்ரமணியின் பதிவு இங்கே.
தொகுக்கப்பட்ட பக்கம்: தேவன் பக்கம்